Search This Blog

Thursday, January 8, 2015

“தமிழ் மண்ணே வணக்கம்” சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்கள்

சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்கள் “தமிழ் மண்ணே வணக்கம்” என்ற நிகழ்வில் பேசியது
மண் என்பது பண்பாட்டின் அடையாளம். இதுவரை இந்தியாவில் 70 ஆயிரம் கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. அதில் தமிழ் மொழி சார்ந்த கல்வெட்டுகள் மட்டும் 45 ஆய
ிரம். இவ்வளவு பெரிய பாரத கண்டத்தில் எழுதவும், படிக்கவும் கல்வியறிவு பெற்று திகழ்ந்த மண்ணாக இந்தியாவில் முதல் பெரும் பகுதியாக இருந்தது தமிழ் மண்தான். அசோகர் கால, புத்தர் கால, முகலாயர்கள் கால கல்வெட்டுகள் நமக்குத் தெரியும்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத ஓர் அதிசயம் இருக்கிறது. இந்தியாவில் எல்லா இடங்களிலும் கல்வெட்டுகளில், செப்பேடுகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும்தான் பூமிக்கு அடியில் கிடைக்கிற பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் பயன்படுத்திய பானை ஓடுகளில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. அதனுடைய அர்த்தம் என்னவென்றால் கல்வெட்டுகளிலோ, செப்பேடுகளிலோ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தால், அது அரசன் சம்பந்தப்பட்டது.
அரசன் உத்தரவு இல்லாமல் அரசனின் அனுமதி இல்லாமல் கல்வெட்டுகளிலோ, செப்பேடுகளிலோ எழுத்துக்களைப் பொறிக்கமுடியாது. ஆனால், பானை ஓடுகளில் எழுத்துக்கள் இருக்கிறதென்றால் அது, சாமனியப்பட்ட மக்களுடைய எழுத்தறிவின் அடையாளம். இவ்வளவு பெரிய எழுத்தறிவு சார்ந்த நாகரிகமாக இந்த தமிழ் மண் இருந்திருக்கிறது.
‘உலக பண்பட்டின் தொட்டில் கிரேக்கம்’ உலகத்தின் மூத்த மொழி கிரேக்க மொழி. ஆனால், கிரேக்கத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வெறும் ஆறு பெண் எழுத்தாளர்கள் மட்டுமே இருந்தார்கள். சமசுகிருத இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள் இல்லை.
ஆனால், ‘சங்க இலக்கியங்கள்’ என்று சொல்லப்படுகிற பழந்தமிழ் இலக்கியத்தில் எத்தனை பெண் எழுத்தாளர்கள் இருந்தார்கள் தெரியுமா? ஒன்றல்ல, இரண்டல்ல 46 பெண் எழுத்தாளர்கள் இருந்தார்கள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 46 பெண் எழுத்தாளர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ்தான் என்பதை உங்கள் நெஞ்சிலே பதித்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment