Search This Blog

Friday, April 20, 2012

திருந்துவார்களா?


 
ன்பே சிவம் என்றார்கள்  ஆனால் சிவனை வணங்கும் சைவர்கள் ஈவிரக்கமில்லாமல் உயிரை கொன்று அதன் மாமிசத்தை புசிக்கிறார்கள். அனைத்தும் வாசுதேவனின் வடிவம் என்கிறார்கள் வைணவ பக்தர்கள் ஆனால் அவனை வணங்கும் பலர் புலால் உண்கிறார்கள். அன்பே சிவமாய் நீயிருக்க தெய்வங்கள் உயிர்  பலி கேட்பதாக  உயிர்களை கொன்று தின்னும் கொடிய மனம் படைத்தோர் ஒருபுறம். 

இப்படிச் சொல்வது ஒன்று செய்வது என்று தான் இந்த மனிதர்கள் இருக்கின்றார்கள். சொல்லில் நேர்மையில்லை செயலில் நேர்மையில்லை வாழ்க்கையில் நேர்மையில்லை
பகட்டுக்காக இறைவனை வணங்குவதுபோல் நடிக்கிறார்கள். சுத்தம்தான் கடவுள் என்கிறார்கள் காணும் இடமெல்லாம் அசுத்தம் செய்வதை தவிர வேறு செயல்களை அவர்கள் மறந்தும் செய்வதில்லை. இறைவழிபாட்டு தலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 

தனக்குள் இருக்கும் இறைவனை அறியாமல் போலிகளிடம் சென்று பணத்தையும் வாழ்வையும் தொலைக்கும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகிறது.
நவ நவநாகரீகமாக  ஆங்கிலம் பேசி குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு ஆன்மிகம் என்ற பெயரில்  புளுகுகளை தினம் தினம் அவிழ்த்துவிட்டுக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய்களை தினம் கல்லா கட்டுபவர்கள், காவி உடை உடுத்தி ஆடம்பர வாழ்வு நடத்துபவர்கள், ஆன்மிகம் பேசி ஆடம்பர கார்களில் உலா வருபவர்கள் எனப் பலர்...

மனம் முழுவதும் குப்பைகளை நிரப்பிக்கொண்டு அதை வெளியே அப்புறப் படுத்த வழி அறியாமல் அலையும் மனித இனம். பிறரை வஞ்சித்து பொருள் சேர்த்து மகிழ்ச்சியாக 
வாழலாம் என்று நினைத்து ஆப்பசைத்து மரத்தின் இடுக்கில் வால் மாட்டிகொண்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கும் குரங்குகள் போல் பலர்.

சுய லாபத்திற்காக பலரின் வாழ்க்கையை சீரழித்து தங்களின் சொந்த வாழ்க்கை பறிபோய் தவிக்கும் பலர். மனிதர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டு மனித நேயமற்ற செயல்களில் ஈடு பட்டுகொண்டிருக்கும் ஒரு கூட்டம். உலகம் முழுவதும் தன் மதம் தான் உயர்ந்தது என்று கருதிக்கொண்டு மற்ற மதத்தை பின்பற்றுபவர்களை இழிவுபடுத்துவதும், கொடுமைப் படுத்துவதும்,சிறுமைப் படுத்துவதும் கொன்று குவிப்பதுமாக வெறி பிடித்து அலையும் பல மதவாத கும்பல்கள். 

ஒரு பக்கம் செல்வசெழிப்பில் புரளும் மனிதர்கள் மறுபக்கம் உணவுக்கு  வழியில்லாமல் மடியும்  கோடிக்கணக்கான மக்கள் கூட்டம்.

பூவுலகை ,பாழுலகமாக மாற்றும் பாதகர் கள் பெருகிவிட்டனர் அணு உலைகளை நிறுவி அனைவரையும் அழிக்க திட்டம் தீட்டும் அணு வல்லரசுகள் நிறைந்து அரக்கர் கூட்டம் பெருகிவிட்டது. நம்மை வாழவைக்கும் நதிகளை நாற்றமெடுக்கும் சாக்கடையாக  மாற்றிவிட்டனர் நாகரீகமில்லா நாசக்கார பேய் மனித கூட்டம். நீர் வழங்கும் ஏரிகளை சேரிகளாக்கி அரசியல் துணையுடன் அசுத்தப் படுத்தி வருகிறது அராஜகக் கூட்டம்.

தெய்வங்கள் என்று போற்றி வணங்கும் பெண்களின் வாழ்வை சீரழிக்கும் ஈவு இரக்கமற்ற ஆண் மற்றும் பெண்கள் , அறிவை மயக்கி அழிவு பாதையில் கொண்டு செல்லும் மது, மாது, மேனாட்டு கலாசார சீர்கேடுகள், மூட நம்பிக்கைகள், மத வாதம், தீவிர வாதம் கலப்படம், போலி மருந்துகள்,போதை, வாழ்வில் அனைத்திலும் புகுந்து கொண்டு நம்மையெல்லாம் அழித்தொழிக்கும், லஞ்சம், நேர்மையின்மை ஒழுக்கமின்மை என இன்று மானிட இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

இறைவா படைத்தவன் நீயிருக்க தானே கடவுள் என்று பிதற்றிக்கொண்டு திரியும் பலர். அவர்கள் பின்னே மந்தைமந்தையாய் எதையோ எதிர்பார்த்து ஏமாந்துபோய் துன்பத்தில் மூழ்கி அலையும் கோடிக் கணக்கான மதியில்லா மக்கள் கூட்டம். இந்த மானிட இனம் இனி திருந்த வாய்ப்பில்லை.

No comments:

Post a Comment