Tuesday, September 19, 2017

என் நடுங்கங்களில் நீ...

Iyyappa Madhavan
பனிக்கால அந்தியில் விழித்த கதவினுள் வந்தாய்
தேகத்தினுள் நிசப்தமாய் விரவினாய்
என் நடுக்கங்களில் நீ உறைந்தவேளை ...
நிர்வாண நினைவில் ஏங்கி எரிந்தேன்
அதீத சீதளத்தில் உன் வேட்கையில் புதைய
மாய பிம்பமாய்ப் புலுனுற்றேன்
என் பசலை நிலை கண்டு
பரிதிகளாய் வந்திருந்து மோதிய வேளை
பெரும்காடெனப் பற்றிக்கொண்டேன்

நீயோ பனிச்சாம்பலிலிருந்து உயிர்ப்பித்தாய்
புனைந்த அழகில் கிறங்கிக் கிடந்தவனை
உன் வாஞ்சையாக மாற்றிக்கொண்டாய்
கை வளையல்களும் காற்கொலுசும் மீட்டியபோது
இசையாய்க் கரைந்துபோனேன்
உன் பித்தில் நீயாகவே இருந்தேன்

மந்த மாருதம் காதல் மென்னுணர்வுகள் இசைத்தன
உன் தோளில் நான் சாய்ந்தேன்
என் தோளில் நீ சாய்ந்தாய்
மலர்களாயின தூறிய சாரல்கள்
நறுமணம் தோய்ந்து உருகிக் மறைந்தோம்

அந்தி முடிய இருளின் வருகையில்
விண்மீன்களாய் ஒளிர்ந்தது நாணம்
நிலவொளியில் அந்தகாரம் தேய்ந்து சுருங்க
சயனத்திலிருப்பது போல் விழித்திருந்தோம்

இமைகள் மூடாதிருந்தது நீண்ட கனவு.

No comments:

Post a Comment