Search This Blog

Tuesday, June 5, 2018

MSM...ஸ்டெர்லைட்ஆலை ஒரு பார்வை


1.உரிமையாளர்-அனில் அகர்வால்
2.தலைமையிடம்-இலண்டன்
3.நிறுவனப் பெயர்- வேதாந்தா ரிசோர்ஸ்
4.அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி
5.முக்கிய உற்பத்தி- தாமிரம் (copper )
6.கழிவு உற்பத்தி- தங்கம், சல்ப்யூரிக் அமிலம் , பாஸ்ஃபோரிக் அமிலம்
7.முதலில் தேர்ந்த இடம்- குஜராத்
8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத், கோவா, கர்நாடகா, கேரளா
9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா , ரத்னகிரி
10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்
11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு
12.அப்போதைய முதல்வர்-ஜெ.ஜெயலலிதா
13.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்
14.முதல் உண்ணாவிரத போராட்டம் -1996
15.போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை
16.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி
17.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7
18.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)
19.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)
20.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)
21.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -12
22.ஐந்தாம் விபத்து-ஆயில் டேங்க் வெடிப்பு
23.ஆறாம் விபத்து -நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்
24.உற்பத்தி செய்தது-2லட்சம் டன் (2005 கணக்கில்)
25.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28
26.தொடக்கம் முதல் எதிர்க்கும் கட்சி-மதிமுக
27.ஆலையை எதிர்த்து வாதாடியவர்-வை.கோ(1998)
28.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா
29.100 கோடி அபராத்துடன் மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து-உச்சநீதிமன்றம்
30.தமிழ்நாடு பசுமை வாரிம் -தடை
31.தேசிய பசுமை வாரியம்- அனுமதி

ஹிந்தித் திரைப்படம் பிங்க்.(PINK)



உமா வரதராஜன்
முக்கியமான ஹிந்தித் திரைப்படம் பிங்க்.(PINK).
பணக்காரப் பையன்கள் போல் தோன்றும் மூவர் அருகிலிருக்கும் ஒரு மருத்துவமனைக்கு தங்கள் வாகனத்தில் அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கிறார்கள் . அவர்களில் ஒருவனது தலையிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது .
அதே நகரத்தின் இன்னொரு புறத்தில் ,அதே இரவில் நவநாகரீகத் தோற்றம் கொண்ட மூன்று இளம் பெண்கள் வாடகைக் காரில் தங்கள் அபார்ட்மென்டுக்கு பதட்டத்துடன் விரைகிறார்கள் . தங்கள் மனைக்குள் நுழையும் அவர்கள் தங்கள் நடுக்கத்தைக் கை விட்டு இயல்பு நிலைக்கு மீள முயல்கிறார்கள். இயல்பிலேயே சுதந்திர மனநிலையையும் , தன்னம்பிக்கையையும் கொண்ட அந்தப் பெண்களுக்கு அன்றைய இரவு சோதனை மிக்கதாக அமைந்து விட்டது.
சற்று முன் ஹோட்டேலொன்றில் நிகழ்ந்த ரொக் இசை நிகழ்ச்சியின் போது அறிமுகமான அந்த மூன்று இளைஞர்களும் தோழிகள் மூவரையும் ‘டின்னருக்கு’ அழைக்கின்றனர். இரவுணவுக்கு முன்னர் அனைவரும் மதுவருந்துகின்றனர். இந்த சூழ்நிலையைப் பயன் படுத்திக் கொள்ள நினைக்கும் ரஜ்வீர் –அந்த மூன்று இளைஞர்களில் ஒருவன் – மூன்று தோழியர்களில் ஒருத்தியான மினாலிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயல்கின்றான் . அவள் தன் சம்மதமின்மையைத் தெரிவித்த போதும் அவன் அவளை வன்முறை மூலம் அடையலாம் என எண்ணுகிறான். நிலைமையின் விபரீதத்தை உணரும் மினால் தன் கையில் கிடைத்த போத்தலொன்றால் அவனுடைய தலையில் ஓங்கி அடித்து விட்டு தன் தோழிகளுடன் அங்கிருந்து தப்பித்து தன் அபார்ட்மென்ட்டை அடைந்திருக்கிறாள்.
காயமடைந்த ரஜ்வீர் அந்தப் பகுதி எம்.எல்.ஏ. யின் மருமகன்; அவருடைய மகளைத் திருமணம் செய்தவன். காவல்நிலையத்துக்கு சென்று முறைப்பாடு கொடுத்து இந்த செய்தி வெளியுலகுக்குப் பரவுவதை அவன் விரும்பவில்லை. தலைக் காயத்தை விட ,தான் ஆண் என்ற இறுமாப்பு மனதுக்குக் கிடைத்த அடி அவனை வாட்டியெடுக்கிறது. மினாலையும்,தோழிகளையும் பழி தீர்க்க வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கிறான். இதனால் தோழிகள் மூவரும் வெவ் வேறு அச்சுறுத்தல்களை சந்திக்கின்றனர்.
இவர்களின் அயல்வாசியான தீபக் என்ற முதியவர் இவர்கள் மூவரின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து அவதானித்து வருபவர். ‘இவர்களுக்கு ஏதோ பிரச்சினை ‘ என்ற உள்ளுணர்வின் உந்தலால் தீபக் அவர்களிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளுகிறார் . அவர் ஓய்வு நிலையில் இருக்கும் மதிப்பு மிக்க வழக்கறிஞர் என்பதைத் தோழிகள் அறிந்து கொள்ளுகின்றனர் .தங்கள் பிரச்சினையைத் தீர்க்க அவருடைய உதவியை நாடுகின்றார்கள் . அவருடைய ஆலோசனையின் பிரகாரம் முறைப்பாடு செய்ய காவல் நிலையம் செல்கின்றனர் . உள்ளூர் காவல்நிலையம் இவர்கள் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. அவர்கள் முறைப்பாட்டைத் தட்டிக் கழிக்க வேண்டும் என்ற முன்தீர்மானத்துடன் காவல் நிலையம் இருப்பது போல் தோன்றுகின்றது. காரணம் , ரஜ்வீரின் மாமனார் அப் பிரதேசத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கும் ஓர் அரசியல்வாதி .
மூவரில் ஒருத்தியான மினால் வழமை போல் அதிகாலையில் தன் ஓட்டப் பயிற்சியை மேற் கொண்டிருக்கும் போது வாகனமொன்றில் வரும் அந்த மூன்று இளைஞர்களாலும் கடத்தப் படுகிறாள் . ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்தில் வைத்து மிரட்டப் படுகிறாள். தங்கள் பலப் பிரயோகத்தின் மூலம் பல்வேறு முறைகளிலும் மினாலை அவர்கள் இம்சை செய்து இழிவு படுத்துகிறார்கள். காவல் நிலையத்தில் தங்களுக்கெதிராகப் புகார் அளிக்கும் முயற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் அவள் சற்று நேரத்தில் வாகனத்திலிருந்து இறக்கி விடப் படுகிறாள் .
இது நடந்து சில நாட்களுக்குள் காவல்துறையினர் மினாலின் அபார்ட்மென்டுக்குள் நுழைகின்றனர். மினால் ஒரு பாலியல் தொழிலாளி எனவும் பணம் கறக்கும் நோக்கத்துடன் தன்னை அணுகியதாகவும் ,தான் அதற்கு இணங்காததால் தன்னை அடித்துக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் ரஜ்வீர் அளித்த பொய்முறைப்பாட்டின் பேரில் இப்போது மினால் கைது செய்யப் படுகிறாள். வழமை போல் அரசியல் பலம் உண்மையின் குரல்வளையை நெரிக்க முயல்கிறது.
‘ இது வரை பொறுத்தது போதும் ‘ என்று சொல்லிய வாறு இப்போது தீபக் களத்தில் நேரடியாக இறங்குகிறார் . அவளைப் பிணையில் வெளியே எடுப்பதோடல்லாமல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் உண்மைத் தன்மையை அம்பலப் படுத்துகிறார் .
**********************************************
இந்தப் படத்தின் நீதிமன்றக் காட்சிகளில் தீபக் முன் வைக்கும் வாதங்கள் மறக்க முடியாதவை .
நீண்ட இடைவெளிக்குப் பின் தளர்வான நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகும் தீபக்கின் குரல் நீதிபதிக்குப் புரியவில்லை . ‘‘சற்று சத்தமாக பேச முடியுமா ? ‘’ என நீதிபதி கேட்டுக் கொள்கிறார் . தொண்டையைச் செருமிக் கொண்டு தீபக் பேசத் தொடங்குகிறார் . அதன் பின் வரும் காட்சிகளும் , வாதங்களும் நம்மை இந்தத் திரைப்படத்துடன் ஒன்றிக்கச் செய்பவை. ‘தீபக்’காக நடிக்கும் அமிதாப் பச்சனின் திரையுலக வரலாறில் இந்தப் படத்துக்கும் முக்கியமான இடமிருக்கும். அவருடைய உடல் மொழி, குரலின் ஏற்ற இறக்கங்கள் உணர்வு ரீதியான அதிர்வுகளை ஒரு ரசிகனுக்குள் ஏற்படுத்தக் கூடியவை. தீபக் தன் வாதத்தில் முன் வைக்கும் விஷயங்கள் நம் முகத்தில் அறைபவை.
‘ இல்லை .. முடியாது ...வேண்டாம் ‘ என்று சொல்லுகின்ற பெண்களின் உரிமைக்குத் தீபக் தன் வாதத்தில் முக்கியத்துவம் அளிக்கிறார்.
‘ஒரு பெண் இரவில் வீட்டுக்குத் தாமதமாக வந்தால் அல்லது வீட்டிலிருந்து வெளியேறி வாழ்ந்தால் அல்லது சுதந்திரமாக இருக்க முயற்சித்தால் அல்லது மதுவருந்தினால் விமர்சிக்கப் படுகிறாள் .உரையாடல்களின் போது பெண்ணொருத்தி புன்னகைக்கக் கூடாது.கைத் தொலைபேசிகள் பெண்களுக்கு ஆகாதவை. அவர்களைப் படிப்பிக்கத் தேவையில்லை .முடிந்தளவுக்கு விரைவாக அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டும். ஆனால் ஆண்களோ இந்த அளவுகோல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள் ’ என தீபக் சாடுகின்றார் .
தீபக் இறுதியாகக் கூறுகின்றார் . ‘’ மினால் வேண்டாம் என்றாள். வேண்டாம் என்பது சும்மா ஒரு வார்த்தை அல்ல. அது முழுமையான ஒரு வாக்கியம். இதற்கு மேலதிக விளக்கம் எதுவும் தேவைப் படாது. வேண்டாம் என்றால் வேண்டாம்தான் ...’’


Friday, May 25, 2018

மட்டக்களப்பு வேடுவர் ஆய்வின் முன்னோடி செலிக்மன்





-என்.சரவணன்-
இலங்கையின் இனவரைவியல் பற்றிய ஆய்வுகளில் வேடுவர் பற்றி ஆய்வு செய்த செலிக்மன் தம்பதிகளின் ஆய்வு இன்று வரை மானுடவியலாளர்கள், இனவியலாளர்கள் போன்றோரால் போற்றப்பட்டு வருகிறது.
செலிக்மன் (Charles Gabriel Seligman) தனது ஆய்வை மேற்கொள்வதற்காக 16.12.1907 அன்று தனது துணைவியுடன் (Brenda Zara Salaman) இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்தடைந்தார். மொத்தம் மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் தங்கியிருந்து நாடு முழுவதும் அலைந்து திரிந்து தனது ஆய்வை முடித்துக் கொண்டார். அவர் மேற்கொண்ட ஆய்வு 1911 ஆம் ஆண்டு “The Veddas” (வேடுவர்) என்கிற தலைப்பில் 623 பக்கங்களில் நூலாக வெளிவந்தது. அதை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் லண்டனில் வெளியிட்டது. இந்த நூல் உலகளவில் பிரசித்தம் பெற்றது.
இந்த நூலுக்காக செலிக்மன் தம்பதிகள் பல மாதங்கள் வேடுவர்களுடனேயே வாழ்ந்திருக்கிறார்கள். காடுகளிலும், குகைகளிலும் அவர்கள் கண்டவை, கேட்டவை என்பவற்றை விஞ்ஞானபூர்வமான ஆய்வுக்குட்படுத்தினார்கள். வேடுவர்களின் இசையை பதிவு செய்திருக்கிறார்கள். செலிக்மன் எடுத்த புகைப்படங்களும், ஓவியங்களும், விளக்கப் படங்களும் அந்த நூலில் பல இடங்களில் காணக் கிடைக்கிறன.
செலிக்மனும் அவரது துணைவி பிரண்டா சாராவும் அந்தப் பெரு நூலின் ஆசிரியர்கள். 98 ஆண்டுகள் கழித்து 2009 இல் இந்த நூலை இலங்கையில் சிங்களத்திற்கு மொழிபெயர்த்து (மொழிபெயர்ப்பு: நிஸ்ஸங்க பெரேரா) கொடகே பதிப்பகம் வெளியிட்டது. அதே ஆண்டு சிங்களத்தில் “பாஸ்ட் பப்ளிஷன்” (மொழிபெயர்ப்பு: சந்திரசிறி ரணசிங்க) என்கிற நிறுவனமும் வெளியிட்டது. தமிழில் செலிக்மன் பற்றி எங்கு தேடினாலும் சிறு தகவல் கூட கிடைப்பதில்லை.
ஆனால், அவரது ஆய்வை சிங்கள பேரினவாதிகள் போற்றுவதில்லை. அதற்கான காரணமும் இலங்கை சிங்கள நாடு என்கிற ஐதீகத்தை உடைக்கும் பல சான்றுகளும் அவரது ஆய்வில் புதைந்து கிடக்கின்றன. உதாரணத்திற்கு புத்தர் இலங்கைக்கு வந்திறங்கியது யாழ்ப்பாணத்திலிருக்கும் நாகதீபத்தில் என்கிற வரலாற்றுப் புரட்டை இன்றைய ஆய்வாளர்கள் பலர் மறுக்கிறார்கள். சமீபத்தில் கூட பௌத்த மதத் தலைவர்களில் ஒருவரான வல்பொல கல்யாணதிஸ்ஸ மஹா தேரோ ஆற்றிய ஒரு உரையில் “மகாவம்சத்தில் குறிப்படப்படும் நாகதீபம் என்பது யாழ்ப்பாணத்தில் இருப்பதல்ல. அது மகியங்கனைக்கு அருகில் இருக்கிறது என்றும். சில அரசியல் வரலாற்றுக் காரணங்களினால் அந்த உண்மை மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.” என்று கூறியிருந்தார்.
செலிக்மன் தனது நூலில் நாகதீப என்கிற இடத்தைத் தான் மதவாச்சி என்று அழைத்து வந்திருக்கிறார்கள் என்று ஹென்றி பார்க்கரை ஆதாரம் காட்டுகிறார். ஹென்றி பார்க்கர் (Henry Parker) கிட்டத்தட்ட செலிக்மன் காலத்திலேயே “சிங்கள பழங்குடிகளின் வாய்மொழி நாட்டுப்புற கதைகளை ஆய்வு செய்து 1910இல் “Village folk-tales of Ceylon” என்கிற நூலை எழுதியவர். செலிக்மன் ஹென்றியை அவரின் நூலில் 122 இடங்களில் ஆதாரம் காட்டுகிறார். அதுபோல ஹென்றி பார்க்கர் 1909 இல் வெளியிட்ட முக்கிய நூலான புராதன இலங்கை (Ancient Ceylon) என்கிற நூலில் செலிக்மனின் ஆய்வை பல இடங்களில் பிரஸ்தாபிக்கிறார்.
செலிக்மன் தனது ஆய்வின் விபரங்களை (வரைபடத்துடன்) 23.05.1908 அன்று “இலங்கை றோயல் ஆசிய கழகத்தின்” கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.[i] கூட்டத்தின் போது நிகழ்ந்த கலந்துரையாடலும் அவரின் பரிந்துரைகளும் அக்கழகத்தின் சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. அப்போது அந்தக் கழகத்தின் தலைவராக இருந்தவர் ஜோன் பெர்கியுசன். அவர் தான் செலிக்மனை தேசாபதியின் வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு வரவழைத்தவர். இலங்கையின் தேசாதிபதி ஹென்றி மக்கலம் (Sir Heney McCallum) அந்த அவைக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். அக்கூட்டத்தை ஆரம்பித்து அவர் உரையாற்றும் போது “இலங்கையில் வேடுவர் இனம் மிகவும் வேகமாக அழிந்துவந்திருக்கிறது. இதப் பற்றிய விரிவான ஒரு சமூக ஆய்வொன்றின் அவசியம் கருதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹட்டன் (Haddon) அவர்களைக் கொட்டுக்கொண்டேன் அவர் இந்த விடயத்துக்கு பொருத்தமானவராக பேராசிரியர் செலிக்மனை எமக்கு பரிந்துரைத்தார்” என்றார். அப்போது அந்தக் கூட்டத்தின் இறுதியில் அக்கழகத்தின் உபதலைவராக இருந்த சேர் பொன் அருணாச்சலம் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து ஆமோதித்தார்.[ii]
செலிக்மன் தனது ஆய்வை முடித்து விட்டுத் திரும்பியதன் பின்னர் பல உலக நாடுகளில் இலங்கையின் வேடுவர் குறித்தும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் விரிவுரைகளை நிகழ்த்தியிருப்பதை அறிய முடிகிறது. [iii]
பின்வந்த ஆய்வாளர்கள் பலருக்கும் கைகொடுத்த நூல் அது. இனவரைவியல் மாத்திரமல்ல, தொல்லியல், சாதியம் பற்றிய ஆய்வுகளுக்கு கூட அவரது இந்த நூலை கையாண்டிருப்பதை பல இடங்களிலும் காண முடிகிறது.
இந்த ஆய்வைத் தூண்டிய காரணிகள் பற்றி அவரது முன்னுரையில் காணக் கிடைக்கிறது.
வேடர்களுக்கும் தமிழ் சிங்கள மக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றிய ஆழமான ஆய்வு விபரங்களை அவர் முன்வைத்தார். அவரது நூலைப் பார்த்தால் அவருக்கு இது தொடர்பில் உசாத்துணையாக பயன்படுத்துமளவுக்கு அவருக்கு முந்திய நூல்கள கிடைக்கவில்லை என்பதை அறிய முடியும். ஆனால் அவருக்கு பின்வந்தோர் பலர் செலிக்மனின் ஆய்வைக் கொண்டாடுவதைக் காண முடியும்.
அவர் ஆய்வு செய்தது ஒட்டுமொத்த இலங்கையின் ஆதிவாசிகளை பற்றித்தான் என்றாலும் ஒரு தனியான அத்தியாயம் (12வது) கிழக்கிலங்கை கடல் வேடுவர் பற்றியது. இலங்கையின் கராவ (சிங்கள சமூகத்தில்), கரையார் (தமிழ் சமூகத்தில்) ஆகிய சாதிகளை ஆராய்ந்தவர்களும் இந்த ஆய்வை உன்னிப்பாக கையாண்டுள்ளனர்.
இலங்கையின் பழங்குடிகளை ஆராய்பவர்கள் நூற்றாண்டுக்கு முன்னரேயே அது பற்றிய குறிப்புகளை எழுதிய Robert knox,John Davy, D.Pridham, Sir Emerson Tennent, B.F.Hartshorne, John Bailey, C.S.V.Stevens போன்றோரின் குறிப்புகளையும் கையாள்வார்கள். இலங்கையின் பழங்குடிகள் பற்றி இவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் பற்றிய விபரங்களைப் பற்றி 1899 இலேயே பேராசிரியர் W.M.TURNER, எழுதிய“Contributions to the Craniology of the people of the Empire of India” என்கிற நூலில் நிறையவே எழுதியிருக்கிறார். செலிக்மன் போல அதை ஒரு ஆழமான, விஞ்ஞானபூர்வமான விடயதானமாக எடுத்து கள ஆய்வுகள் செய்து பன்முக கோணத்தில் விரிவான விஞ்ஞானபூர்வமான ஆய்வாக முன்வைத்தது இல்லை.
அவர் மட்டக்களப்பு வேடுவர் குறித்து குறிப்பாக கடல் வேடுவர் குறித்து எழுதியவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.