Search This Blog
Tuesday, May 3, 2011
கொழுப்பு அதிகரித்தால் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகம்
வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதால் காரனேரி எனப்படும் இதயத்திற்கு ரத்தம் அனுப்பும் குழாய்களிலும், இதயத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ஆர்ட்ரி குழாய்களிலும் அடைப்பு ஏற்படுகிறது.இதனால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மயோ கிளினிக் ஆய்வாளர்கள் 15 ஆயிரத்து 923 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் போது இந்த உண்மை தெரியவந்தது. சாதாரண உடல் பருமன் அடர்த்தி உள்ளவர்களும் இடுப்பு கொழுப்பு அதிகரிப்பால் இதய நோய்களை சந்திக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தங்களது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்க இதயவியல் கல்லூரி இதழில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் கூறுகையில்,"இதய நோய்த் தாக்கம் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளது. மயோ கிளினிக் ஆய்வாளர்கள் இடுப்பு வயிற்றுப் பகுதியை ஆய்வு செய்தனர். சாதாரண வயிற்றுப் பகுதியை விட அதிக பருமன் உள்ள வயிற்றுப் பகுதி பெருத்தவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் 75 சதவீதம் கூடுதலாக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண உடல் எடை கொண்டவர்களாக இருந்த போதும் வயிற்றுப் பகுதி பருத்தவர்கள் கொழுப்பு கூடுதல் காரணமாக இதய நோய்களை சந்திக்க வேண்டி உள்ளது. இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காணப்படும் அளவீடுகளை டொக்டர்கள் ஆய்வு செய்து இதய நோய்களை தவிர்க்க நோயாளிகளுக்கு உரிய அறிவுரை தர வேண்டும் என கூறுகின்றனர். |
மொழி தெரியாதவர்களுக்கு மொழி பெயர்த்துக் கொடுக்கும் மூக்குக் கண்ணாடி
மக்களிடையே தொடர்புக்கு மிகவும் அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது.அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்க அவசியமாகிறது. குறைந்தபட்சமாக தாய்மொழி, தேசியமொழி, உலகப்பொதுமொழி ஆகியவற்றையாவது அறிந்திருக்க வேண்டும். சிலர் பொது இடங்களில் பலமொழிகளை பேசி அசர வைப்பார்கள். பலர் தாய்மொழியைத் தவிர மற்றமொழி தெரியாமல் விழி பிதுங்க நிற்பார்கள். படித்த சிலர்கூட பொது இடங்களில் இருக்கும் அறிவிப்புகள் வேறு மொழியில் இருந்தால் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கும் மற்ற மொழிப் பாடங்கள் சிரமமாக இருக்கும். இவர்களுக்கு உதவும் வகையில் மொழிபெயர்க்கும் கண்ணாடி வந்திருக்கிறது. இந்த மூக்குக்கண்ணாடியுடன் இணைந்து ஒரு டிரான்ஸ்லேட்டர்(மொழிபெயர்க்கும்) கருவி இருக்கும். இது ஒரு கமெராவும், மைக்ரோ போனும் இணைந்த கருவியாகும். இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு நீங்கள் வாசிக்கும் போது மைக்ரோபோன் வேலை செய்து அதை மெமரி கருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத் தெரியும் படியாக காட்டப்படும். இதனால் நீங்கள் எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்து அறிந்து கொள்ள முடியும். இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது. ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவே இதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும் என்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. |
புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை
மருத்துவ செய்தி |
கடவுளின் கனி என்று செல்லமாக அழைக்கப்படும் பெருமையுடையது கொடி முந்திரி எனப்படும் திராட்சைப்பழம். திராட்சைப் பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத் தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன. இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும். கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும். இதற்கு திராட்சைச் சாறு அருமருந்தாகிறது. ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திராட்சை பலச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிர்க்கு திராட்சை சிறந்த மருந்து. சிறிய அளவில் எடுத்துக் கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு. திராட்சைப் பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள். அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாத உடம்புக்குள்ளானவர்களும் அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை. |
உங்களது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள
ஆங்கிலத்தில் நன்கு படித்து முதன்மையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேசவராமால் பலர் இருக்கின்றனர்.இவர்களுக்கு ஆங்கில மொழியை அசத்தலாக தினமும் வீடியோவுடன் சொல்லி கொடுக்க ஒரு தளம் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அவர்களுக்கு தனியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள நேரம் இருக்காது. இப்படி ஆங்கிலம் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ள அனைவருக்கும் உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. ஆங்கிலத்தை சொல்லி கொடுக்க பல இணையதளங்கள் இருக்கிறதே இத்தளத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று எண்ணும் அனைவருக்கும் பதிலாக இத்தளம் ஆங்கிலத்தை வேடிக்கையாக தினமும் வீடியோவுடன் சொல்லி நம்மை அசத்துகிறது. இந்த வீடியோக்களை தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பார்த்தாலே போதும். சில வாரங்களில் நாமும் ஆங்கிலத்தை எந்தப்பிழையும், எந்த தடையும் இல்லாமல் தொடர்ச்சியாக பேசலாம். ஒவ்வொரு ஆங்கில வார்த்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் தொடங்கி ஒவ்வொருத் துறை சம்பந்தப்பட்ட வீடியோ கோப்புகளை காட்டி நம் ஆங்கில அறிவை வளர்க்கிறது. ஆங்கிலம் கற்றுகொள்ள விரும்பும் நபர்கள் முதல் தொடர்ச்சியாக ஆங்கிலம் பேச விரும்பும் அனைவருக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். http://funeasyenglish.com/ |
Monday, May 2, 2011
Subscribe to:
Posts (Atom)