Search This Blog

Showing posts with label Tamil Cinema. Show all posts
Showing posts with label Tamil Cinema. Show all posts

Friday, April 17, 2020

மோகமுள் - நாவல் பிறந்த கதை தி.ஜானகிராமன்



- தி.ஜானகிராமன்

கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.
“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”
“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே. அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?…” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.
“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ! பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”
“அது என்னமோப்பா! பாதிப் பணம் அப்பப்ப எனக்கு வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது நியாயம்தானே?” என்றாள் பாட்டி.
“எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே!”
“அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு பார்க்கறியா? என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை - அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்கப்பட்டாலும் போ - எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ?”
பாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான். சொன்னது அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில் கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம் கொடுத்திருக்கிறேன்.
காவேரி வண்டலில் செழித்தபயிர் கண்ணாடிப் பாட்டி. பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை, ‘சுருக்சுருக்’கென்று தைக்கிற கூர்மை, சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம், சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும், சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய ஹாஸ்யவகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை - பாட்டி ரொம்பப் பெரியவள்.
“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான்.
பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு திவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை.
“மோக முள்”ளில் சில அத்தியாயங்களைக் கிடைத்தபொழுது வாசிக்கச் சொல்லிக் கேட்டாளாம் பாட்டி. ஓரிரண்டு இடங்களை நன்றாக இருப்பதாக அவள் ஒப்புக்கொண்டு கூடவிட்டாள். ஆகவே மற்ற விமர்சகர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
பள்ளிக்கூடத்தில் படித்த பத்து வருஷங்களில் ஞாபகம் இருக்கக் கூடியதாக ஒன்றுமில்லை. எப்பொழுது இச்சிறையிலிருந்து விடுபடப் போகிறோம் என்று ஆத்திரப்பட்டது ஞாபகம் இருக்கிறது. “உனக்குக் கணக்கு வராது. நீ கதை பண்ணத்தான் லாயக்கு. தொலை” என்று என் முகத்தில் பிரம்பை விட்டெறிந்த நாமமும், அம்மை வடு முகமும் கொண்ட மூன்றாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் ரங்காச்சாரியார், எனக்கு ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசீர்வாதம்-
வகுப்புக் கட்டுரைகளில் சொந்தக் கை வரிசையைக் காட்டி அதிகப்பிரசங்கித்தனமாக அசடு வழிந்ததற்கு, சில வாத்தியார்கள் மற்றப் பையன்களுக்கு நடுவில் பரிஹாசம் செய்து மனத்தைக் கிழித்துப் போட்டதில் ஏற்பட்ட புண்கள்-
தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு முலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார், வெங்கடேசப்பெருமாள் சன்னிதி அனுமார், மேலவீதி விசுவநாதர், மேலவீதிப்பிள்ளையார், தெற்குவீதிக் காளி அம்மன், வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள், நாணயக்காரச் செட்டித்தெரு ராமலிங்க மடம், பக்கத்தில் திருவையாறு - இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த பழக்கம்-
நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது -
உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக் கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசணையாக, தியான மார்க்கமாக, அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு, உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு-
கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று. அந்தப் பூரிப்பு-
கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்-
நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்)க் கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடுத்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை-
தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் . சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலிநிலத்துக்கு வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான்.
சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான்.
இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம் -
தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள்.
தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்தமாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன.
பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் ‘பைசல்’ செய்துவிட்டார் அவர்! ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம் -
என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது -
இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.
எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின.

மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது.
காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.
தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.
என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனே, என்னவோ, யார் கண்டார்கள்?
*
நன்றி:
கல்கி (27.08.1961)
&
சொல்வனம் இணைய இதழ்.



Thursday, April 2, 2020

தமிழ் சினிமாவின் இலக்கணம் மகேந்திரன்

தமிழ்த் திரையின் உயிர்த் துடிப்பு கொண்ட இயக்குநர் மகேந்திரன் என்பதை யாரும் மறுக்கப்போவதில்லை. சினிமா ஒரு தவம் என்றோ அதற்காகவே காத்துக்கிடந்தவர் என்றோ அவரைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அவர் சினிமாவுக்கு வந்தது அவரே சொல்லியிருப்பதுபோல் ஒரு விபத்துதான். ஆனால், சினிமாவுக்கு வந்த பின்னர் அவர் படைத்த சினிமாக்களில் சிலதாம் அவரைக் காலாகாலத்துக்கும் சாகாவரம் பெற்றவராக்கியிருக்கின்றன.
https://www.hindutamil.in/
கோதைமலர் பூம்பாதம் வாவென்றதோ....
உங்களுடன் ஓரிருமுறை பேச வாய்த்தது மகேந்திரன் சார், இறுதியாக தொலைபேசியது உங்களின் ஓர் பிறந்த நாளில் . வாழ்த்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது உங்கள் பள்ளிக்கரணை வீட்டிற்கு ‘அவசியம் வாங்க’ என்ற அழைப்போடு உரையாடலை நிறைவு செய்தோம் . இன்று மெட்டி ஒலிக் காற்றோடு கேட்டபடி அசைபோடுகிறேன்.கைஸெ கஹூன் பாடல் பார்க்கவேண்டும் அதில் அந்த பெண்களின் உதடு விலகாத புன்னகை மலர்வதை காண வேண்டும் . ஜானி பார்க்க வேண்டும்.இருவருக்குமான அந்த காதலைச் சொல்லும் தருணத்தில் அப்டித்தான் பேசுவேன் என்ற வசனத்தை மீண்டும் ஒருமுறை கேட்க வேண்டும். . 

உதிரிப்பூக்களில் சினிமாவிற்கு போகலாம் என்று விஜயன் சொன்னதும் அஸ்வினி வெளியே வந்து வானம் பார்க்கும் காட்சியை ரசிக்க வேண்டும் .

முள்ளும் மலரும் அந்த கையிழந்தபிறகு அணைக்க வரும் ஷோபா அழும் போது ஒன்னுமில்லம்மா என்று ரஜினி சொல்லும் காட்சிக்கு நெகிழாமலிருக்க வேண்டும்.

அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா பாடல் இம்முறையாவது ஊர் நினைப்பை தூண்டிவிடாமல் பாதியில் அணைக்காமலிருக்க வேண்டும்.

மெட்டி ஒலிக்காற்றோடு பாடலில் புத்தரின் காதில் பூச்சுட்டி விளையாடும் அந்த இளங்குமரிகளில் இறந்து போன அக்காவின் நினைப்பு மேலெழுந்து விடக்கூடாது. பாலப்பட்டி நதிக்கரையில் எடுக்கப்பட்டதாம் உதிரிப்பூக்கள் இறுதிக் காட்சி ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும் .
பூட்டாத பூட்டுகள் ,நண்டு இரண்டும் என்னுள் நிகழ்த்தியவை குறித்துப் பேச மீண்டும் எங்கே போய் தேவ்ராஜ் அண்ணனைத் தேடுவேன் நான் .ஜானியில் வரும் தோழி சகலத்திற்கும் சாட்சியாய் இருப்பது எப்படி என்று யோசித்துக் கிடந்த நாட்கள் பல உண்டு. உங்கள் படத்தில் வரும் சரத் பாபு, உங்கள் படங்களில் வரும் வெண்ணிற ஆடை ராமமூர்த்திக்கு ஒரு பிரத்யேக முகம் வைத்திருந்தீர்கள் இல்லையா சார் . உங்கள் படங்களில் வரும் தாய் உங்கள் படங்களில் வரும் தங்கைகள் .. எனக்கும் நிஜத்திலும் சற்றுக் கூடக் குறைவான நலன்களுடன் வாய்த்தார்கள் சார். நான் தான் முள்ளும் மலரும் படத்தில் ஜானியாகவும் ஜானி படத்தில் முள்ளும் மலரும் படத்தில் வரும் ஷோபாவின் காதலனாகவும் அசந்தர்ப்பமாக வாழ்ந்திருக்கிறேன். ஆனால் திருப்தியாக இருக்கிறேன் . ஆமாம் ,பெரிதும் அர்த்தச் சுமையற்ற கணங்களால் ஆன பல நிகழ்வுகள் தான் பின்னாளில் கோர்த்துப் பார்க்கும் போது வாழ்வாக எஞ்சி நிற்கிறது . Piece of Art,Small Act of love யாருக்கோ தூண்டலாக ஒரு கணநேர உந்தமாக மாறும் பொழுதை எந்த மனசால் தீர்மானிக்க முடியும் எந்த கலைஞனால் அறுதியிட முடியும் .உங்கள் கதைகளில் வரும் சம்பவங்கள் யாவும் “ நேர்பவை” திட்டமிடலுக்கெதிரான வாழ்வின் அபத்தங்கள். இயல்புகள் என்று நம்புகிறவை எப்படி வாழ்வோட்டத்தில் திரிந்து போகின்றன என்று பேச முயன்றவை.இந்த உலகம் கேளிக்கைக்காரர்களுக்கானது போல் தோன்றினாலும் மெய்யான கலைதான் எளிய அன்பை நம்பும் மனிதர்களின் சாவை ஒத்தி வைக்கிறது.நானும் சாவை ஒத்தி வைக்கும் சிறு கீற்றை உங்களிடமிருந்து பெற்றிருக்கிறேன் . நன்றி அலெக்ஸாண்டர் சார். உங்களுடைய ராஜ்ஜியத்தில் சூரியனும் நிலவும் உதித்தும் மறைந்தும் உயிர்வளர்ப்பார்கள் .
நேச மித்ரன்

Monday, February 3, 2020

சைக்கோ திரைப்படம் இயக்குநர் மிஸ்கின்


நீண்ட நாட்களுக்குப் பின் திரையரங்கத்திற்கு சென்று பார்த்த படம்.
வழக்கம் போல் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் தான்.
ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் தண்டனைக் கொடுத்ததற்காக மாணவன் கொலை செய்து பழி வாங்குகிறான்.

மாணவப் பருவத்தில் சுய இன்பம் அனுபவித்ததற்காக, வில்லனுக்கு கிறித்துவ ஆசிரியைத் தினம் 60 பிரம்படிகள் என்று தண்டனைக் கொடுக்கிறார்.
பெண்கள் ஒழுக்கத்தை வற்புறுத்துபவர்களாகவும், ஆசிரியைகளாகவும் மட்டுமே வில்லனுக்குத் தெரிகிறது. பல மாணவர்களுக்கு முன் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை சிறையில் வைத்துவிட்டு அவருக்குப் பதிலாக அவரையே கொல்வது போல் பல பெண்களைக் கொல்கிறான் வில்லன். சிகரெட் பிடிக்கும் ஆசிரியை ஒழுக்க சீலியாக முன் வைக்கப்படுவதைக் கேள்வி கேட்க முடியாமல் தண்டனை வழங்குவதுதான் மனப்பிறழ்வு. சைக்கோத்தனம். நன்மைக்குள் ஒளிந்திருக்கும் தீமையைக் கொல்லல்தான் சைக்கோத்தனம்.
இந்தப் பொருள் சைக்கோ திரைப்படத்தில் ஓர் அடுக்கு. மற்றொர் அடுக்கு பௌத்த மதத்தின் பொருள். வில்லனின் பெயர் அங்குலிமால். கதையின் நாயகனின் பெயர் கௌதம். நாயகனிடம் தான் தோல்வி அடைந்துவிட்டதாகக் கதறுகிறான். ஆனால் இயக்குநர் மிஸ்கின் புத்தராகக் கற்பனை செய்திருப்பது நாயகியைத்தான் என்கிறார்.
நன்மையின் உலகம் பெரியது. அது குருட்டுத் தனமாகவும் நன்மையைச் செய்யும். அதற்கு ஒளி தேவை இல்லை. தீமையின் உலகம் சிறியது. இருளானது. குருட்டுத்தனமானது என்று நம்பப்பட்டது. அதில் ஒளியாக வரக்கூடியது தாயின் அன்பும் கருணையும் அரவணைப்பும். வெறும் வெற்று உடல் ஒழுக்கத்தை வற்புறுத்தும் பெண்களிடம் இதைக் காணமுடியாது. நன்மையின் உலகத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் மட்டுமே நல்லவர்களாகிவிட முடியாது. நன்மைக்குள் தீமையின் பங்கையும் உள்ளிணைக்கவேண்டும். அதனைக் காணத்தான் கண்கள் வேண்டும்.
அதனால்தான் நாயகி தாயின் அன்பை நல்குவதாகக் கண்ட பின் தற்கொலை செய்துகொள்கிறான் வில்லன். தீமை விலகியது நன்மையாக மாறியது.

Mubeen Sadhika
https://mubeen-sadhika.blogspot.com/2020/02/blog-post.html

Sunday, January 26, 2020

சின்ன எம்.ஜி.ஆர் ஜெய்சங்கரின் புகழ்

ஜெய்சங்கரை* வைத்து படம் எடுத்து ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார், நடுவீதிக்கு வந்தார் என்று எவராலும் விரல் நீட்டி கூற முடியாது. காரணம் அவர் யாரிடமும் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று கேட்டதில்லை.
முடிந்ததை கொடுங்கள் என்பார். அவர் வீட்டு பீரோ நிறைய திரும்பி வந்த காசோலைகள் பண்டல் பண்டலாக இருந்தது என்பார்கள்.
அதேபோல தோல்வி அடைந்த படங்களின் சம்பளத்தை திருப்பிக் கொடுப்பதை தொடங்கி வைத்தவரே ஜெய்சங்கர் தான். லைட் பாயிலிருந்து ரசிகன் வரை யார் அவரை உதவி என்று தேடிப்போனாலும் இருப்பதை கொடுக்கும் கொடை வள்ளலாக வாழ்ந்தார்.


எம்.ஜி.ஆரை சந்திப்பது கடினம். அப்படி சந்தித்து விட்டால் பெரியதாக அள்ளிக் கொடுப்பார். ஜெய்சங்கரை சந்திப்பது எளிது. அவர் சக்திக்கேற்ப கிடைக்கும். அதனால்தான் ஜெய்சங்கரை சின்ன எம்.ஜி.ஆர் என்பார்கள்.
வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நிறைந்த பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்சங்கர், சோ நடத்திய 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் 'இரவும் பகலும்' படத்தில் அறிமுகமானார்.
முதல் படமே வெற்றி பெற புகழ்பெற்றார் ஜெய்சங்கர். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற பெரிய நடிகர்கள் ஒரு பக்கம், ஜெமினி கணேசன், ரவிசந்திரன் என இளம் பெண்களை கவர்ந்து கொண்டிருந்த ஹீரோக்கள் இன்னொரு பக்கம். இதற்கு இடையில்தான் ஜெய்சங்கர் புகுந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். யார் நீ, பொம்மலாட்டம், குழந்தையும் தெய்வமும், மன்னிப்பு, பட்டணத்தில் பூதம் போன்ற படங்கள் அவரை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன.
மற்ற நடிகர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட ஹாலிவுட் ஹீரோக்களின் சாயலில் நடிக்க ஆரம்பித்தார். சிஐடி சங்கர், வல்லவன் ஒருவன், கருந்தேள் கண்ணாயிரம், கங்கா, ஜக்கம்மா, ஜம்பு, எங்க பாட்டன் சொத்து போன்ற படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் நடித்தார். துணிவே துணை, கங்கா போன்ற படங்களில கவுபாய் கேரக்டர்களில் நடித்தார். இவர் காலத்தில்தான் ராஜ்கோகிலா, ஜெயமாலா, ராஜ்மல்லிகா, போன்ற கவர்ச்சி நடிகைகளும் சினிமாவுக்கு வந்தார்கள்.
100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஜெய்சங்கர் கடைசி வரை தனக்கென தனி பாணி வைத்துக் கொண்டார். அவர் நடித்த வண்ணப் படங்கள் ஒரு சில தான். வண்ணப் படங்கள் வந்த பிறகும் நீண்ட நாள் கருப்பு வெள்ளை படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரும் ஜெய்சங்கர்தான். காரணம் அவர் கடைசி வரை சிறு தயாரிப்பாளர்களின் ஹீரோவாகவே இருந்தர்.
ரஜினி, கமலின் வருகைக்கு பிறகு அவரால் அவர்களுடன் போட்டிபோட முடியவில்லை. சினிமாவை விட்டு மெல்ல விலக ஆரம்பித்தார்.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஏவிஎம் தயாரித்த 'முரட்டுக்காளை' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். ஏற்கெனவே 'காயத்ரி' என்ற படத்தில் ஜெய்சங்கர் ஹீரோவாகவும், ரஜினி வில்லனாகவும் நடித்தது குறிப்பிடத்தக்து. முரட்டுக்காளை ஜெய் சங்கருக்கு ரீ எண்ட்ரியை கொடுத்தது. 61 வயதில் அவர் சாகும் வரையில் நடித்துக் கொண்டுதான் இருந்தார்.

இளைஞர்களுடன் இணைந்து 'ஊமை விழிகள்' போன்ற படங்களிலும் நடித்தார். 100 படங்களுக்கு மேல் ஹீரோ. எம்.ஜி.ஆர் போன்ற வள்ளல் குணம். அழகு குறையாத நடிகன், இத்தனை இருந்தும் ஜெய்சங்கரின் புகழ் இன்னும் குடத்திலிட்ட விளக்காத்தான் இருக்கிறது.

Tuesday, August 13, 2019

அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' விமர்சகரின் மதிப்புரைகள்


Nakkheeran



நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்...' எனத் தொடங்கும் புதுமைப் பெண்கள் குறித்த பாரதியின் வார்த்தைகளை விட இந்தப் படத்துக்குப் பொருத்தமான டைட்டில் கிடைக்காது. காலம்தோறும் தமிழ் சினிமா பெண்ணியம் பேசிவந்துள்ளது. வெகு சில படங்களைத் தவிர பெரும்பாலான படங்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்வதாகவோ அல்லது ஒழுக்கமான ரௌத்திரமான நாயகிகள் ஆண்களுக்கு அறிவுரை சொல்வதாகவோதான் அமைந்திருந்தன. 'பொண்ணுன்னா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்' என்று சொல்லும் படங்களைப் பார்த்து வளர்ந்த நம்மை 'பெண் எப்படி இருந்தாலும் அவளிடம் அத்து மீற உனக்கு உரிமை இல்லை, அவள் 'நோ' சொன்னால் அதன் அர்த்தம் 'நோ'தான்' என்று நிற்க வைத்து நெற்றியில் அடித்துச் சொல்ல வந்திருக்கிறது 'நேர்கொண்ட பார்வை'.

 
 வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படும் பெண், அணிந்திருந்த உடையைப் பொறுத்து நீதி சொல்லும் மனங்கள் நிறைந்த ஒரு சமூகத்திடம் "ஜீன்ஸ் டீ-ஷர்ட் அணிந்தாலும் சிரித்துப் பேசினாலும் உடனமர்ந்து மது அருந்தினாலும் அவள் மீது அத்துமீற உனக்கு உரிமை இல்லை" என்று அறிவுரை வசனங்களாக அல்லாமல் அழுத்தமான தர்க்கங்களால் பேசும் 'நேர்கொண்ட பார்வை' இந்தக் காலகட்டத்துக்கு மிக மிக அவசியமான படம். ஏன் இந்தக் காலகட்டத்துக்கு அவசியம்? இது பெண்கள் வெளியே வந்து, ஆண்களுக்கிணையாக சம்பாதிக்கும், ஆண்களுக்கிணையாக பொறுப்புகள் சுமக்கும், ஆண்களுக்கிணையாக மகிழ்ச்சி தேடும் காலம். பெண்கள் தங்கள் காதலை, காமத்தை, விருப்பங்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கும் காலம். 'அது தவறு, அவர்கள் அப்படி இருக்கக்கூடாது, இன்னும் அவர்கள் ஆண்களுக்குக் கீழ்தான், வெளியே சுற்றுபவள் அறைக்குள்ளும் ஒத்துழைப்பாள்' என்ற எண்ணம் உள்ள ஆண்களும் கணிசமாக வாழும் காலம். இப்படி ஒரு டிரான்ஷிஷன் காலகட்டத்தில் "ஒரு பொண்ணு குடிச்சா அவ கேரக்டர் சரியில்ல, ஒரு பையன் குடிச்சா அது வெறும் உடல்நலத்துக்கு ஆபத்து மட்டுமா? குடி தப்புன்னா அதை யார் செஞ்சாலும் தப்புதான்" என்று எடுத்துச் சொல்லும் ஒரு ஜனரஞ்சகப் படம் அத்தியாவசியம்தான். இந்தப் பாடத்தை பள்ளியோ, பெற்றோரோ சொல்லாத இடத்தில் ஒரு படம் சொன்னால், அதை பாராட்ட வேண்டும். அறிமுகமோ, நட்போ, காதலோ, காமமோ வெளிப்படுத்தவும் மறுக்கவும் பெண்ணுக்கு உரிமை உண்டு என்பதை ஆண்களுக்கு சொல்லித்தர வேண்டும்தானே? நட்பு, காதல் என்று நம்பி உடன் வந்த பெண்களை பிற காமுக வெறியன்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது, அவள் பண்டமல்ல, அவளை அடிக்கக்கூடாது, அதை வீடியோ எடுத்து மிரட்டக்கூடாது என்று பொள்ளாச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டிவனம், திருத்தணி, திருச்சி என தமிழகமெங்கும் அரங்கு அதிரப் பேசும் ஒரு படம் தேவைதானே?
பெண்களுக்கான அறிவுரை சொல்லும் படங்களைக் கடந்து பெண்கள் குறித்த அறிவை சமகால இளைஞர்களுக்கு சொல்லும் புதிய பார்வை, இந்த 'நேர்கொண்ட பார்வை'. இது பெண்களுக்கான படமல்ல, ஆண்களுக்கான, பெண்கள் குறித்த படம். பெண்களும் பார்க்கலாம். குறைகளைத் தாண்டி நோங்கிய தாக்கத்தை கிட்டத்தட்ட தந்துவிட்டது இந்த 'நேர்கொண்ட பார்வை'. இனி பெண்கள் குறித்த நம் பார்வையை பரிசீலனை செய்யவேண்டும்.        
Geeta Ilangovan
`பிங்க்' பெண்ணியப் பார்வையில் எடுக்கப் பட்ட ஆகச் சிறந்த இந்திப் படம். அதன் மையப் பொருள் மாறாமல் (அஜித்துக்காக சேர்க்கப்பட்ட காதல்&ஆக்சன் பகுதிகளை மன்னித்துவிடலாம்) அருமையாக தமிழில் எடுத்திருக்கும் இயக்குனர் வினோத், நடிகையர் ஷ்ரத்தா, ஆண்ட்ரியா, அபிராமி, முக்கிய கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருக்கும் அஜித் மற்றும் மொத்த குழுவுக்கும் வாழ்த்துகளும், அன்பும் 💐
ஒரு பெண்ணுக்கு ஏதேனும் அநீதி - வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல் உட்பட - இழைக்கப்பட்டால், அவளுக்கு குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதை விட, சமுதாயத்தின் "ஒழுக்கக் கண்ணாடி"யை அணிந்து கொண்டு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் `ஒழுக்கமானவளா' என்று ஆளாளுக்கு ஆராய்ந்து தீர்ப்பு சொல்வார்கள்.
அவள் அணிந்திருக்கும் உடை, நேரத்துக்கு வீட்டுக்கு வருகிறவளா இல்லை இரவு தாமதாக வருவாளா, தனியாக வசிக்கும் பெண் என்றால் ஆண்கள் யாரெல்லாம் வந்து போவார்கள், யாரோடு வெளியே போகிறாள், எங்கே போகிறாள், எந்த நேரத்தில் போகிறாள், குடிக்கிறவளா, ஆண்களுடன் சிரித்து பேசுகிறவளா, விவாகரத்து ஆன ஆணுடன் உறவில் இருக்கிறவளா, பலபேருடன் உறவில் இருந்தவளா, கன்னித்தன்மை இழந்தவளா... இத்தியாதி... இத்தியாதி.... இதைப் போல இன்னும் பல. இது சமயத்துக்கு தகுந்தாற் போல மாறும். இதில் ஒரு மாற்று குறைந்தால் கூட `அவளைப் பத்தி தெரியாதா ?' என்று கிழித்து தொங்க விடுவார்கள். `அவளுக்கு இது மாதிரி நடக்கறது பெரிய விசயமில்லை' என்பது போல குற்றத்தை மழுங்கடித்து, குற்றவாளி ஆணை மறந்தே விடுவார்கள்... அப்புறம் எங்கே தண்டனையைப் பற்றி யோசிப்பது ?
`நீங்கள் சொல்லும் "அத்தனை ஒழுக்க விதிகளை"யும் மீறும் ஒரு பெண்ணாக இருந்தாலும், அவள் அனுமதியின்றி அவளை தொடக்கூடாது. அது தண்டனைக்கு உரிய குற்றம். அவள் உடல் மீதான உரிமை அவளுக்கு மட்டும் தான்' என்று பொட்டில் அடித்துச் சொல்கிறது படம்.
பொது சமுதாயம், ஊடகம், காவல்துறை, நீதித்துறை எல்லோரும் `women of objectionable character' என்ற மூளைச்சலவையால், காலங்காலமாக பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெளிவாக பாடம் எடுக்கிறது இந்தப் படம்.
இந்த உரையாடலை எங்காவது ஆரம்பிக்க வேண்டும். `நேர் கொண்ட பார்வை' அதனை இங்கு துவக்கியிருக்கிறது
பாருங்க தோழர்களே !

Monday, August 5, 2019

“துணை” என்ற குறும்படம்

“இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் மறுமணம் பற்றிய உரையாடல்களைச் செய்யப்போகிறோம்?” என்று கேள்விகளை எழுப்புகிறார் வி. சபேசன். “துணை” என்ற குறும்படத்தை இதற்காகவே அவர் ஒரு வழியாக எடுத்திருக்கிறார். இந்தப்படம் இன்று (04.08.2019) கிளிநொச்சி - கருணா நிலையத்தில் திரையிடப்பட்டது.
மறுமணம் பற்றிப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. உடனடியாக உங்களுக்கு நினைவுக்கு வருவது ரத்தக் கண்ணீர். இதைவிடப் பல குறும்படங்களும் இலக்கியப் பிரதிகளும் தமிழில் வந்திருக்கின்றன. ஈ.வெ.ரா இதைப்பற்றி நிறையப் பேசியிருக்கிறார். முன்னோடிகளாகப் பலர் மறுமணத்தைச் செய்து காட்டியிருக்கிறார்கள். எங்களுடைய குடும்பத்தில் கூட மறுமணம் செய்திருப்பதாக பழைய சுவடிகள் சொல்கின்றன. அம்மாவின் தாயாரான ஆச்சியின் தம்பி மூன்று திருமணங்களைச் செய்திருக்கிறார். ஆனால் கருணாநிதியைப்போலவோ கண்ணதாசனைப்போலவே அல்ல. எம்.ஜி.ஆரைப்போல என்று சித்தப்பா பகடியாகச் சொல்வார். ஒருவர் இறந்த பிறகு மற்றவர். அவர் இறந்த பிறகு அடுத்தவர் என்று. இளவயதிலேயே இவ்வளவும் நடந்ததால் அவர் மறுமணம் செய்ததைப்பற்றி யாரும் புகார் கொண்டதாகத் தெரியவில்லை. சொத்துக்குளைக் குறித்தும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.
1940 க்கு முதல் மறுமணம் செய்து கொள்வதென்பது ஈழத்தில் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெரிய விசயமாகக் கொள்ளப்பட்டதில்லை. அன்று மருத்துவ வசதிகள் குறைவு. இதனால் ஏற்படும் இளவயது மரணங்கள் மறுமணத்துக்கான சூழலை அல்லது நிலைமையை உருவாக்கியுள்ளன என்று தோன்றுகிறது. குறிப்பாக பெண்கள் குழந்தைப்பேறு காலங்களில் கூடுதலாக மரணமடைந்திருக்கிறார்கள். இந்த மாதிரிப் பேறு கால மரணங்கள் நிகழும்போது காயாசுவாதம், கடுங்காய்ச்சல் என்றெல்லாம் பேசப்பட்டது நினைவிலுண்டு.
இளவயதில் துணையின்றி வாழ்வது கடினம் அல்லது பிள்ளைகளுக்கு ஆதரவு தேவை என்றெல்லாம் யோசிப்பவர்கள் மறுமணத்துக்கு முன்வருகிறார்கள். சிலருக்கு மறுமணம் உவப்பாக இருப்பதில்லை. அப்படியானவர்கள் அவர்களுடைய விருப்பப்படியே வாழலாம். இதெல்லாம் அவரவர் விருப்பமும் சுயாதீன நிலைப்பாடுமாகும். எதற்கும் கட்டுப்பாடுகளோ அழுத்தங்களோ வேண்டியதில்லை. ஆனால் மறுமணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு எந்த வகையிலும் குடும்பத் தடைகளோ சமூக மறுப்புகளோ வேண்டியதில்லை.
இவற்றைப்பற்றியெல்லாம் விரிந்த தளத்தில் பேச வேண்டும் என்று உணர்த்துகிறது துணை. 
Karunakaran Sivarasa


Monday, July 15, 2019

உங்களை உறைய வைக்கும் வசனங்கள் (சுஜாதா குறும்பு)

புகைப் படம்: ஸ்டில்ஸ் ரவி. ( Ravi Varma V )
இந்தியன் படத்தில், நிழல்கள் ரவியை கமல்... ஸாரி.. இந்தியன் தாத்தா கொல்லும் காட்சி. வெறும் இரண்டே நிமிடங்களில் உங்களை உறைய வைக்கும் வசனங்கள்.
‘நீ ஒருத்தன் வாங்கறதால உனக்கு கீழ இருக்கறவனெல்லாம் வாங்கறான். இப்படித்தான் பொதுப்பணித்துறை, போக்குவரத்துத் துறை, நிதி, மின்சாரம், உணவு, சுகாதாரம், கல்வி, காவல், தொழில்னு எல்லாத் துறைலயும் வாங்கி வாங்கி நாட்டை வளர விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கி வெச்சிருக்கீங்க. நல்ல காத்தில்ல.. நல்ல பொருளில்ல.. நல்ல சாப்பாடில்ல.. ஏகப்பட்ட இயற்கை வளங்கள் இருந்தும் இந்த நாடு பிச்சைக்கார நாடா இருக்கே... ஏன்..? ஒவ்வொரு இந்தியனும் கடனாளியானதுண்டா மிச்சம். பக்கத்துல இருக்கற குட்டிக்குட்டி தீவெல்லாம் பெரிய பெரிய தீவா வளர்ந்திருக்கே.. எப்படி.. ஏன்?”
”அங்கெல்லாம் லஞ்சம் இல்ல”
“இருக்கு... இருக்கு.. அங்கெல்லாம் கடமைய மீறுறதுக்குதாண்டா லஞ்சம். இங்க கடமைய செய்யறதுக்கே லஞ்சம்.. தேசிய ஒருமைப்பாடுங்கறது இந்த நாட்ல லஞ்சத்துல மட்டும்தாண்டா இருக்கு” என்று தொடர்ந்து அவர் பேசும் வசனங்களின் வீரியம் 20 வருடங்கள் கழித்தும் வலிக்கிற நிஜமாய் இருக்கிறது.
’முதல்வன்’ படத்தின் ‘ரகுவரன்-அர்ஜுன்’ நேர்காணல் காட்சியை மறக்க முடியுமா? படத்தின் மிக முக்கியமான திருப்புமுனைக் காட்சி அது. திரையில் இரு ஆண்கள் 15 நிமிடத்திற்கு நீள நீள வசனம் பேசிக் கொண்டிருப்பதை ரசிகன் சலிக்காமல் பார்க்க வேண்டுமானால், வசனத்தின் முக்கியத்துவம் எப்படி இருக்க வேண்டும்! ‘எதிர்கட்சிகிட்ட எவ்ளோ வாங்கின’ என்று கேட்க, ‘நீங்க எதிர்கட்சியா இருந்தா எவ்ளோ கொடுத்திருப்பீங்க’ என்ற பதில் கேள்வி, தமிழக அரசியல் தலைவர்களின் எதார்த்தத்துடன் பின்னிப் பிணைந்த சுஜாதா குறும்பு.
போகிற போக்கில், நகைச்சுவை வெடியைக் கொளுத்துவதிலும் இவர்தான் பெஸ்ட். அதாவது நல்ல சீரியஸான காட்சிக்கு இடையே ஒரு குண்டூசியைக் குத்தி, ஒரு நிமிடம் சிரிக்கவும் கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிற காமெடி.
முதல்வனில், சேல்ஸ் டேக்ஸ் கட்டணும் என்று ஒருநாள் முதல்வனாக அர்ஜுன் கெத்து காட்டிக் கொண்டிருப்பதை ரகுவரன் டிவியில் பார்த்துக் கொண்டே, தன்னருகே இருக்கும் மந்திரியிடம் கேட்பார்.
“யோவ் நிதித்துறை.. ஒருநாளைக்கு சேல்ஸ் டாக்ஸ் வருமானம் எவ்வளவு?”
அந்த மந்திரி, மிகவும் மரியாதையான குரலில் கேட்பார்: ‘கட்சிக்குங்களா.. நாட்டுக்குங்களா?”
அந்நியனில், விக்ரம் சொல்லும் ‘சொக்கன் சிக்ஸ்டி ஃபைவ்’ சுஜாதாவைத் தவிர யார் மூளையிலும் உதித்திருக்க வாய்ப்பில்லை. இந்தியனில் கவுண்டமணி சொல்லும் ‘என்னய்யா மம்மியப் பாத்த எம்.எல்.ஏ மாதிரி பம்முறே’வை எழுதுகிற தில்லையும் சொல்லலாம்
- Vikatan E Magazine,
Thanks Chandran Veerasamy

Thursday, April 4, 2019

சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு

 Thiru Vasagam
அவருடைய திரைப்படங்களை விடவும் அவருடைய இந்த புத்தகத்தை அவ்வளவு நெருக்கமாக உணர்கிறேன்.
எப்போதெல்லாம் மனம் தளர்ந்து போகிறேனோ அப்போதெல்லாம் இந்த புத்தகம் ஆதூரத்துடன் அணைத்து ஆறுதல் சொல்கிறது.
கண்ணீர் துளிகளை துடைத்து விடுகிறது.
குறிப்பாக ' சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு' என்கிற முதல் அத்தியாயம் எப்போதும் என் விருப்பத்திற்குரிய ஒன்று. வாழ்வின் கண்திறப்பென்றே அதை சொல்வேன்.
ஒரு தகப்பனாக, அண்ணனாக, நண்பனாக, நம் வாழ்வின் மீது அளவற்ற நேயம் கொண்ட காதலியாக அவர் பேசிச் செல்லும் பாங்கு யாவும் , அவருடைய பல படங்களின் காட்சிகள் சொல்லாத ஈரத்தன்மையுடையவை. பல்வேறு உளைச்சலிலிருந்து என்னை மீட்டெடுத்தவை.

சினிமாவில் ஏதோவொரு வாய்ப்புத் தேடி அலைபவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்தை வாசிக்க பரிந்துரைக்கிறேன். குறிப்பாக, முதல் அத்தியாயம். உங்களை இன்னும் பல வருடங்களுக்கு உத்வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ளும் வல்லமை மிகுந்தது அது. நான் உத்திரவாதம்.
இனி வருபவை முதல் அத்தியாயத்திலிருந்து...
"ஒரு மனிதனுக்குக் காதல் அவசியம். தன் மீதான காதல். நீங்கள் முதலில் உங்களை நேசியுங்கள். உங்கள் உடலை நேசியுங்கள். ஆரோக்கியமான உடலும் கூர்மையான மனமுமே சிறந்த படைப்புகளைத் தர உதவும்.
ஒரு சின்ன வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். அது எதுவாகவும் இருக்கட்டும். அடிமனதில் சினிமா ஒரு பொறியாக உங்களுக்குள் கனலட்டும். அதை அணைய விடாது அந்தக் கனலுடன் இருங்கள். அப்போது அதன் வீரியம் கூடிக் கொண்டே இருக்கும்.

உடல், மன ஆரோக்கியத்துடன் வாய்ப்பு தேடுவது ஆரோக்கியமானது. அப்போது உங்களிடம் தேவையற்ற தயக்கமோ கூச்சமோ இருக்காது. மன உறுதி இருக்கும். தன்னம்பிக்கை இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக வாய்ப்பு மறுக்கப்பட்டால் நிச்சயம் கூசிப் போகமாட்டீர்கள். உங்களுக்குப் பொறுந்தி வரக்கூடிய மற்றொருவரைத் தேடி, அதே கம்பீரத்துடனும் தெளிவுடனும் நீங்கள் செல்வீர்கள்"
" சினிமாவில் பிரபலமடைவதும் பெரிய ஆளாவதும் சந்தோஷமே. ஆனால், ஒருவேளை உன்னால் ஆகமுடியாது போனால் ... அது ஒன்றும் பெரிய நஷ்டமோ.. குறைபாடோ இல்லை.
சினிமா தவிர்த்தும் இந்த வாழ்க்கை மிக உன்னதமானது. பெருமை உடையது. பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது என்பது அப்படியொன்றும் குறைச்சலான காரியமில்லை..."
இவ்வளவு அற்புதமான கலைஞனை நேரில் சந்திக்கவே இல்லையே உரையாடவே இல்லையே என்கிற குற்ற உணர்வு எப்போதும் இருந்ததில்லை.
இந்த புத்தகத்தின் மூலம் இப்போதும் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.

Thursday, October 4, 2018

பரியேறும் பெருமாள் BA BL

முரண்பட்டு நிற்கும் இரண்டு தரப்புகளும் சுமுகமாக செல்ல வேண்டுமென்றால் negotiation ground எனப்படும் உரையாடல் தளம் வேண்டும். இரு தரப்பும் பேச ஆரம்பிக்க வேண்டும். உடனே தீர்வு கிடைத்துவிடாது. ஆனால், பேசத் துவங்குவது மிக முக்கியம் - எதிர்தரப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும், பேசும் போதுதான் பிரச்சனையை தீர்ப்பதற்கான வெளிச்சம் தட்டுப்படும். இது நீண்ட பயணத்திற்கான தொடக்கப் புள்ளி.
இயக்குனர் தோழர் Mari Selvaraj நினைத்திருந்தால், பரியன் கொலை செய்வதாகக் காட்டி, உணர்ச்சிக் குவியலாகப் படத்தை முடித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. ஆதிக்க ஜாதியுடன் ஓர் உரையாடலைத் துவக்கியிருக்கிறார். `நா சொல்றது உனக்குப் புரியுதா ? உன்னோட வன்மத்தால் எம்மக்கள் அனுபவிக்கும் கொடுந்துயரங்களைப் பார்த்தாயா ? ' என்று ஒடுக்கப்பட்ட ஜாதி, தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பெருந்தன்மையோடும், பேரன்போடும்,
பெரும்வேதனையோடும், ஆதிக்க ஜாதியுடன் உட்கார்ந்து பேசுகிறது. உரையாடத் துவங்குகிறது.
சமத்துவத்திற்கான சவாலான பயணத்தில் negotiation groundஐ உருவாக்கியிருக்கும் `பரியேறும் பெருமாள் BA BL' மிக முக்கியமான படம் 
 Geeta Ilangovan
இந்திய சமூகங்களின் சாதிய மனபோக்குகளை பலவீனப்படுத்துகின்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதி ஒழிப்பு என்கின்ற சமத்துவ சமூகத்திற்கான முயற்சி ஒடுக்கப்படுகின்ற சமூகத்திலிருந்து தொடங்குவதில்லை. மாறாக அது ஒடுக்குகின்ற சமூகத்திலிருந்து தொடங்க வேண்டியது என்பதை இப்படம் மிகத்தெளிவாக உணர்த்தியிருக்கிறது.
பாபாசாகேப் அம்பேத்கரின் சாதியொழிப்பு என்கிற நூல் தலித்துகளுக்கானதில்லை. தலித் அல்லாதவர்களின் சிக்கலான உளவியலை சீர்ப்படுத்தும் பாடநூல் என்பதை இத்திரைப்படச் சூழலிலாவது சாதி இந்துக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் "இந்தியாவில் கிராமங்கள் புற்றுநோயாக இருக்கிறது" என்கிறார். காந்தியோ "முதுகெலும்பு" என்கிறார். பரியேறும் பெருமாள் திரைப்படம் புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்றை நிரூபித்திருக்கிறது. சமூக விடுதலைக்கான இயக்கங்கள், கட்சிகளுக்குக்கூட சாதிய வன்கொடுமைகள் பழகிப்போய், அது குறித்த பிரங்ஞையே இல்லாமல் பறந்துக்கொண்டிருப்பதை பரியனின் தந்தை செல்வராஜை அவமானப்படுத்துகின்ற காட்சி அப்பட்டமாக்குகிறது.
"இந்திய கிராமங்கள் அதிகாரமற்றவர்களின் திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது" என்பதை, பேருந்திலிருந்து பரியனை இறக்கி அடிக்கின்ற காட்சி - திருமணத்திற்கு வந்தவனை அடித்து சிறுநீர் கழிக்கின்ற காட்சி - கறுப்பி நாய் கொல்லப்படுவது... போன்ற காட்சிகள் தத்ரூபமாக இருக்கின்றன. திரைமொழியாக்கப்படாமல் இருந்த பள்ளர்களின் வாழ்வியலை முதல்முதலாக இயக்குநர் மாரி செல்வராஜ் எடுத்துக்காட்டி இருக்கிறார். ஒடுக்கப்படுகின்ற அனைத்து சமூகத்தின் குறியீடாக இத்திரைப்படம் அமைந்திருந்தாலும், தென்மாவட்ட தலித்துகளின் தற்கால அரசியல் நிலைப்பாட்டை இது பேசியிருக்கிறதா? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்திருக்கிறது.
வணிக அடிப்படையிலான முழுமையான வெற்றியடையாமல்,
அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்படாமல் போகின்ற நிலை உண்டாகுமேயானால், படைப்பு ரீதியாக இத்திரைப்படம் முழுமையான வெற்றியை அடைந்ததாகத்தான் அர்த்தம். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவேண்டிய திரைப்படம் பரியேறும் பெருமாள்.

இனி சாதிய வன்கொடுமைகளைப்பற்றி உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க ஆவணப்படங்கள் அவசியமில்லை, பரியேறும் பெருமாளே அதை பறைசாற்றும். இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் கோபி நயினார் தமிழ் சினிமாவில் உருவாக்கிய சாதியொழிப்பு பாதையில் சுதந்திரமாகவும் உண்மையாகவும் பயணித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். மக்களோடு கலந்திருக்கும் இசை இத்திரைப்படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. தென்மாவட்ட சமூக அரசியலில் டாக்டர் அம்பேத்கரை மிக எதார்த்தமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் மாரி.
சாதியொழிப்பு அரசியலைப் பேசுகின்ற #பாரஞ்சித் #நீலம்புரடெக்‌ஷன் வழியாக இத்திரைப்படத்தை தயாரித்திருப்பது தமிழ்ச்சினிமாவில் ரஞ்சித்தின் கலை நேர்மையை மீண்டும் உணர்த்தியிருக்கிறது. ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கிய இந்திய அரசு நிச்சயம் பரியேறும் பெருமாளை தலைதாழ்ந்து வரவேற்கும்.
- டாக்டர். பாரதி பிரபு

பரியேறும் பெருமாள் - பரிவட்டம் கட்டுவாரா?
ஒரு கலைப்படைப்பை ஒரு தனி மனிதனின் உள்ளுணர்வோடு உரையாடச் செய்கிற போது அவனுடைய மனம் ஏதாவது ஒரு இயல்புணர்ச்சியால் பதட்டமடைகிறது என்றால், அந்தக் கலைப்படைப்பு வெற்றி பெற்றதாக நாம் அறிகிறோம், குறிப்பாக சாதி குறித்த உயர் நவிற்சியால் ஊற வைக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்படங்கள் ஒடுங்கிய குரலை, நடுங்கிக் கொண்டிருக்கிற மானுடத்தின் ஒரு பகுதியை கலை வெளிச்சம் போட்டுக் காட்ட முற்படுகிறது என்பதே பெரிய சாதனையாகப் பேசப்படுவதுதான் சமகாலத்தின் துயரம்.
நம்முடைய சமூகம், உயர் இலக்கியங்களைப் பேசக் கூடியதாக இருக்கிறது, உயர் பண்பாடுகளைக் குறித்த வரட்டுக் கூச்சலிடுவதாய், பொருளாதார மேம்பாடு, அரசியல், சமூக வளர்ச்சி என்று பெருமிதம் கொண்டதாய்க் காட்சி அளிக்கிறது, தமிழகத்தின் ஒரு கிராமத்தில், தோற்றத்தில் பெரிய மனிதர் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவருடைய குரலில் கலந்திருக்கும் அரசியல் மற்றும் சமூகப் பெருமிதம் உங்களை ஒரு பண்பட்ட சமூகத்தில் இருப்பதாக உணரச் செய்யும்.
பிறகு உரையாடலின் ஏதாவது ஒரு புள்ளியில் அவர் சாதி அடையாளம் குறித்துப் பேசும்போது அந்தப் பாதுகாப்பு மனநிலையில் இருந்து நழுவி ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும். அந்த உரையாடலின் இரண்டாம் மனிதன் ஒடுக்கப்பட்ட மனிதனாக அடையாளம் செய்யப்படுகிறவனாக இருந்தால் அவனுடைய மனநிலை குறித்து நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். விரைந்து உரையாடலை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறத் துடிக்கிற, ஒடுங்கிப் போகிற மானுடத்தின் குரலாக அது இருக்கும். சாதிப் பெருமிதத்தின் முன்னாள் சாலையில் அடிபட்டுக் கிடக்கிற ஒரு அழகான நாய்க்குட்டியின் படபடக்கிற வாலைப் போல காட்சிப் புலத்தில் நின்று துடிக்கும்.
தமிழ் திரைப்படங்களில் விலங்குகளுக்காக உலகத்தையே எதிர்த்து நின்று போராடுகிற மாவீரர்களை, போராளிகளை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால், கருப்பியைப் போல கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு நாய்க்காக கதை நாயகனின் சார்பில் பார்வையாளனைப் போர் தொடுக்க வைத்ததுதான் பரியேறும் பெருமாளின் வெற்றி. அது இந்த சமூகத்தில் ஒரு இயல்பான நிகழ்வு என்று நாயகனோடு கடக்கிறது மாரி செல்வராஜின் திரை மொழி. நாய் ஒரு படிமம், நாயை நீங்கள் இளவரசனாகக் கொள்ளலாம், சாதிப் பெருமிதத்தின் பெயரால் கொல்லப்பட்ட எவரையும் அந்த நாயைப் போல நீங்கள் காட்சிப் படுத்திக் கொள்ளலாம்.
பொது சமூகத்தின் மனநிலையில் இரண்டு வெவ்வேறு விதமான மனநிலை மாற்றத்தை இந்தத் திரைப்படங்கள் உருவாக்கலாம், ஒடுக்கப்பட்டவனாகத் தன்னை உணர்கிற ஒரு மானுடனின் மனநிலை, சாதிப் பெருமிதம் கொள்பவனாகத் தன்னை அடையாளம் காண்கிற ஒரு மானுடனின் மனநிலை, முதலாவதில் சினம் உருவாகலாம், அல்லது கையறு நிலை, பரிவுணர்ச்சி என்று கலவையான மனநிலை உருவாகலாம். இரண்டாமதில் இயக்குனர், தயாரிப்பாளர், ஒரு நல்ல கலைப் படைப்பை ரசிக்கிற பார்வையாளன் என்று எல்லோருமே எதிர் நோக்குவது மாற்றத்தை, நேரடியான சாதிக்கு எதிரான மனநிலை மாற்றத்தை.......
ஆனால், அந்த மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா என்கிற கேள்வி நூலறுந்த பட்டம் போலக் காற்றில் ஆடுகிறது. வழக்கமான கொண்டாட்ட மனநிலை என்பது முற்போக்கு முகமூடிகளில் மறைக்கப்படும், சாதி திரைப்படங்களின் மூலமாக எழுப்பப்படுகிற கேள்விகளால் அழிந்து விடக்கூடிய ஒரு நிறுவனம் அல்ல, மாறாக இந்திய சமூகத்தின் ஆதி அந்தம் வரைக்கும் பரவிக் கிடக்கிற ஒரு மத நிறுவனம். முறையான தன்னெழுச்சியான மானுடத் துண்டுகள் மட்டுமே இத்தகைய கலை வடிவத்தைப் போற்றக் கூடியதாக இருக்கிறது.
ஆக, இந்த உரையாடல்களில், வெறும் பரிவுணர்ச்சியால், கருப்பியைப் போல கொல்லப்படுகிற நாயாக, பரியனின் வேட்டி அவிழ்க்கப்பட்ட தந்தையின் நிர்வாணமாக, சிறுநீர் கழிக்கப்படுகிற ஒடுங்கிய காதலனின் குருதியாக சரணடைதலின் கலை நுட்பத்தை வேண்டுமானால் ரசித்துப் போற்றலாம், ரசித்தலில் இருந்து இந்த சமூகக் கோபத்தை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டிய ஆயுதங்கள் இந்தப் படத்தில் இன்னும் கூர்மையாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏனோ தோன்றுகிறது.
சாதி நிறுவனத்தை நீர்த்துப் போகச் செய்ய தார்மீகமான முதல் வழி எதிர்த்து அடிப்பது, இரண்டாவது வழி அரவணைத்துப் போவது அல்லது பணிந்து போவது, மூன்றாவதாக கல்வியின் மூலமாகப், பொருளாதார சமூக மேம்பாடுகளை அடைந்து தன்னியல்பில் நிற்பது, சாதியப் பெருமிதம் ஒரு சந்தனப் பேழை என்று நினைக்கிற மனிதர்களை அது ஒரு பீக்குழி என்று உணர வைக்கிற வேலை இந்த வகையான திரைப்படங்களின் திட்டமாக இருக்க வேண்டும், அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் மாரி செல்வராஜ்.
முற்பாதியில் கல்லூரி வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் இணைக்கிற புள்ளிகளில் ஒரு கலைஞனாக இன்னும் பல படிகள் முன்னேற வேண்டிய தேவை மாரி செல்வராஜுக்கு இருக்கிறது, திரைக்கதையில் இன்னும் தீவிரமாக உழைத்திருக்கலாம், திரைப்படங்களுக்கும் ஆவணப்படங்களுக்கும் திரைக்கதையில் இழையோடும் உயிரோட்டம் தான் மிக முக்கியமான வேறுபாடு.
இந்த வகைத் திரைப்படங்கள் ஒடுங்கிய குரல் கொண்ட மானுடத்தின் வரவேற்பைப் பெற்று, போலி முற்போக்கு ஊடகங்களின் விசில் ஒலியில் ஜொலிக்கக்கூடும், ஆனால், பொது சமூகத்தின் மனநிலையில் அதாவது ஒடுங்கிய குரலைக் கண்டு மகிழ்வெய்துகிற ஆதிக்க சமூகத்தின் மனதில் என்ன வேலை செய்கிறது என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இப்போதுதான் வேலையைத் துவக்கி இருக்கிற ஒரு இளைஞரிடம் நாம் அத்தகைய கடுமையான கேள்விகளை முன்வைக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
முதல் பத்தியில் சொன்னதைப் போல ஒடுக்கப்பட்ட மானுடனின் குரலை, அதாவது அவனுடைய இயல்பான குரலைப் பதிவு செய்வதே ஒரு மிகப்பெரிய புரட்சி என்று கொண்டாடப்படும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம், நம்முடைய இந்தப் பயணம் இன்னும் நூற்றாண்டுகள் பயணிக்க வேண்டும், நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த பயணத்தை பா.ரஞ்சித்தும் அவரது பரிவாரங்களும் வேகப்படுத்தி இருக்கிறார்கள்.
இன்னும், அழுத்தமான திரைக்கதையோடு, ஆழமான சிந்தனைகளோடு தொடருங்கள் மாரி செல்வராஜ். வாழ்த்து. 
Arivazhagan Kaivalyam

Wednesday, February 21, 2018

இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும். ...


இளையராஜா "அன்னக்கிளி" படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற நண்பரான மலேசியா வசுதேவனுக்கு தனது "16 வயதினிலே" படத்தில் ஒரு வாய்ப்புத்தர அவரால் முடிந்தது. அதுவும்கூட தற்செயலாக நடந்ததுதான் என்றாலும் பொருத்தமாக நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்த பாடலை அவருக்குத் தொண்டை சரியில்லாமல் போகவே மலேசியா வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா. "ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு" என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முட்டி எதிரொலித்தது அந்தப் பாடல். மலேசியா வாசுதேவன் என்றொரு பாடகரை அழுத்தமாகத் தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்ட பாடல் அதுதான். அந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். முன்னெப்போதும் கேட்டிராத முற்றிலும் ஒரு புதிய அழுத்தமான குரலை அவர்கள் கேட்டார்கள். தங்களது கிராமிய இசை வடிவிலேயே கேட்டார்கள். தமிழ் ரசிகர்களின் மனங்களில் இந்தப் பாடல் வாயிலாக அழுத்தமாக அமர்ந்துகொண்டார் மலேசியா வாசுதேவன்.
நாற்பத்தாண்டுகள் ஓடிவிட்டன. மலேசியா வாசுதேவன் 8 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாகப் பாடிவிட்டார். அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையமைப்பில் அதிகபட்சமான பாடல்கள். எல்லா வகையான பாடல்களையும், எல்லா தரப்பினருக்காகவும் அவர் பாடியிருக்கிறார். வாசுதேவனின் முழு ஆளுமையையும் வெளிக்கொணர்ந்த பெருமை இளையராஜாவையே சாரும், அவர் பல இசையமைப்பாளரிடமும் பணியாற்றியிருந்த போதிலும். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பாடிப் பெருமை சேர்த்திருக்கிறார் மலேசியா வாசுதேவன்.
இளையராஜா அவருக்கு மென்மையான காதல் மெலடியில் நிறைய வாய்ப்பளித்திருக்கிறார். "இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது..." (சிகப்பு ரோஜாக்கள்), "வான் மேகங்களே வாழ்த்துங்கள், பாடுங்கள்..." (புதிய வார்ப்புகள்), "கோடைக் காலக் காற்றே..." (பன்னீர்ப் புஷ்பங்கள்), "பூவே இளைய பூவே... வரம் தரும் வசந்தமே... மடிமீது தேங்கும் தேனே... எனக்குத்தானே..."(கோழி கூவுது), "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ..."(தூரல் நின்னு போச்சு) இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். பட்டியல் முடியாது. அத்தனையும் அழகுப் பாடல்கள், அத்தனையும் தேனாக இனிக்கும் பாடல்கள்.
இவற்றுக்கு இணையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் பல பாடல்களை அவருக்குத் தந்திருக்கிறார். "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை"(சரணாலயம்), "எண்ணியிருந்தது ஈடேற..."(அந்த ஏழு நாட்கள்) போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள்.
முரட்டுக்காளையில் அவர் பாடிய "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடல் இன்று வரையில் வரும் எல்லாக் குத்துப் பாடல்களையும் வென்றுகொண்டேயிருக்கிற அதிசயத்தைப் பார்க்கமுடிகிறது. உணர்ச்சி ததும்ப பாசம் இசைக்கும் "ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு"(தர்ம யுத்தம்) பாடல் தங்கைகளுக்காக அண்ணன்களின் அன்புக்குரல். "பட்டு வண்ண ரோசா வாம்..."(கன்னிப்பருவத்திலே), "பொன் மானத் தேடி நானும் பூவோடு வந்தேன்..."(எங்க ஊரு ராசாத்தி) போன்ற பாடல்கள் நாட்டுப்புற இசையின் நளினத்தோடு அன்பையும் சோகத்தையும் அள்ளி அள்ளி வழங்கும் பாடல்கள்.
மலேசியா வாசுதேவனுக்கு 16 வயதினிலேயில் வாய்ப்பளித்த அதே இயக்குநர் பாரதிராஜாதான் தனது "ஒரு கைதியின் டைரி" படத்தில் வில்லன் வேடம் தந்து நடிக்கவும் வைத்தார். தமிழ் சினிமாவின் மிக நல்ல குணச்சித்திர நடிகராக அவர் இன்னொரு அவதாரமெடுத்தார். 85 படங்களில் பல்வேறு பாத்திரங்களில் அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். "எண்ணம் தோன்றியது எழுதத் தூண்டியது" என்பது அவர் எழுதி 2010 வெளிவந்த கவிதை நூல். ஆமாம், கவிஞராகவும் அவர் வெளிப்பட்டிருக்கிறார். படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக் கிறார். அவருடன் நெருக்கமாக இருந்த சகாக்களுக்கு அவரது இன்னொரு முகமும் தெரியும். விளம்பரமின்றி பிறருக்கு உதவும் முகம்தான் அது.
சாதாரணப் பின்னணியிலிருந்து வந்தவர்தான் அவர். தன்னை உயர்த்திக்கொள்ள அவர் தனது திறமை ஒன்றையே நம்பியிருந்தார். தனது குரலால் அவர் தமிழ் ரசிகர்களை பலகாலம் கட்டிப்போட்டிருக்கிறார். கலைக்கும், இப்படிப்பட்ட கலைஞனுக்கும் எங்காவது மரணம் உண்டா?
மலேசியா வாசுதேவன் பாடவந்த காலம் குறித்துக் கொஞ்சம் பரிசீலித்தால் அவரது பங்களிப்பு எத்தகைய மகத்தானது என்பதையும் நாம் உணரமுடியும். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசை மேதை கே.வி.மகாதேவன் கோலோச்சிய காலத்தில் டி.எம்.சௌந்தரராஜன் கொடிகட்டிப் பறந்தார். மெல்லிசைக்கு செவ்வியல் இசையே அடிப்படையாக இருந்தது. சினிமாவுக்குக் காவியத் தன்மை வழங்குவதில் போட்டி நிலவிய காலம் அது. அதற்கேற்ப செவ்வியல் தன்மைகொண்ட கவித்துவமான பாடல்கள் உருவாகின. அவற்றுக்கு இசை வடிவம் தந்தபோது டி.எம்.எஸ்.ஸின் குரல் அதில் பெரும் பங்காற்றியதை மறுப்பதற்கில்லை. ஏனைய பிரபலப் பாடகர்கள் பெண்தன்மை கலந்த குரலில் பாடிக் கொண்டிருக்க, சௌந்தரராஜன்தான் முழு ஆணின் குரலை முன்வைத்தார். காலம் மாறியது. இசைஞானி இளையராஜா முன்னணிக்கு வந்த காலம் சினிமாவின் உள்ளடக்கமும் மாறத் தொடங்கிய காலம். கிராமங்களை நோக்கி காமிராக்களைத் தூக்கிக்கொண்டு போகத் தொடங்கியபோது சினிமாவின் உள்ளடக்கமும் மாறத் தொடங்கியது.
செவ்வியல் மரபிலிருந்து வந்த பழைய இசையமைப்பாளர்களுக்கு மாற்றாக நாட்டுப்புற மரபிலிருந்து வந்துசேர்ந்த இளையராஜாவின் இசையில் மண் மணம் தூக்கலாக இருந்தது இந்த மாற்றத்தைக் கட்டியம் கூறியது. இந்தப் புதிய நிலைமைக்கு ஏற்ற குரலுடன் இளையராஜாவின் தேவைக்கேற்ப வந்துசேர்ந்தவர் மலேசியா வாசுதேவன் மட்டுமே. அதாவது, காலத்தின் தேவையாக வந்தவர் மலேசியா வாசுதேவன் என்றே சொல்வேன். எத்தனை பாடகர்களைப் பாடவைத்த போதிலும் இளையராஜாவின் புதிய சூழலின், புதிய அணுகுமுறையின் தேவையை நிறைவுசெய்த ஒரே பாடகர் மலேசியா வாசுதேவன்தான்.
முன்னமே குறிப்பிட்டதுபோல, டி.எம்.சௌந்தரராஜனை ரசித்துப் பழகியிருந்த ரசிகர்களின் ஏக்கத்தைப் பூர்த்திசெய்யும் விதமாக அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவராகவும் மலேசியா வாசுதேவன் ஒருவரே இருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எவருடைய இசையமைப்பில் பாடினாலும் அது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலாக மட்டுமே தோன்றும். இசையமைப் பாளரை இனங்காண்பது கொஞ்சம் சிரமமானதாக இருக்கும். மாறாக, மலேசியா வாசுதேவன் பாடுகிறபோதுதான் அது இளையராஜா இசையமைத்த பாடல், எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல் என்று இனம் காணஇயலும்.
அதே நேரம் அந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் முகமும் தெரியாமல் போகாது. தான் பாடும் பாடலின் இசையமைப்பாளரின் அடையாளத்தை மறைக்காமலேயே தன்னையும் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடிய நுட்பமான இயல்பு மலேசியா வாசுதேவனின் குரலின் தனிச் சிறப்பாக இருந்தது. இதுவே அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நிலைத்து நின்றதற்கான பிரதான காரணமாகப் படுகிறது. இந்தத் தனித்துவக் குரல் வளத்தோடு அவரது நல்ல தமிழ் உச்சரிப்பும் அவருக்குக் கூடுதல் பலம் தந்தது.
பின்னாளில் மலேசியா வாசுதேவனுக்கு இணையான தனித்திறன் கொண்ட இன்னொரு பாடகர் தனக்குக் கிடைக்காத நிலைமையில்தான், தானே நாயகர்களுக்கு டூயட் பாட இளையராஜா துணிந்தாரோ என்னவோ. இதற்கு முன்பெல்லாம் இசையமைப்பாளர்கள் காட்சிப் பின்னணியில் தத்துவம் ததும்பும் சோக கீதம் இசைப்பதுதானே வழக்கம்? அப்படித்தானே எம்.எஸ்.விஸ்வநாதன் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். .
இந்தப் பின்னணியில்தான் மலேசியா வாசுதேவன் நமக்கெல்லாம் வியப்பளிக்கிறார். தமிழ் சினிமாவின் வரலாற்றுத் தேவையெனவே அவர் இங்கு வந்துசேர்ந்தார். அந்தத் தேவையைத் தன்னால் இயன்றளவு நிறைவேற்றினார். இளையராஜா எனும் இசைஞானியின் உள்ளத்துக்கு நெருக்கமாக அமைந்திருந்தது அவரது குரல் வலிமை. தமிழில் எல்லா நாயகர்களுக்காகவும் அவர் பின்னணி பாடியிருக்கிறார். எல்லா வகையான கதை அமைப்புகளிலும் அவரது தெளிந்த கணீர்க் குரல் கச்சிதமாகவே பொருந்திப்போயிருக்கிறது. முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அவர் பாடியவை இவை எல்லாவற்றின் உச்சமாக உயர்ந்து நின்று இசையின் பேரின்பப் பிரவாகமாகவே பெருக்கெடுக்கிறது.
அதிலும் குறிப்பாக "பூங்காற்று திரும்புமா" பாடல் கேட்கிற ஒவ்வொரு பொழுதிலும் மனசைப் பிழிந்து ஏதேதோ செய்கிறது. இனம் தெரியாத உணர்வொன்று அப்பிக்கொள்ள நாம் செய்வதறியாது தவிக்கிறோம். உள்ளே அழுது, வெளியே சிரிக்கிற ரசவித்தையை இந்தப் பாடல் தனக்கேயுரிய வீரிய ஆற்றலின் துணைகொண்டு நிறைவேற்றிக் களிப்புறுகிறது. டி.எம்.எஸ். இல்லாத இடம் வெற்றிடமாகி விடவில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தி நிற்கிறது இந்தப் பாடல். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் தூண்டிவிட்ட நெருப்பைக் கொளுந்துவிட்டு எரியச் செய்து கேட்போரைச் சூடேற்றி, அவர்களது எண்ண ஓட்டங்களைச் சாம்பலாக்கிப் போடுகிறது பாடுகிற இந்தப் பாட்டுக்காரனின் கிறங்கடிக்கும் குரல் இனிமை.
எத்தனைக் காலமானாலும் இறவா வரமல்லவா அந்தப் பாடல்கள் வாங்கி வந்திருக்கின்றன? பாடிவிட்டுச் சென்றவரை காலம் தின்று, ஏப்பமிட்டபோதிலும், அவர் விட்டுச்சென்ற அவரது குரலை காற்றும், காதுகளும் எப்படி மறுதலிக்கும் சொல்லுங்கள்? கலைஞன் எப்படிக் காலமாவான்? ஆமாம், காற்றிருக்கும் காலம் வரையில் மலேசியா வாசுதேவனுக்கும் மரணம் என்பது இல்லவே இல்லைதானே?.!!
நெகிழ்ச்சியுடன்...கிறிஸ்டினா......!


Tuesday, December 12, 2017

இயக்குனர் எல்லிஸ் ஆர் .டங்கன்

இசைக்குயில் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களும் திரு. சதாசிவம் மற்றும் இயக்குனர் எல்லிஸ் ஆர் .டங்கன் . ராதாவுடன் . தமிழில் ஒரு வார்த்தையைக்கூட அறியாத எல்...லிஸ் ஆர். டங்கன் 1936 தொடங்கி 1950 வரை தமிழ் சினிமா உலகின் தனித்தன்மைகள் நிறைந்த கலைஞராக வலம்வந்தார்.முத்திரை பதித்தார்.இந்தியாவின் தரம்மிக்க கலைப்படைப்பான மீரா மற்றும் சகுந்தலை ஆகிய படங்களில் இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியை நடிக்கவைத்த அரும் பெருமை அவரையே சாரும்.எம்.எஸ்.மொத்தம் நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.படமாக்கப்பட்ட விதத்திலும் மீராவில் பல புதிய தொழில்நுட்ப உத்திகளை டங்கன் கையாண்டார். ஒளியமைப்பில் அன்றைக்கே பல புதிய சோதனைகளை முயன்றார் டங்கன். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இயல்பான அழகை அவரது காமிரா விதம் விதமாக படம்பிடித்து ரசிகர்களுக்கு வழங்கியது.
துவாரகையில் மீரா படப்பிடிப்பு.துவாரகை கிருஷ்ணன் கோயிலில் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருந்தபோது ஒரு சிக்கல் வந்தது. டங்கன் இந்துமதத்தைச் சேர்ந்தவரில்லை என்பதால் கோயிலுக்குள் நுழையமுடியாத நிலை.ஆனால் சுப்புலட்சுமியோ படப்பிடிப்பின்போது டங்கன் தன்னோடு இருக்கவேண்டும் என்று விரும்பினார்.அப்போது ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. அதன்படி டங்கனுக்கு காஷ்மீர் பண்டிட் போல வேடம் அணிவிக்கப்பட்டது. அவருக்கு இந்தியில் சலோ, ஜல்தி, காம்கரோ போன்ற வார்த்தைகள் மட்டுமே தெரியும். அவற்றை வைத்துக்கொண்டு சமாளித்தார் டங்கன்.
ஒரு இந்து அல்லாத ஐரிஷ் அமெரிக்கரான டங்கன் மாறு வேடத்தில் இந்துக் கோயிலுக்குள் சென்று படப்பிடிப்பை நடத்தினார். கூடியிருந்த மக்களுக்கு அவரின் அடைபட்ட மூக்கினால் பேசிய ஆங்கிலம் வித்தியாசமாகத் தெரியவில்லை, சந்தேகத்தையும் உண்டாக்கவில்லை. காஷ்மீர் பண்டிட்டுகள் இப்படித்தான் மூக்கால் பேசுவார்கள்போல என்று அவர்கள் நினைத்தார்களாம்.
இந்து அல்லாத வேற்று மனிதன் ஒரு இந்துக் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதால் தெய்வக் குற்றமாகி,அங்கே எந்தவிதமான பூகம்பமும் வந்துவிடவில்லைதான்.ஆனால் அதற்கு மாறாக டங்கனின் படைப்புத் திறனால் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் குறிப்பிட்டு நினைவுகூரத் தக்க கலைப்படைப்பாக இந்த மீரா திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டுவருகிறது.
1945ல் வெளியான மீரா படத்தைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு, மௌண்ட்பேட்டன், சரோஜினி நாயுடு போன்றவர்களெல்லோரும் சுப்புலட்சுமியின் பரம ரசிகர்களாகிப்போயினர். இந்தப் படத்தால் எம்.எஸ். உலகப்புகழ் எய்தினார். எல்லாமே டங்கனின் கலைத்திறனாலும் படைப்பு மனதாலும் விளைந்தது என்றால் மிகையாகாது.
.
- சோழ.நாகராஜன்

கல்லூரியில் டங்கனுடன் மாணிக் லால் டாண்டன் என்ற இந்திய மாணவர் படித்தார். (டாண்டன் பின்னாளில் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆனார்). டாண்டனின் குடும்பம் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. இந்திய திரைப்படங்களைத் தயாரிக்க மேற்கத்திய தொழிற்நுட்ப வல்லுனர்களைப் பயன்படுத்த விரும்பிய டாண்டன் தனது கல்லூரி நண்பர்களாகிய டங்கனையும் மைக்கேல் ஓர்மலேவையும் தன்னுடன் இந்தியா வரும்படி அழைத்தார். 1935 ஆம் ஆண்டு டங்கன், டாண்டனின் அழைப்பை ஏற்று இந்தியா வந்தார். அப்போது டாண்டன் கல்கத்தாவில் நந்தனார் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாளராக சேர்ந்த டங்கன் அப்படத்தின் சில காட்சிகளையும் இயக்கினார். அப்போது ஏ. என். மருதாசலம் செட்டியார் என்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், தனது அடுத்த படத்தை இயக்கித் தரும்படி டாண்டனிடம் கேட்டார். நந்தனார் படப்பிடிப்பு முடியவில்லை என்பதால், தனது அமெரிக்க நண்பரை இயக்குனராக்கிக் கொள்ளும்படி டாண்டன் பரிந்துரைத்தார்.
இவ்வாறு டங்கன், செட்டியார் தயாரித்த சதி லீலாவதி (1936) படத்தின் இயக்குனரானார். இப்படத்தில் தான் எம். ஜி. ராமசந்திரன் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியதைத் தொடர்ந்து, டங்கனுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் இயக்கிய சீமந்தினி (1936), இரு சகோதரர்கள் (1936) , அம்பிகாபதி (1937), சகுந்தலை (1940) ஆகியவை வெற்றி பெற்றன. தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி ஒரு வருடத்திற்கும் மேல் தொடந்து ஓடி சாதனை படைத்தது. தமிழ் மொழி தெரியாவிட்டாலும், தனது ஆங்கிலம் அறிந்த இந்திய உதவியாளர்களின் மூலம் நடிகர்களிடமும், தொழிற்கலைஞர்களோடும் டங்கனால் எளிதாக உரையாட முடிந்தது. இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்க கொள்கைகளைப் பரப்பும் சில படங்களையும் இயக்கினார்.
இவர் இயக்கிய சதிலீலாவதி திரைப்படம் எடுக்கப்பட்ட விதம் பற்றி எடுக்கப்பட்ட குறும்படம் 1936 ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது.
எம். எஸ் சுப்புலட்சுமியின் நடிப்பில் டங்கன் இயக்கிய மீரா (1945) அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, அதே படத்தை 1947 இல் இந்தியிலும் இயக்கினார். புதிய ஒளி உத்திமுறைகள், நவீன ஒப்பனை முறை, நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவை டங்கன் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய சில மாற்றங்கள். அக்காலத்தில், இவரது நெருக்கமான காதல் காட்சிகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அமெரிக்கக் கலாச்சாரத்தைத் தமிழகத்தில் பரப்புகிறார் என்று சிலர் குறை கூறவும் செய்தனர். டங்கன் இயக்கிய கடைசித் தமிழ்ப்படம் மந்திரிகுமாரி. 1950 ஆம் ஆண்டு டங்கன் அமெரிக்கா திரும்பினார்.

டங்கன் 1958 இல் மேற்கு விர்ஜீனியா மாநிலத்தில் வீலிங் என்ற ஊரில் குடியேறினார். எல்லிஸ் டங்கன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப் படங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார். முப்பதாண்டுகள் ட்யூக் கோல்ட்பர்க் என்ற ஹாலிவுட் தயாரிப்பாளருக்காக செய்திப் படங்களைத் தயாரித்தார். 90களின் ஆரம்பத்தில் அவர் தமிழ்நாடு வந்த போது அவருக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.[9] டங்கன் டிசம்பர் 1, 2001 இல் வீலிங் நகரத்தில் மரணமடைந்தார். அவர் தனது திரையுலக அனுபவங்களைத் தொகுத்து எ கைட் டு அட்வன்ச்சர் என்ற தலைப்பில் சுயசரிதையாக எழுதியுள்ளார்.[