Search This Blog

Sunday, August 9, 2020

சித்தர் சரநூல் சாஸ்திரம்

 சித்தர் சரநூல் சாஸ்திரம் என்பது சிவன் பார்வதிக்குச் சொல்லி , பார்வதி நந்திதேவருக்குச் சொல்லி, நந்திதேவர் அகஸ்தியருக்குச் சொல்லி, அகஸ்தியர் பதிணென் சித்தர்களுக்கு சொல்லி, சித்தர் பரம்பரை வரும் அனைவருக்கும் இரகசியமாக உபதேசிக்கப்பட்டு வருவது.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120ஆண்டுகளாகும்.

ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும, உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற் போல் ஆயுள் குறைகிறது.
நாம் செய்யும் காரியங்களில் வெற்றி பெறவும், காரியத்தடை நேராமல் தடுத்துக் கொள்ளவும், பலன்களைச் சொல்வதற்கும், கேள்வி கேட்கும் நபருக்கு காரிய சித்தியாக்குதலையும், இன்னும் பல காரியங்களுக்கும் இந்த சரநூல் சாஸ்திரம் பயன்படுகிறது. சரம் பார்க்கத் தெரிந்தவனே "பார்ப்பான்" என்று அழைக்கப்படுகிறான். சரம் பார்க்கத் தெரிந்தவனிடம் எந்த மோதலையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே "சரம் பார்ப்பவனிடம் பரம் போகாதே" என்று வழக்குச் சொல்லில் கூறுவர். சரமே இறைவன், எனவே அகத்தியர் தனது சரநுநூல் சாஸ்திரத்தில், சரத்தை இறைவனுக்கு சமமாகவும் பஞ்சபூதங்களின் ஒடுக்க ஸ்தானமாகவும் கூறுகிறார். 

சூரிய கலை, சந்திர கலை அவற்றின் வேகம் மற்றும் எண்ணிக்கையைப் பற்றி பார்த்தோம். ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். 21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன. அவை ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சின் எண்ணிக்கையை குறிக்கும். 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.

இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

நந்தனார் கீர்த்தனையில் எட்டும் இரண்டறியாத மூடன் என்கிறார். 8-என்பது "அ" காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. 2-என்பது "உ" காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8×2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"

அகார(8), உகாரம்(2), யகாரம்(10).

தமிழ் எழுத்துக்களில் எண்ணாகவும் எழுத்தாகவும் திகழ்கின்றனவோ அவையே அகாரம்-ரவி, உகாரம்-மதி, மகாரம்-சுடர், இந்த மூன்றும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம்.

ரவி, மதி,சுடர் ஆகிய மூன்றிலும் இருப்பது சிகாரம் என்றழைக்கப்படும் நெருப்பு.

"நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும்"

"குழவியும் ஆணாம் வலத்தது ஆகில் குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்ட கால் ஒக்கிலே"
- திருமந்திரம் 482

உடலுறவில் இணைகின்ற ஆணுக்கு வலது நாசியில் சுவாசம் நடந்தால் ஆண்குழந்தை தோன்றும். சுவாசம் இடது நாசியில் நடந்தால் பெண் குழந்தை தோன்றும். சுவாசம் சுழுமுனையில் நடந்தால் தோன்றும் குழந்தை அலியாகும். வலது அல்லது இடது நாசியில் சுவாசம் நடந்து அப்போது அபானன் என்ற வாயு எதிர்க்குமானால் இரட்டைக் குழந்தை தோன்றும்.
பிறவியிலேயே கூன், குருடு, ஊமை போன்ற பல குறைகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, காரணங்களை சித்தர்கள் சரநூலில் பல இடங்களில் கூறுகின்றனர். இதையே திருமந்திரத்தில

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாத உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை.
மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே"
- திருமந்திரம் 481

உடலுறவின் போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு மூளை வேகமாக செயல்படாது மந்தமாக இருக்கும். பெண்ணின் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகும். மலம், சிறுநீர் இரண்டும் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண் குருடாகும் என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.

"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாத்ர்க்கில்லை பார்க்கிலே"
- திருமந்திரம் 480

ஆணின் உடலிலிருந்து உயிரணுக்கள் வெளியேறும் நேரம் இருவரின் சுவாசமும் சரியான அளவில் இருந்தால் எந்தக் குறைபாடும் இராது. ஆனால் ஆணின் சுவாசம் தேவையான அளவை விட குறைந்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். சுவாசம் திடமின்றி வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.

"பாய்ந்த பின் அஞ்சோடிய ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடி பாரினில் எண்பதாம்"
- திருமந்திரம் 479

உயிரணுக்கள் வெளியேறும் நேரம் ஆணின் சுவாசம் ஐந்து மாத்திரை நேரம் பாய்ந்தால் பிறக்கும் குழந்தை நூறு வயது வரை வாழும். நான்கு மாத்திரை நேரம் ஓடினால் எண்பது வயதுவரை உயிர்வாழும். சுவாசம் வெளிப்படும் மாத்திரை குறைய குறைய ஆயுளும் குறையும்

"கொண்ட வாயு இருவருக்கும் ஒத்தொழில்
கொண்ட குழவியும் கோமளமாயிரும்
கொண்ட நல்வாயு இருவருக்கும் குழறிடில்
கொண்டதும் இல்லை கோல்வினையாட்கே"
- திருமந்திரம் 483

உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கும் சுவாசம் சீராக ஒரே அளவாக ஓடினால் தோன்றும் குழந்தை மிக அழகாக பிறக்கும் . சுவாசம் தாறுமாறாக ஓடினால் குழந்தை விகாரமாக பிறக்கும்.

சந்திர கலை சூரியகலை என்றால் என்ன?

சூரியன் உதிக்கும் போது ஓட வேண்டிய திதிகள் குறிப்பிட்டிருந்தோம். சூரியன் உதிக்கும்போது சூரியகலையில் அதாவது வலது நாசியில் ஓட வேண்டிய திதிகளில் காலை 6 மணிக்கு ஓட ஆரம்பித்து ஒரு மணிநேரம் கழித்து சந்திர கலை ஓட ஆரம்பிக்கும். மீண்டும் ஒரு மணிநேரம் கழித்து சூரிய கலை ஓட ஆரம்பிக்கும். இதே போல் சூரியன் உதிக்கும் போது சந்திர கலையில் ஓட வேண்டிய திதிகளில் சூரிய உதயத்தில் சந்திர கலையில் ஒரு மணிநேரம் மூச்சு ஓடி, பின் சூரிய கலையில் ஒரு மணி நேரம் மூச்சு ஓடி இப்படியே மாறி மாறி மூச்சு ஓடிக்கொண்டிருக்கும்.

"நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
-அருணகிரிநாதர் திருப்புகழ்

நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள ஜீவசக்தி) விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தைத் தெரிவித்த அருணகிரிநாதர் பின்னரே வேத மந்திர சொரூபனான இறைவனுக்கே வணக்கம் தெரிவிக்கிறார். இதையே திருப்புகழில்

"அருகுநுனி பனியனைய சிறிய துளி
பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்"
என்று கூறுகிறார். ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழ வைக்கக்கூடிய உயிர்ச் சக்தியைப் பெற்றிருக்கின்றன. எனவே "விந்து விட்டவன் நொந்து கெட்டான்" என்று சித்தர்கள் கூறுகின்றனர். நாம் அணியும் திருநீறு வெள்ளை நிறமாக இருந்து இந்த விந்தையே குறிக்கிறது. குங்குமம் சிவந்த நிறமான பெண்களின் நாதத்தைக் குறிக்கிறது.

இதையே உலக இயக்கம் என்பதால் குங்குமமும், திருநீறும் நெற்றியில் அணிகிறோம். எல்லோருமே நாத விந்து சொரூபர்களே.....

ஆண், பெண்களின் சேர்க்கையே லிங்க சொரூபம். இடப் பாகம் சக்தியென்பதால் லிங்கத்தின் இடது பாகம் நீர்த்தாரை வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் அந்த இடப்பாகத்தையே நோக்குவது போல இடதுபுறம் நந்தி சாய்த்துப் பார்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. சக்தியான சந்திரகலையை முதலில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே, இது கோயிலில் அமைப்பாக காட்டப்பட்டுள்ளது.

(சீனத்து அக்கு பஞ்சர் முறை நமது போகர் சித்தரால் கண்டுபிடிக்கப்பட்டு சீனத்தில் கையாளப்பட்டு வருகிறது அதில் "யின்" (yin)என்றால் இடப்பக்கம் என்றும் பெண் தன்மை என்றும், "யாங்" (yang)என்றால் வலப்பக்கம் என்றும் ஆண் தன்மை என்றும் கூறப்பட்டுள்ளது.)

"மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாலு நாலு முன்னிலொரு நாட்டமாகி நாட்டில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்.
ஆலமுண்ட கண்டராணை அம்மையாணை உண்மையே"

"இருக்கலாம் இருக்கலாம் அவனியிலே இருக்கலாம்
அரிக்குமால் பிரம்மனும் அகண்ட மேழ் அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிடாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும்"
- சிவ வாக்கியர்

மேற்கண்ட பாடல்களில் மூலமான மூச்சை சரியான படி அறிந்து அளவிட்டு 4 அங்குலமட்டில் ஓட விட்டால் பாலன் போன்ற தோற்றமும், பரப்பிரம்மான இறைவனுக்குச் சமமாகவும் ஆகலாம் என்று சிவவாக்கியர் இறைவன், இறைவி மீது ஆணையிட்டுக் கூறுகிறார்.

இந்த அவனியான பூமி இருக்கும் வரை, அரி, மால் பிரம்மன், அண்டங்கள் இவற்றைக் கூட படைக்கலாம், அழிக்கலாம் காலிடாத கண்ணிலே என்ற மூச்சுவிடாத (கால் என்றால் காற்று) நிலை அடைந்தால் நெற்றிக்கண்ணில் நெருப்பறை திறக்கும். ன்நெருப்பறை திறக்குமானால் , நீ நான் அனைவரும் ஈசனே....

உண்ணும் போது உயிரெழுத்தைஉயரேவாங்கு
உறங்குகின்ற போதெல்லா மதுவேயாகும்.
பெண்ணின் பாலிந்திரியம் விடும்போ தெல்லாம்
பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு
தின்னுங் காயிலை மருந்தும் அதுவேயாகும்.
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணு}ழி காலமட்டும் வாழ்வார் பாரு.
மரலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.
- அகத்தியர்தம் ஞானப்பாடலில் இவ்வாறு கூறுகிறார்.

எல்லா வைத்திய முறைகளும் உடலில் ஏற்படுகின்றன பிணிகளைப் போக்கிக் கொள்ளும் முறைகளைப் பற்றிமட்டுமே கூறுகின்றன. அதிலும் சில நோய்கள் மனித குலத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் சவாலாகவே அமைந்திருக்கின்றன.

ஆனால் சித்தர்களோ உடலில் ஏற்படுகின்ற வியாதிகளின் எண்ணிக்கை 4448 வியாதிகள் என்று குறிப்பிட்டுச் சொல்வதுடன் அவற்றைப் போக்கும் முறைகளையும் தெளிவுபட விளக்கியுள்ளனர்.

இதற்கு மேலும் ஒருபடி சென்று மரணம் என்பதும் ஒரு பிணி என்று கூறுவதுடன் மரணம் மாற்றும் முறைகளையும், மரணமிலாப் பெருவாழ்வு என்பதனையும் விளக்கிச் சொன்னதுடன் கடைபிடித்து வெற்றியும் கண்டுள்ளனர்.

குரு குல கல்வி முறையில் இவையெல்லாம் ஒரு காலத்தில் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த மேம்பாடான கல்விமுறை அழிந்து தற்கால சந்ததியினருக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே. தற்கால சந்ததியினர் மேற்கத்தைய கல்வி முறை ஆங்கிலேயர் காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டது.

அந்தக் கல்வி முறை மூலம் உருவாகும் இவர்கள், சுயம் என்பது போய் தன் காலில்நிற்கத் தெரியாதவர்களாகவும், அரசாங்க வேலையை எதிர்பார்த்து, அதற்கு கையூட்டு கொடுப்பவர்களாகவும், கொடுத்த கையூட்டை, மறுபடி மக்களிடம் அதே கையூட்டின் மூலம் வசூலிக்கும் அக்கிரமக்காரர்களகவும் மாறி கடைசியில் நிம்மதியை தொலைத்து, முறையற்ற வழியில் பணம் தேடும் பிசாசுகளாய் வாழ்ந்து, முடிவில் இறந்தே போகுபவர்களாவே உள்ளனர்.

இந்த சரநூல் சாஸ்திரத்தைக் கொண்டு நோய்களை போக்கிக் கொள்ளவும், நமக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொள்ளவும் என் குரு காகபுஜண்டர் பெருமானின் அருளாசியால் நீங்கள் கற்றுக் கொள்ள இங்கு இறைவன் கருணை புரிந்து இருக்கின்றான் போல.....

சித்தர் சரநூல் கற்போம்
சராசரம் வெல்வோம்!!!!
http://amuthasurabhii.blogspot.com/

No comments:

Post a Comment