Search This Blog

Wednesday, August 15, 2012

அரசியலில் பெண்கள் பங்குபற்றுவதன் முக்கியத்துவம்



அரசியல் என்றால் என்ன?
சட்டம், ஒழுங்கை நிலை நாட்டி, மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்படும் கட்டமைப்புக்களும், அவற்றினிடையேயான உறவு முறைகளும் அரசியல் எனப்படும். அரசியல் என்றவுடன் எங்களுக்கு அனேகமாக பாராளுமன்றம்தான் நினைவுக்கு வரும். மக்கள் எங்கள்; வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளே பாராளுமன்றத்தை அமைக்கின்றார்கள். இப்பாராளுமன்றம் எங்கள் வாழ்க்கை தொடர்பான சகல சட்டங்களையும் இயற்றுகின்றது.  உதாரணமாகக் கூறப்போனால், குடியுரிமைச் சட்டம், கல்விச் சட்டம், காணிச் சட்டம், தொழிற்சட்டம், வீட்டுச் சட்டம், விவாகப்பதிவுச் சட்டம், கூட்டுறவுச் சட்டம், பாலியல் வன்முறைச் சட்டம், தேர்தல் சட்டம் என இவ்வாறு எல்லாமே பாராளுமன்ற உறுப்பினர்கள் கைகளினூடுதான் வருகிறது. பார்த்தீர்களா? எங்கள் பொதுவாழ்க்கையிலிருந்து சொந்த வாழ்க்கை வரை எல்லாமே எப்படி அரசியலினால் தீர்மானிக்கப்படுகின்றதென்று?
பிரதானமான அரசியல் கட்டமைப்புக்கள் எவை?
பாராளுமன்றம் ஒரு சட்டவாக்க அமைப்பு என்று முதல் கண்டோம். பாராளுமன்றம் உருவாக்கிய சட்டத்தினை செயற்படுத்துவதற்கு அமைச்சுக்கள் இருக்கின்றன. அமைச்சுக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவாகி நியமிக்கப்படும் அமைச்சர்கள் தலைமை தாங்கி நடத்துகின்றனர். அமைச்சுக்கள் தமக்கென திணைக்களங்கள் என்றும், பிரிவுகள் என்றும் நிர்வாகக் கட்டமைப்புக்களை நியமித்து தமது வேலைகளைக் கொண்டு செல்கின்றன. அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் நேரடியாக அரசியலில் இல்லையென்றாலும், அவை அரசியல் கட்டமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டன.
சகல மக்களின் சகல தேவைகளையுமே ஒரு நாட்டின் மத்திய அரசு சரிவரக் கவனிக்க முடியாதபடியினால், ஒரு நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திற்கெனவும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டன. உள்ளுராட்சி மன்றங்கள் ஒவ்வொரு பிரதேசத்தின் சனத்தொகையைப் பொறுத்து மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை எனப் பெயர் பெறும். இந்த உள்ளுராட்சி மன்றங்கள், பாராளுமன்றமும் அமைச்சுக்களும் ஒருசேர இருப்பது போன்ற கட்டமைப்புக்களாகும். அவற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உள்ளனர். இவர்கள் பாராளுமன்றம் போலவே தமது அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களில் சட்டங்களை ஆக்கலாம். இச்சட்டங்களை செயற்படுத்த இவர்களுக்கு ஒரு நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று உண்டு. இந்த ஆட்சிமன்றங்கள் ஒரு பிரதேசத்தின் கல்வி, சமூக, சுகாதார, பொருளாதார விருத்திக்காகப் பலவித பணிகளைச் செய்யக்கூடியன.
உள்ளுராட்சி மன்றங்கள் பல சிறப்புத் தகைமைகள் கொண்ட அமைப்புக்களாகும். அவையாவன,
1) இதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள், தாம் ஆட்சி செய்யும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, உள்ளுர் மக்களின் பிரச்சினையை நன்குணர்ந்தவர்களாவார்கள்.

2) இப்பிரதிநிதிகள் மக்கள் மத்தியில் வாழ்பவர்களாகையால், மக்களுக்கு பொறுப்புக் கூறுபவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்
3) ஓவ்வொரு உள்ளுராட்சி மன்றமும் அதைத் தெரிவு செய்த மக்களுக்கருகாமையிலேயே இருப்பதனால், அதன் நடவடிக்கைகளில் மக்கள் பங்குபற்றக்கூடியதாக இருக்கின்றது.  
எனவே, மக்களின் அடிப்படைத் தேவைகளை சரிவர பூர்த்தி செய்வதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் ஒரு சிறந்த கருவி என்பதில் ஐயமில்லை.
உள்ளுராட்சி மன்றங்கள் என்றால் என்ன,  பாராளுமன்றம் என்றால் என்ன, இவற்றில் அங்கத்துவம் வகிப்பதற்கும் அரசாங்கம் அமைப்பதற்கும் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் மக்களின் வாழ்க்கை எப்படி நெறிப்படுத்தப்படவேண்டும் என்கின்ற தனித்தன்மையான சித்தாந்தம் கொண்ட நிறுவனமாகும். இந்தக் கட்சிகளில் ஏதாவதொரு கட்சிக்குப் பெரும்பான்மை ஆதரவு மக்களால் வழங்கப்படும்போதுதான் அந்தக் கட்சி தனக்குரிய அமைச்சரவையையும் அதன் தலைவரான பிரதம மந்திரியையும் தேர்ந்தெடுத்து ஆட்சிப்பொறுப்பில் அமர்கின்றது. தனது சித்தாந்தத்தை சட்டங்களாகவும், கொள்கைத் திட்டங்களாகவும் நடைமுறைப்படுத்துகின்றது. எனவே, ஒருவரினது அரசியல் வாழ்க்கையை வரைந்து பார்ப்போமானால், அவர் முதலில் கட்சித் தொண்டராகி, பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினராகி, பின் பாராளுமன்ற உறுப்பினராகி, பின் அமைச்சராகி, பின் பிரதம மந்திரியாக உயரலாம்.
எங்கள் நாட்டில் ஜனாதிபதி ஆட்சி முறைமையும் உண்டு. ஜனாதிபதியானவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவர் பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு அடிபணிய வேண்டியவராயினும், தனக்கென்று அதீத அதிகாரங்கள் கொண்ட தனிநபராக இருக்கின்றார். இதன்படி, அமைச்சுக்கள் பல பணிகளைச் செய்யலாமென்றாலும், அவற்றின் அமைச்சர்களைத் தீர்மானிப்பதும், அந்த அமைச்சுக்களையெல்லாம் நினைத்த நேரத்தில் தனது நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவதும் என் ஏகப்பட்ட அதிகாரங்கள் அவருக்கு உண்டு.
அரசியலில் பெண்கள் ஏன் பங்குபற்ற வேண்டும்?
ஆதிகாலத்தில், மனிதர்கள் குடிகளாக வாழ்ந்தபொழுது பெண்கள் அக்குடிகளின் தலைமைத்துவத்தை வைத்திருந்தார்கள் என வரலாறுகள் எமக்குக் கூறுகின்றன. அதன் பிறகு, படிப்படியாக ஆண்களின் செல்வாக்கு சமூகத்தில் உயர்ந்தபோது, அவர்களே அரசராக முடிசூடும் வழக்கம் வந்தது. இவர்கள் மத்தியில் பெண்கள் அரசாளும் இராணிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தபோதும், அரசு என்றால் ஆண்களுக்குரியது என்கின்ற படிமம் எல்லோர் மனதிலும் விதைக்கப்பட்டுவிட்டது. அப்படிப்போலத்தான் கல்வி என்றால் பெண்களுக்கு வராது, வெளியே சென்று தொழில் செய்ய பெண்களுக்கு முடியாது என்று பெண்களைப் பூட்டி வைத்திருந்தது எங்கள் சமூகம்.
இந்த அடக்குமுறையிலிருந்து படிப்படியாக  பெண்கள் விழித்தெழுந்தார்கள். இன்று கல்விக்கான சமவாய்ப்பினைப் பெற்றுவிட்டார்கள். எங்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியாகும் பட்டதாரிகளில் சராசரி 57 சதவீதமானவர்கள் பெண்கள் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அது மட்டுமல்லாது பெண்கள் வெளியே போய் வேலை செய்வது மட்டுமன்றி கடல் கடந்து வெளிநாடுகளுக்குச் சென்றும் வேலை செய்கிறார்கள். எங்கள் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதல் மூன்று தொழிற்றுறைகளிலும் பெரும்பான்மையாக உழைப்பது பெண்களே. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில், ஆடைத்தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் என இந்த மூன்று முக்கிய துறைகளிலும் பெண்களின் உழைப்புத்தான் பிரதானமாக இருக்கின்றது. எனவே, எங்கள் நாட்டில் பெண்கள், குடும்பங்களின் கண்களாக மட்டுமன்றி, நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் திகழ்கின்றனர்.
இப்படியெல்லாம் திகழ்ந்தென்ன? எங்கள் அரசியல் களத்தை எடுத்துக் கொண்டால் அதில் பெண்களைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். 1948ல் நாங்கள் சுதந்திரம் கண்ட நாள்முதல் இன்று வரை எங்கள் பாராளுமன்றத்தில் 5 வீதத்திற்கு மேலாக பெண்கள் இருந்ததில்லை. எங்கள் உள்ளுராட்சி மன்றங்களிலோ 2 வீதத்திற்கு மேலாக இருந்ததில்லை. இதற்கு, எங்கள் இலங்கை நாட்டில் 1931ம் ஆண்டே பெண்கள் உட்பட சகலருக்குமான வாக்குரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுவிட்டது. இன்றும்கூட பெண்கள்தான் அதிகூடிய வாக்காளர்களாக ஒவ்வொரு தேர்தல்களிலும் அவதானிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படியானால், பெண்களின் உழைப்பு வேண்டும்;. அவர்களின் வாக்குகள் வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் அரசியல் பதவிகள் மட்டும் அவர்களுக்கு வேண்டாமா? இது நியாயமா என்று நீங்கள் யோசித்துச் சொல்லுங்கள்.
பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கான தடைகள்
பெண்கள் அரசியலில் பங்குபற்றுவதற்கு மதம், பாரம்பரியம், சமூகம், பொருளாதார நிலை போன்ற சகல தடைகளும் உண்டு. அவையாவன,.
1. வீடுதான் பெண்களுக்கான இடம் என்று எங்கள் சமூகம் கருதுகின்றது. அதனால் பகிரங்க இடமாகிய அரசியலுக்குள் அவர்கள் நுழைவதைத் தடை செய்கின்றது. இதற்காகப் பல காரணங்களைக் காட்டுகின்றது. குடும்பத்தைக் கவனிக்கவேண்டும் என்கின்றது. ஒரு பெண்ணைப் போலவே ஒரு ஆணுக்கும் குடும்பம் தேவைதான். இதில் ஆணுக்கு மட்டும் குடும்பப் பொறுப்புக்கள் எதுவும் இருக்காதது ஏனோ? 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?' என்று சொல்லித்தான் அவர்களுக்கு கல்வியுரிமையை எங்கள் சமூகம் மறுத்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். குடும்பப் பொறுப்பைக் காரணம் காட்டித்தான் முன்பு வெளியில் சென்று தொழில் செய்யவும் விடவில்லை. இதிலிருந்து இது நொண்டிச் சாக்கு என்பதை அறிந்து கொள்ளலாம்.

2. அரசியலில் ஈடுபடுவதென்பது, நீண்ட நேரத்தைச் செலவழிக்க வேண்டிய விஷயமாகும். கூட்டங்களில் கலந்து கொண்டும், மக்களைச் சந்தித்துக் கொண்டும் திரியவேண்டும். இதைச் செய்வதற்கு குடும்ப ஒத்தாசை நிறையவேண்டும். அது குறிப்பாக குடும்பத்தின் ஆண் அங்கத்தவர்களிடமிருந்து கிடைப்பதில்லை. ஏனெனில், பெண்கள் அதிகாரபூர்வ பதவிகளில் அமர்வதை அனேகமாக அவர்களின் குடும்பத்து ஆண்கள் நேரடியாகவோ இரகசியமாகவோ வெறுக்கிறார்கள். அதிகாரம் கிடைத்தபின்பு தங்களை மதிக்க மாட்டார்களே என்கின்ற பயந்தான் இதற்குக் காரணம்.

3. வெளியில் திரிய விடாமல் வளர்க்கப்பட்டதனால், பெண்களுக்கும் வெளியுலகைப் பற்றிய அனுபவம் குறைவு. அத்துடன் அரசியல் விடயங்களில் ஆர்வத்துடன் வளர்க்கப்படும் பெண்கள் மிகக்குறைவு. எங்கள் மத்தியில் எத்தனை பெண்கள் கிரமமாக பத்திரிகை வாசித்து ரேடியோவில் செய்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்?. ஆனால் ஆண்களைப் பாருங்கள். அவர்கள் எந்த நேரமும் அரசியல் பேச்சுத்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். தங்களுக்குத் தெரியாது, சமாளிக்க முடியாமல் போய்விடும் என்கின்ற காரணத்திற்கும் பெண்கள் தாங்களே பயந்து அரசியலுக்குள் நுழையத் தயங்குகிறார்கள்.

4. இன்று எங்கள் நாட்டின் அரசியல், வன்முறை நிறைந்த விடயமாக மாறிவிட்டது. தேர்தல் என்றால் குத்து வெட்டு சூடு என்று அர்த்தமாகி விட்டது. குண்டர்கள் இல்லாமல் அரசியல் பண்ணவே முடியாத நிலை. இதற்குப் பயந்தும் பெண்கள் ஒதுங்குகிறார்கள். ஆனால், பெரும்பாலும் அமைதியான அணுகுமுறை கொண்ட, அதிகார ஆசையும் போட்டிகளும் அதிகம் கிடையாத பெண்கள் இல்லாதபடியினால்தான் எங்கள் அரசியல் கலாசாரம் இவ்வளவு சீரழிந்து போயிருக்கின்றதென்பதை யாரும் உணர்வது கிடையாது. எங்கள் நாட்டின் அரைவாசி அரசியல்வாதிகள் பெண்களாக இருந்தால் அரசியல் உறவுகள் எப்படி இருக்குமென்று சும்மா கற்பனை பண்ணிப் பாருங்களேன்.  

5. அரசியலில் ஈடுபடுவதற்கு நிறையப் பணம் தேவை. பிரச்சாரத்திற்குக் கொஞ்சம் பேரை வேலைக்கு அமர்த்த வேண்டும், போஸ்டர் அடிக்க வேண்டும், விளம்பரங்கள் செய்ய வேண்டும், பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.  இதற்குத் தேவையான  முதல் எல்லாம் ஆண்களின் கைகளில்தான் இருக்கின்றன. பெரிய முதலாளி என்றால், அல்லது பெரிய தொழிலதிபர் என்றால், அல்லது பெரிய பிஸ்னஸ்மேன் என்றால் உங்கள் மனக்கண்களில் தெரிபவர்கள் யார்? ஆண்கள் அல்லவா? அத்தகைய பணக்காரர்கள்தான் பின்பு அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். இந்தப் போட்டியிலும் பெண்கள் அடிபட்டுப்போய்விடுகிறார்கள்.

6. கற்பொழுக்கம் பெண்கள் மீது மட்டும்தான் எங்கள் சமூகத்தினால் சுமத்தப்படுகின்றது. அந்த ஒழுக்கத்தில்தான் அவர்களின் குடும்ப கௌரவமும் தங்கி நிற்கின்றது எனக் காட்டப்படுகின்றது.  இதை மீறும் பெண்களை அவர்கள் குடும்பமும் எங்கள் சமூகமும் ஒரேயடியாக ஒதுக்கி வைத்து விடும். இதனால் எமது பெண்கள் சமூகத்துக்குப் பயந்தவர்களாக வாழ்கின்றார்கள். இந்த நிலையில் அவர்களை ஒரே அடியில் வீழ்த்துவதற்கு அவர்களின் ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் கதைத்தால் போதும். உடனேயே அவர்களின் குடும்பம் 'நீ அரசியலில் இறங்கியதும் போதும் எங்கள் மானம் பறந்ததும் போதும்..' என்று சொல்லி வீட்டில் உட்கார்த்தி விடுகின்றது. இதனால்தான் பெண்கள் அரசியலில் இறங்கும் அனேகமான சந்தர்ப்பங்களில் அவர்களின் சொந்த வாழ்ககையின் ஒழுக்கத்தைப் பற்றிய கீழ்த்தரமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதே நேரம் ஆண் அரசியல்வாதிகள் ஒருவித வெட்கமுமில்லாமல் வைப்பாட்டிகள் வைத்துக் குடித்துக் கும்மாளமடிக்க முடியும். யாருக்குத் தெரிந்தாலும் அவர்களுக்குப் பாதகமில்லை.

7. அரசியல் அதிகாரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த போதைப்பொருள் போன்றது. அதை வைத்திருப்பவர்கள் யாரும் இலேசில் அதனை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஆண்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெண்கள் கைகளில் கொடுப்பதற்குத் தயங்குவதும் இதே காரணத்தினால்தான். எங்கள் நாட்டில், குறிப்பாக ஆட்சிக்கு வரக்கூடிய பிரதான கட்சிகளை, பெண்களை வேட்பாளர்களாகப் போடவைப்பதே மலைப்பான காரியமாகும். அவர்களை அப்படியே வேட்பாளர்களாகப் போடவைத்தாலும், பின்பு வாக்குகள் எண்ணும் இடத்திலேயோ அல்லது விருப்பு வாக்குச் சீட்டுக்கள் விழும் இடத்திலேயோ மோசடி செய்து வாக்கு மாறாட்டம் பண்ணி விடுகிறார்கள் ஆண் அரசியல்வாதிகள். அங்குள்ள பெண் வேட்பாளர்களோ ஏமாந்து உதவியற்று நிற்கின்றார்கள். எந்த உரிமையையும் போராடித்தான் மனிதர்கள் பெற்றார்கள். பெண்களுக்கான வாக்குரிமைக்கு அந்தக் காலத்தில் எங்கள் பூட்டிமார்கள் எவ்வளவு போராடினார்கள் தெரியுமா? அதே போல அரசியல் பங்கெடுப்பிற்கான உரிமையையும் போராடிப் பெறுவதற்கான தெம்பு எங்கள் பெண்கள் மத்தியில் இன்னும் வரவில்லை.

8. மத நம்பிக்கைகளும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு சிலசமயங்களில்  தடையாகின்றன. இந்த நிலைமை அனேகமாக வேதங்களை மதத் தலைவர்கள் எவ்வாறு அர்த்தம் கற்பிக்கின்றார்கள் என்பதிலேயே தங்கியிருக்கின்றது. மதத் தலைவர்களெல்லோரும் ஆண்களாக இருப்பதனால், அவர்கள் தங்களுக்கு சாதகமாகவே வேதங்களுக்கும் பொருள் கொடுப்பது சாத்தியமாகும்.
எனவே, அரசியலில் பெண்களின் பங்கேற்றலுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று நாம் நம்பினால், மேற்கூறிய ஒவ்வொரு தடையையும் தகர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்குண்டு. இவற்றை ஒரேயடியாகத் தகர்ப்பதற்கு, ஆசன ஒதுக்கீடுகள் உதவுகின்றன. இத்தனை பெண்கள் பாராளுமன்றத்திலேயோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களிலேயோ கட்டாயமாக அமரவேண்டும் என்பது சட்டபூர்வமாகக் கொண்டுவரப்பட்டால், அரசியல் கட்சிகள் வேறு வழியின்றி யாரையாவது பெண்களை அமர்த்தியேயாகவேண்டும். ஆரம்பத்தில் ஆண் அரசியல்வாதிகளின் உறவினர்களாகத்தான் இந்தப் பெண்கள் இருக்கக்கூடும் என்றாலும்கூட, பெண்கள் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் வழக்கம் நாள் செல்லச் செல்ல அதிகளவு பெண்களை அரசியலுக்குள் இழுக்கும். எந்த மாற்றம் வேண்டுமென்றாலும் சமூகத்தை முதலில் அதற்குப் பழக்கப்படுத்தவேண்டும், அவ்வளவுதான்.
நாங்கள் முன்பு பார்த்ததுபோல, உள்ளுராட்சி மன்றங்கள் மக்கள் பங்கேற்கும் ஜனநாயக முறைக்கான முக்கிய அங்கங்கள் என்பதனால், அவற்றிலே பெண்கள் பங்குபற்றுவது மிக அவசியமாகின்றது. எனவே, எதுதான் இல்லையென்றாலும், உள்ளுராட்சி மன்றங்களிலாவது பெண்கள் சரிசமமாகப் பங்குபெறுவதற்காக நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உழைக்க வேண்டும்.

கலந்துரையாடலுக்கான கேள்விகள்

1. நீங்கள் வளரும் பருவத்தில் உங்கள் குடும்பத்தில் யார் அரசியல் ஆர்வத்துடன் இருந்தார்கள் என்பதை உதாரணக்கதைகள் கொண்டு விளக்க முடியுமா?

2. அரசியல் மாற்றத்தினால் உங்கள் வாழ்க்கை மாறிப்போன ஏதாவதொரு சம்பவத்தைக் கூறுங்கள். அவ்வாறாயின், அரசியலை எவ்வளவு முக்கிய அம்சமாகக் கருதுகின்றீர்கள்? அதில் நீங்கள் ஈடுபடுவது முக்கியம் என்று நிiனைக்கிறீர்களா?

3. இங்கு குறிப்பிட்ட தடைகளைவிட வேறேதும் தடைகள் பெண்களுக்கு உண்டா?

4. உங்கள் ஒவ்வொருவருக்கும் எற்பட்ட அரசியல் அனுபவங்களைக் கூறுக. அதில் நீங்கள் பங்காளர்களாகவா அல்லது பார்வையாளர்களாகவா இருந்தீர்கள்? ஏன்?

5. மாற்றங்களின் தன்மை பற்றி இங்கே ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதைப் பற்றி உமது அபிப்பிராயம் என்ன?

6. பெண் பிரதிநிதிகளுக்கான ஆசன ஒதுக்கீடு அவசியம் என்று நினைக்கிறீர்களா?

7. பெண்களை அரசியலில் பங்குபெறச் செய்வதற்கு உங்கள் பிரதேசத்தில் என்னென்ன பணிகளைச் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஓன்றொன்றாக விவரிக்க

8. இது தொடர்பாக நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடிய  நடவடிக்கைகளை முதலிலிருந்து முன்னுரிமைப்படுத்தி எல்லோரும் பார்க்கும் வண்ணம் எழுதி எடுத்துக்கொள்ளுக.

9. ஆரம்பிக்கவேண்டிய நடவடிக்கைகள் என்று நீங்கள் குறிப்பிடும் நடவடிக்கைகளை உங்களில் யார் எப்போது செய்து முடிக்கப்போகிறீர்கள்? ஓவ்வொருவரும் உங்கள் சொந்த நடவடிக்கைத் திட்டத்தினைப் போடுங்கள். அதை ஒவ்வொருவராகவோ பலராகவோ செய்து முடிக்கலாம். உங்கள் அடுத்த வாசகர் வட்டக் கலந்துரையாடலில், நீங்கள் சொன்ன விடயங்களெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறீர்களா என்று நிறுவவேண்டும் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.








இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 17வது திருத்தச் சட்டமும் நிலைபேறான சமாதானமும்



அறிமுகம் 
இலங்கையில் வாழும் சகல இனங்களும் குழுமங்களும் பங்குகொள்ளும் ஜனநாயகத் தன்மை பொருந்திய ஒரு அரசினைத் தாபிப்பதன் மூலமே நிலைபேறான சமாதானத்தை நாங்கள் கட்டியெழுப்பலாம். அப்படியானதொரு அரசைப் பற்றிய தெளிவான தரிசனத்துடன் எங்கள் மக்கள் ஒரு நீண்ட கால நோக்கில் குறி தவறாது வேலை செய்வதனால் மட்டுமே அதை நாங்கள் அடையலாம். இந்தத் தரிசனம், சகல மக்களையும்; எந்தவித பேதமுமின்றிப் பரிபாலனம் செய்யும்; ஒரு அரசியலமைப்புச் சட்டத்தின் உருவம் பற்றியும், அது இயற்றும் அரசியல் கட்டமைப்புக்களின் பண்பாடு பற்றியும், எங்கள் நீதித்துறை பற்றியும் இருக்கவேண்டும்.
அரச நிர்வாகத்தில் கட்சி அரசியலைக் களைந்து அது நடுநிலையாக சகல மக்களுக்கும் சேவையாற்றும் வகையில் செய்வதே மேற்கூறிய நிலையை அடைவதற்கான முதல் படியாகும். எங்கள் நாட்டில் 1972ம் ஆண்டுதான் அரச நிர்வாகம் அமைச்சரவைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பிறகு அரச உத்தியோகத்தர்களின் சகல நடவடிக்கைகளிலும் அவர்களின் நியமனம், மாற்றல்களிலும் அரசியல்வாதிகள், குறிப்பாக அமைச்சர்கள், தலையிடும் நிலைதான். இதன் விளைவாக எங்கள் அரச துறையில், ஊழலும், தகுதியற்றவர்களின் நியமனங்களும் அதன் காரணமான திறன் விரயமும், மற்றும் வேலை வெளியீடு குறைந்த தன்மையும் அதிகரிக்கலாயின. இப்படி அடிப்படைப் பிரச்சினை இருக்கும்போது, சும்மா நீதியான தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்றோ, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படவேண்டுமென்றோ, ஊழல் ஒழியவேண்டுமென்றோ, எவ்வளவு பேசியும் பயனில்லை. இக்குற்றங்களுக்கெதிராக வழக்குப் போட்டு நீதி மன்றத்திற்குச் சென்றாலோ அங்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள்தான் விசாரணைக்கு அமர்ந்திருக்கிறார்கள். அநியாயம் நடப்பது மட்டுமல்ல, அதனைத் தட்டிக் கேட்பதற்கும் இன்று எங்கள் நாட்டில் வழியில்லாமல் போய்விட்டது.    
இதற்காகத்தான் எங்களது நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் 17வது திருத்தம் 2004ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திருத்தம் தற்போதைய அரசு கட்டமைப்பில் ஜனாதிபதிப் பதவியினால் அனுபவிக்கப்படும் அளவு கடந்த அதிகாரங்களையும் அமைச்சரவையின் கூடுதல் அதிகாரங்களையும் மட்டுப்படுத்தி சமநிலைப்படுத்த எத்தனித்த ஒரு சிறிய முயற்சியாகும். அது, அரச நிர்வாகமானது அமைச்சரவையின் கீழிருந்து (ஜனாதிபதியின் கீழிருந்தும் என்றும் வாசிக்கலாம்) எடுக்கப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட சுயாதீன 'பொதுச் சேவைகள் ஆணைக்குழு', 'பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு', 'நீதித்துறை ஆணைக்குழு' என்பனவற்றின் கீழ் கொண்டுவரப்படவேண்டும் என்று பணித்தது. அரசியல்வாதிகளின் பொம்மைகளாக இருக்காத அரச நிர்வாகிகள் செயற்படுவதற்கான தளம் அமைக்கப்படவேண்டுமென்று இறுதி நோக்கம் கொண்டது.
ஆனால், எங்களது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அம்சமாக இருந்துள்ளபோதிலும், 17வது திருத்தத்தின் அமுலாக்கம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. அதனை செயற்படுத்துவதற்கு எங்கள் அரசாங்கம் தயக்கம் காட்டி வருகின்றது. இதனால், 17வது திருத்தச் சட்டம் என்றால் என்ன என்பதை நாமெல்லோரும் அறிவது முக்கியமாகின்றது.   
17வது திருத்தம் என்ன கொண்டிருக்கின்றது?; 
 அரச இயந்திரத்தின் முக்கிய பதவிகளின் நியமனங்களைத் தீர்மானிப்பதற்காக அமைக்கப்படும் அரசியலமைப்புச் சபைதான் 17வது திருத்தத்தின் பிரதான அம்சமாகும். இதன் அங்கத்துவம் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கும் சகல கட்சிகளினாலும் தீர்மானிக்கப்படும். அரசியலமைப்புச்சபை எடுக்கும் தீர்மானங்களெல்லாமே கலந்துரையாடல் மூலமும் முற்றான இணக்கப்பாட்டுடனும் எடுக்கப்படவேண்டுமென விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானங்களை ஜனாதிபதி செயற்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர, குறிப்பிடப்பட்ட வௌ;வேறு ஆணைக்குழுக்களின் பொறுப்புக்கள் என்ன என்பதையும் இது வரையறுக்கின்றது. 
அ. அரசியலமைப்புச் சபை
பிரதமமந்திரி, பாராளுமன்ற சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒருவர், பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் தரும் சிபாரிசுகளின் அடிப்படையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐவர், பிரதம மந்திரியும் எதிர்க்கட்சித் தலைவரும் இல்லாத ஏனைய அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் சுயேச்சை உறுப்பினர்களினாலும் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒருவர், என இவர்களே அரசியலமைப்புச் சபையின் அங்கத்தவர்களாவார்கள்.
பின்வரும் வகையான நியமனங்கள், ஜனாதிபதியினால் சிபாரிசு செய்யப்பட்டு அரசியலமைப்புச் சபையின் முழு அங்கீகாரத்துடன்தான் மேற்கொள்ளப்படவேண்டும் என இத்திருத்தச் சட்டம் கோருகின்றது: 
1. தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் ஊழல்களை ஆராயும் நிரந்த ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லைகள் நிர்ணயிக்கும் ஆணைக்குழு போன்ற சகல ஆணைக்குழுக்களினதும் அங்கத்தவர்கள் 
2. உயர் நீதிபதியும் உயர் நீதிமன்றத்தின் ஏனைய நீதிபதிகளும், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவரும் நீதிபதிகளும், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் தவிர்ந்த அங்கத்தவர்கள்
3. சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், ஐஜிபி (பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்), பாராளுமன்ற நிர்வாக ஆணையாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம்.
ஆ. பொதுச்சேவைகள் ஆணைக்குழு
1. இது 9 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும். அவர்களில் குறைந்தது 3 பேர்கள் அரச நிர்வாகத் துறையில் குறைந்த பட்சம் 15 வருடங்கள் அனுபவம் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இதன் தவிசாளரை சபையின் சிபாரிசுடன் ஜனாதிபதி நியமிப்பார். இது, பாராளுமன்றத்திற்கே பொறுப்புக் கூற வேண்டியது. வருடாவருடம் தனது நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கும். 
இவ்வாணைக்குழுவின் பொறுப்புக்களாவன,
2. திணைக்களத் தலைமைகள் தவிர்ந்த சகல அரச உத்தியோகத்தர்களினதும் நியமனங்கள், மாற்றல்கள், பதவியேற்றங்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், வேலை நீக்கங்கள் அனைத்தும் ஆணைக்குழுவே தீர்மானிக்கும். திணைக்கள அதியுயர் அதிகாரிகள் தொடர்பான தீர்மானங்களெல்லாம் ஆணைக்குழுவின் ஆலோசனையின்பேரில் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்படும்.
3. ஒவ்வொரு மாகாணத்திற்கும் இவ்வகையான மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு இருந்து மாகாணசபையின் அதிகாரத்திற்குட்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும். அத்துடன் மாகாண சபைகளுக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்.
ஆயினும், அரச உத்தியோகத்தரின் பணிகள் தொடர்பான சகல கொள்கைகளும் அமைச்சரவையினால் வரையப்படவேண்டும் என்பதைக் கவனிக்க.
ஆ. தேர்தல் ஆணைக்குழு
இதில் அரசியலமைப்புச் சபையினால் சிபாரிசு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் 5 அங்கத்தவர்கள் பதவி வகிப்பர். இவர்கள் நிர்வாகத்துறையிலோ கல்வித் துறையிலோ அல்லது வேறெந்தத் துறையிலுமோ பெயர் பெற்றவர்களாக இருக்கவேண்டும். இதன் தவிசாளரை சபையின் சிபாரிசுடன் ஜனாதிபதி நியமிப்பார். நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களையும் வாக்குக்கணிப்புக்களையும் நடத்துவதே இவ்வாணைக்குழுவின் நோக்கமாகும். இது பாராளுமன்றத்திற்கு மட்டுமே பொறுப்புக் கூறும் அதிகாரங்கள் கொண்டது. வருடாவருடம் தனது நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும். 
இதன் பொறுப்புக்களாவன,
1. சகல வகைத் தேர்தல்களையும் நடத்துதல்
2. வாக்காளர் பதிவேடுகளைத் தயாரித்தலும் பேணுதலும்
3. தேர்தல்களின்போதான சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்தல், அதற்கான ஒத்துழைப்பினை சகல படையினரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளல்
4. தேர்தல்களின்போது அரசுக்குச் சொந்தமான எந்த அசையும் அசையாச் சொத்துக்களையும் தேர்தல் பிரச்சார விடயங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்
5. தேர்தல் நடவடிக்கை தொடர்பான எந்த நெறிப்படுத்தலையும் எந்த ஊடகங்களினூடாகவும் அறிவித்தல்
6. பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தேவைகளைத் தெரிவித்தல். தேர்தல்களின்போது தேர்தல் ஆணைக்குழுவின் நெறிப்படுத்தலின்கீழ் பொலிஸ் ஆணைக்குழுவும் பொலிஸ் உத்தியோகத்தர்களும்  இயங்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கின்றது. தேர்தல் ஆணைக்குழு விதிக்கும் கடமைகளைச் செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கெதிராக எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்க இயலாது என்பதும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
7. தேர்தல்களை முறையாக நடத்துவதற்கு ஆயுதப்படையினரின் சேவைகளையும் இவ்வாணைக்குழு கோரலாம். இதனை ஜனாதிபதிக்கு விடும் சிபாரிசு மூலம் செய்யலாம்.
இ. நீதிச் சேவைகள் ஆணைக்குழு
இது உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசரையும் வேறு இரு நீதிபதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். பிரதம நீதியரசர் இதற்கு தவிசாளராக இயங்குவார்.
இதன் பொறுப்புக்களாவன, 
1. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாற்றல் விவகாரங்கள்
2. நீதிச் சேவை உத்தியோகத்தர்களின் நியமனங்கள், மாற்றல்கள், பதவியுயர்வுகள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், வேலை நீக்கங்கள் போன்றவற்றைத் தீர்மானித்தல்
3. இவர்கள் எல்லோருக்குமான பயிற்சி, திறனாய்வு போன்ற விடயங்களைத் தீர்மானித்தல் 
 ஈ. பொலிஸ் சேவைகள்; ஆணைக்குழு
இது 7 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும். இதன் தவிசாளரை சபையின் சிபாரிசுடன் ஜனாதிபதி நியமிப்பார். பொதுச் சேவைகள் ஆணைக்குழுவைப்போலவே இவ்வாணைக்குழுவின் அதிகாரங்களும் மாகாண பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரம் தொடர்பாக மட்டுப்படுத்தப்படும். இதன் பொறுப்புக்களாவன,
1. ஐஜிபியுடன் ஆலோசித்து, சகல பொலிஸ் உத்தியோகத்தினரதும் நியமனங்கள், பதவியுயர்வுகள், மாற்றல்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகள், மற்றும் வேலை நீக்கங்கள் போன்றனவற்றைச் செயற்படுத்துதல்
2. எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரைப் பற்றி பொதுமக்களிடமிருந்து வரும் முறைப்பாடுகளைப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுத்தல்
3. பொலிஸ் உத்தியோகத்தர்களின் பயிற்சி, திறன் விருத்தி போனறன தொடர்பான நடவடிக்கைகள் எடுத்தல் 
கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. எங்களுக்கு சுயாதீனமாக இயங்கும் ஆணைக்குழுக்களும், சுதந்திரமாக இயங்கக்கூடிய அரச உத்தியோகத்தர்களும் ஏன் தேவை? பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்து பார்க்க. அதை வைத்து உங்கள் விளக்கங்களை குழுவுக்கு முன்வைக்கலாம்.

சுயாதீனமாக இயங்கும் ஆணைக்குழுவினது அல்லது பொது உத்தியோகத்தரது பெயர் இதனால் அல்லது இவரால் ஏற்படும் பயன்கள்

தேர்தல் ஆணைக்குழு



பொதுச்சேவைகள் ஆணைக்குழு



தேசிய பொலிஸ் ஆணைக்குழு.



இலங்iகை மனித உரிமைகள் ஆணைக்குழு.



இலஞ்சம், ஊழலை விசாரணை செய்யும் நிரந்தர ஆணைக்குழு



நிதி ஆணைக்குழு



எல்லைகள் நிர்ணயிக்கும் ஆணைக்குழு



சட்டமா அதிபர்

கணக்காய்வாளர் நாயகம்

ஐஜிபி

பாராளுமன்ற நிர்வாக ஆணையாளர் 

பாராளுமன்ற செயலாளர் நாயகம்
2. ஏன் தற்போதைய ஜனாதிபதியும் அமைச்சரவையும், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக நடக்கவேண்டியிருந்தும்கூட, 17வது திருத்தச் சட்டத்தினை அமுலாக்கத் தயங்குகின்றனர் என்று நினைக்கின்றீர்கள்?

3. 17வது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவதற்கும் நிரந்தர சமாதானத்திற்கும் தொடர்புகள் இருக்கின்றனவா? அப்படி இருக்கின்றதாயின் அது எப்படித் தொடர்பாகின்றது என்பதை விளக்குக.

4. 17வது திருத்தச் சட்டம் செயற்படுத்தப்படுவது நன்மையாயின், அதை இந்த அரசாங்கம் செயற்படுத்த வைப்பதற்கு என்ன செய்யலாம்?

5. இது தொடர்பாக நாம் செய்யவேண்டிய, செய்யக்கூடிய  நடவடிக்கைகளை முதலிலிருந்து முன்னுரிமைப்படுத்தி எல்லோரும் பார்க்கும் வண்ணம் எழுதி எடுத்துக்கொள்ளுக.


6. ஆரம்பிக்கவேண்டிய நடவடிக்கைகள் என்று நீங்கள் குறிப்பிடும் நடவடிக்கைகளை உங்களில் யார் எப்போது செய்து முடிக்கப்போகிறீர்கள்? ஓவ்வொருவரும் உங்கள் சொந்த நடவடிக்கைத் திட்டத்தினைப் போடுங்கள். அதை ஒவ்வொருவராகவோ பலராகவோ செய்து முடிக்கலாம். உங்கள் அடுத்த வாசகர் வட்டக் கலந்துரையாடலில், நீங்கள் சொன்ன விடயங்களெல்லாம் செய்து கொண்டு வந்திருக்கிறீர்களா என்று நிறுவவேண்டும் என்பதை தயவு செய்து மறக்காதீர்கள்.



முடிவுரை
'மக்கள் எல்லோரும் தீர்மானம் எடுத்தலில் பங்கேற்க ஜனநாயக நடைமுறை வேண்டும். ஆனால் அந்த ஜனநாயக நடைமுறையைப் பேணுவதற்கு மக்கள் எல்லோரும் பங்கேற்க வேண்டும்..'       
இதுவரை நீங்கள் வாசித்த விடயங்களிலிருந்து அறிந்து கொண்டதை சுருக்கமாகக் கூறினால், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், பெற்றார், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கணக்காய்வாளர்கள் போன்ற இத்தனை பேர்களும் சேர்ந்து செயற்பட்டால்தான் ஜனநாயகத்தைப் பேணலாம். பார்க்கப் போனால்,  இந்த மக்கள் குழுவினர் எங்கள் சமூகம் முழுவதையும் உள்ளடக்குகின்றனர் அல்லவா? 
ஏதைப் பெறுவதற்கும் நாம் ஒரு விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். பரீட்சையில் திறமையான சித்தி கிடைப்பதற்கு இரவும் பகலும் கடுமையாகப் படிக்க வேண்டுவதே நாம் கொடுக்கும் விலையாகும். அதே போல் நிறையப் பணம் சம்பாதிப்பதற்கு நாம் கடும் உழைப்பை விலையாகக் கொடுக்கின்றோம். இதேபோலத்தான் சுதந்திர ஜனநாயகத்தை நாம் பெறுவதற்குக் கொடுக்கவேண்டிய விலை எந்நேரமும் விழிப்பாக இருப்பதே என்று ஒரு அறிஞர் கூறினார். எனவே பொதுவில் நடப்பதை அறிய முயற்சி செய்யாது, ஒன்றும் தெரியாத அசட்டு மனிதர்களாக நாம் வாழும்போது எங்கள் வாழ்க்கையையே நாமே பாழாக்குகின்றோம்.   




கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. குழு அங்கத்தவர்களெல்லோரும் 'நியாயம்', 'அநியாயம்', 'மனித மாண்பு' இவையெல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தந்து அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் தெளிவாக்கிக்கொள்க.
2. எங்கள் நாட்டில் சமீப காலங்களில் மனித உரிமைகள் பேணப்பட்டனவா இல்லையா என்பதை உங்கள் அனுபவங்களைக் கொண்டு விளக்குங்கள். இதில் நீங்கள் கண்டது, பிறர் சொல்லக் கேட்டது, பத்திரிகையில் வாசித்தது, என்பவற்றை அடக்கலாம். நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு உரிமையும் மனித உரிமைகளின் எந்த வகையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா?

3. உங்களது கிராமத்தவர்களினால் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் உண்டா?


4. 'ஜனநாயகம்', மனித உரிமைகள்', 'சட்டங்கள்', இவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்ன? 

5. ஏங்களது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா இல்லையா? எப்படிப் பாதுகாக்கக்படுகின்றது? எப்படி மீறப்படுகின்றது?


6. ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க நீங்கள் என்னென்ன செய்யலாம்?
  
7. ஏந்த நடவடிக்கையோடு ஆரம்பிப்பீர் என்பதை ஒவ்வொருவரும் விளக்கி அதற்கான உபாயங்களைக் கலந்துரையாடி குறித்துக் கொள்க.

ஜனநாயகமும் மனித உரிமைகளும்;



மனித மாண்பு
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரேயொரு வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுவார்கள். அந்த வித்தியாசம்தான் மனிதர்களுக்கு இருக்கும் ஆறாவது அறிவான பகுத்தறிவு என்று கருதப்படுகின்றது. இந்தப் பகுத்தறிவு என்ன தன்மையானது என்று பார்த்தால், நியாயம் எது அநியாயம் எது, சரி எது பிழை எது என்று பகுத்துப் பார்த்து உணர்ந்து அதைப்போல நடக்கவைக்கும் மூளையின் செயற்பாடு என்று சொல்லலாம். இந்த வரைவிலக்கணத்தை நாங்கள் ஒத்துக்கொள்வோமானால்;, நியாயம், அநியாயம், சரி, பிழை என்பவற்றை எந்த அளவு கோலை வைத்துக் கொண்டு நாங்கள் தீர்மானிக்க முடியும் என்ற கேள்வியே உதிக்கின்றது. ஏதை நியாயம் என்று நாங்கள் சொல்லுகின்றோம்? ஏன்?
இந்தக் கேள்விக்குப் பதில் தேடும்போதுதான் மனித மாண்பு என்கின்ற விடயத்தை நாங்கள் விளங்கிக் கொள்ள வேணடியதாகிறது. மாண்பு என்பது, சுய கௌரவம், பரஸ்பர மரியாதை, சுய ஆளுமை போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கும் சொல்லாகும். மனிதர்களாகப் பிறந்திருக்கும் நாங்கள் மாண்புடன் வாழவேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதர்கள் ஆவோம், இல்லாவிடில் மிருகங்களுக்கு சமனாவோம். எனவே, நாம் நியாயம் என்று கூறுவது மனித மாண்பினை உயர்த்தும் வலுப்படுத்தும் சகல விடயங்களையும் குறித்துத்தான். நாம் அநியாயம் என்று சொல்லுவது மனித மாண்பினை அழிக்கும் சகல விடயங்களையுமே.
உதாரணமாக, மனிதர்களை மரியாதை கூடிய மேம்பட்ட வாழ்க்கையைக் கொடுக்கும் கல்வி யாருக்காவது கிடைக்காவிடில் அதை அநியாயம் என்று கூறுகின்றோம் இல்லையா? ஒருவர் சுதந்திரமாக தனது கருத்தினைக் கூறும் பேச்சுச் சுதந்திரம் இல்லாவிடில் அதையும் அநியாயம் என்கின்றோம் இல்லையா? ஒருவர் சுதந்திரமாகச் சிந்திக்கவும் பேசவும் பங்குகொள்ளவும் கல்வி கற்கவும்தான் அவருடைய மாண்பு அங்கு நிலைப்படுகின்றது. ஆகவே, நாம் ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்பதனால் மாண்புடன் வாழக் கடமைப்பட்டவர்கள் என்றும் சொல்லலாம். அதைத்தான் நீதி என்றும் நியாயம் என்றும் மனிதகுலம் கருதுகின்றது.
மனிதர்கள் மாண்புடன் வாழ வழி செய்யத்தான் ஜனநாயகம், மனித உரிமைகள் என்கின்ற இந்த இரண்டு கருத்தோட்டங்களும் உலகத்தில் உருவாயின. ஏந்த இடத்திலும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் இல்லாவிட்டால் அங்குள்ள மக்கள் மாண்புடன் வாழ முடியாது, அவர்கள் விலங்குகள் போலத்தான் வாழ வேண்டும். இதனால்தான் சுயமரியாதையுடன் வாழ விரும்பும் எவரும் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பேணுவதற்காக உழைத்தல் அவசியமாகின்றது. இந்த இடத்தில், ஒரு கேள்வி எழுகிறது. மனிதர்கள் மாண்புடன் வாழவே பிறந்தவர்கள் என்றால், ஏன் அவர்கள் அப்படி வாழும் வாழ்க்கையை நாம் பிரத்தியேகமாகப் பாதுகாக்க வேண்டியிருக்கின்றது? இதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் இங்குதான் அரசு என்கின்ற விஷயத்துக்கு வருகின்றோம்.
அரசு என்றால் மனிதர்களை ஆட்சி செய்வதற்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட இயந்திரம் என்று சொல்லாம். பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் எல்லோரும் ஒரு ஒழுங்கு முறையுடன் வாழவேண்டுமானால் அங்கு அவர்களுக்கு ஒரு அரசு தேவைப்பட்டது. இந்த அரசு காலத்துக்குக் காலம் உருவத்தில் மாறி வந்திருக்கின்றது. முன்னர் இராசாக்கள் ஆண்டார்கள். அவர்கள் காலத்துக் கதைகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்தானே. 'யாரங்கே! இவன் தலையைச் சீவிக் கொன்று விடுங்கள்!!' என்று இராசா கட்டளையிட்டால் அது நிறைவேற்றப்பட்ட காலமும் இருந்தது. இந்த அமைப்பின்கீழ் மனித மாண்பு எவ்வளவு சிதைந்து போனது என்பதைச் சொல்லத்தேவையில்லை. இந்த நடைமுறை அநியாயம் என்று மனிதர்கள் கருதியதால்தான் இந்த முறையை மாற்றிக்கொண்டு புதிய அரசு முறைகளைக் கொண்டு வந்தார்கள்.
இதற்குப் பின்பான காலத்தில்தான் தேர்தல்கள் மூலம் மக்கள் தெரிவு செய்கின்ற பிரதிநிதிகள் ஆளும் அரசாங்கம் நடைமுறைக்கு வந்தது. இன்று, இப்படிப்பட்ட 'மக்கள் அரசாங்கம்' என்று நாம் கூறுகின்ற அரசாங்கம் இருந்தும், எங்கள் நிலை கிட்டத்தட்ட அரசர் காலத்து நிலையாக இருக்கவே காண்கின்றோம். எங்கள் நாட்டை எடுத்துப் பாருங்கள். ஒரு விசாரணையும் நீதியுமின்றி எங்களில் எத்தனைபேர் துப்பாக்கிக்குப் பலியாகினர். இந்த சம்பவங்களில் அனேகமானவை எங்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசின் வேலையாகவும், ஏனையவை அரசு அல்லாத ஆயுதக்குழுக்களின் வேலையாகவும் நாம் காண்கின்றோம். இந்த ஆயுதக்குழுக்களை இயங்க வைப்பதிலும்கூட எங்களது அரசின் பங்கு கணிசமாக இருப்பதைக் காணலாம்.
இந்தப் பயங்கரவாத  சூழ்நிலையின் காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது, ஒரு சிலருக்கு அளவற்ற அதிகாரம் நிலைக்க வேண்டுமானால், ஏனைய மக்களெல்லோரும் தங்கள் மாண்பினை இழக்க வேண்டியது அவசியமாகின்றது என்பது இதிலிருந்து எங்களுக்குத் தெரிகின்றது. நாங்கள் ஒழுங்காக வாழுவதற்கு அரசு உதவுகின்ற அதே நேரத்தில், அதிலிருந்து கொண்டு எங்களை ஆள்பவர்கள் அளவற்ற அதிகாரங்களைத் தமது கைகளில் வைத்திருக்கவும் அரசு உதவுகின்றது. எனவேதான், அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, அது மக்களின் மேம்பாட்டுக்கும் மாண்பு மிகுந்த வாழ்க்கைக்கும் இயைபானதாக மாற்ற வேண்டும். இதற்கு, மக்களாகிய நாம் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் விசேடமாகப் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆதலினால்தான் நாம் ஜனநாயகத்தினதும் மனித உரிமைகளினதும் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வோம். இவை ஏன் எப்பொழுதும் அரசுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றது என்பதையும் விளங்கிக் கொள்வோம்.
மனித உரிமைகள்
மனிதர்களின் மாண்பினைப் பேண உதவும், அடிப்படையான விழுமியங்களை மனித உரிமைகள் என்று சொல்லுவோம். பிரதானமாக, மனித உரிமைகள் என்பனவை மனிதர் கொண்டிருக்கவேண்டிய விழுமியங்களே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவை பிறகு சட்டங்களாக அமுல்படுத்தப்படுகின்றன. மனித உரிமைகள் என்னும் கருத்தியல் ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவை ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் ஒன்றிணைந்து வாழ வழி செய்கின்றன.


மனித உரிமைகள் ஐந்து வகைப்படும்.
1) குடியுரிமைகள்
வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாக நடமாடுவதற்கு உரிமை, கருத்துச் சுதந்திரம், விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை, பிரசாவுரிமை, மனிதாபிமானமற்ற செயல்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை, சட்டத்தின் முன் சமவுரிமை போன்றவை குடியுரிமைகளாகும். இவற்றை ஆராய்ந்து பார்த்தீர்களானால், இவை தன்னிச்சையாக மனம் போன போக்கில் அரசு மக்களின்மீது தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க விடாமல் மக்களைப் பாதுகாக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
2) அரசியல் உரிமைகள்
அமைதியாக ஒன்று கூடும் மற்றும் சங்கம் அமைத்துக்கொள்வதற்கான உரிமை, தகவல்களைப் பெறும் உரிமை, சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை போன்றவை அரசியல் உரிமைகளாகும். இவை மக்கள் தங்களது சார்பில் ஆட்சி செய்வதற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வைக்கவும், அந்தப்பிரதிநிதிகள் ஆட்சியை சரிவர நடத்துகிறார்களாவென கண்காணிக்கவும், இந்த ஆட்சிக்கூடாகத் தங்கள் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கப் பங்களிக்கவும், வழிவகுக்கின்றன.
3) பொருளாதார உரிமைகள்       4) சமூக உரிமைகள்
பொருளாதார உரிமைகளும் சமூக உரிமைகளும் மக்கள் தகுந்த வாழ்க்கைத்தரத்தோடு கௌரவமாக வாழுவதை உறுதி செய்கின்றன. பட்டினியிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, வேலைக்குரிய தன்மானமான ஊதியத்தினைப் பெறுவதற்கு உரிமை, கல்வி சுகாதாரம் போன்ற பொது அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை, தொழிற்சங்க உரிமை, ஓய்வு பெற்றபின்னரோ அல்லது தொழிலை இழந்த தருணத்திலோ வாழ்க்கையைப் பாதுகாக்க உதவும் சமூகப் பாதுகாப்பிற்கான உரிமை போன்றன சமூக பொருளாதார உரிமைகளுக்குள் அடங்கும்.
பசியில் வாடுபவனுடன் அரசியல் கதைக்க முடியுமா? முதலில் பசியைத் தணித்து விட்டுத்தான் மிகுதிக்கதைகளைச் சொல்லலாம் இல்லையா? மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போதுதான் அவர்கள் தங்கள் குடியுரிமைகளைப் பற்றியோ அரசியல் உரிமைகளைப் பற்றியோ யோசிக்க முடியும் என்கின்ற கருத்தோடுதான் சமூக பொருளாதார உரிமைகள் பற்றிய கருத்து உருவாக்கப்பட்டது. தன்னுடைய மக்களுக்கு இந்த உரிமைகளையெல்லாம் உத்தரவாதப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு அரசுக்கும் உள்ளது.
4) கலாசார உரிமைகள்
கலாசார உரிமைகள் மனிதர்களின் உள ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவே கொண்டுவரப்பட்டன எனலாம். எல்லா மனிதர்களுக்கும் தங்களுடைய மொழி, பாரம்பரியங்கள், சடங்கு முறைகள், குல வழக்கங்கள் இவையெல்லாவற்றையும் அனுசரிக்கும் தேவைகள் உண்டு. அவ்வாறுதான் ஒவ்வொரு குழுக்களுடைய அடையாளங்கள் பேணப்பட்டு அவற்றுடைய பரம்பரைகள் பாதுகாக்கப்படுகின்றன. தூன் எந்த இனம், மொழி, மதம், பிரதேசம் நாட்டினைச் சேர்ந்தவர் போன்ற தன்னடையாளங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமாகின்றது. எனவே, மொழி, பாரம்பரியங்கள், சடங்கு முறைகள், குல வழக்கங்கள் போன்றவற்றைப் பின்பற்றும் உரிமைகள் வழங்கப்படுகின்றன.
கலாசார உரிமைகள் குழு உரிமைகள் என்னும் வகைப்படுத்தலுக்குக் கீழ் அடங்கும். யாராவது தனிமனிதனாக இருந்து தனது மொழி மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாக்க முடியுமா? உதாரணமாக, ஐஸ்லாந்தில் எஸ்கிமோக்கள் மத்தியில் ஒரு இலங்கைத் தமிழர் அல்லது இஸ்லாமியர் வாழ்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது மொழியையோ மதத்தையோ தொடர்ந்து பின்பற்றத்தான் முடியுமா? தன்னையொத்த மனிதர்கள் இருந்தால்தானே அவர்களுடன் தமிழில் உரையாடலாம், சேர்ந்து ஒரு பள்ளிவாசலைக் கட்டி தொழுகைக்குப் போகலாம்? எமது பண்பாட்டினைப் பின்பற்றுவதற்கு ஒரு சமூகம் தேவை. தனியே விட்டால் அவர்கள் எஸ்கிமோக்களின் வாழ்க்கையைப் பினபற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே கலாசார உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு அவற்றிற்கேயுரிய குழுமங்களின் இருப்பும் முக்கியமாகின்றது. அதேபோல மறுபக்கத்தில், அந்தக் குழு தொடர்ந்து இருப்பதற்கு கலாசார உரிமைகள் பாதுகாப்பது அவசியமாகின்றன. இதனால், மனித உரிமைகள் கோட்பாட்டில் தனிநபர் உரிமைகளைப் போலவே, குழு உரிமைகளும் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன. அக்குழுக்களின் பேரில்தான், அவை தமது விடயங்களைத் தாமே தீர்மானிப்பதற்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.
ஜனநாயகம்
மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களில் பங்கேற்க வகை செய்யும் அரசாங்கத்தின் நடைமுறையை ஜனநாயகம் என்று கூறுவோம். நடைமுறை என்பதோடு, இது ஒரு அரசியல் சித்தாந்தம் என்றும் விளக்கலாம். அதைவிட, இது மனித சமூகத்தின் இலட்சிய நோக்காகவும் ஒரு வாழ்க்கைப் பண்பாடாகவும் கருதப்படுகின்றது.
ஜனநாயகம், மக்களையும் அதிகாரத்தையும், இந்த இரண்டுக்கும் இடையிலான தொடர்புகளையும் நிர்ணயிக்கும் கட்டமைப்பாகும். அதிகாரம் என்பது ஒருவருக்கோ, ஒரு சிலருக்கோ மட்டுமல்லாமல், ஒரு நாட்டிலுள்ள சகலருக்கும் கிட்டும் வகையில் ஒழுங்கமைக்கப்படும் ஆட்சி முறையே ஜனநாயகம் ஆகும். இவ்வாறு சகலருக்கும் சமமாக ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அங்கு எல்லாருக்கும்,
அவர்கள் உடல் உடைமைகளுக்கு சம பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்
தம்முடைய வாழ்க்கையையும் தொழிற்றுறையையும் மேற்கொள்ள சம வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்
அரசியலில் பங்கெடுக்க சமவாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்
சட்டத்துக்கு அமைவான முறையில் தாங்கள் விரும்பிய கருத்துக்களைத் தெரிவிக்கவும், விரும்பியதை எழுதவும் அதன்படி நடக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும்
சுதந்திரமாகப் பொதுவில் கூட்டம் கூட அனுமதி வழங்கப்படவேண்டும்,
அமைப்புக்களாகவும் சங்கங்களாகவும் கட்சிகளாவும் இயங்கும் முழுச் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்
எழுந்தமானமான கைதுக்களிலிருந்தும் தடுப்புக்காவல்களிலிருந்தும், (கொலை அச்சுறுத்தல்களிலிருந்தும் கூட) பாதுகாப்பு வேண்டும்
மேலே கூறியவற்றிலிருந்து, ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமானால் அங்கு மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படவேண்டும் என்பது தெளிவாகின்றது. அதேபோல, மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் அதற்கு ஜனநாயகம் அவசியமாகின்றது என்பதையும் யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜனநாயகம் சரிவர இயங்குவதற்கு மூன்று நிபந்தனைகள் உண்டு. அவையாவன,
1) தகுந்த முற்போக்கான சட்டங்கள்
ஒரு நாட்டின் சட்டங்கள், அந்நாட்டிலுள்ள மனிதர்களெல்லோரும் இயங்கும் பொதுவிதிகளைக் குறிக்கின்றன. இவை கட்டாயமாக மனித உரிமைக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும். சட்டங்களை நாம் சரியாக அனுசரிப்பதால் எமது சமூகத்தில் ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றது, எல்லோருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கின்றது. சகல நிறுவனங்களும் நியாயத்தின் அடிப்படையில் இயங்க வழிசெய்யப்படுகின்றது. எல்லோரும் சமமாகப் பங்களிக்கவும் சமவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும் சட்டங்கள் உதவுகின்றன.
எந்தளவு அதிகாரமுள்ள அரசியல் தலைவரானாலும், ஒரு நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு முடியாது என்ற வகையில் அச்சட்டங்கள் சட்டத்தரணிகளாலும், நீதிபதிகளாலும், ஊடகவியலாளர்களாலும், படித்த சமூகத்தினாலும் பொது மக்களினாலும் பாதுகாக்கப்படவேண்டும். அத்துடன், அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான முறையில் சட்டங்களை மாற்றுவதையும் தடை செய்ய வேண்டும். மொத்தத்தில், சிறியதோ பெரியதோ, நாமெல்லாரும் சட்டத்தை மதித்து நடக்கப் பழக வேண்டும்.
2) நடுநிலையான சுதந்திரமான நீதித்துறை
எல்லோருக்கும் நீதி கிடைக்க வழிசெய்யும் கருவி சட்டங்கள் என்று பார்த்தோம். சுட்டங்கள் மீறப்படும்பொழுது அதைத் தடை செய்கின்ற அதிகாரம் நீதிமன்றங்களுக்கே உண்டு. எனவே நீதித்துறை சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் இயங்குவது ஜனநாயகத்துக்கான முக்கிய நிபந்தனையாகும். நீதித்துறையும் நீதி மன்றமும், சட்டப் பிரகடனங்களை மேற்கொள்ளவும், அரசியல் யாப்பையும் மனித உரிமைகளையும் மீறும் அரசியல் தூண்டலிலான செயல்களை செல்லுபடியற்றதாக ஆக்கவும் அதிகாரம் உள்ளது. அவை அப்படியே இயங்கவும் வேண்டும்.
3) ஊழல் இன்றிய நிறுவனங்கள்
பணத்துக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இல்லையென்று சொல்லலாம். பொது நிறுவனங்கள் அதிக தொகையான பணத்தைக் கையாளுவதனாலும், அப்பணம் செலவழிக்கப்படுவதற்கு  தனிநபர்கள் பொறுப்பாக இருப்பதனாலும், நிதிகள் கையாடப்படுவது சகஜமாகி விட்டது. இத்துடன், பொறுப்பான பதவிகளில் தங்கள் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் அமர்த்துதல் என்பதும் ஊழல் செயற்பாடாகும். ஊழலானது ஜனநாயக நடைமுறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும். ஏனெனில், பணத்தைக் கொண்டும் செல்வாக்கைக்கொண்டும் எந்தச் சட்டமும் வளைக்கப்படலாம்.
ஊழலை அழிக்க ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் பொதுவாகவே வழங்கும் கருத்தாகும். அனேகமாக எல்லோரும் ஊழல் பேர்வழிகள் என்பதோடு, ஒருவர் ஊழலில் ஈடுபடும்பொழுது ஏனையவர்கள் பேசாமல் இருப்பதே இதற்குப் பிரதான காரணங்களாகும். ஏனையவர்கள் என் பேசாமல் இருக்கிறார்கள் என்றால், அந்த இடத்தில் தாங்கள் இருந்திருந்தாலும் அதையேதான் செய்திருப்பார்கள் என்கின்ற உணர்வே மற்றவர்களின் வாயை அடைத்து வைக்கின்றது. அத்தோடுகூட, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலைகளில் சிறு சிறு ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதனால்தான் பெரும் ஊழல் நடக்கும்போது அதனை அனுதாபத்துடன் நோக்கத் தலைப்படுகிறார்கள்.
இதிலிருந்து, ஊழல் என்பது ஒரு சமூகத்தின் பண்பாடு என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அது, மக்கள எல்லோருடைய அங்கீகாரத்துடனும்தான் நடக்கின்றது. இந்தப் பண்பாட்டை நாமெல்லோரும் இணைந்து மாற்றினாலன்றி அது மாறாதுதான். ஊழல் நடவடிக்கை எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறு நன்மைகளைக் கொடுத்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது எங்கள் சமூகத்துக்கே அளப்பரிய கேட்டினை விளைவிக்கின்றது என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். ஊழலினால் சமூகத்துக்கும் சகல மக்களுக்கும் நீண்ட கால நன்மை பயக்கும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றனளூ இவ்வாறு நாட்டின் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்து விடுவதால் அவர்கள் சர்வாதிகாரிகளாக மாற உதவுகின்றது.
இதனை நாம் மனமார உணர்வோமாயின் ஊழல் இல்லாத சமூகத்தை நிச்சயமாக உருவாக்க முடியும். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கண்காய்வாளர் நாயகத்தின் அலுவலகம், பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக்குழு, ஊடகவியலாளர்களின் அமைப்புக்கள் இவையனைத்தும் ஊழலுக்கெதிராகப் போராடவேண்டும். இதைத் தவிர எங்கள் பாடசாலைக் கல்வியில் ஊழலின் தீமை பற்றிய அறிவுறுத்தலை ஒவ்வொரு வகுப்பிலும் கொண்டுவரவேண்டும். மதத் தலைவர்கள் தங்கள் ஆசியுரைகளின்போது ஒவ்வொரு முறையும் ஊழலின்றி சுத்தமாகவும் நேர்மையாகவும் வாழுவது பற்றிய அறிவுரைகளைக் கூறிக்கொண்டேயிருக்கவேண்டும். பெற்றார் தமது பிள்ளைகளுக்கு அறிவுரை கூறும்பொழுது அவர்கள் நேர்மையான பொது ஒழுக்கத்தைக் கைக்கொள்வது எவ்வளவு முக்கியமென விளக்க வேண்டும். இப்படி கிரமமாக நாமெல்லோரும் முயன்றோமென்றால் ஊழலை இல்லாதொழிக்கலாம்.

முடிவுரை
'மக்கள் எல்லோரும் தீர்மானம் எடுத்தலில் பங்கேற்க ஜனநாயக நடைமுறை வேண்டும். ஆனால் அந்த ஜனநாயக நடைமுறையைப் பேணுவதற்கு மக்கள் எல்லோரும் பங்கேற்க வேண்டும்..'      
இதுவரை நீங்கள் வாசித்த விடயங்களிலிருந்து அறிந்து கொண்டதை சுருக்கமாகக் கூறினால், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், பெற்றார், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கணக்காய்வாளர்கள் போன்ற இத்தனை பேர்களும் சேர்ந்து செயற்பட்டால்தான் ஜனநாயகத்தைப் பேணலாம். பார்க்கப் போனால்,  இந்த மக்கள் குழுவினர் எங்கள் சமூகம் முழுவதையும் உள்ளடக்குகின்றனர் அல்லவா?
ஏதைப் பெறுவதற்கும் நாம் ஒரு விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். பரீட்சையில் திறமையான சித்தி கிடைப்பதற்கு இரவும் பகலும் கடுமையாகப் படிக்க வேண்டுவதே நாம் கொடுக்கும் விலையாகும். அதே போல் நிறையப் பணம் சம்பாதிப்பதற்கு நாம் கடும் உழைப்பை விலையாகக் கொடுக்கின்றோம். இதேபோலத்தான் சுதந்திர ஜனநாயகத்தை நாம் பெறுவதற்குக் கொடுக்கவேண்டிய விலை எந்நேரமும் விழிப்பாக இருப்பதே என்று ஒரு அறிஞர் கூறினார். எனவே பொதுவில் நடப்பதை அறிய முயற்சி செய்யாது, ஒன்றும் தெரியாத அசட்டு மனிதர்களாக நாம் வாழும்போது எங்கள் வாழ்க்கையையே நாமே பாழாக்குகின்றோம்.  




கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. குழு அங்கத்தவர்களெல்லோரும் 'நியாயம்', 'அநியாயம்', 'மனித மாண்பு' இவையெல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தந்து அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் தெளிவாக்கிக்கொள்க.
2. எங்கள் நாட்டில் சமீப காலங்களில் மனித உரிமைகள் பேணப்பட்டனவா இல்லையா என்பதை உங்கள் அனுபவங்களைக் கொண்டு விளக்குங்கள். இதில் நீங்கள் கண்டது, பிறர் சொல்லக் கேட்டது, பத்திரிகையில் வாசித்தது, என்பவற்றை அடக்கலாம். நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு உரிமையும் மனித உரிமைகளின் எந்த வகையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா?

3. உங்களது கிராமத்தவர்களினால் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் உண்டா?


4. 'ஜனநாயகம்', மனித உரிமைகள்', 'சட்டங்கள்', இவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்ன?

5. ஏங்களது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா இல்லையா? எப்படிப் பாதுகாக்கக்படுகின்றது? எப்படி மீறப்படுகின்றது?


6. ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க நீங்கள் என்னென்ன செய்யலாம்?

7. ஏந்த நடவடிக்கையோடு ஆரம்பிப்பீர் என்பதை ஒவ்வொருவரும் விளக்கி அதற்கான உபாயங்களைக் கலந்துரையாடி குறித்துக் கொள்க.






பொது நிகழ்வுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்ளல்



1986ல் இந்தியாவில் நடந்த சம்பவமொன்று இது. ஷாபானு என்னும் முஸ்லிம் பெண்ணொருவர் தனது தன்னை தலாக் (விவாகரத்து) செய்த கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் கோரி வழக்குத் தொடுத்தார். இஸ்லாமிய சட்டத்தில் தாபரிப்புப் பணம் பெறுவதற்கான அங்கீகாரம் இல்லலையாதலால் , ஷாபானு இந';தியாவின் சிவில் சட்டத்தின் கீழ் தனது வழக்கைத் தாக்கல் செய்தார். அவருடைய கணவரின் வழக்கறிஞர் உடனேயே ஒரு பூகம்பத்தைக் கிளப்பி விட்டார். ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாமியச் சட்டத்தை மட்டும்தான் உபயோகிக்கலாம், அவர் எப்படி இந்தியவின் பொதுச் சட்டத்தை நாடலாம் என்னும் வாதமே இந்தப் பூகம்பமாகும். இந்த வாதம், முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டத்தினைப் பாவிக்காது விட்டால் இஸ்லாமிய மக்களின் கலாசார உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்கின்ற ரீதியில் பூதாகாரமாக உருவெடுக்கலாயிற்று. இதற்கு ஆதரவாக முழு முஸ்லிம் ஆண் சமூகமும் ஒன்று திரண்டது. அவர்கள் அறிக்கைகள் விட்டார்கள், தெருக்களில் போராட்ட ஊர்வலம் நடத்தினார்கள். அப்போதைய இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தியிடம் முறையிட்டார்கள். ராஜீவ் சாந்தியும், முஸ்லிம் சமூகத்தினர் முழுமையாக இஸ்லாமிய சட்டத்தின்கீழ்தான் வரவேண்டும் என்றும், அவர்கள் (இந்திய பிரஜைகளாக இருந்தும்கூட) இந்திய சிவில் சட்டத்தை உபயோகிக்க முடியாதென்றும் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர ஒப்புக்கொண்டார்.
இந்தியாவில் இருந்த பெண்கள் அமைப்புக்களும் சளைக்கவில்லை. ஷாபானுவுக்கு ஆதரவாகக் கூடினார்கள். ஒரு நிர்க்கதியாக விடப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதே முக்கிய விடயமாகையால், இந்திய பொதுச் சட்டத்தை அவள் நாடலாம் என்பதே அவர்கள் வாதம். அவர்களும் ராஜீவ் காந்தியிடம் ஓடோடிச் சென்று சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரவேண்டாமென்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு ராஜீவ் காந்தி என்ன சொன்னார் தெரியுமா?
'ஆம், இச்சட்டத் திருத்தம் அநீதியானது என்பதை நானறிவேன். ஆனால் இஸ்லாமியத் தலைவர்கள் சனத்திரளை வீதிக்குக் கொண்டுவந்து இறக்கக்கூடியவர்கள்.  அதை வாக்குகளாகவும் மாற்றிக் காட்டக்கூடியவர்கள். உங்களுக்கு அது முடியுமா? முடியாதென்பதால் நான் அவர்கள் பக்கம்தான் சாய்வேன்..'
பெண்களோ வாயடைத்துப்போய்த் திரும்பினார்கள்.
ஆம். எங்கும் மக்கள் திரளின் சக்தியினால்தான் நல்ல மாற்றங்கள் என்றாலும் தீய மாற்றங்கள் என்றாலும்; நிகழுகின்றன. ஏந்த சக்தி வாய்ந்த தலைவரும் இறுதியில் மக்களின் ஆதரவினால்தான் அரசாளுகின்றார். அது இல்லாவிட்டால் அவர் ஒரு கணமேனும் தனது பதவியில் இருக்க முடியாது. ஏப்படி இருக்கமுடியும்? அவருக்குத் தேவையான வேலைகளைச் செய்பவர்களும் நாம் மக்களல்லவா? தட்டத் தனியாக அவர் இயங்க முடியாதல்லவா? எனவே மக்கள் ஒன்று கூடினால், முடியாதது ஒன்றுமில்லை.
மக்கள் ஒன்றுகூடி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான இன்னுமொரு கதையைப் பார்ப்போம். இலங்கையில் பெண்களின் நிலையை மாற்றுவதற்கு இங்குள்ள பெண்கள் அமைப்புக்கள் பலகாலமாக முயன்று வந்திருக்கின்றன. 1989ம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள் பெண்கள் அமைச்சினை உருவாக்கினார். இந்த அமைச்சினை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அதன் தலைமையின்கீழ் சிங்கள முஸ்லிம் தமிழ் பெண்கள் அமைப்புக்கள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்து ஒரு பெண்கள் பட்டயத்தை (றுழஅநn'ள ஊhயசவநச) 1993ம் ஆண்டு உருவாக்கின. சமவாயம் என்பது அடிப்படை மனித உரிமைகளைக் கோடு காட்டி உருவாக்கப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய விடயங்களின் தொகுப்பாகும். எனவே, இந்தப் பெண்களின் பட்டயமானது பெண்கள் குறித்த பல பிரச்சினைகளைப் பேசியது. இது ஒரு அரசு நிறுவனத்தின்கீழ் செய்யப்பட்டதால் அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது.
இப்பட்டயத்தில் குடும்ப வன்முறைக்கு எதிராகப் பெண்கள் பாதுகாக்கப்படுவதைப் பற்றிப் பேசப்பட்டது. தொழிலிடங்களில் பெண்கள் பாலியல் இம்சைக்குள்ளாவதைத் தடுக்க வழிகோரப்பட்டது. நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான எங்கள் பாலியல் கற்றச் சட்டம் புதுப்பிக்கப்படவேண்டுமென்று கோரியது. இதைத் தவிர, வெளிநாட்டவர்களை மணக்கும் பெண்களின் கணவர்களுக்கு குடியுரிமை கொடுக்காத சட்டம் மாற்றப்பட்டு ஆண்களைப் போலவே பெண்களின் வெளிநாட்டுத் துணைவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டுமென்று பரிந்துரைத்தது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் அடுத்த வருடங்களில் கடுமையான பிரச்சாரம் இந்த அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டது.
இன்று 2005ம் ஆண்டுக்குப் பிறகு, குடும்ப வன்முறைக்கெதிரான சட்டமும், தொழிற்தலங்களில் பாலியல் இம்சைகளுக்கெதிரான சட்டமும் செயற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏங்களுடைய கிராமங்களில் வாழும்  பெண்களைக் கேட்டுப் பாருங்கள். குடும்ப வன்முறைக்கெதிரான சட்டம் இருக்கின்றது என்று தெரிந்த ஆண்கள் மனைவியை அடிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது என்று தங்கள் கதைகளைக் கூறுகிறார்கள். குடியுரிமைச் சட்டங்களும் பெண்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் வெளிநாட்டவரை மணந்த நூற்றுக்கணக்கான பெண்கள், இதுவரை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தக்கு ஓடி  அலைந்தவர்கள், இப்பொழுது ஆறுதல் பெற்றிருக்கிறார்கள். பார்த்தீர்களா? ஏங்கோ எல்லோரும் இணைந்து செய் சமூகப் பணி எப்படி ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் விடிவைத் தந்திருக்கின்றது என்று. மக்கள் ஒன்று கூடி செயலாற்றுவதனால் எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றலாம் என்பதை விளக்க இம்மாதிரியான ஏராளமான கதைகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மக்கள் அணிதிரளவேண்டும் என்பது தெளிவாகின்றது.
 மக்களை அணிதிரட்டுதல்
மக்கள் அணிதிரளுவது தன்பாட்டிலேயே சும்மா நிகழும் ஒரு நிகழ்வல்ல. தற்கு சில முன்னிபந்தனைகள் இருக்கின்றன.
1) தனித்தனியே தங்கள் வீடுகளுக்குள்ளிருக்கும் மக்கள், பொது நோக்கத்துக்காக ஒன்று சேரும் பண்பாட்டினை உருவாக்க வேண்டும்.
நாங்கள் எங்களுக்குத்தான் இருக்கின்றது என்று நினைக்கும் பிரச்சினைகள் யாவும் பிறருடன் ஒன்று சேரும்போதுதான் அது பொதுவில் இருக்கின்ற பிரச்சினை என்று உணர்ந்து எங்களுக்கள் ஒற்றுமையை வளர்க்க முயலுவோம். இதற்காக அடிக்கடி ஒன்று கூடி மக்கள் தங்களுக்குள் உறவு வளர்க்கப் பழக வேண்டும். புதிய மனிதர்களைச் சந்திக்கும்போது எப்போதும் பல புதிய விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். உண்மையான உலகத்திலிருந்து உலக நடப்புக்கள் பற்றிக் கற்றுக் கொண்டு அறிவில் முதிர்ச்சி அடையலாம். இதை விட்டு, தொலைக்காட்சி நாடகங்களில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களில் நாம் மூழ்கி விடுவதனால் முதலாவது ஒன்று சேரும் பண்பினை இழக்கின்றோம், அடுத்தது உலகத்தைப் படிக்காமல் தொலைக்காட்சியின் மாய உலகத்தில் நடக்கத் தொடங்குகின்றோம். இதனால்தான் வெறுமனே தொலைக்காட்சியே கதியென்றிராமல் நாலு மனிதர்களைச் சந்தித்து சமூகம் தொடர்பாக நாம் முதிர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகின்றது.
2) ஒரு விடயத்தை அல்லது பிரச்சினை பற்றிய தெளிவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
ஆம். ஒரு பிரச்சினையைத் தீர்க்க மக்கள் ஒன்று கூடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால் அப்பிரச்சினையின் ஆழங்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? இந்த அறிவு பல முறைகளில் நம்மை வந்தடைகின்றது. ஒன்று எமது சொந்த அனுபவங்களினூடாக அதை ஏற்படுத்துகின்றோம். இரண்டு பிறர் சொல்லக் கேட்டுப் பயனடைகின்றோம். மூன்றாவது வாசித்து, வேறு தகவல்களைத் திரட்டி அறிந்து கொள்கின்றோம். அடுத்து, பிறருடன் கலந்துரையாடித் தெளிகின்றோம். இவையெல்லாவற்றுக்கும் நாங்கள் கூடிக் கதைக்க வேண்டும் இல்லையா?
3) ஒரு பிரச்சினை பொதுப் பிரச்சினை என்பதை அறிவதும், அதனைக் கூடிக் கலந்துரையாடித் தெளிவதும் போதாது. இதை தீர்க்கலாம் என்கின்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கு பொது நிகழ்வுகள் உதவுகின்றன. பொது நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொள்கின்ற படியினாலே, அங்கிருப்போர் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கின்றது. நாம் மட்டும் தனியாக இதில் ஈடுபடவில்லை, எம்மைப்போல் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றார்கள் என்கின்ற தெம்பும் தைரியமும் உருவாக அங்குள்ள எல்லோருமே மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராகி விடுகிறார்கள். பிறகென்ன, மாற்றங்கள் வந்தது போலத்தான். ஆத்துடன், ஏராளமான மக்கள் கருத்து இங்கு ஒருமித்திருக்கின்றது என்று கண்டவுடனேயே அதிகாரத்திலுள்ளவர்களும் தீர்மானம் எடுப்பவர்களும் உஷாராகி மக்கள் வழிக்கு வந்து விடுவார்கள். ராஜீவ் காந்தியின் கதையில் பார்த்தீர்கள்தானே
மேலே கூறியவற்றைப் படித்துப் பார்த்து யோசியுங்கள். அவ்வளவு தகைமைகளையும் கூட்டச் சந்திப்புக்களும் பொது நிகழ்வுகளுமே எங்களுக்குத் தருகின்றன.
கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் நாம் பொதுவாகக் கலந்து கொள்ளும் முறைகள்
மக்கள் மத்தியில் கூட்டுறவினை உருவாக்குவதற்காகவே அனேகமாக சகல அமைப்புக்களும் சிறு கூட்டங்களையும் பொது நிகழ்வுகளையும் தொடர்ந்து ஏற்பாடு செய்தவண்ணம் இருக்கின்றன. இவற்றில் நாம் எப்படிக் கலந்து கொள்கின்றோம்? இந்த இடத்தில் வாசிப்பை நிறுத்தி விட்டு உங்கள் குழுவில் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து வாசியுங்கள்.
கூட்டங்களுக்கு அங்கத்தவர்கள் சமுகமளிப்பதில்லையென்பது பரவலான குற்றச்சாட்டாகும். புல இடங்களில் குழுக் கூட்டங்களுக்கு வருவதற்கும் போக்குவரத்துச் செலவுகளைக் கேட்பதுமுண்டு. கூட்டம் நடக்கின்ற நேரத்தில் சித்தி அண்ணாமலை என்று தொலைக்காட்சித் தொடர்கள் நிகழ்ந்தால் கேட்கவே வேண்டாம். யாரும் வரமாட்டார்கள். பொது நிகழ்வுகள் என்றால் நிச்சயமாக போக்குவரத்துக்கு வானோ பஸ்ஸோ ஒழுங்கு பண்ணா விட்டால் யாரும் வரமாட்டார்கள். போதாக்குறைக்கு வந்தவர்களை உபசரித்து சிற்றுண்டி உணவுகளையும் வழங்க வேண்டியதாக இருக்கின்றது.
இதை நீங்கள் ஆற அமர இருந்து யோசித்துப் பார்த்தால் உண்மையில் வெட்கப்படவேண்டும். உங்கள் தேவைகளுக்குப் போகும்போது நீங்கள் யாரிடமாவது போக்குவரத்தச் செலவுகளைக் கேட்பீர்களா? சிற்றுண்டி கேட்பீர்களா? உதாரணமாகக் கதிர்காமத்துக்கு தல யாத்திரை போகவேண்டுமென்றால் உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை அல்லவா? ஏனெனில் உங்களுக்கு ஒன்று உண்மையாகத் தேவைப்பட்டால் அதைச் செய்து முடிப்பீர்கள் இல்லையா?
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு பொதுப்பிரச்சினையை எங்கள் சொந்தத் தேவைகளாக நாம் கருதுவது மிகக் குறைவாகவே இருக்கின்றது. குடும்பவன்முறைக்கெதிராகச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கு பொது நிகழ்வொன்றை நடத்தினால் அதில் வரும் பெண்களுக்கு போக்குவரத்து தொடக்கம் எல்லா வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள்தான் செய்து கொடுக்க வேண்டும். ஆனால், அது கடைசியில் சட்டமாக அமுலுக்கு வந்தால்...?.... அதனால் நன்மை அடைபவர்களும் அந்தப் போக்குவரத்து இத்தியாதிகளைக் கேட்ட பெண்களும் அவர்கள் மகள்மார்களும்தானே. இன்று விழுது அமைப்பு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டுமென்று போராடுகின்றது. இது நிறைவேறினால், இதனால் நன்மை அடைந்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகார பூர்வமாக நுழையப்போகின்றவர்கள் யார்? சகல பெண்களும் அல்லவா? விழுது உத்தியோகத்தர்கள் அல்லவே.
இது மிக எளிமையான, ஆனால் அனேகம் பலரும் உணராத உண்மையாகும். இதை நாமெல்லோரும் மனதார உணரும்போதுதான் சமூகப் பொறுப்புடன் நடக்கும் உண்மையான நாட்டுப்பிரசைகளாக வளருவோம். இல்லாவிட்டால், ஐயோ அவன் அப்பிடிச் செய்யிறான், இவன் இப்பிடிச் செய்யிறான் நாங்கள் என்ன செய்ய என்று கையைப் பிசைந்து கொண்டு சிறுபிள்ளைத்தனமாகத்தான் நிற்போம்.
ஒரு கூட்டம் அல்லது பொது நிகழ்வு நடக்கப்போகின்றது என்றால் நாங்களே அதற்குச் செல்லுவதற்கான ஊக்கத்தினைக் கொண்டிருக்க வேண்டும். அதில் எங்கள் சமூகப்பொறுப்பினை அடையாளம் காணவேண்டும். இதனால் எங்கள் எங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அறிந்திருத்தல் வேண்டும். அறிந்து தெரிந்து நாங்களே எங்கள் வாழ்ககையின் போக்கினைத் தீர்மானம் செய்கின்ற செயலாளர்களாக வரவேண்டும். ஒரு நிகழ்வுக்குப் போக போக்குவரத்து வசதி உங்கள் ஊரில் இல்லையா, நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி நிதியைத் திரட்டி போக்குவரத்து ஏற்பாடு செய்ய முடியாதா? ஒரு கூட்டம் நீண்ட நேரம் போகும் சாத்தியக்கூறு இருக்கின்றதா, உங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிற்றுண்டிகள் செய்து எடுத்துவர முடியாதா? யோசித்துப் பாருங்கள்.
 நிகழ்வுகளில் பங்குகொள்ளத் தயங்குவதற்கான நியாயங்கள்
கூட்டங்களில் கலந்து கொள்ள மக்கள் பஞ்சிப்படுவதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. ஒரு வித குறித்த நோக்கங்களுமின்றி, பங்குகொள்ளும் மக்களின் நேரத்தை வீணாக்கும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்னும் பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. அரச நிறுவனங்களும் அரசு சாரா நிறுவனங்களும் தங்கள் நிதிகளை வெறுமனே முடித்து அறிக்கை எழுதுவதற்காக அவசர அவசரமாக இந்த மாதிரியான கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்கின்றனதான். அது உண்மைதான். ஆனால் அதற்காக எல்லாக் கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்க முடியாது. குறித்த முக்கியமான நோக்கங்களுக்காகவும் பொது நிகழ்வுகளும் போராட்டக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. அவற்றை அக்கறையுடன் இனம்பிரித்துப் பார்த்து அடையாளம் கண்டு பங்குபற்றவேண்டும்.
ஒரு நிறுவனம் ஒழுங்காகக் கூட்டங்களை எற்பாடு செய்யாவிட்டால், துணிந்து அதிலுள்ள குறைகளை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள். ஏனெனில், அக்கூட்டங்கள் ஒழுங்காக நடந்தால் உங்களுக்குத்தான் நன்மை தருமேயொழிய அவர்களுக்கல்ல. வேண்டுமானால், அக்கூட்டங்களை எப்படி நடத்தலாம் என்று நீங்களே அவர்களுக்கு சிபாரிசுகளை வையுங்கள். எந்த விடயம் கதைக்கப்படவேண்டும், எதைப் பற்றி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை நீங்களே சொல்லி விடுங்களேன். அவர்கள் திருந்தாமலா போகிறார்கள்? உங்கள் தேவைகளை அறிந்து உங்களுக்கு சேவை செய்யத்தான் இந்த நிறுவனங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள்.
கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1) உங்கள் ஊரில், குறித்த நொக்கத்தை அடைவதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களும் பொது நிகழ்வுகளும் எவையெவையென்று கருதுகிறீர்கள்? அவற்றை நிரல்படுத்தி ஏன் என்று விளக்குக.
2) பங்குபற்றுபவர்களுடைய நேரத்தை வீணாக்கி நடத்தப்படும் சந்திப்புக்களும், கூட்டங்களும் பொது நிகழ்வுகளும் எவை? அவற்றை நிரல்படுத்தி ஏன் என்று விளக்குக.
3) நன்றாக நடத்தப்படும் கூட்டங்களுக்கு ஒழுங்காக பங்கபற்றுனர்கள் வருகை தருகிறார்களா? அதற்கு ஏதேனும் சன்மானம் எதிர்பார்க்கிறார்களா? சுன்மானம் எதிர்பார்க்கிறார்கள் என்றால் அல்லது ஒழுங்காக வருகை தரவில்லை என்றால், அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கூறுக.
4) ஒழுங்கான முறையில் நடத்தப்படாத கூட்டங்களைப் பற்றி என்ன செய்யப்போகிறீர்கள்? விளக்குக.
5) சமுகப்பொறுப்புடன் மக்கள் ஒன்று கூடுவதை ஊக்குவிப்பதற்கு என்ன செய்யலாம்? உம்முடைய நடவடிக்கையின் முதல் படி என்ன? விளக்குக.. இதனை எவ்வளவு காலத்தக்குள் செய்து முடிப்பீர் என்பதை குழுவுக்குச் சொல்லுக. ஓவ்வொரு அங்கத்தவரும் இவ்வாறான வேலைத் திட்டமொன்றை வைத்திருத்தல் நன்று.





குடும்ப வன்முறை



எங்கள் பிரதேசங்களில் பல வெளிநாட்டு உள்நாட்டு அரசு சாரா நிறுவனங்கள் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகத் தங்கள் வேலைகளை முன்னெடுப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். 'எங்களால் முடியும்' (றுந உயn) என்கின்ற பிரச்சாரம் ஒக்ஸ்பாம் என்னும் நிறுவனத்தினால் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதில் பங்குபற்றியிருக்கிறீர்களா? அப்படியானால், குடும்ப வன்முறையைப் பற்றிய விளக்கம்  உங்களுக்குத் தெரிய வந்திருக்கும். குடும்பம் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்வதனாலும், வன்முறை என்பது என்ன என்று விளங்கிக் கொள்வதனாலும், நாங்கள் குடும்ப வன்முறை என்னும் சமூகப் பிரச்சினையின் மூலத்தை அறிந்து கொள்ளலாம்.
குடும்பம்
அந்தக் காலம் என்றால் என்ன, இந்தக் காலம் என்றால் என்ன, மனித இனம் இந்த உலகத்தில் தொடர்ந்து வாழவேண்டுமானால் அது இரண்டு கடமைகளை அவசியமாகச் செய்ய வேண்டும். ஓன்று, மனிதர்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றை பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வது என விபரிக்கலாம். அடுத்தது, அவர்கள் தாங்கள் தொடர்ந்து வம்சங்களாக வாழ்வதற்கான மறு உற்பத்தியில் ஈடுபடவேண்டும். இதனை, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது தொடர்பான சகல கடமைகளாக விளங்கப்படுத்தலாம். எங்கள் சமூகக் கட்டமைப்புக்களும் கலாசார வெளிப்பாடுகளும் எல்லாமே எப்பொழுதும் இந்த 'உற்பத்தி', 'மறு உற்பத்தி' என்னும் இரு முக்கியமான உறவுகளைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
உற்பத்தி உறவுகள் என்றால் என்ன? உற்பத்திக்குத் தேவையான வளங்களை (மூலதனம், தொழில்நுட்பம், நிலம் போன்ற இயற்கை மூலங்கள்) உற்பத்தியில் ஈடுபடும்; மனிதன் எப்படி எடுத்துக் கொள்கின்றான் என்பதெல்லாம் உற்பத்தி உறவுமுறைகளுக்குள் அடங்கும். மறு உற்பத்தியின் உறவுகளானவை, பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்காக சமூகம் தன்னைக் ஒழுங்கமைத்துக்கொண்ட நடைமுறைகளாகும். முதலில் நாங்கள் தின்று குடித்து உயிர் வாழ்ந்தால் அப்புறந்தானே எமது மறு உற்பத்தி பற்றிச் சிந்திக்கலாம்? எனவே மனிதர்களின் வயிற்றுப் பிழைப்பென்பது அவர்களின் இருப்பின் அல்லது வாழ்க்கையின் முதன்மையான செலுத்திகளாக இருப்பதைப் பார்க்கலாம். ஆகவே எங்கள் பொருளாதாரக் கட்டமைப்புக்கள்தான் பின்பு எங்களின் சமூக உறவுகளைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றது என்று கூறலாம்.
கீழே ஒரு அட்டவணையில், ஆதிகாலம் தொட்டு மனித சமுதாயத்தில் நிலவிய பிரதானமான உற்பத்தி உறவு முறைகளையும் அவற்றுடன் தொடர்பாக உருவாகிய மறு உற்பத்தி உறவு முறைகளையும் தருகின்றோம். அதனை ஆராய்ந்து படிப்பதன்மூலம் உற்பத்திக்கும் மறு உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்புகளை நீங்கள் இன்னும் நன்றாக அறிந்து கொள்ளலாம்.

அட்டவணை
உற்பத்தி உறவு முறைகள் உற்பத்தி உறவு முறைகளுடன் தொடர்பான மறு உற்பத்தி உறவுமுறைகள்
1. மனிதன் உருவாகி முதல் 30,000 வருடங்கள்

பெண்கள் காய்கிழங்கு கனி பொறுக்குவதும் ஆண்கள் காட்டு மிருகங்களை வேட்டையாடுவதும் உற்பத்தி தொடர்பான தொழிலாக இருந்தது..
ஓரிடத்தில் உணவு மூலங்கள் முடிந்து விட்டால் அடுத்த பிரதேசத்துக்கு குடி பெயரும் நாடோடி வாழ்க்கை. சொத்து என்று கூறிக்கொள்ள எதுவும் இல்லை. எல்லாம் எல்லாருக்கும் பொதுவென வாழ்ந்த காலம்.
ஓற்றுமையாக ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக வாழ வேண்டிய நிலைமை என்பதனால் மக்கள் குடிகளாகவும் குழுக்களாகவும் வாழ்ந்த காலம்.
பெண்களும் ஆண்களும் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்த காலம். ஒரு ஆணுடன் வாழ்வது என்பது என்ன என்று அறியாத பருவம். பெண்கள் பிள்ளைகளைப் பெற்றவுடன் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்து வளர்த்தெடுத்தனர். இங்கு சமூக மத்தியில்தான் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர் என்று கொள்ளலாம். ஆண்களுக்கு தங்கள் பிள்ளைகள் யாரென்று தெரியாததோடு அவர்கள் பிள்ளை வளர்ப்பிலும் ஈடுபடவில்லை.

குழாமுக்கு மிக அவசியமான மனித உயிர்களை உற்பத்தி செய்பவர்கள் என்கின்ற அடிப்படையிலும், சாஸ்வதமான உணவுப்பொருளாக இருக்கின்ற கிழங்கு கனிகளை குழுவுக்கு வினியோகிப்பவர்கள் என்கின்ற அடிப்படையிலும், குடிகளின் சமூக வாழ்க்கையில் பெண்கள் முதன்மை ஸ்தானத்தில் வைக்கப்பட்டார்கள். இச்சமூகத்தைத் தாய்வழி சமூகங்கள் என்று ஆய்வாளர்கள் விபரிப்பார்கள்.
2. மனிதனின் அடுத்த 10,000 வருடங்கள்

மனிதர்கள் கால்நடைகளை வளர்க்கத் தொடங்கி விட்டார்கள். உபரி உற்பத்தி அதிகரிக்க குடிகளுக்குள் செல்வம் பெருகியது. உபரி உற்பத்திகள் பண்ட மாற்றுச் செய்யப்பட்டு வர்த்தகம் பெருகியது. பெண்கள் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டதனால் ஆண்களே கால்நடை மேய்ப்பதிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டனர்.   அயல் குடிகளின் கால்நடைகளை அபகரிப்பதற்கு அவர்கள்; போரிடவும் தொடங்கினர்.
ஆண்களின் கைகளில் சொத்து சேரத் தொடங்கியது. முதன்முதலாக உலகத்தில் தனியுடைமை தோன்றியது.


ஆண்கள் தங்களுடைய சொத்தைக் கொடுக்க தமக்கென வாரிசு வேண்டுமெனக் கருதத் தொடங்கினர். ஒரு குடும்பத்தின் சகோதரர்கள் அனைவரும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் வழக்கம் வந்து அதிலிருந்து ஒரு பெண் ஒரு ஆணுக்கு மட்டும் சொந்தமாகும் ஒருதார மணம் உருவாகிற்று. தனியுடைமையுடன் நாங்கள் அறியும் மணவாழ்வு நடைமுறைக்கு வந்தது. ஆண்கள் பெண்களின் மீது பிரயோகித்த அதிகாரமே திருமணம் என்னும் சடங்கு என்றால் மிகையாகாது. இத்துடன் பெண்களின் சமூக அந்தஸ்து சரியலாயிற்று. குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பு ஆரம்பமானது.
3. மனிதனின் அடுத்த 5,000 வருடங்கள்

பாரிய அளவில் விவசாயப் பொருளாதாரம் உருவாகியது. வுpவசாயம் மனித குலத்துக்கு இதுவரை காணா பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்தது.  நகரங்களும் நாடுகளும் உருவாகின. கலைகளும் கல்வியும் வளர்ந்தன.


ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைகின்ற குடும்பம் நிலைபெறுகிறது. சொத்துடைமை ஆணின் கைகளில் பூரணமாகத் தேங்குகிறது. ஒரு குடும்பத்தின் உரிமையாகும் நிலத்தைத் துண்டாடுவது விவேகமில்லையாதலால், நிலத்தை ஒன்று சேர்க்கும் கூட்டுக்குடும்ப முறை நிலவியது. அதாவது சகோதரர்கள் எல்லாருமே ஒன்றாக வாழ்கின்றனர்.  இதன்மூலம் ஒரு குடும்பம் முழுவதுமே கூட்டாகத் தங்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்தார்கள், தங்களுக்குள் திருமண பந்தங்களையும் வைத்துக்கொண்டு தங்கள் சொத்துக்களைப் பிரிய விடாமல் பாதுகாத்தார்கள்.


4. மனிதனின் அடுத்த 300 வருடங்கள்

தொழில் நுட்ப விரிவாக்கத்தினால் தொழிற்சாலைகள் எழுந்தன.  மனிதர்கள் தங்கள் தங்கள் நிலத்திலிருந்து பிரிக்கப்பட்டார்கள். அவர்கள் தனியே உழைப்பை மட்டும் சொந்தம் கொள்ளும் தொழிலாளிகளாக மாறினர்.






மனிதர்கள் நிலத்தை அண்டிப்பிழைப்பவர்களாக இல்லாமல், தொழில் எங்கே உள்ளதோ அங்கு போய் அத்தொழிற் துறையுடன் வாழுபவர்களாக இருந்தார்கள். அதாவது எங்கே தொழில் இருந்ததோ அங்கே வாழும் தொழிலாளிகளாக இருந்தார்கள். கூட்டுக்குடும்பம் உடைந்தது. அப்பா அம்மா பிள்ளை என வாழும் தனிக்குடும்பங்கள் தோன்றின. இங்கும் ஆண்தான் பிரதானமான உழைப்பாளியாகக் கருதப்பட்டான். பெண்கள் குறைந்த வருமானம் பெறும் உழைப்பாளிகளாக இருக்கின்றனர்.
5. மனிதனின் அடுத்த 30 வருடங்கள்
(சமகாலம்)

மூலதனம், தொழில்நுட்பம் இவை மூலமாக உற்பத்தி, ஆகியன சுதந்திரமாக நாட்டுக்கு நாடு தாவும் உலகமயமாக்கல் பொருளாதார அமைப்பு உருவாகின்றது. உற்பத்தி துண்டாடப்பட்டு கண்டம் விட்டுக் கண்டம் தாவுவதுபோல (ஒரு சப்பாத்தின் அடிப்பக்கம் கொரியாவிலும், மேற்பக்கம் சீனாவிலும் லேஸ் இந்தியாவிலும் அதன் முழுமையான உருவம் அமெரிக்காவிலும் செய்யப்படுதல்)  உழைப்பும் கண்டம் விட்டுக் கண்டம் தாவுகின்றது. தொடர்பாடல் புரட்சி ஏற்பட்டு உலகின் தூரங்கள் குறைக்கப்படுகின்றன.




மலிவான உழைப்பைத் தேடி உற்பத்தி துண்டாடப்படுவதனால்  பெண்கள் பிரதான உழைப்பாளிகளாக மாறுகின்றனர். திருமணம் என்பது அவசியமில்லாத பந்தமாக மாறுகின்றது. தனிக்குடும்பங்கள் உடைகின்றன. ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் (அதாவது வாழ்நாளுக்குரிய பந்தமாக இல்லாமல்) ஒன்றாக வாழும் சமூகக் கட்டமைப்பு உருவாகின்றது. இவர்கள் தங்கள் குலத்துக்குள்ளோ இனத்துக்குள்ளோ மட்டும் பார்ட்னரைத் தேடாமல், உலகளாவிய ரீதியில் சர்வதேச பார்ட்னர்களைத் தேடத் தொடங்குகின்றனர்.

இதிலிருந்து, ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் உறவுமுறை, அல்லது குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பு இவை பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கத்தையே குறியாக வைத்து தோற்றுவிக்கப்பட்டன என்பதைக் காணலாம். அத்துடன், தங்களுடைய சொந்த வாரிசுகளாக பிள்ளைகளைப் பெறுவதற்கெனவும் இது ஏற்படுத்தப்பட்டது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். இந்த அதிகாரமானது ஒரு குடும்பத்தின் பல அங்கத்தவர்களினால் வௌ;வேறு நிலைகளில் பிரயோகிக்கப்படுகின்றது. உதாரணமாக, குடும்பத் தலைவனின் தாய் என்கின்ற உறவு தருகின்ற அதிகாரத்தில் மாமியார் மருமகளைக் கொடுமை செய்யும் நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறே மாமனார், கணவனின் சகோதரர்கள், மூத்த சகோதரனின் மனைவி என்று படிப்படியாக இந்த அதிகார உறவு முறைகள் அடுக்கப்பட்டிருக்கும்.  ஆகவே, ஆதிக்க உறவு முறைகளின் ஊற்றாக நாம் குடும்பத்தைப் பார்க்கலாம். குடும்பங்களில் அதிகார உறவுமுறைகளுக்குப் பழக்கப்பட்டு அவற்றை ஏற்றுக்கொள்கின்றபோது, அதே மாதிரியான அதிகார உறவுமுறைகளை சமூகத்திலும் அரசியலிலும் ஏற்றுக்கொள்ள மனிதர்கள் பழகுகிறார்கள். அப்படித்தான் ஒடுக்குமுறை சமூக அரசியல் கட்டமைப்புக்கள் எங்கள் மத்தியில் நீடித்து நிலைக்கக் கூடியதாக இருக்கின்றது.
வன்முறை
எந்த மேலாதிக்க உறவும் ஒருவருடைய விருப்பங்களையும் தீர்மானங்களையும் இன்னொருவர் மீது திணிக்கும் நடைமுறையாகும். இந்த உறவு வன்முறையின் மூலம்தான் தக்கவைத்தக்கொள்ளப்படலாம். இப்படியான வன்முறைகளுக்கு இரு நோக்கங்கள் உண்டு. முதலாவது, பயமுறுத்தி அல்லது சிறுமைப்படுத்தி அடிபணிய வைப்பதன் மூலம் எதிர்ப்பையே இல்லாமல் செய்வது, இரண்டாவது, எதிர்ப்பிற்கான தண்டனையைக் கொடுத்து அடுத்த முறை எதிர்ப்பு எழாமல் செய்வது. முன்னையது அனேகமாக உள ரீதியான செயற்பாடாகும். பின்னையது உடல் ரீதியான செயற்பாடாகும். பெரும்பாலான குடும்ப வன்முறைகள் (90 வீதமானவை என்று கூறலாம்) ஆண்களினால்தான் செய்யப்படுகின்றன. தங்களின் தேவைகளைக் கவனிக்கவென மட்டும் தங்கள் குடும்பத்தை வடிவமைக்கவும், வேறு ஆடவனுடன் தங்கள் பெண்கள் போகாவண்ணம் (இந்தப் பயம் பெரும்பாலான ஆண்களுக்கு உள்ளுர இருக்கின்றது) தடுக்கவும் கூடிய தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டவே அவர்கள் வன்முறையிலும் பாலியல் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுகின்றனர். பொதுவாகக் கணவன்மார், தந்தையர், பாட்டாமார், அதற்குப் பின்பாக மாமன்மார் என்று இந்த வரிசையில்தான் குடும்ப வன்முறையாளர்கள் தோன்றுவதைக் காணலாம்.
தங்கள் கணவன்மார்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதனால்தான் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று அனேகமான பெண்கள் தவறாக விளங்கிக் கொள்ளுகின்றனர். குடிபோதை வன்முறையில் ஈடுபடுவதற்கான தெம்பைக் கொடுக்கின்றதேயொழிய, வன்முறையில் ஈடுபடுவதற்கான லைசன்ஸ் முழுக்க ஆண்களுக்கு மேலாதிக்கத்தினை வழங்கும் எங்கள் சமூகப் பண்பாட்டினால்தான் கொடுக்கப்படுகின்றது. எனவே, குடிப்பழக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன், பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் முயற்சியிலும் ஈடுபட்டால்தான் குடும்ப வன்முறையை முற்றாக ஒழிக்கலாம்.
அடுத்து, பெண்கள் தங்கள் குடும்ப அங்கத்தவர்களைப் பற்றி வெளியில் குறைகூற வெட்கப்படுவதனாலும், தமக்கு நிகழும் வன்முறையைப் பற்றி சொல்லுவதில்லை. இது யாருக்குமே உதவாத வரட்டு கௌரவமாகும். ஒரு தவறு நடக்கும்போது அதைப் பற்றி வெளிவெளியாக நாங்கள் பேச ஆரம்பிக்கத் தொடங்கும்போதே அத்தவறுக்கான மாற்று நடவடிக்கை 50வீதம் செயற்படுத்தப்படுகிறது. எப்படி என்கிறீர்களா? நாங்கள் வாய்விட்டுப் பேசும்போது அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தைரியத்தையும் எங்களுக்குள் வளர்த்துக்கொள்ளுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பேசக்கூட முடியாவிட்டால் தைரியம் எங்கேயிருந்து வரும்? மேலும், மற்றவர்களுடன் பேசப்பேசத்தான் பிரச்சினையும் தெளிவாக எங்களாலேயே விளங்கிக் கொள்ளப்படுகின்றதுளூ உங்கள் பிரச்சினையை அறிந்தால்தான் ஏனையோர் உங்கள் உதவிக்கு வரலாம். இவ்வாறாக மக்கள் பலரின் மனஉறுதி ஒன்றுபடும்பொழுது அங்கு தீர்வு உருவாகி செயற்படுத்தப்படுகின்றது. எங்கள் மத சாத்திரங்கள்கூட சொல்லின் சக்தியைப் பற்றி எங்களுக்கு கூறுகின்றன. உங்களுடைய சொல் வாக்கியங்களின் சக்தியை எனிதாக எடை போடாதீர்கள்.
குடும்ப வன்முறைக்கெதிராக செயற்படுவது பற்றி....
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த அரச அதிபர், அவருக்கு பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான வேலைத் திட்டங்கள் கொஞ்சமும் பிடிக்காது. 'தேவையில்லாமல் வெளிநாட்டு நிதிகளைக் கொண்டு எங்கள் சமூகத்தின் கலாசாரப் பண்பாடுகளை மாற்றுகிறீர்கள்.. குடும்பங்களைப் பிரிக்கிறீர்கள்...' என்று குற்றஞ் சாட்டி அத்தகைய செயற்திட்டங்களுக்கு அவர் அனுமதி கொடுப்பதில்லை.
ஆம், குடும்ப வன்முறையை ஒழிக்க, ஏன் பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் ஒழிக்க, நாம் பாடுபடும்பொழுது நிச்சயமாக குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பினுள் மாற்றங்களைக் கொண்டுவந்தேயாக வேண்டும். அங்கு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவமான அதிகாரங்களைக் கொண்டுவரவேண்டும். அதைவிட, குடும்ப அங்கத்தவர்கள் தங்கள் நிலைமைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி மற்றவர் மீது மேலாதிக்கம் செலுத்தாமல் கவனமாக இருக்கும் விழிப்புணர்வினை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக, 'இது என்டை பிள்ளை நான் என்ன வேணுமானாலும் செய்யலாம்...' என்று பல பெற்றோர்கள் சொல்லுவதை நாம் கேட்டிருக்கின்றோம். இது முற்றிலும் தவறான கருத்தாகும். எம்மில் தங்கி வாழும் எமது சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு அந்தப் பிள்ளையை ஆட்டி வைக்க முடியாது, அதற்கு இம்சைகள் புரிய முடியாது. அந்தப் பிள்ளைக்கு தனது உணர்வுகளினதும் அறிவினதும் பிரகாரம் நடப்பதற்கு சகல உரிமைகளும் இருக்கின்றன. தங்கள் பிள்ளைகளின் கருத்துக்களுக்கும், அது ஐந்து வயதாக இருந்தாலும் கூட, சமமான மரியாதை கொடுத்து இயங்கும் குடும்பங்களில் வன்முறை நிகழ மாட்டா.
எனவே மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் அரச அதிபர் உண்மையைத்தான் கூறினார் என்றுதான் சொல்ல வேண்டும். அதிகார முறையான ஏற்றத் தாழ்வும், வன்முறையைப் பிரயோகிப்பதுமான 'எங்கள் பாரம்பரிய கலாசாரப் பண்பாடுகளை' மாற்றினால்தான் வன்முறையை இல்லாதொழிக்கலாம். இந்த மாற்றத்தை எண்ணித்தான் அவர் பயப்படுகின்றார். அவர் மட்டுமல்ல, சமூகத்தின் பல 'பெரிய மனிதர்கள்' எல்லோரும் இந்தக் காரணத்திற்காகத்தான் பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான வேலைத் திட்டங்களுக்கு தங்கள் ஆதரவினைக் கொடுப்பதில்லை. அதிகாரம் தங்கள் கைகளை விட்டு நழுவுவது எவருக்கும் பிடிக்காத ஒன்றல்லவா? அதற்கு எப்பொழுதும் அவர்கள் கையெடுக்கும் அஸ்திரம் 'கலாசாரத்தை மாற்றுகிறார்கள்' என்னும் குற்றச் சாட்டாகும்.
எங்கும் எப்போதும் கலாசாரம் மாறிக்கொண்டுதானிருக்கின்றது. மாறாத கலாசாரம் ஒன்றிருக்கு என்னும் கருத்து பச்சைப்பொய்யாகும். சுpல கலாசாரங்கள் வேகமாக மாறுகின்றன, சில மெதுவாக மாறுகின்றன, அவ்வளவுதான். கலாசாரத்தை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்திருப்பவர்கள் அதனை வன்முறை மூலமாகத்தான் செயற்படுத்தலாம். வேறு வழியேயில்லை.  இதற்கு ஒரு உதாரணமாக பாகிஸ்தானில் இருந்து ஒரு கதையைச் சொல்லலாம். இஸ்லாமிய ஆட்சி கொண்டுவரப்பட்ட வேளையில் அங்கு பெண்களெல்லோரும் கையில்லாத சட்டை போடுகிறார்களேயென்ற கூக்குரல் எழுந்தது. எனவே மதத்தீவிரவாதிகள் ஒரு பிளேட்டுடன் பாதையில் இறங்கி அங்கு கையில்லாத சட்டை போட்டுச் சென்ற சகல பெண்களின் கைகளிலும் பிளேட்டினால் கிழித்து விட்டார்களாம். இப்பொழுது அங்கே பெண்கள் கைகளை மூடிய சட்டைகள்தான் அணிகின்றனர்.
பெண்கள் மீதான வன்முறைக்கெதிராக வேலை செய்பவர்கள் இந்தக் காரணியைத் தெளிவாகப் புரிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். ஜிஏ வேண்டாம் என்கிறார் என்று பயந்தடித்து சொல்லிவிட்டு வீட்டில் இருப்பதல்ல எங்கள் பணி. ஏந்தப் பெரிய மனிதரானாலும் அவர் தவறான கருத்துக்களைக் கூறினால் அதற்கு சவால் விடத் துணிய வேண்டும். சமூகத்தில் இறங்கி இயலுமட்டும் மக்களுக்கு இதைப் பற்றி விளங்கப் படுத்தவேண்டும். ஆதிக்க உறவு முறைகளின் ஊற்றாக நாம் குடும்பத்தைப் பார்த்தாலும்கூட, இப்பொழுதே இங்கேயே குடும்பங்கள் எல்லாவற்றையும் இல்லாதொழிக்கவேண்டும் என்று கூற வரவில்லை. அம்மா, அப்பா, பிள்ளைகள் என்கின்ற சமூக அமைப்பு இப்பொழுது தோன்றியிருக்கின்றது. நாங்கள் அட்டவணையில் காட்டியதுபோல அது நாங்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன, காலப்போக்கில், உற்பத்தி உறவுமுறைகள் மாற்றமடைய அது மாற்றமடைந்து கொண்டுதான் போகப் போகிறது. எந்த சமூக உருவத்தை மறு உற்பத்தியானது எடுத்துக்கொண்டாலும், அது நீதியானதும் சமத்துவமானதுமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நாம் வலியுறுத்துகின்றோம். எனவே, தனிக்குடும்பம்தான் இப்போதுள்ள சமூக உறவுமுறையானால், பரவாயில்லை அது இருக்கட்டும், ஆனால் அதற்குள் அநீதிகள் நடக்கக் கூடாது என்கின்றோம்.
இந்த முறையான சமநோக்கு மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு நாங்கள் அவர்களுக்கு நிறையவே எடுத்து விளங்கப்படுத்த வேண்டி நேரும். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராயிருந்தாலும், சேர்ந்திருந்து அளவளாவிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்களைப் போல இதற்கு எதிராகப் பணிபுரியத் தயாராக இருப்பவர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்குள் தொடர்ந்த இணைந்த செயற்பாடுகளை ஊக்குவியுங்கள். இந்த முறையில் வன்முறைக்கெதிரான மக்களின் எண்ணிக்கையைத் திரட்டி அதிகரிக்கலாம். இவ்வாறு மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அவர்கள் அபிப்பிராயங்கள் வலுப்பெற, மாற்றங்கள் தானாகவே சமூகங்களில் நிகழும்.
  கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. உமது ஊரில் நிகழும் குடும்ப வன்முறைகள் எவையென்பது தெரியுமா? நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு சம்பவத்திலும் வன்முறையைப் பிரயொகித்தவர் யார் என்றும் அவருக்கும் வன்முறைக்குள்ளானவருக்கும் என்ன உறவு? இங்கு அதிகார உறவுமுறை என்பது தென்பட்டதா?
2. 'மாற்றம் ஒன்றுதான் இந்த உலகில் என்றும் மாறாத விஷயம்..' இந்த வசனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? புpற குழு அங்கத்தவர்களுடன் கலந்துரையாடுங்கள். ஆதி காலம் தொட்டு மாறாமல் இருந்து வருகின்ற ஏதாவது விஷயத்தை நீங்கள் காட்ட முடியுமா? உடை, உணவு, பழக்கவழக்கம், வீடு கட்டும் முறைகள், மொழி, பிரயாணஞ் செய்கின்ற முறைகள், கல்வி முறைகள், குடும்ப உறவுமுறைகள், இயற்கை இப்படி எல்லாவற்றையும் உதாரணமாகக் கொள்ளுங்கள். ஆராய்ந்த பேசி உங்கள் முடிவுகளுக்கு வாருங்கள்.
3. கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு வன்முறையில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் உங்கள் ஊரில் நடந்திருக்கின்றனவா? அவை என்ன என்று பிற அங்கத்தவர்களுக்கு விபரியுங்கள்.
4. பெண்கள் மீதான வன்முறைகள், குறிப்பாக குடும்ப வன்முறைகளை ஒழிக்க நீங்கள் உங்கள் ஊரில் என்ன செய்யலாம்?
- சக பெண்களுடன்
- ஊரிலுள்ள பெரிய மனிதர்களுடன்
- பொதுவாக ஆண்களுடன்
- பிள்ளைகளுடன்
- பாடசாலை ஆசிரியர்களுடன்
- சமயத் தலைவர்களுடன்
- பாதிக்கப்பட்டவர்களுடன்
- பாதிப்பினை ஏற்படுத்தியவர்களுடன்
- உங்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் . . . . .
எப்படியான நடவடிக்கைகளை செய்வீர்?

Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம் 

பயங்கரவாதம்

பயங்கரவாதம் எனபதன் வரைவிலக்கணம்
இன்றைய உலகில் இலங்கையின் ஜனாதிபதி உரையாற்றினால் என்ன, உலகத் தலைவர்கள் எங்கேனும் பேசினால் என்ன, அவர்களின் பேச்சில் நிச்சயமாக பயங்கரவாதம் என்பதைப் பற்றிய ஏதோவொரு குறிப்பு இருப்பதைக்காணலாம். அந்தளவுக்கு பயங்கரவாதம் என்கின்ற விடயம் உலக அரசுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இலங்கை அரசாங்கமும் பயங்கரவாதத்தை ஒழிக்கத்தான் யுத்தம் புரிகின்றோம் என்றல்லவா இதுவரைகாலமும் (2009ம் ஆண்டு) சொல்லி வந்தது? எனவேதான் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ளுவது அவசியமாகின்றது.
அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு இவ்வாறு வரைவிலக்கணம் கொடுத்திருக்கின்றது:
' பயங்கரவாதம் என்பது ஏதும் அரசியல் அல்லது மதரீதியிலான, அல்லது கருத்தியலான குறிக்கோள்களை எய்துவதற்காக அரசாங்கங்களை அல்லது சமூகங்களை பயமுறுத்தவும் வற்புறுத்தவும் உதவும் சட்ட விரோதமான வன்முறைச் செயல்களாகும்.'
இந்த வரைவிலக்கணத்தில் 'சட்ட விரோதமான வன்முறைச் செயல்கள் ' என்கின்ற பதத்தைப் பார்த்திருப்பீர்கள். சட்ட விரோதமான வன்முறைச் செயல்கள் என்ற கருத்து இருக்கின்றது உண்மெயென்றால் சட்ட பூர்வமான வன்முறைச் செயல்களும் இருக்கின்றனவென்பதும் உண்மையாக வருமல்லவா? அரசுகள்தானே சட்டங்களை இயற்றுகின்றன. அதனால்தான் சட்ட பூர்வமான வன்முறையென்பது அரசுகள் மேற்கொள்கின்ற வன்முறையாக கருதப்படுகின்றது.. பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளைக் கொண்டு அரசு மேற்கொள்ளுகின்ற வன்முறை சட்ட பூர்வமான வன்முறையாகும். அரசு அல்லாத குழுக்கள் அல்லது தனிநபர்கள் மேற்கொள்ளுகின்ற வன்முறையானது சட்ட விரோதமான வன்முறையாகும். உதாரணமாக, விடுதலைப்புலிகள் கொழும்பில் தற்கொலைக் குண்டுதாரியின் வழியாக வெடிகுண்டை வெடித்து அழிவுகள் ஏற்படுத்தினால் அதைப் பயங்கரவாதம் என்று உலகு சொல்லுகின்றது. ஆனால் கிபிர் ஜெட் கொண்டு அரசு வன்னியில் குண்டு வீச்சுக்களைப் புரிந்து வெற்றி கொண்டால் அதனை யுத்தம் என்கிறது.  இதைக் கொண்டு பார்த்தால், அரசு அல்லாத எந்தக்குழுவும் வன்முறையில் இறங்கினால் அதனைப் பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்றது எனவும் இந்தச் சொல்லை விளங்கிக் கொள்ளலாம். ஆனாலும், பயங்கரவாதத்துக்கு இது ஒரு பூரணமான விளக்கமல்ல.
பயங்கரவாதமும் கிளர்ச்சியும்
இன்றைய உலகில் அரசு அல்லாத குழுவினர் ஈடுபடும் வன்முறைகளை இரண்டு வகையில் நோக்கலாம்.
ஒரு அரசின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவோ அல்லது ஒரு நாட்டின் ஏதோவொரு பகுதியைக் கைப்பற்றும் முகமாகவோ பிரயோகிக்கப்படும் வன்முறை ஒரு வகையானது. இது கிளர்ச்சி என்று கூறப்படும். கிளர்ச்சி என்பது ஒரு நீண்ட காலமாக செயற்படும் இயக்கமாகும். இதற்காக மக்களையும் அணி திரட்டும்;. கிளர்ச்சியாளர்கள்  அரச படையினருடன்தான் பிரதானமாக மோதுவார்கள். தங்கள் நோக்கங்களை அடைவதற்கு இவர்கள் பொதுமக்களை அல்லது பொதுச் சொத்துக்களைத்தாக்கியழிக்கும் யுக்திகளையும் உபயோகிக்க முடியும். ஆனால் கிளர்ச்சிவாதிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் செயற்படமுடியாது என்கின்ற படியால் இந்த யுக்தியை ஒரு வரையறைக்குள்தான், மக்களை அதிகம் தாக்காதவாறுதான் அவர்கள் பாவிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
மக்களின் அபிப்பிராய மாற்றம், அல்லது ஏதோவொரு கொள்கை மாற்றம் அல்லது ஏதோவொரு சம்பவத்துக்கான பழிவாங்கல் நடவடிக்கைகள் இவையெல்லாம் இரண்டாவது வகையான வன்முறையாகும். இதில் ஈடுபடுவதற்கு ஒரு சிலரே போதுமானதாகும். உதாரணமாக, 1983ம் ஆண்டு மத்திய கிழக்கில் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 241 அமெரிக்க இராணுவ வீரர்கள் ஒரு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் நோக்கம் பெய்ரூட்டில் அன்று நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகளை வீட்டுக்கு அனுப்புவதாகும் இந்தச் சம்பவத்தின் பின்னர் உடனேயே அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் எடுத்து அமெரிக்கப்படைகளை வாபஸ் வாங்கியது. இதே போல், பலஸ்தீனிய அகதிகளின் நிலைகளை உலகின் கவனத்தக்குக் கொண்டுவர ஜேர்மனி மியூனிக் நகரத்தில் இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களைக் கொன்ற சம்பவத்தினையும் கூறலாம். இந்த மாதிரியான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்  அரச படையினருடன் மோத மாட்டார்கள், அவர்களுக்கு பொது மக்கள்தான் போராட்ட களமாகும். இவர்களுக்கு மக்கள் ஆதரவும் தேவையில்லை. உண்மையில், இதனைத்தான்; பயங்கரவாதம் என்று நாம் வரைவிலக்கணம் கொடுக்கலாம்.
இவை தவிர்ந்த ஏனைய அர்த்தமற்ற வெகுசன கொலைகளை நாம் குற்றச் செயல்கள் என்கின்ற பிரிவுக்குக் கீழ் பார்க்கலாம். உதாரணமாக, அமெரிக்கப் பாடசாலையொன்றின் மாணவனொருவன் திடீரென்று ஒரநாள் காலை ஒரு தன்னியக்கத் துப்பாக்கியுடன் பாடசாலை வந்து அங்கு நூற்றுக்கணக்கான தனது சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டு வீழ்த்தினான். அதற்கு ஏதுமொரு காரணம் இருந்ததாகத் தெரியவில்லை. இப்படியானவற்றைக் குற்றச் செயல்கள் என்று கூறலாமல்லவா?
ஆனால் இன்று உலக அரசாங்கங்கள் எல்லாம் இந்த மாதிரியாக வன்முறைகளை நுணுக்கமாக வேறுபடுத்திப் பார்க்க விரும்புவதில்லை. அரசு அல்லாத குழுக்களின் வன்முறைகள் ஏதோவொரு முறையில் ஏதோவொரு அரசினது அதிகாரத்துக்கு சவால் விடுவதனால், எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகக் குவித்து பயங்கரவாதம் என்கின்ற முத்திரை குத்தி  வேரோடழிக்க அவை எத்தனிக்கின்றன. இதற்கான பல கூட்டுக்களை அமைக்கின்றன. தென்னாசிய நாடுகளின் கடந்த சார்க் மாநாட்டில் சகல நாடுகளும் பேசியது பயங்கரவாதம் என்கின்ற ஒரே பிரச்சினை பற்றித்தான்.  உலக அரசாங்கங்களின் இந்த முயற்சியில் மக்களின் பங்கு என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்வதற்கு பயங்கரவாதத்தின்  அடிமூலம் என்ன என்பதை விளங்கிக் கொண்டேயாகவேண்டும்.
அரசு அல்லாத குழுக்களின் வன்முறைகளுக்குக் காரணம் என்ன?
ஆதி காலத்தில் மனிதர்கள் சிறு சிறு குடிகளாக வாழ்ந்து வந்தனர் என்று எங்களுக்குத் தெரியும். அப்பொழுதெல்லாம் ராசாக்கள் கிடையாதுதானே. ஆனால் குடிகள் பெருகப் பெருக சின்ன அவற்றின் தலைமைத்துவமாக சின்னச் சின்ன ராசாக்கள் உருவாகினர். இந்த ராசாக்களின் ஒரு படத்தை இங்கு பாருங்கள்.

அவர் ராசாவாக வந்தவுடனேயே அவருக்குக் காவலுக்கு ஈட்டியுடன் ஒருவர் நிற்கின்றார் அல்லவா? ஏன்? அன்று ஈட்டியுடன் நின்ற அரசர்கள் பிறகு காலம் செல்லச் செல்ல ஒரு காவலாளர் கூட்டத்துடனும் பெரிய படைகளுடனும் ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். இன்று பாதுகாப்பு அமைச்சும், ஆயுதப் படைகளும் இல்லாத எந்த நாடும் இருக்கின்றதா?
இதிலிருந்து ஏன்ன தெரிகிறது? மக்கள் மயப்படாத எந்த ஆட்சியாளரும் ஆயுதங்கள் கொண்டுதான் தன்னை நிலைநிறுத்துகின்றார், தனது ஆட்சியினைப் பாதுகாக்கின்றார். சுருங்கக் கூறினால் வன்முறையைப் பிரயோகிக்கும் வாய்ப்பை வைத்து பயமுறுத்திக் கொண்டுதான் எந்த அரசனோ எந்த அரசாங்கமோ மக்களை அடக்கிக் கொண்டு ஆட்சி செய்ய முடிகிறது. இன்று உலகில் நடக்கும் யுத்தங்களில் 99 வீதமானவை உள்நாட்டு யுத்தங்கள், அதாவது ஒரு அரசாங்கம் தனது பிரஜைகள் மீது செய்யும் யுத்தங்களாகும். அரசு ஆயுதம் கொண்டுதான் மக்களை அடக்கி ஆளுகின்ற படியினால், மக்களை ஆயுதம் தூக்க விடக்கூடாதுதானே. அதனால்தான் அரசு அல்லாத எவரும் ஆயுதம் பிரயோகிப்பதை சட்டத்துக்கு விரோதமான செயல் என்னும் சட்டங்களை இயற்றி விட்டிருக்கின்றன.
அரசுகள் ஆயுதபாணிகளாக இருப்பதனால்தான், அதன் அதிகாரத்துக்கு சவால் விடும் எந்தக் குழுவும் தானும் ஆயுதம் தூக்க வேண்டியதாக உள்ளது. இன்றைய அரசுகளின் அதிகாரங்களின் அளவுகளை யோசித்துப் பாருங்கள். அப்பப்பா. சொல்லி முடியாதே. அவை யாருக்கும் என்னவும் செய்யலாம் என்கின்ற அளவுக்குத் தங்களை மத்தியில்; பலப்படுத்திக்கொண்டு வந்திருக்கின்றன. இந்த அரசுகளை ஆட்டம் காண வைக்க வேண்டுமானால் வன்முறையைப் பிரயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் பலரும் நினைக்கின்றனர்.
அத்துடன், பேச்சுக்கு இல்லாத மதிப்பு வன்முறைக்கு உண்டல்லவா? எங்களது நாட்டில் ஏராளமான சிங்கள மக்கள் இனப்பிரச்சினை பிரபாகரனினால்தான் தோன்றியது என நம்புகின்றார்கள். ஆனால் பிரபாகரன் பிறக்க இருபது ஆண்டுகளுக்கு முன்னமேயே பிரச்சினை வலுப்பட்டுவிட்டது என்பதை அறியமாட்டார்கள். ஏனெனில் அப்போதெல்லாம் தமிழ் அரசியல் தலைவர்கள் வெறுமனே கதைத்துக் கொண்டிருந்தபடியால் சிங்கள மக்கள் அதைக் கவனிக்கவில்லை. பிரபாகரன் துப்பாக்கியைத் தூக்கியதும்தான் தமிழ் தேசிய பிரச்சினை என்று ஒன்றிருக்கின்றது என்று உலகமெல்லாம் அறிந்து கொண்டது. இந்தக் காரணங்களுக்கெல்லாம்தான் சாதாரண மக்கள் ஆயுதம் தூக்கக் கிளம்புகின்றனர்.
சமூகத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டத்தான் அரசாங்கங்கள் ஆயுதப்படைகளை வைத்திருக்கின்றன என்று சிலர் சொல்லலாம். உண்மைதான். ஆனால் ஆயுதப்படைகளின் மூலம் அடக்க வேண்டிய சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் அப்படித்தான் என்ன? யோசித்துப் பாருங்கள்.
மேலும், பயங்கரவாதப் பிரச்சினை இருப்பது அரசாங்கத்துக்கு அனுகூலமான காரியமாகும். பயங்கரவாதப் பிரச்சினையைக் காட்டிக் காட்டியே மக்களைப் பயத்துடன் வாழ வைத்து ஆட்சிக்கு அடங்கி நடக்க வைக்கலாம். அதைச் சாட்டியே ஜனநாயகமற்ற சட்டங்களைக் கொண்டுவரலாம். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமேயென்ற விசனத்தில் மக்கள் இம்மாதிரியான அநீதியான சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். இச் சட்டங்கள் அமுலுக்கு வந்தபின்னர் அதை வைத்துக் கொண்டு தனக்கு எதிராகக் கிளம்பும் எல்லாவகையான எதிர்ப்புக்களையும் அரசாங்கம் அடக்க வெளிக்கிடும். எங்கள் நாட்டில் 1979ம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாதத் தடைச்சட்டம் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். தமிழ் தேசியப் போராட்டத்தை அடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் பின்னர் தென்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியாளர்களை அடக்கவும் 60,000க்கு மேற்பட்ட தென்னிலங்கை மக்களைக் கொன்று குவிக்கவும் உதவியது. பிறகு எதிர்க்கட்சிகளை மிரட்டி அடக்கவும் உதவியது.
இந்தச் சட்டத்தின் உதவியுடன்தான் இதுவரை, 30 வருட காலங்களாக நூற்றுக்கண்கானோர் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்படவும், தனி ஆயுதக்குழுக்களை அரசு வைத்துக் கொண்டு மக்களைக் கொலை செய்யவும், கடத்தவும், வெகுசன ஊடகங்களை மிரட்டவும், ஊடகவியலாளர்களை கொலை செய்யவும், கூட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும் முடியுமாக இருந்திருக்கின்றது.    
பயங்கரவாதப் பிரச்சினையும் மக்களும்
ஆயுதந்தூக்கி வன்முறையில் ஈடுபடுகின்ற மக்கள் குழுக்களை பயங்கரவாதிகள் என்று பயங்கரமான முத்திரை குத்தி அரசாங்கங்கள் செய்யும் பிரச்சாரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு மக்கள் துணை போகக் கூடாது. எப்பொழுதும் எந்த வன்முறை நடவடிக்கைகளினதும் மூலங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மூலப் பிரச்சினையைத் தீர்க்க முயலவேண்டும். அதுதான் நிரந்தரமான அமைதியைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் அல்லது சமூகத்தில் அரசியல் நோக்கம் குறித்த வன்முறைகள் தலையெடுக்காமல் இருக்க வேண்டுமானால் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
முதலாவதாக, நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் ஏதோவொரு முறையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்கள் எல்லோரும் ஏதோவொரு அளவிலாவது தங்கள் தேவைகளைத் தாமே நிறைவேற்றுக்கூடிய கட்டமைப்புக்களைக் கொண்டு வரவேண்டும். இந்தத் தேவையை எங்கள் உள்ளுராட்சி மன்றங்களும் மாகாண சபைகளும் ஓரளவில் பூர்த்தி செய்கின்றன. இந்தக் கட்டமைப்புக்களுக்கு மென்மேலும் அதிகாரங்களை வழங்குமாறு நாம் வலியுறுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். இவற்றை மென்மேலும் அதிகார பூர்வமான கட்டமைப்புக்களாக மாற்ற முயலவேண்டும். ஒரு உள்ளுராட்சி மன்றமானது வெளியுறவு விவகாரம், தேசிய திட்டமிடல் நடவடிக்கை ஆகியவை தவிர்ந்த சகல விடயங்களையும் பார்க்கும் ஆற்றல் கொண்டது உங்களுக்குத் தெரியுமா?
இரண்டாவதாக, யாருக்கும் ஏதாவது குறைகள் இருந்தால், அவர்கள் கூறுவதை ஆட்சியாளர்கள் கவனமாகக் கேட்பதை உறுதி செய்ய வேண்டும். நான் துவக்குத் தூக்கினால்தான் இனி என்னை யாரும் கவனிப்பார்கள் என்று யாருமே சிந்திக்க இடமளிக்கப்படாது. இதில் எங்கள் வெகுசன ஊடகங்களுக்கு பெரும் பங்கு இருக்கின்றது. எந்தச் சின்னக் குழுவாக இருந்தாலும் அவர்களின் குறைகளைப் படம் போட்டு இவை காட்ட வேண்டும். அவர்களின் குரலைக் கேட்பது மட்டுமல்ல அவற்றைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக, நீதியாக, காரண காரியங்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மூன்றாவதாக, தனது பிரஜைகளுக்கெதிராக ஒரு அரசு வன்முறை பிரயோகிப்பதற்கு எந்தக் காரணம் கொண்டும் இடமளிக்கக்கூடாது. தனது பிரஜைகளின் அங்கீகாரத்துடன்தான் ஒரு அரசு ஆட்சி செய்கின்றது. அரசுகள் கொண்டுள்ள இறைமையானது, (அதாவது சுதந்திரமாக தன்னிச்சையாக செயற்படக்கூடிய தன்மை) அவற்றின் மக்களால்தான் வழங்கப்படுகின்றது. எனவே, தனக்கு அதிகாரம் வழங்கும் மக்களுக்கெதிராக ஒருபோதும் ஒரு அரசு அடக்குமுறையைப் பிரயோகிக்க இயலாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  அந்த மாதிரியான சட்டங்களைக் கொண்டுவந்தாலும், தனது ஆயுதப் படைகளை மக்கள் மீது ஏவி விட்டாலும், நாங்கள் விழிப்பாக இருந்து அதனை நிற்பாட்டுவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நான்காவதாக, ஒரு அரசு எவ்வளவுதான் அதிகாரம் வாய்ந்ததாக இருந்தாலும் அதனை ஆட்டம் காண வைக்க மக்களால் முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மக்கள், கூட்டங்கள் கூட்டிப் பொதுப் பிரச்சினையை ஆராய்வதையும் கூட்டாக செயற்படுவதையும் கைவிடக்கூடாது. கூட்டங்கள் கூடுவதை எந்த உருவில் அரசு மறித்தாலும் அதனை எதிர்க்க வேண்டும். இன்று எங்கள் நாட்டில் பொதுக்கூட்டங்கள் கூடவேண்டுமானால் பொலிஸ் அனுமதி வேண்டும். ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத்தான் இந்த நடைமுறை என்று சொன்னாலும், மறைவில் தமக்கு ஒவ்வாத கூட்டங்களை தடை செய்வதற்கே இந்த ஆயுதம் பிரயோகிக்கப்படுகின்றது என்பது வெள்ளிடை மலையாகும்.  போதாக்குறைக்கு பிரதேசம் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்களையும் நிறுவி பொலிஸ் மூலமாக மக்களை வேவு பார்க்க அரசாங்கம் முயலுகின்றது. இதை நாங்கள் பார்த்தறிந்து கொள்ள வேண்டும். ஒன்று கூடி அதனை மாற்ற முயற்சிக்க வேண்டும்.
இப்படியான பல புதிய சட்டங்களையும் நடைமுறைகளையும் கொண்டு வந்துதான் ஐரோப்பா கனடா ஸ்வீடன் நோர்வே ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் வன்முறையையும் பூசல்களையும் இல்லாதொழித்திருக்கிறார்கள். இங்கள்ள ஆயுதப்படைகள் வரவர சடங்குகளுக்கான படைகளாக மாறிக்கொண்டு வருகின்றன. ஏனெனில் அவற்றுக்கான தேவை அநதச் சமூகங்களில் குறைந்து கொண்டு வருகின்றது. அவர்களுக்கு அதைச் செய்யலாமென்றால் எங்களுக்கும் முடியுந்தானே.
கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. எங்கள் நாட்டில் அல்லது சமூகத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களை, கிளர்ச்சிவாதிகளின் வன்முறை, பயங்கரவாதிகளின் வன்முறை, அர்த்தமற்ற வன்முறைக் குற்றச் செயல்கள் என்று வகை பிரித்து ஆராய்ந்து பாருங்கள். இவற்றின் நோக்கங்கள் எவையாக இருந்தன? அப்பிரச்சினைகளின் மூலங்கள் என்ன?
2. பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் என்னென்ன இருக்கின்றனவென்பது தெரியுமா?
3. தெரியாவிட்டால் அதனை அறிந்து கொள்ள என்ன நடவடிக்கை எடுப்பீர்?

Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்