Search This Blog

Friday, February 14, 2014

இதயக்குரல்

அன்புமணி
















செல்லத்தம்பி யோசித்தான். யோசிக்க, யோசிக்க தன்மேலேயே அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

 நியாயமாகப்பார்த்தால் அவன் ஆத்திரப்படவேண்டியது தன்னைப் படைத்த ஆண்டவன் பேரில், ஆனால் அவன் நல்லவன். ஆகையால் தன்னையே நொந்து கொண்டான்.

 இறைவனுக்குத்தான் எவ்வளவு ஓரவஞ்சனை. சிலவேளைகளில் குப்பையில் மாணிக்கத்தையும் கோபுரத்தில் கூழாங்கல்லையும் அல்லவா போட்டுவிடுகிறான். பாவம் சீதா: பண்பின் சிகரமாகத் திகழ்ந்தும் ஏழ்மையில் மங்கிக் கிடக்கிறாள். அடச்சே: இந்த இரக்க உணர்ச்சியைக்கூட ஏழைகளிடம்தானே படைத்து வைத்திருக்கிறான் இறைவன். ஆடடா, அவள் நம்வாழ்க்கையில் குறுக்கிடாமலே இருந்திருக்கக்கூடாதா?

 செல்லத்தம்பி பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மிகவும் கெட்டிக்காரன் என்று பெயரெடுத்திருந்தான். ஆனால் ஏழை. அவன் ஏழ்மையை அறிந்திருந்த சில ஆசிரியர்கள், 'தம்பி, என்ன கஷ;டப்பட்டாலும் நீ படிப்பைமட்டும் இடையில் நிறுத்திவிடாதே, உன் எதிர்காலம் பிரகாசமானது' என்று அடிக்கடி புத்தி கூறுவார்கள். அவனுக்கும் ஒரு ஆசை மேற்படிப்பு – டாக்டா.; ஆனால் நடந்ததோவேறு.

 ஜே.எஸ்.சி. தாண்டியதும் தன் குடும்ப நிலையை நன்கு உணர்ந்துகொண்ட செல்லத்தம்பி டாக்டராகும் தன் ஆசைக்கனவைத் துறந்தான். எப்படியாவது பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்று பறந்தான்.

 அதன் பயன் அவன் ஒரு எழுதுவினைஞன்.

 இந்த உத்தியோகத்தை ஒரு ஆரம்ப ஊன்றுகோலாக வைத்திருந்து படிப்படியாக மேலுக்கு ஏறவேண்டும் என்றுதான் அவன் எண்ணினான். ஆனால் எழுதுவினைஞன் வேலையில் இறங்கியவனுக்கு விமோசனம் ஏது? அதுவே இன்றுவரை நிரந்தர தொழிலாகத் தங்கிவிட்டது.

 இந்த உத்தியோகம் கிடைத்த புதிதில் செல்லத்தம்பி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். முழுசாக ஒரு ரூபாவுக்குச் சொந்தக்காரனாக எந்தக் காலத்தும் இருந்திராதவனுக்கு நூறுரூபாவுக்குமேல் பணம் ஒரேசமயத்தில் கிடைப்பதனால் கேட்க வேண்டுமா? உண்மையைச் சொல்லப்போனால் அந்த நாட்களில் செல்லத்தம்பிக்கு ஒரு இறுமாப்பு கர்வமும் கூட.

 இனிமேல் நான் தாய் தந்தையருக்குச் சுமையாக இல்லை. குடும்ப பாரத்தைச் சுமப்பதில் நானும் பங்கு கொள்கிறேன். என் தம்பி தங்கைகளை குடும்ப கஷ;டம் தெரியாமல் வளப்பதற்கு உதவுகிறேன். பெற்றோருக்கும் இந்தவகையில் மகிழ்ச்சியை ஊட்டுகிறேன். வேறு என்ன வேண்டும் எனக்கு?

 அப்போது செல்லத்தம்பிக்கு வேறெதுவும் வேண்டியிருக்கவில்லை. ஒரே மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருந்தான்.

 வெகு நாட்களாக இந்தக் கனவு மயக்கத்தில் இறங்கியிருந்த செல்லத் தம்பிக்கு அன்று ஒரு புது அனுபவம் ஏற்பட்டது.

 இந்த இரண்டு வருடங்களாக தினமும் எட்டுமைல் சைக்கிளில் போகும்போதும் வரும்போதும் ஏற்படாத புதிய அனுபவமா இது? இல்லையில்லை. தினம் தினம் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான் அவன்.

 ஆனாலும் அன்றுமட்டம் ஏனோ ஒரு மனக்கிளர்ச்சி, அவளும் அவனைப் பார்த்தது போன்ற ஒரு பிரமை. அது தான் இத்தனை பரபரப்புக்கும் காரணம்.

 எழுத்தாளர்கள் வேண்டுமானால் இதைக் காதல் என்று குறிப்பிடலாம். ஆனால் செல்லத்தம்பிக்கு அது தெரியவில்லை. பாவம் அப்பாவி.

 அந்தப் பெண் மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்க வேண்டும். தினமும் வெள்ளைச் சேலையுடுத்து ஒரு கட்டுப் புத்தகங்களுடன் வந்து கொண்டிருப்பாள். செல்லத்தம்பி சைக்கிளை மிதித்துக் கொண்டே காரியாலயத் தெருவில் திரும்பும்பொழுது சொல்லிவைத்தாற் போல் அவள் எதிர்ப்படுவாள். கண்கள் சந்திக்கும். மௌனமொழி. உள்ளுக்குள் சிரிப்பு. அவ்வளவுதான். சைக்கிள் அவளைத்தாண்டிப் போய்விடும்.

 கிட்டத்தட்ட அரைவருடகாலம் இந்த நாடகம் தொடர்ந்து நடந்தது. ஒரு அபிவிருத்தியும் இல்லை. திடீரென்று அதற்கும் முற்றுப்புள்ளி இடப்பட்டது.

 கொஞ்ச நாட்களாக அந்தப் பெண் வருவதில்லை. செல்லத்தம்பியின் உள்ளத்தில் ஒரு ஏக்க உணர்ச்சி. எங்கே தேடுவான்? யாரிடம் சொல்வான்?

 சில மாதங்களில் இப்படி ஆதங்கத்தில் கழிந்தன.

 எப்படியோ அந்த நினைவு மங்கி அவன் மனதின் அடித்தளத்தில் தங்கிவிட்டது. நல்லவேளை இந்தத் 'தகாத' செயலை தொடர்ந்து செய்யாமல் விடயம் இதோடு முடிந்துவிட்டது என்று மேலுக்குத் திருப்பியடைந்தான் செல்லத்தம்பி. ஆனால் விடயம் என்னவோ அத்துடன் முடியவில்லை. மீண்டும் அந்தப் பெண் அவன் வாழ்;க்கையில் குறுக்கிட்டாள். விசித்திரம்தான்.

 செல்லத்தம்பி மாற்றலாகி முனைக்கோட்டைக்குச் செல்லவேண்டி ஏற்பட்டது. அங்கே தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டான். அன்று மாலை காரியாலயத்தில் இருந்து வந்ததும் வீட்டுக்கார அம்மா, 'எனக்கு உடம்பு கொஞ்சம் சுகமில்லை தம்பி. சீதாவைக் கோப்பி போடச் சொல்லியிருக்கிறேன். குடிச்சிட்டு இரு. ஐயா வந்ததும் வெளியே எங்காவது கூட்டிக்கொண்டு போகச் சொல்கிறேன்' என்றாள்.

 பார்வதி மாமியின் பேச்சு முடியவில்லை. அதற்குள் கோப்பி அவனைத்தேடி வந்துவிட்டது.

 ஆகா, இவள்தானா சீதா? செல்லதம்பி ஒருகணம் அயர்ந்து போனான். அவள், அந்த வெள்ளச் சேலையுடுத்து கட்டுப் புத்தகங்களுடன் அவன் பழைய காரியாலயப் பாதையில் எதிர்படும் பெண்தான்.

 சீதாவும் ஒரு புன்சிரிப்பின் மூலம் செல்லத்தம்பியைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொண்டாள்.

 சீதா எப்படி இங்கு வந்தாள்? சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் விநோத சம்பவங்களில் நம்பிக்கை இல்லாத செல்லத்தம்பிக்கு இது மாயமாகப்பட்டது.

 பார்வதி அம்மாள் அந்தப் புதிரை விடுவித்தாள். சீதா தன்சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தமிழ் எஸ்.எஸ்.சி. பாஸ்பண்ணிவிட்டு ஆங்கிலம் படிப்பதற்காக இங்குள்ள கொன்வென்டில் சேர்ந்திருக்கிறாள். பக்கத்து வீட்டில் தங்கியிருக்கிறாள். அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்து ஒத்தாசை செய்வாள், மிகவும் நல்ல பெண்!'

 வாரங்கள் பல கடந்தன. சீதாவும் செல்லத்தம்பியும் கிட்டத்தட்ட ஒரே வீட்டில் இருப்பது போலத்தான், ஆனால் இதுவரை அவர்கள் பேசிய வார்த்தைகளை எண்ணிப்பார்த்தால் இருபதுகூட இருக்காது. என்றாலும் சீதாவைப் பற்றி செல்லத்தம்பிக்கு வேண்டிய சில தகவல்கள் அங்கே கிடைத்தன.

 சீதா, பெயருக்கேற்றபடி பண்பு நிறைந்தவள். மிகவும் புத்திசாலி இங்கிதம் தெரிந்தவள். அறிவும், அடக்கமும் ஒருங்கேயமையப் பெற்றவள். ஆனால் ஏழை. அதனால்தான் கும்பையில் மாணிக்கமாக மறைந்து கிடக்கிறாள்.

 செல்லத்தம்பிக்கு ஒரு சபலம். சீதாவும் ஏழை நானும் ஏழை. தொழிலோ எழுதுவினைஞர் உத்தியோகம்தான். ஆனால் குடும்பத்தைக் கொண்டு நடத்தலாம் சீதாவின் விருப்பத்தை அறிந்தால்........

 சீதா என்ன நினைத்திருக்றாளோ?

 அன்றிலிருந்து சீதாவின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்து வந்தான் செல்லத்தம்பி. பாம்பின் காலைப் பாம்பு அறியும் என்பார்கள். எப்படியோ தன்மேல் சீதாவுக்கு வெறுப்பில்லை என்பதை அறிந்து கொண்டான், செல்லத்தம்பி. முயன்றால் அவள் அன்பைப் பெறலாம.; உடனே அந்த முயற்சியில் இறங்கி ஒரளவு வெற்றியும் கண்டான். இரண்டொரு சம்பவங்கள் அதை உறுதிப்படுத்தின. செல்லத்தம்பிக்கு உள்ளுர மகிழ்ச்சி.

 வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயத்தை எழுதுவது போன்றநிலை. தானும் ஒரு மனிதாகிவிட்டது போன்ற எண்ணம் செல்லத்தம்பிக்கு. அடுத்த தடவை ஊருக்குச் சென்றிருந்த போது அது நிதர்சனமாகத் தெரிந்தது.

 வழக்கம் போல வீட்டில் கல்யாணப் பேச்சு புகையத் தொடங்கியது. தான் 'பையன்' பருவத்தைத் தாண்டி 'மனிதன்' பருவத்தை அடைந்து விட்டோம் என்பதில் அவனுக்கு இனியும் சந்தேகம் இருக்க இடமில்லை. என்றாலும் கல்யாணப் பேச்சுக்களில் அடிபட்ட விஷயங்கள் அவனுக்கு அவளவாகப் பிடிக்கவில்லை.

 'காசிநாதன் போடியார் வீட்டில் கேட்கிறார்கள். காணி, தோட்டம், வீடு அத்துடன் கைரொக்கம் ஐயாயிரம் தருகிறார்களாம்!'

 'அது இஷ;டமில்லாவிட்டால் ஆறுமக உடையாரின் வீட்டில் கேட்கிறார்கள் - ஆறு ஏக்கர் காணி, இரண்டுவளவு, வீடு, அத்துடன் காசும் மூவாயிரம்!'

 செல்லத்தம்பி திறந்த வாயை மூடவில்லை.

 நான் ஏழை என்றல்லவா இதுவரை எண்ணியிருந்தேன். இப்போதல்லவா தெரிகிறது என் மதிப்பு. கேவலம் ஒரு எழுதுவினைஞருக்கு இவ்வளவு விலை பேசக்கூடிய நிலையிலே நம் சமுதாயம் இருக்குமானால் இதற்கு விமோசனம் எப்போது? நம்மக்கள் விழிப்பது எப்போது?

 சமுதாயத்தின் கீழ் நிலையைப் பற்றி செல்லத்தம்பி வருந்தினாலும், அந்தரங்கமாக அவனுக்கு ஒரு திருப்தி. சீதாவின் கரத்தை இனித்தைரியமாகக் கேட்கலாம் அல்லவா?

 தனக்கு வரவிருக்கும் இத்தனை செல்வங்களையும் தியாகம் செய்து சீதாவின் குணம் ஒன்றுக்காகவே அவளை நாடிவருகிறேன் என்பதை அவள் அறிந்து கொண்டால் நிச்சயம் தன் அன்பை அவள் ஏற்றுக் கொள்வாள் அல்லவா?

 உடனே செல்லத்தம்பி சினிமாக் கதாநாயகனாக மாறி தன் பெற்றோருடன் போர் தொடுக்கச் சித்தமானான். ஆனால் சினிமாவில் வருவதுபோல் அந்தப்போர் அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை.

 'டேய்! மேதாவிப் பயலே, நீ இந்தக் கதை புத்தங்களைப் படிச்சிட்டு வந்து காதல், தியாகம், அன்பு என்று என்னிடத்திலே கதை அளக்காதே. ஏழைப் பெண்ணைக் காப்பாத்துறதுக்கு ஆண்டவன் இருக்கிறான். நீ அதற்காக ஒன்றும் தியாகம் செய்ய வேண்டாம். மரியாதை வேணுமெண்டால் ஊரிலே நாலுமனிதர் மதிக்கிறமாதிரி நடந்துகொள். அவ்வளவுதான் நான் சொல்லுவேன்!' இது அவன் அப்பாவின் கணை.

 'டேய் தம்பி, சீதனம் வாங்குறது அப்படி ஒன்றும் மோசமான காரியமில்லையடா. இந்தக்காலத்திலே சீதனம் வாங்காமல் கல்யாணம் செய்தால்தான் மரியாதைக் குறைவு. அதுவுமில்லாமல் நாங்களும் பிறகு இப்படிச் சீதனம் கொடுத்துத்தானே உன் தங்கச்சிகளுக்குச் செய்ய வேணும்.' - இது அவன் அம்மாவின் அறிவுரை.

 செல்லத்தம்பி விடவில்லை.

 'அம்மா, காணிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு பெரிய இடத்தில் போய் மாட்டிக்கொண்டால், கொஞ்சக் காலத்தின் பின் நம்மையெல்லாம் மதிக்கவே மாட்டார்கள். பணத்திமிரிலும் செல்வச் செருக்கிலும், நாம் ஏழைகள் என்பதைக் காட்டிக்கொண்டேயிருப்பார்கள். ஏன், அப்படி நடப்பதைக் கண்முன்னே நீங்கள் காணவில்லையா?'

 'அப்படியானால் உன் தங்கச்சிகளுக்கு?'

 'அம்மா, கடவுள் இருக்கிறார். நல்லவர்களைக் கைவிடமாட்டார். சீதாவைப் போன்ற ஆதரவற்ற பெண்ணுக்கு வாழ்வளிக்கும் நம் அன்புக்காகவாவது கடவள் கருணை காட்டுவார்.'

 'என்னமோ போடா, நாளைக்கு நாலுபேர் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறத்துக்கு இடம் வைக்கக்கூடாது.'

 'சீதா தன் அன்பாலும் பண்பாலும் இந்தக் குடும்பத்தையே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திடுவாள். யார் சிரிப்பும் நம் காதில் விழாது. சீதேவி என்று நீ அடிக்கடி சொல்லுவாயே. சீதாவைப்பார்த்தால் நீயே தெரிந்து கொள்வாய்.'

 என்ன சொல்லியும் செல்லத்தம்பியின் எண்ணம் நிறைவேறவில்லை. தாயின் மனதை ஒரு படியாக மாற்றினாலும் தந்தையின் மனதை மாற்ற முடியவில்லை. மாறாக கண்டிப்பும் கட்டுப்பாடும் அதிகரித்தன.

 இந்தக் கட்டத்தில்தான் செல்லத்தம்பிக்கு தன்மேலும் தன்னைப் படைத்த இறைவன் மேலும் அளவில்லாத கோபம் வந்தது.

 சீதாவைப் போன்ற மாணிக்கங்களை ஏழ்மை என்ற கும்பை மேட்டிலும் இதயமில்லாத பணக்காரர்களைச் செல்வம் என்ற கோபுரத்திலும் வாழ விட்டது இறைவனின் தவறுதானே?

 அரச குமாரனாகப் பிறந்ததினால் ஏழை நாட்டியப் பெண்ணை மணந்து கொள்ள முடியவில்லை என்று அங்கலாய்த்தானாம் ஒரு இளவரசன் அந்தக் காலத்தில். இந்தக் காலத்தில் அரச குமாரனாகப் பிறக்க வேண்டியதில்லை. ஏழை எழுதுவினைஞனாகப் பிறந்தாலே போதும். சே! என்ன உலகம்! என்ன சமூகம்!

 செல்லத்தம்பி ஒரு முடிவுக்கு வந்தான்.

 எதிர்ப்புக்கு அஞ்சாது சீதாவை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

 ஓடினான் சீதாவிடம். எத்தனை பெரிய தியாயத்தைச் செய்து அவளை ஏற்றுக் கொள்ள வந்திருக்கிறேன் என்பதை அறிந்தால் அகமகிழ்ந்து போகமாட்டாளா சீதா?

 ஆனால் அந்தோ! சீதா என்ன கூறுகிறாள்?

 'உங்களுக்கு மிகவும் நன்றி. ஆனால்.... நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வதைப் பற்றி தான் யோசித்தீர்களே தவிர நான் உங்களை ஏற்றுக்கொள்வதைப்பற்றி யோசிக்கவில்லையே!..... மன்னிக்கவேண்டும். உங்கள் தியாயத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன்.... போய்வாருங்கள்!'

 சிலையாகி நின்ற செல்லத்தம்பி மௌனமாக அவ்விடத்தைவிட்டுப் பெயர்ந்தான். அவன் தலை மறையும் வரை அங்கே நின்றுகொண்டிருந்த சீதா தலையைக் குனிந்துகொண்டு உள்ளே போனாள். அறையினுள் இருந்த சுவாமி படத்தின் முன் அவள் மண்டியிட்டபோது அவள் இதயக்குரல் பேசிற்று:

 'கடவுளே! இந்தக் துரதிர்ஷ;டசாலிக்காக அவர் தாய் தந்தையரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர் தியாகம் பெரிது. ஆனால்.. அவர் நல்வாழ்வுக்காக அதைவிடப் பெரிய தியாகத்தை நான் செய்தேன் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டாம். ஆமாம்.... ஆமாம்...!'

 சீதாவின் பிரார்த்தனை பலித்தது. கடைசிவரை சீதாவின் தியாகத்தை செல்லத்தம்பி அறிந்து கொள்ளவேயில்லை.
 

No comments:

Post a Comment