Wednesday, December 16, 2015

இறப்பு (அப்துல் கையூம்)


நான் மரணிக்கிறேன்….
கைகளை அசைக்க எத்தனிக்கிறேன்
கால்களை நகர்த்த முயற்சிக்கிறேன்
இத்தனைக் காலம் …
என்னோடு பழகிய உறுப்புக்கள்
என் பேச்சையே செவிமடுக்க
ஏன் மறுக்கின்றன..?
வாய்கிழிய பேசும் எனக்கு
வார்த்தைகளே வெளிவர மாட்டேன்கிறதே?
யாரங்கே..?
காரிருளை என் கண்களுக்குள்
களமிறக்குவது யார்?
திறந்துமூடும் என் இமைகளை
திணறடிப்பது யார் வேலை?
நாடித் துடிப்புகளை
நாசுக்காய் குறைப்பது யார்?
பழகிப்போன மூச்சுகூட
பழுதாகிப் போகின்றதே!
உள்ளங்காலில் தொடங்கும் கடுப்பு
ஒவ்வொரு அங்குலமாய்
உச்சந்தலைவரை ஏறுகிறதே..!
நினைவுவந்த நாள் முதலாய்
எனக்கும் என் உடம்புக்குமிருந்த
இறுக்கமான அன்னியோன்யத்தை
யார் பிரித்துப் பார்ப்பது ?
எதோ ஒரு இழுபறி
எனக்குள் நடப்பது
எனக்கே புரிகின்றது!
போதும் போதும்…
யாராவது நிறுத்துங்களேன்!!
இப்படியொரு வேதனையை
இதுவரையில் நான்
எதிர்கொண்டதே இல்லையே..?
வீறாப்பாய் விறைத்தும் முறைத்தும்
வெட்டி கெளரவம் பார்த்த என்தேகம்
விரைவாய் விறைக்கின்றதே?
மணக்க மணக்க
திரவியம்பூசும் என்மேனி
கனத்துப்போய் நாறுமோ இனி?
“மரணத்தை தழுவினான்”
என்று எழுதுகிறார்களே!
தழுவுவது சுகமல்லவா? – இது
தண்டனை போலல்லவா இருக்கிறது.?
ஊசி முனை ஓட்டையில்
ஒட்டகத்தை இழுப்பது
இலகுவான காரியமா என்ன..??
அப்துல் கையூம்

No comments:

Post a Comment