Search This Blog

Monday, May 2, 2011

நாம் வாழும் உலகம்

பச்சை வயல்வெளி, நீலவானம், மஞ்சள் வெயில் மாலை, வெண்ணிற அலைதவழும் கடற்கரை, மணம்வீசும் மலர்கள் பூத்துக்குலுங்கும் சோலைகள், மேகம் முட்டும் மலை முகடுகள், சில்லென்ற பனிக்காற்று, தலை நனைக்கும் மழைத்துளிகள், குதித்தோடும் அருவிகள், இரவு நேர விண்மீன்கள்...நம்மை சூழ்ந்து நிற்கும் இயற்கையழகை சொல்லிக்கொண்டே போகலாம். நினைக்கும்போதே மனதிற்குள் புத்துணர்ச்சி ஏற்படும் இந்த இயற்கை வனப்புகளை ரசித்து மகிழ நமக்குத்தான் நேரமில்லாமல் போய்விட்டது. அன்றாட வாழ்க்கை ஓட அதிகாலை விழித்து அலுவலகத்துக்கு செல்வதற்கு தயாராகி, போக்குவரத்து நெரிசலில் மீண்டு களைப்போடு அலுவலகம் சென்று அன்றைய பணிகளை முடித்து மீண்டும் ஒருவழியாக களைப்போடு வீடு திரும்பும் நமக்கு எங்கே இயற்கையழகை ரசிக்க வாய்ப்புள்ளது என்பது நம்மில் பலரது கேள்வியாக இருக்கும். ஆனாலும் நமக்குள் இயற்கையின் கவின்மிகு காட்சிகளை கண்டுகளிக்கும் ஆவல் இருப்பதை மறுக்கமுடியாது. நான் கிராமத்தில்தான் வாழ்கிறேன், வாழ்கையே இயற்கையோடுதான் என்பவர்கள் கூட கடற்கரையில் அலையில் கால்நனைக்கவோ, கடலலையை எதிர்த்து நீந்தி மகிழவோ ஆசைப்படாமல் இருக்கமுடியாது. நகரமோ, கிராமமோ, கடலோரப்பகுதியோ நாம் வசிக்கும் இடம் எதுவாக இருந்தாலும், இயற்கையழகை ரசித்து மகிழும் ஆவல் நம் அனைவருக்கும் உண்டு என்பது உண்மை.

எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்று கேட்கும் அன்பர்களுக்கு இனி நான் சொல்லப்போகும் தகவல்கள் விடையளிக்கக்கூடும். நாம் வாழும் உலகம் அழகானது. அழகான இந்த உலகத்தை பற்றிய சில தகவல்கள் இப்போது உங்களுக்காக:

*பூமி வளமிழந்து வருகிறது. முன்பு போல் விவசாயம் பலன் தருவதில்லை என்பவர்களுக்கு ஒரு தகவல். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கடந்த ஆண்டும் 200 கோடி டன்னுக்கு மேலான தானியங்களை உலகம் உற்பத்தி செய்துள்ளது. இது வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதும் செய்யப்படாத உற்பத்தியளவாகும். அதேவேளை கடந்த 2004ம் ஆண்டில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஏற்றுமதி 1590 கோடி அமெரிக்க டாலாராக பதிவானது. 1961ம் ஆண்டில் ஒரு ஹெக்டேருக்கு 0.49 கிலொவாக இருந்த பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு 2004ம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2 கிலோவாக உயர்ந்துள்ளது. அதாவது 4 மடங்காகியுள்ளது.

*அதேவேளை மீன்பிடித் தொழிலின் மொத்த உற்பத்தி அல்லது மொத்த மீன் பிடியளவு 1997ம் ஆண்டு முதல் 13 விடுக்காடு குறைந்துள்ளது, என்றாலும் மொத்த மீன் உற்பத்தி மீன்பண்ணை தொழில்துறையின் வேகமான வளர்ச்சியால் 2003ம் ஆண்டில் 132.5 மில்லியன் டன்னாக பதிவாகியுள்ளது.

*அலுமினியம் உற்பத்தியும் 31.2 மில்லியன் டன் என்ற புதிய உச்ச அளவை எட்டியது. எஃகு உற்பத்தி 1129 மில்லியன் டன்னாக புதிய சாதனை படைத்தது.

விவசாயம் சரியில்லை, நகரத்துக்கு சென்றால் ஏதாவது வேலை தேடி பிழைப்பு நடத்தலாம் என்ற எண்ணம் பல ஆண்டுகளாக மக்களிடையில் உள்ளது. வளரும் நாடுகள் பலவற்றில் இந்த எண்ணம் பரவலாக காணப்படுகிறது. வசதி, வாய்ப்புகள் அதிகம் என்பதால் மாநகரங்களுக்கு வேலை தேடி செல்லும் வழமை வளர்ச்சியடைந்த நாடுகளிலும் உள்ளது. இந்த எண்ணம் நகரமயமாக்கல் எனும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, நகரங்களில் அடிப்படை வசதிகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இல்லாத வசிப்பிடங்களில் பெரும்பகுதி மக்கள் வாழும் நிலை ஏற்படுகிறது. நகரங்கள், மாநகரங்களில் விண்ணுயர்ந்த கோபுரங்களுக்கு கீழே குடிசைப்பகுதிகள் நெருக்கமாக அமைந்துள்ள நிலைக்கு இந்த நகரமயமாக்கல் என்பதே காரணம். *ஒரு புள்ளி விபரத்தின்படி 100 கோடி மக்கள் அல்லது 3ல் ஒரு நகரவாசி இத்தகைய குடிசைப்பகுதியில் வாழ்பவர். 2002ம் ஆண்டின் நிலைப்படி 110 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதியில்லா நிலையில் வாழ்கின்றனர், 260 கோடி மக்கள் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளற்றவர்களாக உள்ளனர்.

*மறுபுறத்தில் வாகன தயாரிப்பில் புதிய உச்ச அளவாக கடந்த 2005ம் ஆண்டில் 64.1 மில்லியன் கார்களும், இலகு ரக சரக்கேற்றி வாகனங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

*வான் போக்குவரத்து அல்லது விமான போக்குவரத்தும் 2004ம் ஆண்டில் புதிய சாதனை அளவாக மொத்தத்தில் 190 கோடி மக்கள், 34000 கோடி கிமீ தூர பயணம் மேற்கொண்டதாக பதிவாகியது. ஆனாலும் உலகின் 5 விழுக்காட்டு மக்கள் மட்டுமே தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது விமான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். ஆச்சரியாமாக உள்ளதா, ஆனால் அதுதான் உண்மை. அதாவது உலகின் 95 விழுக்காட்டினர் இதுவரை விமான பயணத்தை மேற்கொண்டதேயில்லை.

இத்தகைய சமமற்ற சமுதாயத்தில் வாழ்கிறோமா என்பதை நினைக்கையில் "பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே, நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் போய் வரலாம்" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

*நுகர்வு திறனின் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் கடந்த ஆண்டில் உச்ச நிலையாக, மொத்த உலக உற்பத்தியளவு 596000 கோடி அமெரிக்க டாலர் மதிப்பு என பதிவானது. இதை வாங்கினால் அது இலவசம், பளிச்சிடும் பற்களுக்கு இந்த வகை பற்பசையை பயன்படுத்துங்கள் என்று விளம்பரப்படுத்த தொழில் நிறுவங்கள் கடந்த ஆண்டில் செலவழித்து தொகை 2.4 விழுக்காடு அதிகரித்து 57000 கோடி அமெரிக்க டாலர் தொகையை எட்டியது. இதில் பாதியளவு விளம்பர செலவினம் அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

*மக்களின் சுகாதாரம் மற்றும் சமுதாய ரீதியிலான கண்ணோட்டத்தில், கடந்த ஆண்டில் உலக மக்கள் தொகையில் 7கோடியே 40 லட்சம் பேர் அதிகரித்து மொத்த உலக மக்கள் தொகை 645 கோடியானதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. 2005ம் ஆண்டில் மட்டும் 50 லட்சம் பேர் எச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர், 30லட்சம் பேர் எய்ட்ஸ் தொடர்பான நோய்களுக்கு பலியாகினர்.

ஆறுதலான செய்தி எதுவுமில்லையா என்றால், இருக்கிறது. இளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் 7 விழுக்காடு குறைந்துள்ளது. 1995 முதல் 2000ம் ஆண்டு வரையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 61.5 பேர் பலியான நிலை மாறி 2000 முதல் 2005 வரையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 57 பேர் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

*மொழி என்பது கலாச்சாரத்தின் ஆணிவேர் போன்றது. ஒரு மனிதனின் சிந்தனை, செயல்பாடு, தொடர்பு முறை எல்லாவற்றிலும் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இன்றைக்கு உலகின் 7000 மொழிகள் அழியக்குடிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை நாம் அறிவோமா. அவ்வளவு ஏன் ஏறக்குறைய 500 மொழிகள் விளிம்பில் இருக்கின்றதாக ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. அதாவது இத்தகைய மொழி என்ற ஒன்று இருந்தது என்று வரலாற்று பாடத்தில் பின்வரும் சந்ததியினர் படிக்கும் நிலைக்கு இந்த மொழிகள் தள்ளப்பட்டுள்ளன.

*எரிபொருள் எண்ணெய் பயன்பாடு கடந்த ஆண்டில் 1.3 விழுக்காடு அதிகரித்து 38000 கோடி டன்னாகியது. காற்று மண்டலத்திலான கரியமில வாயுவின் தீவிரம், பரும அளவு அல்லது கன அளவை பொறுத்தவரை 2004ம் ஆண்டில் அதிகபட்ச உயர்வாக 0.6 விழுக்காடு அதிகரித்து லட்சத்தில் 37.96 பகுதியாக உயர்ந்தது.

*2005ம் ஆண்டில் சராசரி உலக வெப்பநிலை 14.6 டிகிரி சென்டிகிரேட், பூமியின் பரப்பில் இதுவரையில் மிக அதிகமாக பதிவான வெப்பநிலை இதுவாகும்.அதாவது பூமியில் இதுவரையில் மிக அதிகபட்ச வெப்பமான ஆண்டாக 2005ம் ஆண்டு பதிவாகியுள்ளது. 1880ம் ஆண்டில் இந்த உலக வெப்பநிலை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டபின் இதுவரை 5 முறை பதிவான உயர்ந்த வெப்பநிலை ஆண்டுகள் எல்லாம் 1998க்கு பிறகே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய தகவலாகும்.

*பருவநிலை தொடர்பான இடர்பாடுகள், சீரழிவுகளால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் கடந்த ஆண்டில் மட்டும் 204 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் ஆகும். இதற்கு முன்பாக அதிகபட்சமான இழப்பாக பதிவான 112 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் என்ற 1998ம் ஆண்டின் இழப்பைக்காட்டிலும் இது ஏறக்குறைய இரண்டு மடங்காகும்.

 *2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உலக அளவிலான வனப்பகுதி 36 மில்லியன் ஹெக்டேர் அளவு குறைந்தது. கடந்த 25 ஆண்டுகளில் 20 விழுக்காட்டு சதுப்புநிலக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2005 ஆண்டின்படி 12 விழுக்காட்டு பறவையினங்கள் அழியும் தருவாயில் உள்ளன என்ற வகையில் இணைக்கப்பட்டுள்ளன. 3 விழுக்காட்டு தாவர இனங்கள் அழிந்துவிடும் நிலையில் உள்ளன.

நன்றி:-
tamilcirlce.net

என் இதயத்தில்...

 
சாம்பல் நிற இரவு

சோம்பலாய் கண்மூடி
கிடந்தாலும் மனம்
தாயின் அரவணைப்பைத்தேடும்
குழந்தையாய்....
என் ஞாபகக் கல்லறையில்
உன் வண்ண நினைவுகள்
கண்துயில மறுக்கின்றன!
உறக்கமில்லா இரவில்
என் கண்கள் அழுவதை
என்னால் கூட
அறியமுடியவில்லை!
ஆனாலும் ஏனோ கண்ணீர்
கசிந்தபடி....
காதலின் விரல் நகங்கள்
குத்திக் கிழிக்கின்றன
என் இதயத்தில்...
அன்பு காட்டியது குற்றமா?
அன்பு கேட்டது குற்றமா?
இன்னும் புரியவில்லை...
தொலைதூர சுகத்தை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
எமாற்ற ஏக்கங்களே
மிச்சமாகின்றன!
உள்ளிருக்கும் கவலையுடன்
உன் கவலையும் இப்போது
ஒட்டிக்கொண்டது!
ஒவ்வொரு கணமும்
இறந்த காலம்
நினைத்து நினைத்தே
நிகழ்காலம்
நிஜமிழந்து நிற்கின்றது
எதிர்காலம்
சூனியமாய் சுற்றுகின்றது!
என் மனத் தடாகத்தில்
தொடர்ந்து
உன்னைத்தவிர யாரும்
சங்கமிக்க முடியாது!
உன்னைப் போன்றதொரு
பாதுகாப்பான
சரணாலயம் வேறென்ன
இருக்கிறது எனக்கு?
மேகத்தில் மறந்திருக்கும்
மழைநீரைப் போல்
எனக்குள்
நிறைந்திருக்கும்
உன்னை
இறக்கிவிடத் துணியவில்லை..!
காலங்கள் இறந்தாலும்
என் காதல்
ஒருபோதும் இறப்பதில்லையடா...!

''எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை!'

சமீபத்தில் நான், விகடனில் ஒரு செய்தி படித்தேன். மிஸ் சென்னை 99 போட்டியின் கடைசிச் சுற்றில் ஒரு கேள்வி கேட்டார்கள்.
'மனிதர்களுக்குத் தேவையான குணம் எது?’
இந்தக் கேள்விக்கு, 'நேர்மை’ என்று பதில் அளித்து, த்ரிஷா என்கிற பெண் கிரீடத்தைத் தட்டிக் கொண்டு போனாள். இதில் என்னை ஆச்சர்யப்படவைத்த விஷயம் என்ன என்றால், இளைய தலைமுறையினர்கூட, நேர்மையான குணத்தை மெச்சுகிறார்கள் என்பதுதான். இப்படி நான் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

பக்கத்து வீட்டுப் பெண் குழந்தை கதை சொல்ல வந்திருந்தாள். நாலு வயது இருக்கும்.
'ஒரு ஊர்ல ஒரு கௌவி இருந்தா. அவ வடை சுட்டப்போ, ஒரு காக்கா வந்து வடையைப் பறிச்சுண்டு போய், ஒரு மரத்துல உக்காந்துச்சு. அந்தப் பக்கத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு வடையைப் பார்த்ததும் வாயில எச்சில் ஊறிச்சாம். அது காக்காவப் பார்த்து, 'காக்கா... காக்கா... நீ நல்ல அழகா இருக்க... உன் குரல் இன்னும் அழகா இருக்கு. ஒரு பாட்டுப் பாடு’ன்னுச்சாம். காக்கா, 'கா... கா...’ன்னு கத்த, வடை கீழே விழுந்துச்சாம். நரி எடுத்துண்டு ஓடிச்சாம்!’
நரியும் காகமும், வடையும் காகமும், கிழவியும் வடையும், நரியும் வடையும் என்று பலவிதத் தலைப்புகளைக்கொண்ட இந்தக் கதையைச் சொல்லிவிட்டு, சிறுமி போய்விட்டாள்.

அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவிலேயே வளர்ந்த ஒரு சிறு பெண்ணிடம், இந்தக் கதையின் போதனை என்ன என்று ஒரு முறை கேட்டேன். அந்தப் பெண் கொஞ்சமும் தயங்காமல், 'வாய்க்குள் சாப்பாடு வைத்துக்கொண்டு பேசக் கூடாது!’ என்றாள். அமெரிக்காவில் உணவை வாயில் வைத்துக்கொன்டு பேசுவது மிகவும் பாவமான செயல் என்பது புரிந்தது.
இன்னொரு சிறுவன் சொன்னான், 'ஏமாற்றினால் நீயும் ஏமாற்றப்படுவாய்’ என்று. ஒரு சிறுமி மாத்திரம் 'முகஸ்துதிக்கு மயங்கக் கூடாது’ என்றாள்.
உண்மையில், இந்தக் கதையில் நாயகன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. கிழவியா, நரியா, காகமா அல்லது வடையா? வடைதான் ஊடுசரடாகக் கதை முழுக்க வியாபித்து இருக்கிறது என்று கூறுவார்கள்.

அந்தப் பெண் குழந்தை, கதையின் கடைசி வரியைச் சொல்லும்போது, இரண்டு கால் பெருவிரல்களையும் நிலத்தில் ஊன்றி எம்பி நின்று 'நரி எடுத்துண்டு ஓடிச்சாம்’ என்று சொன்னபோது, அதன் முகத்தில்தான் எத்தனை பரவசம். காகம் ஏமாந்ததில் அத்தனை சந்தோஷம்! பாடம்: ஏமாற்றினால் பிழைக்கலாம்.

இன்னும் ஒரு பரம்பரைக் கதை சிறுவர் மத்தியில் உலவுகிறது. ஏழை விறகுவெட்டியின் கோடரி ஒருநாள் ஆற்றில் விழுந்துவிட்டது. ஒரு தேவதூதன் தோன்றி, ஆற்றில் குதித்து ஒரு தங்கக் கோடரியைக் கொண்டுவந்தான். விறகுவெட்டி, அது தன்னுடையது இல்லை என்றதும் இன்னொரு முறை மூழ்கி ஒரு வெள்ளிக் கோடரியைக் கொண்டு வந்தான். விறகுவெட்டி அதையும் மறுக்க, கடைசியில் தேவ தூதன் அவன் உண்மையாகத் தொலைத்த இரும்புக் கோடரியைக் கொண்டுவந்து கொடுத்தான். விறகுவெட்டி, அதுதான் தன்னுடையது என்று ஏற்றுக்கொண்டான். கதை இங்கே முடிந்திருக்க வேண்டும். ஆனால், தேவதூதன் என்ன செய்தான்? விறகுவெட்டியின் நேர்மையை மெச்சி தங்கக் கோடரி, வெள்ளிக் கோடரி இரண்டையும் பரிசாகக் கொடுத்தானாம்.
இது போதிக்கும் பாடம் என்ன?
கடைப்பிடித்தால், இறுதியில் செல்வம் இருக்கும். இதுவும் ஒரு தப்பான போதனைதான்! நேர்மைக்கும் செல்வத்துக்கும் ஒருவிதத் தொடர்பும் இல்லை. உண்மையில் பார்த்தால், நேர்மையாக இருப்பவர்கள் செல்வம் சேர்ப்பது அரிதான காரியம்.

திருக்குறிப்பு நாயனார் என்று ஒருவர். இவருக்கு வேலை, அடியார்களின் ஆடைகளை இலவசமாகச் சலவை செய்து தருவது. அப்படி ஒருநாள் ஒரு தொண்டரின் கந்தையைத் துவைத்து, உலர்த்தித் தருவதாக வாக்கு கொடுக்கிறார். தோய்த்துவிட்டார். உலர்த்துவதற்கு இடையில் மழை வந்துவிட்டது. வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. என்ன செய்திருக்க வேண்டும்? 'போய்யா... உலர்த்து வதற்கு இடையில் மழை வந்து விட்டது. என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?’ என்று கேட்டிருக்க வேண்டாமோ? மாறாக, மன்னிப்புக் கேட்டு தண்டனையாகக் கல்லில் தன்  தலையை முட்டிக்கொண்டாராம். மனசாட்சி என்பது இதுதான்!

நம்மில் பலர் நேர்மையாக இருப்பதற்குப் பின்விளைவுகளின் பயம்தான் காரணம். பிடிபட்டு விடுவோமோ என்ற பயத்தில் நேர்மையாக இருப்பது, அப்பா பார்த்துவிடுவாரோ என்ற பயத்தில் சிகரெட் பிடிக்காமல் விடுவது, ஆசிரியரிடம் அகப் பட்டுவிடுவோம் என்ற பயத்தில் மாணவன் பரீட்சை பேப்பரை யோக்கியமாக எழுதுவது, மனைவியிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கணவன் ஒழுக்கமாக நடந்துகொள்வது... இவை எல்லாம் உண்மையில் 'நேர்மை’ என்ற பதத்தில் அடங்கும் என்று கூற முடியாது.

அந்த ஆப்பிரிக்கன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக் கஷ்டம். ஒரு வெள்ளைத் தாளில், சம்பள முன் பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான். இவனுக்கு ஆறு குழந்தைகள். கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள். நிறுவனத்தில், குழந்தைகளுக்கான படிப் பணம் உண்டு. மாதா மாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.

ஒருநாள் இவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம், இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்கொண்டு கடிதம் எழுதியதுதான்!

என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை. இந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. இவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது. எப்போதும் கஷ்டத்தில் உழலும் இவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?

நிர்வாகம் கண்டுபிடித்துவிடும் என்ற பயமாக இருக்கலாம். உரிமை இல்லாத பணத்தைப் பெறுவதில் உள்ள குற்ற உணர்வாக இருக்கலாம். இல்லாவிடில், இறந்துபோன அருமைக் குழந்தைகளின் சம்பாத்தியத்தில் சீவிப்பது அவனுக்கு மன வருத்தத்தைத் தந்திருக்கலாம்.

எதுவோ, படிப்பறிவு சொட்டும் இல்லாத இந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். இவனுடைய நடத்தைக்கான காரணத்தை நான் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேர்மையின் தரம்... தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரை மணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்கு அர்த்தம். மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?

எல்லாக் கேள்விகளுக்கும் விடை திருவள்ளுவரிடத்தில் இருக்கும். அவர் என்ன சொல்கிறார்? மனிதனுடைய நற்பண்புகளுக்கு எல்லாம் ஆதாரம்... வாய்மை. அதாவது உண்மைத் தன்மை. நேர்மைக்கு வேர் வாய்மை. அது இல்லாமல் நேர்மையாக இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Transparency  துலாம்பரத் தன்மை அல்லது ஒளிவு மறைவற்ற தன்மை என்றும், Accountability  கணக்கு காட்டும் அல்லது பதில் கூறும் தன்மை என்று சொல்வதும் இதைத்தான். உதாரணத்துக்கு, ஒரு பெரிய டெண்டரைப் பகிரங்கமாக, ஒளிவுமறைவின்றிச் செயல்படுத்தும்போது, அங்கே பொய்க்கு வேலை இல்லாமல் போய்விடுகிறது. கள்ளம் கரைந்து போகிறது!

அன்று முதல் இன்று வரை நேர்மையானவர்களால்தான் உலகம் இயங்குகிறது. அயோக்கியர்களோடு ஒப்பிடும்போது இந்த உலகத்தில் நேர்மையானவர்கள் மிகச் சிலரே. ஒரு கோலியாத்துக்கு ஒரு சிறுவன் டேவிட் போதும். நூறு கௌரவர்களை ஐந்து பாண்டவர்கள் சமன் செய்துவிடுவார்கள்.

'நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.’

ஒரு சிலரின் உழைப்பில்தான் உலகம் உய்க்கிறது. சாரதி சிலர், பயணிகள் பலர். மூன்று போக விதை நெல்லைக் கண்டுபிடித்தவர் சிலர், அனுபவிக்கும் விவசாயிகள் அநேகர். கம்ப்யூட்டரையும் இணையத்தையும் உண்டாக்கியவர் சிலர். அதன் பயனை அனுபவிப்போரோ கோடிக்கணக்கில்!

பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது. அதுதான் உண்மையான நேர்மை!

மிஸ் சென்னை 99 மிகவும் சரியாகச் சொன்னதுபோல், மனிதனுக்கு அவசியமான, உன்னதமான பண்பு இது. நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மன சாந்திக்காக, நம் சந்ததியிரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு இது சாத்தியமாக இருந்தது. நமக்கும் சாத்தியமாகும்!