Search This Blog

Showing posts with label Tamil Kavithaikal. Show all posts
Showing posts with label Tamil Kavithaikal. Show all posts

Thursday, December 22, 2016

காதல் கவிதை, கல்யாண்ஜி (வண்ணதாசன்)

 

பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.
………………………………………………………….கல்யாண்ஜி 
வண்ணதாசன் குறித்து
 புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)
  • வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.
 

Sunday, December 4, 2016

இரவின் நியமங்கள்



நாட்குறிப்புகள்
தண்ணீரின் நிறத்தில் இருக்கின்றன
அதிலிருந்து எழும் சத்தங்கள்
சங்குக்குள் அடைபட்ட அரூப அலைகள்

கொடிமாசிகளில் இருந்து
ஒரு குடம் தண்ணீர் எடுக்க நினைப்பது
எத்தகைய மூடத்தனமோ
அத்தகையதே
இவ்வாழ்வில் சேர்க்க நினைக்கும் எல்லாம்

உயிரைத் தவிட்டின் கதகதப்பில்
இவ்விரவு கிடத்திய போது
உடலைத் தொப்புள் கொடியெனப் பற்றியது

பின் என்ன செய்ய முடியும்
உடலை விட்டத்தில் இரண்டு முடிச்சிட்டு அத்தொட்டிலில் உயிரை வைத்தால்
அது காகத்தின் குஞ்சென அயராமல்

வெளிச்சத்தை வாசம் என்றும்
வாசத்தைச் சிங்கக்குட்டி
என்றும் பிதற்றியது
உடலைச் செட்டைவிரித்து எழும் கழுகு
எனப் பகடி செய்தது

உயிரின் கண்கள் மலைவாசஸ்தலம்
அதற்குத் தாலாட்டு எளிதல்ல
உறங்குவதுமில்லை

இரவின் நியமங்களை அறிந்தபின் சொல்கிறேன்
பிரிவின் முகம் விடியற்காலை

- தேன்மொழி தாஸ்
4.12.2016
3.34 am

Friday, November 25, 2016

நீங்காத இரகசியங்கள் நிரம்பியதாக


Sakthi Jothi
1.
காரணமேதுமின்றியே 
இன்று காலையில்
நினைவுக்கு வந்தது
தாழம் பூக்களின் வாசனை

பூக்கள் என்றாலே
வண்ணத்திற்கும் முந்தி நிற்பது
வாசனைதான்
அதிலும்
தாழம்பூ தனிவகை

இரவு மின்னலின் போது
இரகசியமாக இதழ் அவிழும்
இந்தப் பூவிற்கு
மயக்கும் மணம் உண்டு

இயலும் மட்டும்
எல்லோருக்கும்
பார்த்துப் பார்த்துச்
செய்யப் பழகியதாலோ என்னவோ
எனக்கென
எதையும் செய்து கொள்ளத்
தோன்றாதவளாகவே இருக்கிறேன்

சிறுபிராயத்தில்
ஒற்றைப் பின்னலிட்டு
தாழம்பூச் சூட்டி விடும் போது
அம்மா சொல்வாள்
“தனக்கென்று
தனிநிறம் இல்லாமல் போனாலும்
ஊருக்கென்று மணக்குமாம் தாழம்பூ”



2.
உலர்ந்த திராட்சைகளை
அறிவாய்தானே தோழி
அனலோடிய எனதுடல்
இப்போது
அப்படித்தான் வாடியிருக்கிறது

மாநகர அடுக்ககத்தின்
சின்னஞ்சிறு இடுக்குகளிலிருந்து
புறாக்களின் குரல் கேட்டுத்தானே
இன்று கண் விழித்தேன்

தோழி
நீ அறியக்கூடாத இரகசியம்
ஒன்றுமில்லை என்னிடம்
தலைவன்
என்னைவிட்டு நீங்கிய நாள்
ஓர் அமாவாசை இரவு

நிலவோடு சேர்ந்து நாட்கள்
வளர்ந்து கொண்டிருக்கின்றன
தேய்ந்து மறைகின்றன
அவன் நினைவில்
ஊர்முழுக்க
அலைந்து திரிந்த பிறகு
அன்றாடம் வீடடைகிறேன்

முன்பு
அவன் நிகழ்த்திய
எந்த ஆட்டத்திலும்
பங்கு கொள்ளாமலேயே
பரிசு பெற்றாற் போல
மகிழ்வுற்ற மனம்தான்
இப்போது
எனதிந்த துன்பத்திற்கு காரணம்

உடுத்திய ஆடைகளை
அவிழ்ப்பது போல
அவ்வளவு எளிதல்ல
உறுத்திடும் நினைவுகளை களைவது
அது என்னை
மேலும்
தளர்வடையச் செய்துகொண்டிருக்கிறது தோழி.



3.
அதற்காக நடந்த யுத்தங்களை
அதற்காக சரிந்த ராஜ்யங்களை
அதன்பொருட்டு உருண்ட மகுடங்களை
அதை வேண்டி
மரித்த உயிர்களைப் பற்றி
பலவாகப் படித்த போதெல்லாம்
அவள் நம்பவேயில்லை

பேதையாக இருந்து
பேரிளம் பெண்ணென
அவள் வளர வளர
அதிலிருந்து மீள முயன்று
மீண்டும்
அதற்குள்ளாகவே வீழ்கிறவர்களாக
அநேகமானவர்களை சந்தித்து விட்டாள்

உயிர்ப்புடையதாக
நீங்காத இரகசியங்கள் நிரம்பியதாக
குறையாத அதிசயங்கள் கொண்டதாக
மென்மேலும் கொண்டாடப் படவேண்டியதாக
தன்னுடலை உணர்ந்துகொண்டிருக்கும் அவள்
இப்போது அறிந்திருக்கிறாள்
ஒரு ஆணுடைய வாழ்வின்
அதிஅவசியமான தேவை அதுவென.

Monday, November 7, 2016

இருள் , மாரிக்கால கானகம்


வெகுநாட்களாக
உறக்கமின்றி தவிக்கும் ஒருத்தி
நாளடைவில்
இரவுகளை வெறுக்கத்தொடங்கினாள்

அவளைக் கண்வருடி
கதைசொல்லி
உறக்கத்திலாழ்த்த தெரிந்தவன்
வெகுதொலைவிலிருக்கிறான்

அவனுடன்
இணைத்துக் காணுகிற
இரவின் சித்திரங்களை
மனச்சுவற்றில் தீட்டிகொண்டிருந்தாள்

தீராத பக்கங்களைக் கொண்டதாக
அச்சுவர்
பெருகிக் கொண்டே இருந்தது

அவ்விரவு வேளைகளில்
நிலைகொள்ளாமல் தவிக்குமவள்
பகல்களை
தன்னிடமிருந்து விலக்க
விரும்புவதேயில்லை

அவனுடைய
வருகை நிகழ்த்தும் பகல்களில்
கிடைக்கிற கதகதகதப்பை
இருள் அவளுக்குத் தருவதேயில்லை.


மாரிக்கால கானகம்
மனதை ஈர்க்கக் கூடிய
மர்மமான பாதைகள் கொண்டதாக
எப்போதுமிருக்கிறது

முன்பு உதிர்ந்த சருகுகள்
நைந்து ஈரவாசனையைப் பரப்ப
மரங்களின் தூர்களில்
பூத்திருக்கும் காளான்களின் மிளிர்வு
அழைப்பை ஒளிர்வுடையதாக்கும்

புழுக்களும் பூச்சிகளும்
பறவைகளும் விலங்குகளும்
உள்நுழைய விழையும் கால்களைத்
தடுக்கும்

மரக்கிளைகளில் வழிந்து
இலைகளின் வழியே
விட்டு விட்டுச் சொட்டுகிற துளி
மறுபடியும் மறுபடியும் அழைக்கும்

ஒருபக்கம் அச்சம்
மறுபக்கம் அழைப்பு என
மழைக்காடு
மறுதலிக்கவியலாத
வசீகரமுடையது

காட்டிற்குள்ளாக
கால்களோடித் திரிய
வாய்ப்பற்ற பருவங்களில்
மனமே காடென விரிய
அவ்வனத்தின்
முடிவுறா புதிர்வெளிக்குள்
முகையரும்பிப் பூக்கின்றன
எண்ணிலியாய் கற்பனைகள்.


Sakthi Jothi

Thursday, October 13, 2016

கடலின் இரகசியத்தை உடலில் அறிந்துகொண்டாள்

தன்னுடல்
கடலின் நீலம் பொலிந்திருப்பதாக
அவனிடமிருந்து அறிந்துகொண்டாள்

நிலத்தின் நதியெல்லாம்
நிலைபெறுகிற கடல்
ஒரு ரகசியம்

கடலின் இரகசியத்தை
உடலில் கண்டறிவதும்
உடலின் இரகசியத்தை
கடலெனத் திறப்பதும்
அவர்களிடத்தில் நிகழ்கிறது

திறக்கத் திறக்க
திறந்துகொண்டே இருக்கிற
கடல்தான் உடலென்பதை
அவளறிந்த பொழுது
உணர்ந்தாள்
மூடவே மூடாத கடலின் திறப்புக்குள்
எத்தனை மூடிய இரகசியங்கள்
இன்னும் இன்னும் அவளறிய.



அதற்கு முன்பு
அவள் மிகச்சுதந்திரமானவளாக இருந்தாள்

தன்னைப் பறவை எனவும்
கூண்டினை விரும்புவதேயில்லை
பறவைகள்
எனச் சொல்லித் திரிபவள்தான் அவள்

அவன்
அவளை நேசிக்கத் தொடங்கினான்
அவளும் சம்மதித்தாள்

அவன்
அவளை கொண்டாடத் தொடங்கினான்
அவளும் சம்மதித்தாள்

அவன்
அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கினான்
அவள் அதை விரும்பினாள்

அவன்
இப்போது அச்சமடைகிறான்
அவள் அதனை அறியவில்லை

அவன் இப்போது
மேலும் அச்சமடைகிறான்
அவள் உணரவேயில்லை

அவன் இப்போது மேலும் மேலும்
அச்சமடைகிறான்
அவள் அதற்கு முன்பு
அவள் மிகச்சுதந்திரமானவளாக இருந்தாள்

பறவையின் இயல்பினை
என்றேனும் அவள் கைகொள்ளகூடுமென
கலங்கி கூண்டு ஒன்றினை
செய்யத் தொடங்கினான்.


Sakthi Jothi

Tuesday, October 4, 2016

கல்யாண்ஜி யின் கவிதை

அடிக்கடி
பார்க்க முடிகிறது யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண் புழுவைப் பார்த்து


காக்காய் கத்தி
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
காதில் விழவே காணோம்
உப்பு விற்கிறவரின் குரல்,
கோலப்பொடி விற்கிறவரின் குரல்.
என்னவோ ஆகத்தான் போகிறது
இந்த உலகத்துக்கு
இன்றைக்கு.



" உருண்டுகிடக்கிற
ஒரு பாறையின் முன்பக்கத்தை
எப்படித் தீர்மானிப்பது?
கம்பிக் கூடையில்
கடைக்காரர் வைத்திருக்கிற
முட்டைகளில் ஒன்றுக்கு
முன்பக்கம் எதுவென்று
சொல்கிறீர்களா யாராவது.
நாலாபக்கமும் பூத்திருக்கிற
நந்தியா வட்டைக்கு
எது முன்பக்கம்.
சூரியனுக்குப் பின்பக்கம்
என்று சொன்னவன்
சொல்லியிருக்கிறானா
முன்பக்கத்தைப்பற்றி.
கரையில் நிற்கும் நாம்
கடலின் எந்தப்பக்கம் பார்த்துக் கால்களை நனைக்கிறோம்.
பூவரசம்பூவின் பம்பரக்காய்
எந்தப்பக்கத்துத் தரையில்
விழுகிறது.
காற்றின் முன்பக்கம் எது.
இந்த கவிதைக்கு உண்டா
முன்பக்கம் பின்பக்கம்? "
__________________________________________
" மழை உங்களிடம்
இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சை புழுவைக் காணோம் வெகு நாட்களாக.
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக.
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக.
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக் கூடாது என்று தடுத்துவிட்டதாக.
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக.
இல்லை அல்லவா
அப்புறம் நீங்கள் ஏன்
மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேநீர் அருந்திக்கொண்டே
சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
__________________________________________
"எந்தச் சத்தமும் கேட்காமல் ஒரு கருப்பு இசைத்தட்டு சுழல்கிற  காட்சி இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது.
இரண்டு சிறகுகள் மாதிரி வெளிச்சம் பிரதிபலிக்க, வழவழப்பான
அரக்குக் கருப்பில், அவ்வப்போது ஒரு அலையில் ஏறி இறங்குகிற படகின் அசைவுடன் அது சுற்றுவது அழகுதான்.
ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால்
அதன் சத்தமற்ற,
ஒளிபரபப்படாத  மௌனம்
எத்தனை வதை."
__________________________________________
"தனி என்றால்,
நாங்கள் இங்கே இருக்கிறோம்
நீங்கள் அங்கே இருங்கள்.
குறுக்கே வரக்கூடாது
என்பது மாதிரி கூட இல்லை.
அது வேறு மாதிரி.
வெளியே தள்ளிக் கதவைப் பூட்டி,
சாவியையும் கடலுக்குள்
எறிந்தது போல இருக்கும்"
__________________________________________
"இந்த உலகம்
ண்ணத்துப்பூச்சி மயமானது
என்று யாரும் சொல்லவில்லை;
வண்ணத்துப்பூச்சிகளே அற்றது இவ்வுலகு என்று யாரும் சொல்ல முடியாது,
முழுக்க முழுக்க அன்பு அற்றவர்களாகி விட்டோமோ என்ன;
இன்னும் இல்லையே.
இந்த இன்னும் என்ற
வார்த்தைகளின் கீழே
வருபவைகள்தான்
என் கதைகள்"
_________________________________________
"சீட்டுக்கட்டுப்போல
இருளில் தெருவே
கலைந்து கிடக்க,
என் பாதையை நானே பொறுக்கிக்கொள்ள
வேண்டியதாகி விட்டது."
__________________________________________
"...தேவையற்ற இலைகளை உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாகப் பறவைகளும் இருக்கையில்,
-தேவையற்றதெல்லாம் உதிரும் படியாகவே வாழ்வும் இருக்கும்.
நாம் துளிர்க்க அனுமதித்தது போல, உதிர அனுமதிப்போம்.
தாவரமாக இருங்கள்.
விதை முதல் விதை வரை.
சின்னு முதல் சின்னு வரை, எல்லாம் அவ்வளவுதான்.
உங்கள் உள்ளங்கைக்குள் இருட்டு நுழைந்ததுபோல, ஒளியும் நிரம்பியிருக்கிறது என்பது எளிய உண்மை"
__________________________________________
எதிர்பார்க்கவே இல்லை
அந்தக் கவிஞரின் புதியவீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப்  பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள்
பதிக்க பட்டிருக்கும் என.
__________________________________________
நெடும்பொழுது
அனைத்தையும்  அணிந்து
நடக்கிறோம்.
சிறுபொழுது
எல்லாவற்றையும் களைந்து
கிடக்கிறோம்.
உயர உயரப் பறக்கிற பறவை
ஓரோர்கணம்
பறக்காமல் மிதக்கிறது.
இப்படிதான் இருக்கிறது
எல்லாமும் .

Sunday, September 25, 2016

தஸ்லிமா நஸ் ரீன் பெண்ணியக் கவிதைகள்

( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ஆங்கில மூலம்: கரோலின்ரைட் ) தமிழில் / சிபிச்செல்வன்
அதன் பிறகு (Thereafter)
என் சகோதரி ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைப் பாடுவது வழக்கம்
அவள் சிமோன தி புவோவை விரும்பிப் படிப்பதும் வழக்கம்.
மதிய குளியலை மறந்து அவள் தன்னை மறந்து கார்ல் மார்க்ஸ்,
கார்கி, டால்ஸ்டாய், மற்றும் மாணிக் பந்தோபாத்யாய நாவல்கள் போன்றவற்றில் மூழ்குவாள்.
அவளுடைய பழைய ஞாபகத்தில் மூழ்குவதற்கு லாரா இன்கல்ஸ் வைல்டர்தான் பிடித்தமானவர்
போரைப் பற்றிய காட்சிகளைப் பார்த்தால், பாதி ராத்திரிவரை அழுது கொண்டேயிருப்பாள்.
என் சகோதரி அருமையான கவிதைகளை வாசிப்பாள்;
அவளுக்கு விருப்பமான சங்கா கோஷ், நீரேந்திரநாத் சக்கரபாரதி, நெருடா, மற்றும் யெவ்துஜூங்கோ
என் சகோதரி காட்டை நேசித்தாள், தோட்டத்தையல்ல;
அவள் சிலைகளை விரும்புவாள். ஒரு முறை இவற்றிற்காகப் பாரீஸ் போக டிக்கெட் வாங்கினாள்.
இப்போது என் சகோதரியின் கவிதை நோட்டில்
காய்கறி பற்றிய விவரங்களை எழுதி வைத்திருக்கிறாள்,
இப்போது பெருமையோடு சுற்றி வருகிறாள், உடல்நிறைய உலோக ஆபரணங்களை அணிந்து
அவள் பெருமையோடு சொல்கிறாள்
அரசியலைப்பற்றி
எண்ணியதில்லை
கலாச்சாரம் எக்கேடும் கெட்டுப்போகட்டும் அதுபற்றி அவள் கவலைப்படுவதில்லை.
அவளின் வீணை மீது தூசி படிந்திருக்கிறது, அவளின் தம்புரா எலி வலையானது
இப்போது அவள் கடை வீதிகளுக்குப் போய் வீட்டிற்கு தேவையான பொருட்களைச் சேகரிப்பதில்
கெட்டிக்காரியாகி விட்டாள்.

Sunday, August 28, 2016

வெறிபாடிய காமக்கணியார், ஒரு பெண் அறிந்திருக்கிறாள், " உடல் மனம் மொழி"

Sakthi Jothi
அது ஒரு பயிற்சி வகுப்பு.
பேராசிரியர் பணியிலிருக்கும் பெண்களுக்கான மொழியியல் சார்ந்த பயிற்சிப் பட்டறை. இறுக்கமாகவும், நேர நிர்ணயத்துடனும் தொழில்முறை சார்ந்த தேர்ந்த நிபுணர்களால் பாடங்கள் நடத்தப்பட்டன . வழக்கமான பயிற்சி வகுப்புக்களைப் போலவே விடுமுறை நாளொன்றில் மலைப்பிரதேசம் ஒன்றிற்கு அனைவரும் சுற்றுலா சென்றனர்.
அதிகாலையிலேயே தொடங்கிய பயணத்தில், முதல் அரைமணிநேரம் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு பேராசிரியர் எழுந்து, "என்னப்பா, எல்லோரும் இவ்வளோ அமைதியா வருகிறீர்கள்? ஒரு பாட்டு, ஒரு ஆட்டம் என ஒன்றுமில்லாமல் என்ன ஒரு சுற்றுலா" என்று கேட்டார். அப்போது வேறு ஒரு பேராசிரியர் , எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்கு 'அட்டன்டன்ஸ்'போட்டுட்டு இருக்கிறோம்' என்றார்.
கல்லூரிச் சொல்லான 'அட்டன்டன்ஸ்' குடும்பத்தின் சொல்லாக அங்கே சொல்லப் பட்டது. செய்கிற பணியிலிருந்து வீட்டிற்கும், வாழும் சூழலிலிருந்து கல்லூரிக்கும் சொற்களைப் பரிமாற்றிக்கொள்வதுதானே இயல்பு. எல்லா பெண்களும் அவரவர் வீடுகளுக்குப் பேசி முடித்தவுடன் 'பாட்டுக்குப் பாட்டு' தொடங்கியது. எழுபது, எண்பதுகளின் பாடல்களில் இளையராஜா முழுமை பெற்றிருந்தார். தற்கால பாடல்களில் தனுஷ், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என நடிகர்களைச் சொல்லி பாடல்கள் அடையாளப்படுத்தபட்டன.
இளையராஜாவின், "நிலா அது வானத்து மேலே... ' பாடலுக்கு எழுந்து பலரும் ஆடத் தொடங்கினார்கள். அதன் பின்பு கைவசமிருந்த 'பென்டிரைவ்' ஒன்றிலிருந்த புதிய பாடல்களை ஒலிபரப்பி, ஆடல் களைகட்டியது. ஆட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தபடியுமான கொண்டாட்ட மனநிலையில் பயணம் தொடர்ந்தது. பயணத்தின் முடிவில் அவர்கள் சென்ற இடம், கண்களுக்கெட்டிய தூரம் வரையில் மலையின் பசுமை, பச்சை நிறத்தின் மீது அசைந்தாடும் பஞ்சு மேகங்கள், மேகங்கனிந்து தூறும் பூஞ்சாரல் என ஏகாந்த நிலமதில் காலடி வைத்தனர்.
அந்தக் குளிரை, அந்தச் சாரலை, அந்தப் பசுமையை, அந்த ஏகாந்தத்தை அங்கு வந்திருந்த பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணர்ந்தபடியிருந்தனர். உடலின்மேல் வந்து தவழுகிற மஞ்சு மேகத்தில் சிலிர்த்த ஒரு பெண் கூறுகிறார் , அச்சச்சோ, நான் மாபெரும் தப்புப் பண்ணிட்டேன், என் அத்தானோடு இங்கே வந்திருக்கணும்." அவர் அப்படி வாய்விட்டு சொன்னவுடன் அடுத்தடுத்த பெண்களும் தங்கள் கணவர்களைப் பற்றி ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். ஒருவர் , "அடடா ,நான் மட்டும் என் வீட்டுக்காரரோடு வந்திருந்தேனென்றால், அப்படியே அவர் கைக்குள் என் கை கோர்த்து இந்த மலை முழுக்கச் சுற்றி வந்திருப்பேன்" என்று கூற, அடுத்தவர், "திருமணம் ஆனவுடன் கணவரைப் பிரிந்து, தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காகப் படிக்கச் சென்று விட்டதாகவும், கணவரும் வெளிநாட்டில் பணிபுரியச் சென்று விட்டதாகவும், ஏழு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இருவரும் ஒன்றாக வாழ வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும், இந்தச் சூழலில் தற்சமயம் ஏற்பட்டுள்ள இந்தச் சிறிய பிரிவைக்கூட தாங்க முடியவில்லை" என்று கூறினார். ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் என்றிருந்த அவர்கள், அதன் பின்பு அவரவர்களுக்கான அந்தரங்க நினைவுகளுக்குள் பயணிக்கத் தொடங்கியிருந்தனர் .
இவ்விதமான இவர்களின் நினைவுகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கணவன்மார்களுடன் ஒன்றாக பயணிக்கும் பல்வேறு தருணங்கள் இனிமையானதாக மட்டுமே இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஒருவரோடு ஒருவர் முகம்திருப்பிக்கொண்டதும், சண்டையிட்டுக் கொண்டதுமான முன்நிகழ்வுகளும் இருந்திருக்கலாம்.
கணவன் மனைவி மட்டுமே செல்கிற சுற்றுலாக்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மிகக்குறைவு. நடுத்தர வயதிலோ,முதிர் காலத்திலோ அமைகிற பயணங்கள் குழந்தைகள், உறவினர்களால் சூழப்பட்டது . அப்போதும் கூட ஒருவரிடம் மற்றவர் முகம் திருப்பிக்கொண்டும், சற்று நேரத்தில் சமாதானம் செய்தபடியாகவும் பயணம் அமைந்திருக்கும் . அதே பயணத்தில், யாருமறியாத மிகச்சிறிய உரசலில் ஒருவரின் உடலிருக்கும் வெதுவெதுப்பை மற்றவருக்கு இடம்மாற்றியிருப்பர் . கணவனும் மனைவியும் இணையாகப் பயணிக்கையில் அவர்களை வந்தடைகிற பறவைகளின் குரலில், குரங்குகளில் தொந்தரவில், பூக்களின் வாசனையில் தங்களைக் கரைத்துக் கொள்வார்கள். நாடோடியாகத் திரிகிற துணையற்ற மனிதர்களைக் கண்டு ஆச்சர்யப்படுவார்கள். இளம்காதலர்களுக்குள் தங்களை அடையாளம் காணுகையில் இரகசியமான மொழியில் தங்களைப் பரிமாறிக்கொள்வார்கள். வயோதிகம் அடைந்த பின்பும் இணையாக கைப்பற்றி நடக்கிற தம்பதியர் எவரையேனும் பார்த்தால் தங்களுடைய முதுமைக்காலம் இவ்விதமாக இருக்கவேண்டும் எனச் சொல்லிக்கொள்வார்கள். பல்வேறு இனத்தவரும்,பல வயதினரும் வந்து செல்கிற ஒரு சுற்றுலாத்தளம் என்பது நடுவயதில் இருக்கும் கணவன், மனைவிக்கிடையே அவர்களின் இளமைக்கும் முதுமைக்கும் பின்னலிடும் அன்னியோனியத்தைக் கொண்டுவந்து சேர்த்திருக்கும்.
திருமணம் ஆனபின்பு கணவனைப் பிரிந்து அம்மா வீட்டிற்குச் செல்வதற்கே கூட பொதுவாகப் பெண்கள் பிரியப்படுவதில்லை. நம்முடைய நிலத்தில் பெண்கள் தனித்துச் செல்கிற சுற்றுலாப்பயணங்கள் இல்லையென்று சொல்லுமளவுக்கு மிகமிகக் குறைவு. பெண்களின் பணி சார்ந்த பயற்சிகளுக்குச் செல்வதன் மூலமாக மட்டுமே இது போன்ற பயணங்கள் சாத்தியமாகின்றன. தங்களுடைய அம்மா, அப்பாவையோ அல்லது குழந்தைகளையோ அழைத்து வர இயலவில்லை என வந்திருந்த பெண்களில் யாரும் வருந்தவில்லை.
நிலமும் காலமும் சூழலும் எப்பொழுதுமே மனதிற்குள் மாயம் நிகழ்த்தியபடியே இருக்கும். வீட்டிலிருக்கும் பொழுது தினந்தோறும் பார்க்கிற கணவன்தான், அவன் மீது ஓயாத குறைபடுதல் மனைவிக்கு இருந்துகொண்டே இருக்கும். என்றபோதிலும் இயற்கையின் செழுமை கலையாதிருக்கும் நிலவெளியில் அவர்கள் தங்கள் மனதையும் உடலையும் உணர்ந்துகொண்டே இருப்பார்கள்.
அனாரின் கவிதையொன்று ,
"காலைப்பனியில்
ஈரமணலில்
வெள்ளை மல்லிகைகள் சொரிந்து கிடக்கின்றன
ஆயத்தி மலையின் விற்பதற்காகக்
கூவிச் செல்கிறாள் நெற்றியில் விபூதியும்
வாயில் வெற்றிலையும் இட்ட கிராமப்பெண்
தேனும் மாட்டுச்சாணமுமாய்
கிறவல் ஒழுங்கையின் மொச்சை வீச்சம்
மரச்சுள்ளி மிலாறுகளை தூக்கக்கலக்கத்துடன்
பொறுக்கிக் கட்டுகிறாள்
வயிறுபிதுங்கிய பரட்டைத் தலைச்சிறுமி
ஓட்டைவிழுந்த கறுப்புக்குடையை
ஒரு கை விரித்தவண்ணம்
ஆசாக் மறு கை ஊன்றியபடி
மிடுக்காகப் பார்த்து நிற்கிறார்
கண்ணாடி போட்ட வயோதிபர்
ஆட்டுப்பட்டியை இடையன் பக்குவமாக
மேய்த்துச் செல்கிறான்
அவை ஒரே நேரத்தில் 'மே' என்று கத்துகின்றன
'காவுத் தடியைத்' தூக்கி
முதுகு வளைய நடந்து
மீன்களின் பெயரைக் கூவுகிறான் மீன் வியாபாரி
ஓலைகளால் வேய்ந்த களிமண் குடில்களின் முன்
முக்காடு போட்ட பெண்கள்
காற்றுக்குள்ளிருந்து எதையோ அள்ளுவதும்
விரல்களுக்கு வெளியே ஊற்றுவதுமான லாவகங்களோடு
நிறச்சாயமூட்டிய பாய்கள் பின்னுகிறார்கள்
ஒருவன் சிறிய மீன்வலையைப் புல்வெளியில் உலர்த்த
நாலைந்து வெட்டுக்கிளிகள் சிக்கிக்கொள்கின்றன
பிடிபட்டு வளையில் திமிரும் உடும்பை
கம்பினில் கட்டி .. தீயிலிட்டு ....
அதன் வெந்த இறைச்சியை மலைத் தேனில் தொட்டு
கணவன்மார்களுக்குப் பரிமாறுகிறாள் குறத்தி
தும்பிச்சிறகடிக்கும் கண்கள் விரித்து
இரவுச்சுரங்கத்தின் கறுப்புத் தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளைப்
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
'போர் தேவதையின் கண்களாக உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலையையே அச்சுறுத்துகின்றாய்'
அவளது குரல்.. மலைகளில் சிதறி ஒலிக்கின்றது
'பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்'
காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச் செய்பவன்
இன்றென்னைத் தீண்டலாம்."
வானம் திறந்து பொழிகிற மழையிலும், நிலம் திரண்டு உயர்ந்திருக்கும் மலைகளிலும், ஒளிபுகத் தவித்துத் தோற்கும் காடுகளிலும், துளிர்த்துப் பொங்கிப் பெருகிச் சரிகிற அருவிகளிலும், விரிந்து பரவுகிற நதிகளிலும், ஈரம் கசிய பூத்திருக்கும் நிலத்திலும்,பரந்து விரிந்திருக்கிற கடலிலும், எழும்பித் திமிறுகிற அலைகளிலும், உப்புப்படிந்திருக்கும் காற்றிலும், காட்டில் உறைந்திருக்கும் சிறுநெருப்பிலும் பெண் தன்னை உணர்வது என்பது எல்லோருக்கும் நிகழ்வது அல்ல. கடலின் நீலமும், வானின் நீலமும் அவளுக்குள் நீலப்பூ ஒன்றின் எண்ணிலி இதழ்களை விரித்து வாசம் நிகழ்த்தும். பஞ்சபூதங்களாகத் தன்னை உணர்கிற ஒரு பெண் 'பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்' என்று சொல்வதுதானே இயற்கை. அனார் அதை உணர்ந்திருக்கிறார் . அவள் பூத்திருப்பதை உணர்கிறவனே அவளைத் தீண்டமுடியும்.
ஒரு பெண்ணை அத்தனை எளிதில் மலர்த்திவிட எல்லா ஆண்களாலும் இயலவே இயலாது.கணவனே என்றாலும்கூட எல்லாப் பொழுதிலும் அவளை, அவன் மலர்த்திவிட இயலாது. அவள் மலரும் தருணத்தை அவளே தேர்கிறாள். அவனுக்கென அவள் மலர்ந்து காத்திருக்கையில் ,அவன் அருகிலில்லை என்கிற சூழல் ஏற்படும் பொழுது அவள் நோய்மை அடைகிறாள். அவளின் அந்த நோய்மையை அவன் வந்தே தீர்க்க முடியும்.
கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப்
பெண்கவிஞர் சாப்போ, 'வட்டார மொழியின்
தன்னுணர்ச்சிப் பாடல்களைப் பாடிய பெண் கவிஞராக ஹோமருக்கு இணையாகக் கொண்டாடப் பட்டவர்.
"சில கப்பல்களும், போர்க்குதிரைகளும், போர் வீரர்களும் கவர்ச்சியுடையன என சிலர் கூறுவார்கள்;ஆனால் எனக்கு எல்லாமே காதல் தான்" என்று சொல்லும் சாப்போவின் புகழ்பெற்ற வரிகள் , "காற்றால் அமைந்த சொற்களைக் கொண்டு நான் தொடங்குகிறேன். ஆனால் அவை செவிக்கு இனியன"
காதல் என்பது மூர்க்கமும், பால்வேறுபாடு அற்றதும் என்பதற்கு இலக்கியத்தில் முதல் சொல் எடுத்தவள் சாப்போ. தன்னுடைய இடரிலும் தளர்விலும் அவள் நாடுகிற காதல் தேவதை 'அப்ரோதிதே'. சாப்போவின் காதல் மறுதலிக்கப்பட்ட ஒரு பொழுதில் ,'அப்ரோதிதேவிற்கு( To Aprodite)'என்கிற கவிதை எழுதியுள்ளார் .
"வண்ணங்கள் பலவும் மிளிரும் பீடத்தில்
எழுந்தருளிய தேவியே,
அப்ரோதிதே,ஜூஸின் குழந்தையே,
குறும்புக்காரியே,
உன்னிடம் நான் வேண்டுவது இதுதான்,
தலைவியே,
என் உள்ளத்தைக்
கொடுந்துயரினாலும் சித்திரவதையாலும் உடைத்துவிடாதே."
தன்னுடைய வேண்டுதலை வெளியிட்டுத் தொடங்கும் நீண்ட பாடலின் ஒரு பகுதி இது. இதற்கு முன்பாக எவ்வாறெல்லாம் இவளின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன என காதல் தேவதையைப் புகழ்ந்து, நன்றி தெரிவித்து, தற்சமயம் தனக்கு ஏற்பட்டுள்ள நலிவை நீக்க சாப்போ வேண்டுகிறாள்.
இறைவனை நோக்கிய சடங்குகள் மனதின் ஆழத்திற்குள் மாயாவித்தை நிகழ்த்துகிறது . கடவுள் எழுந்து வருவதாகவும், தன்னுடைய குரலைக் கேட்பதாகவும், தன்னுடன் பேசுவதாகவும் நம்புகிற அகத்தெழுச்சி மிக்க நிலையை பிராத்தனைகள் அடையச் செய்கின்றன. மாயத்தை நிகழ்த்துகிற இறைச்சடங்குகள், காதலில் அந்தப் பெண்ணை ஆற்றுபடுத்த இயலாது தோல்வியடையவே செல்கின்றன.
கிரேக்க இலக்கியத்திற்கும் சங்க இலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நீரோடைகள், ஊற்றுக்கள், மரங்கள், பூக்கள் போன்றவற்றின் மூலம் மனதின் நுட்பத்தைக் காட்சிப்படுத்த நம்மைப் போலவே கிரேக்கர்களுக்கும் முடிந்திருக்கிறது. மதம் சார்ந்த கோட்பாடுகள் தீவிரமடையாதிருந்த காலம் அது. அந்தக்கால கட்டத்தில், கடவுள் என்பவர் காதலர்களை இணைத்து வைப்பவர்களாகவும், இயற்கையின் அங்கமாகவும் இருந்திருக்கிறார்கள். காதலின் நலிவை கடவுள் நம்பிக்கை கொண்டு ஆற்றுபடுத்த கிரேக்க இலக்கியமும் தமிழும் முயலுகின்றன.
சங்கத்தில் "வெறியாட்டு" என்றொரு துறையே இருக்கிறது. தான் விரும்புகிறவரின் நெஞ்சத்தில் காதலைத் தூண்ட 'அப்ரோதிதே'வை வேண்டுவது போல 'வெறியாட்டு' நிகழ்த்தி சங்கமகளின் நெஞ்சத்தில் பதிந்திருக்கும் காதலை வெளியே கொண்டுவர அம்மா முயலுகிறாள். அம்மாவும் அந்தப் பருவம் கடந்து வந்தவள்தான். மகளின் உடல் மாறுபாட்டிற்கும், உள்ள நலிவிற்கும் எது காரணமாக இருக்ககூடும் என்பதை உணர்ந்தே இருப்பாள். ஆனாலும் அம்மா அறியாமையில் இருக்கிறவளாகவே மகள்களால் உணரப்படுகிறாள்.
அம்மா என்றால் அறியாமை என்றும் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் நினைத்துக் கொள்கிறார்கள். 'உனக்கெல்லாம் புரியாதும்மா', 'கொஞ்சம் நீ அமைதியா இருக்கியாம்மா', 'உனக்கு ஏம்மா இதெல்லாம்', 'நாங்க வேற ஜெனரேசன்' போன்ற சொல்லாடல்களில் அம்மாகளைக் கடந்து செல்கிற இளம்மகள்கள் எப்போதுமே இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் எளிதாக எடுத்துக்கொண்டு, மறுபடியும் மகளின் நலனுக்கான பிராத்தனைகளையும், வேண்டுதல்களையும் அம்மாக்கள் செய்து கொண்டிருப்பார்கள்.
அம்மாவின் இம்மாதிரியான வேண்டுதல்களை நகுதலோடு கடந்து செல்கிற மகள் பற்றி வெறிபாடிய காமக்கணியாரின் அகநானூற்றுப் பாடல்,
“அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக் கான்கெழு நாடன்
இது என அறியா மறுவரற் பொழுதில்,
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை
நெடுவேட பேணத் தணிகுவாள் இவள்'என,
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப்பாடி, பலிகொடுத்து,
உருவச் செந்தினைக் குருதியோடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த உருக்கெழு நடுநாள்,
ஆரம் நாற, அருவிடர்த் ததைந்த
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
நல் மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத்
தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப,
இன்உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய்தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே ?"
தோழியிடம் தலைவி சொல்வதாக உணரப்படுகிற பாடல் இது. விரைவில் வந்து திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி, களவில் கலந்த தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். அவனைத் தழுவி மகிழ்ந்திருந்த தலைவி இப்போது தனித்திருக்கிறாள். உடல் வேறுபட்டு பசலையடைகிறது.மகளின் நிலையினைக் கண்ட தாய் வருந்தி, சூரபதுமனை வென்ற முருகனை வணங்கினால் மகளின் துன்பம் தீரும் என நினைக்கிறாள். வெறியாட்டு நிகழ்த்துகிற முதுபெண்டிரிடம் கூறுகிறாள். நிகழ்வுக்கான களம் அமைக்கப்பட்டது. வேலினை ஊன்றினர். கடம்ப மாலையைச் சூடினர்.வேலனின் புகழ் பாடினர். பலிக்கொடையும் வழங்கினர். பலிக்குருதியை செந்தினையில் கலந்து தூவினர். முருகன் வெறியாட்டு நிகழ்ந்து முடிகிறது. நிகழ்வின் முடிவில் தலைவி சொல்கிறாள், 'யானையை வேட்டையாடத் திட்டமிடும் புலி பதுங்கிச் செல்வது போல இரவுப் பொழுதின் காவலர்கள் அறியாதவாறு நம்முடைய வீட்டிற்கு பதுங்கி வந்த தலைவன் என்னைத் தழுவிகொண்டான் . அவனை விரும்புகிற என்னுடைய விருப்பம் நிறைவுற என் இன்னுயிர் குழைய என்னைத் தழுவி முயங்கியவன் அவன். அவனை நினைத்து நோயுற்றிருக்கும் என்னுடைய நிலையை உணராத அம்மா, முருகனுக்கு வெறியாட்டு எடுத்த அவளின் அறியாமையை எண்ணி நகைக்கிறேன்" என்று கூறுகிறாள் .
மகள்களின் அறியாமையை அம்மாக்கள் தான் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். உயிர் மலர தழுவியவன் தீர்க்க வேண்டிய நோய்மை இதுவென மகள் தன்னை வெளிப்படுத்த இயலாமல் தவிப்பதை உணர்ந்தே அவளறிந்த வழிகளில் ஆற்றுப்படுத்த முயலுகிறாள். அம்மா அறிந்த இரகசியம் மகள் அறிந்துகொள்ளும் பொழுது அம்மாவை அவள் தேடுவதில்லை. அம்மாவை உணர்ந்து விடுகிறாள்.
அறியப்படாத சுவை என்கிற என்னுடைய கவிதை ஒன்று,
"அம்மாவிற்கு நன்றாக சமைக்கத் தெரியும்
பரிமாறவும் தெரியும்
அம்மாவிற்கு அன்புகாட்டத் தெரியும்
அவளுக்கு தெரியாததெல்லாம் வெறுப்பு
அவள் சமைத்துப் போட்டுக் கொண்டேயிருப்பாள்
அவள் விரல்களில் எதைத்தான் வைத்திருப்பாள்
எவருக்கும் தெரியாது
ரசம் வைப்பாள் வித விதமாய்
சாம்பார் வாசனையால் தெரு மணக்கும்
உணவு வகைகளை சலிக்காமல் செய்வாள்
உப்புப் போட அவள் மறந்ததேயில்லை
ஒருவேளை
அது சற்று கூடியிருந்தாலும் ருசியாகத்தானிருக்கும்
இந்த அம்மாவுக்குத் தெரியாததெல்லாம் ஒன்றுதான்
அம்மாவின் சமையல் சுவையாய்
அவனைப் பிடித்திருந்தது
அவனைப் பிடிக்கும் என்பது நான் அறியாத சுவை
என்பது அம்மா அறியாதது
அவள் அறிந்ததும் நான் அறியாததுதான்."
*********************************************************************************
வெறிபாடிய காமக்கணியார்:
காமக்கண்ணி என்பது எல்லோரும் விரும்புகிற கண்களை உடையவள் எனவும் அதுவே காமாட்சி எனவும் பெயர் பெற்றது. வெறியாட்டு பற்றியே இவர் அதிகமாக எழுதியுள்ளதால் இந்தப் பெயர் பெற்றிருக்கிறார்.
அகநானூறு: 22,98நற்றிணை : 268 புறநானூறு: 271மொத்தம் 5
************************************************
சாப்போ:
கிரேக்க இலக்கிய வரலாறு, ஹோமரின் இலியட்(Illiad), ஒடிசி(Odyssees) காலத்திலிருந்து தொடங்குகிறது. ஹோமருக்கு இணையாக சாப்போ சொல்லப்படுகிறார். சாக்கரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் உட்பட பலரும் இன்று வரையில் 'சாப்போ' கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கிறார். சங்கப்பெண்பாற் புலவர் ஔவையையும் சாப்போவையும் ஒப்பிட்டு "அவள் சாப்போவைப் போலப் பாடியுள்ளாள், காதலைப் பற்றி அல்ல, ஒழுக்கத்தைப் பற்றி "என திருத்தந்தை.எச். பௌர் (Rev.Fr.H,Bower)குறிப்பிட்டுள்ளார். இதனை இலங்கைத் தமிழ் ஆய்வாளர் திரு. சைமன் காசிச்செட்டி(1807-1852) காலத்தில் வெளியான "Tamil Plutarch" என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, August 19, 2016

நீலக் குறிஞ்சி


மலையெல்லாம் நீலக்குறிஞ்சிகள்
பூத்த வருடம் நான் பிறந்ததாக
பாட்டி சொன்னாள்

இளமை தளிர் கொண்ட காலத்தில்
மலைவெளியில் அப்பூக்கள்
மீண்டும் பூத்த போது மழையின் நிறம் நீலம்
எனக் கண்டுணர்ந்தேன்

குறிச்சிப் பூக்களின் நீலவெளிச்சம்
தொடுவானில் பிரதிபலிப்பதை தரிசிக்கையில்
காத்திருப்பின் கனியும் அந்நிறத்தில்
தான் இருந்தது

கித்தார் மரத்து பூக்களின் வாசனை
கண்டடையாத காதலனின் உருவத்தை
ஆழ் மனதில் வரையத் துவங்கியது

வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்

நீர்கடம்ப மரத்தின் தாகத்தை
சிற்றோடைகள் அறியும் சமயம்
வேர்கள் சர்ப்பநடனமிடும்
காட்டுவாசியின் இசை
வெறுமையின் துல்லிய உண்டியலில்
சேர்க்ப்படுவதை அறிவேன்

பூம்பாறைப் பூக்களின் ஆகிருதியை
தாங்கயிலாது மனம்
பனிப் பாறைகளில் சறுக்கும்

காத்திருப்பு தனிமையில் இடறுவது
பள்ளத்தாக்கிலிருந்து குறிஞ்சிப் பூஞ்சருகுகள் வீழ்வது

நீலத்தின் நிவறுதல் நிலைமொழியாய்
வானத்திற்கு ஏகியதும் இங்கணமே

காட்டில் தான் நீலக்குறிஞ்சி பூக்கும்
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும்
நாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்

--தேன்மொழி தாஸ்
19.8.2016

Tuesday, August 16, 2016

காதலித்து கெட்டு போ. நா.முத்துக்குமார்


அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட, திகட்ட காதலி..

Wednesday, August 10, 2016

காடுபடு திரவியமாய் உனது விரல்கள்



துரோகங்களினால்
துடைத்துக் காலிசெய்யப்பட்டிருந்த
ஆன்மாவின் பாத்திரத்தில்
ஒரு துளியாய் விழுகிறது
உனது அன்பு

காற்றை விதைத்து
பூவைப் பறிப்பதென
உனது சொற்கள்

தன்னந் தனியே அலையும்
தனுராகக் காட்டுக் கழுதை தான்
எனது மனம்

சிறுத்தையின் வாயில் அகப்பட்ட
கலைமானின் கழுத்தாய்
எனது வாழ்வு சிதைந்ததையும்

அறிவின் சுடர் எரிய
மாடம் அற்றுப்போனதையும்

முயலின் சதைருசியில்
பலரின் விழியில் எனது உடல்
விழுவதையும் தாங்கயியலாமல்

உனது மனம் பலிபீடமாவதை
உணர்கிறேன்

உனக்கு நான் சொல்ல விரும்புவது
காட்டு அழுகன்னி செடியின் தன்மையில்
எனது உடலை மாற்றி
காலங்கள் ஆகிவிட்டது என்பதையே

காடுபடு திரவியங்களாய்
உனது விரல்கள்
எனை தழுவுகையில்
அதை நீ உணர்ந்திருப்பாய்

உனக்குள் ஊரும் கண்ணீர்
தனிச் சொல்
அதன் ருசியை நானறிவேன்

அடவியின் தருக்கள்
அசையும் என் விழிகளைப்
பத்திரப்படுத்துவாய்

- தேன்மொழி தாஸ்

குறிஞ்சி மலர் :


குறிஞ்சி மலர் என்னிடம் தோற்றுவிட்டது
கொஞ்சம் வருத்தம்தான்
எப்படியும் குறிஞ்சிமலர்கள்
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்
ஒரே ஒருமுறை பூப்பவள் நான்

எப்பொழுது மலர்ந்தேன் என்பது
ஒருவருக்கும் தெரியாது
அம்மாவின் கணக்கு வேறு
அப்பாவுக்கோ கணக்கே தெரியாது
இன்னும்
இன்னும்
இன்னும்
பலருக்கும் மலர்தல் என்றால் என்னவென்றே தெரியாது
அந்த இரகசியத்தை அறிந்த ஒரே ஒருவன் உண்டு

நான் மலர்ந்தத் தருணத்தை
அவனிடம் சொல்லும் முன்பு
நான் செத்து விடலாம்

அப்படிச் சாவேன்.

நன்றி குங்குமம்

Sakthi Jothi

மூடுபனியின் நீர்ச்சால்கள்



காற்றின் வரையறைகளை
கண்டுணரும் மலைவாசிக்கு
யானைகளின் லத்திகள் ...
காட்டு வழிகளின் இரகசியங்கள்

யாருமற்ற போது
அடிவயிறிலிருந்து எழும் நாதமிக்க வேதனைகளை எதிரொலிக்கச் செய்ய
பள்ளத்தாக்கு தான் பூமியின் காதுகள்
வல்லூற்றின் கண்களறியா பாதை
வாலிபனின் காமம்
பனிக்காலம் அவன் பசிய கைகளுக்கு பரண்
மூடுபனியின் நீர்ச்சால்கள்
அவன் பிள்ளைகளுக்கான
நற்செய்திகளின் உறைபீடம்
வானம் மழை விளைநிலம்
துளிகள் மூதாதையரின் முத்தங்கள்
காட்டு வெற்றிலை ஆதி மனிதனின்
சுவைமொட்டுகளைத் திறந்த
மந்திரத் தாவரம்
அடர்ந்த கானகத்தில்
வழிதனை தெளிக்கையில்
உரிமைகளைப் பற்றிய
மலைவாசியின் புலம்பல்கள்
ஆகாச கருடனுன் பின்னிப் பறக்கும்
போர் பாடல்களின் ஆதிதாளம்
உழைப்பாளியின் மிச்சம்
வாரத்தின் கடைசியில் சோற்றுப்பானையில் கிடக்கும் கல்
அதன் சத்தம் அவன் குழந்தைகளுக்கு
போதுமான அறிவுரை
காட்டுத்திரவியங்கள்
மலை மனதின் வாசனை
பொன்னும் ஸ்படிகமும் விலையேரப்பெற்ற கோமேதகமும்
மலைவாசிக்கு வீண் பாறை
மான்கறியும் காட்டுக்கோழிக் குழம்பும்
வாழ்வாதாரத்தின் போதாமை
வேட்டையின் புகழ்
அவனது தேவை காய்ந்த விறகும்
காட்டுப்புறாவின் சிறகும்
27.7.2016
-தேன்மொழி தாஸ்

Monday, August 8, 2016

இணங்கிப் போதல் ....


அவர்களின்
விருப்பின்படியே
நில்லுங்கள்.

அவர்களின்
விருப்பின்படியே
உட்காருங்கள்.

அவர்களின்
விருப்பின்படியே
உண்ணுங்கள்.

அவர்களின்
விருப்பின்படியே
உடுத்திக் கொள்ளுங்கள்.

அவர்களின்
விருப்பின்படியே
அழுங்கள்,
சிரியுங்கள்,
பேசுங்கள்,
கல்லுங்கள்,
உறங்குங்கள் ,
கனவு காணுங்கள்,
கொட்டாவி விடுங்கள்...

நீங்கள்
அவர்களுக்கானவர்கள்.
அவர்களுக்காகவே
அவர்களின்
விலா எலும்பிலிருந்து
சிருஸ்டிக்கபட்டவர்கள்.
அவர்களின்
கட்டளைகளுக்கு
கட்டுப்பட வேண்டியவர்கள் .....

இயன்ற அளவுக்கு
அவர்களை
இன்பப்படுத்துங்கள்

அவர்கள்
உங்களை
பார்த்த
அடுத்த நொடியே
அவர்கள் மீது
காதல் கொள்ளுங்கள்.
அவர்கள்
தீர்மானிக்கும் காலத்தில்
அவர்களை
திருமணம் செய்யுங்கள்.
அவர்கள்
அழைக்கும் வேளைகளில்
எல்லாம்
அவர்களை
புணர்ந்து கொள்ளுங்கள்.
அவர்கள்
விரும்பும்போது
மட்டுமே
கருத்தரித்து கொள்ளுங்கள்.

இங்கு
உங்களுடைது
என்று
எதுவுமேயில்லை.

நீங்கள்
சும்மா இருப்பதற்கு கூட
அவர்கள்தான்
சுதந்திரம்
அளிக்க வேண்டியிருக்கிறது.

அவர்களின்
அனுமதியின்றி
நீங்கள்
அழக்கூட
முடியாதே

இவற்றையெல்லாம்
மனதார ஏற்று
உத்தமியாக,
ஒழுக்க சீலியாக,
பத்தினியாக,
பதிவிரதையாக,
கற்புடையோளாக
வாழ்வதெனில்
மட்டும்
வாழுங்கள்.
அன்றேல்
செத்துப் போங்கள்....

அரிவாள்கள்
ஆயத்தமாகவே
உள்ளன .....

நவாதரன் கவிதைகள்

Saturday, July 23, 2016

எலும்புகளோடு பேசும் காலம்


எங்கோ தொலைத்திருக்கிறேன் தனிமையை
யானை பள்ளம் நோக்கி ஓடுவது போன்ற பயம்
எனக்குள் ஏற்பட்டிருக்கிறது

நீர்வீழ்ச்சி முட்டித் தெரிக்கிற இடத்தில்
ஆழம் பொய்யெனக் கிடப்பது போல்
தொலைந்து கிடக்கிறேன்

ஒரு சொல்லில் ஒரு சொல்த்தொடரில்
இழைக்கப்படும் என் இதயம்
உன் பற்களுக்கிடையில் தின்னப்படும்போது
எனது மெளத்தை கண்களின் வழியாகப்
பறக்க விடுகிறேன்

முதுகில் விழும் கீறல்களை விடவும்
கண்களின் மேல் விழும் முத்தம் வலிக்கிறது

அருகாமை பள்ளத்தாக்கென விரிவதையும்
பிரிவு சலனமற்ற நீரோடையென ஓடுவதையும் பார்க்கிறேன்

என் வீட்டுப் பலிபீடத்தில் ஏற்றிவைக்கும்
மெழுகுவர்த்திக்கான சமயம்
எந்த அறையில் தொலைந்து போனது

இறுக்கி இறுக்கி இதயத்தை
எத்தனை முறை தான் துவளவிடுவது

சாம்பலான பிறகும்
எங்கே வெப்பம் இருக்கிறதா
எனத் தொட்டுப் பார்த்து சிரிக்கும் நொடி
எத்தனை நரம்புகள் அறுந்து விழுகின்றன

மதிலுகளோடு பேசிய காலம் போய்
எலும்புகளோடு பேசும் காலம் எப்படி வந்தது

தாகமாய் இருக்கிறது
பிரிவை அருந்த வேண்டுமென

- தேன்மொழி தாஸ்

Saturday, July 9, 2016

கடிதம். . .



ஒரு கடிதத்தை எளிதாக
எழுதத் தொடங்கி விடுகிறார்கள்

நிறைய கடிதங்களை வாசித்திருக்கிறேன்
பிறர்
பிறருக்கு எழுதிய கடிதங்களை
நண்பர் நண்பருக்கு எழுதிய கடிதங்களை
எழுத்தாளர் வாசகருக்கு எழுதிய கடிதங்களை
வாசகர் எழுத்தாளருக்கு எழுதிய கடிதங்களை

ஒரு
தூக்குத் தண்டனை கைதி
அவனுடைய தாய்க்கு எழுதிய கடிதங்களையும்
வாசித்திருக்கிறேன்
மட்டுமல்லாமல்
ஒரு கடிதம்
எவ்வாறு எழுதப்பட வேண்டுமெனச் சொல்கின்ற
நூல்களையும் வாசித்திருக்கிறேன்

என்றாலும்கூட
என்
அன்புக்குரியவருக்கு
எழுத வேண்டிய ஒரு கடிதத்தை
எவ்வாறு தொடங்க வேண்டுமென்பதை
அறியாமல் இருக்கிறேன்
அறிந்துகொள்ள விரும்பாமலும் இருக்கிறேன்.

Sakthi Jothi

Monday, July 4, 2016

அந்த மந்திரக்காரன்

Sakthi Jothi
அந்த மந்திரக்காரன்
வனம் முழுக்கப் மரங்களைப் பூக்கச் செய்கிறான்
பூக்களுக்கு வகைவகையான நிறங்களையும்
நிறங்களுக்கு தனியொரு வாசனையையும் தந்து
மாயங்கள் நிகழ்த்துகிறான்
மேடும் பள்ளங்களும் கரும்புதர்களும்
மாயங்களை அறிந்தவனை மயக்குவதில்லை
வனத்தை உணர்ந்த அவனே
நிலத்தை நெகிழச்செய்கிறான்
காதலின் வாசனையை உணர்கையில்
அவனைத் தேடி அலைகிறேன்
மாய கானகத்தில்
வனமே அலைகையில்
அவன்
கூடுவிட்டு கூடு பாய
காடு பற்றியெரிகிறது
கானகப் பச்சை அழியத் துவங்குகிறது
பறவைகள் தடுமாறிப் பறக்கின்றன
காலச்சர்ப்பம் ஊர்ந்து வெளியேறுகிறது
ஆடைகளை களைகிறேன் சர்ப்பம்போல
மனமிருகங்கள் வெளிக்கிளம்பின ஒவ்வொன்றாக
வனம் பற்றிய பெரும்நெருப்பு
சுட்டெரிக்கும் முன்பு
நம்புகிறேன்
வனநிலம் அறிந்த ஊற்று
வற்றாமல் பெருகி
நெருப்பை அணைக்குமென
பொங்குகிறது குழிநெருப்பு
அசைகிறது காடு.
நன்றி : உயிர் எழுத்து


Monday, June 6, 2016

உதடுகள் நனைக்கும் பொழுதுகள்

நீ பிரிந்து சென்றபோது முத்தங்களை
வழங்கத் தவறவிட்டது குறித்து ஆழ்ந்த வருத்தங்களை
உன் கோபச்சொற்களில் நிரப்பிவிட்டுப் போனாய்
கொடுக்கத் தவறியதால் உன் சிவந்த முகத்தின் அழகை
ரசித்ததை அறிந்திருக்கமாட்டாய்
என் மீதான ஆழ்ந்த காதலை
கொடுக்காத முத்தங்களின் வழியேதான் அனுபவிக்கிறேன்
இந்நேரம் உதடுகளால் உன் உதடுகளை நனைக்கும் பொழுதுகளை
கற்பனை செய்துகொண்டிருப்பாய்
அவ்வேளை உன் சொர்க்கத்திலிருக்கும்
இளம்கொடிகளால் ஆன ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்திருப்பாய்
என் ஆடைகளின் பொத்தான்களை மெள்ள அவிழ்த்து
என் மீது உன் உடலால் நீந்தி என் சிப்பிகளைத் திறந்து
ஒளிரும் முத்துக்களை சுகித்துக்கொண்டிருப்பாய்
தனித்திருக்கும் உன்னிடம் இல்லாத நான் இருந்துகொண்டிருப்பேன்
யாவும் கொடுத்தனுப்பாத முத்தங்களால்
நிகழ்த்துகொண்டிருப்பவை என்பதை அறிகிறாயா
எப்படியாவது தேற்ற முனைகிறபோது
உன் ரெளத்திரம் கடலைக் கவிழ்த்தாலும்
அணையாத நெருப்பாய் இருப்பதை அறிவேன்
பிரிவின் வலியில் நீ கரைந்து சொட்டுவதுபோல
கோடை வெயிலில் தகிக்கும் என்னுடலாய்
உருகிக் கரைந்து சொட்டுகிறேன்
நீயும் நானும் பார்த்தும் பேசாத இந்த நாட்களைச்
சபித்துக்கொண்டிருக்கிறேன்
உன் பார்வையில் உன் ஒரு சொல்லில்தான்
என் ஆயுட்காலம் நீள்கிறது…
IYYAPPA MADHAVAN