Search This Blog

Showing posts with label Essay. Show all posts
Showing posts with label Essay. Show all posts

Sunday, January 26, 2014

பிரபஞ்சன்: எப்போதுமிருக்கும் நட்பு - எஸ்.ரா

அலைந்து திரிந்த நாட்களில் எழுத்தாளர்களை வைத்தே சென்னை நகரின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்திருந்தேன். உதாரணத்திற்கு அசோகமித்திரன் என்பது தி.நகர். திருவல்லிக்கேணி என்பது ஸ்ரீரங்கம்கண்ணன், ராஜமார்த்தாண்டன், மயிலாப்பூர் என்பது சி.மோகன், திலீப்குமார், லஸ்கார்னர் என்றால் நாகார்ஜுனன், லாசரா என்பது அம்பத்தூர், நங்கநல்லூர் என்பது வண்ணநிலவன், மற்றும் மா. அரங்கநாதன், மந்தைவெளி என்றால் சுகுமாரன், சாருநிவேதிதா, நந்தனம் என்றால் சா.கந்தசாமி, டிராட்ஸ்கி மருது, கே.கே.நகர் என்றால் வெளி ரங்கராஜன்praban, ஆழ்வார்பேட்டை என்றால் கணையாழி அலுவலகம் மற்றும் இ.பா, நுங்கம்பாக்கம் பிரமீள், கொட்டிவாக்கம் ந.முத்துசாமி, இந்த வரிசையில் ராயப்பேட்டைக்கு பிரபஞ்சன்.
இப்படிப் பகுதி வாரியாகப் பிரித்துக்கொண்டதற்கான முக்கிய காரணம் அந்தப் பகுதிக்குள் பிரவேசித்தவுடன் மேற்கண்ட எழுத்தாளர்களில் எவரையாவது சந்தித்துப் பேசி எப்படியாவது அவர்கள் செலவில் சாப்பாடு காபி என்று ஒரு நாளை ஓட்டிவிடலாம் என்பதுதான். அநேகமாக  எழுத்தாளர்கள் எதிர்பாராத நேரங்களில் அவர்கள் வீட்டை முற்றுகையிட்டு அவர்களது மனவிருப்பம் பற்றிய கவலையின்றிக் கேட்டுவாங்கி காபி சாப்பிட்டு இலக்கிய விவாதம் வம்பு செய்த நாட்கள் அவை.
வந்தேறியாக சென்னை மாநகரில் சுற்றிக்கொண்டிருந்தபோது போக்கிடம் கிடையாது.  இலக்கியம் பேசுவது, இலக்கியவாதிகளைச் சந்திப்பது என்ற இரண்டு விஷயங்களைத் தவிர வேறு நோக்கங்களும் கிடையாது.
அப்படி வெயிலேற நடந்து திரிந்த நாட்களில் தன் அறையின் கதவை எப்போதும் நண்பர்களுக்காகத் திறந்து வைத்திருந்தவர் பிரபஞ்சன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்னை நகரின் வெவ்வேறு மேன்ஷன்களில் பிரபஞ்சன் தங்கியிருந்த நாட்களிலும் சரி அரசுக் குடியிருப்பு கிடைத்து பீட்டர்ஸ் காலனிக்கு மாறிய பிறகும் சரி பிரபஞ்சனின் வீடு எப்போதுமே நண்பர்களுக்கான புகலிடவெளி தான்.
அன்றிலிருந்து இன்று வரை அவர் தனித்திருந்து நான் கண்ட தேயில்லை. எப்போதும் யாராவது  சில நண்பர்கள் அவரோடு இருப்பார்கள். உற்சாகமான பேச்சும் சிரிப்பும் நிரம்பி வழியும் இடம் அவரது வசிப்பிடம்
சென்னையின் முக்கிய மேன்ஷன்கள் அத்தனையும் அறிந்தவர் பிரபஞ்சன் ஒருவரே. அதிலும் திருவல்லிக்கேணி, மேற்குமாம்பலம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, தி.நகர் என்று அவர் வெவ்வேறு பகுதிகளில் இருந்த மேன்ஷன்களில் வாழ்ந்திருக்கிறார். அந்த நாட்களைப் பற்றி அவர் நினைவு கூறும்போது ஆயிரத்தொரு இரவுக் கதைகளை விடவும் அதிகமான கதைகள் பிரபஞ்சனிடம் எழுத இருக்கின்றன என்று தோன்றும்.
பேச்சு, உபசரிப்பு, நண்பர்களின் மீதான இயல்பான அக்கறை என்று  தன்னைச் சுற்றியுள்ளவர்களைத் தொடர்ந்து மகிழ்ச்சி கொள்ளச் செய்ய சிலரால் மட்டுமே முடியும். அப்படி நான் கண்டவர்களில் மிக முக்கியமானவர் பிரபஞ்சன்.
தமிழ் இலக்கியம், சினிமா, பத்திரிகை, தான் சந்தித்த மனிதர்கள் என்று அவர் விவரிக்கும் எதிலும் அடக்க முடியாத சிரிப்பு பீறிடும். குரலை மிக லாவகமாகவும் உயர்த்தாத முகபாவங்களுடனும் அவர் விவரிக்கும் அழகு அற்புதமானது.
சாகித்ய அகாதமி பரிசு, பாஷா பரிஷித் பரிசு உள்ளிட்ட பலமுக்கிய பரிசுகளைப் பெற்றிருந்தபோதும் தன்னைப் பற்றிய மிகைபாவனை எதுவுமின்றி எளிமையாகப் பழகக்கூடியவர். அவரது வீடு நிறைய புத்தகங்களுடன் பெரிய நூலகம் போலிருக்கும். முறையாக இசை பயின்றவர். இசையைப் பற்றி அவரது உரையாடல்களைக் கேட்பதே சங்கீதமாக இருக்கும்.
சென்னையின் மேன்ஷன்களில் அழையாத விருந்தாளியாக ஒளிந்து தங்கி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தேன். அதிலும் நண்பன் ராஜகோபால், ஸ்ரீரங்கம் கண்ணன் போன்றவர்களின் அறையில் இரவில் தங்கிக் கொள்வதும் பகலில் கால்போன சாலையில் சுற்றியலைவதுமே அன்றாடச் செயல்பாடு.
வாரம் ஒரு நாள் நிச்சயம் பிரபஞ்சன் அறைக்கு போய்விடுவேன். சில நாட்கள் காலை எட்டு மணிக்குத் துவங்கி இரவு பன்னிரண்டு, இரண்டு மணி வரை  அவரோடு இருப்பேன். அன்றாடச் செலவிற்குக்கூட என்னிடம் காசு இல்லாதது போலவே அவரிடமும் காசு இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். பிரபஞ்சன் கையில் பணம் வந்து சேர்ந்தால் அடுத்த சில மணி நேரங்களில் பறந்தோடிவிடும்.
எழுத்தாளர்களுக்கு ஆயிரம் பக்க நாவல் எழுதுவதைவிடவும் பெரிய சவால் பதிப்பாளர்களிடமிருந்து மனம்நோகாமல் பேசி ராயல்டி தொகையை வாங்குவது. எளிதில் பணம் கைக்கு வந்து விடாது. இதில் பெரிய எழுத்தாளர் சின்ன எழுத்தாளர் என்ற பேதம் கிடையாது. அப்படியே பெரிய பதிப்பகம் சின்னப் பதிப்பகம் என்ற பேதமும் கிடையாது. அந்த சவாலில் அதிர்ஷ்டவசமாக வென்று கையில்  சிறிய ராயல்டி தொகை வந்தவுடன் பிரபஞ்சனின் கனவுலகம் விழித்துக் கொண்டுவிடும்.
நண்பர்களைத் தேடி அழைத்து உபசரித்து, நல்ல உடை,  விரும்பிய புத்தகங்கள், இசைநாடாக்கள் என்று அவர் கடைசிப் பைசாவரை செலவு செய்துவிட்டு எப்போதும் போலவே எளிமையாக சாலையின் ஓரங்களில் மெதுவாக நடந்தபடியே, சென்னை நகரின் பரபரப்பைத் தனக்குள் ஒரு போதும் நிரப்பிக் கொள்ளாமல் தன்னியல்பாக வீடு திரும்புவதைக் கண்டிருக்கிறேன். காலைச் சுற்றும் பிரச்சினைகள் நிரம்பிய மாநகரில் எப்படி இவரால் எதையும் இயல்பாகச் சந்தித்து பதற்றம் அடையாமல் கடந்து செல்ல முடிகிறது என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருப்பேன்.
பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதுவது. புத்தகங்களுக்கான ராயல்டி தவிர அவருக்கென நிரந்தரமான மாத ஊதியம் கிடையாது.  குடும்பம் பாண்டிச்சேரியிலும் அவர் சென்னையிலுமாகப் பல வருடங்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். சென்னையில் அவர் வசிக்க வேண்டிய ஒரே காரணம் இலக்கியத்தின் மீதான விருப்பமும் நண்பர்களைச் சந்திக்க முடியும் என்ற ஆசையும் மட்டுமே.
பாண்டிச்சேரியில் பிரபஞ்சனைச் சந்தித்தால் முற்றிலும் வேறு மனிதரைச் சந்திப்பது போல இருக்கும். அவர் பிறந்து வளர்ந்த நகரம் என்பதால் கையில் ஓடும் ரேகைகள் போல பாண்டிச்சேரியின் அகம்புறம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும். குறிப்பாக அதன் நூற்றாண்டுகால வரலாறு, இன்றைய நிலை, அங்குள்ள குடியிருப்புகள், வீதிகள், அதன் பின்னால் உள்ள மறக்கமுடியாத நிகழ்வுகள் என்று சொல்வதற்கு நிரம்பிய விஷயங்கள் அவரிடம் உள்ளன. பாண்டிச்சேரியைப் பற்றி அவரது இலக்கியப் பதிவுகள் மிக முக்கியமானவை.
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் சரித்திரச்சான்றுகளாக மட்டும் அறியப்பட்டு வந்ததை, தனது வானம் வசப்படும் நாவலின் வழியே முக்கியமான புனைகதையாக்கி தமிழின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நாவல்களில் ஒன்றாக எழுதிக்காட்டியவர் பிரபஞ்சன்.
இன்றைக்குப் பரவலாக ஆனந்தரங்கம்பிள்ளையின் டயரி பொது வாசகர்களால் வாசிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் பிரபஞ்சன் என்றே சொல்வேன். இந்த நாட் குறிப்புகள் பற்றித் தொடர்ந்து சொல்லியும் எழுதியும் வந்ததோடு இதைப் புதுச்சேரி அரசின் உதவியோடு பதிப்பிக்கும் பணியிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் பிரபஞ்சன். புதுச்சேரியின் வரலாற்றைப் பாட நூலாக எழுதியதிலும் இவரது பங்கு மிக முக்கியமானது.
புனைகதைகள், கட்டுரைகள் என்பதில் மட்டும் சஞ்சாரம் கொள்ளாமல் தன்னைச் சுற்றிய அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், சமகால அரசியல், கடந்த கால சரித்திரத்தின் உண்மையை அறியும் மீள்வாசிப்பு, உலக இலக்கியத்தின் மீதான தொடர்ந்த வாசிப்பு, சமூக மாற்றங்களுக்கான இயக்கங்களோடு சேர்ந்து செயல்படுவது என்று அவரது விருப்பம் பன்முகப்பட்டது.
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு மட்டுமில்லை. தனக்குப் பிடித்த கதை அல்லது நாவல் என்று எதைப் பற்றியும், சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் மிகுந்த பாராட்டுடன் சொல்லக்கூடியவர் பிரபஞ்சன். அதை எழுத்தில் பதிவு செய்வதோடு ஏதாவது ஒரு நிகழ்வில் பேசியும்விடுவார். அப்படி அவரால் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்கள் கவிஞர்கள் நிறைய உண்டு. இதில் சிலர் தங்களது முதல் கதையை மட்டுமே எழுதியவர். சிலரை அவர் சந்தித்ததுகூட இல்லை. ஆனால் படைப்பின் வழியாக அவர் கொள்ளும் ஆனந்தத்தை உடனே மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் அவர் பவா செல்லதுரையின் முதல்சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரை. நவீனச் சிறுகதைகளில் புதிய வரவாக உள்ள பவா செல்லதுரையின் சிறுகதைகளை மதிப்பிட முயன்ற பிரபஞ்சன் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றையே நாலைந்து பக்கங்களில் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
பவாவின் சிறுகதைகளை எவ்வளவு ரசனையோடு வாசித்திருக்கிறார் என்பதற்கு  இந்த வரிகளையே சான்றாகச் சொல்லலாம்.  பவாவின் கதை உலகம், ரசனையோடு வடிவமைக்கப்பட்ட, எளிமையின் பேரழகோடு செய்யப்பட்ட உணவுவிடுதியின் குறைந்த வெளிச்சம் பழக்கப்பட்டுப் பின் இதமும் ஆசுவாசமும் தரும் ஒளிப்பரப்பாவது போலக் கதைகள் ஒவ்வொன்றும் வாசித்து முடிந்த பின் தரும் கலை இதம் வசீகர அனுபவங்கள் நிலைபேறுடைய பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பை இப்படி மனம் நிறைந்து பாராட்ட எத்தனை பேரால் முடியும். அவ்வகையில் பிரபஞ்சன் ஒரு முன்னோடி.
பவாவின் கதைகளை மட்டுமில்லை. தமிழ் நவீனச் சிறுகதையுலகின் முன்னோடிப் படைப்பாளிகளைப் பற்றிய அவரது அவதானிப்பு மிக முக்கியமானதாகும். இதில் ஜானகிராமனைப் பற்றிய அவரது பதிவு திரும்பத் திரும்ப என்னை வாசிக்க வைத்தது. ஜானகி ராமன் எந்த அளவு பிரபஞ்சனின் அகவுலகிற்கு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த வரிகளே சாட்சி.
தமிழ்மொழியில் தனிப்பெரும் வியக்தி தி.ஜானகிராமன், மனித அழகுகள் ஒவ்வொன்றாகப் பொறுக்கிச்சேர்த்து அழகைப் பேரழகாக மாற்றிய பெரும்கலைஞர் தி.ஜா. வார்த்தை அழகு, உச்சரிக்கும் அழகு, நிற்கும் அழகு, நிகுநிகு உடம்பழகு, பாட்டு அழகு, மனப்பரிமள வாசனை அழகு, காமம் விகசித்துச் சூரியனையே போகத்துக்கு அழைக்கும் அழகு, என அனைத்து அழகுகளாலும்  பெண்களைப் படைத்த ஜம்பொன்குயவர் அவர். பெண்களின் விகாசம் தாங்காமல் ஆண்களைத் தற்கொலை செய்ய வைத்த நேசத்துக்குரிய தன்பால் துரோகி அவர், அதனாலே அவரை எனக்குப் பிடிக்கும்.
இது போலவே தனக்குப் பிடிக்காத விஷயத்தை அவர் நேரடியாகப் பிடிக்கவில்லை என்று சொல்லும் மனவுறுதி கொண்டவர். அவரோடு ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். தன்னை எந்த விழாவிற்கு அழைத்தாலும் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து அதன் நுட்பங்களை ஒன்றுக்கு இரண்டுமுறை அவதானித்து அழகாகப் பேசக்கூடியவர்.
அன்று மேடைக்கு வரும்வரை அமைதியாக இருந்தார். புத்தக வெளியீடு நடந்தது. அவரைப் பேசவரும்படியாக அழைத்தார்கள். மேடைக்கு வந்த பிரபஞ்சன் அந்தக் குறிப்பிட்ட புத்தகம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதோடு அதை எழுதியவர் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமான சுயபெருமை செய்துகொண்டிருக்கிறார். புத்தகம் மிகவும் குப்பையானது, அபத்தமும் அர்த்தமற்ற உளறல்களும் நிரம்பியது என்பதால் அதைப் பாராட்டிப் பேச, தன்னால் இயலவில்லை. விரும்பி அழைத்த காரணத்திற்காக வந்திருந்தேன். தொடர்ந்து இதைப் பாராட்டிப் பலர் பேசுவதைக் கேட்க எனக்கு விருப்பமில்லை, கிளம்புகிறேன் என்று மேடையில் அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு சபையை விட்டு வெளியே கிளம்பி நடந்தார். சபை அதிர்ந்து போனது.
சாலையில் அவரோடு நடந்த படியே அந்த எழுத்தாளர் உங்கள் மீது கோபம் கொள்வாரே என்று கேட்டேன். அதற்கு பிரபஞ்சன்  முதலில் எழுத விரும்புகின்றவன் தன்னைப் பற்றிய சுயபெருமைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கையில் பணமிருந்தால் மட்டும் எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது. இப்போது அதை அவர் புரிந்துகொண்டிருப்பார் என்றபடியே எதுவும் நடக்காதவர் போல இயல்பாக எங்காவது காபி சாப்பிடலாமா என்று கேட்டார் பிரபஞ்சன்.
தன் வாசிப்பின் வழியே தான் அடையும் உண்மைகளை அவர் ஒருபோதும் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. அதுபோலவே வாசிக்கக் கிடைக்காத புத்தகங்களுக்காக வெளிப்படையாக ஆதங்கப்படுகின்றவரும்கூட. சில வேளைகளில் அவரைத் தேடிவருகின்றவர்கள் கையில் வைத்துள்ள புத்தகங்களை ஆசையுடன் வாங்கிப் புரட்டிப் பார்த்து இதைப் படிக்காமல் விட்டுவிட்டேனே எங்கே கிடைக்கிறது என்று உடனே பதிப்பக முகவரியைக் குறித்துக்கொள்வதைக் காணும்போது வீடு நிறைய புத்தகங்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தும் எதற்காக இவ்வளவு ஆதங்கப்படுகிறார் என்று தோன்றும்.
தன் உடல் உபாதைகள் பற்றியோ, குடும்பச் சூழல் குறித்தோ அதிகம் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடியவரில்லை. மிக அரிதாக அதைப்பற்றிப் பேசக்கூடியவர். அதுவும் எவ்விதமான எதிர் பார்ப்புகளும் அற்றதாக இருக்கும்
பிரபஞ்சன் நினைத்திருந்தால் அவரது நண்பர்கள் ஆர்வலர்களின் வழியே அதிகாரத்தின் உச்ச நிலைக்கு அடைந்திருக்கக்கூடும். பெரிய பதவிகள் பட்டங்கள் பெற்றிருக்கக் கூடும். ஆனால் அதை முற்றிலும் நிராகரித்தவர். கிடைக்கவில்லையே என்ற குறைகூட இல்லாதவர்.
பிரபஞ்சனின் சிறுகதைகள் தனித்துவமானவை. அன்றாட வாழ்வில் நெருக்கடிகளையும் அந்த நெருக்கடிக்கு உள்ளேயும் மனிதர்களின் மீதமிருக்கின்ற அன்பையும் வெளிப்படுத்தக்கூடியவை. கதா பாத்திரங்களின் மனோநிலையைப் பின்தொடர்ந்து சென்று எழுதக்கூடியது அவரது எழுத்து வகை.
மெல்லிய கேலியும் விமர்சனமும், குரலை உயர்த்தாமல் செல்லும் கதை சொல்லும் முறையும் அவருக்கு உண்டு.  வாழ்க்கை கருணையற்றது என்பது அவரது கதைகளின் சில நிகழ்வுகளின் வழியே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால் இப்படிக் கருணையற்ற வாழ்வின் ஊடாகவும் சிலர் தங்களது சுய அடையாளங்களை இழப்பதில்லை. அவரது ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், மனுஷி பிரும்மம், குமாரசாமியின் பகல்பொழுது, மரி என்கிற ஆட்டுகுட்டி போன்றவை எனக்கு விருப்பமான கதைகள்.
sra343 பிரபஞ்சனுக்கு உருவாகும் பிரச்சினைகள் ஆச்சரியமானவை. ஒருநாள் நானும் நண்பன் ராஜகோபாலும் அவரைச் சந்திப்பதற்காக பீட்டர்ஸ்காலனி வீட்டிற்குச் சென்றிருந்தோம். படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் வரவேற்று மாடி ஏறி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எங்கே இறங்கிச் செல்வதாக இருந்தார் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. ஒரு மணி நேரப் பேச்சிற்குப் பிறகு காபி சாப்பிடப் போகலாமா என்றார்.  சரி என்று கிளம்பிய போது அங்குமிங்குமாகத் தேடிவிட்டுச் சொன்னார்,
"ஒரு மணி நேரம் முன்னாடி என்னை ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசுவதற்கு அழைப்பதற்காக நாலு பேர் வந்திருந்தார்கள். அதில் யாரோ ஒரு ஆள் என்னுடைய புதுச் செருப்பைப் போட்டுவிட்டு சென்றுவிட்டான். இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் ஆசைப்பட்டு புதிதாகச் செருப்பு வாங்கியிருந்தேன்.  செருப்பைப் போட்டுக் கொண்டுபோன ஆள் பழைய செருப்பு எதையாவது விட்டுச் செல்வான் இல்லையா அதையும் தேடிப் பார்த்துவிட்டேன். திருடிக் கொண்டுபோன ஆள் செருப்பே போட்டுவரவில்லை போல. அவனுக்கு என்னுடைய சைஸ் செருப்பு எப்படி சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. சரி திருடுவது என்று முடிவு செய்தபிறகு சைஸ் பார்த்தா திருட முடியும். ஒரு எழுத்தாளன் வீட்டில் திருடுவதற்குச் செருப்பைத் தவிர ஒன்றும் கிடைக்கவில்லை என்பதுதான் நிஜமில்லையா? வெறுங்காலோடு நடக்கப் பழகிக்கொள்ள வேண்டியது. அதை நிச்சயம் இன்னொரு ஆள் திருட முடியாது இல்லையா" என்று சொல்லிச் சிரித்தார்.
நடந்து சென்று சரவணபவனில் காபி சாப்பிட்டோம். அவரை உணவகத்தில் உள்ளவர்கள் அறிந்திருந்தார்கள். அவரது நாவின் சுவைக்கு ஏற்ப காபியைத் தயாரிக்கும் நுட்பம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வரும்வழியில்  சில வருடங்களுக்கு முன்பாகத் தனக்கு நடந்த  சம்பவம் ஒன்றை விவரித்துச் சொல்லத் துவங்கினார்.
"இலக்கியக் கூட்டத்திற்கு அழைப்பதற்கு வருகின்றவன் இப்படியிருக்கிறான் என்றால் அழைத்து போனவன் ஒருவன் கதையிருக்கிறது. அதையும் கேளுங்கள். சாகித்ய அகாதமி விருது கிடைத்தவுடன் கடலூர்  அருகில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்துவதாக அழைத்தது. நானும் கலந்துகொண்டேன்.
விழா நடப்பதாகச் சொன்ன இடத்திற்குப் போனபோதுதான் தெரிந்தது அது ஒரு இரண்டு தெருக்கள் சந்திக்குமிடம் என்று. நான் போனபோதுதான் மேடை அமைத்துக்கொண்டிருந்தார்கள். எப்படியும் மூன்று மணிநேரமாகும் என்றதால் விழா நிர்வாகிகளைத் தேடினேன்.
எனக்காக அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக போனில் சொல்லியிருந்தார்கள். அதனால் அங்கே சென்று காத்திருக்கலாம் என்று தேடியபோது அமைப்பாளர்களில் ஒருவரையும் காணவில்லை. ஒரு வழியாகக் கண்டுபிடித்தபோது அறை கிடைக்கவில்லை என்பதால் டீக்கடை ஒன்றில் காத்திருக்கும் படியாகச் சொன்னார்கள்.
இரவு பத்து மணிக்குக் கூட்டம் ஆரம்பம் ஆனது. சிறுவர்கள் நடன நிகழ்ச்சி, உள்ளூர்ப் பிரமுகர்களின் வாழ்த்து முழக்கங்கள், ஆடல்பாடல் நிகழ்ச்சி என்று நீண்டு கொண்டிருந்ததேயன்றி பாராட்டுவிழா துவங்குவதற்கான அறிகுறியே இல்லை. இதில் வந்தவர்கள் இரவு உணவு தரவில்லை என்பதால் பசிவேறு காதை அடைக்கத் துவங்கியிருந்தது.
முடிவில் நள்ளிரவில் பாராட்டு விழா அரங்கேறத் துவங்கியது. ஆள் உயரப் பாராட்டுப் பத்திரம் ஒன்றை பிரேம் செய்து தந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு நன்றியுரை சொல்லிவிட்டு ஊருக்குப் புறப்படலாம் என்று நினைத்து வழிச்செலவிற்கான தொகைக்காக அழைப்பாளர்களைத் தேடினால் ஒருவரையும் காணவில்லை. கூட்டம் முடிந்த மறுநிமிசம் மாயமாக மறைந்து போய்விட்டார்கள்.
ஆள் உயரப் பாராட்டுப் பத்திரத்தைத் தூக்கிக்கொண்டு எப்படி நடப்பது என்று தெரியவில்லை.  பேருந்தில் இதை வைத்துக்கொண்டு எப்படி ஊருக்குப் பயணம் செய்வது என்று வேறு குழப்பமாக இருந்தது.
இங்கேயே ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டுப் போய்விடலாம் என்றாலும் எங்கே வைப்பது யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள் என்றும் தோன்றியது. வேறுவழியில்லாமல் அந்தப் பாராட்டுப் பத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தேன்.
இத்தனை ஆண்டுகாலம் தமிழில் எழுதி விருது வாங்கியதற்குக் கொடுக்கப்பட்ட தண்டனை இது தானோ என்று நினைத்தபடியே யாரும் அறியாமல் ஒரு விளக்குக்கம்பத்தின் அருகே வைத்துவிட்டு அவசர அவசரமாகப் பேருந்து பிடித்து பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தேன்.
ஆள் உயரப் பாராட்டுப் பத்திரம் செய்ய ஆசையிருந்தவர்களுக்கு அழைத்து வந்த எழுத்தாளருக்கு உணவு வாங்கித் தரவோ, வழியனுப்பி வைக்கவோ விருப்பமில்லை. பாராட்டுப் பத்திரத்தில் உள்ள வாழ்த்துப்பாடலை எழுதிய நபர், பிரேம் போட உதவிய நபர் என்று நாற்பது பெயர்கள் அதில் இருந்தது. அவர்கள் நோக்கம் தங்களைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வது. அதற்கு நான் பலியானதுதான் வேடிக்கை" என்று உரக்கச் சிரித்தார்.
தனது அவமதிப்புகளைக்கூடப் பரிகாசமாக மாற்றிவிட முடியும் மனது அவருக்கு இருந்தது.
பிரபஞ்சன் முறையாகத் தமிழ் படித்தவர், சங்க இலக்கியம் துவங்கி காப்பியங்கள் வரை எதைப் பற்றிக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்லுவார். ருஷ்ய இலக்கியங்களைப் பற்றிப் பேசத் துவங்கினால் வியப்பும் பெருமையாக அவர்கள் படைப்புகளை விவரித்துக் கொண்டிருப்பார். அவரது அப்பா கள்ளுக்கடை வைத்திருந்த நாட்களைப் பற்றியும் சீட்டு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி பகலிரவாக சூதாடிய மனிதர்களைத் தன் பிராயத்தில் கண்டதைப் பற்றியும் அவர் விவரிக்கும் போது இதை எல்லாம் இன்னும் எழுத்தில் முழுமையாக பிரபஞ்சன் கொண்டுவரவில்லையே என்று ஆதங்கமாக இருக்கும்.
நல்ல எழுத்தாளர் என்பது போலவே பிரபஞ்சன் ஆகச்சிறந்த பேச்சாளர். கூட்டத்தைத் தன் பேச்சில் மயக்கும் வித்தை அவரிடம் கைகூடியிருந்தது. பல்கலைக்கழக ஆய்வு அரங்கமாக இருந்தாலும், பொது நிகழ்வாக இருந்தாலும் அவர் பேச்சு எப்போதுமே சுவாரஸ்யமானது. பலமுறை அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்களில் அவர் பேசியிருக்கிறார்.
பிரபஞ்சன் நேர்த்தியான ஆடைகள் அணிவதிலும் தன் தோற்றப் பொலிவிலும் அக்கறை காட்டக் கூடியவர். எழுத்தாளர்களில் அவர் ஒரு அழகன் என்று நண்பர்கள்  சொல்வார்கள். அதை மெய்யாக்கும் விதமாக அவரது தோற்றத்தில் எப்போதுமே தனிவசீகரம் இருக்கும்.
நல்ல காபி, சிறந்த இசை, விருப்பமான புத்தகங்கள், நிறைய நண்பர்கள் இதுதான் பிரபஞ்சனின் உலகம். இன்றைக்கு அவரது அறைக்குச்  சென்றாலும்  யாரோ சில இளம் எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்தித்துப் பேசி விவாதித்து, தங்களைப் பகிர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான முக்கிய காரணம் தன்னைத் தேடி வருகின்றவர்களிடம் அவர் காட்டும் நிஜமான அக்கறையும் தன் விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் இயல்பான தன்மையும், புதிதாக எழுத வருகின்றவர்களை அழைத்துப் பாராட்டி, தொடர்ந்து எழுதச்சொல்லி உற்சாகப்படுத்தும் பாங்குமேயாகும்.
அவ்வகையில் பிரபஞ்சனின் இல்லம் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய பகிர்வு வெளியாகும். அந்த அறை தந்த கதகதப்பும் உபசரிப்பும் எனக்குமட்டுமல்ல நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரது நினைவிலும் எப்போதும் தன் பசுமையோடிருக்கிறது. அவ்வகையில் பிரபஞ்சனின் இருப்பு எழுத்தாளனின் உயரிய தோழமை என்றே சொல்வேன்.
***
நன்றி: வாசகபர்வம் – உயிர்மை வெளியீடு

Thursday, January 23, 2014

உடல் மொழியின் நாடகம் - ந.முத்துசாமி

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது சாமுவேல் பெக்கட்டின் வெயிட்டிங் பார் கோதோ வாசித்தேன். அதுவரை நவீன நாடகம் என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அந்த நாடகம் வாசிப்பதற்கு மிகுந்த ஆர்வமுடையதாக இருந்தது. அதை எப்படி மேடையேற்றியிருப்பார்கள் என்பதைப் பற்றி எனது பேராசிரியர்களில் ஒரு வரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் லண்டனில் நடந்த நாடகவிழா ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கோதோ நாடகத்தின் வீடியோவைக் காண்பதற்குத் தந்தார்.
நான் வாசித்த பிரதிக்கும் நிகழ்த்தபட்ட நாடகத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி2006041100010101இருந்தது. நிகழ்த்தப்படும் வெளி மற்றும் நடிகர்களின் உடல்மொழி மற்றும் காட்சிகளின் பின்புல இசை யாவும் அந்த நாடகத்தை ஒரு கனவு நிலைப்பட்டதாக மாற்றியிருந்தது.  பிரதியை அப்படியே மேடையேற்றுவது அல்ல நாடக இயக்குனரின் வேலை. பிரதியிலிருந்து தனக்கான நாடகமொழியை உருவாக்கிக் கொள்வதுதான் நவீன நாடகத்தின் பிரதான பணி என்று பேராசிரியர் சொன்னபோது எனக்கு அது புரியவில்லை.
அந்நாள்வரை நான் கண்டிருந்த மேடை நாடக வடிவம் முற்றிலும் கலைந்து போய் நடிகர்களின் உடல் மொழியும் நவீன நிகழ்த்து வெளியும் உரையாடும் பாங்கும் தீவிரமாகப் பற்றிக் கொண்டது. என்ன வகை நிகழ்த்துதல் இது. ஏன் தமிழில் இப்படியான நாடகங்கள் நடத்தப்படுவதில்லை. கோதோவை மொழியாக்கம் செய்து இதே போல நிகழ்த்தினால் என்னவென்று அதன் பிந்தைய நாட்களில் தோன்றிக்கொண்டிருந்தது. பத்து நாட்களுக்குள் கோதோவை மொழியாக்கம் செய்துவிட்டேன். ஆனால் அதை எப்படி நிகழ்த்தவது என்பதைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
நான் அறிந்த இலக்கிய நண்பர்கள் எவரும் அன்று நவீன நாடகம் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை. சில மாதங்களுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு பெக் கெட்டை மறந்து வழக்கம் போல  நாவல், அபுனைவுக் கட்டுரைகள் என்று வாசிப்பதை நோக்கி நகர ஆரம்பித்தேன். ஆனால் மனதில் பெக்கெட்டின் வரிகள் மற்றும் நிகழ்காட்சிகள் இருந்து கொண்டேயிருந்தது.
அதன் சில ஆண்டுகளுக்கு பின்பு மதுரையில் தற்செயலாக பேராசிரியர் மு.ராமசாமி ஏற்பாடு செய்திருந்த எட்வர்ட் ஆல்பியின் ஜர் ஸ்டோரி என்ற நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. என் மனதிலிருந்த  பெக்கெட் திரும்பவும் விழித்துக் கொண்டுவிட்டார். அந்த நாட்களில்  மதுரையில் சுதேசிகள் என்ற பெயரில் தமிழ்த் துறையில் பயின்ற சுந்தர்காளி ஒரு குழுவை உருவாக்கியிருந்தார். அவர்களுடன் சேர்ந்து நவீன நாடகம் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் துவங்கினேன்.
விஜய் டெண்டுல்கர், ஹெரால்ட் பைண்டர், ஐயனெஸ்கோ, டென்னஸி வில்லியம்ஸ்,  லூயி பிராண்டலோ,  ஆர்தர் மில்லர், ஒநில், பிரெக்ட், செகாவ், ஜெனே, லோர்க்கா, இப்சன் எட்வர்ட் பாண்ட், வோலே சோயிங்கா என்று நூலகத்தில் கையில் கிடைத்த நாடகப்பிரதிகளை மிகுந்த தீவிரத்தோடு வாசிக்க ஆரம்பித்தேன்.
தமிழில் அப்படி யாருடைய நாடகமாவது இருக்கிறதா என்று தேடியலைந்த போது பழைய ஷேக்ஸ்பியர் பிரதிகள், மற்றும் சங்கரதாஸ் சுவாமிகளின் மரபு நாடகப்பிரதிகள் இருந்தனவேயன்றி நவீன நாடகப்பிரதிகள் எதுவும் காணப்படவில்லை.
அறிந்த நண்பர்களிடம் கேட்டபோது அவர்களும் அப்படி நவீன நாடகப்பிரதி எதுவும் வெளியாகி இருப்பது போல அறியவில்லை என்றார்கள். அந்த நாட்களில்தான் ந. முத்துசாமியின் பெயரைக் கேள்விபட்டேன். நடை இதழில் முத்துசாமியின் காலம் காலமாக வெளி வந்து மிகுந்த கவனத்தைப் பெற்றது என்பதையும் அவரது நாற்காலிக்காரர், சுவரொட்டி நாடகங்களையும் பற்றி நண்பர்கள் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
நீர்மை எழுதிய முத்துசாமியா நவீன நாடங்கங்கள் போடுகின்றவர் என்று வியப்புடன் கேட்டேன். ஆமாம் அவரேதான் என்றபடியே கூத்துப்பட்டறை என்ற நவீன நாடகக் குழுவைச் சென்னையில் உருவாக்கியிருக்கிறார் என்றும் அது தீவிரமாக நவீன நாடக உருவாக்கத்தில் முனைந்திருக்கிறது என்றும் அறிந்து கொண்டேன்.
எனக்கு முத்துசாமியின் சிறுகதைகளைப் பிடிக்கும். நவீனச் சிறுகதைகளில் அவர் தனித்துவமானவர். குறிப்பாக அவர் கதை சொல்லும் முறை வித்யாசமானது. சிறிய சம்பவங்களை நுட்பமாக விவரித்துக் கொண்டே செல்லும் கதைமுறை அவருடையது. ஊர் சார்ந்த நினைவுகள் மற்றும் நவீன வாழ்வின் அபத்தம் இரண்டும் கலந்த குரல் அவர் கதைகளுக்கு உண்டு. கதாபாத்திரங்களின் நிகழ்வுகளைவிடவும் அவர்களின் மனவோட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தரும் எழுத்துமுறை அவருடையது. புஞ்சை என்ற ஊரைப் பற்றிய வெவ்வேறு விதமான பதிவுகள் அவர் கதைகளில் தொடர்ந்து இடம் பெற்றிருந்தன. அத்தோடு கசடதபற இதழ்களில் முத்துசாமி எழுதியதையும் வாசித்திருக்கிறேன்.
நீர்மையின் இன்னொரு சிறப்பு முத்துசாமியின் மகன் ஓவியர் நடேஷ் வரைந்த முகப்பு ஓவியம். மிகச் சிறப்பாக அச்சிடப்பட்டிருந்த புத்தகமது. அதில் முத்துசாமியின் சித்திரம் ஒன்றை மிக நவீனமான முறையில் நடேஷ் வரைந்திருப்பார். அதிலிருந்து ஒரு முத்துசாமியை நாம் கற்பனை செய்து கொள்வது விசித்திரமாக இருக்கும்.
இருபதிற்கும் குறைவான சிறுகதைகளே முத்துசாமி எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்தக் கதைகள் அவருக்கெனத் தனியான வாசக உலகை உருவாக்கியிருந்தன. தொடர்ந்து அவர் சிறுகதையுலகில் செயல்படாமல் போனது பெரிய இழப்பே.
நவீன நாடங்களில் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ள நாடகப்பள்ளிக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கே நாடகவிழா ஒருவார காலம் நடைபெற்றது. அப்போதுதான் நான் வாசித்திருந்த பல நவீன நாடகங்களை ஒரு சேரக்காணக் கிடைத்தது. நாடகப்பள்ளியின் வளாகமும் அதன் கட்டிட அமைப்பும் மிக நவீனமானவை. அதை லேரி பேக்கர் வடிவமைத்திருந்தார்.
நாடகப்பள்ளியில் நடத்தபட்ட நாடங்களைக் காண்பதற்கு அருகாமையில் உள்ள  கிராம மக்கள் வருவதைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது. லோர்க்காவின் நாடகம் ஒன்றை மலையாளத்தில் நிகழ்த்தினார்கள். சமஸ்கிருத நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. அயென்ஸ்கோ நாடகத்தை மாணவர்கள் நிகழ்த்தினார்கள்.  இப்படி ஒரு வார காலம் நடைபெற்றது. அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியபடி நாடகங்களைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தேன்.
இந்த நாடகங்கள் மேடை அமைப்பை விட்டுவிலகி புதிய நாடகவெளியை உருவாக்கியிருந்ததும் சம்பிரதாயமாக வசனங்களைப் பெரிதும் சார்ந்திருந்த நடிப்பை விலக்கி நடிகனின் உடலின் வழியே நிகழும் நாடகமாக வெளிப்படுத்தும் முறையும் குரலை உபயோகிக்கும் முறைகளும் நாடக பாவனைகளும், அவர்கள் உருவாக்கும் படிமங்களும், உருவகங்களும் நவீன நாடகம் என்பதைப் பற்றிய ஆதார பிரக்ஞையை உருவாக்கியது. அந்த நாட்களில் முத்துசாமியைச் சந்திக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொள்ளத் துவங்கினேன்.
ஆனால் ஏதோ தயக்கம் அதைத் தடுத்துக்கொண்டேயிருந்தது. திருச்சூரில் சந்தித்த நாடகத்துறை  நண்பர்களின் வழியே பெங்களூரில் நடைபெறும் நவீன நாடகங்கள் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். இதற்காகவே  பெங்களூர் செல்லும் போதெல்லாம் நவீன நாடகங்களைத் தேடிச்சென்று பார்க்கத் துவங்கினேன். அப்படித்தான் கிரிஷ் கர்நாட்டின் துக்ளக், ஹயவதனா, மற்றும் கம்பாரின் நாடகங்கள் காண நேர்ந்தது.
நவீன நாடகம் என்பது தனியுலகம். அதற்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகர்களும் இயக்குனர்களும் அதற்கான குறைந்தபட்ச பார்வையாளர்களைப் பற்றிய கவலையின்றித் தங்களது முழு ஈடுபாட்டையும் செலுத்தி வருவதைக் கண்ட போது அது என்னை ஈர்க்கத் துவங்கியது. 
அந்த நாட்களில் திருச்சியில் பாதல்சர்க்கார் நாடகவிழா நடை பெற்றது. அதைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே கூத்துப்பட்டறையின் நாடகம் ஒன்றைக் கண்டேன். முத்துசாமியைக் காண முடியவில்லை. மற்ற நாடகங்களிலிருந்து கூத்துப்பட்டறை நாடகம் மிகவும் வேறுபட்டிருந்தது.
அந்த நாடகவிழாவின் உந்துதலில் சூரியனின் அறுபட்ட சிறகுகள் என்ற நாடகத்தை எழுதி அதை நாடகவெளி இதழுக்கு அனுப்பி வைத்தேன். ரங்கராஜன் அப்போதுதான் நாடகத்திற்கான சிற்றிதழாக வெளியை அறிமுகம் செய்திருந்தார். அதில் என்னுடைய நாடகம்    வெளியானது.  அதன் தொடர்ச்சியாக சுதேசிகள் நாடகக்குழுவிற்காக 'உருளும் பாறைகள்' என்ற நாடகத்தை எழுதித் தந்தேன். அது சங்கீத நாடக அகாதமியின் தென் மண்டல நாடகவிழாவிற்காகத் தேர்வு செய்யப்பட்டது. அந்த நாடகம் குறித்து முத்துசாமி தனக்குப் பிடித்துள்ளது என்று தெரிவித்ததாக சுந்தர்காளி சொன்னபோது மீண்டும் முத்துசாமியைப் பார்க்கும் ஆசை துளிர்விடத் துவங்கியது.
மதுரை நண்பர்களுக்காக எட்வர்ட் பாண்டின் ஸ்டோன், பிரெக்டின் கலிலியோ, மகேஷ் எல்கஞ்வரின் பிரதிபிம்பம், என்று பரபரப்பாக நாடகங்களை மொழியாக்கம் செய்வதும் எழுதித் தருவதுமாக இருந்த நாட்களில் எனக்கிருந்த ஒரே வாசிப்புத் துணை ந. முத்துசாமியின் நாடகங்கள். அத்தோடு அவர் எழுதிய அன்று பூட்டிய வண்டி என்ற நிகழ்த்து கலைகள் பற்றிய கட்டுரைகள். மரபுக்கலைகள் குறித்த அவரது பார்வையும் விவரிப்பும் அசலானவை. அன்று பூட்டிய வண்டி முத்துசாமியின் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு.
தெருக்கூத்து தென்மாவட்ட மக்களுக்குப் பரிச்சயம் இல்லாத வடிவம். அப்படி ஒரு நிகழ்த்துகலை இருப்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. தென்மாவட்டங்களுக்கு என்று சிறப்பான நிகழ்த்துகலைகள் நிறைய இருந்தன. ஆனால் தெருக்கூத்து அங்கேயில்லை.
முத்துசாமியின் கட்டுரைகள் அளித்த உந்துதல் காரணமாக தெருக்கூத்தைத் தேடிச் சென்று பார்ப்பது என்று சுற்றியலைந்து காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் முதன்முறையாகத் தெருக்கூத்தைப் பார்த்தேன். நடிகர்களின் ஒப்பனையும், நிகழ்த்தும் முறையும் வியப்பாக இருந்தது. அது  முத்துசாமியைச் சந்திக்கும் ஆசையை அதிகப்படுத்தியது.
சென்னையில் வந்து சுற்றியலைந்தபோது சிறுகதைகள் மற்றும் நாடகம் இரண்டிலும் இருந்த என் அக்கறைக்கு முத்துசாமியே காரணமாக இருந்தார். அப்போது அடையாற்றில் தங்கியிருந்த போது அண்ணாமலை அறிமுகமானார். அவர் கூத்துப்பட்டறையில் பயின்ற நடிகர். அவரிடம் முத்துசாமியைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் அதற்கென்ன பார்த்துவிடலாமே என்று சொல்லி மறுநாளே முத்து சாமியைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அலியான்சே பிரான்சேயின் வெளிவாசலில் முத்துசாமி நின்றுகொண்டிருந்தார்.
முத்துசாமியின் தோற்றம் ஒரு நடிகருக்கான கம்பீரம் கொண்டது. குறிப்பாக அவரது மீசையும் முகபாவங்களும் அற்புதமானவை. அவர் பேசும் தோரணையும் கைகளை அவர் உபயோகிக்கும் லாவகமும் எவரையும் ஈர்க்கக் கூடியவை.  ஆனால் அவர் குரலில் இயல்பாகவே எதையோ மறுக்கின்றவரைப் போன்ற எதிர்ப்புணர்வு இருக்கும். உண்மையில் அவர் வேடிக்கையாகப் பேசும்போதுகூட அந்தத்தொனி  அவரிடமிருக்கிறது. அது பலநேரம் முத்துசாமி மிகவும் கோபப்படக்கூடியவர் என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தது.  அது உண்மையில்லை. முத்துசாமியோடு நெருங்கிப் பேசினால் அவரிடம் சொல்லித் தீராத நினைவுகளும்  நாடகம் குறித்த புதிய தேடுதல்களும் மரபுக் கலைகள் குறித்த தனித்துவமான அவதானிப்புகளும் நிரம்பியிருக்கும்.
என் முதல் சந்திப்பில் முத்துசாமி 'ஒங்க நாடகம் ரொம்ப நல்லாயிருந்தது. எழுதுங்க' என்று ஒரேயொரு வரிதான் பேசினார். அதன் பிறகு அலியான்சேயில் பிரான்சிலிருந்து வந்திருந்த தோல்பாவைக் கலைஞருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் முன் வரிசையில் அமர்ந்தபடியே அந்த பிரெஞ்சுக் கலைஞரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் முத்துசாமி. ஏதோ ஓவியம் ஒன்றைப் பார்வையிடுவதைப் போன்றிருந்தது அவரது முகபாவம்.
முடிவில் முத்துசாமி பத்து நிமிடங்கள் பேசினார். "தெருக்கூத்து ரொம்ப ஒசத்தியானது. அதை அப்படியே நாடகமாகப் போட்டுற முடியாது. அதை நாம முதல்ல புரிஞ்சிகிடணும். குரல்வளம் உள்ள நடிகர்கள் நம்மகிட்டே இல்லை. முதல்ல நாம  அதை உருவாக்கணும். அதே போல பார்வையாளர்களுக்கும் நடிகருக்கும் இடையில் உள்ள வெளி ரொம்ப முக்கியமானது. நடிகர்கள்  கதாபாத்திரத்தை சிருஷ்டி பண்றாங்க. அதுல மூழ்கிப் போறதில்லை.
கதாபாத்திரமாக மாறிப்போறது என்பதெல்லாம் தெருக்கூத்துல கிடையாது. நடிகர் கதாபாத்திரம் ரெண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மாயம் நடக்குது. நடிகன் தன் கற்பனையால் அந்தக் கதாபாத்திரத்தை வளர்த்துகிட்டே போறான். அது ஒரு விளையாட்டு. கண்ணுக்குத் தெரியாத விளையாட்டு. நடிகன் ஒரு ஜென் துறவி மாதிரியும் இருக்கணும். அதே நேரம் சாமுராய் மாதிரியும் இருக்கணும். பழைய மேடை நாடக நடிப்பு எல்லாம் இப்போ எடுபடாது" என்று அவர் பேசிய விதமும் சொற்களை அவர் கையாளும் லாவகமும் அதை விளக்கிச் சொல்லும் போது அவரிடம் ஏற்படும் முகமாற்றங்களும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருந்தது.
பேச்சை அவர் திடீரென நிறுத்தி  முடித்துக்கொண்டுவிட்டார். கிட்டத்தட்ட அதுவே ஒரு நிகழ்த்து கலை போலவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து முத்துசாமி வெளியே செல்லும் வரை பார்த்துக்கொண்டேயிருந்தேன். சம்பந்தம் என்ற கூத்துக் கலைஞருடன் அவர் ஒரு டிவிஎஸ் 50யின் பின்னாடி ஏறிக்கொண்டு புறப்பட்டார். அவரது உயரத்திற்கு அந்த வண்டியில் போவது சிரமம் தருவதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அவரிடம் அது தென்படவில்லை.
அலியான்சேயின் வெளியில் இருந்த படிகளில் அமர்ந்தபடியே முத்துசாமி பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நவீன இலக்கியப் பரிச்சயம் கொண்டிருந்த முத்துசாமி நவீன நடனத்திலிருந்தே தனது நாடகத்திற்கான மூலங்களைக் கொண்டிருக்கிறார். ஆகவே அவருக்கு நாடகப்பிரதி என்பது ஒரு வரைபடம் போல நாடகம் போடுவதற்காக ஆதாரம் மட்டுமே. நடிகனின் உடல் மற்றும் குரலில் அவர் செய்யும் மாற்றம் அற்புதமானவை.
கூத்துப்பட்டறையில் நடிப்பிற்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக நடனம், யோகா, மார்சல் ஆர்ட்ஸ், சிலம்பம், தேவராட்டம், களறி, தாய்சி, தியானம், எனப் பல்துறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன் மூலம் நடிகன் தன் உடலை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள முடியும். அது போலவே மரபான நடிப்பு முறையிலிருந்து விலகிய பிரக்ஞை பூர்வமாக நடிப்பைக் கைக்கொள்ள முடியும் என்று கூத்துப்பட்டறையில் பயின்ற நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அது உண்மை என்பதை அதிலிருந்து பயின்று வந்த பல நடிகர்கள் இன்று நிரூபணம் செய்கிறார்கள். சிறந்த இரண்டு உதாரணங்கள் பசுபதி மற்றும் கலைராணி. இவர்கள்  நடிப்பை பிரக்ஞை பூர்வமாகவும் பல்வேறு தளங்களில் விரித்தும் கற்பனை செய்தும் புரிந்து கொண்டவர்கள். இவர்கள் மட்டுமின்றி பிரசாத், அண்ணாமலை, ஜார்ஜ், பாங்ளா , குமாரவேல், சந்திரா, என்று தனித்துவமிக்க நடிகர்கள் பலரை கூத்துப்பட்டறை உருவாக்கியிருக்கிறது.
அதன் பிறகு கூத்துப்பட்டறையின் நாடகங்களை அலியான்சே மேக்ஸ்முல்லர் பவன் மற்றும் தீவுத்திடலில் உள்ள அரங்கில் தொடர்ச்சியாகக் காண நேர்ந்தது. ஒவ்வொரு நிகழ்வின்  போதும் முத்துசாமி தொலைவில் நின்று கொண்டிருப்பார். ஒரு சிரிப்பு மற்றும் எப்படியிருக்கீங்க என்ற வினா இரண்டையும் தவிர அவர் வேறு எதையும் பகிர்ந்து கொண்டது கிடையாது.
ஆனால் ஒரு முறை பிரிட்டீஷ் கவுன்சில் ஆங்கில நாடகம் ஒன்றினையும் அதைத் தொடர்ந்த இரவு விருந்தையும் அளித்தது. சென்னையில் தமிழ் நவீன நாடகங்கள் பார்ப்பதற்கு ஐம்பது பேர்கூட வருவதில்லை. ஆனால் ஆங்கில நாடகம் பார்ப்பதற்கு முந்நூறு பேர்களாவது வருவார்கள். இதில் ஆச்சரியம் ஐநூறு ரூபாய் டிக்கெட் போட்டு நடக்கும் நவீன நாடகங்களுக்குக் கூடப் பல நேரங்களில் டிக்கெட் விற்றுப் போய் நாடகம் பார்க்க முடியாமல் வீடு திரும்ப நேரிடும். அது ஒரு எலைட் இன்ட்ரஸ்ட் என்று முத்துசாமியே ஒரு சமயம் சொன்னார்.
அன்று பிரிட்டீஷ் கவுன்சிலின் வெளியில் நாடகம் முடிந்து வெளியே விருந்து துவங்கியது. பகட்டான ஆங்கிலப் பேச்சுகள், நாடகம் பற்றிய மேல்உதட்டு அபிப்ராயங்கள் தாண்டி தனியே அமர்ந்திருந்தார் முத்துசாமி, அருகில் சென்று அமர்ந்தேன்.  அவராகப் பேசத்துவங்கி பேச்சு அவரது சொந்த ஊரான புஞ்சை  பற்றியும் அங்குள்ள நற்றுணையப்பன் என்ற தெய்வம் குறித்தும் நீண்டது.
பேச்சின் நடுவில் செம்பொனார் கோவிலில் இருந்த நாதஸ்வரக் கலைஞர் ஒருவரைப் பற்றி நினைவுகூறத்துவங்கி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே எழுந்து நின்று அந்த நாதஸ்வரக் கலைஞர் வாசிக்கும் முறையைத் தன் கைகளால் பாவனை செய்தபடியே தனிநடிப்பு போல சொல்லத் துவங்கினார்.
"அப்படியே ஆகாசத்துக்கும் பூமிக்கும் இடையில் அந்த நாதஸ்வரம் சுழன்று சுழன்று வருது.  அந்த மனுசன்  ஆவேசத்துடன் வாசிக்கிறார். வெளியே இருக்கிற மரங்கள் எல்லாம் ஒடுங்கிப் போய் நிக்குது. அருள் வந்த ஆள் போல அவர் வாசிச்சிகிட்டே இருக்கார். ரொம்ப  ஒசத்தியான இசை. இன்னைக்கும் மனசில அப்படியே இருக்கு. இசையைக் கேட்டு நாம கற்பனை பண்ண முடியலை. அது ஒரு உன்னதமான அனுபவம். பார்த்துகிட்டு இருக்கும்போதே எல்லாம் மறைஞ்சி போற மாதிரி இருக்கு.  பாம்பாட்டி முன்னால் நிக்குற பாம்பு மாதிரி இருக்கேன். எதையோ தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருக்கிறது மாதிரி நாதஸ்வரம் மேலேயும் கீழேயும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போய்க்கிட்டே இருக்குது. சாட்டையைச் சுழட்டுற மாதிரி இருக்கு இசை. ஆனா.. சட்னு அப்படியே ஒரு நிமிஷம் அவர் வாசிக்கிறதை நிறுத்திடுறார். நம்மாலே நிறுத்த முடியலை."
அவர் சொல்லச் சொல்ல, காதில் அந்த நாதஸ்வர இசை கேட்பது போலவே இருந்தது. இசையை ஒரு மனிதனால் இவ்வளவு நுட்பமாகக் காட்சிப்படுத்த முடியுமா என்ற வியப்பிலிருந்து என்னால் மீள முடியவேயில்லை. முத்துசாமி சொல்லி முடித்து சிரிப்போடு அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு நெருக்கத்தோடு என் தோளில் தட்டினார். முத்துசாமியிடமிருந்து இதைத்தான் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருந்தேன் என்று அந்த நிமிடத்தில் தோன்றியது.
அதன் பிறகு அவரை ஒன்றிரண்டு முறை தேடிப்போய்ப் பேசுவதும் பார்ப்பதுமாக இருந்தேன். இணக்கமும் அன்புமான பகிர்தல் அவரிடம் எப்போதுமிருந்தது. இதன் இடையில் நடேஷ் நெருக்கமான நண்பராகியிருந்தார். நடேஷ் முத்துசாமி இருவரும் பேசிக்கொள்வதைக் காணும்போது அப்பா பையன் போலவே இருக்காது.
முத்துசாமியின் கவனம்  தமிழ் நவீன நாடகத்திற்கான புதிய மொழியை உருவாக்குவதிலே முதன்மையாகக் குவிந்திருக்கிறது. அது மரபுக்கலைகளிலிருந்து உருவான நவீன உடல்மொழி.  தமிழ்நவீன நாடகப் பிரக்ஞையை முத்துசாமியே உருவாக்கினார்.
பேராசிரியர் ராமானுஜம், மு.ராமசாமி, மங்கை, ஞாநி, பிரளயன், ராஜி, ஆறுமுகம், ராஜேந்திரன், சண்முகராஜா, முருகபூபதி என்று நவீன நாடகப் பரப்பில்  பல்வேறு ஆளுமைகள் தீவிரமாக நாடக உருவாக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்கள் யாவருக்குள்ளும் முத்துசாமியின் ஏதோவொரு நுட்பமான பாதிப்பும், அரூபமான நெருக்கமும் அறிந்தும் அறியாமலும் இருக்கின்றது.
முத்துசாமி உருவாக்கிய நாடக மொழிக்கான அடிப்படைகளை அவர் சிற்பங்கள் ஓவியங்கள், நடனம், மரபுக்கலை, கோவில்கலை, மேலை நாடக மரபுகள் என்று பல்வேறு இழைகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்.
முத்துசாமியின் நாடகம் தந்த உந்துதலால் சந்திரலேகாவின் நாடகங்களைக் காண நேர்ந்தது. அது முற்றிலுமான ஒரு நடனநாடகம் என்றே சொல்வேன். அதில் நடிகன்  பெரிதும் நடனக்கலைஞராகவே இருக்கிறான். அவன் உடலை யோகநிலைகள் போல வெவ்வேறு படிகளில் ஒன்று சேர்ப்பதும் அவிழ்ப்பதுமே நாடகத்தின் முக்கிய போக்காக இருந்தது. அபத்தமோ, முரண்களோ, பகடியோ அதில் இல்லை.
முத்துசாமியின் நாடகங்களை ஒரு சேர வாசிக்கும் போதுதான் அவர் உருவாக்கியுள்ள தமிழ் நவீன நாடகப்பரப்பு எவ்வளவு பெரியது என்று உணர முடிகிறது. காலம் காலமாக எழுதிய போது முத்துசாமி நவீன நாடகம் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. அது நடை இதழில் 1969ஆம் ஆண்டு வெளியாகிறது. எழுத்து இதழில் சி.சு. செல்லப்பா ஓரங்க நாடகங்கள் என்று சில நாடகங்களை வெளியிட்டார். ஆனால் அது நவீன நாடக வகைமை கொண்டதில்லை.
முத்துசாமி சுயமாக தனக்கான நாடகமொழியைக் கண்டுபிடித்திருக்கிறார். அதன்பிறகு தெருக்கூத்தின் பரிச்சயம் அவருக்கு 1975ஆம் ஆண்டுதான் ஏற்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து அவரது பிரதிகள் உருமாற்றம் கொள்ளத் துவங்குகின்றன. உருவகங்கள் குறியீடுகள் கலாச்சார மறுவாசிப்பு புராணக்கதைகளின் மறுவடிவம் என்று அவர் தன் பிரதிக்கான அர்த்த தளங்களை விரிவாக  எடுத்துக்கொண்டு போகிறார். படுகளம் நாடகம் அதன் உச்ச நிலை என்றே சொல்வேன். மகாபாரதமும் சமகால நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று கலப்பதும் அதில் வெளிப்படும் பகடியும் நிகழ்த்து முறையும் நவீன நாடகத்தின் சிறப்பான உயர்நிலை.
நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், உந்திசுழி, கட்டியக்காரன், நற்றுணையப்பன்,  இங்கிலாந்து தெனாலி, பிரகலாத சரிதம், சந்திர ஹரி, படுகளம் என்று முத்துசாமியின் நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தளத்தில் இயங்குகின்றது.
முத்துசாமியின் நாடகங்களை முதன்முதலாகப் பார்க்கும் பார்வையாளன் அடையும் திகைப்பு நடிகர்கள் பேசும் முறை. அவர்கள் வசனங்களை நேரடியாக ஒப்புவிப்பதில்லை. மாறாக அதைச் சிலவேளைகளில் உச்சாடனம் செய்கிறார்கள். சில வேளைகளில் கவிதை போல உயர்நிலைக்குக் கொண்டு போகிறார்கள். சிலவேளைகளில் சொற்களின் ஊடே இடைவெளியை உருவாக்கி அர்த்த மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். இது பார்வையாளன் அடையும் முதல் திகைப்பு.
அடுத்தது அவர்கள் மேடையைப் பயன்படுத்தும் விதம். பொதுவில் திரைச்சீலைகளும் மேஜை நாற்காலிகளும் அரங்க பொருட்களாக அறிமுகமாகயிருந்த பார்வையாளனுக்கு முத்துசாமியின் நாடகத்தில் அவர்கள் தங்கள் பாவனைகளால் பொருட்களை உருவாக்குவதும் அதைப் பயன்படுத்துவதும் வியப்பளிக்கக் கூடியது. மூன்றாவது, நாடகத்தின் பின்புல இசை மற்றும் கூட்டியக்கம். ஒரு இசைக்கோவை போல நாடகம் வேறுவேறு தளங்களுக்கு உயர்ந்து பின்பு உச்சநிலையை அடைகிறது.
இது பார்வையாளர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்திவிடாதா, நாடகம் புரிந்து கொள்ளப்படவில்லை என்ற கேள்வி முத்துசாமியின் ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் கேட்கப்படுகிறது. அவர் மிகப் பொறுமையாக, இதற்குப் பார்வையாளர்கள் பழகிக் கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப எனது நாடகங்களைக் காண்பதுதான் அதைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழி என்று சொல்கிறார். அதுதான் உண்மை. இந்த நாடகங்கள் புரியவில்லை. இதை வெறும் ஏமாற்று என்று புறக்கணிப்பதைவிடவும் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று முயற்சிப்பதே அவசியம்.
முத்துசாமி நவீன நாடகப்பிரதிகளை எழுதியதோடு அதை முழுமையானதொரு நவீன நாடகமாக நடிகர்களைக் கொண்டு பயிற்சி செய்து உருமாற்றிக் காட்டுகிறார்.  குறிப்பாக மேடையின் ஒளியமைப்பில் கூத்துப்பட்டறை செய்த பல முன்முயற்சிகள் இந்திய அளவில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. டாக்டர் ரவீந்திரன், மற்றும் நடேஷ் ஒளியமைப்பு செய்த முறைகள் மிகுந்த பாராட்டுக்கு உரியவை.
அது போலவே பன்சி கௌல், கன்யாலால், அன் மோல் விலானி, கில் ஆலன், ஜான் மார்டின், என்று பல்வேறு நாடக இயக்குனர்களுடன் முத்துசாமி இணைந்து உருவாக்கிய தமிழ்நாடங்கள் நவீனத் தமிழ்நாடகத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இன்று நாடகத்திற்கான சிறப்புப் பயிலரங்கில் ஒன்றாகக் கூத்துப்பட்டறையை யுனெஸ்கோ அங்கீகாரம் செய்து உதவி செய்து வருகிறது.
முத்துசாமியை நீண்ட நேர்காணல் ஒன்று செய்து எனது அட்சரம் இதழில் வெளியிட வேண்டும் என்று அவரை நான்கு முறை தொடர்ச்சியாகச் சந்தித்து உரையாடலைப் பதிவு செய்தேன். பத்து மணி நேரத்திற்கும் அதிகமான பதிவு. முத்துசாமி அந்தப் பதிவில் எங்கும் தன் சாதனைகள் பற்றியோ, தனது ஏமாற்றங்கள் பற்றியோ ஒரு முறைகூடக் குறிப்பிடவேயில்லை. இதழ் நின்று போய்விடவே அந்த ஒலிப்பதிவுகள் அப்படியே கைவிட் டுப் போய்விட்டன.
அலியான்சே மேக்ஸ்முல்லர்பவன் என்று அயல்நாட்டுக் கலாச்சார நிறுவனங்களோடு இணைந்து நாடகம் போடுகின்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட முத்துசாமி சென்னையில் பலவருடம் சேரிப்பகுதி மக்களுடன் இணைந்து வசித்தவர். அடிப்படை வசதிகள்கூட எதுவுமில்லாத மிக எளிமையான அரசுக் குடியிருப்பில் தன் வாழ்க்கையைச் செலவிட்டவர். பொருளாதார நெருக்கடிகளுக்காகத் தன்னை மாற்றிக்கொள்ளாதவர் முத்துசாமி.
இன்று சிறுகதை, கவிதை, நாவல் போன்ற வடிவங்களின் மீது இலக்கியவாதிகள் காட்டும் அக்கறையில் ஒரு பகுதிகூட நாடகத்தின் மீது இல்லை என்பதே உண்மை.
தெருக்கூத்திற்கு இன்றுள்ள அங்கீகாரத்திற்கு அவரே முக்கிய காரணம். நாடகம், கூத்து, கலை என்று தன் முழு நேரத்தையும் ஒப்படைத்துக் கொண்ட முத்துசாமி  சங்கீத நாடக அகாதமி விருது பெற்றபோது அது இலக்கியச் சூழலில் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவேயில்லை. ஆனால் முத்துசாமியின் தொடர் இயக்கம் காரணமாகவே இன்று வெளி மாநிலங்களில் நவீனத் தமிழ்நாடகம் குறித்த அறிமுகம் ஏற்பட்டு உள்ளது.
நாடகத்திற்கான தேவை இப்போதுதான் மிக அதிகமாக உள்ளது. அதிகமான மன அழுத்தம் மற்றும் நெருக்கடியான சூழலில் மனிதர்களுக்கு அகவிடுதலை தரக்கூடிய தனித்தன்மை கொண்டது நாடகம். பன்னாட்டு நிறுவனங்கள் இன்று தங்களது ஊழியர்களுக்கு யோகா மற்றும் நாடகப் பயிலரங்கம் நடத்துகின்றன. நாடகம் ஒருபோதும் புறக்கணிக்கபட்டுவிடாது. அதை நாம் முறையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முத்துசாமி சொல்லியிருந்ததை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாசித்தேன்.
முப்பது ஆண்டுகாலமாக முத்துசாமியின் அக்கறை அப்படியே இருக்கிறது. பிரதான இலக்கியச் சூழல் அவரைக் கண்டுகொள்ளாமல் எப்போதும் போல வீண்வாதங்கள், வம்புகளின் பின்சென்று கொண்டிருக்கிறது. அதை அவர் கண்டுகொள்ளவும் இல்லை கவலைப்படவும் இல்லை. அபத்தம் தான் வாழ்வின் பிரதான சுவை என்று அவர் அறிந்திருக்கக்கூடும்.