Search This Blog

Saturday, December 7, 2013

தேர்

எஸ். பொன்னுத்துரை


முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுவது ஒரு திருக்காட்சி. தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப் பாயைப் பக்குவமாகச் சுருட்டி வைப்பது ஒரு கலை. கொட்டாவியை மறைபொருளெதுவுமின்றி ஊளையிட்டு, கைகளை நீட்டி மடக்கி, உடலை உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழு படலத்தின் ஓரம்சம் நிறைவுறும். தலைமாட்டில் நெருப்புப் பெட்டியும், தாவடிப் புகையிலைச் 'சுத்து'ம் எப்பொழுதும் தயாராக இருக்கும். 'சுத்தை' நேர்த்தியாகப் பற்றவைத்தால், கால்கள் தம் இச்சையாகவே கொல்லைப் பக்கம் நடக்கத் தொடங்கும். எப்பொழுது தொடக்கம் வைகறை துயிலெழும் வழக்கத்தை வாலாயப்படுத்திக் கொண்டார் என்பது அவருக்கே ஞாபகமில்லாத சங்கதி.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவிட்டார். கடிகாரத்தைப் பார்க்காது, கடிகாரத்தின் விநாடி முள்ளைப் பார்க்கிலும் நுணுக்கமான நேரக் கணக்கில் இயங்குவது அவருடைய இரத்தத்திலேயே ஊறியிருக்கின்றது. கொல்லையிலே கழிவுக் கருமத்தை முடித்து, அடிக்கழுவி, கிணற்றடிக் கமுக மரத்திலே தொங்கும் குரும்பைப் பாதியிற் கிடக்கும் உமிக்கரியினாற் பற்களைச் சுத்தஞ் செய்து, திண்ணைக்கு மீளுவார். 'இறப்பில்' தொங்கும் வெண்சங்கிலே கதிர்காமத்து விபூதி இருக்கும். வலது கை விரல்களுக்குள் எடுத்து, 'சிவ... சிவா....' என்று உச்சரிக்கும்பொழுது, நல்லூர்க் கந்தனின் உதயகாலப் பூசைமணி கேட்கும்.

இன்றும் 'சிவ... சிவா..' என்று விபூதி பூசும்பொழுது, உதயகாலப் பூசை மணி கேட்கின்றது. கால ஓட்டத்திலே தரிக்காது நடைபெறும் நித்திய கருமங்கள்.

'இன்று வருடப்பிறப்பு....' – முதன்முதலில் இந்த எண்ணந்தான் முகத்தாருக்கு ஏற்படுகின்றது. எத்தனையோ வருடப்பிறப்புகள் வந்து போய்விட்டன. அவற்றுடன் எத்தனையோ வருடங்களும் ஓடி மறைந்துவிட்டன. பார்வதிப்பிள்ளையைக் கல்யாணஞ் செய்த முதல் வருடம் வந்த வருடப்பிறப்பு: இராமேசுவர நேர்த்திக் கடனுக்குப் பிறகு சுப்பிரமணியனைப் பெற்று, முருகண்டியிலே மயிர்நீக்கக் கடன் செய்த மறுநாள் வந்த வருடப்பிறப்பு: சௌந்தரம் கல்யாணமாகி, மருமகனுடன் வந்த வருடப்பிறப்பு: தகப்பனுக்குத் தலைக்கொள்ளி வைத்து, கோடி கட்டாதே கழிந்த வருடப்பிறப்பு: பார்வதிப்பிள்ளை போய், நாளே காடாகிக் கிடந்த வருடப்பிறப்பு: - இப்படிப் பல. கால ஓட்டம் அவர்தம் உழைப்பை விழுங்கி, உடலைச் சருகாக்கி விட்டது.

முன்னர் போல சுறுசுறுப்பில்லை. நல்லெண்ணெயில் வெதுப்பிய கத்தரிக்காயுடன் மூன்று நீற்றுப்பெட்டி பிட்டுச் சாப்பிட்டும், நாலு மரவள்ளிக் கிழங்கைச் சுட்டுப் பச்சைமிளகாய் சகிதம் போட்டுக் கொண்டாற்றான் காலைப்பசி அடங்கும் என்பது இளைஞப் பருவ நினைவுகள். பிள்ளைகளைப் படிக்க வைத்து உத்தியோகக்காரராக்கியதனால் இரண்டு பாண் துண்டுகளைக் 'கொறி'க்கும் பழக்கம் முகத்தார் வீட்டிலும் பரவிவிட்டது. படுத்த படுக்கையாக வைக்கும் படியாக உடம்பிற்கு அப்படியொன்றுமில்லை. முதுமை உணர்வு வலுக்கின்றது. சிறிது வாதக்குணம் போன்ற எண்ணமும் மேலிடுகின்றது. திடீரெனக் குந்தி எழும்பச் சிரமப்படுகின்றார். இதனைப் பிள்ளைகள் அறிந்துகொள்ளாத வகையில் நடந்துகொள்ளுகின்றார். கடைக்குட்டி மகளைப் பற்றித்தான் கொஞ்சம் கவலை.

திண்ணையிற் குந்தி, கப்புடன் சாய்ந்துகொள்கின்றார்.

அவள் பொடிச்சிதான் பாவம். தாயத்தின்னியாப் போயிட்டுது. படிப்பை முடிச்சுப் போட்டு, மூலையிலே கிடந்து பெருமூச்சு விடுகுது. அவளை மேலை படிக்க வைக்கலாமெண்டு மூத்ததுகள் விரும்பினதுதான். வேணுமெண்டால், உதுகளின்ரை பொம்பிளைப் பிள்ளையள் படிச்சு உத்தியோகம் பாக்கட்டும். இளையவனின்ரை பாடு பிழையில்லை. ஒரு மாதிரி ஒரு வேலையிலை கொழுவீட்டான். ஏதோ கொம்பினியிலை தான் வேலையாம். ஆனா, சம்பளம் புழையில்லை. மேலுக்கு நலலா வரலாமெண்டு மூத்தவனும் மச்சான்மாரும் சொன்னாங்கள். அவன் கடைக்குட்டி எண்டு வீட்டோடை இருந்து சாப்பிட்டுப் பழகியவன். மூண்டு நாலு மாசம் அதுவுமில்லை. கயிற்றப்பட்டு வாழ்ந்தால்தானே, பேந்து பின்னடிக்குத் தங்கடை பாடுகளைத் தாங்களே பாக்குங்கள். நல்லூரான்ரை புண்ணியத்திலை எல்லாம் தங்கடை சீவியப்பாடுகளைப் பாக்கக்கூடிய நிலைக்கு வந்துட்டுதுகள். என்ரை கெட்டித்தனம் என்ன இருக்கு? ஆண்டவன் அளந்தபடி நடக்குது... விடியப்புறக் கோச்சியிலே மூத்தவன் வருவான். அவன் மறந்தாலும் அலுத்தாலும் அவன்ரை மனுஷி கமலா இஞ்சை வராமலிருக்காள். என்னெட்டைக் கைவியளம் வாங்கிறதிலை அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை... ஓம்.... அதுகளின்ரை மூத்ததுக்கும் - உந்தப் புது நாணயப் பேர் சட்டெண்டு மனசிலை வாறேல்லை... அவள்தான் அம்சதொனிக்குப் பத்து வயசுக்கு மேலை இருக்க வேணும்.... என்ன  பத்து? பதினொண்டுக்கு மேலை. கடுக்கண்ணுற பருவம்... , இவ போயே நேற்றெண்டாப் போலை இருக்குது.... ஆனா, வருசம் அஞ்சாகுது. அவள் புண்ணியஞ் செய்தவள். எல்லாப் பாரத்தையும் என்ரை தலையிலை சுமத்திப் போட்டுப் போயிட்டாள்.

இடைவெட்டில், மனோகரன் நேற்று எழுதியிருந்த கடிதம் முகத்தாருடைய ஞாபகத்துக்கு வருகிறது. வருடப் பிறப்பன்றே கொழும்புக்கு திரும்பிவிட வேண்டுமென்று எழுதியிருந்தான்.
'அதுவும் சரிதான். எங்கடை வாகடங்கள் நெடுகச் சரிவருமே? இப்பதான் போய் வேலையிலை சேந்திருக்கிறான். லீவு கீவு எடுத்துப் பழுதாக்கப்படாது'
'அப்பனே முருகா'
வீட்டின் சின்ன அறைக்கதவு திறக்கப்படுகின்றது. 'கடைக்குட்டி' பத்மாதான் வருகிறாள்.

'என்னதான் பேரளவிலை பெரிய பிள்ளை எண்டாலும், வீட்டிலே சின்னப்பிள்ளைதானே? சரியா, இவ பார்வதிப்பிள்ளையை உரிச்சுவைச்ச மாதிரி இருக்கிறாள். இவளை ஒப்பேத்திப் போட்டனெண்டால், பேந்தென்ன? சிவனே எண்டு கண்ணை மூடலாம். இவன் மனோகரனை இவவின்ரை அண்ணரின்ரை பொடிச்சிக்குத்தான்... பெடியங்களின்ரை காரியத்தை நிதானமாச் சொல்லேலா...'

முதற் காரியமாகப் பத்மா வீட்டு முற்றத்தைக் கூட்டி, சாணகத் தண்ணீர் தெளித்து முடிக்கின்றாள். வருடப்பிறப்பன்று விடிய முன்னரே, அன்றைய வழமையான கடமைகளைச் செய்து முடிக்கும் வேட்கை. வருடப்பிறப்பன்று எல்லாக் காரியங்களையும் விக்கினமின்றி உரிய முறைப்படி நிறைவேற்றிவிட்டால், வருடம் முழுவதும் அவ்வாறே அமையுமென்னும் நம்பிக்கையில் ஊறித் திளைத்த மனம், வருடப்பிறப்பன்று பழங்கறிகளுக்கு மதிப்பில்லை. கறிச்சட்டிகளை அடுக்களைக்கு வெளியே இடப்பக்கமாகவுள்ள செவ்விளநீர்க் கன்றடியிற் பரப்பி வைத்து, சாம்பல் தோய்த்தெடுக்கப்படும் 'பொச்சு' மட்டையாற் தேய்த்துக் கழுவத் தொடங்குகின்றாள். திண்ணையிலே குந்தியிருந்து சிந்தனையிலாழ்ந்திருக்கும் தந்தையை அவள் கண்கள் கவனிக்கின்றன. மரவள்ளிக் கிழங்கு காய்ச்சிய சட்டியில் அடிப் பிடித்திருந்த பாகத்தைச் பொச்சுமட்டையால் நன்றாகச் சுரண்டிக்கொண்டே பேச்சுக் கொடுக்கின்றாள்.

'என்ன அப்பு... இண்டைக்கு காலமைக் கோச்சியிலை மூத்தண்ணர் வருவாரல்லே?'
'ஓம் புள்ளை. சுப்பிரமணியம் வராமல் வருஷம் பிறக்குமே? என்னதான் இருந்தாலும் அவன் வருஷத்துக்கு வராமல் இருப்பானே?'
'எப்பிடியும் அவன் வருவான். காதுப் பிடியிலை கமலா கூட்டியந்திடுவாள். கோச்சி இன்னும் நாவற்குழியைத் தாண்டியிருக்காது. இப்ப நடக்கத் துவங்கினாலும், நேரத்தோடை ஸ்ரேஷனுக்குப் போயிடலாம். ஆனா, அவனுக்கு உதொண்டும் புடிக்கிறேல்லை. 'நான் எங்கடை வீட்டுக்கு வாறதுக்கு ஆரும் வந்து வழிகாட்டத் தேவையில்லை' எண்டு எத்தினை கோசு கோவிச்சது எனக்கெல்லோ தெரியும்?'
'புள்ளை. தேத்தண்ணிக்கு உலை வைக்கல்லையே?'

'வைச்சிட்டன்'

'கொக்கா பரிமளம் இன்னும் எழும்பல்லையே?... உங்கடை அத்தாரும் வலு நேரஞ்செண்டுதான் வந்தவர். சரியாச் சாப்பிட்டிருக்கவும் மாட்டார்.'
முகத்தாரின் இன்னொரு மகளான பரிமளத்தின் கணவனும் கொழும்பில் தான் வேலை பார்க்கின்றான். பரிமளம் தைப்பொங்கலுக்குத் தந்தையின் வீட்டிற்கு வந்தவள், திரும்பிப் போகவில்லை. கணவன் சதாசிவம் நேற்றிரவு யாழ்தேவியிலை தான் திரும்பியிருக்கிறான்.

'பாவம். அதுகளுக்கு ஆண்டவன் ஒண்டும் குறை வைக்கேல்லை. இதுக்கிடையிலை முப்பதினாயிரம் கொட்டி புதுமோடியிலை ஒரு வீடும் கட்டிப் போட்டுதுகள். கதைச் சாங்கத்திலை வைகாசி நாளுக்குத் தான் குடியேறுவினம் போலை கிடக்குது. பேந்தென்ன நெடுகிலும் குடியிருக்கப் போகினமோ? வாடகைக்குத்தான் விடுவினம். காரும் ஒண்டு வாங்கியிருக்கினமாம். அதை இன்னும் ஒருநாளும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவரல்லை. அதுகளின்ரை அன்புக்கும் அந்நியோன்யத்துக்கும் ஒரு குழந்தையைத்தான் ஆண்டவன் குடுக்கேல்லை. சாதகத்திலை பின்னடிச் சந்ததி விருத்தி எண்டுதான் இருக்கு. ஏழு வருஷத்துக்குப் புறகுதான் சதாசிவமும் தலைச்சனாப் பிறந்தவனாம். கொழும்பிலை பேர் போன டாக்குத்தரிட்டை எல்லாம் காட்டினவை. அதுகளுக்கு ஒரு குறையுமில்லை எண்டுதான் சொன்னவையாம்...'

'கோப்பியை ஆர்றதுக்கிடையிலை குடியுங்கோ அப்பு' என்று பத்மா கோப்பி கிளாஸை நீட்டுகிறாள்.
'என்ன புள்ளை, முட்டைக்கோப்பி அடிச்சிருக்கிறாய். அத்தாரும் நிக்கிறார். இப்ப சுப்பிரமணியமும் வந்திடுவான்... அவன்ரை அசோகன் முட்டைக் கள்ளனல்லே?'
'இஞ்சை தாராளமா முட்டையள் இருக்குது. புட்டுக்குப் பொரிச்சும் வைக்கலாம்.'
முகத்தார் கோப்பியைக் குடிக்கின்றார்.
'மெய்ய புள்ளை... கொக்கா சௌந்தரம் இஞ்சை நேத்து வந்திட்டுப் போனவளல்லே? என்ன சொல்லிப் போட்டுப் போனவள்? மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டை வருவாளாமோ?'
'அத்தான் நேத்துத்தான் வந்தவராம். அவரின்ரை சகோதரிஅவைதான் பறங்கித் தெருவார் - மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டை வருவினமாம். பின்னேரம் போலைதான் வர வசதிப்படும் எண்டு சொன்னவ. எதுக்கும் கைவியளத்துக்கு முகுந்தனை அனுப்பி வைக்கிறாவாம்.'

'சௌந்தரம் பெரிய குடும்பக்காரிதான். இருந்தாலும் சீமாட்டி ஒரு சீதேவி. ஆறு பஞ்சானும் குஞ்சுகளையும் ஒரு குறையுமில்லாமல் படிப்பிக்கிறாள். ஏதோ ஆனை சேனையையே சீதனமாக் குடுத்தனான்? புருஷன் தங்கராசா உண்மையிலை ஒரு தருமராசாதான். புள்ளையளின்ரை படிப்புக்காகக் குடும்பத்தை ஊரோடை விட்டிட்டுப் போயிட்டான். அங்கை கடைச் சாப்பாட்டோடை வயித்தை வாயைக் கட்டிச் சீவிக்கிறான். அங்கையும் இங்கையுமாக ரெண்டு சிலவுகளையும் சமாளிக்கிறதுக்கு கந்தோர் விட்டாப்புறகு வேற வேலயளையும் பாக்கிறதாம். அந்தந்த வயசிலை ஓடியாடிப் பிரயாசைப்பட்டு உழைச்சு சம்பாரிக்கத்தான் வேணும். அதுக்கு ஏத்த சாப்பாடு வேண்டாமே? நல்ல வேளை... பெட்டையள் கீழ்க்கண்டுகள் தான். அந்த அளவிலை ஒரு ஆறுதல்... வந்தவனுக்கு ரெண்டு வேளை தன்ரை கையாலை சமைச்சுக் குடுக்காமல் இஞ்சை ஓடியாறாளோ? பொம்பிளைப் புள்ளையள் கரை சேருமட்டுந்தான் எங்கடை'

'என்ரை மடிசஞ்சையும் சால்வையையும் எடுத்துத்தா புள்ளைஃ'
'இவ்வளவு வெள்ளணத்தோடை கடைக்குப் போகப் போறியளே?'
'இல்லை, உந்த முச்சந்தி மட்டும் போயிட்டு வாறன். தச்சேலா ஏதேன் அரியது நரியது கிடைச்சால்...'
சாறணை உதறிக் கட்டிக்கொண்டு, 'மடிசஞ்சை' இடுப்பிலே சொருகி, ஏகாவடமிடச் சால்வையை எறிந்து படலையைக் கடக்கிறார்.

ரோஜா இதழ்ப் படுக்கையான மென்மைசேர் நினைவுகளில் ஏதோ ஒரு முள்ளின் உறுத்தல். கால்களின் இயக்கத்திலேயே படரும் நடை. சந்திக்கடைப் பசுபதியின் குரல் அவரைக் கடைப்பக்கம் ஆகர்ஷpக்கிறது.

'எப்பிடி அண்ணர்? வருஷம் எத்திணை மணிக்குப் பிறக்குதாம்? கைவியளம், நாள்வேலைக்கு நேரம் எப்பிடிப் போட்டிருக்கு' பத்துப் பேரிடம் கேட்டும் பசுபதிக்குப் பொச்சந் தீரவில்லை.
'பத்து இருபத்தெட்டுக்குத்தான் வருஷம் பிறக்குது. கைவியளத்துக்கு இண்டைக்கு நாள் போடேல்லை. ஆனா, பொதுநாள். உடனையே குடுத்தாலும் பாதகமில்லை.'
முகத்தார் பஞ்சாங்கம் பார்த்து வைப்பதில் வெகு ஒழுங்கு. கடிகாரம் பார்க்கும் பழக்கமில்லாத அவர், எந்தச் சுபவேளையையும் விநாடி தப்பாமற் சொல்லுவார்.
'நான் ஒருநாளும் இந்த நேரம் காலம் பாத்துக் கொண்டிருக்கிறேல்ல.... வருஷப் பிறப்பண்டைக்கே துவங்கீட்டால் சரிதானே? இல்லாட்டில் இழுவல், ரெண்டு மூண்டு நாளைக்கும் நாள் போடமாட்டாங்கள்... அதுக்காகக் கடையைப் பூட்டி வைக்கிறதே?'
'ஓமோம்... எல்லாம் நம்பிக்கையைப் பொறுத்ததுதான், பசுபதி' என்ற முகத்தார், 'கோச்சி இன்னும் வரேல்லைப் போலை' என வேறு திசையிற் கதையைத் திருப்புகின்றார்.

'நேரமாயிட்டுது... வருஷத்துக்கு இஞ்சினை வாற சனக்கூட்டத்தோடை வாற ரயில் கொஞ்சம் முந்திப் பிந்தித்தான் வந்து சேரும். உங்கட மற்ற மேன் குமாரசாமியும் இண்டைக்கு வாறார்போலை இருக்குது. தம்பியும் இஞ்சாலைப் பக்கம் வந்து வெகுகாலமாப் போச்சுது.'

நெஞ்சிற் குத்திக்கொண்டிருந்த முள், ரோஜா இதழ்ப் படுக்கைக்குள் இனிதாக மறைகின்றது.

குமாரசாமி வருவான் என்பது முகத்தாருக்குத் தெரியாது. அவனை எந்த விசேடத்திற்கும் வீட்டில் யாருமே எதிர்பார்ப்பதில்லை. அவனுடைய போக்கு அப்படி. இருப்பினும், குமாரசாமி வருவது தனக்குப் புதினம் என்பதை முகத்தார் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
'இஞ்சை பாத்தியளே நோட்டீசை. முத்தமிழ் மன்றம் வருஷக் கொண்டாட்டம் நடத்துதாம். நாடகங்களும் நடத்துறாங்களாம். அதுகளுக்குத் தலைமைதாங்க குமாரசாமி வருகுதாம்.'
பசுபதி நோட்டிசைக் கொடுக்கின்றான்.
இப்பொழுது முகத்தாருக்குக் கண் கொஞ்சம் வெள்ளெழுத்து. ஆனாலும் கொட்டை எழுத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள மகனுடைய பெயரைக் கண்டுபிடிக்கின்றார். மனம் மலர்கின்றது. முகபாவம் மாறாமல் நோட்டீசைத் திருப்பிக் கொடுக்கின்றார்.
'கண்ணும் புகைச்சலாய்க் கிடக்குது.'
'நான் வாசிச்சுக் காட்டட்டே?'
'வேண்டாம் பசுபதி. நான் வாறன். மூத்தவன் போறான் போலை இருக்குது காரிலை.'

மூத்தவனைச் சொல்லி விடைபெற்றுக் கொண்டாலும் முகத்தாருக்குக் குமாரசாமியைப் பற்றிய எண்ணமே மேலோங்கியிருக்கின்றது. குமாரசாமி முகத்தாரின் இரண்டாவது புத்திரன். சிறுவயதிலேயே படித்து முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.

'அவன்ரை மூளைக்கு அவன் உப்புடியே இருக்கவேணும்' சீமைப் படிப்பெல்லாம் முடிச்சு, ரெண்டு மூண்டு காரும் நாலைஞ்;சு பங்களாவும் வைச்சல்லோ வாழவேணும்? அந்தக் காலத்திலை கண்ணூறுபட்டுப் போறாப் போலை சொல்லுவானுகள். சுப்பிரமணியனைச் காட்டி சௌந்தரத்துக்கு மாப்பிள்ளை: குமாரசாமியைக் காட்டி பரிமளத்துக்கு மாப்பிள்ளை...'
அதே நாக்குகள் திசை திரும்பி, அவரை மல்லாத்திக் கிடத்திக் குறி சுட்டபொழுது...

'பிஞ்சிலை பழுத்தவன், தமையன் இருக்கக் கூடியதாக ரெண்டு குமருகள் வீட்டுக்குள்ளை பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கக் கூடியதாக, இவனுக்குக் கலியாணப் பைத்தியம்... அதுவும் ஊர் பேர் தெரியாத வேதக்காரிச்சியாம்... தூ, இவன்ரை படிப்பு நாக்கு வழிக்கத்தான் உதவும். இவன் தன்ரை படிப்பை தூக்கி எறிஞ்சு போட்டு கக்கூசு வாளியைத் தூக்கித் திரியட்டும்...'

இத்தகைய வார்த்தைகள் மார்பு மயிரைப் பொசுக்கி, இதயக் குலையை வெதுப்பியெடுத்த பொழுது... குறுக்கு இழைகளைத் தறி தலையிலே மின்சார வேகத்தில் இணைக்கின்றன. சின்னத் தலையிடிக்கும், காய்ச்சலுக்குங்கூட சீனிச் சுருளும், தேயிலைச் சரையும், வெற்றிலை பாக்குப் பெட்டியுங் 'காவி'க் கொண்டுவந்தவர்கள் குமாரசாமியின் அவசரக் கலியாணத்தின் பின்னர், முகத்தார் வீட்டுப் படலையைத் திறக்க முகஞ் சுழித்துக் கூசினார்கள். அப்பொழுது சுப்பிரமணியம் எல்லாவற்றிற்கும் ஆறுதலாக இருந்தும்கூட, முகத்தார் இந்தப் பென்னம்பெரிய உலகத்திலே தன்னந்தனியாக விடப்பட்ட உணர்வுகளுடன் தத்தளித்தார்.

'நானோ, அவனோ என்னத்தைச் செய்யிறது? எல்லாம் அளந்தபடிதான் நடக்கும். அவன்தான் ஒரு புத்தியிலை செய்திட்டான். இனி, விரலை வெட்டியே எறியிறது? வெக்கம் ரோஷத்தை விட்டிட்டு ஒருக்காப் போய் அதுகளைப் பாத்தன். அவள் பொடிச்சி புழையில்லை. குணவதி எண்டதை முகத்தைப் பார்த்தோடனை சொல்லுவினம். இவன்ரை குணத்துக்கு அவளிலைதான் பச்சம் வைக்கவேணும். வேதக்காரிச்சி எண்டாப்போலை என்ன? சாதி குலம் பாத்துக் கூழ்ப்பானைக்கை விழுந்தவை எத்தனை பேர் இருக்கினம்? இவன் எண்டாப்போலை ஒழுங்காக் கோயில் குளம் போறவனே? விபூதி பூசுறவனே? அவள் பொடிச்சியையும் கோயிலுக்குப் போகாமல் மறிச்சுப் போட்டானாம். அவனுக்கு உடம்பு மட்டும் பயித்தங்காய் போலை. ஆனா, உடும்பைப் போலைத்தான் பிடிவாதம். இவ பார்வதிப்பிள்ளை எண்டாப்போல குறைஞ்ச பிடிவாதக்காரியோ?... அவன்ரை போக்கு ஒரு தனிப்போக்கு. இஞ்சை ஒருத்தருக்கும் விளங்கிறேல்லை. 'உங்கை யாழ்ப்பாணத்துக் கிடுகு வேலியளாலை சங்கையை மறைச்சுக் கொண்டு மனச்சாட்சிக்கு விரோதமாக நடித்துக்கொண்டே வாழ்பவருக்கு என்ரை போக்கு விளங்காது. என்ரை போக்கு என்ன விளங்கும்' எண்டு ஒருநாள் உங்கினை சத்தம் போட்டான். இதுகளிலையும் புழையில்லை. ஒட்டி நடக்காதவனோடை என்ன சகவாசம் எண்டு விலகிக்கொண்டுதுகள். புறம்பு காட்டி நடக்கிற உவையளோடை எனக்கென்ன தொடர்சல் எண்டு அவனும் விலகிக்கொண்டான்.

அவன்ரை மூண்டு பிள்ளையளும் படிப்பிலை வலு விண்ணராம். எனக்கெண்டா அதுகளைப் பார்க்க ஆசைதான். இவவின்ரை ஆண்டுத் திவசத்துக்குத் தான் ஒரு பொடியனைக் கூட்டியந்தான். 'அப்பப்பா' எண்டு அவன் வாழைப்பழத்தோடை என்ரை மடியைவிட்டு இறங்கவும் மாட்டான். பொங்கல் - புதுவருஷம் - தீவாளி எண்டு மூண்டு கொண்டாட்டம் வருகுது. ஒண்டுக்கும் வாறேல்லை. எப்பவாவது இருந்திட்டு ஒருநாள் தனியா வருவான். புள்ளையளின்ரை சுகபலனைப் பற்றிச் சளப்புவான். குசினிக்கை போய் ஏதாவது போட்டுத் தின்னுவான். அங்கை கூட்டம் இஞ்சை கூட்டம் எண்டு சொல்லுவான். உடனேயே போயிடுவான். பேந்து விசாரிச்சுப் பாத்தால் அண்டைய கோச்சியிலையே ஊருக்குத் திரும்பீட்டான் எண்டு தெரியவரும்... மெய்தான். அவன்ரை போக்கு ஒஞ்சை ஒருத்தருக்கும் விளங்கேல்லை. ஒரு மாதிரியான கோபத்தனம் இவையளின்ரை மனங்களிலை இருக்குது. என்ன இருந்தாலும் சகோதர பாசம் எண்ட சாம்பல் அதுகளை மூடி வைச்சிருக்குது. வீட்டிலை எல்லாரும் அவனைக் குறையாத்தான் பேசுவினம். நான் மட்டுந்தான் அவன்ரை பக்கத்திலை பேசுறது. என்ன இருந்தாலும் அவனும் என்ரை மேன்தானே? இதுகள் இதுகளின்ரை போக்கு. அவன் அவன்ரை போக்கு. கையிலே இருக்கிற அஞ்சு விரலும் சமமே? ஒண்டுக்கொண்டு வித்தியாசமில்லையே? வீட்டுக்குள்ளேயும் உப்புடித்தான். ஊருக்குள்ளை அவனுக்குத்தானே பேரும் நடப்பும்? அவன் இவ்வளவு உதவரங் கெட்டவனெண்டால் ஊரிலை உப்புடிப் பேர் இருக்குமே? இதுகளுக்குப் படிச்சும் புத்தியில்லை. இவங்களைக் குடும்பத்துக்காகப் பெத்தன். குடும்பம் தேர்போலை நடக்குது. அவனை ஊருக்காகப்பெத்தன். அவன் றோட்டளக்கிறான் எண்டு வைச்சுக்கொள்ளுவம். அதுக்காக அவனை நான் மெச்சிக் கதைக்கிறதும் இதுகளுக்குச் சிலநேரம் புடிக்கிறேல்லை. ஓரவஞ்சக மனுஷன் எண்டு கூட நினைக்குதுகள். 'நீங்கள் என்னத்தைத்தான் சொன்னாலும், அவனும் என்ரை புள்ளைதான்' எண்டு சொல்லுவன். இதுகளும் பேக்கூத்துத்தான் ஆடுகிறது. ஏதோ நான் அவன்தான் என்ரை புள்ளை எண்டு சொல்லிப் போட்டதைப் போலை. தாய் மனம் பித்துத்தான். இவவும் இப்ப இல்லை. என்ரை மனமும் பித்துத்தான். இது ஒண்டை மட்டும் நான் குமாரசாமியைப் பற்றி மறக்கமாட்டன். இவையள் ஆயிரத்தைச் சொல்லட்டும். சுப்பிரமணியமா இருக்கட்டும். சவுந்தரம் - பரிமளமாக இருக்கட்டும். மனோகரன் - பத்மாவாக இருக்கட்டும். ஆறுமுகத்தார் ஆறுமுகத்தின்ரை புள்ளையெண்டு தான் ஊர் தேசத்திலை தெரியும்.... ஏன், சதாசிவம் தங்கராசா எண்டாப் போலை என்ன? என்ரை மருமக்கள் எண்டாத்தான் நல்ல விளப்பமாத் தெரியும். ஆனா, கடைத் தெருவிலை எத்தினை பேருக்கு என்னைக் குமாரசாமியின்ரை அப்பனெண்டுதான் தெரியுமெண்டு இவையளுக்குத் தெரியுமே? அண்டைக்கு பஸ்ஸிலை நான் தெல்லிப்பழைக்குப் போகேக்கிள்ளை ஒரு பொடியன் 'நீங்கள் குமாரசாமியின்ரை தகப்பனல்லோ?' எண்டு கேட்டுப்போட்டு, தான் குந்தியிருந்த இடத்தை எனக்குத் தந்தான். அந்தப் பொடியனும், பெரிய படிப்புத்தானாக்கும்.

'என்ன முகத்தார்? என்ன பொடியள் எல்லாம் வந்திட்டினமோ?' ஐயம்பிள்ளை தன்னுடைய படலையில் நின்றபடி குரல் கொடுக்கிறார்.
'கோச்சி அப்பவே வந்திட்டுது. வந்திருக்கவேணும்.'
'சுப்பிரமணியம் வராமல் நிற்கமாட்டான். மனோகரனும் வாறானாமோ?'
'ஓம். கடுதாசி போட்டிருந்தான்.'
'படலையிலை நிண்டு கதைக்கிறியள்? கடைக்குப் போறதுக்கு முந்திக் கொஞ்சம் பாவிச்சிட்டுப் போகலாமெண்டால் என்ரை மனுஷpயைத் தெரியாதே? ஆற்றையேன் சாட்டிலைதான்..... உள்ளுக்கை வாருங்கோவன்...'
'இப்ப வாதக்குணமாவும் இருக்குது. ஒத்துக் கொள்ளுதுமில்லை.'
'இது நித்தமே முகத்தார்? ஒரு வருஷம் பெருநாளுக்குத் தானே? உங்களைத் தூரத்திலை கண்டோடனையே உங்களோடை தான் வருஷத்தைத் துவங்க வேணுமெண்டு ஆசை வந்திட்டுது.'
'ஏன்தான் உன்ரை ஆசையையும் கெடுப்பான்?'

முகத்தார் ஐயம்பிள்ளையுடன் கொஞ்சம் 'முஸ்பாத்தி' பண்ணிவிட்டு, அவருடனேயே கடைக்குச் சென்று, மக்கள் - பேரப்பிள்ளைகள் ஆகிய சகலருக்கும் இதமாகக் கறிகாய்கறிபழவகைகள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்பொழுது பத்து மணியாகிவிட்டது.

வீடு கலகலப்பு நிறைந்து காணப்படுகின்றது. சுப்பிரமணியமும் குடும்பமும் வந்தால் சத்தத்திற்குக் குறைவில்லை. பிள்ளைகள் புத்தாடை புனைந்து காணப்படுகின்றார்கள்.

'ஐயம்பிள்ளையோட மினக்கட்டு நான்தான் நேரம் பிந்தீட்டன்போலை கிடக்குது. சுப்பிரமணியம் எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரு நிறத்திலைதான் உடுப்புகள் வாங்கியிருக்கிறான்.... இஞ்சை பாருங்கோவன், இவன் கடைக்குட்டி தன்ரை சட்டைதான் திறமெண்டு சண்டை பிடிக்கிறதை... , பரிமளமும் சதாசிவமும் கூட முழுகீட்டினம். உந்த உடுப்புகள் சரியான விலையாம். வருஷப் பிறப்புக்கு நெடுகிலும் உவை உப்பிடித்தான் எடுக்கிறவை. கோயிலுக்குப் போகப் புறப்பட்டு நிற்கினை போலை. நல்லூரானே இதுகளுக்கு ஒரு புள்ளைப் பாக்கியத்தைக் குடு.... சே, கண்ணூறு பட்டிடப்பிடாது..... பத்மாவுக்கு உந்தச் சீலை வடிவாத்தான் கிடக்குது. சாமத்திய வீட்டுக்குள்ளை சீலையோடு பாத்ததுக்கு இப்பதான் சந்தனக் கலர் நிறத்திலை தனக்கொரு சீலை வாங்கியர வேண்டும் எண்டு மனோகரனுக்கு எழுதினவள். அவன்தான் வாங்கியந்திருக்க வேணும்.... இன்னும் சுப்பிரமணியமும் கமலாவும் முழுகி முடிக்கேல்லைப் போலை... உங்கை கிணத்தடியிலை நிக்கினம்.'

'புள்ளை பத்மா, இந்தக் கறி சாமான்களைக் கொண்டு போய் குசினீக்கை வை.'
'அப்பு காலைச்சாப்பாடும் இல்லாமலே கடைக்குப் போனவர்? நீங்கள் வருவியளெண்டு முட்டையும் பொரிச்சுக் காத்திருந்தது தான் மிச்சம்.'
'அவன் ஐயம்பிள்ளை விடேல்லை. அவனோடை அப்படியே கடைக்குப் போனதும் நல்லதாப் போச்சுது. சவ்வு கிவ்வு இல்லாத நல்ல இறைச்சி கிடைச்சுது. சின்னதுகள் உறைப்புத் தின்னாயினம். பால்கறி வைக்க ஈரல் கிடைச்சுது. கொத்தார் இறைச்சிவகை தின்னாதவர். நல்லதொரு பாரை கிடைச்சுது. மிச்சம் பொரியலுக்கும் உதவும். கைவியளத்தை முடிச்சிட்டுப் போயிருந்தால் கடையிலை ஒரு மண்ணும் வாங்கியிருக்கேலாது.'
'அப்புவுக்கு இந்த வருஷப்பிறப்பு நல்ல முழுவியளத்தோடை துவங்கியிருக்குது' என்று சொல்லிக்கொண்டே, பெரிய உமலைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அடுக்களைப் பக்கம் பத்மா போகின்றாள்.
'இந்த வேட்டிதான் பெத்தப்பாவுக்கு' என்று கூறிக்கொண்டே 'பீஸ்' வேட்டி ஒன்றை 'ரீப்போ'வில் அசோகன் வைக்கின்றான். 'சித்தப்பாவும் அப்பாவுக்குக் கரை போட்ட வேட்டி ஒண்டு வாங்கியந்தவர்' என்பதையும் அறிவிக்கின்றான். எவ்வளவோ தடுத்தும் பரிமளம் கேட்கவில்லை. அவள் நேற்றே 'பரமாஸ்' சோடி ஒன்று எடுத்துக் கொடுத்துவிட்டாள். தான் முன்னர் கொண்டுவந்த வேட்டியுடன் பெத்தப்பாவின் மற்றைய உடுப்புகளையுங் கொண்டுவந்து அடுக்கி 'டேய், பெத்தப்பாவுக்கு இந்தமுறை நாலு புதுவேட்டி' என்று உரக்கக் கத்தினான்.

'மூன்று வேட்டிதானே? ஓன்று சால்வையல்லோ?' என்று மூலையில் நின்று ஹம்ஸதொனி திருத்துகின்றாள்.

'வீண் சிலவு. எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டுதுகள். அதுகளுக்கு ஏதோ செய்ய வேணுமெண்ட ஆசை. வீட்டோடை நிக்கேக்கிள்ளை உதெல்லாத்தையும் மனோகரன் தான் உடுத்துக் கிழிப்பான். இப்ப அவருமல்லோ எடுத்துத்தரத் துவங்கியிருக்கிறார்? இதுகளை இனி உடுத்துக் கிழிக்கிறதற்கு சௌந்தரத்தின்ரை மூத்தவன் முகுந்தன்தான் இருக்கிறான். அவனும் இந்த மார்கழியிலை சீனியர் சோதினை எடுக்கப் போறானாக்கும்.
ஈரச்சீலையுடன் கமலா பெரிய அறைக்குள் ஓடுகிறாள். முற்றத்தில் கம்பிக் கொடிக்குப் பக்கத்தில் நின்று தலையைத் துவட்டிக்கொண்டிருந்த சுப்பிரமணியம், 'மருத்துநீர் அந்தா கிணத்துக்கட்டிலை இருக்குது போய்க் குளிச்சிட்டு வாருங்கோ அப்பு' என்கிறான்.
'என்ன அவசரம்? மனோகரனும் முழுகீட்டு விடட்டன். எங்கை அவனைக் காணேல்லை?'
'உதுகள் ஏதோ ஐஸ்கிறீம் வேணும் சீனிச் சித்தப்பா எண்டதுகள். அவன் வாங்கப் போயிட்டான் போலை கிடக்குது. அவன் ஆறுதலாகக் குளிக்கட்டும். நீங்கள் முதலிலை குளியுங்கோ. வருஷம் பிறக்கப்போகுது. கும்பம் வைக்கவல்லோ வேணும்?'

'ஓமோம்.' முகத்தார் கிணற்றடிக்குப் போகின்றார். கட்டியிருக்குஞ் சாறத்துடன் குளிப்பது அவருடைய வழக்கம். 'சனி நீராடு' என்று வாரத்திற்கு ஒரு முறை, மூன்று பெருநாள் நீராட்டம் பிரத்தியேகமாக வந்துசேரும். தலையிலே மருத்துநீரை வைத்து நன்றாகத் தப்புகின்றார்.
'சித்தப்பா, சித்தப்பா' என்று அசோகன் ஆர்ப்பரிக்கிறான்.
'குமாரசாமி வந்திட்டானோ?'
ஆசையுடன் எட்டிப்பார்க்கின்றார். தொட்டாச் சுருங்கி இலைகள் கூம்புகின்றன.
'இல்லை, அவன் மனோகரன்தான். மூண்டு நாலு மாசத்திலை கொஞ்சம் வளந்திருக்கிறான். சொந்தமாகச் சம்பாரிக்கத் துவங்கீட்டால் கொஞ்சம் பூரிப்புத்தானே? நல்ல தாராளமாச் சிலவழிக்கிறார். ஓம், போய்க் கொஞ்ச மாசந்தானே? இன்னும் கொழும்புப் பழக்கங்கள் நல்லாப் புடிபடேல்லைப் போலை.... குமாரசாமியை இன்னும் காணேல்லை. சிலவேளை, நல்ல நாளும் பெருநாளுமா எல்லாரும் கொண்டாட்டத்திலை நிக்கேக்கிள்ளை நான் ஏன் குழப்புவான் எண்டுபோட்டு நிண்டிடுவானோ?'

இந்த எண்ணம் ஏற்பட, காலையில் இலேசாக உறுத்திய நெஞ்சில் முள் ஆழமாக இறங்குகின்றது. வலி தாங்கமாட்டாது அவஸ்தைப்படுகின்றார். அவஸ்தைப் பரிகார எத்தனத்தில் பெருமூச்சொன்று நீள்கின்றது... இயந்திர வேகத்தில் கைகள் துலாக்கயிற்றை மேலும் கீழுமாக இழுக்க வாளி வாளியாகத் தண்ணீர் தலையிலேயே கொட்டப்படுகின்றது.

'நானும் நல்ல வேளைக்குத்தான் வந்திருக்கிறன். எல்லாரும் மருத்துநீராட்டம் முடித்தாயிற்றுப்போலை. பத்மா இதைப் புள்ளைகளுக்குப் பிரிச்சுக் குடு.'
'இது நிச்சயமாக குமாரசாமியின்ரை குரல்தான், உந்த வெண்கலக் கடை யானையின்ரை குரல் அவன்ரைதான்.'
தண்ணீர் காதுக்குள் புகுந்து, தன் மனக்குகை நினைவுகளுக்கு உருவங் கொடுத்தது. மாரீச ஜாலம் நடைபெறுகின்றதோ என்று கூட ஒரு கணம் நினைக்கின்றார். இருந்தாலும் ஆசை இழுக்கின்றது.
'அப்பு எங்கை?'
'அவர் குளிக்கிறார்... அப்பு! சின்னண்ணர் வந்திருக்கிறார்' பத்மா குரல் வைக்கின்றாள்.

துளிர்க்கும் நம்பிக்கை, பச்சையின் பசுமையை உறிஞ்ச, மறைப்புத் தட்டிக்கு மேலால் எட்டிப் பார்க்கின்றார்.

முற்றத்தில் குமாரசாமி சிரித்தபடி நிற்கிறான். அவன் பக்கத்தில் பத்மா நின்று, அவன் கொடுத்த 'சரை' யிலிருந்த இஞ்சி விசுக்கோத்துகளைப் பங்கிடுகின்றாள். சுப்பிரமணியத்தின் கடைக்குட்டி, வேற்று முகத்தைக் கண்டு பயந்தமாதிரி, கதிரையின் பின்னால் மறைவதை அவன் கவனிக்கத் தவறவில்லை. அவனுடைய பயத்தைக் கவனித்த குமாரசாமி 'நானுஞ் சித்தப்பாதான்... ஒருத்தருஞ் சொல்லித் தரேல்லையா? என்று சொல்லி மீண்டுஞ் சிரிக்கிறான்.

'அதே சிரிப்பு. இவன்ரை சிரிப்பு ஒருநாளும் மாறாது... என்னைப் போலை அந்தச் சுருட்டை மயிர் முன் குடும்பி வைச்சது போலை நிக்கிறதும் மாறாது. என்னதான் மனக் கோவங்கள் இருந்தாலும், அவன்ரை அந்தச் சிரிப்பைக் கண்டோடனை ஒருத்தருக்கும் அவனை ஏசப் பேச மனம் வராது. ஆரையும் மருட்டும்.'

'என்ன அவசரந்தான், அப்பு... போஸ்ட் காட் என்னத்துக்கு? நான் தான் நேரிலை வந்திட்டனே... அது கிடக்க, பத்மா வருஷத்துக்குச் சீலை கட்டியிருக்கிறாள்...' குமாரசாமி பத்மாவை அந்தக் கோலத்தில் அப்பொழுதுதான் முதன்முறையாகப் பார்க்கின்றான்.
'ஓம். இவன் மனோகரன் தன்ரை முதல் சம்பளத்திலை எடுத்துக் கொண்டந்து குடுத்திருக்கிறான்' வாளிக் கயிற்றைப் பிடித்துக்கொண்டே முகத்தார் சம்பாஹணையில் ஈடுபடுகின்றார்.
'அத்தான் எங்கை பத்மா? காரிலையே வந்தவர்?'
'இல்லை. ராத்திரி உத்தரதேவியிலை வந்து சேர்ந்தவர். இப்ப அக்காவோடை கோயிலுக்குப் போயிட்டார்' என்று கூறிக்கொண்டே பத்மா அடுக்களைப் பக்கம் போகின்றாள்.
'புதுக் காரொண்டு எடுத்ததெண்டு கேள்விப்பட்டன். என்ன சாதிக்காராம்?'
'எனக்கென்னடா தெரியும்?'
'காரின்ரை விலையளும் இப்ப என்ன மாதிரி ஏறிக்கிடக்குத் தெரியுமே? உங்காலை வீட்டுப் பொடியன் - அவன்தான் ரத்தினகோபால் - காரை வித்துப்போட்டு 'ஸ்கூட்டர்' வாங்கியிருக்கிறானாம்...'
'காரை விக்கேல்லையாம்.... இசுக்கூட்டரும் வாங்கினவனாம்'
'இப்ப ஏதும் சாமான் கீமான் வாங்க முடியுமே? அதுதான் வித்துப் போட்டான். அவன்ரை காரை ராசாந்தோட்ட சங்கரப்பிள்ளைதான் வாங்கினதாம்.... அவன்ரை கல்யாணப் பேச்சுக்கால் எப்பிடியாம்?'
'அது குழம்பிப் போய்க் கிடக்குதாம்.'
'நீங்கள் மானிப்பாய் பகுதியிலை இருந்து வந்த சம்பந்தத்தையல்லோ சொல்லுறியள்? இது இங்காலை கோப்பாய்ப் பகுதியிலையாம்....'
'அதைப் பற்றி நான் கேள்விப்படேல்லை.'

தூணுடன் சாய்ந்துகொண்டு நிற்கும் மனோகரனைப் பார்த்து, 'தம்பி உங்கடை கொம்பனியை அரசாங்கம் தெரியா எடுக்கப் போகுது போலை. தென் யூ வில் ஓல்சோ பிக்கம் கவுண்மென்ட் சேவண்ட்...'  என்கிறான்.
'அப்பிடி நடக்காது...'
'நீ இருந்து பாரன் தம்பி... அப்பு! தங்கராசா அத்தானுக்கு அடுத்த மாசம் உத்தியோக உயர்வு கிடைக்கப் போகுதாம். தெரியுமே?'
'உதுகள் எனக்குத் தெரியுமே?'

'முந்தநாள் அவரை ஸ்ரேசனிலை கொண்டந்து விடேக்கிள்ளைதான் அப்பிடி ஒரு புருமோஷன் கிடைச்சாலும் கிடைக்கும் எண்டு அத்தான் சொன்னவர்.' மனோகரன் தனக்குத் தெரிந்த சமாச்சாரத்தைச் சொல்லுகின்றான்.
'இவன் ஊருக்கு வாறதோ அத்திபூத்தாப்போலை. ஆனா, ஊரிலை நடக்கிற ஒண்டையும் விடாமல் அறிஞ்சு வைச்சிருக்கிறான்.
முகத்தார் அவசர அவசரமாக மூன்று நான்கு 'பட்டை'களை ஊற்றி 'முழு'க்கைச் சுபத்துடன் முடிக்கிறார்.
வந்துகொண்டே, 'ஆனைக்கோட்டை வைத்தியரின்ரை பொடிச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டனியே...' என்கிறார்.
'ஓமோம். நான் கேள்விப்பட்டன். சாதி ஒரு மாதிரி எண்டுதான் இவை கூத்தாடினவை. அவன் நல்ல பொடியன். கெலகதரையிலை படிப்பிக்கிறான்.'
'... என்னவோ உப்பிடித்தான் ஒரு பேர் சொல்லுகினம்....'

தலையைத் துவட்டும்பொழுது, எந்தப் புத்தாடையை அணிவது என்னும் யோசனை அவரை ஆக்கிரமித்துக் கொள்ளுகின்றது. சிறுபிள்ளைத் தனமன்று. பெரிய பிள்ளைகளுக்குள் தன்னுடைய செயலால் மனத்தாங்கல் ஏற்படக்கூடாது என்பதில் அக்கறை.

அதற்கிடையில், 'நீங்கள் ஏன் ஈரத்தோடை நிக்கிறியள்? இதைக் கட்டுங்கோ. நீங்கள் விரும்பிக் கட்டுவியளே, நீலக்கட்டம் போட்ட சாறன்' என்றபடி கையில் வைத்திருந்த ஒரு பார்சலை நீட்டுகின்றான்.
குசேலனின் அவல் முடிச்சை அவிழ்த்து உண்ட கண்ணனின் உள்ளத்திலே கூட இவ்வளவு மகிழ்ச்சி தோன்றியிருக்க முடியாது.
விரித்து உடுக்கின்றார்.
சலனமெதுவுமின்றி மற்றவர்களைப் பார்க்கின்றார்.

மௌனம்.

'அப்புவுக்கு நல்லாத்தான் இருக்குது...' வெளியே வந்த பத்மா மௌனத்தைக் கலைக்கின்றாள்.
'நீ நிண்ட ஊராலை வந்தனீயே? இரன்;: கும்பம் வைக்கப் போறன். பொதுநாளா இருக்கிறதாலை உடனையே கைவியளம் குடுக்கலாமெண்டிருக்கிறன்.'
'இல்லை அப்பு. எனக்கு உதுகளிலை அவ்வளவு நம்பிக்கை இல்லை எண்டது தெரியுந்தானே? அதோடை விடியக் காலமையே கார்க்காரனிட்டைக் கைவியளம் வாங்கீட்டன்.'
முகத்தாரின் முகத்தில் மூட்டம்.
'இவன்தான் புது நாணயமாப் புறந்தவன். ஒண்டிலும் நம்பிக்கை இல்லாதவன். டேய்! புத்தகப் படிப்பும், நீ எழுதுற கதையளும் நாடகங்களும் படிப்பில்லை. ஆவது அறிவது அறிவல்ல: வீட்டிலை வேவது அறிவதுதான் அறிவு. ஊரோடை ஒத்து வாழுறதுதான் படிப்பு.' - இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த சுப்பிரமணியம் சொல்லுகிறான்.

'அதுக்கில்லை அண்ணை. நான் அஞ்சாறு பேரோடை வந்திருக்கிறன். ஊராங்கடை காசிலை அவங்களை இவ்வளவு தூரம் கூட்டியந்தனான். இந்த ஊருக்கு அவங்கள் புதிசு. அவங்களை ஹோட்டலிலை விட்டிட்டு நான் இஞ்சை மினக்கடுறது அவ்வளவு வடிவில்லை எண்டுதான் சொல்ல வந்தனான்.... அப்ப நான் வாறன்' பதிலுக்குக் காத்திருக்காமல் திரும்புகின்றான்.

'என்ன இருந்தாலும் மரியாது தப்பாது. ஆர் சொன்னாலும் தலையைக் கவண்டு கொண்டுதான் கேப்பான். மரியாதைக்காகத்தான். ஆனா, தான் நினைச்சதைத்தான் செய்வான்.'
'சின்னண்ணை... இஞ்ச கோப்பி கொண்டந்துட்டன். குடியுங்கோவன்...' என்று பத்மா கோப்பி கிளாஸை நீட்டுகிறாள். பதிலொன்றும் பேசாமல் அதை வாங்கிக் குடித்துவிட்டு, கிளாஸைத் திருப்பிக் கொடுக்கின்றான்.
முற்றத்து மாங்கன்றில், கும்பத்துக்கு மாவிலைகள் ஒடித்துக்கொண்டே, 'அப்ப மத்தியானச் சாப்பாட்டுக் கெண்டாலும் வாறியோ?' என்று முகத்தார் கேட்கிறார். நப்பாசையின் உள்முடிச்சு அவ்வினாவிற் காளத்திரியாட்ட மிடுகின்றது.
'அவன்தானே அப்பு சொல்லிப் போட்டான். கூட்டாளியளை விட்டுப் போட்டு வரேலாது எண்டு' என்று சுப்பிரமணியம் சொல்லுகின்றான். வழக்கத்தில் மூத்தவன் அதிகம் பேசுவதில்லை.
'அப்ப வாறன்.... எல்லாருக்கும் வாறன்' என்று கூறி அவசரமாகப் படலையைத் திறக்கும் குமாரசாமி, ஒரு கணந்தரித்து, 'அப்பு, இண்டைக்கு எங்கடை நாடகம் பின்னேரம் முத்தவெளியிலை நடக்கும்... நல்லா இருக்கும்... நேரம் இருந்தா வாருங்கோவன்' என்று குரல் கொடுத்துச் செல்லுகிறான்.

கும்பம் வைத்து கைவிசேடம் பரிமாறப்பட்டாகிவிட்டது. விறாந்தையிலுள்ள 'செற்றி'க் கதிரைகளில் அமர்ந்து சுப்பிரமணியமும், சதாசிவமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பேச்சு சதாசிவம் புதிதாக வாங்கியுள்ள காரைச் சுற்றிச் சுழல்கின்றது. அவர்களுக்குச் சற்றுத் துரத்தில், தூணிலே சாய்ந்தவாறு சௌந்திரத்தின் சார்பாக கேவிசேட வைபவத்திற் கலந்து கொண்ட முகுந்தன் நிற்கிறான்.

'அவன் மூத்த மாமனுக்கு நல்ல மரியாதை'
கமலா, பரிமளம், பத்மா ஆகிய மூவரும் சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஹம்ஸதொனியும் பெரிய மனுஷி மாதிரிக் கூடமாட வேலை செய்கின்றாள். 'குத்தி'ப் பலகையில் இருந்து கொண்டு, அவர்களுக்கு மனோகரன் தன்னுடைய கொழும்பு அநுபவங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

கறித் தேங்காய்களையெல்லாம் 'போர்;'த் தேங்காய்களாக்கி, முற்றத்திலே போர்த் தேங்காயடி நடைபெறுகின்றது. யாருடன் என்ன விளையாட்டில் ஈடுபட்டிருந்தாலும், அசோகன் 'குழப்'பாமல் இருக்க மாட்டான். கல்லிலே பட்டுத்தான் தன்னுடைய 'கையான்' உடைந்ததாக அவன் சண்டை பிடிக்கிறான்.

புதுவருடத்துக்கு ஏனைய மக்களின் அன்பளிப்பாகக் கிடைத்த புத்தாடைகள் 'ரீப்போ'யில் இருக்கின்றன. அவற்றை முகத்தாரின் கண்கள் மேய்கின்றன.
'புள்ளை பத்மா!'
அவள் கைவேலைகளை விட்டுவிட்டு வருகின்றாள்.
'உந்த உடுப்புகளை எடுத்து வை புள்ளை. பின்னேரம் ஒருக்கா முத்தவெளிக்குப் போகவேணும். நாடகம் பாக்க போகேக்கை மூத்தண்ணர் வாங்கித்தந்த வேட்டியையும், கொத்தார் வாங்கித் தந்த சால்வையையுந் தான் போட்டுக்கொண்டு போகவேணும்...'
'ஐயோ, இளையண்ணர்தான் பாவம்...'
'ஓம் தங்கச்சி. எளியவனாப் பிறந்தாலும், இளையவனாய் பிறக்கக்குடாது' என்று மனோகரன் அடுக்களையிலிருந்தபடியே சொல்லுகின்றான்.

இதிலே என்ன நகைச்சுவையைக் கண்டார்களோ? அண்ணரும், அத்தானும் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள். மனோகரன் கையில் ஒரு நெருப்புக் கொள்ளியைத் தூக்கிக் கொண்டு, அடுக்களையின் மறைவான மூலையைப் பார்த்து நகருகின்றான்.

'இப்ப தம்பியும் பெரியாக்களைப் போலை...' என்று பரிமளம் குரல் எழுப்புகின்றாள்.
'சும்மா சத்தம் போடாதை பரிமளம். இளையவன் எண்டாப்போலை நெடுகிலும் சின்னப்பொடியன் எண்ட நினைப்பே? அவனும் உழைக்கிறான்: சம்பாரிக்கிறான்' என்று மச்சான் சார்பில் கமலா பேசுகின்றாள்.
'மனோகரன் சிகரெட் குடிக்கத் துவங்கீட்டான் போலை. , உங்கை கிறாதியாலை புகை வருகுது. வளந்தாப் பிறகு அதுஅது, அதுகளின்ரை விருப்பம்'

'என்ன மருமகன்? சயன்ஸ் பாடங்கள்தானே? பேத்தனமா இங்கிலிஸை நெக்லட் பண்ணாதே.'
'ஹி இஸ் குட் இன் இங்கிலிஸ். கிறடிற் எடுப்பான்' என்று சதாசிவம் முகுந்தனின் சார்பாக உத்தரவாதமளிக்கின்றான்.
'தூண் விழுந்திடப் போகுது. அந்தக் கதிரையிலை இரன்'
'அத்தான், உந்தத் தூணடியிலை நிண்டு பாத்தால் ஹம்ஸதொனி அடுப்படியிலை இருந்து வேலை செய்யிறது தெரியுதாக்கும்.'
'சதாசிவம்... வானதிக்குக் கூடப் பிந்தீட்டியள்.... அசோகனுக்கெண்டாலும் முந்தலாம்.'
சதாசிவத்தின் கண்கள் பரிமளத்தைத் தேடுகின்றன.
வாயைப் பொத்தும்படி சுப்பிரமணியத்திற்குக் கமலா சைகை காட்டுகின்றாள்.

விறாந்தை ஓரத்தில் விழுந்து கிடந்த ஓர் இஞ்சி விசுக்கோத்தை எட்டியெடுத்த முகத்தார், குழந்தையின் சுபாவத்துடன் ஒருவருக்குந் தெரியாமல் தன்னுடைய தளர்ந்துபோன பற்களுக்கிடையில் நசுக்குகின்றார்.

ஆண்மை - எஸ். பொன்னுத்துரை

ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது.

வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐs.po ந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம் கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டது வீண் போகவில்லை. சோட்டைத் தீர்க்க ஆறாம் காலாகப் பொடியன் பிறந்தான். சந்தான விருத்தியில் அவனே மங்களமாக அமைந்தான்.

பயணக் களைப்பைப் பாராட்டாமல் சரஸ்வதியும் புத்திரிகளும் வீட்டைத் துப்பரவு செய்யும் உழவாரத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சந்திரசேகரத்தை சயனநங்கை முற்றாகச் சரித்துவிடவுமில்லை. இமைகளைப் பிளந்து காங்கை ஏறுவதான கூச்சத்தில், அவருடைய கண்களின் இமைக் கதவுகள் சற்றே அகலும். இமைகளின் ஈயக் குண்டுகளைச் சுமக்க இயலாது என்கிற வாக்கில் மீண்டும் மூடிக் கொள்ளும். இமைகள் இலேசாகத் தோன்றுகின்றன. முற்றத்தில் மாமரங்கள் செழுங்கிளைகள் பரப்பியிருக்கின்றன. அவை வெக்கையை உறிஞ்சுவதினாலேதான் இத்தகைய இதம் விடிந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. மாமரங்களுக்கப்பால் “கேற்” தெரிகிறது. அதிலே கறள் மண்டிக் கிடக்கிறது.

கேற்றிலே நிலை குத்திய விழிகளைப் பிரித்தெடுத்து, இடப்பக்கமாகவே மேய விடுகிறார். மதிலில் பாசி சடைத்து நுதம்பி வழிகின்றது. சுவரின் வெடிப்பிலே ஆலங்கன்று ஒன்று வேர் விட்டு, கொழுத்து வளர்கின்றது. “உதை உப்பிடியே வளரவிட்டால் சுவருக்கு மோசம் தரும்” ஐயரின் வளவைச் சுற்று மதில் வளவு என்றுதான் சொல்வார்கள். அந்த எல்லையைப் பற்றியும் அறிக்கையைப் பற்றியும் கவலையில்லை. வலப்பக்கமும் கொல்லையும் வேலியும். வலப்புற வேலியிலே ஊரும் அவருடைய பார்வை தரிக்கின்றது. அந்த வேலி கறையான் தின்று இறந்து கிடக்கின்றது. கோழி ஒன்றும் அதன் குஞ்சுகளும் ஒரே சுரத் தொனியைச் சாதகஞ் செய்து கொண்டு, வேலியிலுள்ள கறையான்களை மேய்கின்றன. … பூரணத்திற்கு வேலியைப் பற்றி என்ன கவலை? சோட்டைக்குத்தானும் அவளுக்கு ஒரு பெட்டைக்குஞ்சு பிறக்கவில்லை. சீமாட்டிக்கு எல்லாம் கடுவன்கள்.

வேலியையும் தாண்டி சேகரத்தாரின் மனம் அலை மோதுகிறது. முப்புறமும் எரிக்கமுனையும் முக்கண்ணனாகச் சாம்பசிவத்தார் காட்சியளிக்கிறார். சொற்கள் அனற் குழம்பை அள்ளிச் சொரிகின்றன.

“உந்த வேலியைப் பிரிச்செறிஞ்சு போட்டு மதிள்தான் கட்ட வேணும். உவளவை கோயில் கிணத்திலை போய்த் தண்ணி அள்ளட்டுமன்… ம்… பக்கத்திலை பாவங்கள் – ஏழை பாளையள் – வந்து தண்ணி அள்ளட்டும், போகட்டும் வரட்டும் என்று ஒரு பொட்டு விட்டால், தட்டுவாணியள் மாப்பிள்ளையல்லோ கொள்ளப் பாக்கிறாளவை…”

“பொட்டு” மேவப்பட்டு, பனையுயரத்தை எட்ட முனைந்த புதுவேலி சாம்பசிவத்தாரின் வைராக்கியத்தைப் பறை கொட்டியது. பூரணத்தைப் பார்க்க முடியாது. தூண்டிற் புழுவின் ஆக்கினையைத் தமதாக்கிச் சந்திரசேகரம் சாம்பினான்.

அழகு என்ற சொல்லின் அர்த்தப் பொலிவு முழுவதையும் தனதாக்கி எழில் பிழிந்தவள் பூரணம். இடையை இறுக்கிச் சுருக்கும் பாவாடையோடும், குரும்பை மார்பை அமுக்கி விறைத்த சட்டையோடும், சருவக்குடம் சுமந்து, அவள் தன் வீட்டிற்கும் அயல் வீட்டுக் கிணற்றுக்கும் நடைபயில… அந்த நடைபயிலும் நர்த்தனைக் கால்களிலே தன் உள்ளத்தை வெள்ளிப் பாதசரமாகத் தொங்க விட்டு…

விழிமொழிக் கொஞ்சல் முற்ற முற்ற, கிணற்றடி கமுக மரவட்டில் காதற்கடிதங்கள் கனிந்து தொங்கத் தொடங்கின. கமுக மரம் சமத்தான தபாற்காரன்தான். ஆனால் காற்றும் காகமும் செய்த திருக்கூத்தால் பூரணத்தின் கடிதமொன்று சாம்பசிவத்தின் கைகளிலே கிட்டியது. உறவு பிளவுற்றது. வேலி பனையுயரத்தை எட்ட முனைகிறது.

வேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது என்று சொல்வார்கள். தாய்வழியில், பூரணம் சந்திரசேகரத்தின் மனைவியாக வாழத்தக்க உறவு முறை. ஆசையின் தொங்கு தாவல்கள், பூரணத்தை அடைவதற்குத் தாயின் ஆதரவைத் திரட்டும் நள்ளல். இரவுச் சாப்பாட்டின் போது இதைப் பற்றி சேகரம் மெதுவாகப் பிரஸ்தாபிக்கிறான். சித்திரைப் புழுக்கத்திற்காக விறாந்தையில் விசிறியுடன் இருந்த சாம்பசிவத்தாரின் செவிகளிலே அந்த உரையாடலின் சில நறுக்குகள் விழுந்து விடுகின்றன. காலம் அப்பிய சாம்பற் புழுதியை உதிர்த்துக் கொண்டு, கோபம் அம்மணமான அக்கினி உடம்பைக் காட்டலாயிற்று.

“உங்கை என்ன காத்தையைக்… கதையள்? இப்பவே தாய்க்கும் மேனுக்கும் சொல்லிப்போட்டன். அந்த எடுப்பை மறந்து போடுங்கோ. நான் மசிவனென்டு கனவிலும் நிலையாதையுங்கோ… உதுக்குக் கன்னிக் கால் நடுகிறதிலும் பார்க்க நான் பாடையிலைப் போக ஓமெண்டுவன்”.

அதிலே தொனித்த உறுதி சேகரத்தின் தாய்க்குத் தெரியும். மகனுடைய ஆசையின் பக்கம் தன்னால் சாய முடியாது என்ற நிதர்சனத்தின் உறைப்பு.

“உங்களுக்குத்தான் ஆண்டவன் கண்டறியாத தொண்டையைப் படைச்சிருக்கிறான். இப்ப என்ன நடந்து போச்சு எண்டு துள்ளுறியள்? இவன் வாயுழையைப் புசத்துறான் எண்டு கேட்டுக் கொண்டிருந்தால், நான் என்ன சுகத்தைக் கண்டன்? மத்தளம் போல இரண்டு பக்கமும் அடிபடுறன்…” என்று சலித்து, மூக்குச் சிந்தி, முன்றானைக்கும் வேலையைக் கொடுத்தாள் தாய்.

தொடர்ந்து புகுந்த மௌனம் நீண்டது.

“டேய் சந்திரன்! ஏண்டா, இப்படி எங்களைக் கொல்லுறாய்? உன் விருப்பப்பட்டி ஆட, எனக்கும் உன் கோத்தைக்கும் முதலிலை ஏதேன் நஞ்சைத்தாவன்? கண்டறியாத பலகாரத்தைக் கண்டவனைப் போல, இடியப்பக் காரியின்ரை வாடிப்போன நோடாலத்தை நினைச்சு இந்தப் பேயன் உருகுகிறான்…” என்று விவகாரத்திற்குச் சாம்பசிவத்தார் புதிய வேகம் கொடுத்தார்.

அடுக்களையிலிருந்து எவ்வித சளசண்டியும் எழும்பவில்லை. இளகிய இரும்பும், கருமத்தில் மனம் குத்திய கொல்லனும்! குரலின் சுருதியைத் தாழ்த்தி, அதிலே பாசத்தைக் குழைத்து, “தம்பி, நீ ஒருத்தன் நல்லா வாழ வேண்டுமெண்டுதானே இவ்வளவு பாடுபட்டம்? உனக்கு ஒரு கெடுதல் வந்து அண்ட விட்டிடுவமே? கலியாணம் எண்டால் சின்னச் சோறு கறி ஆக்கிற அலுவலிலை. அதைப் பெரியவங்களின்ரை பொறுப்பிலை விட்டிடு.. சோதினை பாஸ் பண்ணினாப் போலை போதுமே? நல்ல உத்தியோகம் ஒண்டிலை உன்னைக் கொழுவிவிட வேணும் எண்டு நான் ஓடித் திரியிறன். நீ என்னடா எண்டா குறுக்கால தெறிக்கப் பார்க்கிறாய்… இனிமேல், ஒண்டு சொல்லிப் போட்டன். அந்தப் பலகாரக்காரியளின்ரை கதை இந்த வீட்டிலை எடுக்கப்படாது…” எனப் பேசி முடித்தார்.

பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்ததுடன் சாம்பசிவத்தார் நின்று விடவில்லை. ஓடி அலைந்து பிற்கதவுகளில் நுழைந்து பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து இழுக்க வேண்டிய கயிறுகளை இழுத்து மகன் சந்திரசேகரத்தை நல்லதொரு உத்தியோகத்திலே மாட்டிக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். அதற்குப் பின்னர்தான் சாம்பசிவத்தார் நிம்மதியாகத் தூங்கினார் என்று கூடச் சொல்லலாம்.

தூங்குவதான பாவனையில் பழைய சம்பவங்களை அசை போட்டுக் கொண்டு கிடக்கிறார் சந்திரசேகர்.

“சரசக்கா! எப்பிடிப் பாடுகள், உடம்பு கொஞ்சம் இளைச்சுக் கிடக்குது” – இது பூரணத்தின் குரல்.

“அவளின்ரை குரல் அப்பிடித்தான் கிடக்குது? ஒரு உடைவோ ஒரு கரகரப்போ?”

பக்கத்து வீட்டாரைப் பற்றிய நினைவின்றி இயந்திர வாழ்க்கை உருளும் கொழும்பில் வாழ்ந்த பிள்ளைகளுக்கு அயல் வீட்டுப் பிரிவு புதுமைச் சுவையை ஊட்டுகிறது.

“வாருங்கோ பூரணமக்கா! பழக்கமில்லாமல் பூட்டிக் கிடந்த வீடு. உதைத் துடைச்சுத் துப்பரவாக்கிறதுக் கிடையிலை இடுப்பு முறிஞ்சு போடுமெணை. உதென்ன சருவச் சட்டீக்கை?”

“இதெணை கொஞ்சம் இராசவள்ளிக் கிழங்கு. புள்ளையளுக்குப் பிரியமா இருக்குமெண்டு கிண்டினனான். இதுதானே மூத்த பொடிச்சி? உங்கைப் பாருங்கோவன் நல்ல வடிவா வளந்திருக்கிறான். எக்கணம் என் கண்ணும் பட்டுப்போகும்… எடுங்கோ புள்ளை. ஐயா நித்திரையே? அவருக்கும் கொஞ்சம் கொண்டு போய்க்குடு தங்கச்சி…”

சந்திரசேகரத்தார் தான் நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக நடிக்கிறார். “ஐயா, நித்திரையெண்டால் எழுப்பக் கூடாது” என்ற ஞாயிற்றுக்கிழமை – பிற்காலத்தில் போயா தின – ‘மெட்னி’த் தூக்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பொதுவிதி அவரைக் காப்பாற்றுகிறது.

“பழைய பூரணமே? பெருவிரல்களால் பத்து இடங்களில் குழிதோண்டி, இரண்டு வார்த்தைகள் பேசத் திக்குவாளே, அந்த மங்குளிப் பெண்ணா இவள்? இப்பொழுது கதை கண்டவுடன் சொர்க்கம்”

சந்திரசேகரத்தாரின் மனம் நினைவோடையைக் கிழித்துச் செல்கின்றது.

உத்தியோகமான புதிதிதில் கொழும்பிலே போர்டிங் சீவியம். அலாம் மணி – பிளேன் டீ – பேப்பர் – முகச்சவரம் – தந்த சுத்தி – குளிப்பு முதலியன் – பாண் – விறுக்கு நடை – பஸ் – ஓட்டம் – கந்தோர் – அலுவல்கள் – டீயும் முசுப்பாத்தியும் – அலுவல்கள் – சோறு என்ற நினைப்பில் கல்லைக் கொறிக்கும் லன்ச் என்ற வித்தை – வம்பு மடம் – அலுவல் – டீ – நடை – பஸ் – மெது நடை – அரட்டை – சாப்பாடு – இங்கிரமெண்டைக் காப்பாற்றப் படிப்பு – லைட் அவுட் – தூக்கம்!

இராணுவ ஒழுங்கிலே நேரத்தின் ஆட்சிக்குள் உடலை வசக்கி எடுக்கும் இயந்திர இயக்கம். பின்னேர டீயுடன் ஒரு வடை – கடுதாசி விளையாட்டு – வசுக்கோப்புப் படம் என்ற விதிவிலக்குகளுக்கு மேற்படி நேரசூசியில் மிகமிக ஒறுப்பாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மற்றும் பிரக்ஞை கூட ஸ்மரித்த இயக்கம். பக்கத்து வீட்டுப் பூரணத்தின் முகம் தலை நீட்டுவதுண்டு. நேரத்தின் இராக்கதம் அதனைப் பிடித்து விழுங்கும்.

சாம்பசிவத்தார் அனுபவசாலி, மகனை “தனிக்க” விடாது அடிக்கடி கொழும்புக்கு இஷ்டமான சோட்டைத் தீன்களுடன் வந்தார். எத்தனையோ குழையடி கோசுகளுக்குப் பிறகு, சரஸ்வதியை அவனுடைய வாழ்க்கைத் துணைவியாக்கி விட்டார். சரஸ்வதி ஆதனபாதங்களுடன் சீமாட்டியாக வந்து சேர்ந்தார். “அப்பன் கீறிய கோட்டைத் தாண்டாத சற்புத்திரனாக” நற்பெயரெடுத்து சந்திரசேகரம் இல்லற வாழ்க்கையில் இறங்கினான். மூன்று ஆண்டுகளாக மலடியோ என்று பூச்சாண்டி காட்டிய சரஸ்வதி, தொட்ட சொச்சம் விட்ட மிச்சம் ஐந்து பெண்களையும் ஒரு கடுவனையும் அடுக்கடுக்காகப் பெற்று விட்டாள். அத்துடன் கணவருக்கு “ஆர்” விகுதியையும் சேர்த்து சந்திரசேகரத்தாராக மகிமைப்படுத்தி விட்டார். அவள் தாயில்லாதவள். நல்லதுக்கும் கெட்டதுக்கும் மாமியார் வீடுதான். மூன்றாம் பிள்ளையின் பிரசவ வீட்டில் சாம்பசிவத்தார் கண்களை மூடினார். “பேத்தி பிறந்த ஜாதக பலன்” என்று அந்த நிகழ்ச்சிக்கு விவரணம் கூறிய ஊர்ச்சனம், “நெய்ப்பந்தம் பிடிப்பதற்கு ஒரு பேரன் இல்லையே” என்று ஒறுவாயையும் சுட்டிக்காட்டியது.

சாம்பசிவத்தாரின் மனைவி வலுத்த சீவன். ஆறாம் பிள்ளைப் பேறுக்காக பழக்க தோசத்திலேதான் வீட்டுக்கு சரஸ்வதியைக் கூட்டி வந்தார். அவளுடைய தாயாருக்கு இயலாத நிலை. பொடியன் பிறந்தான். அவனைத் தடுக்கிலே கண்டு களித்த நிலையிலே பெத்தாச்சிக் கிழவி மோசம் போனாள். ஆண்டு திவசத்திற்குப் பிறகு இந்த வீட்டை அவர் சரியாகப் பராமரிக்கவில்லை. பொடியனுக்கு இப்பொழுது வயது நாலு. “ஊமை” என்ற பட்டத்தைச் சுமக்கிறான். டாக்டர்கள் அவன் பெரிய “பேச்சாளனாக” விளங்குவான் என்று அபிப்பிராயப்படுகிறார்கள். அவைன் பற்றி வளர்ந்து வரும் விசாரமும் ஒரேயடியாக வீட்டோடு வந்து குடியேறுவதற்குக் காரணமாக அமைந்தது.

“மூத்தவன் இந்த கோர்சுதான் யூனிவேஸிடி என்றன்ஸ் எடுத்தவன். கூப்பிட்டிருக்கிறாங்களாலம். எடுபடுவன் எண்டுதானெணை சொல்லுறான்..” பூரணம் இன்னும் போகவில்லை. எல்லோரும் பேச்சிலே குந்திவிட்டார்கள்.

“என்னை எடுத்தவர்? என்ஜினியரிங்கோ?” சரஸ்வதி மூத்த பெண் திலகம் கேட்கிறாள். அவள் யாருடனும் சட்டென்று பழக்கம் பிடித்துக் கொள்ளுவாள்.

“இல்லை, புள்ளை டாக்குத்தர் படிப்புக்கும் போக வேணும் எண்டு இஞ்சினை சொல்லித் திரிஞ்சான்…” பூரணத்தின் குரலிலேய எவ்விதப் பெருமையும் மண்டவில்லை. புதிதாகச் சேர்ந்துள்ள பணத்தின் செருக்கு துளி கூட இல்லை.

சந்திரசேகரத்தார் மறுபக்கம் திரும்பிப் படுப்பதான அபிநயத்துடன் புரளுகின்றார். மனம் பூரணத்தைப் பற்றிய நினைவுகளிலே மொய்த்துச் சுவிக்கின்றது.

“கடையப்பக்காரியள்” என்று சாம்பசிவத்தார் சிந்திய சுடுசொற்கள் பூரணத்தின் தாயாரை வெகுவாகத் துன்புறுத்தியது. அன்று தொடக்கம் அவள் நாயாக அலைந்து, தன் மகளுக்குக் குடும்ப வாழ்க்கை ஒன்று குதரிச் செய்து விட்டாள். சின்ன வயது தொடக்கம் எல்வெட்டித் துறையாருடைய கடையிலே வேலை செய்த அநாதைப் பையன் சோமசுந்தரத்தைக் கைப்பிடித்த ராசி, அள்ளிக் கொடுத்தது. திருச்சி பீடிக் கொம்பனிக்கு ஏஜன்சி எடுத்து ஆரம்பமானது அவனுடைய தனி வியாபாரம். இன்று இங்கு ஒரு கடை, குருநாகலில் இரண்டு கடைகள், கொழும்பில் பீடிபக்டரி, கிளிநொச்சியில் வெள்ளாண்மைப் பூமி, ஐந்து லொறிகள் என்று செல்வம் பொங்கி வழிகின்றது. “புளியுருண்டை” வியாபாரமும் உண்டு என்று பேசிக் கொள்கிறார்கள். காகம் குந்தியே மாடு சாகப் போகுது? சென்ற ஆண்டு அவருக்கே ஜே.பி. பட்டமும் கிடைத்திருக்கிறது!

“ஓமெணை, அவர் யாவார விஷயமாத்தான் கொழும்புக்குப் போயிருக்கிறார். என்னதான் அள்ளிக் குவிச்சாலும் வீட்டுச் சோறுக்கும் தண்ணிக்கும் பொசிப்பில்லை. அந்தரிச்சை சீவியமெணை..”

“பூரணம் உண்மையிலை சீதேவிதான். இல்லாட்டில் என்னைக் கட்டிக் கொண்டுதானே கஷ்டப்பட்டிருப்பாள்? அவளுக்கு நாலும் கடுவன்கள். ஆசைக்குக் கூட ஒரு பெட்டையில்லை. அவளுக்கு எல்லாம் பெண்களாகப் பிறந்திருந்தாலும் கவலைய்யில்லை. தெறிச்சிப் பார்த்து நல்ல மாப்பிள்ளை எடுக்கிறதுக்கு வேண்டிய காசு இருக்கு. எனக்கு எல்லாம் பொடியன்களாகப் பிறந்தாலும் என்ன புண்ணியம்? சீனியரோடை நில், என்னைப் போலக் கிளாக்கராகு என்றுதானே சொல்லியிருப்பன்? இந்த வீடும் வளவும்! காடலைந்த முயலாட்டம் இந்த வளையை நாடி வநிதருக்கிறேன். சரஸ்வதி கொண்டு வந்ததுகள் சில ஈட்டிலை கிடக்கு. அதுகளை மீட்டாலும் கோமணத் துண்டளவிலை ஒரு வளவும், பேரளவுக்கு ஒரு வீடும் கட்டிக் குடுக்கத்தான் தேறும்…

பத்து வருஷ சேர்விஸோட ஸ்பெஷல் கிரேடிற்குப் போகேக்கிள்ளை எல்லாத்தையும் வெட்டிப் புளக்கலாம் எண்டுதான் நினைச்சன். நான் கிளறிக்கல் சேர்விஸிலை சேர்ந்து கொட்டப்பெட்டிச் சம்பளத்தோடை சமாளித்தது போலேதான் நடக்குது. சரசுவுக்கு என்ன தெரியும்? பிள்ளையளுக்கு என்ன விளங்கப் போகுது? பாவம், அதுகளும் ஏதோ அந்தஸ்தைப் பற்றிப் பெரிசா நினைச்சுக் கொண்டிருக்குதுகள்…”

காதலின் மெல்லிய உணர்ச்சிகள் என்ற பழைய நினைவுகளை அசைபோட்ட சந்திரசேகரத்தார் புத்திபூர்வமான லோகாயுத விசாரணையில் இறங்கி மனத்தைப் புண்ணாக்கி அப்படியே தூங்கி விட்டார்.

விழித்த பொழுது, வள்ளிசாக ஒரு மணி நேரமாவது தாம் தூங்கி விட்டதை அவர் உணர்ந்தார். கை கால்களை அலம்பிக் கொண்டு தேநீர் குடிக்க வந்தமர்ந்தார். சரஸ்வதி ராசவெள்ளிக்கிழங்கைக் கொடுத்தாள். “யார் தந்தது?” என்று கேட்காமலேயே சாப்பிடத் தொடங்கினார்.

“பூரணத்தின் சுபாவத்தைப் போலவே கிழங்கும் இனிக்கிறது”

“கேட்டியளேய்யா… இண்டைக்கும் நாளைக்கும் உலை வைக்கக் கூடாதாம். நாளையண்டைக்குத்தான் நல்ல நாளாம்…”

“கொழும்பிலை இருந்த உமக்குமெணை உந்தப் பஞ்சாங்களங்களைப் பாக்க நல்லாத் தெரியுது போல…”

“பூரணக்காதான் சொன்னா. இண்டைக்கும் நாளைக்கும் தானே சமைச்சு அனுப்பப் போறது எண்டும் சொன்னாவு. நான் வேண்டாமெண்டு சொல்லவும் அவ கேக்கிறாவு இல்லை…”

“ஓமணை உனக்கும் இஞ்சை துடைச்சுக் கழுவத்தானே ரெண்டு நாளும் சரியாப் போகும்”

“பூரணமக்கா தங்கமான மனுஷி.. பொடியளும் அப்பிடித்தான்”

“நான் கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளுறத்துக்குள்ளை நீர் ஊருலகமெல்லாம் அறிஞ்சிட்டீர்” என்று சிரித்தபடி தேநீரைக் குடித்து முடித்தார்.

“நான் ஒருக்கா வேலி அடைக்கிற நாகப்பனைப் பார்த்திட்டு வாறன்”

பூரணம் முற்றத்தில் நின்று சிரிக்கிறாள். அவரும் பதிலுக்குச் சிரித்தார்.

“மனசார இவள் ஒரு மனுஷியுந்தான், ஒரு வடிவுந்தான்”

நாகப்பனும் சின்னவனும் வேலியடைக்கிறார்கள். கொல்லை வேலி சின்னன். விடியற்புறம் வந்தவர்கள் அதனை அடைத்து முடித்த பிறகுதான் சாப்பாட்டைப் பார்த்தார்கள்.

வெயில் ஏறத் தொடங்கியது. பூரணத்தின் வளவுப் பக்கத்து வேலி பிரிக்கப்பட்டது. அடைப்பு வேலை ஆரம்பமாகியது. சந்திரசேகரத்தார் கூட மாட நின்று வேலை செய்கிறார். “கட்டுக்கோத்துக்” கொடுக்கக் கூட ஓர் ஆண் பிள்ளை இல்லையே.

சோட்டைக்குப் பிறந்த பொடியன் பூரணத்தின் இடுப்பிலே குந்தியிருக்கிறான்.

“நடுவாலை ஒரு பொட்டு வைச்சு அடையுங்கோ. புள்ளை குட்டியள் போய் வரட்டும்” என்று பூரணம் சொல்லுகிறாள்.

அந்தப் பொட்டினை அடைத்து தன் மகனின் வாழ்வைக் காப்பாற்றுவதாக சாம்பசிவத்தார் நினைத்தார்.

பொட்டுகள் உறவுக்கான வாசல்கள். உறவுகளே… அன்று பூரணத்தின் அழகிலே அவர் மனம் அலைந்தது. இன்று – அவளுடைய ஆளுமையிலே ஒரு கனவும் சுகமும் இருப்பதை உணர்கிறார். அந்தச் சுகத்தில் நெஞ்சிலை தைத்துச் சீழ் வைத்து விட்ட சிறாம்பை சந்திரசேகரத்தார் மெதுவாக இழுக்கிறார்.

இருபது வருடங்களுக்குப் பின்னர் “பொட்டு” ஒன்று விடப்பட்டு வேலி அடைக்கப்படுகின்றது.

***

நன்றி: ஆபிதீன் பக்கங்கள் http://abedheen.wordpress.com/2013/02/05/sponnuthurai1/

Friday, December 6, 2013

பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவங்கள்..!

இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினை…இப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு ‘விதி’யை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?

“Creativity is not a talent. It is a way of operating.”

“Creativity is not a talent. It is a way of operating.”
Much has been said about how creativity works, its secrets, its origins, and what we can do to optimize ourselves for it. In this excerpt from his fantastic 1991 lecture, John Cleese offers a recipe for creativity, delivered with his signature blend of cultural insight and comedic genius. Specifically, Cleese outlines “the 5 factors that you can arrange to make your lives more creative”:
  1. Space (“You can’t become playful, and therefore creative, if you’re under your usual pressures.”)
  2. Time (“It’s not enough to create space; you have to create your space for a specific period of time.”)
  3. Time (“Giving your mind as long as possible to come up with something original,” and learning to tolerate thediscomfort of pondering time and indecision.)
  4. Confidence (“Nothing will stop you being creative so effectively as the fear of making a mistake.”)
  5. Humor (“The main evolutionary significance of humoris that it gets us from the closed mode to the open mode quicker than anything else.”)
The lecture is worth a watch in its entirety, below, if only to get a full grasp of Cleese’s model for creativity as the interplay of two modes of operating — open, where we take a wide-angle, abstract view of the problem and allow the mind to ponder possible solutions, and closed, where we zoom in on implementing a specific solution with narrow precision. Along the way, Cleese explores the traps and travails of the two modes and of letting their osmosis get out of balance.
A few more quotable nuggets of insight excerpted below the video.
Creativity is not a talent. It is a way of operating.
We need to be in the open mode when pondering a problem — but! — once we come up with a solution, we must then switch to the closed mode to implement it. Because once we’ve made a decision, we are efficient only if we go through with it decisively, undistracted by doubts about its correctness.
Cleese goes on to caution against a trap in this duality, one particularly hazardous in politics:
To be at our most efficient, we need to be able to switch backwards and forward between the two modes. But — here’s the problem — we too often get stuck in the closed mode. Under the pressures which are all too familiar to us, we tend to maintain tunnel vision at times when we really need to step back and contemplate the wider view.
This is particularly true, for example, of politicians. The main complaint about them from their nonpolitical colleagues is that they’ve become so addicted to the adrenaline that they get from reacting to events on an hour-by-hour basis that they almost completely lose the desire or the ability to ponder problems in the open mode.
Cleese concludes with a beautiful articulation of the premise and promise of his recipe for creativity:
This is the extraordinary thing about creativity: If just you keep your mind resting against the subject in a friendly but persistent way, sooner or later you will get a reward from your unconscious.
For a related treat, see Cleese’s reprise of the talk nearly two decades later at the 2009 Creativity World Forum.

Watch Bollywood hit action war patriotic movie - Zameen - 2003

Watch Bollywood hit action war patriotic movie - Zameen - 2003 produced by N.R. Pachisia & directed by Rohit Shetty. The movie stars Ajay Devgan, Abhishek Bachchan, Bipasha Basu, Mukesh Tiwari, Pankaj Dheer, Mohan Joshi, Amrita Arora & Eijaz Khan. Music composed by Himesh Reshammiya.
Islamic terrorists, backed by Pakistan, boldly attack the Indian Parliament building. The Indian army assigns this matter to Colonel Ranvir Singh Ranawat, who along with his men, apprehends and arrests the ring-leader Baba Zaheer Khan. The Colonel takes one of his subordinates, Jaideep Rai, to task as nine soldiers were killed due to his negligence, and asks him to resign. An Islamic terrorist group, Al-Tahit, recruits a group of men to try and spring Baba from prison, albeit in vain as their plans are thwarted by Jaideep, who is now the ACP in Mumbai. On the run from the Police, this group hijacks an Indian Airlines plane, en-route from Mumbai to Kathmandu, with Jaideep's wife, Nandini, an In-Flight Supervisor, on board. The plane, with 107 passengers and crew, is re-routed to Kazan in Pakistan Occupied Kashmir where they are met with more armed terrorists as well as the Pakistani army. Together they demand the release of Baba Zaheer in exchange for the lives of the passengers. The Army and Police in India collaborate and both Ranvir and Jaideep are asked to work together. Ranvir is weary of Jaideep's capabilities, and Jaideep is investigating Ranvir and his men - who are suspected of supplying arms and munitions to terrorists and Pakistanis. The duo nevertheless work out a plan to free the hostages and apprehend the terrorists. What they do not know is that their plan has already been compromised, and they may well be headed to their respective deaths.

Synopsis: Ajay Devgan, Abhishek Bachchan and Bipasha Basu starrer 'Zameen' is a patriotic film that attempts to realistically portray the problem of terrorism that is widespread in India. It also showcases how duty is of prime importance to the Indian soldiers who keep aside their strained personal equations to work jointly for the country.

ஜாதகமும் பெண்களின் குணமும்


ஜோதிடம் பார்க்க செல்பவர்கள் திருமண பொருத்தம் பார்த்துவிட்டு கேட்கும் கேள்வி, பொண்ணு ஒழுக்கம் எப்படி..? என்பது தான்


சிலர் இந்த பதிவை படித்துவிட்டு,பெண் கற்பு பத்தி ஆராய்ச்சியா..ஜோசியம் இதுல எங்க வருது?கற்புன்னு ஒண்ணு இருக்கான்னு, ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு என்பது ஒழுக்கம் தான்.கற்பில்லாத ஒழுக்கமில்லாத பெண்ணை எவனும் எந்த பெண்ணும் விரும்புவதில்லை. அதனால் கற்பு என்னும் ஒழுக்கம் ஜோதிடத்தில் மிக முக்கிய இடம் பெற்று இருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் தமிழ் கலாச்சாரத்தை மேலை நாடுகளும் இப்போது பின்பற்ற தொடங்கி உள்ளன..ஆனால் சில கழிசடைகள் சுதந்திரம் என்ற பெயரில் இந்த கட்டுபாட்டை உடைக்கவே விரும்புகின்றன..காரணம் தனித்து பணம் சம்பாதிப்பது. பகுத்தறிவு என்ற பெயரில் என் இஷ்டப்படி நடப்பேன்.அதை கேட்க நீ யார்..?என்கிறார்கள்.கற்பு பத்தி உன் உறவினரிடம் ஆராய்ச்சி செய் என்கிறான் ஒருவன்.உன் உறவினர் என் உறவினர் எல்லோருக்கும் கற்பு ,ஒழுக்கம் உள்ளது.

பெண்ணின் ஜாதகம் பார்த்ததும்,அதன் ஒழுக்கம்,கற்பு எல்லாம் பட்டவர்த்தனமாய் தெரிந்துவிடும்.அவள் ஆசை எப்படி?கணவனுக்கு சுகம் உண்டா?அல்லது கணவனை தொந்தரவு செய்து போதாமல் அடுத்த ஆண்களையும் கவர் செய்யக்கூடிய பெண்ணா என்பது சில கிரக அமைப்புகளை பார்த்ததும் தெரிந்து கொள்ளலாம்.அப்படி உண்மைகளை தெரிய ஆரம்பித்தால் பெரும்பாலான கல்யாணம் நடக்காது.

அவரவர் விதிப்படிதான் மனைவி அமையும்.ஒழுக்கமான மனைவி அமையும் யோகம் இருந்தால் அவனுக்கு சீதை போல மனைவி அமைவாள். அலட்சியமாக ஜாதக பொருத்தம் பார்க்காமல் வேலை,பணம்,வசதி பார்த்து திருமணம் செய்தால், அந்த உணர்வு அதிகம் உள்ள பெண்ணை திருமணம் செய்தோ அல்லது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுத்தும் பெண்ணாகவோ ,கணவ்னை எடுத்தெறிந்து பேசும் பெண்ணோ மனைவியாக அமைய வாய்ப்புண்டு.

செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிக கோபம் நிறைந்தவர்களாக இருப்பர்.உதாரணம் சித்திரை,மிருகசிரீடம்,அவிட்டம்

ராகு நட்சத்திரம்,கேது நட்சத்திர பெண்கள் பிடிவாதம் நிறைந்தவர்கள்;உதாரணம்;மகம்,திருவாதிரை,சுவாதி,சதயம்,மூலம்

சனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்.உற்சாகம் இன்றி குடும்பத்தாரோடு சந்தோசம் இல்லாமல் கூட்டு குடும்பத்தில் ஒன்றி வாழாமல் ,சோகமாக இருப்பர் உதாரணம் ;பூசம்,அனுஷம்

ஆண்களிடம் நெருங்கி பழகி கெட்ட பெயர் வாங்கக்கூடிய,சாதர்ணமாக மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் பழகினாலும் கெட்ட பெயர் வருகிறது.சுக்கிர நட்சத்திரங்களாகிய பூராடம்,பரணி

மேற்க்கண்ட நட்சத்திர பெண்களுக்கு திருமணத்திற்கு முன்னர் ஆண்களால் பல சோதனைகள் வரும்.அதை தெய்வ துணையால் சமாளித்து வந்தால் நல்ல குடும்ப வாழ்வு அமையும்.

பெண்ணின் குண அமைப்பு

இப்படி நற்குணங்கள் யாருக்கு அமையும் என பார்க்கும்போது ஜென்ம லக்னத்தில் சுபக்கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைசந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபக்கிரகங்கள் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் நல்ல அறிவாற்றல், அழகான உடலமைப்பு, சிறந்த குண நலன்கள் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

அதுவே பாவக்கிரகங்ள் லக்னாதிபதியாக இருக்கும் பட்சத்தில் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கோபக்காரியாக இருந்தாலும் நல்ல குணவதியாக இருப்பாள். சனி, ராகு போன்ற பாவக் கிரகங்கள் லக்னத்தில் பகை பெற்று அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் மிகுந்த கோபக்காரியாகவும், மற்றவர்களை அனுசரிக்கத் தெரியாதவளாகவும், அழகிற்குறைந்தவளாகவும் இருப்பாள்.

பெண்ணின் ஒழுக்கம்

பெண்களின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் 4ம் பாவமும், சந்திரனுக்கு 4ம் பாவமும் சாதகமாக அமையப் பெற்றால், அப்பெண் நல்ல குண நலன்களும், ஒழுக்கமும் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பண்பும் கொண்டவளாக திகழ்வாள்.

குறிப்பாக சுபகிரகமான குருபகவான் ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவத்தையும், சந்திரனுக்கு 4ம் பாவத்தையும் பார்வை செய்து, 4 ம் அதிபதியையும் பார்வை செய்வது மிகவும் சிறப்பாகும். இப்படிப்பட்ட அமைப்பு ஏற்பட்டால் பண்புள்ள பெண்ணாகவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமானவளாகவும் விளங்குவாள்.

ஜென்ம லக்னத்திற்கு 4 ம் வீட்டிலும், சந்திரனுக்கு 4ம் வீட்டிலும் சுபகிரகங்கள் அமைவது மிகச்சிறப்பு.

நவகிரகங்களில் சுபகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்களும் மற்றும் சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்ற புதனும் அமையப் பெற்றால், பண்புள்ள பெண்ணாகவும் நல்ல குணவதியாகவும் இருப்பாள்.

4ம் வீட்டில் குரு பகவான் அமையப் பெற்றால் தெய்வீக எண்ணம், மற்றவர்களை வழி நடத்தும் வல்லமை இருக்கும்.

சுக்கிரன் அமையப் பெற்றால் அழகான உடலமைப்பு, மற்றவர்களை வசீகரிக்கும் அழகு அமையும். இல்லற சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

புதன் அமையப் பெற்றால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், நல்ல பண்பு, அழகான உடலமைப்பு, குடும்பத்தை பாங்காக நடத்திச் செல்லும் நற்குணம் போன்ற யாவும் உண்டாகும்.
வளர்பிறை சந்திரன் அமையப் பெற்றால் பிறரை வசீகரிக்கும் அழகான உடலமைப்பு, கவர்ச்சி சிறந் நற்குணங்களை உடைய பெண்ணாக விளங்குவாள்.

4ம் இடம் கற்பு ஸ்தானம் என்பதால், பாவக்கிரகங்கள் அமையாமல் இருப்பது நல்லது. 4ம் இடமே பாவக் கிரகத்தின் வீடாக இருந்தால் அக்கிரகம் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமைவதால் கெடுதிகள் ஏற்படாது.

நவகிரகங்களில் சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன், ராகு, கேது, சனி போன்ற பாவக்கிரகங்கள் 4ல் அமைவதோ, 4ம் வீட்டைப் பார்வை செய்வதோ, 4ம் அதிபதி மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்று அமைவதோ அவ்வளவு சிறப்பில்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் அதாவது 2,3 பவகிரகங்கள் கற்பு ஸ்தானமான 4ல் அமைவது, அவ்வளவு சிறப்பல்ல. இதனால் ஜாதகிக்கு தேவையற்ற நட்புகள் சேரும் அமைப்பும், அவப்பெயர், மற்றவர்கள் பழி சொல் கூறும் சூழ்நிலையும் உண்டாகும்

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட தீய கிரகங்கள் இருந்து, நான்காம் அதிபதியும் பகை வீட்டில் இருந்தால் ஜாதகி ஒழுக்கம் தவறி பல ஆடவர்களைக் கூடி மகிழ்பவளாக இருப்பாள். 

வாழ்க்கைத் துணை அமைவது - கவர்ச்சியாகவா? முதிர்ச்சியாகவா?


7ம் வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால் நற்பலனும் பாவ கிரகங்கள் இருந்தால் கொடுபலனும் அடையநேரிடும். 7ம் வீட்டில் குரு சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் வலுவாக அமையப் பெற்றால் அவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணையானது பொன் போன்ற நிறம் கொண்டவராக இருப்பார்.

புதன் அமையப் பெற்றால் வரக்கூடிய வாழ்க்கை துணையானது மாநிறமாக இருப்பார். அதுவே சனி ராகு அமையப் பெற்றால் கறுப்பு நிறமாக இருப்பார்கள். அதுபோல 7ம் வீட்டிலிருக்கும் கிரகங்களை கொண்டு வரக்கூடிய வாழ்க்கை துணையின் சுபாவத்தையும் வெளித் தோற்றத்தையும் அறியலாம்.

7ல் சூரியன் அமையப் பெற்றால் மணவாழ்வில் ஒற்றுமைக் குறைவு உண்டாகிறது. அதுமட்டுமின்றி மூன்றாவது நபரின் தொடர்பு உண்டாகிறது. 7ம் வீட்டில் சந்திரன் புதன் அமையப்பெற்றால் இளமையான வாழ்க்கைத் துணை உண்டாகும். 7ல் சுக்கிரன் அல்லது செவ்வாய் அமையப் பெற்றால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய இளவயது வாழ்க்கைத் துணை அமையும். 7ல் குரு அமையப் பெற்றால் நல்ல குண நலம், அறிவாற்றல், கவர்ச்சியான உடலமைப்பு கொண்டவர் வாழ்க்கை துணைவராக அமைவார். அதுவே சனி ராகு அமையப் பெற்றால் முதுமையான தோற்றம் கொண்டவர் வாழ்க்கை துணையாக அமைவார். அதுபோல 7ல் அமையக் கூடிய கிரகங்களைக் கொண்டு கூட ஒருவருக்கு அமையக் கூடிய வாழ்க்கை துணையில் இயல்பினைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

7ம் வீட்டில் சூரியன் செவ்வாய், புதன், குரு போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால் நல்ல அழுகான நற்பண்புகளை கொண்ட வாழ்க்கைத் துணை அமையும். அதுபோல சுக்கிரன் சந்திரன் அமைந்தாலும் நல்ல பண்புள்ள வாழ்க்கை துணை அமையும். சனி ராகு அமையப் பெற்றால் மணவாழ்க்கை திருப்திகரமாக இருக்காது. குறை உள்ளவர் வாழ்க்கைத் துணையாக வரும் வாய்ப்புஉண்டாகும்.

சுக்கிரன் 7ம் வீட்டில் வலுவாக ஒரு ஆண் ஜாததகத்தில் அமையப் பெற்றால் பல பெண்களை அனுபவிக்கக் கூடிய யோகம் உண்டாகும். குரு பலமாக அமையப் பெற்றால் நல்ல மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை ஏற்படும். சனி செவ்வாய் இணைந்து 7ம் வீட்டில் அமையப் பெற்றால் வரக்கூடிய மனைவிக்கு ஒரு நிலையான மனநிலை இருக்காது. அதுமட்டுமின்றி ஆரோக்கிய பாதிப்பு, வயிறு கோளாறு, உடலில் தழும்புகள் இருக்கும்.

7ல் சந்திரன் செவ்வாய் அமைந்து சனி பார்த்தால் மனைவிக்கு வயிறு கோளாறு ஏற்பட்டு கடுமையான பாதிப்பு உண்டாகும்.

பொதுவாக 7ல் அமையக் கூடிய கிரகங்களை பொருத்துதான் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுமா? கசப்பான சம்பவங்கள் நடைபெறுமா? என்பதைப் பற்றி அறியலாம்.

7ம் வீட்டில் சுப கிரகங்கள் அமையப் பெற்றால் அவர்களுடய ஆசைகள் அபிலாஷைகள் திருப்திகரமாக நிறைவேறும். பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்று தெரியாமல் சில செயல்களை செய்து சில கசப்பான அனுபவங்களை அடைவார்கள். 7ம் வீட்டில் புதன் போன்ற கிரகங்கள் பலஹீனமாக அமையப் பெற்றால் இல்லற வாழ்வில் திருப்திகரமான நிலை இருக்காது. 7ம் வீட்டில் ராகு பகவான் இருந்து சுபர்பார்வையின்றி இருந்தால் மண வாழ்க்கையே அமையாது. அப்படி அமைந்தாலும் குறுகிய காலத்தில் இழக்க நேரிடும்.

பொதுவாக 7ம் வீட்டில் சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் 7ம் அதிபதி தேய்பிறை சந்திரன் சேர்க்கை பெற்றால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்ட ஒரு நபரை வாழ்க்கைத் துணையாக அடையும் வாய்ப்பு உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 1, 7, 12ல் பாவிகள் அமையப் பெற்று 5ல் தேய்பிறை சந்திரன் அமையப் பெற்றால் மணவாழ்க்கை அமைவது கேள்விக்குறியாகி விடும். அதுபோல சூரியன் 1, 6, 12ல் இருந்தால் ஏக தாரம்தான் செவ்வாய் சுக்கிரன் இணைந்து 5, 7, 9ல் இருந்தாலும் ஏகதாரம்தான்.

ஒருவர் ஜாதகத்தில் சனி செவ்வாய் ராகு இணைந்து 6, 7, 8ல் இருந்தால் எத்தனை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை நன்றாக இருக்காது.

American Holocaust of Native American Indians (FULL Documentary)


This documentary is quite possibly the only film that reveals the link between the Nazi Holocaust and the Holocaust that took place in the Americas, which is reported to have claimed anywhere between 20 (conservative estimates) and 100 million indigenous people.

It has been documented that Hitler studied America’s treatment of and policy inflicted on the Native American population, using it as a model for the Final Solution”. Though not mentioned in the film, it has also been reported that members of the National Party government in South Africa studied the American approach before introducing their system of racial apartheid, which lasted from 1948 to 1994.

This film would have provided a much more detailed look into this subject matter had it been completed. The film’s director, Joanelle Romero, says she’s been turned down by all sources of funding since she began the film project in 1995. In any event, Romero produced a shortened, 29-minute version of the film in 2001, in hopes of attracting new funders willing to contribute towards completing the film. Eight years later (2009), Romero was still seeking additional funding for the project.


THANKS http://thearcanefront.com

These are pencil sketches by Russian artist Olga Melamory!

நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். (Nelson Mandela who completed his life's journey at the age of 95.)

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 வயதில் சற்று முன்னர் காலமானார். இந்த அற்புதமான கறுப்பின மக்களின் விடுதலைப்போராளிக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

-- @[501293243228925:274:ஆசிரியர் பக்கம்] --
மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர்.

மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 1941 ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரி யாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.

அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.

5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958.ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகள்.

தென்ஆப்பிரிக்க (கறுப்பர் இன) தலைவர் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்தபின் விடுதலை செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.

கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்” என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார்.

அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.

தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ம் ஆண்டு ஜுன் 12 ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.

பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.

மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட் டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

“மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.

மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச் சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மண்டேலா விடுதலையானதும், பிரதமர் வி.பி.சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மண்டேலா விடுதலையான சிறிது நேரத்தில் அவரிடம் பிரதமர் வி.பி.சிங் எழுதிய பாராட்டுக் கடிதம் கொடுக்கப் பட்டது. “உங்களது சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வி.பி.சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

“இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.

நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை.1994 மே 10 ந் தேதி அவர் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.

அவர் அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
மண்டேலா கடந்து வந்த பாதை...

தென் ஆப்பிரிக்காவின் (Qusu) கிராமத்தில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் இயற்பெயர் ரோலிஹ்லாலா. 9 வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட மண்டேலா, தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து கொண்டே தொலைதூரக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஜோகன்னஸ்பர்க் சென்று சட்டம் பயின்ற மண்டேலா, பின்னர் (African Legal Partnership) என்ற அமைப்பை நிறுவினார்.

ஆப்ரிக்க காங்கிரசில் மண்டேலா

1942-ல் ஆப்ரிக்க தேசிய காங்கிரசில் சேர்ந்த மண்டேலா, 1950-ல் அதன் இளைஞர் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். பின்னர், 1952-ல் அக்கட்சியின் துணைத் தலைவராக தேர்வானார். கறுப்பர், இந்தியர் உள்ளிட்டோரின் சுதந்திரத்திற்காக பிரச்சாரம் செய்த மண்டேலா, அதே ஆண்டின் இறுதியில் கைது செய்யப்பட்டார். முதன் முறையாக மண்டேலா அனுபவித்த சிறைவாசம்தான் அவரது எதிர்காலத்தை செதுக்கியது என கூறலாம். இனவெறிக்கு எதிராகவும், சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

27 ஆண்டுகள் சிறைவாசம்

1960ம் ஆண்டு கறுப்பர்கள் மீது தென் ஆப்ரிக்க அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட, நெல்சன் மண்டேலா ஆயுதம் தூக்கவும் தயங்கவில்லை. அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதாக 1962-ல் கைது செய்யப்பட்ட மண்டேலா 5 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். பின்னர், சதிக் குற்றச்சாட்டின் கீழ் 1964ம் ஆண்டு அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க அதிபராக

மக்களின் தொடர் போராட்டத்துடன் உலக நாடுகள் கொடுத்த அழுத்தமும் சேர்ந்து கொள்ள 1990ம் ஆண்டு நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவித்தது தென் ஆப்பிரிக்க அரசு. மண்டேலாவின் அறவழிப் போராட்டத்தால் தென் ஆப்ரிக்கா, ரத்தம் சிந்தாமல் அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய மக்களாட்சி நாடாக மலர்ந்தது. அதன் முதல் அதிபராக 1994-ம் ஆண்டு மண்டேலா தேர்வு செய்யப்பட்டார்.

முன்னுதாரணமாக வாழ்ந்த தலைவர்

தென் ஆப்ரிக்காவில் இனவெறி ஒழிந்து மக்களாட்சி மலர அயராது பாடுபட்ட நெல்சன் மண்டேலாவுக்கு 1993ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவின் முதல் அதிபராக சிறப்பாக பணியாற்றிய மண்டேலா, 5 ஆண்டுகளுக்குப் பின் பதவியை துணை அதிபர் (Thabo Mbeki)யிடம் ஒப்படைத்து, பிற தலைவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். பதவி விலகினாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிய மண்டேலா உலகம் முழுவதும் போற்றுதலுக்குரிய ஒரு தலைவராக, தென் ஆப்ரிக்காவின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தனது 95 வயதில் சற்று முன்னர் காலமானார். இந்த அற்புதமான கறுப்பின மக்களின் விடுதலைப்போராளிக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

If anyone has inspired me in life that is no one but Nelson Mandela who completed his life's journey at the age of 95.

I read his autobiography, The Long Walk to Freedom, with fascination and awe. I was questioning myself how can a man who had been beaten by the system be so magnanimous in victory? But that was him. He was responsible for dismantling the Apartheid rule of the White Supremacists, creating a multi-racial democracy and establishing the Rule of Law in his country. When Winnie Mandela, his wife and freedom fighter whilst he was languishing in jail, was charged with the murder of a youth, the laws of the country were applied to her without favour, an act which can be compared only to what King Elara, a Chola King in ancient Lanka in the 2nd century BCE, did to his Son who was accused of killing a calf by driving a chariot recklessly on the streets of the city of Anuradhapura. He stepped down as the President of South Africa after serving just one term and became a world peace maker, a bigger role in the international arena that can never be thought of for a third world country leader.
The people of Johannesburg today are not mourning his death, but celebrating his life which cannot be compared to anyone who is living or dead.
May I wish that his life be the guiding light to many of the youngsters in SL today who are disillusioned about their role and destiny in life!

Weerakoon Wijewardena

Thursday, December 5, 2013

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறார் தமிழர் ஒருவர் !!

வான்வெளியையும் வெல்வதற்கு மனித இனம் வழி சமைத்திருந்தாலும் புற்றுநோயை இன்னமும் வெல்லவில்லை. புற்றுநோயைக் குணமாக்கும் வழியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும், மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது.

ஒரு புதிய அணுகுமுறையால், புற்று நோயைக் குணமாக்கும் வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டு, தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை சேர்க்கிறார், மேற்கு ஆஸ்திரேலிய கேர்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன். அவரது கண்டுபிடிப்புப் பற்றி, பேராசிரியர் அருண் தர்மராஜன் அவர்களுடன் நேர்கண்டு உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.

செவிமடுக்க
  • Duration10 Mins
  • Download4.6 MB
Photo: புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறார் தமிழர் ஒருவர் !!

வான்வெளியையும் வெல்வதற்கு மனித இனம் வழி சமைத்திருந்தாலும் புற்றுநோயை இன்னமும் வெல்லவில்லை. புற்றுநோயைக் குணமாக்கும் வழியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும், மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது.

ஒரு புதிய அணுகுமுறையால், புற்று நோயைக் குணமாக்கும் வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டு, தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை சேர்க்கிறார், மேற்கு ஆஸ்திரேலிய கேர்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன். அவரது கண்டுபிடிப்புப் பற்றி, பேராசிரியர் அருண் தர்மராஜன் அவர்களுடன் நேர்கண்டு உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன்.