Search This Blog

Friday, April 3, 2020

'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்


தி.ஜானகிராமனின் 'குளிர்' சிறுகதை எந்த இதழில் பிரசுரமானது தெரியுமா? 'காதல்' பத்திரிகையில்! யெஸ், பத்திரிகையின் பெயரே 'காதல்'தான். மட்டுமல்ல கு.அழகிரிசாமி, ஆர்.சூடாமணி, மு.வரதராசனார், டாக்டர் மா.ராசமாணிக்கனார், வல்லிக்கண்ணன், அகிலன், மாயாவி... என பல பிரபலங்கள் இந்த மாத இதழில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்கள்.
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இப்படியொரு பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்த இந்த 2020லும் யோசிக்கிறோம். அப்படியிருக்க 1947ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தப் பத்திரிகை பிறந்திருக்கிறது - அதுவும் தமிழில் - என்றால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்?
முதல் இதழில் 'காதல்' பத்திரிகையின் அவசியம் குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை பாருங்கள்:
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. இதுவரை சுதந்திரம் ஒன்றுதான் நமது ஒரே இலட்சியமாக இருந்து வந்தது. இனி, நம்முடைய லட்சியங்கள் பல.
முதலில் சென்ற நூற்றைம்பது வருஷங்களாக அல்ல, சென்ற ஆயிரம் வருஷங்களாக நம் சமூகத்தில் குவிந்து வந்த குப்பைகளை வாரிக் கொட்ட வேண்டும். மக்கள் வாழ்க்கைத் துயர்களிலிருந்து விடுபட்ட வாழ்க்கை வாழ வகை செய்ய வேண்டும். இப்பெரு நோக்கத்தோடு பல துறைகளில் பல பத்திரிகைகள் உண்டு.
அரசியல் சூதாட்டத்தைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், குடும்ப அரசியலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
பொருளாதாரச் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை உண்டு. ஆனால், கணவன் மனைவியரிடையே எழும் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டும் பாதி வயிறு நிறையாத தொழிலாளிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், வாழத் தெரியாமல் தவிக்கும் இளம் தம்பதிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
நாட்டின் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், ஆண், பெண் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் இல்லை.
பாலர்களுக்கென்றும், பக்தர்களுக்கென்றும், ஜோசியத்திற்கென்றும், சினிமாவுக்கென்றும் பத்திரிகை உண்டு. போட்டிப் புதிர்களை விடுவிப்பதற்கென்றும் பத்திரிகை உண்டு. ஆனால், காதலர்களிடையே ஏற்படும் புதிர்களை விடுவிக்க பத்திரிகை இல்லை. ஆண், பெண் தூய்மையாக, மனமொத்து வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன் வந்திருக்கிறோம்...//
இந்த குறிப்புத்தான் முதல் இதழில் இடம்பெற்றிருக்கிறது. சொன்னபடியேதான் இதழையும் ஆசிரியர் நடத்தியிருக்கிறார்.
'காதல்' இதழ் முழுக்கவே காதல் பற்றித்தான் நிரம்பி வழிகிறது. பக்கத்துக்குப் பக்கம் காதல் ரசம் சொட்டுகிறது. திகட்டத் திகட்ட இருந்தாலும் திகட்டும்படி இல்லை.
'காதல் கதை எழுதுவது எப்படி', 'காதலும் கல்யாணமும்' போன்ற தொடர்களுடன், உலகிலுள்ள பல நாட்டு அறிஞர்களும் காதல் பற்றி உயர்வாக எழுதியிருப்பவை எல்லாம் பொன்மொழியாக தொகுக்கப்பட்டு 'முத்துக் குவியல்' என்ற பெயரில் மாதம்தோறும் வெளியாகியிருக்கிறது. சிறுகதைகளும், கவிதைகளும் கூட காதலை மையமாகக் கொண்டதுதான். உள்ளூர் ஆட்களின் கதைகள் தவிர 'வெளிநாட்டு காதல் கதைகள்' என்ற தலைப்பின் கீழ் மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் வெளியிட்டிருக்கிறார்.
'சாட் ரூம்', 'அனு அக்கா ஆன்ட்டி' ஸ்டைலில் - அதாவது இதற்கெல்லாம் முன்னோடியாக - 'குடும்பத்தில் நடப்பவை' என்னும் தலைப்பின் கீழ் கணவனும் மனைவியும் உரையாடுவது போல் ஒரு பகுதி இறுதி இதழ் வரை வந்துள்ளது. அந்தரங்கமான விஷயங்கள் அனைத்தும் இதில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
இன்று பெரும்பாலான பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் 'அந்தரங்க கேள்வி - பதில்' பகுதியை முதன்முதலில் தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொடுத்தது 'காதல்'தான்.
இது போக உறவுச்சிக்கல் குறித்து உளவியல் - உடற்கூறு மருத்துவர்களின் கட்டுரைகள் மாதந்தோறும் பக்கங்களை அலங்கரித்திருக்கின்றன.
முக்கியமான விஷயம் 'காதல்' முதல் இதழ் முதல் இறுதி இதழ் வரை அதன் அட்டைப் படத்தில் இடம்பெற்றவர்கள் காதலர்கள்தான். வேறு யாரையும் அந்த இதழ் பிரசுரித்ததில்லை. விதிவிலக்கு 1948 அக்டோபர் இதழ். அந்த ஆண்டு காந்தியடிகள் கொலை செய்யப்பட்டதாலோ என்னவோ, இந்த இதழின் அட்டைப் படத்தை மட்டும் காந்தியடிகளும் கஸ்தூரிபாயும் அலங்கரிக்கிறார்கள். என்றாலும் இந்த இதழின் உள்ளே காந்திக்கும் கஸ்தூரிபாய்க்கும் இருந்த காதல்தான் தனிக் கட்டுரையாக வெளியாகியிருக்கிறது.
இப்படி துணிச்சலுடன் இந்த 'காதல்' பத்திரிகையை நடத்தியவர் அரு.ராமநாதன். வெளியீட்டாளரும், ஆசிரியரும் இவர்தான்.
1980களின் இறுதியில் 'வயல்' மோகன் என்கிற சி.மோகன்தான் Mohan Chellaswamy முதன் முதலில் அரு.ராமநாதன் என்னும் பெயரை எனக்கு அறிமுகப்படுத்தினார். 'பிரேமா பிரசுரம்' சார்பில் வெளியான 'சிந்தனையாளர் வரிசை' நூல்களை அவசியம் நான் படிக்க வேண்டும் என்று சொன்னதுடன் அந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் தனது பரிசாக அவற்றை வாங்கியும் கொடுத்தார்.
''அரு.ராமநாதன் முக்கியமான ஒரு நபர். ஆனால், தமிழ்ச் சூழல் அவரை மறந்துவிட்டது. சொல்லப்போனால் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டிருக்கிறார்...'' என்று அடிக்கடி சி.மோகன் நேர் பேச்சில் குறிப்பிடுவார். 1990களில் 'புதிய பார்வை' இதழில் அவர் 'நடைவழிக் குறிப்புகள்' தொடரை எழுதிய போது ஓர் அத்தியாயத்தையே அரு.ராமநாதனுக்காக ஒதுக்கியிருக்கிறார்.
''இவரைப் போன்ற ஓர் ஆளுமையாளரை காலம் மறக்க முற்படும்பொழுது, நாம் நினைவு கூர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது. அது நம் பயணத்தின் தொடர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கான அவசியமாகவும் இருக்கிறது...'' என சி.மோகன் அந்தக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருப்பது சத்தியமான வார்த்தைகள்.
இதன் பிறகு அரு.ராமநாதன் எழுதிய 'வீரபாண்டியன் மனைவி' நாவலை தேடிப் பிடித்து வாசித்தேன். மூன்று பாகங்கள் அடங்கிய இந்த நாவல் ஏறக்குறைய 1700 பக்கங்கள் கொண்டது. 1953ம் ஆண்டு ஜனவரி மாத 'காதல்' இதழில் தொடங்கிய இந்தத் தொடர் 1959ம் ஆண்டு மார்ச் இதழில் முடிவடைந்திருக்கிறது.
ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளியான இந்த சரித்திர நாவல், தமிழ் வரலாற்று நாவல்களிலேயே முதன்மையானது. சிறப்பானது.
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' மாபெரும் வெற்றியடைந்த போது, 'அது அல்ல சரித்திர நாவல். அலெக்சான்டர் டூமாஸின் நாவல்களை காப்பி அடித்து கல்கி எழுதியிருக்கிறார். உண்மையில் வரலாற்று நாவல் என்றால் இப்படியிருக்க வேண்டும்...' என நண்பர்களிடம் சூளுரைத்துவிட்டு அரு.ராமநாதன் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்ததாக சொல்வார்கள்.
இந்த நாவலில் பல புதுமைகளை இவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் கம்ப ராமாயணப் பாடலை கொண்டிருக்கும். நாவலின் நிலைக்களன் மதுரை என்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் 'ம' என்ற எழுத்துடனேயே தொடங்கும். கம்ப ராமாயணம் பால காண்டத்தில் தொடங்கி யுத்த காண்டத்தில் முடிகிறது என்றால் 'வீரபாண்டியன் மனைவி'யின் முதல் பாகம் யுத்த காண்டம்; இரண்டாவது பாகம் சுந்தர காண்டம்; மூன்றாவது பாகம் பால காண்டம்... என தலைகீழாக இருக்கும்.
இந்த 'வீரபாண்டியன் மனைவி'யின் தலைசிறந்த கதாபாத்திரம் என ஜனநாதனை சொல்லலாம். இந்த கதாபாத்திரத்துக்கு சமமாக படைக்கப்பட்ட பிற கேரக்டர்களை தமிழ்ப் புனைக்கதை உலகில் தேடினால் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் கிடைக்கும். அந்தளவுக்கு பவர்ஃபுல்லான ஸ்கெட்ச். ஜனநாயகம், அரசாட்சி தொடர்பாக ஜனநாதன் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் பட்டாசு. இன்றும் பொருந்தக் கூடிய நக்கல், நையாண்டி. குறிப்பாக மந்திராலோசனை அரங்கில் ஆசனங்கள் ஏன் படி வாரியாக போடப்பட்டிருக்கின்றன என்பதற்கு அந்தப் பாத்திரம் அளிக்கும் விளக்கம் இருக்கிறதே... தெள்சன்ட் வாலா.
''நான் முட்டாள்களை ஏமாற்ற முட்டாள்களுக்கு வழிகாட்டுவேனே தவிர நானே முட்டாள்களோடு ஒரு முட்டாளாக கலந்து கொள்வதில்லை!''
இன்னொரு இடம் -
''ஏகாதிபத்தியம் என்பது அடிமைப் பிரஜைகளைத்தான் உற்பத்தி செய்து என்றாவது ஒரு நாள் அன்னிய ஆதிக்கத்தின் வருகைக்கு அழிவுப்பாதை போடும். அதுதான் பல்லாண்டுகளாக பாரத தேசத்தின் சரித்திரமாக இருந்து வந்திருக்கிறது. கிராம சுயாட்சியின் மூலம் ஜனங்களின் உரிமைகளும் தனி மனிதனின் சுதந்திரமும், நல்வாழ்வும் பெருக வேண்டுமானால் ஏகாதிபத்ய முறை அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்...''
சுவாரஸ்யமான தகவல் - 'வீரபாண்டியன் மனைவி'; சாண்டில்யனின் 'கன்னி மாடம்'; விஷ்வக்சேனனின் 'பாண்டியன் மகள்' ஆகிய நாவல்கள் அனைத்தும் ஒரே வரலாற்றுக் காலகட்டத்தை சேர்ந்தவைதான். ஆனால், மூன்று நாவல்களின் டிரீட்மெண்ட்டும் வேறு வேறாக இருக்கும். சரித்திர நாவல் பிரியர்கள் ஒரே நேரத்தில் இந்த மூன்று புதினங்களையும் வாசித்துப் பார்க்கலாம்.
எனக்கு அறிமுகமாகும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த நாவலை படிக்கும்படி பரிந்துரைப்பேன். குறிப்பாக வெகுஜன பத்திரிகைகளில் புதிதாக எழுத வருகிறவர்கள் அவசியம் ஒருமுறையாவது 'வீரபாண்டியன் மனைவி'யை வாசிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
கூடவே இ.பாலகிருஷ்ண நாயுடு எழுதிய 'டணாய்க்கன் கோட்டை' நாவலையும் வாசிப்பது நல்லது. கோவையில் இருந்து வெளியான நாளிதழில் தொடராக வந்த சரித்திரப் புதினம் இது. நீண்ட வருடங்களாக விற்பனைக்கு கிடைக்காத இந்த நாவலை சமீபத்தில்தான் 'அம்ருதா பதிப்பகம்' தேடிப் பிடித்து அச்சிட்டிருக்கிறது. ஃபிக்‌ஷனுக்கும், நான் ஃபிக்‌ஷனுக்கும் இடைப்பட்ட அந்த எழுத்து நடையும், திப்பு சுல்தான் குறித்த சரித்திர விவரங்களும் சிலிர்க்க வைக்கும்.
ஆனால், முகநூலிலும் இணையதளத்திலும் எழுதி வரும் நண்பர்கள் 'டணாய்க்கன் கோட்ட்டை'யை படிக்காமல் இருப்பதே உத்தமம். ஏனெனில் அந்தக் கால புறச்சூழல் பிறப்பித்த நடையில் எழுதப்பட்ட அந்தப் புதினம் இணைய நண்பர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.
இந்தப் பிரச்னை 'வீரபாண்டியன் மனைவி'யில் கிடையாது. அட்டகாசமான வெகுஜன நாவல். ஆனால், எந்த விமர்சகரும் இதுவரை இந்த நாவல் பற்றி பேசியதும் இல்லை. எழுதியதுமில்லை.
நாவலுக்கு மட்டுமல்ல 'காதல்' இதழுக்கும் இதுதான் கதி.
இத்தனைக்கும் 1947 நவம்பர் மாதம் இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது அரு.ராமநாதனுக்கு வயது 23. அதன் பிறகு, தான் காலமாகும் வரை - அதாவது 18.10.1974 வரை தொடர்ந்து காதலுடன் 'காதலை' நடத்தியிருக்கிறார். இதனை அடுத்து இவரது சந்ததியினர் இப்பத்திரிகையை விடாமல் கொண்டு வந்திருக்கிறார்கள். கடைசி இதழ் 1980ல் வெளிவந்திருக்கிறது.
ஏறக்குறைய 33 ஆண்டுகள் வெற்றிகரமாக, அதுவும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையான 'காதல்' இதழ் எவரது நினைவின் அடுக்கிலும் இப்போது இல்லை என்பது மிகப்பெரிய சோகம்.
அவ்வளவு ஏன்... இந்த இதழ் வெளிவந்துக் கொண்டிருந்த நாளிலேயே தமிழகம் 'காதல்' பற்றி பேச மறுத்திருக்கிறது. இதற்கு உதாரணம் 'கல்கி' இதழ்.
1963ம் ஆண்டு ஆகஸ்டில் 'குண்டு மல்லிகை' என்ற சமூக நாவலை 'கல்கி' வார இதழில் அரு.ராமநாதன் தொடராக எழுதியிருக்கிறார்.
இதற்கான அறிவிப்பில் ''தமிழ் மக்களின் இதயங்களில் நிலையான இடம் பெற்றுவிட்ட 'இராஜராஜ சோழன்' நாடகத்தை அளித்த திரு. அரு.ராமநாதன் எழுதிய சமூகத் தொடர் 'கல்கி' இதழில் விரைவில் ஆரம்பமாகிறது...'' என்றுத்தான் குறிப்பிட்டது.
அப்போது 'காதல்' இதழ் 16வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தது. ஆனாலும் 'காதல்' ஆசிரியர் என்று சொல்ல 'கல்கி' தயங்கியது.
இந்த நிலை என் அப்பாவுக்கும் இருந்தது. நிச்சயம் என் அப்பா, தன் இளமைக் காலத்தில் 'காதல்' பத்திரிகையை படித்திருப்பார். ஆனாலும் என்னிடம் அது குறித்து பேசியதேயில்லை. பதிலாக வெவ்வேறு இதழ்கள், தொடர்கதைகள் குறித்து பல இரவுகள் விடிய விடிய என் தலையை கோதியபடி பேசியிருக்கிறார். வியர்வை மணம் வீசும் அவர் தொப்பையில் தலைசாய்த்தபடி அவற்றை எல்லாம் கேட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. 'குண்டு மல்லிகை' நாவல் கூட அப்பா பைண்டு செய்து வைத்திருந்த அடுக்கில் இருந்து எடுத்துத்தான் படித்தேன். அப்போது 'காதல்' குறித்து நான் கேள்விப்படாத நேரம்.
'வயல்' மோகனை சந்தித்த பிறகுதான் 'காதல்' குறித்து அறிந்தேன். அப்பாவிடம் கேட்டபோது புன்னகையே பதிலாக கிடைத்தது.
ஏறக்குறைய இதே குணத்துடன்தான் 1947 - 1980 காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். வெகுஜன வாசகர்களாக இருந்த அவர்கள் அனைவரும் 'காதல்' பத்திரிகையையும் அறிந்திருக்கிறார்கள், தொடர்ச்சியாக படித்திருக்கிறார்கள்.
ஆனால் -
அதை வெளியில் சொல்ல கூச்சப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் முறைகேடான உறவுகள் சார்ந்த காதலை 'காதல்' பத்திரிகை பிரசுரித்ததேயில்லை. கணவன் - மனைவி; காதலன் - காதலி ஆகியோருக்கு இடையில் இருக்க வேண்டிய இணக்கத்தைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறது.
என்றாலும் இதழ் குறித்து விவாதிக்கும் துணிச்சல் ஒருவரிடமும் இல்லை. 1960களின் பிற்பகுதிக்கு பிறகு 'காதல்' இதழில் கவர்ச்சிகரமான படங்கள் இடம்பெற ஆரம்பித்திருக்கின்றன. அதற்காக 'சரோஜாதேவி', 'பருவகாலம்', 'விருந்து' அளவுக்கெல்லாம் இறங்கவில்லை.
அப்படியிருக்க ஏன் தமிழ்ச் சமூகம் 'காதல்' என்ற பெயரில் ஓரு வெகுஜன இதழ் 33 ஆண்டுகள் வெளிவந்தது என்பதையே பதிவு செய்ய மறுக்கிறது என்று புரியவில்லை. அத்துடன் பழைய புத்தகக் கடையிலோ, கரையான் அரிப்பதற்காகவே உயிர் வாழும் வாடகை நூலகத்திலோ கூட ஏன் ஒரு 'காதல்' பிரதி ஒன்று கூட காணக்கிடைக்கவில்லை என்பதற்கும் பதில் கிடைக்கவில்லை.
சமீபத்தில் ரோஜா முத்தையா நூலகத்தில் 'காதல்' இதழ்களை பார்க்க நேர்ந்தது. ஆச்சர்யம் கலந்த வியப்புத்தான் ஏற்பட்டது. இதோ இந்த நிமிடம் வரை அந்த உணர்வு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
என்ன மாதிரியான உள்ளடக்கத்தை எல்லாம் சர்வசாதாரணமாக அரு.ராமநாதன் கொடுத்திருக்கிறார்... அவற்றை எல்லாம் அந்தக் கால 'குமுதமும்', 'ஆனந்த விகடனும்' எப்படியெல்லாம் உருமாற்றி பயன்படுத்திக் கொண்டன என்பதை நினைக்கும்போது -
ஒன்றுத்தான் தோன்றியது.
இந்த ஜானர் ஏன் இப்போது இல்லாமல் போய்விட்டது? திருமணமாகாத 23 வயது இளைஞனுக்கு இப்படியொரு பத்திரிகையை திருச்சியிலிருந்து தொடங்க வேண்டும் என்று எப்படி தோன்றியது?
விடை தெரியா கேள்விகள். 1950 வாக்கில் சென்னை வந்த அரு.ராமநாதன் 'கலைமணி' என்னும் சினிமா மாத இதழை 1949 ஏப்ரல் முதல் நடத்தியிருக்கிறார். சில ஆண்டுகள் மட்டுமே வெளியான இந்த இதழில் உதவி ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கியவர்தான் பிற்காலத்தில் 'வாண்டு மாமா' என்று புகழப்பட்ட கிருஷ்ண மூர்த்தி.
அதே போல் 1954ம் ஆண்டு சிரஞ்சீவியை ஆசிரியராக கொண்டு 'மர்மக் கதை' என்னும் மாத நாவலையும் (பாக்கெட் நாவல், க்ரைம் நாவலுக்கு எல்லாம் முன்னோடி) வெளியிட்டிருக்கிறார்.
'கலைமணி'யும் சரி, 'மர்மக் கதை'யும் சரி அதிக ஆண்டுகள் தாக்குப் பிடிக்கவில்லை. 'காதல்' மட்டும்தான் இறுதி வரை கம்பீரமாக வந்திருக்கிறது.
என்றாலும் 'காதலை'ப் பற்றி பேசத்தான் ஆளில்லை. அன்றும் இன்றும் நிஜ வாழ்வில் அதுதானே நிலமை?
பின் குறிப்பு:
1. 'தங்கப் பதுமை', 'பூலோக ரம்பை', 'ஆரவல்லி' போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் அரு.ராமநாதன்தான்.
2. டி.கே.எஸ். நாடகக் குழு நடத்திய போட்டிக்காக இவர் எழுதியதுதான் 'இராஜராஜ சோழன்' நாடகம்.
3. இதுவரை 350க்கும் மேற்பட்ட நூல்களை 'பிரேமா பிரசுரம்' வெளியிட்டிருக்கிறது.
4. 'அசோகன் காதலி' இவர் எழுதிய முதல் சரித்திர நாவல். குறுநாவல் என்றும் சொல்லலாம்.
5. தன் இறுதிக் காலத்தில் இவர் எழுதிய 'வெற்றிவேல் வீரத்தேவன்' சரித்திர நாவலை வாசிக்காமல் இருப்பதே இவருக்கு நான் செய்யும் மரியாதை. 'வீரபாண்டியன் மனைவி'யை எழுதியவரா இந்த நாவலையும் படைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும்.
6. தன் கனவுப் படைப்பாக 'ரசியா பேகம்' சரித்திர நாவலை நினைத்திருந்தார். அதற்காக குறிப்புகளையும் சேகரித்திருந்தார். ஆனால், எழுத ஆரம்பிப்பதற்குள் தன் 50வது வயதில் காலமாகிவிட்டார்.
கே. என். சிவராமன்

பேராசிரியர் கைலாசபதி

பேராசிரியர் கைலாசபதி மாதம்


செ.பொ.கோபிநாத் அவர்களின் இணயப் பக்கத்திலிருந்து
பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. 
தனக்கேற்றதுறை எது எனக் கண்டு கொள்வதில் தான் ஒவ்வொரு கலைஞனதும் வெற்றியும் நிலைபேற்றுத் தன்மையும் தங்கியுள்ளது. அந்த வகையில் கைலாசபதி தனக்குள் பல் திறமை கொண்ட மிகச் சிறந்த படைப்பாளியாக இருபதாம்; நூற்றாண்டுகளில் திகழ்ந்த போதிலும் தனக்கேற்றதுறை திறனாய்வே எனத் தெரிந்து திறனாய்வு என்றாலே கைலாசபதி என்று தமிழுலகில் அழியாப் புகழடைந்தார். சிறந்த பேச்சாளர், ஒலிபரப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், போதனாசிரியர், நாடக நடிகர், நவீன இலக்கியகர்த்தா (நாவல், சிறுகதை. கவிதை, நாடகம் எழுத்தாளர்), திறனாய்வாளர், ஒப்பியலறிஞர் போன்ற பல்திறன் கொண்ட இலக்கியவாதி கைலாசபதி. 

தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை, முன்வைத்தவர். ஒப்பியல் நோக்கையும், சமூகவியற் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர். ‘கலை கலைக்காக’ என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர். இலக்கியத்திற்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர். சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்.
 தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்றுநெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர். கலை இலக்கியச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லத் தீவிர முயற்சியில் ஈடுபட்டவர். ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகச் செயல்பட்டவர். சிறந்த கல்வியாளராக விளங்கியவர். கல்விக் கோயிலான யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர். இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இத்தனை பெருமைக்கும் உரியவர். ‘ஈழம் தந்த கொடை’! கலாநிதி க.கைலாசபதி.
பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.
"இது காலவரை தெரியவந்துள்ள வீரயுகங்களுள் காலத்தால் முந்தியது கிறித்துவிற்கு முன் மூவாயிரம் ஆண்டளவிலே மெஸொப்பொத் தோமியாவில் நிகழ்ந்த சுமேரிய வீரயுகமாகும். அதற்கடுத்தப்படியாகக் கிரேகத்தில் நிகழ்ந்த வீரயுகத்தைக் கொள்ளலாம். வட இந்தியாவில் இதிகாசங்கள் குறிக்கும் வீரயுகத்தையும் தவிர்த்தால், காலவரிசையில் அடுத்தப்படியாக அமைவது பழந்தமிழரது வீரயுகம் ஆகும். இது கிறித்துவிற்கு எழுநூறு ஆண்டுகள் முன்தொடங்கியிருக்கலாம். ஆயினும் பெரும்பாலும் கி.மு ஆறாம் நூற்றாண்டளவில் இது நிகழ்ந்தது எனக்கருதுவது பொருத்தமாகும். உலகின் பிறபகுதிகளிற் காணப்படும் வீரயுகங்களும் அவற்றைச்சேர்ந்த பாடல்களும் கிறித்துவிற்குப் பின் பல நூற்றாண்டுகள் கழிந்தே தோன்றின.அந்த வகையில், கால ஒழுங்கின்படி, தமிழரது வீரயுகம் புராதன சுமேரியர், கிரேக்கர் முதலியோரின் வீரயுகங்களுடன் ஓருசேர வைத்து நோக்கும் பெருமையுடையது எனலாம். (1968- 70,71)"
க. கைலாசபதி
(பேராசிரியர் வீ. அரசு மேற்கோளாக குறித்தவை)
ப.23. சங்க இலக்கியம் பன்முக வாசிப்பு
பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்த அவர், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை வந்தார்.
கைலாசபதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் தமது உயர்கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் தமிழைச் சிறப்பு பாடமாக கற்று B.A (Hons) முதல் தர மாணவனாகச் சித்தியெய்தினார் (1957).
பல்கைலக்கழகக் கல்வியின் பின்னர் இலங்கையின் அரச பத்திரிகையான தினகரனில் உதவி ஆசிரியராக1957 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார் (1961-62).1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்.1964 இல் சூடான் நாட்டில் வாழ்ந்த சர்வமங்களம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
1974 இல் யாழ்ப்பாண வளாகத்தில் தலைவராக இருந்த கைலாசபதி அவர்கள் அதன் துணைவேந்தராக 1974 முதல் 1977 வரை பணிபுரிந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும்(1978-82) பணிபுரிந்தார்.
பல்கலைக்கழகப் பணிகளில் மாத்திரமின்றி இலங்கை அரசின் கல்வி சார்ந்த குழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார். யுனெஸ்கோவிற்கான தேசிய ஆணைக்குழுவிலும்(1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்துள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும் கைலாசபதி நடித்துள்ளார். க.கைலாசபதி அவர்கள் இலக்கியத்துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.
கைலாசபதி அவர்கள் ஜனமகன், உதயன், அம்பலத்தான்,அம்பலத்தாடி, அபேதன் உள்ளிட்ட புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்..
மாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய லெனினிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கினார். சீன அரசின் அழைப்பில் இவர் 1979 இல் சீனா சென்றுவந்தார்.தம் சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய "மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்" என்ற நூல்வழி வெளிப்படுத்தியுள்ளார்.

பேராசிரியர் கைலாசபதியின் ஆசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்கள் மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்.செஞ்சீனத்துத் தந்தை மாவோ அவர்களின் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.மார்க்சிய,இலெனிய அறிஞர்களுடன் இணைந்து சீன ஆய்வுக்குழு அமைத்து, சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்.அவரிடம் பயின்றதால் க.கைலாசபதி அவர்கள் இக்கொள்கைத் தாக்கங்களைப் பெற்றார் என இராம.சுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். 
கைலாசபதியின் நூல்கள் 60, 70 களில் இளந் தலைமுறையினர் மட்டத்தில் அதிக தாக்கம் செலுத்தின. தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966) தமிழ் நாவல் இலக்கியம் (1968), ஒப்பியல் இலக்கியம் (1969) ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. இன்று மேற்குறித்த நூல்களுக்கான மீள் பதிப்புகள் 1999 இல் வெளி வந்துள்ளன. இந் நூல்கள் மீளவும் மின் பதிப்புப் பெறுவதனால் தமிழியல் ஆய்வில் ஈடுபாடு கொண்டோருக்கு இது மகிழ்ச்சிக்குரிய விடயமே. இந் நூற்றாண்டின் முடிவுறும் தருவாயில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இந்த நூற்றாண்டின் தமிழியல் ஆய்வு வரலாறு, வளர்ச்சி பற்றி உரத்துச் சிந்திக்கும் பொழுது கைலாசபதியைத் தவிர்த்துச் சிந்திக்க முடியாது. மேற்குறித்த நூல்களின் வருகை எமக்குப் புதிய பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பக் கூடும். பல்வேறு உரையாடல்களை எம்மிடையே ஏற்படுத்தும். இதுகாறுமான எமது வரலாற்றுக்குள் கொண்டு வரப்படாத புறக்கணிக்கப்பட்ட பகுதிகளும் உண்டு என்பதை இன்றைய எமது வாசிப்பு ஆய்வு எமக்கு உணர்த்தியுள்ளன. ஆக இதுவரையிலான ஆய்வுப் போக்குகள் குறித்த அக்கறை, தேடல் அவசியம். இவற்றுள் கைலாசபதியின் நூல்கள் மீளப் பதிப்பித்தல் எனும் செயற்பாடு ஆய்வியல் செயற்பாட்டின் ஓர் இணையாகவே பார்க்கப் பட வேண்டும். புரிந்து கொள்ளப் பட வேண்டும். 'தமிழியல் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி' எனும் நூலைக் கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதி 1999 ல் வெளியிட்டுள்ளார். இது தமிழியல் ஆய்வு வரலாற்று வளர்ச்சியில் கைலாசபதியின் விகிபாகம் பற்றிய சிரத்தையை ஆய்வு நிலை நோக்கில் வெளிப்படுத்தும் முயற்சியாக இந் நூல் அமைந்துள்ளது. ஆக, கைலாசபதியின் மூன்று நூல்களின் மீள் பதிப்பு, கைலாசபதி பற்றிய சுப்பிரமணியத்தின் நூல் ஆகியவற்றின் வருகை கலாநிதி கைலாசபதி பற்றிய பார்வைக்கும் தெளிவுக்கும் உதவுபவையாக உள்ளன. தமிழியலாளர்கள் −வற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழியல் ஆய்வு மேலும் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நூல்கள்

01,பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966
02.தமிழ் நாவல் இலக்கியம்,1968
03.Tamil Heroic Poetry-Oxford,1968
04.ஒப்பியல் இலக்கியம்,1969
05.அடியும் முடியும்,1970
06.ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி,1971
07.இலக்கியமும் திறனாய்வும்,1976
08.கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976
09.சமூகவியலும் இலக்கியமும்,1979
10.மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979
11.The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum
12.நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980
13.திறனாய்வுப் பிரச்சினைகள்,1980
14.பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980
15.இலக்கியச் சிந்தனைகள்,1983
16.பாரதி ஆய்வுகள்,1984
17.The Relation of Tamil and Western Literatures
18.ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986
19.On Art and Literature,1986
20.இரு மகாகவிகள்,1987
21.On Bharathi-1987
22.சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)
23.Tamil (mimeo)(co-author A.Shanmugadas)
தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும் சமூக ஆய்வுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்த க.கைலாசபதி அவர்கள் இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டு 06.12.1982 இல் இயற்கை எய்தினார். முப்பதாண்டுக் காலம் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபட்டிருந்த க.கைலாசபதி அவர்கள் தரமான ஆய்வுகள் வெளிவரவும்,முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆய்வுத்துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார்.
கைலாசபதி பற்றிய சிவசேகரத்தின் மதிப்பீடுகள்!
கைலாசபதி தவறுகட்கு அப்பாற்பட்ட அதிமானுடரல்லர். அவர் அத்தகைய அதிமானுடராகத் தன்னைக் கருதியவரும் அல்லர். அவருடன் கடுமையான கருத்து முரண்பாடுடையோர் பலர், அவர் வாழ்ந்த காலத்திலேயே தமது கருத்து வேறுபாடுகளைக் கூறியுள்ளனர். சிலர் அவர் இறந்த பின்னரே தமது மாறுபட்ட நிலைப்பாடுகளை கூற முன் வந்தனர். இதற்கான காரணங்களை நான் இங்கு ஆராய விரும்பவில்லை. கைலாசபதியின் சமுதாயப் பங்களிப்பு பல்துறை சார்ந்தது. அவர் தன்னை ஓரு அரசியல்வாதியாகவோ, பகிரங்கமாக எந்தவொரு அரசியற் கட்சியின் உறுப்பினராகவுமோ காட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் அவரது பல்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும், அவரது அரசியல் நிலைப்பாட்டின் முத்திரை தெளிவாகவே பதிந்திருந்தது. சர்வதேச விவகாரங்களிலும், உள்நாட்டு அரசியலிலும்; அவர் ஓடுக்கப்பட்ட மக்களினதும் அவர்களது போராட்டங்களினதும் தரப்பிலேயே நின்றார்.
சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் பின் ஏற்பட்ட விவாதத்திலும் இவரது நிலைப்பாடு தெளிவாக மார்க்சிய லெனினியவாதிகளின் பக்கத்திலேயே இருந்தது. கைலாசபதி பற்றிய கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் வலதுசாரி அரசியற் சார்புடையோரிடமிருந்தே வந்தன. சில சமயங்களில் தம்மை மார்க்சிசவாதிகளென்று கூறிக்கொள்வோரும் கைலாசபதியுடன் முரண்பட்டதுண்டு. மார்க்சியம் என்பது விவாதங்கட்கும் அபிப்பிராய வேறுபாடுகட்கும் அப்பாற்பட்ட திட்டவட்டமான நிலைப்பாடுகளின் கோவை அல்ல. எனவே ஒரு நிலைமையை ஒருவர் அறிந்துள்ள தன்மைக்கேற்ப அது பற்றிய மதிப்பீடுகளும் அவர் முன்வைக்கும் தீர்வுகளும் வேறுபடலாம். கைலாசபதியுடன் முரண்பட்ட பல வலதுசாரிகள், அவரது அடிப்படையான நிலைப்பாட்டுடன் முரண்பட்டனர். கைலாசபதியின் சமுகச் சார்புடைய இலக்கிய விமர்சனப் பார்வையை நேரடியாக எதிர்த்து முறியடிக்க முடியாத காரணத்தாற் தனிப்பட்ட அவதூறுகளில் இறங்கினோரும் உள்ளனர்.
கைலாசபதியின் பங்களிப்புக்களில் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர் அளித்த ஊக்கமும், கல்வித் துறையில் அவர் ஆற்றிய பணியும் பற்றி அதிகம் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை. அவர் ஒரு அரசியல்வாதியாக அறியப்படாததால் அவரது அரசியல் நிலைப்பாடு பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. கைலாசபதி என்கின்ற திறனாய்வாளர் தான் அதிகளவிற் சர்ச்சைக்குரிய மனிதரானார். இலக்கியம் பற்றி அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் பல்வேறு சூழ்நிலைகள் தொடர்பாகவும், பல்வேறு கோணங்களினின்றும் வழங்கப்பட்டவை. அவற்றைத் தனித் தனியாக எடுத்துப் பார்த்து அவற்றின் குறைபாடுகளை அவரது பார்வையினது குறைபாடன்றோ, அதை விட ஒருபடி அப்பாற் சென்று மார்க்சிய அணுகு முறையின் குறைபாடன்றோ வாதிப்பது “குருடனுக்கு பால் காட்டிய” கதையின் பாங்கிலேயே அமையும்.
இவ்வாறு கைலாசபதியின் திறனாய்வு பற்றி குறை கூறுவோர் ஒருவருக்கு ஒருவர் முரணான முறையிலேயே அவருக்கெதிரான வாதங்களை முன் வைக்கவும் நேருகின்றது. ஆறுமுகநாவலரின் பங்களிப்பை அவர் மதிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதைக் கண்டிப்பவர்கள், இலக்கியத்தின் வர்க்கத்தன்மை பற்றிய அவரது நிலைப்பாட்டை மறுப்பவர்களுடன் வேறுபடுகின்றனர். சில சமயம் இரண்டு விதமான தாக்குதல்களும் ஒரே தளத்திலிருந்து வந்துள்ளன. இதற்கான காரணங்களுட் கைலாசபதி பற்றிய விமர்சனங்கள், கைலாசபதி பற்றியும் மார்க்சிய அணுகு முறைகள் பற்றியும் விமர்சகர்கள் கொண்டிருக்கும் விறைப்பான பார்வையும் அடங்கும்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பார்வையும் வர்க்க அடிப்படையுங் கொண்ட ஆக்க இலக்கியப் படைப்பை உருவாக்குபவர், ஒரு போதனாசிரியரின் பாங்கில் இன்ன வகையில் இப்படி எழுதினாற் தான் தனது நிலைப்பாட்டை வலியுறுத்த முடியும் என்று திட்டமிட்டு எழுதுகிறார் என்பது; மார்க்சியத் திறனாய்விற்குரிய கருத்தல்ல.
ஒரு படைப்பாளியின் ஆக்கங்கள் அவரது அனுபவத்திற்கும்–அறிவிற்கும் ஏற்றவாறே அமைகின்றன. ஒருவரது அறிவும் அனுபவமும் அவரது சமுதாய சூழலிற் தங்கியுள்ளன. வர்க்க சமுதாயத்திற் தனி மனித சிந்தனை ஒருவரது வர்க்கப் பின்னணிக்கும், சமுதாயப் பார்வைக்கும் ஏற்றவாறு அவரது அனுபவங்களும் விருத்தியடைகின்றது. எனவே சரி–பிழை–நீதி–அநீதி–நெறி–நெறியல்லாதது போன்ற மதிப்பீடுகளும், மனிதாபிமானம, அழகியல் என்பன தொடர்பான கொள்கைகளும், ஒரு புறம் மனித இனம் என்ற அடிப்படையில் சில பொதுவான தன்மைகளைக் காட்டினாலும், மனித இருப்பின் வேறுபாடுகளையும் கொண்டிருப்பன. இலக்கியமோ பிற கலை வடிவங்களோ, அழகியலோ மனிதரது இருப்புக்கு அப்பாற்பட்டலையல்ல. மனித இருப்பிற்கும் அதனைத் தீர்மானிக்கும் சமுதாய இயல்பிற்கும் இயக்கத்திற்கும் அடிப்படையான முரண்பாடுகளை கலைகளிலும் இலக்கியங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனித உறவுகளை நிர்ணயிக்கும் சமுதாய முரண்பாடுகள் இலக்கியத்திற் தெரிவது மட்டுமன்றி, அம் முரண்பாடுகளின் தீர்வுக்கான போராட்டமும் இலக்கியத்தினூடு நடைபெறுகின்றது. மனிதனது சமுதாய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் சமுதாயத்தின் வர்க்கத் தன்மையாலும், வாக்கப் போராட்டத்தாலும் நிர்ணயிக்கப்படுமாயின், இலக்கியமும் பிற கலை வடிவங்களும் அதற்கு விலக்காக அமைய முடியாது. இந்த வாதத்தை ஒருவர் வரட்டுத்தனமாக ஆதரிக்க முடியும். வரட்டுத்தனமாகவே இன்னொருவர் அதை எதிர்க்கவும் முடியும்.
கைலாசபதி கலை இலக்கியங்களில் அழகியலை வலியுறுத்தியவர். அதே வேளை அழகியல் ஆக்கங்களின் உள்ளடக்கத்தினின்று வேறுபடுத்தப்பட்டு, உள்ளடக்கத்திலும் மேலான ஒன்றாகக் காட்டப்படுவதை வன்மையாக எதிர்த்தவர். அழகியற் கோட்பாடுகளை மிகையாக வலியுறுத்தி “கலை கலைக்காகவே” என்ற கோஷத்திற்கு புத்துயிர் ஊட்டியவர்கள், இக் காரணத்துக்காகவே கைலாசபதியை கடுமையாகத் தாக்கினர். மார்க்சியக் கலை இலக்கிய நோக்கைத், தமிழன் பழைய இலக்கியங்கட்கும் பிரயோகித்து, தமிழர் வரலாறு பற்றிய தெளிவான பிரமைகளைக் களையவும், அவற்றினூடு தமிழர் வரலாறு பற்றிய தெளிவான ஓரு பார்வையையும் பெறவுங் கைலாசபதி பெரும் பங்களித்தார். கைலாசாதி பற்றி செய்யப்படும் மதிப்பீடுகள் கைலாசபதியின் ஒட்டுமொத்தமான பங்களிப்பை முதன்மைப்படுத்துவது நியாயமானது. கைலாசபதியின் விமர்சனங்களில் உள்ள குறைபாடுகள் அவை செய்யப்பட்ட சூழலின் அடிப்படையிற் கருதப்படுவது அவசியம்.
மு. தளையசிங்கம் பற்றிய விமர்சனத்தில், கைலாசபதியின் வாதங்கள் சில அவரது முக்கியமான கருத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன். அக் குறைபாடுகள் தளையசிங்கம் பற்றிய அவரது மதிப்பீட்டைப் பொய்ப்பிக்கவில்லை. கனமான வாதங்கட்கு அருகருகாகக் கனங் குறைந்த வாதங்களை வைத்தமை கைலாசபதியின் விமர்சனத்தை அவரது அரசியல் எதிரிகள் தாக்குவதற்கு வசதி ஏற்படுத்திற்று. அதே வேளை கைலாசபதிமீது அவர்கள் தொடுத்த தாக்குதல்களின் கீழ்த்தரமான தன்மை அவர்களது தரப்பில் எவ்வளவு நியாயம் இருந்தது என்பதன் அளவுகோலாகவே எனக்குத் தெரிந்தது. சிந்தனைக்கும், தளையசிங்கத்தின் மார்க்கிய விரோதத்தின் வறுமையைக் கைலாசபதி கணிசமான சகிப்புத் தன்மையுடனேயே விமர்சித்திருந்தார்.
கைலாசபதியின் முக்கியமான ஒரு தவறு, மஹாகவி பற்றிய அவரது மதிப்பீடு தொடர்பானது. மஹாகவியின் சமுக அரசியற் பார்வையின் போதாமையை 1960-களின் அரசியல் சூழல் மிகைப்படுத்தியதன் விளைவாகவே, கைலாசாதி மஹாகவியின் முக்கியத்துவத்தைத் தவற விட்டு விட்டார் என நினைக்கின்றேன். இத் தவறு பற்றிக் கைலாசபதியை இன்று விமர்சிப்போர் சிலர், கைலாசாதி இருந்த காலத்தில் அதைத் திருத்து விக்க வாய்ப்பிருந்தும் ஏன் முனையவில்லையோ தெரியாது.
ஈழத்து இலக்கிய விமர்சன நடைமுறையின் இடர்பாடுகள் சகல விமர்சனங்களையும் வெவ்வேறு அளவுகளிற் பாதித்துள்ளது. கைலாசபதியின் தவறுகள் அலட்சியம் செய்ய வேண்டியவையல்ல. அவை நேர்ந்த சூழலின் அடிப்படையில் மதிப்பிட வேண்டியன. நமது இலக்கியத் துறையின் விஞ்ஞான ரீதியான பார்வையும், சமுதாயச் சார்பும், சமுதாய மாற்றத்திற்கான முனைப்பும், கைலாசபதியிடமிருந்து பெற்றவற்றைக் கருத்திற் கொண்டாற் கைலாசபதியின் குறைபாடுகள் மிக அற்பமானவையே.
இந்த இடத்தில் சாள்ஸ் டார்வின் முன்வைத்த பரிணாமக் கோட்பாடு அவர் முன் வைத்த அதே வடிவில் இன்று ஏற்கப்படுவதில்லை என்பது நினைவூட்டத்தக்கது. குறிப்பான பல அம்சங்களில் டார்வின் விளக்கங்களிற் குறைபாடுகளும் தவறுகளும் காணப்படுகின்றன. ஆயினும் அவர் எடுத்துக் காட்டிய பரிணாமவாத அடிப்படை (உயிரினங்கள் எளிய ஜிவராசிகளின்று தோன்றிச் சூழலுக்கமைய மாற்றமடைந்து உயரிய வடிவங்காக விருத்தி பெற்றன என்ற கருத்து) அதாவது, டார்வினது வாதத்தின் முழுமை இன்னமும் மறுக்கவியலாததாகவே உள்ளது. டார்வின் சொன்னவை பல தவறானவை. எனவே பரிணாமக் கொள்கையும் செல்லுபடியாகாது என்ற வாதம் சிலரால் இன்னதும் முன் வைக்கப்படுகிறது. இவர்களது வாதம், கைலாசபதியின் விமர்சனத் தவறுகளை ஆதாரமாக்கி அவரது இயங்கியல் பொருள் முதல்வாத அடிப்படையிலான இலக்கியக் கொள்கையை நிராகரிப்பவர்களது வாதத்தினின்று, மூடத்தனத்தின் அளவில் வேறுபட்டதல்ல.

Thursday, April 2, 2020

The Spanish flu pandemic of 1918

The Spanish flu pandemic of 1918, the deadliest in history, infected an estimated 500 million people worldwide—about one-third of the planet’s population—and killed an estimated 20 million to 50 million victims, including some 675,000 Americans. The 1918 flu was first observed in Europe, the United States and parts of Asia before swiftly spreading around the world. At the time, there were no effective drugs or vaccines to treat this killer flu strain. Citizens were ordered to wear masks, schools, theatres and businesses were shuttered and bodies piled up in makeshift morgues before the virus ended its deadly global march.
Mortality was high in people younger than 5 years old, 20-40 years old, and 65 years and older. The high mortality in healthy people, including those in the 20-40 year age group, was a unique feature of this pandemic. While the 1918 H1N1 virus has been synthesized and evaluated, the properties that made it so devastating are not well understood. With no vaccine to protect against influenza infection and no antibiotics to treat secondary bacterial infections that can be associated with influenza infections, control efforts worldwide were limited to non-pharmaceutical interventions such as isolation, quarantine, good personal hygiene, use of disinfectants, and limitations of public gatherings, which were applied unevenly.





Support on inventions relate to Fight Against COVID 19-Sri Lanka Inventors Commission


Day by day the situation is not healthy with respect to COVID 19 and we need to take all possible ways to prevent and counter the prevailing health risk. In this contest, National universities can play a vital role as that's the best place, which is with the knowledge, manpower, infrastructure and instruments, which are again brought down by the public funds. As state Universities, we have much more responsibility on our shoulders to safeguard our own community as well as to challenge the crisis situation worldwide.
I am writing this to inform you that Sri Lanka Inventors Commission (SLIC) has strengthened the system to support any invention, which is directly related to Fight Against COVID 19.
This can be:
1. Just an idea
2. Concept
3. Prototype
4. Finish product
5. Design

Whichever the stage is, we/SLIC is going to support them in all possible ways to introduce this to the community, while ensuring the Intercultural Property of their product/concept.
We are there to support them on:

a. The patent documents
b. Finance them for testing (local/international)
c. Technical assistance
d. Provide financial assistance to buildup prototypes.
e. Provide grants/loans for start-ups
f. Support them to find out possible investors.

Hence, please be good enough to share this information among your staff (academic/non-academic) and students (undergraduate/postgraduate) and support this effort against COVID 19.
Thank you in advance.
Commissioner
Professor R.U. Halwatura

Sri Lanka Inventors Commission
Ministry of Science, Technology and Research
No. 46 & 48, Cotta Road, Colombo 08
SRI LANKA
TP: +94-11-2676650
Fax: +94-11-2676646

அன்பின் பதட்டம்

சருமத்திற்கு பதிலாக மரப்பட்டைகள் முளைக்கத் துவங்கிய நாளில்
என் படகு எரிந்து சாம்பலை நீர் உண்டது

அருங்காட்சியகத்திலிருக்கும் முன்னர் தொழப்பட்ட சிலையாய்
ஆண்டுக் குறிப்புடன் சுருங்கித் தூசேறுகிறது ஓர் ஆயுள் பரியந்தம்

காயத்தைச் சொல்லத் தெரியாமல்
ஒடுங்கிக் கிடக்கும் வளர்ப்புப் பிராணியின் மௌனத்தை
பிரார்த்தனையென பரிசீலிக்கிறது
உன் வருகை

காற்றுரசியதும் எரியத்துவங்கும்
விண்கல்லாய்
ஒரு புதிய அன்பு கவியத் திரளுகையில்
சற்றே தகிக்கிறது

தலைத்திருகப்பட்ட சேவலின் துள்ளலைச் சுற்றிச் சுற்றி குலைக்கும்
நாய் இந்த அன்பின் பதட்டம்


நேச மித்ரன்

தமிழ் சினிமாவின் இலக்கணம் மகேந்திரன்

தமிழ்த் திரையின் உயிர்த் துடிப்பு கொண்ட இயக்குநர் மகேந்திரன் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. சினிமா ஒரு தவம் என்றோ அதற்காகவே காத்துக்கிடந்தவர் என்றோ அவரைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர் சினிமாவுக்கு வந்தது அவரே சொல்லியிருப்பதுபோல் ஒரு விபத்துதான். ஆனால், சினிமாவுக்கு வந்த பின்னர் அவர் படைத்த சினிமாக்களில் சிலதாம் அவரைக் காலாகாலத்துக்கும் சாகாவரம் பெற்றவராக்கியிருக்கின்றன.
https://www.hindutamil.in/
கோதைமலர் பூம்பாதம் வாவென்றதோ....
உங்களுடன் ஓரிருமுறை பேச வாய்த்தது மகேந்திரன் சார், இறுதியாக தொலைபேசியது உங்களின் ஓர் பிறந்த நாளில் . வாழ்த்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது உங்கள் பள்ளிக்கரணை வீட்டிற்கு ‘அவசியம் வாங்க’ என்ற அழைப்போடு உரையாடலை நிறைவு செய்தோம் . இன்று மெட்டி ஒலிக் காற்றோடு கேட்டபடி அசைபோடுகிறேன்.கைஸெ கஹூன் பாடல் பார்க்கவேண்டும் அதில் அந்த பெண்களின் உதடு விலகாத புன்னகை மலர்வதை காண வேண்டும் . ஜானி பார்க்க வேண்டும்.இருவருக்குமான அந்த காதலைச் சொல்லும் தருணத்தில் அப்டித்தான் பேசுவேன் என்ற வசனத்தை மீண்டும் ஒருமுறை கேட்க வேண்டும். . 

உதிரிப்பூக்களில் சினிமாவிற்கு போகலாம் என்று விஜயன் சொன்னதும் அஸ்வினி வெளியே வந்து வானம் பார்க்கும் காட்சியை ரசிக்க வேண்டும் .

முள்ளும் மலரும் அந்த கையிழந்தபிறகு அணைக்க வரும் ஷோபா அழும் போது ஒன்னுமில்லம்மா என்று ரஜினி சொல்லும் காட்சிக்கு நெகிழாமலிருக்க வேண்டும்.

அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா பாடல் இம்முறையாவது ஊர் நினைப்பை தூண்டிவிடாமல் பாதியில் அணைக்காமலிருக்க வேண்டும்.

மெட்டி ஒலிக்காற்றோடு பாடலில் புத்தரின் காதில் பூச்சுட்டி விளையாடும் அந்த இளங்குமரிகளில் இறந்து போன அக்காவின் நினைப்பு மேலெழுந்து விடக்கூடாது. பாலப்பட்டி நதிக்கரையில் எடுக்கப்பட்டதாம் உதிரிப்பூக்கள் இறுதிக் காட்சி ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும் .
பூட்டாத பூட்டுகள் ,நண்டு இரண்டும் என்னுள் நிகழ்த்தியவை குறித்துப் பேச மீண்டும் எங்கே போய் தேவ்ராஜ் அண்ணனைத் தேடுவேன் நான் .ஜானியில் வரும் தோழி சகலத்திற்கும் சாட்சியாய் இருப்பது எப்படி என்று யோசித்துக் கிடந்த நாட்கள் பல உண்டு. உங்கள் படத்தில் வரும் சரத் பாபு, உங்கள் படங்களில் வரும் வெண்ணிற ஆடை ராமமூர்த்திக்கு ஒரு பிரத்யேக முகம் வைத்திருந்தீர்கள் இல்லையா சார் . உங்கள் படங்களில் வரும் தாய் உங்கள் படங்களில் வரும் தங்கைகள் .. எனக்கும் நிஜத்திலும் சற்றுக் கூடக் குறைவான நலன்களுடன் வாய்த்தார்கள் சார். நான் தான் முள்ளும் மலரும் படத்தில் ஜானியாகவும் ஜானி படத்தில் முள்ளும் மலரும் படத்தில் வரும் ஷோபாவின் காதலனாகவும் அசந்தர்ப்பமாக வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருப்தியாக இருக்கிறேன் . ஆமாம் ,பெரிதும் அர்த்தச் சுமையற்ற கணங்களால் ஆன பல நிகழ்வுகள் தான் பின்னாளில் கோர்த்துப் பார்க்கும் போது வாழ்வாக எஞ்சி நிற்கிறது . Piece of Art,Small Act of love யாருக்கோ தூண்டலாக ஒரு கணநேர உந்தமாக மாறும் பொழுதை எந்த மனசால் தீர்மானிக்க முடியும் எந்த கலைஞனால் அறுதியிட முடியும் .உங்கள் கதைகளில் வரும் சம்பவங்கள் யாவும் “ நேர்பவை” திட்டமிடலுக்கெதிரான வாழ்வின் அபத்தங்கள். இயல்புகள் என்று நம்புகிறவை எப்படி வாழ்வோட்டத்தில் திரிந்து போகின்றன என்று பேச முயன்றவை.இந்த உலகம் கேளிக்கைக்காரர்களுக்கானது போல் தோன்றினாலும் மெய்யான கலைதான் எளிய அன்பை நம்பும் மனிதர்களின் சாவை ஒத்தி வைக்கிறது.நானும் சாவை ஒத்தி வைக்கும் சிறு கீற்றை உங்களிடமிருந்து பெற்றிருக்கிறேன் . நன்றி அலெக்ஸாண்டர் சார். உங்களுடைய ராஜ்ஜியத்தில் சூரியனும் நிலவும் உதித்தும் மறைந்தும் உயிர்வளர்ப்பார்கள் .
நேச மித்ரன்

*ராமநவமி ஸ்பெஷல்* (*02.04.2020*) வியாழன்!




*மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம்.* சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை,மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது!!!

வழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும்ராமபிரானைஎண்ணிக்கொண்டு ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம் உச்சரிக்கலாம்!
பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது. தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது. இறைவன் தனது அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம்.
பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனம், ராமர் மற்றும் கிருஷ்ணர். இவற்றில் ராம அவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்க ளிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான்.
ஆனால், ராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவ ரைப் போல் எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார். அதனாலேயேதான் ராமாவதாரம் சிறப்புப் பெற்றதாக ஆகிறது.

ஏன் நவமியில் அவதரித்தார்?
ஒருசமயம் அஷ்டமி, நவமி திதிகளின் தேவதைகள்கவலையில்ஆழ்ந்திருந்தன. பதினாறு திதிகளில் தங்களை மட்டுமே விலக்கி வைத்து எந்தக் காரியத்துக்கும் தங்களை எவரும் தேர்ந்தெடுக்காமல் இருந்த ஏக்கம் அவைகளைப் பீடித்திருந்தது, பெருமாளிடமே சென்று முறையிட்டன. திதிகளின் ஏக்கம் தீர்க்க எண்ணிய தீனதயாளன், இனி வரும் எனது இரு அவதாரங்களும் நவமியிலும், அஷ்டமியிலுமே நிகழும். அதனால் உங்கள் இருவரையும் மக்கள் போற்றித் துதித்து மகிழ்வார்கள் என்று வரமளித்தார். அதனால்தான் ராம அவதாரம் நவமியிலும் கிருஷ்ண அவதாரம் அஷ்டமியிலும் நிகழ்கின்றன.
(ராம நவமி! கோகுலாஷ்டமி)

ராம நாம மகிமை:
ராமபிரானாலேயே சிறந்த பக்தன் என்று போற்ற ப்பட்ட அனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுரியம் என அனைத்துமே ராமநாமத்தின் மகிமையால்தான் வந்தது என்று கூறலாம். கடல்தாண்டிச் சென்ற அனுமனை சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்த போது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளியேறிச் செல்ல அனுமனுக்கு உதவியது ராமநாமம்தான்.அவ்வளவு ஏன், ராமரே அருகில் இருந்தபோதும், அவரது திருநாமத்தின் மகிமையால்தானே பெரும்பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து பாலம் அமைத்தார்கள் வானர வீரர்கள்! ராமநவமி, பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியில் அமைகிறது. ராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின. அதனால் ராமசந்திரனின் ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீராமநவமி உற்சவம் இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, ஜனன உற்சவம் மற்றொன்று கர்ப்ப உற்சவம்.
கர்ப்ப உற்சவம்:
ராமநவமிக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னாலேயே இந்த உற்சவம் தொடங்கப்படும். தினமும் ராமர் படத்துக்கு அர்ச்சனை செய்து, ராம நாமத்தை ஜபித்து, விரதமிருந்தும் வழிபடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல் போன்ற பிரசாதங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.
ஸ்ரீராமநவமி அன்று பானகமும் நீர்மோரும் கட்டாயம் நிவேதனம் செய்வார்கள். காரணம், கானகத்தில் விஸ்வாமித்திர முனிவரோடு வாழ்ந்த போது அவர்கள் தாகத்துக்கு நீர்மோரும் பானகமும் பருகினார்கள். அதை ஒட்டியே இவை நிவேதனம் செய்யப்படுகின்றன. அன்று முழுவதும் ராமநாமத்தை ஜபித்து உபவாசம் இருந்தால் வாழ்க்கையில் சகல சம்பத்துகளோடு வெற்றியும் நிம்மதியும் உண்டாகும் என்பது நிச்சயம்.
இந்த உற்சவம் ஸ்ரீராமநவமி அன்று தொடங்கி பத்து நாட்கள் நடத்தப்படும். பத்தாம் நாள் சீதா கல்யாணமும் பட்டாபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்தப் பத்துநாட்களிலும் பஜனை, ராமாயண பிரவசனம் என கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் பக்தர்கள்.பானகம் நீர்மோரோடு ஆரம்பிக்கும் நிவேதனம் பத்தாம் நாள் கல்யாண ஆராதனையாக நிறைவு பெறும். மானிடத் திருமணத்துக்குச் செய்வது போலவே பலவகையான பதார்த்தங்கள் செய்து அன்னதானமும் நடைபெறும். இந்தக் கல்யாண விருந்தை உண்டால் மனச்சோர்வு, கவலை ஆகியவை நீங்கும். ஆரோக்யம் உண்டாகும் என்பர். உற்சவத்தின் கடைசி தினத்தன்று அதிகாலை முதல் பொழுது சாயும் நேரம் வரை பக்தர்கள் ராமநாமத்தை உச்சரித்தபடி இருப்பர்.
இதை அகண்ட நாம பஜனை என்று சொல்வார்கள். தீராத கவலை, துக்கம், வறுமை, மனப்பிணி போன்றவை யாவும் அகண்ட நாமத்தில் கலந்துகொண்டு ராமநாமத்தை உச்சரித்தால் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடும்.
ராம நவமி விரதம் இருக்கும்போது
மனதில் இன்ன காரணத்துக்காக விரதம் இருக்கிறேன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா! என்று வேண்டிக்கொண்டு இந்த விரதத்தை ஆரம்பிக்கவேண்டும்.அவரவர் வசதிப்படி கர்ப்பக்கால விரதம் அல்லது ஜனனகால விரதம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எதை தேர்ந்தெடுத்தாலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து அனுசரிப்பதே சிறந்தது. கர்ப்பக்கால விரதம் எடுப்பவர்கள். ராமநவமி வருவதற்கு முந்தைய அமாவாசை அன்றிலிருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நீராடி ராமர் படத்துக்குப் பூவும் பொட்டு வைத்து வணங்கவேண்டும்.
குறைந்தது 108 முறை ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று மனதார உச்சரிக்கவேண்டும். பின்னர், வழக்கமான பணிகளுக்குச் செல்லலாம். பகலில் ஒரே ஒரு முறை மட்டும் சைவ உணவை உண்ணலாம். மற்ற நேரங்களில் பால், பழம், மோர் அருந்தலாம். புகையிலை, வெற்றிலை பாக்கு போன்றவற்றைக் கட்டாயமாக விலக்கவேண்டும். ஸ்ரீராமநவமி அன்று ராமர் படத்தை அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடவேண்டும். பின்னர் மனதை ஒரு நிலைப்படுத்தி ஸ்ரீராமஜெயம் என்று 108,1008 என அவரவர் வசதிப்படி எழுதலாம்.
நீர் மோர் பானகம் ஆகியவற்றோடு சிறப்பான விருந்து சமையலும் செய்து ராமருக்குப் படைக்க வேண்டும். நிறைவாக வடையையும், வெற்றிலையையும் அனுமனுக்குப் படைக்க வேண்டும். பின்னர் விரதத்தை நிறைவு செய்துவிட்டேன். நல்லவை யாவும் அருளிக் காப்பாயாக! என்று வேண்டிக்கொண்டு உணவு அருந்தலாம். அன்றைய தினம் கட்டாயம் நீர் மோரும், பானகமும் பருக வேண்டும். அன்று இரவு லேசான உணவாகஎடுத்துக்கொள்ளுதல் நலம். இப்படி ஸ்ரீராமநவமி விரதத்தை கடைப்பிடித்து வந்தால் மனநிம்மிதி, வெற்றி, செல்வம் ஆகியவை பெருகும். இதே விரதத்தை ஜனனகால விரதமாக (இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வதுண்டு) அனுஷ்டிக்க நினைப்பவர்கள் ஸ்ரீராமநவமியிலிருந்து தொடங்கி ஒன்பது நாட்கள் மேற்சொன்னபடி விரதம் இருக்க வேண்டும்.பத்தாம் நாளன்று காலை ராமருக்கு வழிபாடுகள் செய்து கல்யாண சமையல்போல விருந்துணவு செய்து படைக்க வேண்டும். நிறைவில் வடையும் வெற்றிலையும் அனுமனுக்கு சமர்ப்பணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.இந்த வகையில் விரதத்தைக் கடைப்பிடித்தால் திருமணத் தடைகள் நீங்கும். தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும். மனக்குழப்பங்கள் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும்.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே!
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையில் ராமவென்ற இரண்டெழுத்தினால்!!!

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா!!!

சிவகங்கை கணேசன்.
மருதனர் மடம் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ராமநவமி

Wednesday, April 1, 2020

கொரோனாவுக்கு கபசுரக்குடிநீர் Kabasura Kudineer

டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு குடிநீரும், ஹெச் 1 என் 1 வைரஸ் தொற்றால் பன்றி காய்ச்சல் தீவிரமாக பரவிவந்தது. அப்போது இதை கட்டுப்படுத்த கைகொடுத்தது சித்தமருத்துவம் தான்.

நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு என உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய மூலிகை நீர் அரசு சித்த மருத்துவமனைகளில் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் அலோபதி மருத்துவ துறை மருந்துகளை கண்டறிவதில் வேகம் காட்டிவருகிறது.

இந்நிலையில் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களிடம் வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய சித்தமருத்துவர்கள் கபசுர குடிநீரை பரிந்துரை செய்தார்கள்.அதே நேரத்தில் இவை கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று நினைத்திட வேண்டாம். இவை கொரோனாவாக இருக்கலாம் என்று தனிமைப்படுத்தியவர்களுக்கும், அறிகுறிகள் இலேசாக இருக்கும் போது சிகிச்சை அளிப்பவர்களுக்கும் கபசுரகுடிநீரை கொடுக்கலாம். மேலும் அலோபதி சிகிச்சை பெறுபவர்களுக்கும் இந்த குடிநீரை கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.



தற்போது அரசு சித்தமருத்துவமனைகளில் மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம். யூகி முனி சித்தர் பொதுவாக காய்ச்சலை 64 வகை காய்ச்சலாக பிரித்திருக்கிறார். அதில் கபசுரகுடிநீர் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் காய்ச்சல் வந்தபிறகு குணப்படுத்துவதற்கும் இதை பயன்படுத்தலாம் என்றும் வழிகாட்டியிருக்கிறார்.


மூலிகை பொருள்களை கலந்து தயாரிக்கும் கபசுரக்குடிநீரை வீட்டில் தயாரிப்பது கடினமானது. இதில் சுக்கு, திப்பிலி இலவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் என 15க்கும் மேற்பட்ட மூலிகை பொருள்கள் கலக்கிறார்கள். அதோடு இதை சுத்தம் செய்வதும் கடினம். அதனால் இதை சித்தமருந்து கடைகளில்கிடைக்கும் கபசுர பொடியாக வாங்கி பயன்படுத்தலாம்.


ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டம்ளராக ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி கால் தம்ளர் குடித்து வரவும். ஒவ்வொரு முறையும் அப்போது கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கபசுரக்குடிநீர். குறிப்பாக மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுகிறது.


சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது இந்த நீரை வடிகட்டி அதனுடன் இனிப்புக்கு சுத்தமான தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து கொடுக்கலாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மருத்துவரை கலந்தாலோசித்து கொடுப்பது நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கபசுரகுடிநீரை தவிர்ப்பது தான் நல்லது.


கொரோனா அச்சத்தால் இயன்றவரை கூட்டம் கூடாமல் தனித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இப்போது கூட்டத்தில் போக வேண்டாம் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டும் தயாரித்து குடிக்கலாம். 
சுக்கு, ஆடாதோடை, கற்பூரவல்லி, நிலவேம்பு, இலவங்கம், திப்பிலி இவையுடன் வேறு கபசுரகுடிநீர் செய்ய பயன்படும் மூலிகை பொருள்களில் எது உங்களுக்கு எளிதாக கிடைக்கிறதோ அதை சிறிதளவு எடுத்து சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

கபசுரக்குடிநீர் குடிப்பதால்கொரோனா வைரஸ் பரவாது. வந்தாலும் குண்மாகிவிடுமா என்று கேட்கலாம். ஆனால் சித்தமருத்துவர்கள் பரவிவரும் கொரோனா வைரஸ்க்கு கபசுரகுடிநீரை மருந்தாக பரிந்துரைக்கவில்லை. ஆனால் வைரஸ் போன்ற தொற்றுகளை பரவாமல் தடுக்க உதவும் கபசுர குடிநீர் கோரொனாவுக்கான மருந்தாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை. எனினும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள். இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்பதால் கபசுர குடிநீர் எப்போதும் உடலுக்கு நன்மையை தரும் என்றே சொல்லலாம்.
சித்த மருத்துவமும் கொரொனாவும் பித்தசுரக் குடிநீர்
Balamurali Balasingam 
தற்சமயம் முழுஉலகையுமே ஆட்கொண்டுள்ள உயிர்கொள்ளி நோயாகிய கொவொயிட் 19 என்ற நோயினால் உலகமே ஸ்தம்பித்த நிலையில் உள்ளது, பல வல்லரசுகளும் இப்பேரிடரிலிருந்து மீழ்வதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன, எனினும் அவை பெரியஅளவில் வெற்றியளிப்பதாகத் தெரியவில்லை. இச்சந்தர்ப்பத்தில் மக்கள் மாற்று மருத்துவத்தின் மூலம் இதற்கான தீர்வைத் தேடத் தொடங்கியுள்ளனர் அந்த வகையில் சித்த மருத்துவத்தில் கொரொனாவிற்கான சிகீட்சை முறைகள் சொல்லப்பட்டுள்ளனவா என்பதை அறிவதற்காக பலரும் சித்த மருத்துவத்தின் பக்கம் நாடுகின்றனர். இன்நிலையை சிலர் சாதகமாகப் பயன்படுத்தி எமது சித்த மருத்துவ ஏடுகளின் புகைப்படங்களில் கணனித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சில மாற்றங்களைச் செய்து எம்மிடம் இதற்கான மருந்துகள் உண்டு நாம் இப்பிணியை முற்றிலும் குணமடையச்செய்வோம் என மக்களை நம்பவைத்து தாம் பிரபல்யம் அடைவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் முயற்சிக்கின்றார்கள், இவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
அப்படியானால் இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தால் எதுவும் செய்யமுடியாதா என்று நீங்கள் கேட்கலாம் அதற்குரிய பதிவாகவே இப்பதிவிடப்படுகின்றது.
சித்த மருத்துவத்தில் பலவகையான ரோகங்களும் அவற்றிற்கான பரிகாரங்களும் மிகவும் திருத்தமாகவும் விளக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளன ஆனாலும் எனது அறிவிற்கெட்டிய வரை கொரொனா பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை, மாறாக பல வகையான சுரங்கள் தொடர்பாகவும் அவற்றிற்கான குணங்குறிகள் பரிகாரங்கள் தொடர்பாகவும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் பித்தசுரம் எனப்படும் ஒரு பிணிநிலையின் ரோகலட்சணங்கள் தற்போதய கொவொயிட் 19 என்ற நோயின் குணங்குறிகளுடன் ஓரளவிற்கு ஒத்துப்போவதாகவுள்ளது அதற்காக பித்தசுரம் தான் கொவொயிட் 19 என்ற முடிவிற்கும் உடனடியாக வரமுடியாது.
அந்தவகையில் பித்தசுரத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சித்த மருந்துகளில் முக்கியமானது பித்தசுரக் குடிநீராகும் இக்குடிநீரானது 15 மூலிகைகளைக் (இவற்றுள் பல கிடைத்தற்கரிய அரிய வகை மூலிகைகள்) கொண்டு முறைப்படி தயாரிக்கப்பட வேண்டிய ஒரு மருந்தாகும், இதனுடன் வேறும் சில மருந்துகளைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் பித்தசுரத்தினையும் இதனால் ஏற்படக்கூடிய உபத்திரவங்களையும் தணிக்க முடியும். எனினும் இந் நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந் நோய்நிலை ஏற்படுவதற்கு முன்னர் இம்மருந்துகளை தடுப்பு மருந்துகளாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
இருப்பினும் இவ்வகையான மருந்துகளைப் பயன்படுத்துவதனால் எந்தவிதமான பாதகமான விழைவுகளும் ஏற்படாது தானே எதற்கும் நாமும் ஒருமுறை பாவித்துப் பார்ப்போம் என நீங்கள் எண்ணலாம் அது மிகவும் தவறான எண்ணமாகும். முதலாவதாக மூலிகை மருந்துகளிற்கு பக்கவிழைவுகள் இல்லை என்பது மிகவும் தவறான கருத்தாகும், இம் மருந்துகளும் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனையின்றிப் பாவித்தால் பாரிய விழைவுகளை ஏற்படுத்தும். அடுத்ததாக இந்த கபசுரக் குடிநீரில் சேரும் 15 வகையான மருத்துவ மூலிகைப் பொருட்களில் பல கிடைத்தற்கரிய அரிய மூலிகை வகைகள் இவற்றுள் சில முழு இலங்கையிலுமே ஒரு சில கிலோ அளவிலேயே கையிருப்பில் இருக்கும் அவற்றையும் நாம் நோய் ஏற்படுவதற்கு முன்னர் முடித்துவிட்டோமானால் உண்மையில் தேவைப்படும் நோயாளரிற்கு என்ன செய்வது? ஒரு சில செக்கன்களில் உற்பத்தி செய்யக்கூடிய சத்திர சிகீட்கை முகக்கவசங்களிற்கே இவ்வளவு தட்டுப்பாடு ஏற்படும் போது உற்பத்தி செய்வதற்கு பல மாதங்கள் எடுக்கும் மூலிகைப் பொருட்கள் பற்றி சொல்லத் தேவையில்லை இந்நிலையில் மூலிகைப் பொருட்களிற்கான கேள்வி பல மடங்கு அதிகரிக்கும் போது போலியான மூலிகைகள் சந்தைக்கு விடப்படும் இந் நிலை நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.
அடுத்ததாக நோய்த்தொற்று ஏற்பட்டு நோய்க்கான குணங்குறிகள் தென்படுவதற்கு முன்னதாக இம்மருந்துகளைப் பயன்படுத்துவதால் நோய்க்கான குணங்குறிகள் தோன்றாது போகலாம் அதனால் அவர்கள் நோயாளராக இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் இவர்கள் மூலமாக பலருக்கும் நோய்த் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கின்றது.
தற்சமயம் இலங்கை உலக சுகாதார தாபனத்தின் கொவொயிட் 19 தரப்படுத்தலிற்கமைவாக நிலை 3ஏ யில் இருந்து நிலை 3பி யை அடைகின்றது மிகவிரைவில் நிலை 4ஐ அடையும் என எதிர்பார்க்கப்படுகிக்றது இந்நிலையில் எமது வீடுகளிலும் பல சித்த ஆயர்வேத மருத்துவமனைகளிலும் உபத்திரவங்கள் ஏற்படாத கொவொயிட் 19 நோயாளர்களை வைத்துப் பராமரிக்க வேண்டிய நிலைகள் ஏற்படலாம் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சித்த மருந்துகள் எமக்கு உபத்திரவங்களைத் தடுப்பதற்காக கைகொடுக்கலாம் எனவே தற்போதய சூல்நிலையில் குறித்த மருந்துகளை வீண்விரயமாக்காமல் அவற்றை முறையாகத் தயாரித்து சேமித்து வைத்து அடுத்துவரும் கிழமைகளில் அவற்றின் தேவை ஏற்படும்போது சரியாகப் பயன்படுத்துவது சித்த மருத்துவத்துறை சாரந்த அனைவரதும் கடமையாகும்.