Search This Blog

Wednesday, September 14, 2011

இறைவனின் அசரீரி ஒலித்த ஸ்ரீ மகாலிங்கம் ஆலயம்



இறைவனை முழு மனதுடன் நம்புபவர்களுக்கு - அவனது தரிசனம் நிச்சயம் கிடைக்கும் ! அவனது உதவி தொடர்ந்து , ஏதாவது ரூபத்தில் கிடைத்துக் கொண்டே இருக்கும். 

நல்லதையே நினைத்து, நல்லதையே செய்து வாருங்கள்...! நம்புபவருக்கு நம் ஈசன் என்றும் துணை நிற்பான் !

திருவிடை மருதூர் ஆலயம் பற்றி நான் ஏற்கனவே இரண்டு , மூன்று கட்டுரைகளில் குறிப்பிட்டு இருந்தேன்.. இதுவும் ஒரு அதிசய நிகழ்வு.. நம் வாசகர்களுக்காக பதிவிடுவதில் மிக்க மகிழ்ச்சி..!

இமயம் முதல் குமரி வரையில் பரந்து விரிந்துள்ள இந்தப் பாரத தேசத்தில் கணக்கற்ற சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. இவை இன்றும் அருள்பெருகும் ஜீவநதிகளாக இருக்கின்றன.

1,008 சிவாலயங்களில் 274 ஆலயங்கள் பாடல்பெற்ற தலங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தக் கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச் சிறப்பும், அருள்வீச்சும், பழைமையும், இதிகாசத்துடன் கூடிய வரலாற்றுத் தொடர்பும் உடையவை.

சிவ நாமம், சிவ தரிசனம், சிவத் தொண்டு - இம்மூன்றும் ஒரு மனிதனின் வாழ்வில் கிடைத்தற்கரியவை. இவை கிடைத்துவிட்டால் அதுவே கடைசிப் பிறவியாக அமையும். இதுவே முக்தி. தரிசித்த மாத்திரத்திலேயே முக்தி தரும் தலங்களுள் காசிக்குச் சமமாகக் கருதப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு திருத்தலம் - திருவிடைமருதூர்.

2,500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்புப் பெற்றது.

கோயிலின் வெளியே நான்கு மூலைகளிலும் நான்கு சிவாலயங்களைக் கொண்டிருப்பதால், இது பஞ்சலிங்க க்ஷேத்திரம் எனப்படுகிறது. வரகுண பாண்டியன் என்ற மன்னனின் பிரும்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற தலம். தன்னைத்தான் அர்ச்சித்துக்கொண்ட தலம் எனப் பல வகையிலும் பெருமை பெற்ற தலம் திருவிடைமருதூர்.

அகத்தியர் தொடங்கி பல ரிஷிகளால் வழிபடப்பெற்ற பெருமையுடைய இத்தலத்துக்கு ஆதிசங்கரர் தனது திக் விஜயத்தின்போது வந்தார். அத்வைத சித்தாந்தத்தைப் பலர் ஏற்க மறுத்தனர். எல்லா பண்டிதர்களையும் மற்ற மதத்தினரையும் அழைத்துவந்து ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் முன் நிறுத்தி, ஈஸ்வரனையே எது ஸத்யம் என்று சொல்லும்படி வேண்டினார்.

அப்போது எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க, மூலவர் ஸ்ரீமஹாலிங்கஸ்வாமி கைதூக்கி ‘ஸத்யம் அத்வைதம்’ என்று மூன்று முறை அசரீரியாகச் சொன்னார். அனைவரும் வியந்து பயந்து ஸ்ரீசங்கரருக்குச் சீடரானார்கள்.

 ஸ்ரீமஹாலிங்க ஸ்வாமி ‘ஸத்யம் அத்வைதம்’ என்று கைதூக்கி மும்முறை கூறியதை நினைவுபடுத்தும் வகையில் ஸ்ரீமடத்தின் முகப்பு வாயிலின் முதல் தளத்தில் அழகான சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரம்மஹத்தி தோஷம் - உள்ளவர்கள் . இங்கு வந்து தோஷ நிவாரணம் செய்ய வேண்டும். கொலைக்கு சமமான பாவங்கள் , பெண்ணை அனுபவித்து விட்டு - திருமணம் செய்யாமல் தவிக்கவைத்தல் - போன்ற கடும் பாவங்கள் செய்தவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கும். 

நல்ல யோகம் இருந்தும், சில ஜாதகங்கள் செயல் படாமல் இருப்பதும் இது போன்ற தோஷங்களின் விளைவே. 

எவர் ஒருவர் சென்ற ஜென்மத்தில் இது போன்ற பாவங்களை செய்து இருப்பாரோ, அவர்களுக்கு ஜாதகத்தை பார்த்ததும் இந்த தோஷ அமைப்பை கூறிவிட முடியும். அவர்கள் இது போன்ற பாவ செயல்களை செய்ததால் - கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று இழந்த வாய்ப்புகள் ஏராளமாக இருக்கும். 

ஒருவர் ஜாதகத்தில் ( ராசி / அம்சம் ) - சனியும் குருவும் சேர்ந்து இருந்தாலோ , அல்லது ஒருவரை ஒருவர் பார்க்கும்படி சம சப்தம ஸ்தானத்தில் இருந்தாலோ , அவர்கள் , இந்த ஆலயம் சென்று பரிகாரம் மேற்கொள்வது நல்லது...!

அதன்பிறகு உங்கள் வாழ்க்கையில் என்றும் வசந்தம் தான்..!

வாழ்க வளமுடன் !


Read more: http://www.livingextra.com/2011/09/blog-post_14.html#ixzz1XvD6DPJx

No comments:

Post a Comment