Search This Blog

Thursday, August 15, 2019

வேசங்கள் தரித்தலின்றி சாத்தியமற்றது வாழ்வு



வேசங்கள் தரித்தபடிதான்
நமக்கு வாய்க்கப்பட்ட இவ்வாழ்வினை
நகர்த்தித் தொலைய வேண்டியிருக்கிறது
அன்றி நிர்ப்பந்தத்திற்குள்ளாகிறோம்
நம்மை கடந்து செல்பவர்களை
அல்லது நாம் கடந்து செல்பவர்களை
நிறைய சமாளிக்க வேண்டி நேரிடுகிறது
சில சமயம் மழுப்பவும் தோணூகிறது
அவர்கள் என்ன நினைத்து விடுவார்களென்றே
பாதி வாழ்க்கை ஐயத்துடனும்
மீதி வாழ்க்கை பதட்டத்துடனும் கழிகிறது
மிக நெருக்கடியான தருணங்களில்
தப்பித்துச் செல்வதற்காக
கள்ளச் சாட்டுகளை முன் வைக்கிறோம்
இரத்த உறவுகளுடன் அடிக்கடி ஊடாடும்
தேவைகள் இருப்பதனால்
புதிது புதிதாக முகங்களை
மாற்றி மாற்றி அணிந்து கொள்கிறோம்
சில தருணங்களில்
அவர்களை வசப்படுத்தவென
நேசம் மீந்த வார்த்தைகளை கையாள்கிறோம்
மெருகூட்டிப் பேசுகிறோம்
இயன்றளவு செதுக்கிச் செப்பனிட்டாலும்
கைசேதப்பட்டு நிற்கையில்
காலை வாரிவிட நினைத்தலினிடை
வாழ்தலில் அறமென்பது சாத்தியமற்றதாகிறது
எதிரும் புதிருமான இவ்வாழ்வினை
வேசங்கள் தரிக்காமல் வேறெப்படி
கொண்டு செல்ல முடியுமென கருதுகிறீர்கள்
0
ஜமீல்

Venice - Veneto, Italy...


இது முதன் முறையல்ல



அவர்கள் ஏலவே திட்டமிட்டபடி
தனித்தனியாகப் பிரிந்தும்
கூட்டம் கூட்டமாகவும்
பலமற்ற விலங்குகளை பிடித்துண்ணும்
கழுதைப் புலிகள் போன்று
எங்கள் பூர்வீக நிலங்களுக்குள்
இருளின் புதரி்ல் பதுங்கியபடி ஊடுருவினர்
முதலில் எங்களது வணக்கஸ்தலங்களை
அடித்து நொறுக்கினர்
புனித நூல்கள் மீதும்
தொழுகை விரி்ப்புகள் மீதும்
காலைக் கிளப்பி மூத்திரம் அடித்தனர்
பின்னர் குடியிருப்புகளுக்குள்ளும்
கடைத் தொகுதிகளுக்குள்ளும்
பரவசத்துடன் நுழைந்தனர்
அங்கு அவர்கள் என்ன அளிச்சாட்டியம்
புரிந்திரிப்பார்களென்று
விபரிக்கத் தேவையில்லையென கருதுகிறேன்
அதற்கான அவகாசமும் என்னிடமில்லை
இவ்வாறு அவர்கள் அத்து மீறி வருவது
இது முதன் முறையல்ல
இதற்கு முன்னரும்
நிறையத் தடவைகள் வந்திருக்கின்றனர்
அவர்கள் வழமைபோல்
எங்களை நெருங்கும்போது
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது
ஊரடங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தன
துப்பாக்கிகளை வெளியே நீட்டியபடி
கவச வாகனங்கள் அணியணாயாய் நின்றன
எல்லாவற்றையும் கடந்து
சிப்பாய்களின் தோழ்களில் அமர்ந்தபடி
மிக இலகுவாக தங்களது தாகத்தை
தீர்த்துச் சென்றனர்
அவர்கள் திரும்பிச் செல்லும்போது
அவர்களது கரங்களில்
எங்களது ரத்தம் படிந்திருந்தது
மாறாக அவர்களிடத்தில்
மனசாட்சி இருந்திருக்கவில்லை
நேயம் இருந்திக்கவில்லை
எங்களது வாழ்வை தீக்கிரையாக்கிச் செல்லும்
ஒவ்வொரு தடவையும்
நாங்கள் நிராயுதபாணிகளாகவே நின்றிருந்தோம்
தவிரவும் அன்பை மட்டுமே போதிக்கும்
புத்தனின் சீடர்களுக்கெதிராக
வேறு என்ன செய்யலாமென கருதுகிறீர்கள்
0
ஜமீல்