Search This Blog

Wednesday, March 1, 2017

ஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்

ஜெயகாந்தன்:எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்-ஜெயமோகன்
“ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால், அவன் ஒரு பேட்டியிலோ ravisuஅல்லது ஆவணப்படத்திலோ ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. இலக்கியம் சார்ந்த நோக்கில் இத்தகைய ஆவணப்படுத்தல்களுக்கு எந்த இடமும் இல்லை.
ஆனால் நமக்கு இலக்கியவாதி என்ற ஆளுமை தேவைப்படுகிறது.  வள்ளுவரும் கம்பனும் எப்படி இருந்தார்கள் என நாம் அறிவதில்லை. ஆனால் அவர்களைப்பற்றிய கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. அவர்களை நாம் மனக்கண்ணில் வரைந்துகொள்கிறோம். இன்று அவர்களுக்கு முகங்களை உருவாக்கியிருக்கிறோம். தாடிமீசையுடன் வள்ளுவரும், அடர்ந்த பெரிய மீசையுடன் கம்பரும்.
ஏன்? காரணம் நாம் படைப்பை படிக்கையில் படைப்பாளியுடன் உரையாடுகிறோம் என்பதே. அருவமான எழுத்தாளனுடன் நம்மால் பேச முடிவதில்லை. நமக்கு உருவம் தேவையாகிறது. எந்தக் காரணத்தால் கடவுள்களுக்கு உருவம் அமைந்ததோ அதே காரணத்தால்தான் நாம் கலைஞர்களுக்கும் உருவம் அளிக்கிறோம்.
பெரும் கலைஞர்களின் உருவத்தைப் போற்றுவது உலக மரபு. ஹோமரின் சிலை நமக்குக் கிடைக்கிறது. நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டிருக்கிறார். புகைப்படக்கலை வந்தபின்னர் இது இன்னும் முக்கியமானதாக ஆகியது. பாரதியின் பாடல்களுக்கு நிகராகவே அவரது தீவிரமான கண்கள் கொண்ட புகைப்படங்களும் ஆர்யா வரைந்த ஓவியமும் தமிழ் மக்களின் மனதில் பதிந்திருக்கின்றன. அந்த சித்திரங்களே கூட மக்களிடம் உக்கிரமாக உரையாடக்கூடியவையே. அவரது பாடல்களில் இருந்து அந்த முகத்தை பிரிக்க முடியாது
கலைஞனின் உடல் அவனுடைய கருத்துக்களின் பிம்பமாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் அது அவன் சொன்ன அனைத்துக்கும் உரிய குறியீடாக ஆகிறது. ஆகவேதான் நாம் கலைஞனின் உடலை ஆவணப்படுத்துகிறோம். நம் நாட்டில் முறையான ஆவணப்பதிவுகள் அனேகமாக இல்லை. இப்போதுதான் தொடங்கியிருக்கின்றது. ரவிசுப்ரமணியன் இயக்கிய ‘ எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக்கலைஞன் - ஜெயகாந்தன் ‘ என்ற ஆவணப்படம் அதில் ஒரு முக்கிய சாதனை.” 




மா. அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் 
ஆளுமைகள் குறித்த ஆவணப்படங்களோ, ஆளற்ற பொட்டலில் மேடைப் பேச்சு போல் பரிதாபத்துக்குரியவை. இந்த அவலங்களின் மிகச் சில விதிவிலக்குகளில் ரவிசுப்ரமணியனின் 'மா.அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும்' ஒன்று.
இந்திரா பார்த்தசாரதி எனும் நவீன நாடகக் கலைஞன்
 நூற்றுக்கணக்கான விவரணப்படங்களையும் குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் தொலைக்காட்சிகளுக்காக தயாரித்திருக்கிற ரவிசுப்ரமணியன், அவ்வகை தொலைக்காட்சிப் பார்வையாளர்களைத் தவிர்த்து விட்டு, அதன் பாதிப்புகளிலிருந்தும், அதன் எளிமையிலிருந்தும் விலகி, இந்திராபார்த்தசாரதி என்ற நாடகாசிரியரைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்திருப்பதில் தனது அடுத்த கட்டப் பாய்ச்சலை நிரூபித்திருக்கிறார்.




சைவத்தமிழ் வளர்க்கும் சேக்கிழார் அடிப்பொடி 

திருலோகம் என்றொரு கவி ஆளுமை 
திருலோக சீதாராம் மறைந்து பல ஆண்டுகளாகின்றன. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவருடைய நூற்றாண்டே வரப்போகிறது. ஆனால் இந்த ஆவணப்படத்தைப் பார்த்துமுடித்த தருணத்தில் நம்மிடையே அவர் இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்னும் எண்ணம் சட்டென எழுந்ததை உணர்ந்தேன். ஏன் அப்படி நினைத்தேன் என ஒருகணம் யோசித்த பிறகுதான் புரிந்தது. - பாவண்ணன்
Thanks http://azhiyasudargal.blogspot.com.au

No comments:

Post a Comment