Tuesday, October 4, 2011

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான தீர்வுகள்




குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள்ளது.
இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் மூளைக்காய்ச்சல் போன்ற அபாயங்களைத் தவிர்க்க முடியும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.

அது வரை வேறு உணவுகள் தரத் தேவையில்லை. குழந்தை பருவத்தில் அறிகுறி இல்லாமல் காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் என்பது நேரடியான நோய் கிடையாது. உடலில் உள்ள வேறு ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். எனவே காய்ச்சலுக்கு சரியான காரணம் கண்டறிந்து மருந்து அளிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த சமயத்தில் ஆரம்ப அறிகுறியை மருத்துவரிடம் காட்டி மூக்கடைப்பு, சளித் தொல்லைகளுக்கான மருந்துகளை உபயோகிக்கவும்.
அதேபோல் சத்தான உணவுகள் தருவதன் மூலமும் குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்கலாம். குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும்.
கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் துணியை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும். குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதிலும் கவனம் தேவை. தாய்ப்பால் குறைவாக இருந்தால் புட்டிப் பால் கொடுக்கப்படுகிறது.
இது போன்ற சமயத்தில் கவனமின்மையால் நோய்த் தொற்று பரவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் காய்கறிகள், கீரை வகைகளை கல் உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி சமைக்க வேண்டும்.
தண்ணீரின் வழியாக அதிகளவில் நோய்கள் பரவுவதால் காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தாமல் விடும் போது குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவுகள், பழச்சாறுகள் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குழந்தை வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது.
குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.
சாதாரண சளித் தொல்லை ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும்.
குழந்தை அழும் போது அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும் எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.
சரியான சத்தான உணவு முறை மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாது. சின்ன பிரச்னை வந்தாலும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து தரலாம்.
மருந்துக் கடைகளில் மருந்து வாங்கித் தருவது மற்றும் மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தைப் பயன்படுத்துவதும் தவறு. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை மிக்கது. அந்தக் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் பொறுப்பு.

No comments:

Post a Comment