Thursday, May 5, 2016

பார்த்த ஞாபகம் இல்லையோ Paartha Nyabagam Illayo

இன்றும் புதிய பறவையிளிருந்து விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் சேர்ந்திசையுடன் (CHORUS) கூடிய பாடல்களில் ஒன்றை பார்ப்போம். மற்ற முக்கிய இசைக் கருவிகள், அக்கார்டியன், வயலின்கள், பாங்கோஸ், காங்கோ ட்ரம் போன்றவை.
"பார்த்த ஞாபகம் இல்லையோ" ஆனால் சுசீலாவின் குரலில் பலமுறை கேட்ட ஞாபகம் பசுமரத்தாணிபோல் இன்னும் மனதில் பதிந்துள்ளது.
முதலில் ஆர்ப்பாட்டமான பான்கோசின் தாள ஒலி, பின் மேற்கத்திய முறையில் ஒரு அக்கார்டியன் இசை, மறுபடியும் பான்கோசும் அககார்டியன் இசையும் திரும்ப வாசிக்கப்படும்.பிறகு சுசிலாவின் குரலில்
"பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ"
பல்லவியில் பாங்கோஸ் முக்கியப் பக்க வாத்தியமாகவும், கூடவே தும் தும் என்று காங்கோ ட்ரம்மின் அதிர்வும் கேட்பவர்களுக்கு ஒரு கிளப்பில் நடனக்காட்சியை காணும் உணர்வை ஏற்படுத்தும்.
முதல் சரணத்திற்கு முன் அக்கார்டியன், ட்ரம்பெட், ஜாஸ் ஆகியவற்றின் கூட்டு இசை, பிறகு வயலின்களின் இசை, பின் அக்கார்டியனின் ஒரு சிறு இசை
"அந்த நீல நதிக் கரையோரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
(இங்கு ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ என்ற சேர்ந்திசை)
நான் பாடி வந்தேன் புது ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்
அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ"
இரண்டாம் சரணத்திற்கு முன் வயோலா, பாங்கோஸ், அக்கார்டியன், ட்ரம்பெட், ஜாஸ் ஆகியவற்றின் கூட்டு இசை, பிறகு வயலின்களின் இசை
இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
(இங்கும ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ என்ற சேர்ந்திசை)
உந்தன் மனதை கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததை சொல்லும்
பிறகு அக்கார்டியன், ட்ரம்பெட், ஜாஸ் ஆகியவற்றின் கூட்டு இசை, பிறகு வயலின்களின் இசை
"அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை
இப்போது சேர்ந்திசையுடன்
"பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ
அன்று பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ"
என்று பாடி முடித்ததும் ஒரு அக்கார்டியன் சிறு இசை
பின் பான்கோசின் தாளத்தில் ஒரு தீர்மானத்துடன் பாடல் நிறைவுறும். சிவாஜியைப் போலவே நாமும் பிரமிப்பிலிருந்து மீள வெகு நேரமாகும் . சௌகார் ஜானகியின் நளினமான நடன அசைவுகள், அவரது எழில் கொஞ்சும் முக பாவங்கள், சிவாஜியின் ஸ்டைலான நடிப்பு, குழுவினரின் நேர்த்தியான நடனம், இசைக்குழுவினரின் ஆர்ப்பரிக்கும் இசை எல்லாம் சேர்ந்து நம்மை ஒரு இன்ப உலகத்துக்கே அழைத்துச சென்று விடும்.


No comments:

Post a Comment