Search This Blog

Showing posts with label Sri Lanka Short Stories. Show all posts
Showing posts with label Sri Lanka Short Stories. Show all posts

Tuesday, July 8, 2014

அரசனின் வருகை - உமா வரதராஜன்

மூடுண்ட அந்த நகரத்துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது. யுத்தத்தில் இடிந்து போன கோயிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள். அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துகளெங்கும் சென்று அதிர்ந்தன.
umavara த்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறு காற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூளும் மூங்கில்கள் நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நடந்தது. யானைகளின் பிளிறல், குதிரைகளின் கனைப்பு, வாட்கள் ஒன்றோடொன்று உரசுமொலி, மனிதர்களின் அவலக் குரல் எல்லாம் இன்றைக்கும் செவிகளில் குடியிருந்தன. அப்போதைய பிணங்களின் எரிந்த வாடை இன்னமும் அகலாமல் நகரத்தின் வானத்தில் தேங்கிப் போய் நின்றது. அண்மைக் காடுகளை உதறி விட்டுப் பிணந்தின்பதற்காக இங்கே வந்த பட்சிகள் யாவும் பெரிய விருட்சங்களில் தங்கி இன்னொரு தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன, கூரையிழந்த வீடுகள், கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும். ஆந்தைகளின் இடைவிடாத அலறல்களுடன், நாய்களின் அவ்வப்போதைய ஊளைகளுடனும் நகரத்தின் இரவுகள் கழிகின்றன. முகிலுக்குள் பதுங்கிக் கொண்ட நிலவு வெளியே வருவதில்லை. பால் கேட்டுக்; குழந்தைகள் அழவில்லை. நடு இரவில் குதிரைகளின் குளம்பொலிகளும் சிப்பாய்களின் சிரிப்பொலிகளும் விட்டு விட்டுக் கேட்கும். நெஞ்சறை காய்ந்து, செவிகள் நீண்டு, கூரையில் கண்களைப் புதைத்து பாயில் கிடப்பான் ஊமையன்.
ஊமையனும் இன்னும் சிலரும் அந்த நகரத்தில் எஞ்சியிருந்தனர். உயிர் தப்பிய சிலரும், உயிர் தப்பப் பலரும் ஆற்றைக் கடந்து வேறு பகுதிகளுக்குச் சென்றார்கள். கரையில் நின்று கையசைத்த பெண்களின் கண்களில் துளிர்த்த நீரில் அந்தப் படகுகள் மறைந்து போயின. ஊமையனுக்கு அம்மாவை விட்டுப் போக மனமில்லை.
ஊமையனின் உண்மையான பெயர் பலருக்கு மறந்து போய்விட்டது. அதிகம் எதுவும் பேசாததால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. அவன் பேச்சு எவ்விதம் மெல்ல மெல்லக் குறைந்தது என்பது பற்றி அம்மா அறிவாள்.
கலகக்காரர்களை ஒடுக்க இந்த நகரத்துக்கு அரசன் அனுப்பிய படையுடன் கூடவே ஆயிரமாயிரம் பிணந்தின்னிக் கழுகுகளும் தம் சிறகுகளால் சூரியனை மறைத்தபடி இங்கே நுழைந்தன. கோயிலின் சிலை, பெண்களின் முலை, குழந்தைகளின் தலை என்ற வெறியாட்டம். மத யானைகள் துவம்சம் செய்த கரும்புத் தோட்டமாயிற்று, அந்நாட்களில் இந்த நகரம்.
ஊமையனும் ஒரு நாள் பிடிபட்டவன்தான். முகத்து மயிரை மழிக்க அவன் வைத்திருந்நத சவரக்கத்தி கூட ஓர் ஆயுதம் எனக் குற்றஞ் சாட்டி, அவனுடைய கைகளைப் பின்புறம் கட்டி, பாதணிகள் இல்லாத அவனைக் கொதி மணலில் அழைத்துச் சென்றனர், நடு வெயிலில்; நடுத்தெருவில் முழங்காலில் நிற்க வைத்து சூரிய நமஸ்காரம் பண்ணச் சொன்னார்கள். வாயில் கல்லைத் திணித்து, வயிற்றில் குத்தினார்கள். 'அம்மா' என்ற அவனுடைய சத்தம் கல்லைத் தாண்டி வெளியே வரவில்லை.
மாலையில், வெறிச்சோடிய தெரு வழியாகத் தளர்ந்த நடையும், வெளிறிய முகமுமாக ஊமையனும் இன்னும் சிலரும் நகரத்துக்குத் திரும்பி வந்தனர். மரணத்தின் தூதுவன் மறுபடியும் கைதட்டிக் கூப்பிடுவான் என்ற அச்சத்தில் திரும்பிப் பாராமல் நிழல்கள் இழுபடத் தள்ளாடித் தள்ளாடி அவர்கள் வந்தனா.; தெருமுனையில் அவர்கள் தோன்றியதும் பெண்கள் ஓட்டமும் நடையுமாக அவர்களிடம் வந்தனர். ஓடி ஓடி ஒவ்வொரு முகமாகத் தேடி அலைந்தனர். வராத முகங்கள் தந்த பதற்றத்தில் நடுங்கினார்கள். ஒப்பாரி வைத்து அழுதார்கள். 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று ஒலமிட்டார்கள். தனதப்பன் போய்ச் சேர்ந்து விட்டான் என்ற சேதி தெரியாமல் ஒருத்தியின் இடுப்பிலிருந்த குழந்தை விரல் சூப்பிச் சிரிக்கின்றது. 'என்ன நடந்தது, என்ன நடந்தது' என்று இன்னொருத்தி ஊமையனின் தோளைப் போட்டு உலுக்கி ஒப்பாரி வைக்கின்றாள். பேய்க் காற்றின் உரசலில் கன்னியர் மாடத்தின் சவுக்கு மரங்கள் இன்னும் துயரத்தின் பாடல்களைப் பரப்புகின்றன.
வாழ்வதற்கான வரமும,; அதிர்ஷ;டமும் தனக்கிருப்பதாக எண்ணி ஒரு சிறு கணம் உள்ளம் துள்ளிய சிறு பிள்ளைத் தனத்துக்காக வெட்கப்பட்ட ஊமையன் தன் தலை மேல் கத்தி தொங்கும் வாழ்க்கை விதிக்கப்பட்டிருப்பதை மெல்ல உணர்ந்தான். மௌனத்தில் அவன் காலம் நகர்ந்தது. வீட்டுக்குள் முடங்கிய அவனை நான்கு சுவர்களும் நெரித்தன வீட்டின் கூரை பல சமயங்களில் நெஞ்சில் இறங்கிற்று. ஒளியைத் தவறவிட்ட தாவரம் போல ஊமையன் வெளிறிப் போயிருந்தான். தேவாங்கின் மிரட்சியுடன் தடுமாறிக் கொண்டிருந்தான்.
பகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான். கண்கள் தோண்டப்பட்ட, நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் 'எங்களுக்கோர் நீதி சொல்' என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனா.; அரைகுறையாக எரிந்த தெருச் சடலங்கள் வளைந்தெழுந்து 'நாங்கள் என்ன குற்றம் செய்தோம்' என்று முனகியன. நீர் அள்ள உள்ளே இறங்கிய வாளியைக் கிணற்றுள் கிடந்த பிணங்களிலிருந்து கையொன்று மெல்லப் பற்றிக் கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும். குட்டித் தாய்ச்சி ஆட்டின் வயிறு மீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச் செல்லும். மயிர் உதிர்ந்த தெரு நாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ காலையோ கவ்வி இருக்கும்.
ஊமையனின் கனவில் அரசனும் வந்திருக்கின்றான். சாந்த சொரூபனாய், கடைவாய் கெழிந்த புன்னகையுடன் அந்தக் கனவில் அவன் வந்தான். கடைவாய் கெழிந்த இந்தப் புன்னகைக்குப் பின்னால் முதலைகள் நிறைந்த அகழியும், நச்சுப் பாம்புகள் பதுங்கிக் கொண்ட புற்றொன்றும், விஷ விருட்சங்களைக் கொண்ட வனாந்தரமும் ஒளிந்திருப்பதாகப்; பலர் பேசிக் கொண்டனர். இதைப் போல் அரசனைப் பற்றிப் பல கதைகள். வெண்புறாக்களை வளர்ப்பதில் அவன் பிரியம் கொண்டவன் என்றும், மண்டையோடுகளை மாலையாக்கி அணிவதில் மோகமுள்ளவன் என்றும் ஒன்றுக்கொன்று முரணான கதைகள். பல நூற்றாண்டுகள் மண்ணுக்குள் யாத்திரை செய்து புதையுண்டு கிடந்த தன் முன்னோரின் கிரீடத்தைக் கண்டெடுத்துத் தலையில் சூடிக் கொண்டான் அவன் எனவும், செல்லுமிடமெல்லாம் சிம்மாசனத்தையும் கொண்டு திரிந்தான் என்றும் காற்றில் வந்தன பல கதைகள்;.
அரசவை ஓவியர்கள் வெகு சிரத்தையுடன் உருவாக்கியிருந்த அந்தப் புன்னகை சிந்தும் முகத்துடனேயேதான் ஊமையனின் கனவிலும் அரசன் வந்தான். கோவில் மணி விட்டு விட்டொலிக்கின்றது. பாட்டம் பாட்டமாக வானத்தில் பறவைகள் அலைகின்றன. வேதம் ஓதுகின்றனர் முனிவர்கள். அது ஒரு நதிக்கரையோரம். பனி அகலாத புல்வெளியில் அரசன் வெண்ணிற ஆடைகளுடன் தன் கையிலிருந்த வெண்புறாவைத் தடவியபடி நடந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் ஊமையன். சௌந்தர்யத்தைக் கண்டு சூரியன் கூட சற்றுத் தயங்கித் தடுமாறி வந்த ஓர் இளங்காலை.
அரசன் அண்ணாந்து ஆகாயத்தைப் பார்ததான்.
'மேகங்கள் அகன்று கொண்டிருக்கின்றன. இன்னும் கொஞ்சநேரம்........ கொஞ்சநிமிஷம்....... வெளிச்சம் வந்துவிடும்......'
அரசனின் குதூகலமான மனநிலை ஊமையனுக்கு ஓரளவு தைரியத்தைத் தந்தது.
'அரசே வெளிச்சம் வருவதற்குள் நாங்கள் இறந்து விடமாட்டோமா...... இப்போதும் என்ன, நாங்கள் நடை பிணங்கள் போல அல்லவா உள்ளோம'?....
ஊமையனை திரும்பிப் பார்த்து அரசன் சிரித்தான்.
'போர் என்றால் போர்.... சமாதானமென்றால் சமாதானம்.....'
ஊமையன் வார்த்தைகளை மென்று விழுங்கிச் சொன்னான்.
போர் என்றால் ஒரு தர்மமில்லையா அரசே? குடிமக்கள் செய்த பாவம் என்ன? சிசுக்கள், நோயாளிகள், முனிவர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வது யுத்த தர்மமா? '
அரசன் புன்னகைத்தான். 'தேர் ஒன்று நகரும் போது புற்கள் புழுக்கள் பற்றி முனகுகின்றாய் நீ.... எனக்குத் தெரியும்.... எல்லாம் தெரியும்...'
'நீங்கள் மனது வைத்தால் எதுவும் முடியும். எதுதான் முடியாதது? ' என்றான்; ஊமையன்.
அரசனின் நடை திடீரென்று நின்றது. 'ஆம்..... நான் நினைத்தால் எதுவும் சாத்தியம்.....' இதோ பார்!' என்றான் அவன். அரசனின் கையிலிருந்த வெண்புறா சட்டென்று மாயமாக மறைய, முயலின் அறுபட்ட தலை ரத்தத்தில் தோய்ந்து அங்கேயிருந்தது.
அரசனின் வருகை நெருங்க நெருங்க நகரம் அமர்க்களப்பட்டது. அரச காவல் பரண்கள் புதிது புதிதாய் முளைத்தன. இரவு பகலாய் வேலைகள் நடந்தன. சவக்கிடங்குகளின் முன்னால் பூச்செடிகள் நட்டு நீரூற்றினார்கள் இலையுதிர் காலம் நிரந்தரமாகி விட்ட இந்த நகரத்தின் வாயில்களில் வேற்றூர்களிலிருந்து மரங்களை வேர்களுடன் பெயர்த்துக் கொணர்ந்து நட்டார்கள். நூறு வருஷத் தொடர் மழையாலும் கழுவ முடியாத ரத்தக்கறை கொண்ட மதில்களுக்குப் புதுவர்ணம் பூசினார்கள். புன்னகை சிந்தும் அரசனின் ஓவியங்கள் சுவரெங்கும் நிறைந்தன. சோதனைச் சாவடிகளில் மாட்டு வண்டிகள் நீளத்துக்கு நின்றன. கொட்டும் மழையில் ஆடைகள் நனைய, பொதிகளைத் தூக்கித் தலையில் வைத்தபடி மௌனமாக ஊர்ந்தனர் ஜனங்கள். நாக்குகளை நீட்டச் செல்லி அங்கே புதைந்திருக்கக் கூடிய அரச விரோத சொற்களை அவர்கள் தேடிப்பார்த்தனர். நகரத்துக்கு வேளை தெரியாமல் வந்து விட்ட பசுவொன்றின் வயிற்றைக் கீறி அதன் பெருங்குடலை ஆராய்ந்து பார்த்தனர். எருமையின் குதத்தினுள்ளும் கைவிட்டு ஏதேனும் கிடைக்குமா என்று துழாவினார்கள். மீசையில் நுரை அகலாத கள்ளுக்குடியர்கள் தப்பட்டம் அடித்து வீதிகளில் ஆட்டம் போட்டனர்.
'கோயில் தந்தான்
எங்கள் மன்னன் 'கோவில் தந்தான்
இன்னுந்தருவான்
கேட்கும் எல்லாம் தருவான்.
தில்லாலங்கடி......தில்லா....
பிச்சைப் பாத்திரம் இந்தா......'
திண்ணையிலிருந்த ஊமையனின் தாத்தா இடிப்பதை நிறுத்தி விட்டு பாட்டு வந்த திக்கைப் பார்த்தார். பார்வை தெரியாத அவருக்கு ஓசைகளே உலகம். கள்ளுக்குடியனின் பாடல் தாத்தாவுக்குக் கோபத்தைத் தந்திருக்க வேண்டும். கையுரலில் இருந்த வெற்றிலையை வேகமாக இடித்தவாறிருந்தார்.
'கோவிலைத் தருகிறானாமே. மறுபடியும் இடிக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும்? ' என்று முனகிக் கொண்ட தாத்தா மேலே எதுவும் பேச விரும்பாமல் வெற்றிலையை வாய்க்குள் போட்டுக் கொதுப்பிக் கொண்டார்.
அரசன் வருவதற்கு ஒரு தினம் இடையிலிருந்தது. கண்ணயர்ந்து கொண்டிருந்த தாத்தா குதிரைகளின் கனைப்பொலியால் திடுக்கிட்டு எழுந்து உட்காந்தார். வீட்டுவாசலுக்கு வந்த பெண்கள் வெளியே எட்டிப் பார்த்து விட்டு மறைந்தனர். பதற்றத்துடன் வந்த அம்மாவை ஊமையன் வெறித்துப் பார்த்தான். அம்மாவின் உதடுகள் உலர்ந்து, விழிகள் வெருண்டிருந்தன. வானத்தை அண்ணாந்து பாhர்த்து இருகைகளாலும் கும்பிட்டாள்.
வழக்கம் போல் எல்லாம் நிகழ்ந்தன. அந்தக் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிப்பாய்கள் நுழைந்து, புறப்பட்டனர். ஊமையனை அவர்கள் கூட்டிச் சென்ற போது அம்மா என்னென்னவோ சொல்லி அழுது பார்த்தாள் மனித பாஷை புரிந்த குதிரைகள் மாத்திரம் தலைகள் அசைத்துக் கனைத்துக் கொண்டன. சிப்பாய்களை நோக்கிக் குரைத்தவாறு, ஊமையனின் கால்களை மறித்தபடி தெருமுனை வரை வந்தது அவனுடைய நாய். சிப்பாய்கள் அதை எட்டி உதைத்து விரட்டினார்கள். பிடிபட்ட ஆண்களின் பின்னால் பெண்கள் தங்கள் வாய்களிலும், வயிறுகளிலும் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஒப்பாரி வைத்துத் தொடர்ந்து சென்றனர். குதிரை வீரர்கள் அவர்கள் பக்கமாக ஈட்டிகளை ஓங்கி அச்சுறுத்தி விரட்டினார்கள். குதிரைகள் கிளப்பிய புழுதிப் படலத்தினூடாகத் தங்கள் ஆண்பிள்ளைகள் சென்று மறைவதை தெருமுனையில் செய்வதறியாது நின்று விட்ட பெண்கள் கண்டனர். சுவரில் முதுகை முட்டுக் கொடுத்தபடி நின்ற தாத்தா அங்கு நின்றவர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் சொன்னார். ஒன்றும் ஆகாது...... நாளைக்கு அரசன் வருகிறான் அல்லவா? அதற்குக் கூட்டம் சேர்க்கிறார்கள்...' சுவரிலிருந்த பல்லியொன்று அவ் வேளை பார்த்து சத்தமிட்டது தாத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது.
பிடிபட்ட அனைவரும் நகரத்து சத்திரங்களில் அடைக்கப்பட்டனர். இவர்களைப் போன்றே சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கொண்டுவரப்பட்டவர்களால் சத்திரங்கள் நிரம்பி வழிந்தன. ஒருவரோடு ஒருவர் பேசாமல் பழுக்கக் காய்ச்சி தங்கள் தலைகளில் இறக்கப்பட்ட விதியை எண்ணி நொந்தவர்களாக அங்கு எல்லோருமிருந்தனர். சிப்பாய்களின் சிரிப்பொலி ஏளனத்தின் அம்புகளாக அவ்வப்போது இவர்களின் காதுகளின் இறங்கிற்று. ஊமையன் அந்தக் குளிர்ந்த சுவரில் சாய்ந்து, கண்களைமூடிக்கொண்டான். இருள் நிறைந்த பலிபீடத்தில் வெட்டரிவாள் ஒன்று பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. நரி போல் ஊளையிடும் காற்றில் சுருக்குக் கயிறொன்று அங்குமிங்குமாக அசைந்து ஊஞ்சலாடுகின்றது. கழுத்துவரை மண்ணில் புதையுண்ட அவனை நோக்கி யானைகளின் தடித்த பாதங்கள் மூர்க்கத்துடன் முன்னேறி வருகின்றன. அவனுடைய நிர்வாண உடம்பில் புதிது புதிதாய் ரத்த வரிகளை எழுதுகின்றன சாட்டைகள். கனவுமற்ற நினைவுமற்ற இரண்டுங் கெட்டான் பெரு வெளியில் அவனுடைய வீடும் வந்தது. கூட்டிப் பெருக்காத வாசலில் வாடிய பூக்களும், சருகுகளும் கிடக்pன்றன. உற்சாகமிழந்த நாய் வாசற்படியை மறித்துப் படுத்திருக்கின்றது. சாம்பல் அள்ளாத அடுப்படியில் சோம்பல் பூனை. சமையலறையில் குளிர்ந்து போயிருக்கும் பாத்திரங்கள். ஒரு கருநிற வண்டைப் போல சுவர்களிலே முட்டி மோதித் திரிவார் தூக்கம் வராத தாத்தா. உண்ணாமல், உறங்காமல் கண்களின் ஈரம் காயாமல் அம்மா சுருண்டு கிடப்பாள். நிமிஷங்களைப் பெரும் பாறைகளாய்த் தன் தலையில் சுமந்து இருட்டின் பெருங் காட்டில் அலைந்தான் ஊமையன் ஊமையன் சத்திரத்துக் கதவு திறபட்டதும் உள்ளே புகும் காற்றுக்காகவும் வெளிச்சத்துக்காகவும் அவன் விழி மூடாமல் காத்துக்கிடந்தான்.
வுpடிந்தது. வெளிச்சத்தை முந்திக்கொண்டு கதவு வழியாக சிப்பாய்களின் தலைவன் உள்ளே நுழைந்தான்.
'ஏய் எழும்புங்கள்... எழும்புங்கள'; என்று அதட்டினான்.
அவர்களை ஏற்றிக் கொண்டு நகரத்து வீதிகளில் மாட்டு வண்டிகளின் விரைந்து சென்றன. மாட்டுவண்டியின் தொடர்ச்சியான ஜல் ஜல் சத்தத்தை கேட்டு அங்காடித் தெரு வணிகர்கள் அப்படியே நின்றார்கள். எண்ணெய் வழியும் முகங்களுடன், தூக்கம் நிறைந்த கண்களுடன், வாரப்படாத தலைகளுடன், பசி கொண்ட வயிறுகளுடன் உலகத்தின் மிகக் கேவலமான விலங்குகளைப் போல இப்படிப்போவது ஊமையனுக்குப் பெரும் வெட்கத்தைத் தந்நது. இடியுன்ட கோயிலின் அருகிலிருந்த குளக்கரையில் அனைவரும் இறக்கப்பட்டனர். சிப்பாய்களினால் வரிசையாக அமர்த்தப்பட்டனர்.
வானம் இருண்டிருந்தது. மழையையும் அரசன் கையோடு கூட்டி வந்து விட்டதாக சிப்பாய்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
'ராஜாதி ராஜ ராஜமார்த்தான்ட ராஜ கம்பீர.....' என்று ஒரு குரல். திடீரென வாத்தியங்கள் முழங்கின. மகுடி வாத்திய விற்பன்னர்கள் நகரத்து சிறுமிகளை நெளியும் பாம்புகளாக்கி ஆட்டுவித்தார்கள். கள்ளுக்குடியர்கள் கால்கள் நிலத்தில் படாது குஸ்தியடித்தவாறு வந்தனர். பின்னால் அரசன் வந்து கொண்டிருந்தான். முனிவர்கள் தாடிகளை மீறிய புன்னகையுடன் எழுந்து வணக்கம் சொன்னார்கள்.
உயரமானதோர் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அடைந்த அரசன் அனைவருக்கும் கையசைத்தான். தொண்டை பெருத்த கவிஞர்கள் அந்தக் குளிர் வேளையிலும் பனையோலைச் சுவடிகளால் அரசனுக்கு சாமரம் வீசினார்கள் அரசவைக் கவிஞரின் நாவிலிருந்து பனிக்கட்டிகள் கொட்டியவாறிருந்தன. ஒருபக்க மீசையை மழித்துக் கொண்ட எடுபிடிகள் அரசனின் பின்புறமாக உட்கார்ந்து, அவனுக்கு அரிப்பெடுக்கையில் முதுகைச் சொறிந்து கொடுத்தனர்.
ஊமையன் அண்ணாந்து பார்த்தான். கறுப்பு ஆடையைக் கழற்றி வீசி, அம்மணங் கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தது வானம். வானத்துப் பறவையொன்றின் எச்சம் போல ஒரு சொட்டு ஊமையனின் முகத்தில் முதலில் விழுந்தது. பின்னர் வேகமான பல சொட்டுகள், இரைச்சல் காற்று திசை காட்ட மழை தொடுக்கும் யுத்தம். பலத்த மழையின் நடுவே அரசன் பேச எழுந்தான். கொட்டுகின்ற மழையிலும் அசையாத மக்கள் அவனுக்கு வியப்பளித்திருக்க வேண்டும்.
'என் உயிரிலும் மேலான மக்களே.....'
மழையோசையை வெல்ல முயலும் அரசனின் குரல்.
குலை தள்ளிய வாழைகளாலும், குருத்தோலைகளாலும், செந்நிறப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் நின்று மழையில் நனையாத அரசனின் குரல். ஊமையன் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான். பேய் பிடித்த பெண்ணாகி வாயிலும், வயிற்றிலும், முதுகிலும், முகத்திலும் மாறி மாறி அறைகின்ற மழை.
'இடியுண்ட கோவிலைப் புதுப்பிக்க இன்றைக்கு வந்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வேண்டும் சொல்லுங்கள்.'
காற்றும் மழையும் பதில் குரல் எழுப்பின. சிப்பாய்களின் ஈட்டிமுனைகளுக்கும் உருட்டும் விழிகளுக்கும் பயந்து அசையாமல் மௌனமாய் இருந்தனர் ஜனங்கள்.
'கொட்டுகின்ற மழையிலும் என்னைப் பார்க்க இவ்விதம் கூடியிருப்பது என்னை உணர்ச்சி கொள்ளச்செய்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டும.; உடனே கேளுங்கள்.'
ஊமையன் மீண்டும் அண்ணாந்து பார்க்கிறான். வருண பகவான் பற்களை நற நற வென்று கடிக்கின்றான். நீரேணி வழியாக இறங்கும் அவன் கைகளில் மின்னல் சாட்டைகள.; சுழித்துச் சுழித்துப் பாதையெடுத்து ஓடுகின்றது தண்ணீர், நெருப்புப் பாம்புகள் வானமெங்கும் நெளிவதும், மறைவதுமாய் ஜாலங் காட்டுகின்றன.
'மாட மாளிகைகள் கட்டித் தருகின்றேன். வீதிகளைச் செப்பனிட இன்றே ஆணையிடுகின்றேன். குளங்களைத் திருத்தித் தரச் சொல்கிறேன். இன்னும் என்ன வேண்டும்? அரங்குகள் வேண்டுமா? நவ தானியங்கள் தேவையா? பட்டாடைகள் வேண்டுமா? என்ன வேண்டும் சொல்லுங்கள்...... இவற்றை எல்லாம் நான் தரத் தயார். ஆனால் ஒருபோதும்......'
அரசன் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஒரு பெரிய மின்னல் ஒரு பெரும் ஓசை. வானத்திற்கும் பூமிக்குமாகக் கோடிழுத்த ஒரு நீண்ட மின்னல்.
ஒருகணம் கண்ணொளி மங்க அதிர்ந்து போனான் ஊமையன். கண்களைக் கசக்கிவிட்டு அவன் உயரத்தே பார்த்தான்.
பேசிக் கொண்டிருந்த அரசன் மாயமாக மறைந்து போயிருந்தான்.
இந்தியா டுடே, ஏப்ரல் 1994
தட்டச்சு : சென்ஷி
 உமா வரதராஜன் (உடையப்பா மாணிக்கம் வரதராஜன்) கிழக்கிலங்கை, பாண்டிருப்பு, கல்முனை, இலங்கை ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். இவரது சிறுகதைகள் கணையாழி, கீற்று, களம், வீரகேசரி, இந்தியா டுடே ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. கவிதை, விமர்சனம், பத்தியெழுத்து, ஆகிய பிரிவுகளில் ஈடுபட்டிருந்தாலும் முதன்மையாக சிறுகதையாசிரியராகவே அறியப்படுகின்றவர். தாத்தா (உடையப்பா), தந்தை (மாணிக்கம்) ஆகியோரின் பெயர்களின் முதலெழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனவர்.

Monday, July 7, 2014

சாமத்திய வீடு

முல்லை அமுதன்










காலைக்குளிர் சில்லென்று வீசினாலும் தொலைபேசியின் தொணதொணப்பில் எரிச்சல் வந்தது.  தொணதொணப்பு ஓய்ந்தது..
அன்று என்றும் இல்லாத களைப்புடன் படுத்திருந்தாள் சிந்து. அவள் கணவன் சபாவின் குறட்டை ஒலியில் இருந்து அவன் அயர்ந்து தூங்குவது தெரிந்தது.  பாவம் அவன் லண்டன் வந்த காலத்தில் இருந்து தொடர்ந்து இரவு வேலையே செய்து வந்ததால் இவ்வாறான ஒரு சில இரவுகளே அவனால் இரவு நித்திரை கொள்ள முடிந்தது. சபா மட்டுமா? இவனைப்போல புலம்பெயர்ந்த தமிழர் பலரின் நிலை இப்படித்தானே!!.. 

மீண்டும் ஒலித்தது....

புறுபுறுத்துக்கொண்டு படுக்கையை விட்டு எழுந்து- கூந்தலைக் கைகளால் வாரி முடிந்தபடி தொலைபேசிக்குக் கிட்டப்போனாள் சிந்து.  வசீகரம் அவள் முகத்தில் தெரிந்தது.  என்ன இருந்தாலும் இலவசத் தொலைபேசிகள் வந்ததால் ஒவ்வொரு வீட்டிலும் ஏதோ ஒருவிதத்தில் எரிச்சல் தான்.

தொலைபேசியைக் கையில் எடுத்தாள்...  மறுமுனையில் வனஜா...
'துவங்கிவிட்டாள்.... அது இருக்கா... இது இருக்கா...எண்டு நேற்று முழுக்கக் கேட்டு....' மனதுக்குள் சபாவின் நித்திரை குழம்பி விடுமே என்ற ஆதங்கத்துடன்..

'அக்கா நாளைக்கு மட்டும் நாலைந்து பேர் உங்கடை வீட்டை படுக்க விட வேண்டும். எல்லாம் சுவிஸ்கார உறவினர்தான்.  பெரிய உதவியாய் இருக்கும். எங்கடை வீடு நிறைந்து விட்டது.... அதோடையக்கா அண்ணையிட்டைச் சொல்லி கொட்டலில் இரு குடும்பத்திற்கும் றூம் புக் பண்ண வேண்டும். பிரான்ஸ் கார உறவினர்கள் வந்து கொண்டிருக்கினமாம். எல்லாம் முடியுமட்டும் தலைவெடிக்குது....'

'எதற்கும் அவரோடை கதைத்து விட்டு கொஞ்ச நேரத்தாலை நான் எடுக்கிறன். சாமத்திய வீட்டிற்கான மற்ற அலுவல்களைக் கவனியுங்கோ....' தொலைபேசியை வைத்துவிட்டு ஹீட்டரைப் போட்டாள் சிந்து.   

வனஜா நல்லவள் தான்.  ஆனாலும் பெரிய எடுப்புக்காரி.  அவள் கணவன் சந்திரன் பல ஏஜன்ட் இடம் காசுகளைக் கொடுத்து ஏமாந்த பின் சிரமத்தின் மத்தியில் லண்டன் தனிய வந்து கடன் குறைத்த பின்னர் வனஜாவையும் இருபிள்ளைகளையும் ஏஜன்ட் மூலம் எடுப்பித்தான்.... இன்னமும் விசா கிடைக்கவில்லை. 

வந்த காலம் தொடக்கம் பெனிபிட் எடுத்தபடி களவாக இரு இடங்களில் சந்திரன் வேலைக்கும் செல்லுகின்றான். ஒரு பிள்ளை இங்கு பிறந்தால் பெனிபிட் பணமும் கூடக் கிடைக்கும், விசாவும் கிடைக்கும், கையெழுத்து வைக்கப்போகும் போதும் பிடித்து அனுப்பமாட்டார்கள்,  என்று வழக்கறிஞர் கூறியதால் மூன்றாவது பிள்ளையையும் இங்கு பெத்தனர். இருந்தும் விசா கிடைக்கவில்லை.

  வனஜா காசு சேர்ப்பதில்கெட்டிக்காரி. பெனிபிட் காசு, கணவனின் சம்பளப்பணம் எல்லாவற்றிலும் மிச்சம் பிடித்து தானே சீட்டுப்பிடித்து தன் சேமிப்பைப் பெருக்கிக் கொண்டாள். மாமனாரையும் ஏஜன்ட் மூலம் எடுப்பித்தாள்.  வீட்டுக்குக் காவலும் ஆயிற்று. வயது முதிர்ந்தவருக்கு பெனிபிட் கூடக் கிடைக்கும் என்பதால் மாமனார் வந்தது காசுமாயிற்று.

 அதுவும் திருப்தியளிக்காமல் 'சிங்கிள் மதர்' திட்டம்  அதாவது கணவனைப் பிரிந்து வாழ்தல் என்னும் திட்டத்தில் தன்னையும் இனைத்துக்கொண்டாள். சந்திரன் தன்னைக் கைவிட்டுச் சென்றதாகக் கூறி அதற்குப் பொய் ஆதாரங்களைக்காட்டி அதிகளவு பெனிபிட் பணம் பெற்றுக்கொண்டனர்.  புலம் பெயர்ந்த நாடுகளில் வனஜா போன்ற பலர் இவ்வாறுதான் வாழ்க்கை நடத்துகின்றனர்.  இப்படியான சிலரால் தான் தமிழனின் கலை, கலாச்சாரம் என்ற சொற்களும் அர்த்தமற்றுப்போகின்றன.  மனிதரை மட்டுமல்ல அரசாங்கத்தை ஏமாற்றினாலும் கடவுளை ஏமாற்றுகிறோம் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை.

'பெனிபிட் ஒப்பீஸில் இருந்து ஆட்கள் வீட்டிற்கு வந்துபார்க்கும் போது சந்திரன் வீட்டில் நின்றால் வனஜா என்ன கானா புனா என்றா?... சொல்லுவா?'  என்று சபா கேட்டபோது சிந்து சிரித்துக்கொண்டாள். ஏனெனில் கனாபுனா என்பது அவனது பாசையில்... 'கள்ளப்புருசன்'.

சிந்து தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவள். அயலில் இருப்பவர்களுடன் அந்நியோன்யமாக வந்த இடத்தில் வாழவேண்டும் என நினைப்பதால் வனஜாவின் நட்பை விலக்கிக் கொள்ளாமல் சமாளித்து வந்தாள். ஒருவர் எத்தனை தீமை செய்தாலும் ஒருவர் எமக்குச்செய்த நன்மையை கருத்தில் கொண்டு தீமையை மறந்துவிடவேண்டும். கூடியவரை நேர்மையாக வாழவேண்டும். எம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்றிருப்பவள்.  இதே கருத்துக்களை சபாவும் உடையதால் இருவருக்கும் எல்லா விடயங்களிலும் ஒத்துப்போயிற்று.

அதேபோல் வனஜாவிற்கும் சந்திரனுக்கும் பணம் எப்படியாயினும் சேர்த்தால் சரி என்ற கொள்கை உடையதால் இருவருக்கும் ஒத்துப்போயிற்று. பெனிபிட் பணம,; களவாக வேலை செய்து வந்த பணம், சீட்டு பிடித்தபணம், என்றெல்லாப் பணமும் பெருக வங்கியில் குறிப்பிட்ட பணத்திற்கு மேல் வைத்திருந்தால் பெனிபிட் பணம் பெறமுடியாது என்பதால் எல்லாருடைய கழுத்து, கைவிரல்கள், மணிக்கட்டு, காது போன்றவற்றில் நிறை அதிகமான தங்க நகைகளாக மின்னின. ஊரில் இருக்கும் போது எவ்வளவு கஸ்டப்பட்டதையும் மறந்து தமது சிறுபிள்ளைக்குக் கூட 'நகை போடாட்டி மதிக்கமாட்டினம், ஏழை எண்டு சொல்லுவினம்' என்று கூறுமளவிற்கு மனதில் பதியவைத்துள்ளனர். 'காணாததைக் கண்டவர்கள் இப்படித்தான்.' சபா சிந்துவிடம் கூறிக்கொள்வதுண்டு.

வனஜா நகைக்கடை வைக்குமளவிற்கு நகைகளாகச் சேர்த்துவைத்தாலும் பணத்தைப் பெருக்கவும் அறிந்து அதனை நடைமுறைப்படுத்தினாள். அதாவது உறவினர், தெரிந்தவர்க்கெல்லாம் வேறு யாரோவிடம் வேண்டிக் கொடுப்பது போல் ஐந்துவட்டிக்குக் கடன் கொடுப்பது.  ஐந்து வட்டிக்குக் கொடுத்தாலும் வட்டி சரியான நேரத்தில் கறப்பதிலும் அவளுக்கு நிகர் அவள்தான்.

 இத்தனைக்கும் ஊரில் சைவப்பள்ளியில் ஏழாம் வகுப்புவரை தான் படித்தவள். ஆனால் உலகத்து அனுபவங்கள் எல்லாம் அத்துப்படி.  ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாவிடினும் ஆங்கிலம் தெரிந்தது போல் நடித்துக்கொள்வாள்.  பெனிபிட் , வீட்டுக்காசு, வங்கி அலுவல்கள், பிள்ளைகளின் பாடசாலை அலுவலகள் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடல் அவசியம் என்றால் ஆரம்பத்தில் சபா மூலமாகவும் இவைகளின் கள்ள வேலைகளுக்கு சபா மறுத்துவிட தற்போது கெஞ்சிக் கூத்தாடி சிந்து மூலமும் தன் அலுவல்களை முடித்துக்கொள்வார்கள். எனவே அவர்கள் சபா, சிந்து குடும்பத்தவரோடு சுயநலத்துடன் கூடிய நட்பை வைத்துக்கொண்டனர்.

என்ன காசு, நகை சேர்த்தாலும் விசா கிடைக்காதது வனஜா குடும்பத்தவருக்கு பயத்துடன் கூடிய கவலையே. அதனால் அடிக்கடி சிந்துவிற்கு தொலைபேசியில் புலம்பிக்கொள்வாள்.

'அக்கா! விசா இல்லாதவையை பிடித்து அனுப்பப் போகினமாம்.  மத்தியானச் செய்தியிலை சொன்னதாம். நீங்கள் கேட்டனீங்களே? உங்களுக்கு விசா இருக்குத்தானே எங்களுக்கு தான் இந்தக்கண் கெட்ட கடவுள் கண்ணைத்திறக்குது இல்லை!...' தனக்குக் கஸ்டம் என்றால் கண்டபடி கடவுளைத் திட்டுவாள்.  செய்தி போறநேரத்தில் தான் அவர்கள் சினிமாப்படம் டிவிடியில் பார்ப்பதால் சிந்துவிடம் தான் செய்திச் சுருக்கம் கேட்பாள். மற்ற நேரங்களில் எல்லாம் சின்னத்திரைதான். ஓவ்வொரு சின்னத்திரையிலும் தானும் அந்தப் பாத்திரமாக மாறி பேசிப்பேசி சின்னத்திரை பார்க்கும் போது அவளைப்பார்க்கச் சிரிப்பாக இருக்கும்.

தற்போதைய அவளுடைய பிரச்சனை வயதுக்கு வந்த தன் ஒரே மகளான சத்தியாவின் சாமத்திய வீடு பெரிதாகச் செய்து முடிப்பது... அதுவும் அவளது ஒன்றுவிட்ட சகோதரியை விடப் பெரிதாகச்செய்து முடிப்பது தான் முக்கியம்... அவர்கள் பல வருடங்களாக இங்கிருந்து பிரிட்டிஷ் பிரஜா உரிமை பெற்றவர்கள்.
அவர்களுடன் தான் போட்டி... இதனால் தற்போது வனஜா  கஸ்டப்படுத்துவது சிந்து, சபா குடும்பத்தவரைத்தான். தெலைபேசியிலும் சரி அலைக்கழிப்பதிலும் சரி.  கொஞ்சம் இடம் கொடுத்தால் மிஞ்சுவாள் இந்த வனஜா....

சத்தியா வயசுக்கு வந்து பன்னிரன்டு நாட்களாக பாடசாலைக்கும் விடவில்லை. சத்தியாவின் வகுப்பாசிரியை ஒரு வெள்ளைக்கார பெண்மணி. 'அவவிடம் ஆலாத்தி கழிப்புக் கழித்தபின்தான் பாடசாலைக்கு அனுப்பமுடியும்' என்று கூறும்படி சிந்துவை வற்புறுத்தினால் வனஜா. அப்படியெல்லாம் சொன்னால் அவர்களுக்குப் புரியாது என்பதால் எமது தமிழ்க்கலாசாரத்தின்படி ஒரு வைபவம் முடித்தபின்பு அனுப்பிவைப்பதாக வனஜா சார்பாக ஆங்கிலத்தில் விளக்கினால் சிந்து. அதற்கு அந்த வகுப்பாசரியைக்கு கோபம் வந்துவிட்டது. 'இது கடவுளால் நியமிக்கப்பட்ட ஒரு இயற்கைச் சம்பவம்.  இதனை ஏன் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி அசிங்கப்படுத்தவேண்டும். உங்கள் நாட்டில் தானே உலகமே வியக்கும் வண்ணம் பெண்கள் பேராட்டத்திலும் ஆண்களுடன் சரிசமமாக இணைந்துள்ள போது நீங்கள் இப்படிச்செய்வது பெண் இனத்தையே இழிவுபடுத்துவது போல் உள்ளது.'

 பரீட்சை வருவதால் பிள்ளைக்கு இப்படியான நேரங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கிப் பாடசாலைக்கு அனுப்பிவைக்கும் படி எச்சரித்தாள். சிந்துவுக்கு அவமானமாகப் போய்விட்டது... வனஜா காதில் விழுத்தியதாகத் தெரியவில்லை....

அவளுக்கு நாட்டுப்பற்றும் இல்லை. நாட்டுப்பிரச்சனை காரணமாக எம்மவர் சாப்பாடும் இல்லாமல் அங்கு கஸ்டப்படுவதும் கவலையில்லை. அவளது பிரச்சனை முதல் சாமத்திய வீடு... அடுத்தது விசா....

'அக்கா வெள்ளைக்காரிக்குத் தெரியுமே! எனக்கு ஒரு பெண்பிள்ளை தான் என்டு. அவளுக்கு சாமத்தியவீடு செய்துபார்க்காமல் நான் உயிரோடை இருந்து என்னத்திற்கு...? அதோடை நான் கொடுத்து வைத்த காசு, நகை எல்லாம் வாங்கவெல்லே வேணும்....' என்று அலுத்துக்கொண்டாள் வனஜா.

சிந்து எரிச்சலுடன் மௌனமாய் இருந்தாள். வனஜா தொடந்தாள்.
'கழிப்புக் கழிக்காவிட்டால் 'பே' பிடித்தால் பின்பு நான் என்ன செய்ய?..' தான் சாமத்திவீடு செய்வது சரி என்பதை நியாயப்படுத்துவதில் தான் குறியாக இருந்தாள்...

'காசுப்பே' பிடித்தது உண்மையில் வனஜாவிற்குத்தான் என சிந்து மனதிற்குள் எண்ணியபடி வனஜாவோடு தொடர்ந்து பழகுவதில் கவனமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தாள்.

தான் நினைத்தது போல் ஆடம்பரமாக 'சாமத்தியவீடு' செய்து முடித்தாள் வனஜா...

மிகவும் பிரபல்யமான மண்டபம், அழகான மணவறை, மண்டப அலங்காரம், விலை அதிகமும் 'ருசி' அதிகமுமான பலகாரம், மதியபோசனம், மிகப்பிந்திய நாகரீகத்தில் புடவை, தலை அலங்கார நிபுனர்கள் மூலம் தேவலோகரம்பை போல் சத்தியா வெளிக்கிடுத்தி நகைக்கடைப்பொம்மை போல் நகைகளை அடுக்கி, டிஜிற்றல் வீடியோ, டிஜிற்றல் கமராவில் புகைப்படங்கள் என சாமாத்தியவீடு தடல் புடலாக முடிந்தது.

சாமத்தியவீடு நடந்ததால் பொருட்களாகவும், சரீர உதவியாலும், மனதாலும் சங்கடப்பட்டது சிந்துவும் சபாவும் தான். சாமத்தியவீட்டிற்கு முதல் நாள் இரவு சிந்து வீட்டு சாப்பாட்டறை தொடக்கம் வரவேற்பறை வரை வனஜாவின் உறவினர் தங்கினர். ஊரில் கிணற்றில் அள்ளிக் குளித்துவிட்டு வெளிக்கிடுவது போல் இலண்டனில் கடும்குளிரில் செய்ய முடியாது தானே?... சாதாரண நாட்களில் சுடுநீர்க்குளியல் முடித்து வெளிக்கிடுவது பெரும்பாடு...
சாமத்தியவீடு அன்று அவ்வளவு பேரும் குளித்து வெளிக்கிட்டு மண்டபம் போகவே போதும் என்றாகிவிட்டது.

அத்துடன் வனஜாவின் சாமத்தியவீட்டின் பின்பு சிந்துவுக்கும் சபாவிற்கும் இன்னொரு பயமும் தொற்றிக்கொண்டது. தங்களது எட்டுவயது மகளும் தனக்கும் இப்படிச் சாமத்திய வீடு செய்ய வேண்டும் என எதிர்பார்த்தால்....??

தொலைபேசி ஒலித்தது...

மறுமுனையில் வனஜா....

'அக்கா ஆயிரம்பேரை சாமத்தியவீட்டிற்கு எதிர்பார்த்தோம்.... ஆனால் வந்தது ஜநூறுக்குக் கிட்டத்தான். அதனால் சாப்பாடுகளும் மிஞ்சிவிட்டது. காசும் நட்டமாகிவிட்டது. ஆறாயிரம் பவுண்ஸ் வரையில் செலவாகியது. ஆனால் சேர்ந்தது காசு, நகையாக மூவாயிரம் பவுண்ஸ் வரைதான்...' தொடர்ந்து வராமல்விட்டவர்களுக்கும், தான் கூட கொடுத்து கொஞ்சம் போட்டுவிட்டுப்போனவர்களுக்கும் திட்டுவது தொடர்ந்தது..........?'

சிந்துவுக்கு வனஜாவும், சந்திரனும் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு நிற்பது போல் தெரிந்தது......

சிந்துவின் மகன் பழைய சாறி ஒன்றை பிழையாகத் தனக்குச் சுற்றிக்கொண்டு அப்பா இப்படித்தான் அக்காவின்ரை சாமத்தியவீட்டிற்கு அக்கா நடந்து வருவா என அன்ன நடை நடந்துகாட்டினான்...?

சபாவும் உண்மையாகவே தலையில் துவாய்த் துண்டைப் போட்டுக்கொண்டான்..... சிந்து விக்கித்து நின்றாள்.....


5. 03. 2007