Search This Blog

Sunday, May 19, 2019

கண்ணதாசனும் விஸ்வநாதனும்


படித்ததில் பிடித்தது வலைதளத்தியிருந்து.

கண்ணதாசனும் விஸ்வநாதனும்




ஒரே நாளில் பிறந்தவர்கள்



ஜூன் 24 கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள். ஏன் மெல்லிசை மன்னருக்கும் நேற்றுதான் பிறந்த நாள். இருவருமே மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். ஒருவர் இசைத்தார். கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். மனதில் நின்ற பாடல்களைச் சொல்லும் போது இருவரையுமே நினைத்துக் கொள்ளுங்கள்.

கண்ணதாசன் மயங்க வைத்த கலங்க வைத்த வரிகளுக்குச் சொந்தக்காரர். வனவாசம் மனவாசம் சேரமான் காதலி (சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது) அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் போன்ற புத்தகங்களை வெளியிட்டார்.

கறுப்புப் பணம், சிவகங்கைச் சீமை போன்ற படங்கள் எடுத்த தயாரிப்பாளர் கறுப்புப் பணம் படத்தில் கதாநாயகனாகவே சூரியகாந்தி, இரத்தத் திலகம், ஆபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்தவர்.

கண்ணதாசன்
"இந்தியா முழுவதிலும் பல இசை அமைப்பாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
இந்தியாவின் எந்த மொழியிலும் தம்பி விஸ்வநாதனுக்கு இணையான ஓர் இசை அமைப்பாளரை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை..
'ஆமாம்,.. நீ அடிக்கடி சந்திக்கும் விஸ்வநாதனைப் பற்றி இந்த வாரம் சந்தித்தேன் என்று எழுதுவதில் என்ன பொருள் ? ' என்று நண்பர்கள் கேட்கக்கூடும்.
காரணம் உண்டு.
தம்பி விஸ்வநாதனை மூன்று வாரங்களாக நான் சந்திக்கவில்லை. இவ்வளவு பெரிய இடைவெளி எங்களுக்குள் விழுந்ததில்லை. தம்பி ஏராளமான ரீ - ரெக்கார்டிங்குகளில் மாட்டிக்கொண்டதால், இந்த வாரம்தான் சந்தித்தேன்.
உலகத்தில் எந்தப் பாகத்தில் என்ன இசை இருக்கிறது என்பது விஸ்வநாதனுக்குத் தெரியும். விஸ்வநாதனுடைய இசைக்கு நான் பாட்டெழுதத் தொடங்கி முப்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த முப்பது ஆண்டுகளில் தம்பியின் திறமையை நான் கண்டு வியந்திருக்கிறேன்.
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ' யில் எகிப்திய இசையைக் கேட்டேன். 'தென்றல் வந்து வீசாதோ ? " பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாடையைக் கண்டேன், அபூர்வ ராகத்தில் நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ" என்ற பாடலில் மெக்ஸிகன் ஆர்ப்பாட்டத்தைக் கண்டேன்...சொல்லி கொண்டே போனால் இடம் போதாது.
கடுமையான உழைப்பாளி. தூங்குகிற நேரம் மிகவும் குறைவு. நாள் முழுதும் உழைப்பு. இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது.
"ஊமைத்துரையில் "துரை" என்று வருகிறதே அண்ணே, அவன் வெள்ளைக்காரனா ? என்று ஒருமுறை கேட்டான்.
காபூல் நகரில் தங்கி இருந்தபோது , " இங்கிருந்துதான் கஜினி முகம்மது நம் நாட்டின் மீது படை எடுத்தான் " என்றேன் "யாரண்ணே கஜினி முகம்மது ? என்றான்.
பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வரும்.
ஆனால் அவனோடு பாட்டெழுத உட்கார்ந்துவிட்டால் பொழுது போவதே தெரியாது.
முப்பது வருடங்கள்.
தொழிலில் தளர்ச்சி இல்லாமல் தம்பியும் நானும் கண்ட அந்த எல்லையை, இந்தத் தலைமுறையில் வேறு யாரும் காண முடியாது.
எல்லோருமே விதைபோட்ட அறுபது நாளில் அறுவடையாகும் கீரைப்பாத்திகள். இரண்டாண்டுகள் ஆட்டம் போட்டுவிட்டு இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போன இசை அமைப்பாளர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
தம்பிக்கும், மாமா (கே.வி.மகாதேவன்) வுக்கும் அஸ்திவாரம் மிகப் பெரியது.
ஏழுவயதில் இரண்டு ரூபாய் சம்பளத்தில் கம்பெனி நடிகனாக வாழ்க்கையைத் துவங்கிய விஸ்வநாதன், பட்டபாடு கொஞ்சமல்ல. பதினாறு வயதில் வைரம் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்தபோது ஒரு நெக்லஸைத் திருடி விட்டதாகத் தம்பியைப் போலீஸில் ஒப்படைத்தார்கள். போலீஸார் அவனை அடித்தும் விட்டார்கள். பிறகு செட்டியாருடைய மெத்தைக்கு அடியிலேயே நெக்லஸ் கிடைத்தது.
ஜூப்பிடரில் நடிகனாகி, ஆபீஸ் பையனாகி, ஆர்மோனிஸ்ட்டாகி, சுப்பராமன் இறந்த பிறகு இசை அமைப்பாளனாகி, எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயில் பல்லவி பாடியவன் தம்பி.
முன்பெல்லாம் இரவு பதினேரு மணிக்கு டெலிபோன் மணி அடித்தால் அது ஏ.எல்.எஸ் அல்லது விஸ்வநாதனாக இருக்கும். இப்போது விஸ்வநாதன் மட்டுமே.
இசைக்குப் பாட்டா ? பாட்டுக்கு இசையா?
இரண்டும் பாதிப் பாதி.
'ஆகாயப் பந்தலிலே' இசைக்கு எழுதப்பட்ட பாட்டு. 'சோதனைமேல் சோதனை' பாட்டுக்குப் போடப்பட்ட இசை.
"இது நன்றாக இல்லை" என்று என்னிடம் சொல்லக் கூடிய ஒரே இசை அமைப்பாளர், விஸ்வநாதன்.
' மாலையிட்ட மங்கை ' படத்தில் இருந்துதான் எனக்கு மார்கெட் ஏறிற்று. காரணம், தம்பி விஸ்வநாதனின் இசை.
ஆயிரம் புகழ் வந்தாலும், யாரையும் எடுத்தெறிந்து பேசாத குணம், தம்பி, மாமா, புகழேந்தி மூவருக்கும் உண்டு.
நானும் தம்பியும் பத்தே நிமிடங்களில் போட்டு முடித்த பாட்டு, "நெஞ்சில் ஓர் ஆலையத்தில்" வரும் "முத்தான முத்தல்லவோ " நான்கு மாதங்கள் உயிரை விட்ட பாட்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் வரும், "நெஞ்சம் மறப்பதில்லை " என்ற பாட்டு.
எந்த இரவிலும் நான் போட்டுக் கேட்பது நான் எழுதி தம்பி இசை அமைத்து, சரஸ்வதி ஸ்டோர் பதிப்பித்த ஸ்ரீ கிருஷ்ண கானமே அதைக் கேளாமல் நான் தூங்கியதே இல்லை. இதுவரை அது போல் ஒரு பக்திப் பாடல் வந்ததாகவும் எனக்கு ஞாபகம் இல்லை.
எழுத எழுத எவ்வளவு விஷயங்கள் வந்து குவிகின்றன எதைச் சொல்வது, எதை விடுவது ?
பெங்களூர் உட்லண்ட்ஸ், ரூம் நெம்பர் முப்பத்தாறு. 'கர்ணன்', பாத காணிக்கை' எல்லாமே அங்கேதான். "வீடு வரை உறவு " பிறந்த இடமும் அதுதான்.
பம்பாய் ஜன்பத் ஓட்டலில், எழுதி எழுதிப் பார்த்து முடியாமல் திரும்பி விட்டோம்.
நானும் தம்பியும் பாண்டிச்சேரியில் எழுதிக் கொண்டிருந்தபோதுதான், காரைக்கிடியில் என் சுவீகாரத்தாயார் இறந்துவிட்ட செய்தி வந்தது. தம்பியின் காரை எடுத்துக் கொண்டே போய்ச் சேர்ந்தேன்.
1962ல் நான் இறந்து விட்டதாக தம்பிக்கு யாரோ தொலைபேசியில் சொன்னார்கள். தம்பி சாரதா ஸ்டுடியோவில் ரெக்கார்டிங்கை நிறுத்திவிட்டு முட்டி மோதிக் கொண்டு ஓடி வந்தான். அதுபோலவே செய்தி கேட்டு எம்.வி. ராஜம்மா, எம்.ஆர்.ராதா, கிருஷ்ணன் - பஞ்சு ,பீம்சிங், ஸ்ரீ தர், சம்பத் ஆகியோர் ஓடிவந்தார்கள்! எம்.ஜி.ஆர். டெலிபோனில் துழாவினார்.
நான் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்தேன்.
தொலைபேசியில் வதந்தி பரப்பியது யாருமல்ல...நானே தான் !
தம்பி என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான்.
இந்த வகையில் அவனை நான் முந்திக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை."


*லக்ஷ்மண விரதம்*


ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற *அகஸ்திய மாமுனிவர்* அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும் அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து *ராவண கும்பகர்ண* வதத்தை விட *லக்ஷ்மணன்* ராவணன் மகன் *மேகநாதனை வதைத்ததே* மாபெரும் வீர செயல் என்றார்.அகஸ்தியர் அதை கேட்டு அனைவரும் ஆச்சிரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள் மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க *அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ* ஆனால் ஏதும் அறியாதவன் போல் *லக்ஷ்மணின் பெருமையை* என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய் சரி நானே கூறுகிறேன் சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு *மூன்று அறிய வரங்கள்* தரவேண்டும் என நிபந்தனை வைத்தான் அவை
*1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்*
*2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்*
*3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன்
எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்* என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான் அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர் இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும்( *பெண்ணையும்*) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார் அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா லக்ஷ்மணர் அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் *ரிஷிமுக பர்வதத்தில்* மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன் அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது. அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் *நித்ராதேவி* யிடம் ஒரு வரம் கேட்டேன் அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன் அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது மூன்றாவது *நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர்* நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் *பலா அதிபலா* என்னும் மிகவும் சக்திவாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார் அந்த *பலா அதிபலா* மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க *ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார்* லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார் *ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும்* என்பது எம் கருத்து..!
*ஸ்ரீ ராமஜெயம்* சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே,
*ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம்* சொல்வது புண்ணியமே..!
ஜெய் ஸ்ரீ ராம்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..

Saturday, May 18, 2019

ராபியா அல் அதாவிய்யா(Rabia Al-Adawiyya) பெண் சூஃபி ஞானி

ராபியா அல் அதாவிய்யா(Rabia Al-Adawiyya) எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் சூஃபி ஞானி.பொது ஆண்டு 714-718 இற்கு இடையில் பிறந்து பொது ஆண்டு 801இல் மறைந்தார் என்கிறார்கள்.
ஒருமுறை ராபியா பஸ்ரா(ஈராக்) நகரின் வீதிகளில் ஒரு கையில் தீயெரியும் பானையுடனும் மறுகையில் நீர் நிறைந்த வாளியுடனும் ஓடிக்கொண்டிருந்தாராம்.
என்ன செய்கிறீர்கள் என்று அவரை பஸ்ராவாசிகள் கேட்டபோது,
நான் நரகத்தின் நெருப்பை அணைக்கவும், சொர்க்கத்தின் இன்பங்களை எரிக்கவும் விரும்புகிறேன்.அவை அல்லாஹ்வுக்கான பாதையை தடைசெய்கின்றன.
நான் நரகத்தின் தண்டனை குறித்த அச்சத்தினாலோ, சொர்க்கத்தின் இன்பங்கள் மீதான ஆசையினாலோ இறைவனை வழிபட விரும்பவில்லை.அல்லாஹ்வின் மீதான அன்பின் மிகுதியாலேயே அவனை வழிபட விரும்புகிறேன் என்றாராம்.
அவர் பிரார்த்தனை இப்படி இருந்தது,
"O Lord, if I worship You because of Fear of Hell,
then burn me in Hell;
If I worship You because I desire Paradise,
then exclude me from Paradise;
But if I worship You for Yourself alone,
then deny me not your Eternal Beauty.
இதை நான் இப்படி எழுதிக்கொள்கிறேன்.
'இறைவா,நான் நரகத்திற்கு அஞ்சி உன்னை வழிபட்டால் என்னை நரக நெருப்பில் இடு
சொர்க்கத்திற்கு ஆசைப்பட்டு வழிபட்டால்
என்னை அதிலிருந்து புறத்தாக்கி விடு
உனக்காக மட்டுமே உன்னை வழிபட்டால் உன் திகட்டாத பேரழகை மறைத்துவிடாதே'
இஸ்லாமிய போதகர் முகமது மறைந்து(பொது ஆண்டு 632) நூறு வருடங்களுக்குள் ராபியா பிறந்துவிட்டார்.
அவர் இஸ்லாத்திலிருந்து தனக்குரியதை உருவாக்கிக்கொண்டார்.
ஆனால் 1400 ஆண்டுகளுக்குப் பின்னரும் சிலர் சொர்க்கத்தின் பொருளை உணராமல் 72 நடமாடும் நித்திய பாலியல் பொருள்களுக்காக தாமும் செத்து மற்றவர்களையும் சாகடிக்கிறார்கள்.