Search This Blog

Friday, October 7, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ்




தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவான் எனப்படும் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த புதன் கிழமை(05--10-2011)சான்பிரான்சிஸ்கோவில் காலமானார். அவருக்கு வயது 56.

கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஜனவரி முதல் மருத்துவ விடுமுறையில் இருந்தார். நோயின் பாதிப்பு அதிகமானதால் ஆப்பிள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஆறு வாரங்களுக்கு முன்புதான் விலகினார். ஆப்பிள் தலைவராக மட்டும் தொடர்ந்தார்.

1955-ல் சான்பிரான்ஸிஸ்கோவில் பிறந்த ஸ்டீவ் தனது கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டவர். தன்னுடைய பள்ளி நண்பரான ஸ்டீவ் வோஸ்னியாக்குடன் இணைந்து 1976-ல் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். ஸ்டீவ் வீட்டு கார் காரேஜில் ஆப்பிள் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1980 காலகட்டங்களில் இந்நிறுவனம் தயாரித்த மேக் கணினிகள் (Macintosh Computers) பிரபலம் அடைந்தன. 1985-ல் தனது தொழில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகளால் நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

ஆனால் நிறுவனம் சிக்கலுக்குள்ளானபோது, 1997-ல் ஐமேக் (iMac) என்ற புதிய கண்டுப்பிடிப்பு மூலம் அவர் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தைப் புதுப்பித்தார். அன்றிலிருந்து அவர் தொட்டதெல்லாம் டாலர் மழையாய்க் கொட்டியது.

கடந்த 2002-ல் ஐபாடு (iPod) என்ற வெளியீட்டின் வாயிலாக தொழில்நுட்பத் துறையில் புதுமையான புரட்சியினை ஏற்படுத்தினார். பின்னர் ஐடியூன்ஸ் ஸ்டோரை உருவாக்கினார். இன்றைக்கு 20 கோடிக்கு மேல் இதன் பயனாளர்களாக உள்ளனர்.

2007-ல் செல்போன் உலகில் நுழைந்த ஆப்பிள், புயல் வேகத்தில் முன்னேறியது. உலகின் மிக விருப்பமான மொபைல் போனாக ஐபோன் (iPhone) மாறியது. பல பதிப்புகளைக் கண்டது. அடுத்து ஸ்மார்ட் போன் சந்தையிலும் ஆப்பிள் நிறுவனம் கால்பதித்தது. முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டையும் ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், ஐடி உலகில் புதிய வரலாற்றைப் படைத்தது.

கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் ஸ்டீவ் இருந்தார்.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரணச் செய்தி வெளியானதற்கு ஒரு நாள் முன்புதான், ஐஃபோனின் லேட்டஸ்ட் வர்ஷனை வெளியிட்டது ஆப்பிள்.

ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்த இந்த கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் சாதனங்கள் அனைத்துமே, அனைவராலும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. 56 வயதில் இந்த சாதனையாளர் மறைந்ததை, ஒரு தொழிலதிபரின் மரணமாகப் பார்க்காமல், உலக சமூகம் ஒரு கண்டுபிடிப்பாளரை இழந்ததாகப் பார்க்கிறார்கள்.

மரணம் வரை ஆண்டுக்கு வெறும் 1 டாலர் மட்டுமே சம்பளமாக அவர் பெற்றுவந்தார். ஆனால் அவருக்கு ஆப்பிள் நிறுவனத்தில் மட்டும் 5.426 மில்லியன் பங்குகளையும், டிஸ்னியில் 138 மில்லியன் பங்குகளையும் வைத்திருந்தார்.

கூகுளுக்கும் ஆப்பிளுக்கும் கடும் வர்த்தகப் போர் நடந்தாலும், சில மாதங்களுக்கு முன் கூகுளின் சிஇஓவாக இருக்குமாறு இவரை கேட்டுக் கொண்டது நிர்வாகம். ஆனால், அதை நாசூக்காக மறுத்துவிட்டார் ஸ்டீவ். இதனை கூகுளின் இப்போதைய சிஇஓ லாரி பேஜ் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல, ஸ்டீவ் மறைவுக்கு தனது ஹோம் பேஜிலேயே இரங்கல் வெளியிட்டு கவுரவித்துள்ளது கூகுள்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, "ஸ்டீவ் ஜாப்ஸ் நமது வாழ்க்கையை மாற்றியவர், ஒட்டுமொத்தமாக பல தொழில்களுக்கு புது அர்த்தம் தந்தவர். அவரது மரணம் குறித்து அவர் கண்டுபிடித்த கருவியிலேயே உலகில் பெரும்பாலோனோர் தெரிந்து கொண்டனர் என்பதைவிட அவருக்கு பெரிய அஞ்சலி எதுவும் இருக்க முடியாது," " என்று தமது அஞ்சலியில் குறிப்பிட்டார்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பர்க் என பலரும் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் சமூக வலைத் தளங்களில் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment