Search This Blog

Thursday, May 8, 2014

எரிசக்தியைச் சேமிக்கும் பழக்கத்தைக் கடைபிடிப்போம்- டத்தோ டாக்டர் ந. மாரிமுத்து

பொருட்களின் விலையேற்றத்தால் அவதிவுறும் மக்களுக்கு அதிகம் பணம் சம்பாதிப்பது அல்லது செலவினங்களைக் குறைப்பது என இரண்டு வழிகள் உள்ளன.

ஆனால், பணம் சம்பாதிக்க நேரம் குறைவாக இருப்பதானால் முதல் வழியைக் கடைப்பிடிப்பதில் சற்று சிரமம். செலவினங்களை குறைக்கும் வழிமுறை எளிதானதாகவும் வழக்கமான பழக்கத்தில் உள்ளதாலும் இரண்டாவது முறையைக் கடைப்பிடிப்பது மிக எளிது.

இவ்வழிமுறைகளை வீட்டிலிருந்தே செய்யலாம். மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவதின் வழி மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கலாம்.

மின்சாரத்தை விவேகமான முறையில் பயன்படுத்துவதால் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியும் என்பதனை ஒரு பணி திட்டத்தின் வழி மருடி, பாரம், சரவாக் தேசிய இடைநிலைப்பள்ளி மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.

மலேசிய பயனீட்டாளர் சம்மேளனத்தின் (போம்கா) இணை உறுப்பினர்களாக இருக்கும் மலேசிய நீர் மற்றும் எரிசக்தி பயனீட்டாளர் அமைப்பும் மலேசிய தரப்பாடு பயனீட்டாளர் சங்கமும் இணைந்து நடத்திய விவேக எரிசக்தி பயன்பாடு எனும் போட்டியில் இந்தத் பணி திட்டம் வெற்றி பெற்றது.

இத்திட்டத்தின் வாயிலாக இரண்டு மாதத்தில் அவர்கள் பள்ளியில் சுமார் 70 சதவீத மின்சார பயன்பாட்டைக் குறைந்துள்ளனர் இம்மாணவர்கள்.

இதில் மிகச் சுவாரசியமான செய்தி என்னவென்றால், மிகவும் எளிமையான மற்றும் வழக்கத்தில் உள்ள வழிமுறைகளைக் கடைப்பிடித்ததன் வாயிலாக இப்பணிதிட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். உதாரணத்திற்கு ஆசிரியர் அலுவகத்திலும் பள்ளியில் உள்ள இதர அலுவகத்திலும் உள்ள குளிரூட்டு சாதனத்தை 24 பாகை செல்சியஸ்யாக குறைந்து மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைந்துள்ளனர்.

இதற்கு முன்பு, அதிகமான அலுவலக அறைகளில் குளிரூட்டு சாதனத்தின் வெப்பத்தை தேவையான அளவில் வைப்பதில்லை. மிக குளிர் நிலையான 16 பாகை செல்சியஸ்சில் வைப்பதால் அதிகமாக மின்சக்தி விரயமாகிறது.

நமது அரசாங்கமும் இந்நிலைமையை மாற்றும் முயற்சியில், அரசாங்க அலுவகங்களில் 23-24 பாகை செல்சியஸ் அளவில் மட்டுமே வைக்க வேண்டும் என சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

மற்றவர்களும் இந்த மாணவர்களின் திட்டத்தை ஓர் எடுத்துக்காட்டாக கொண்டு மழைக்காலங்களில் குளிரூட்டு சாதனங்களை அடைத்து விட்டு, காற்றாடியைப் பயன்படுத்தலாம். ஜன்னல்களைத் திறந்து விட்டால் அறையில் காற்றோட்டம் அதிகமாகி வெப்பத்தைக் குறைக்கும்.

இதனைத் தவிர, இம்மாணவர்கள் வகுப்பறைகளில் வெளிர் நிற சாயங்களைப் பூசியுள்ளனர். வெளிர் நிற சாயங்களைப் பூசுவதன் மூலம் வகுப்பறை சற்றும் வெளிச்சமாக இருக்கும். அதன் வழி நாம் மின் விளக்குகளைத் அனாவசியமாக எரிய விட வேண்டியதில்லை.

அம்மாணவர்களின் செயலைப் பெற்றோர்களும் ஒரு வழிக்காட்டியாக எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்வதன் வழி அன்றாட வாழ்வில் ஏற்படும் தேவையில்லா செலவைக் குறைக்கலாம்.

உலக அளவில் நடக்கும் மற்றொரு விரயம் என்னவென்றால் தொலைக்காட்சி மற்றும் தொலைக்காட்சி கேபிள் டிக்கோடரைப் பயன்படுத்தாத போது அதன் விசையை அணைக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். தயார் நிலையில் இருக்கும் டிக்கோடர் சுமார் 85 முதல் 90 சதவீத மின்சக்தியைப் பயன்படுத்துகின்றது. ஓர் இரவு அல்லது ஒரு நாள் முழுவதும் அணைக்காத போது எவ்வளவு மின்சக்தி விரயமாகிறது என்பதை நினைத்து பாருங்கள்.

அதனைத் தவிர மற்ற மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தாத போது அதன் விசையை அணைத்து வைக்க வேண்டும். மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்திய பிறகு அதன் ப்ளாக்கை அகற்றி விடுவது நல்லது. ஏனெனில், விசையை அடைந்த பிறகும் ப்ளாக்கை அகற்றவில்லையென்றால் மின் ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

அது மட்டுமின்றி ப்ளாக்கை அகற்றி வைப்பதின் மூலம் இடி இடிக்கும் போது ஏற்படும் மின் சேதத்தைத் தடுப்பதோடு மட்டுமின்றி மின்சாரப் பொருட்களைப் பாதுகாக்க முடியும்.

மின் விளக்கு மற்றும் மின்விசிறியை அணைப்பது மிக எளிதான ஒரு காரியம் என்பதோடு குடும்பத்தோடு அதனைக் கடைப்பிடிக்கலாம். 30 நிமிடத்திற்கு மேல் கணினி மற்றும் மற்ற மின்சாரப் பொருட்களை அடைக்காமல் இருத்தல் கூடாது. அதன் ப்ளாக்கையும் அகற்றி விட வேண்டும்.

மின்சாரப் பொருட்களை வாங்கும் போது மிக கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும். மின்சாரத்தையைச் சேமிக்க உதவும் பொருட்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்திற்கு எல்சிடி திரைகள், கலிமாத்தான் விளக்குகள் போன்றவை மின்சக்தியைக் சிக்கனப்படுத்தும்

அலுவலகம், வீடு வெளியூர் என்று எங்கிருந்தாலும் மின்சக்தியைச் சேமிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதனால் கண்டிப்பாக நம்மால் நம் நாட்டின் மின்சார உற்பத்தியின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். குறைந்தது இப்போது இருக்கும் நிலைமையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். விவேகமான மின்சார பயன்பாட்டினால் பைங்குடில் விளைவுகளைத் தடுக்க முடியும். அதன் வழி சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டைத் தவிர்க்க முடியும். விவேகமான மின்சார பயன்பாடு மின்சாரத்தின் விலையேற்றத்தைக் குறைகிறது.

எவ்வளவு நாள் தான் பெட்ரோனாஸ் இயற்கை எரிவாயுக்கு, 66 விழுக்காடு உதவித் தொகையை வழங்கும்? மின்சார உற்பத்திக்கு இயற்கை எரிவாயு தேவைபடுவதால் சந்தை விலையில் அதன் விலை உயர்வாக உள்ளது.

நம் என்னவென்றால், மின்சாரத்தின் விலை ஏறிக் கொண்டே போகிறது என இங்கே புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

மக்கள் மத்தியில் விவேகமான மின்சாரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நமது அரசாங்கம் பல விதமான ஆராய்ச்சிகள் மற்றும் மானிய தொகை என செய்துள்ளது. மேலும் மலேசிய எரிசக்தி ஆணையம், மின்சாரப் பொருட்களில் விவேகமான மின்சாரப் பயன்பாடு மற்றும் பாதுகாப்புத்தரத்தை அங்கீகரித்து எரிச்சக்தி திறன் முத்திரையைத் தோற்றுவித்துள்ளது.

பல பேர்க்கு எரிசக்தி திறன் முத்திரையின் பயன்பாடு தெரிவதில்லை. மின்சாரக் கடையில் பணி புரியும் பணியாளர்களுக்கும் அது தெரியாததுதான் மிக வருத்தமான விஷயம்.

ஆதலால், இன்றையில் இருந்து மின்சக்தியை சேமிக்க ஆரம்பிப்போம்! எரிசக்தி சேமிப்பு, பண சேமிப்பு!

நன்றி - டத்தோ டாக்டர் மாரிமுத்து நடேசன்,
மலேசிய பயனீட்டாளர் சம்மேளனத்தின் தலைவர்

No comments:

Post a Comment