Search This Blog

Thursday, March 29, 2012

சிந்தனை செய் மனமே



சிந்தனை ஒரு வரம். அடிக்க அடிக்க அம்மி நகரும், தட்டத் தட்டச் சிலை வடிவம் பெறும். அதே போல் சிந்தனையால் உங்கள் மூளையைக் குடையக் குடைய அறிவு வளரும், ஞானம் பிறக்கும். தினம் 15 முதல் 30 நிமிடம் நாம் சிந்திப்பதற்காக ஒதுக்கினால், நம் ஞானம் விருத்தியாகும். மூளையை உபயோகிக்காமல் விடும் பொழுதுதான், மறதி பெருகுகிறது. ஆய்வுகள் சொல்கின்றன, நாம் நம் மூளையின் திறனில் வெறும் 10 விழுக்காடு தான் பயன்படுத்துகிறோமாம். மிச்சம்.... சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்.

வேலைகளுக்கு நடுவே நாம் ஏதாவது எண்ணிக்கொண்டேதான் இருப்போம். அவை எண்ணங்கள். நான் சொல்வது, ஓய்வாக அமர்ந்து நமக்கு நாமே மனதுக்குள் விவாதம் நடத்துவது; 'சிந்தனை'. எதைப் பற்றியாவது கேள்வி கேட்டு, உங்கள் மூளையைக் குடையுங்கள்.  நீங்களே வியக்கும் வண்ணம், பல புதிய விஷயங்கள், சிந்தனைகள் உங்கள் கபாலத்தை நிரப்பும். ஏதோ ஓர் அலைவரிசை உங்களுக்குள் புதிதாய் பிறக்கும்.

சிந்தித்ததால் அசோகன் மனிதம் காத்தான், சித்தார்த்தன் புத்தன் ஆனான். சிந்தித்ததால் யானைமுகன் ஞானப் பழம் வென்றான். சிந்தனை ஞானம் கொடுக்கும் சரி... அதை வைத்துக்கொண்டு 'புளியங்காய்' கூட வாங்க இயலாது... ஆமாம்! ஆமாம்.... வாங்க முடியாது.... உற்பத்தி செய்யலாம்...! சிந்தனை வேறு என்ன தரும்? அது உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டும். வழக்கமான முறையில் அல்லாமல், புதிய வழியில் செயலாற்றி, மற்றவரை வியப்பில் ஆழ்த்துவீர்.

ஒரு துணுக்கு:

ஒரு அலுவலகத்தில் வேலைக்கான ஒரு நேர்காணலில், மேலாளர் கேட்கிறார் - "what is before you?"

ஒருவன் சொன்னான் - காபி

மற்றொருவன் சொன்னான் - காபி

மூன்றாமவன் சொன்னான் - டீ

எல்லோரும் சிரித்தார்கள். ஏனென்றால் காபி தானே பரிமாறப்பட்டது. வியப்பாக, 'டீ' என்று சொன்னவன் தேர்வு செய்யப்பட்டான். எப்படி?

ஆங்கில எழுத்து வரிசையான 'a,b,c,d' யில் 'U' விற்கு முன் 'T' தானே!!!!

இந்தச் சாதுர்யம், பக்குவம், யோசனையெல்லாம், நீங்கள் அன்றாடம் சிறந்த புத்தகங்களை, கருத்துகளை, நிகழ்வுகளை படித்துத் தெரிந்து, கேட்டு, பின்பு நன்கு ஆய்ந்து உங்கள் கபாலத்தில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் பொழுது தட்டித் திறந்துகொள்ளலாம்.

சிந்தனை நம்மை மனிதன் ஆக்குகிறது. செய்யும் பணியில் கவனம் செலுத்த உதவுகிறது, வெற்றிக்கு வழிவகுக்கிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிந்தித்துக்கொண்டே இருங்கள்.

No comments:

Post a Comment