Search This Blog

Thursday, September 4, 2014

ஒரு சின்ன, நல்ல விஷயம் - ரேமண்ட் கார்வர்,தமிழில்: ஜி. குப்புசாமி

சனிக்கிழமை பிற்பகல் ஷாப்பிங் சென்டரில் இருந்த பேக்கரிக்குச் சென்றாள். கேக்குகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்த லூஸ்-லீஃப் பைண்டரைப் புரட்டிப் பார்த்துவிட்டுப் பையனுக்குப் பிடித்தமான சாக்லேட் கேக்கை ஆர்டர் செய்தாள். அவள் தேர்ந்தெடுத்த கேக்கில் ஒளிவீசும் வெள்ளை நட்சத்திரங்களுக்குக் கீழே ஒரு விண்வெளிக்கலமும் ஏவுதளமும் மற்றொரு மூலையில் சிவப்பு ஃபிராஸ்டிங்கில் ஒரு கிரகமும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தpic0505-carver001க் கிரகத்திற்குக் கீழே அவன் பெயர் 'ஸ்கூட்டி' எனப் பச்சை எழுத்துகளில் இருக்கும். அடுத்த திங்கட்கிழமை அவள் மகனுக்கு எட்டு வயது என்பதை அவள் அந்த வயதான, தடிமனான கழுத்தைக் கொண்டிருந்த  ரொட்டிக் கடைக்காரனிடம் சொன்னபோது எதுவும் பதிலுக்குச் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். மேலங்கியைப் போலக் காணப்பட்ட ஏப்ரன் ஒன்றை அந்த பேக்கர் அணிந்திருந்தான். பட்டையான நாடாக்கள் அவன் கைகளுக்கடியில் நுழைந்து முதுகிற்குச் சென்று, மீண்டும் சுற்றிக்கொண்டு முன்னால் வந்து அவனது தடிமனான இடுப்பிற்குக் கீழே கட்டப்பட்டிருந்தன. கைகளை ஏப்ரனில் துடைத்துக்கொண்டே அவள் சொல்வதைக் கேட்டான். புகைப்படங்களின் மீது பார்வையைப் பதித்தபடி அவள் சொல்லும்போது குறுக்கிடாதிருந்தான். அவன் வேலைசெய்வதற்காக வந்திருப்பவன், ராத்திரி முழுக்க அங்கேயே ரொட்டியும் கேக்கும் செய்துகொண்டிருப்பவன். அவனுக்கு எந்த அவசரமும் கிடையாது.
அவள் அந்த பேக்கரிடம் தன் பெயரையும் ஆன் வைஸ், தொலைபேசி எண்ணையும் கொடுத்தாள். கேக் திங்கட்கிழமை காலை அடுப்பிலிருந்து தயாராக வந்துவிடும். அன்று பிற்பகலில்தான் பையனின் பார்ட்டி. அந்த ரொட்டிக் கடைக்காரன் ஓர் உற்சாகி அல்ல. அவர்களுக்கிடையே அனாவசியமாக எந்தவொரு பேச்சும் இல்லை. தேவையான தகவல்கள், குறைந்தபட்ச வார்த்தைகள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்பட்டன. அவளை அவன் அசௌகரியமாக்கியிருந்தான், அதை அவள் ரசிக்கவில்லை. கையில் பென்சிலோடு கவுன்ட்டரில் அவன் குனிந்திருந்தபோது, அவனது கரடுமுரடான தோற்றத்தை உற்றுக் கவனித்தாள். ரொட்டி சுடுவதைத் தவிர வேறு எந்த வேலையையாவது அவன் வாழ்க்கையில் செய்திருப்பானா என்று வியந்தாள். அவள் முப்பத்து மூன்று வயதான ஒரு தாய். எல்லோருக்குமே, குறிப்பாக அந்த பேக்கரின் வயதில் இருப்பவர்களுக்கு - அவன் அவளுக்கு அப்பாவாக இருக்கக்கூடிய வயது - நிச்சயம் குழந்தைகள் இருந்திருக்கும், கேக்குகளும் பிறந்த நாள் விழாக்களுமாக இருக்கும் இத்தகைய விசேஷமான பொழுதுகளை அவர்கள் கடந்திருப்பார்கள். அந்தப் பரவசவுணர்ச்சி அவர்களிடையே எப்போதுமிருக்கும் என்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் அவனது - முரட்டுத்தனமல்ல - முசுடுத்தனத்தில் அவனோடு நட்பாகப் பேசும் முயற்சியைக் கைவிட்டாள். பேக்கரியின் பின்கட்டில் அலுமினிய ரொட்டிக் கரண்டிகள் அடுக்கிய ஒரு நீளமான கனத்த மரமேஜையும் அதற்குப் பக்கத்தில் காலி ரேக்குகளோடு ஓர் இரும்பு அலமாரியும் தெரிந்தன. அங்கே மிகப் பெரிய அடுப்பு ஒன்றிருந்தது. ஒரு ரேடியோ கிராமப்புற மேற்கத்திய சங்கீதம் பாடிக்கொண்டிருந்தது.
அவன் ஸ்பெஷல் ஆர்டர் அட்டையில் தகவல்களை எழுதி முடித்துவிட்டு பைண்டரை மூடிவைத்தான். அவளை நிமிர்ந்து பார்த்து, "திங்கட்கிழமை காலை" என்றான். அவள் நன்றி கூறிவிட்டு வீட்டிற்குத் திரும்பினாள்.
திங்கட்கிழமை காலை பர்த்டே பாய் பள்ளிக்கு இன்னொரு சிறுவனோடு சென்றுகொண்டிருந்தான். உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் ஒன்றை அவர்கள் பகிர்ந்துகொண்டு நடக்கும்போது பர்த்டே பாய் அன்று பிற்பகல் விருந்தில் அவன் நண்பன் என்ன பரிசளிக்கவிருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்கும் ஆர்வத்தில் அவனைத் தள்ளிக்கொண்டு சாலைச் சந்திப்பைக் கவனிக்காமல் குறுக்கே சென்றுவிட, உடனே ஒரு கார் அவனை இடித்துத் தள்ளியது. தலை சாக்கடையிலும் கால்கள் சாலையிலுமாக ஒருக்களித்து அவன் விழுந்தான். அவன் கண்கள் மூடியிருந்தன. ஆனால் கால்கள் எதன் மீதோ ஏற முயல்வதுபோல உதைத்துக்கொண்டன. அவன் சினேகிதன் உருளைக்கிழங்கு சிப்ஸ் பொட்டலத்தைக் கீழே போட்டுவிட்டு உடனடியாக அழத் தொடங்கினான். கார் ஒரு நூறு அடிதூரம்வரை சென்று சாலையின் நடுவில் நின்றது. ஓட்டுநர் இருக்கையில் இருந்தவன் திரும்பிப் பார்த்தான். அச்சிறுவன் தடுமாறியபடியே எழுந்து நிற்கும்வரை காத்திருந்தான். சிறுவன் கொஞ்சம் தள்ளாடினான். அதிர்ச்சியில் இருப்பவனைப் போல்தான் தெரிந்தது. மற்றபடி பரவாயில்லை. டிரைவர் காரை கியருக்குக் கொண்டுவந்து கிளம்பிச் சென்றான்.
பர்த்டே பாய் அழவில்லை. ஆனால் அவனுக்குச் சொல்லவும் எதுவுமில்லை. கார் மேலே இடித்தது எப்படி இருந்ததென்று அவன் நண்பன் கேட்டபோது அவன் பதிலளிக்கவில்லை. அவன் வீட்டிற்குத் திரும்பி நடக்க, அவன் நண்பன் பள்ளிக்குச் சென்றான். பர்த்டே பாய் வீட்டிற்குள் சென்று தன் அம்மாவிடம் அதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தபோது சோபாவில் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, அவன் கையை மடியில் அழுத்திக்கொண்டு "ஸ்கூட்டி, என் செல்லமே, உனக்கு வேறு ஒன்றுமில்லையே, நன்றாகத்தானே இருக்கிறாய்?" என்று கேட்டதும், எப்படியும் அவள் டாக்டரிடம் கூட்டிப்போகத்தான் போகிறாள் என்று நினைத்தபடி, சட்டென்று சோபாவில் மல்லாந்து படுத்துக் கண்களை மூடி மயங்கிப்போனான். அவனை அவளால் எழுப்ப முடியாதபோது, தொலைபேசிக்கு விரைந்து வேலையில் இருந்த தன் கணவனை அழைத்தாள். அமைதியாக இரு, அமைதியாக இரு என்று அவளிடம் சொல்லிவிட்டு ஆம்புலன்ஸை அழைத்தான் ஹோவர்ட். அங்கிருந்தே மருத்துவமனைக்குப் புறப்பட்டான்.
பர்த்டே பார்ட்டி ரத்துசெய்யப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு லேசான 'கன்கஷன்'. தலையில் பேரதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறினர். வாந்தியும் இருந்தது. அது நுரையீரலுக்குச் சென்றுவிட, அன்று பிற்பகல் அதை பம்ப் செய்து வெளியேற்ற வேண்டியிருந்தது. இப்போது அவன் மிக ஆழமான உறக்கத்தில் இருப்பதைப் போலத் தானிருந்தான். ஆனால் கோமா அல்ல. பெற்றோர்களின் கண்களில் கலவரத்தைப் பார்த்ததும் நிச்சயமாகக் கோமா அல்ல என்றார் டாக்டர் பிரான்ஸிஸ். பற்பல எக்ஸ்ரேக்களுக்கும் பரிசோதனைக்கும் பிறகு, சிறுவன் அமைதியாகத் தூங்கிக்கொண்டிருப்பதைப் போலவும், இனி எப்போது வேண்டுமானாலும் எழுந்துவிடுவானென்றும் தோன்றியபோது ராத்திரிப் பதினோரு மணிக்கு ஹோவர்ட் மருத்துவமனையை விட்டுக் கிளம்பினான். அவனும் ஆனும் பையனோடு அன்று பிற்பகலிலிருந்து மருத்துவமனையில் இருந்திருக்கின்றனர். இப்போது அவன் கொஞ்சநேரம் வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு உடைமாற்றி வரலாமென்று, "ஒரு மணிநேரத்தில் திரும்பிவிடுவேன்" என்றான். அவள் தலையசைத்தாள். "பரவாயில்லை, நான்தான் இங்கே இருக்கிறேனே?" என்றாள். அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவர்கள் கைகளைத் தொட்டுக்கொண்டனர். படுக்கைக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து, மகன் எவ்விதப் பிரச்சினையுமின்றிக் கண்விழிப்பதற்காகக் காத்திருந்தாள். அதற்குப் பிறகுதான் அவளுக்கு ஆசுவாசப்பட முடியும்.
ஹோவர்ட் மருத்துவமனையிலிருந்து, ஈரமான கரிய தெருக்களில் வேகமாக வீட்டிற்குச் சென்றான். பின் தன்னுணர்வு வந்தவனாக வேகத்தைக் குறைத்துக்கொண்டான். இதுவரைக்கும் அவன் வாழ்க்கை எந்தத் தடங்கலுமின்றி அவன் திருப்தி கொள்ளும் வகையிலேயே சென்றிருக்கிறது. கல்லூரி, திருமணம், வர்த்தகத்தில் மேற்படிப்பிற்காகக் கல்லூரியில் மற்றொரு வருடம், ஒரு முதலீட்டு நிறுவனத்தில் ஜூனியர் பார்ட்னர்ஷிப், அப்புறம் அப்பாவானான். மகிழ்ச்சியாக மட்டுமல்ல, அதிர்ஷ்டசாலியாகவும் இருந்துவந்திருக்கிறான். அது அவனுக்குத் தெரிந்திருந்தது. அவன் பெற்றோர் இன்னமும் இருக்கின்றனர். அவன் சகோதரர்களும் சகோதரியும் நல்லவிதமாகக் காலூன்றியிருக்கின்றனர். அவனுடைய கல்லூரி நண்பர்கள் உலகெங்கும் நல்ல பதவிகளில் இருக்கின்றனர். அவனுக்குப் பிரச்சினையை உண்டாக்கக்கூடுமென்று அவன் அறிந்திருந்த பல இச்சைகளிலிருந்து அவன் விலகியே இருந்துவந்திருக்கிறான். அதிர்ஷ்டம் மாறிவிட்டாலோ விஷயங்கள் திடீரெனத் திரும்பிவிட்டாலோ அவை அவனை முடமாக்கிவிடும் அல்லது கீழே வீழ்த்திவிடும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. வீட்டின் வாகனப் பாதையில் நுழைந்து வண்டியை நிறுத்தினான். அவனது இடதுகால் நடுங்கத் தொடங்கியது. ஒரு நிமிடம் காருக்குள்ளேயே உட்கார்ந்தபடி இப்போதைய நிலைமையை எப்படி எதிர்கொள்வதென்று பகுத்தறிவோடு சிந்திக்க முயன்றான். ஸ்கூட்டியின் மீது ஒரு கார் மோதிவிட்டது, அவன் மருத்துவனையில் இருக்கிறான், ஆனால் அவன் குணமடைந்துவிடப் போகிறான். ஹோவர்ட் கண்களை மூடி முகத்தைக் கையால் அழுத்தித் துடைத்துக்கொண்டான். காரிலிருந்து வெளியேவந்து முன்வாசல் கதவை நெருங்கினான். வீட்டிற்குள்ளே நாய் குரைத்துக்கொண்டிருந்தது. டெலிபோன் விடாப்பிடியாக அடித்துக்கொண்டிருக்க, கதவின் பூட்டைத் திறந்து, தடுமாறித் தடவி ஸ்விட்சைப் போட்டான். அவன் மருத்துவமனையைவிட்டு வந்திருக்கவே கூடாது, வந்திருக்கவே கூடாது. "காட் டாமிட்" என்று சபித்துக்கொண்டே ரிஸீவரை எடுத்து, "இப்போதுதான் நான் உள்ளே நுழைகிறேன்" என்றான்.
"இங்கேயிருக்கிற ஒரு கேக்கை எடுத்துப் போகவில்லை," அந்தப் பக்கத்திலிருந்த குரல் சொன்னது.
"என்ன சொல்கிறாய்?" என்றான் ஹோவர்ட்.
"கேக்" என்றது அக்குரல். "ஒரு பதினாறு டாலர் கேக்."
ஹோவர்ட் ரிஸீவரைக் காதோடு அழுத்திப் புரிந்துகொள்ள முயன்றான். "கேக்கைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது", என்றான். "ஜீஸஸ், நீ எதைப் பற்றிப் பேசுகிறாய்?"
"அப்படிச் சொல்லக் கூடாது," என்றது அந்தக் குரல்.
ஹோவர்ட் டெலிபோனை வைத்தான். சமையலறைக்குச் சென்று கொஞ்சம் விஸ்கி எடுத்துக்கொண்டான். மருத்துவமனைக்கு போன்செய்தான். குழந்தையின் நிலைமை அப்படியேதான் இருக்கிறது, இன்னமும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறான், எதிலும் மாற்றமில்லை. குளியல் தொட்டிக்குள் நீர் சரிய, ஹோவர்ட் முகத்திற்கு சோப் தடவிச் சவரம் செய்துகொண்டான். தொட்டிக்குள் இறங்கிக் கை கால்களை நீட்டிக்கொண்டு கண்களை மூடியவுடனேயே தொலைபேசி மீண்டும் அடித்தது. துள்ளியெழுந்து டவல் ஒன்றைச் சுற்றிக்கொண்டு தொலைபேசியிடம் ஓடினான். மருத்துவமனையை விட்டு வந்ததற்காகத் தன்னைத்தானே, "முட்டாள், முட்டாள்" என்று திட்டிக்கொண்டே ரிஸீவரை எடுத்து "ஹலோ! ஹலோ!" என்று கத்த, மறுமுனையில் சத்தமே இல்லை. அழைத்தவன் தொடர்பைத் துண்டித்தான்.
நள்ளிரவுக்குச் சற்றுநேரம் கழித்து மருத்துவமனைக்கு அவன் திரும்பிவந்தான். கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் ஆன் இன்னமும் அமர்ந்திருந்தாள். ஹோவர்டை நிமிர்ந்து பார்த்துவிட்டுத் திரும்பவும் மகனிடம் பார்வையைத் திருப்பிக்கொண்டாள். சிறுவனின் கண்கள் இன்னமும் மூடியேயிருந்தன. தலையில் பாண்டேஜ்கள் சுற்றப்பட்டிருந்தன. அவனது சுவாசம் அமைதியாகவும் சீராகவும் இருந்தது. படுக்கைக்கு மேலேயிருந்த கொக்கியில் குளுக்கோஸ் பாட்டில் மாட்டப்பட்டு, அதிலிருந்து புறப்பட்ட குழாயின் முடிவிலிருந்த ஊசி சிறுவனின் கையில் குத்தப்பட்டிருந்தது.
"எப்படி இருக்கிறான்?" என்றான் ஹோவர்ட். குளுக் கோஸையும் ட்யூபையும் காட்டி, "என்ன இதெல்லாம்?"
"டாக்டர் பிரான்ஸிஸ் உத்தரவு" என்றாள். "அவனுக்குச் சக்தி தேவைப்படுகிறதாம். அவன் பலத்தை இழக்காதிருக்க வேண்டுமாம். ஏன் இவன் எழுந்திருக்கமாட்டேனென்கிறான் ஹோவர்ட்? இவனுக்குப் பிரச்சினை ஒன்றுமில்லையென்றால் எதற்கு இதெல்லாம்? எனக்குப் புரியவில்லை."
ஹோவர்ட் அவள் பின்னந்தலையில் கையை வைத்துக் கூந்தலைக் கோதினான். "அவனுக்குச் சரியாகிவிடும். கொஞ்சநேரத்தில் எழுந்துவிடுவான். டாக்டர் பிரான்ஸிஸ§க்கு எது என்னவென்று தெரியும்."
கொஞ்சநேரம் கழித்துச் சொன்னான், "நீ வேண்டுமானால் வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு வரலாமே? நான் இங்கேயே இருக்கிறேன். ஒரு கிறுக்கன் போன் செய்துகொண்டேயிருக்கிறான், கண்டுகொள்ளாதே. அவன்தானென்று தெரிந்தால் உடனே போனை வைத்துவிடு."
"யார் கூப்பிடுவது?"
"யாரென்று தெரியவில்லை. வேறு வேலை எதுவுமில்லாமல் சும்மாவேனும் எல்லோரையும் எழுப்பிக்கொண்டிருக்கிற எவனோ. நீ கிளம்பு."
அவள் தலையாட்டி மறுத்தாள். "வேண்டாம். நான் நன்றாகவே இருக்கிறேன்."
"அப்படியா? கொஞ்சநேரம் வீட்டுக்குப் போய்விட்டுக் காலையில் வா. எல்லாம் சரியாகிவிடும். டாக்டர் பிரான்ஸிஸ் என்ன சொல்லியிருக்கிறார்? ஸ்கூட்டிக்குச் சரியாகிவிடும் என்றாரா இல்லையா? நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது அவன் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவ்வளவுதான்."
ஒரு நர்ஸ் கதவைத் தள்ளித் திறந்தபடி வந்தாள். அவர்களிடம் தலையசைத்துவிட்டுப் படுக்கைக்கருகே சென்றாள். போர்வைக்கடியிலிருந்த இடதுகையை வெளியிலெடுத்து மணிக்கட்டில் தன் விரல்களை அழுத்தி நாடித்துடிப்பைக் கண்டுபிடித்துக் கைக்கடிகாரத்தைக் கவனித்தாள். சிறிது நேரத்தில் அந்தக் கரத்தைப் போர்வைக்கடியில் மீண்டும் வைத்துவிட்டுப் படுக்கையின் கால்மாட்டிற்குச் சென்றாள். அங்கே கட்டிலில் மாட்டியிருந்த ஒரு க்ளிப் போர்டில் எதையோ எழுதினாள்.
"எப்படியிருக்கிறான்?" என்றாள் ஆன். ஹோவர்டின் கை அவள் தோளில் பாரமாக இருந்தது. அவன் விரல்களிலிருந்த அழுத்தம் அவளுக்குப் புரிந்தது,
"அப்படியேதான் இருக்கிறான்," என்றாள் நர்ஸ். பிறகு, "டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வருவார். டாக்டர் ஆஸ்பிட்டலுக்கு வந்துவிட்டார். இப்போது ரவுண்ட்ஸில் இருக்கிறார்" என்றாள்.
"இவள் வேண்டுமானால் வீட்டுக்குப் போய்க் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு வரட்டுமே என்று சொல்லிக்கொண்டிருந்தேன்" என்றான் ஹோவர்ட். "டாக்டர் வந்ததற்குப் பிறகுதான்" என்றான்.
"அவர்கள் போகட்டும்," என்றாள் நர்ஸ். "நீங்கள் இருவருமே வீட்டுக்குப் போய்விட்டு வரலாமென்று நினைக்கிறேன், உங்களுக்கு இஷ்டப்பட்டால்." அந்த நர்ஸ் பொன் நிறக் கூந்தல் கொண்ட ஒரு குண்டான ஸ்காண்டிநேவியப் பெண். அவள் பேச்சின் உச்சரிப்பில் அதன் சாயல் தெரிந்தது.
"டாக்டர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். நான் டாக்டரிடம் பேச விரும்புகிறேன். இவன் இதைப் போலத் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாதென்று நினைக்கிறேன். இது ஒரு நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை." அவள் தன் கண்களைப் பொத்திக்கொண்டு தலையைக் குனிந்துகொண்டாள். ஹோவர்டின் பிடி அவள் தோளில் இறுகியது. பின் அவன் கை கழுத்திற்கு நகர்ந்து ஆதரவாக வருடியது.
"டாக்டர் பிரான்ஸிஸ் சில நிமிடங்களில் இங்கே இருப்பார்" என்றாள் நர்ஸ். பின் அவள் அறையிலிருந்து வெளியேறினாள்.
ஹோவர்ட் தன் மகனை வெறித்துப் பார்த்தபடியிருந்தான். போர்வைக்கடியிலிருந்த அந்தச் சின்ன நெஞ்சு நிதானமாக எழும்பித் தாழ்ந்துகொண்டிருந்தது. அவன் அலுவலகத்திற்கு ஆனின் தொலைபேசி வந்த அந்த பயங்கர நிமிடங்களுக்குப் பிறகு, முதல்முறையாக இப்போது தன் கால்களில் நிஜமானதொரு பயம் உருவாகிவருவதை உணர்ந்தான். அவன் தலையைக் குலுக்கிக்கொள்ளத் தொடங்கினான். ஸ்கூட்டி நன்றாகத்தான் இருக்கிறான். வீட்டில் அவனுடைய படுக்கையில் தூங்குவதற்குப் பதில், ஆஸ்பத்திரிப் படுக்கையில் தலையில் பேண்டேஜ்களோடும் கையில் ட்யூபோடும் இருக்கிறான். ஆனால் இப்படிப்பட்ட சுயசமாதானம்தான் அவனுக்கு அந்தக் கணத்தில் தேவையாக இருந்தது.
டாக்டர் பிரான்ஸிஸ் உள்ளே நுழைந்து சில மணிநேரங்களுக்கு முன்னால்தான் சந்தித்திருந்தாலும் ஹோவட்டோடு கைகுலுக்கினார். ஆன் நாற்காலியிலிருந்து எழுந்தாள், "டாக்டர்?"
"ஆன்?" என்று கேட்டபடியே தலையசைத்தார். "முதலில் இவன் எப்படியிருக்கிறான் என்று பார்த்து விடலாம்," என்றார் டாக்டர். படுக்கையின் பக்க வாட்டிற்கு நகர்ந்து சிறுவனின் நாடித்துடிப்பைப் பரிசோதித்தார். கண் இரப்பைகளை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்தார். ஹோவர்டும் ஆனும் டாக்டருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு கவனித்தனர். டாக்டர் போர்வையை விலக்கி, ஸ்டெதாஸ்கோப்பினால் அவன் இதயத்தையும் நுரையீரல்களையும் கவனித்தார். வயிற்றில் அவரது விரல்களை அங்குமிங்குமாக அழுத்திப் பார்த்தார். சோதித்து முடித்ததும் கால்மாட்டிற்குச் சென்று சார்ட்டைப் படித்தார். நேரத்தைக் குறித்துவிட்டு, சார்ட்டில் எதையோ கிறுக்கினார். ஹோவர்டையும் ஆனையும் ஏறிட்டார்.
"டாக்டர், இவன் எப்படியிருக்கிறான்?" என்றான் ஹோவர்ட். "இவனுக்கு என்னதான் ஆகியிருக்கிறது?"
"ஏன் இவன் விழிக்கவேமாட்டேனென்கிறான்?" என்றாள் ஆன்.
டாக்டர் அகன்ற தோள்களும் வெயிலில் பழுத்த முகமும் கொண்ட ஓர் அழகான மனிதர். நீலநிற 'த்ரீ-பீஸ்' சூட்டும் கோடிட்ட டையும் தங்கத்தில் கஃப்லிங்க்குகளும் அணிந்திருந்தார். அவரது சாம்பல் நிற முடி தலையின் பக்கவாட்டாக அழுத்தி வாரப்பட்டு, இப்போதுதான் ஒரு இசைக் கச்சேரியிலிருந்து வந்தவர்போலக் காணப்பட்டார். "இவன் நன்றாகத்தான் இருக்கிறான்," என்றார் டாக்டர். "பயப்படுவதற்கு எதுவுமில்லை, சரியாகிவிடுவானென்றுதான் சொல்வேன். நன்றாகத்தான் இருக்கிறான். இருந்தாலும் அவன் கண் விழிக்க வேண்டும். வெகுசீக்கிரமே மயக்கத்திலிருந்து விழித்துக்கொள்வான்." டாக்டர் சிறுவனை மீண்டும் பார்த்தார். "சில டெஸ்ட் ரிசல்ட்டுகள் வந்தவுடன் இரண்டொரு மணி நேரத்தில் நமக்குத் தெளிவாகிவிடும். ஆனால் நம்புங்கள், இவன் நன்றாகத்தான் இருக்கிறான். மண்டையோட்டில் ஒரு மயிரிழை விரிசல் இருப்பதைத் தவிர வேறெதுவும் இல்லை."
"ஹோ, நோ," என்றாள் ஆன்.
"முன்பே சொன்னதைப் போல மூளையில் கொஞ்சம் அதிர்ச்சி-கன்கஷன்-ஏற்பட்டிருக்கிறது, அதிர்ச்சியில்தான் இருக்கிறான்" டாக்டர் சொன்னார். "அதிர்ச்சி ஏற்பட்ட கேஸ்களில் இப்படிப் பார்க்க முடியும். இப்படிப்பட்ட மயக்கம்."
"அபாயக் கட்டத்தில் இவன் இல்லைதானே?" ஹோவர்ட் கேட்டான். "முன்பு நீங்கள் அவன் கோமாவில் இருக்கவில்லை என்றீர்கள். அப்போது இதைக் கோமா என்று உங்களால் சொல்ல முடியவில்லை . இப்போது அப்படிச் சொல்வீர்களா டாக்டர்?" ஹோவர்ட் காத்திருந்தான். டாக்டரை உற்றுநோக்கினான்.
"இல்லை, இதை ஒரு கோமா என்று அழைக்க நான் விரும்பவில்லை," டாக்டர் சொல்லிவிட்டுச் சிறுவனின் பக்கம் மீண்டும் ஒருமுறை பார்வையைத் திருப்பினார். "இவன் வெறும் ஆழமான தூக்கத்தில் இருக்கிறான். உடம்பு தனக்குத்தானே செய்துகொள்கிற நிவாரண நடவடிக்கை இது. உண்மையான அபாயம் எதுவும் அவனுக்கு இல்லை. அதை மட்டும் நிச்சயமாகச் சொல்வேன். ஆனால் அவன் விழித்தெழுந்தவுடன் மற்ற டெஸ்ட்டுகளைச் செய்துபார்த்தால்தான் நமக்கு மேலும் தெரியும்."
"இது ஒருவகையான கோமாதான், இல்லையா?" என்றாள் ஆன்.
"அப்படிச் சொல்ல முடியாது" என்றார் டாக்டர். இதைக் கோமா என்றழைக்க நான் விரும்பமாட்டேன். இதுவரைக்கும் இல்லை. ஒரு பெரிய 'ஷாக்'கில் இவன் பாதிப்படைந்திருக்கிறான். இதைப் போன்ற ஷாக் கேஸ்களில் இவ்விதமான விளைவுகள் நேருவது இயல்புதான். உடல்ரீதியான காயத்தின் வேதனைக்கு இது ஒரு தற்காலிக எதிர்வினை. கோமா? கோமா என்பது ஓர் ஆழ்ந்த, தொடர்ச்சியான நினைவிழந்த நிலை. அது நாட்கணக்கிலோ வாரக்கணக்கிலோகூட நீடிக்கலாம். ஸ்கூட்டி அத்தகைய கட்டத்தில் இல்லை. எங்களால் சொல்ல முடிந்த அளவில் இல்லை. இவன் நிலைமை காலையில் நிச்சயம் முன்னேற்றம் தெரியும் என்று உறுதியாகச் சொல்வேன். பந்தயம் கட்டுகிறேன் பாருங்கள். அவன் எழுந்தவுடன் நமக்கு மேலும் தெரியவரும், அதற்கு அதிக நேரம் ஆகாது. அதற்குள் நீங்கள் வேண்டுமானால் கொஞ்சநேரம் வீட்டுக்குப் போய் வரலாம் அல்லது இங்கேயே இருக்கலாம், உங்கள் இஷ்டம். எப்படியிருந்தாலும் மருத்துவமனையிலிருந்து வெளியே போய் வர வேண்டுமென்றால், தாராளமாகச் சென்றுவாருங்கள். இது பெரும் சோதனைதான் உங்களுக்கு. எனக்குத் தெரியும்." டாக்டர் மீண்டும் சிறுவனைக் கூர்ந்து கவனித்துவிட்டு ஆன் பக்கம் திரும்பி, "நீங்கள் கவலைப்படாதீர்கள். என்னை நம்புங்கள். என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் கொஞ்சநேரத்தில் எல்லாம் சரியாகிவிடும்." அவர் அவளிடம் தலையசைத்துவிட்டு ஹோவர்டுடன் மீண்டும் கைகுலுக்கிவிட்டு, அறையைவிட்டு வெளியேறினர்.
ஆன், மகனின் நெற்றியில் கையை வைத்தாள். "குறைந்தபட்சம் இவனுக்குக் காய்ச்சலாவது இல்லாமலிருக்கிறதே" என்றாள். பின், "மை காட், ஆனால் ஏன் இவ்வளவு சில்லென்று இருக்கிறான், ஹோவர்ட்? இப்படியா சாதாரணமாக இருப்பான்? இவன் நெற்றியைத் தொட்டுப்பாருங்கள்."
ஹோவர்ட் மகனின் நெற்றிப்பொட்டைத் தொட்டுப் பார்த்தான். ஹோவர்டின் சுவாசம் தடைபட்டது. "இப்போதைக்கு இப்படித்தான் இருப்பானென்று நினைக்கிறேன்" என்றான். "இவன் 'ஷாக்'கில் இருக்கிறான், ஞாபகமிருக்கிறதா? அப்படித்தானே டாக்டர் சொன்னார்? டாக்டர் இப்போதுதான் வந்துசென்றிருக்கிறார். ஸ்கூட்டிக்கு ஏதாவது சரியில்லை யென்றால் சொல்லியிருப்பாரே."
ஆன் உதட்டைக் கடித்தபடி அங்கேயே நின்றிருந்தாள். பின் நாற்காலிக்கு நகர்ந்து உட்கார்ந்துகொண்டாள்.
ஹோவர்ட் அவளுக்குப் பக்கத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். அவர்கள் ஒருவருக் கொருவர் பார்த்துக்கொண்டனர். ஏதாவது பேசி அவளுக்குத் தைரியமூட்டலாமென்று அவன் விரும்பினான். ஆனால் அவனும் பயந்திருந்தான். அவள் கையை எடுத்துத் தன் தொடையின் மேல் வைத்துக் கொண்டான். அவள் கை அவன் மேல் இருப்பது இறுக்கத்தைக் கொஞ்சம் தளர்த்தியது. அவள் கையை எடுத்து அழுத்தினான். பின் கையை வெறுமனே ஏந்திக்கொண்டிருந்தான். அவர்கள் அதே நிலையில் உட்கார்ந்தபடி, தம் மகனைக் கவனித்தபடி எதுவும் பேசாமல் சமைந்திருந்தனர். அவ்வப்போது அவள் கையை இறுக்கினான். கடைசியில் தன் கையை விடுவித்துக்கொண்டாள்.
"நான் பிரர்த்தனை செய்துகொண்டிருந்தேன்." என்றாள்.
அவன் தலையசைத்தான்.
"எப்படிப் பிரார்த்திப்பது என்பதையே ஏறக்குறைய மறந்துவிட்டேனென்று நினைத்தேன். நான் செய்ய வேண்டியிருந்ததெல்லாம் கண்களை மூடிக் 'கடவுளே தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். ஸ்கூட்டிக்கு உதவுங்கள்' என்று சொல்வது. அப்புறம் மீதியெல்லாம் சுலபமாகிவிட்டது. வார்த்தைகள் அங்கேயே இருந்தன. நீங்கள்கூடப் பிரார்த்திக்கலாம்."
"நான் ஏற்கனவே பிரார்த்தித்துவிட்டேன்," என்றான். "இன்று பிற்பகல்-நேற்று பிற்பகல், ஐமீன்-நீ என்னிடம் தொலைபேசியில் பேசியபிறகு, நான் மருத்துவமனைக்கு வந்தபோது, பிரார்த்தித்துக்கொண்டேன்."
"நல்லது," என்றாள். முதன்முறையாக அவர்கள் இருவரும் இந்த நெருக்கடியான நேரத்தில் ஒன்றாக இருப்பதை அவள் உணர்ந்தாள். அதுவரையில் அவளும் ஸ்கூட்டியும் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாக அவளுக்குத் தோன்றிவந்தது. அவன் என்னதான் அங்கேயே இருந்து வந்தாலும் தேவைப்பட்டிருந்தாலும் அவர்கள் உலகத்தில் ஹோவர்டை அவள் அனுமதித்திருக்கவில்லை. அவன் மனைவியாக இருப்பதற்கு அவள் மகிழ்ச்சியுற்றாள்.
அதே நர்ஸ் உள்ளே வந்து சிறுவனின் நாடித்துடிப்பை மீண்டும் கவனித்தாள். படுக்கைக்கு மேலே தொங்கிக்கொண்டிருந்த பாட்டிலிலிருந்து இறங்கும் குளுக்கோஸின் வேகத்தைச் சோதித்தாள்.
ஒரு மணிநேரம் கழித்து, மற்றொரு டாக்டர் வந்தார். தன் பெயர் பார்ஸன்ஸ் என்றார். ரேடியாலஜியிலிருந்து வருகிறாராம். அவருக்கு அடர்த்தியான மீசை இருந்தது. லோஃபெர்ஸ் செருப்புகளும் ஒரு வெஸ்டர்ன் சட்டையும் ஜீன்ஸ§ம் அணிந்திருந்தார்.
"இவனைக் கீழே கொண்டுபோய் இன்னும் சில படங்கள் எடுக்கப்போகிறோம்" என்றார் அவர்களிடம். "இன்னும் சில படங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு ஸ்கேன் எடுக்கப்போகிறோம்."
"என்னது?" என்றாள் ஆன். "ஸ்கேனா?" அந்தப் புதிய டாக்டருக்கும் படுக்கைக்கும் நடுவில் நின்றாள். "உங்களுக்கு வேண்டிய எல்லா எக்ஸ்ரேக்களையும் ஏற்கனவே எடுத்துவிட்டீர்களென்று நினைத்தேன்."
"இன்னும் சில தேவைப்படுவதாகத் தோன்றுகிறது" என்றார். "பயப்படுவதற்கு எதுவுமில்லை. இன்னும் கொஞ்சம் படங்கள் எங்களுக்குத் தேவை, அவனுக்கு மூளையில் ஸ்கேன் எடுக்க வேண்டும்."
"மை காட்" என்றாள் ஆன்.
"இதைப் போன்ற கேஸ்களில் இது ஒரு மிகவும் இயல்பான செயல்முறைதான்" என்றார் புதிய டாக்டர். "இவனுக்கு ஏன் மயக்கம் தெளியவில்லையென்பதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு வழக்கமான மருத்துவச் செயல்முறைதான், பயப்படுவதற்கு எதுவுமில்லை. சில நிமிடங்களில் இவனைக் கீழே கொண்டுசெல்கிறோம்."
சிறிது நேரத்தில் இரண்டு பணியாளர்கள் சக்கர ஸ்ட்ரெச்சரோடு அறைக்குள் வந்தனர். கரிய கேசமும் கரிய தேகமும் கொண்டிருந்த அவர்கள் வெள்ளைச் சீருடையில் இருந்தனர். ஓர் அந்நிய மொழியில் தமக்குள் ஓரிரு வார்த்தைகள் சொல்லிக்கொண்டு சிறுவனை குளுக்கோஸ் குழலிலிருந்து விடுவித்துப் படுக்கையிலிருந்து ஸ்ட்ரெச்சருக்கு மாற்றித் தள்ளிக்கொண்டு வெளியேறினர். ஹோவர்டும் ஆனும் அதே லிஃப்ட்டில் ஏறிக்கொண்டனர். ஆன் குழந்தையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள். லிஃப்ட் இறங்கத் தொடங்கியதும் அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஸ்ட்ரெச்சரின் இருபக்கத்திலும் நின்றிருந்த பணியாளர்களில் ஒருவன் மட்டும் அவர்கள் மொழியில் ஏதோ சொல்ல மற்றவன் மெதுவாக தலையசைத்ததைத் தவிர, வேறு எதுவும் பேசாமல் வந்தனர்.
அதற்குப் பின் அன்று காலை எக்ஸ்ரே டிபார்ட்மென்ட்டுக்கு வெளியே வெயிட்டிங் ரூமின் ஜன்னல்களைச் சூரியன் வெளிச்சப்படுத்தத் தொடங்கியபோது அவர்கள் சிறுவனை வெளியேகொண்டுவந்து அவன் அறைக்கு உருட்டிச் சென்றனர். ஹோவர்டும் ஆனும் அவனோடு மறுபடியும் ஒரே லிஃப்ட்டில் மேலே சென்றனர். இப்போதும் படுக்கைக்குப் பக்கத்திலேயே நின்றிருந்தனர்.
அவர்கள் அன்று முழுவதும் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் மகன் விழிக்கவில்லை. அவர்களில் யாராவது ஒருவர் எப்போதாவது அறையை விட்டுக் கீழே போய்ச் சிற்றுண்டியகத்தில் காபி சாப்பிடுவார்கள். பின் திடீரென்று ஞாபகம் வந்ததுபோலக் குற்றவுணர்வோடு மேஜையிலிருந்து எழுந்து அவசர அவசரமாக அறைக்குத் திரும்பிவருவார்கள். டாக்டர் பிரான்ஸிஸ் அன்று பிற்பகல் மீண்டும் வந்து சிறுவனை மறுபடியும் பரிசோதித்துவிட்டு, அவர்களிடம் அவன் நன்றாக முன்னேறிவருவதாகவும் இப்போது எந்த நிமிடமும் அவன் விழித்துக்கொள்வானென்றும் சொல்லிவிட்டுச் சென்றார். முந்தின இரவில் இல்லாத நர்ஸ்கள் அவ்வப்போது உள்ளே வந்துசென்றனர். பிறகு சோதனைக் கூடத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண் கதவைத் தட்டிவிட்டு வந்தாள். அவர்களிடம் எதுவும் சொல்லாமல் சிறுவனின் கரத்திலிருந்து ரத்தம் எடுத்தாள். மகனின் கையில் அந்தப் பெண் சரியான இடத்தைத் தேடி ரத்தநாளத்தைக் கண்டுபிடித்து ஊசியைக் குத்தும்போது ஹோவர்ட் தன் கண்களை மூடிக்கொண்டான்.
"இதெல்லாம் எனக்குப் புரியவேயில்லை" என்றாள் ஆன் அப்பெண்ணிடம்.
"டாக்டர் உத்தரவு" என்றாள் இளம்பெண். "என்னைச் செய்யச் சொன்னதைச் செய்கிறேன். ரத்தம் எடுக்கச் சொன்னார்கள், எடுத்தேன். சரி, இவனுக்கு என்ன பிரச்சினை?" என்றாள். "அழகாக இருக்கிறான்."
"அவன்மீது ஒரு கார் மோதிவிட்டது" என்றான் ஹோவர்ட். "ஹிட் அண்ட் ரன்."
அந்த இளம்பெண் தலையை ஆட்டிக்கொண்டு சிறுவனை மீண்டும் பார்த்தாள். அவளது ட்ரேவை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.
"ஏன் இவன் விழிக்கமாட்டேனென்கிறான்? ஹோவர்ட்? இவர்களிடமிருந்து எனக்குச் சில பதில்கள் வேண்டும்."
ஹோவர்ட் எதுவும் பேசவில்லை. அவன் மீண்டும் நாற்காலியில் அமர்ந்து ஒரு காலை எடுத்து மற்றதன் மேல் போட்டுக்கொண்டான். முகத்தை அழுத்தித் துடைத்தான். அவன் மகனைப் பார்த்துக்கொண்டே நாற்காலியில் பின்னுக்குச் சாய்ந்து, கண்களை மூடித் தூங்கிப்போனான்.
ஆன் ஜன்னலுக்குச் சென்று வெளியே வாகனங்கள் நிறுத்தியிருந்த இடத்தை வெறித்தாள். அப்போது இரவு. விளக்குகள் பிரகாசிக்க கார்கள்அந்த பார்க்கிங் ஏரியாவிலிருந்து வந்து சென்றுகொண்டிருந்தன. ஜன்னலின் அடிக்கட்டையைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த அவளுக்குப் புதிதான ஏதோவொன்றிற்குள், துயரமிக்க ஏதோவொன்றிற்குள் அவர்கள் இருப்பதைப் போல இதயத்தில் தோன்றியது. பயம் நிரம்பிப் பற்கள் கிடுகிடுக்க அவள் தாடையை இறுக்கினாள். மருத்துவமனைக்கு முன்பாகப் பெரிய கார் ஒன்று வந்து நிற்பதும், லாங் கோட் அணிந்திருந்த யாரோ ஒரு பெண் காருக்குள் ஏறுவதும் தெரிந்தது. அவளுக்கு அந்தப் பெண்ணாக, ஏதோ ஒருத்தியாக, எவளோ ஒருத்தியாக இங்கிருந்து எங்கேயோ போகிறவளாக, அவள் போய் வண்டியை நிறுத்தி இறங்கியவுடனேயே காத்துக்கொண்டிருந்த ஸ்கூட்டி 'அம்மா' என்று ஓடிவந்து கைக்குள் புகுந்துகொள்ள அவனைத் தூக்கிக்கொள்பவளாகத் தான் இருக்கக் கூடாதா என்றிருந்தது.
சிறிது நேரத்தில் ஹோவர்ட் தூங்கியெழுந்தான். உடனே திரும்பி மகனைப் பார்த்தான். நாற்காலியிலிருந்து எழுந்து, நீட்டி நிமிர்த்திக்கொண்டு சன்னலுக்கருகே அவளிடம் சென்று பக்கத்தில் நின்றான். இருவரும் வாகன நிறுத்தத்தை வெறித்துப் பார்த்திருந்தனர். அவர்கள் எதுவும் பேசவில்லை. ஆனால் கவலை அவர்களை வெளிப்படையானவர்களாக ஒரு பரிபூர்ணமான இயல்பான வகையில் ஆக்கியிருந்தாலும் ஒருவர் மற்றவரின் உள்ளத்தை நன்கறிந்திருப்பதாக உணர்ந்தனர்.
கதவு திறந்தது. டாக்டர் பிரான்ஸிஸ் உள்ளே வந்தார். இம்முறை வேறொரு சூட்டும் டையும் அணிந்திருந்தார். அவரது சாம்பல் நிற முடி ஒட்ட வாரப்பட்டு, இப்போதுதான் சவரம் செய்துகொண்டு வந்தவர்போலக் காணப்பட்டார். படுக்கைக்கு நேராகச் சென்று அவர்கள் மகனைப் பரிசோதித்தார். "இந்நேரம் இவன் விழித்துவிட்டிருக்க வேண்டும். இப்படி இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை," என்றார். "ஆனால் இவன் அபாயக்கட்டத்தில் இல்லையென்பதை மட்டும் நாங்கள் அனைவரும் உறுதியாகக் கூறுகிறோம். இவன் விழித்து விட்டால், எங்களுக்கு நிம்மதியாக இருக்கும். அவனுக்கு மயக்கம் தெளியாமலிருப்பதற்கு எந்தக் காரணமும், நிச்சயமாக எந்தக் காரணமும், கிடையாது. வெகுசீக்கிரமே அவன் விழிக்கப்போகிறான். எழுந்தவுடன் தலை வலிக்கிறது என்பான், அது நிச்சயம். ஆனால் அவனது அறிகுறிகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. நார்மலாகத்தான் இருக்கிறான்."
"அப்படியானால் இது கோமாதான்?" ஆன் கேட்டாள்.
டாக்டர் தன் மழமழப்பான கன்னத்தைத் தேய்த்தார். "தற்போதைக்கு அப்படியே அழைப்போம், அவன் விழித்தெழும்வரை. நீங்கள் மிகவும் களைத்திருப்பீர்கள். இது மிகவும் கஷ்டம்தான். எனக்குத் தெரியும். போய் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாருங்கள்," என்றார். "உங்களுக்கும் தெம்பாக இருக்கும். நீங்கள் போவதாக இருந்தால் நான் ஒரு நர்ஸை இங்கே விட்டுவைக்கிறேன். போய் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வாருங்கள்."
"என்னால் எதுவும் சாப்பிட முடியாது." என்றாள் ஆன்.
"செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்," என்றார் டாக்டர். "எப்படியோ நான் சொல்ல வேண்டியதெல்லாம் எல்லா அறிகுறிகளும் நன்றாகவே இருக்கின்றன, டெஸ்ட்டுகள் எல்லாமே நெகடிவ்தான், எதுவும் தப்பில்லை. மயக்கம் தெளிந்தவுடனேயே எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் மீண்டுவிடுவான்."
"தேங்க் யூ டாக்டர்," என்றான் ஹோவர்ட். டாக்டரோடு மறுபடியும் கைகுலுக்கினான். டாக்டர் ஹோவர்டின் தோளில் தட்டிவிட்டு வெளியேறினார்.
"நம்மில் யாராவது ஒருவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்று நினைக்கிறேன். ஸ்லக்கிற்கு உணவு எடுத்துவைக்க வேண்டும்."
"பக்கத்து வீட்டில் யாரிடமாவது சொல்லலாம். நாய்க்குத் தீனி போடச் சொன்னால் செய்வார்கள்."
ஹோவர்ட், "ஆல்ரைட்," என்றான். சிறிதுநேரம் கழித்து "ஆன், நீ ஏன் போகக் கூடாது? நீ வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வாயேன்? உனக்கும் மாறுதலாக இருக்கும். நான் இவனோடு இருக்கிறேன். சீரியஸாகத் தான் சொல்கிறேன்," என்றான். "நாம் தெம்பாக இருக்க வேண்டும். இவன் விழித்து எழுந்த பிறகும்கூட நாம் இங்கேயே கொஞ்சநேரம் இருக்க வேண்டி வரலாம்."
"நீங்கள் போவதற்கென்ன?" என்றாள். "நீங்கள் போய் ஸ்லக்கிற்குச் சாப்பாடு வைத்துவிட்டு நீங்களும் சாப்பிட்டு விட்டு வாருங்கள்."
"நான் ஏற்கனவே போய் வந்துவிட்டேன். நான் போய்வருவதற்குச் சரியாக ஒரு மணி பதினைந்து நிமிடங்கள்தான் பிடித்தது. நீ ஒரு மணி நேரத்தில் போய்க் களைப்பாறிவிட்டு வரலாம்."
அவள் அதைப் பற்றி யோசிக்க முயன்றாள். ஆனால் அவள் மிகவும் களைத்திருந்தாள். கண்களை மூடி மீண்டும் யோசிக்க முயன்றாள். கொஞ்சநேரம் கழித்து, "சில நிமிடங்களில் நான் வீட்டுக்குப் போய் வந்துவிடலா மென்று தோன்றுகிறது," என்றாள். "இவனையே வைத்த கண்வாங்காமல் ஒவ்வொரு வினாடியும் நான் பார்க்காமல் இருந்தாலே இவன் சரியாகி எழுந்தாலும் எழுந்துவிடலாம். நான் இங்கே இல்லாவிட்டால் எழுந்து விடுவான், பார்க்கிறீர்களா? நான் வீட்டுக்குப் போய்க் குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக்கொண்டு வருகிறேன். ஸ்லக்கிற்கு நான் உணவு எடுத்துவைக்கிறேன்."
"நான் இங்கேயே இருப்பேன்," என்றான். "நீ போய் வா. நான் இங்கே பார்த்துக்கொண்டிருக்கிறேன்," வெகுநேரமாகக் குடித்துக்கொண்டிருந்தவன்போல அவன் கண்கள் ரத்தச் சிவப்பில் சுருங்கியிருந்தன. அவனது உடைகள் கசங்கியிருந்தன. தாடி மீண்டும் தலையெடுத்திருந்தது. அவள் அவன் முகத்தைத் தொட்டாள். பின், கையை எடுத்துக்கொண்டாள். அவன் கொஞ்சநேரம் யாருடனும் பேசவோ கவலையைப் பகிர்ந்துகொள்ளாமலோ தனியாக இருக்க விரும்புகிறான் என்பதைப் புரிந்துகொண்டாள். அலமாரியிலிருந்த பர்ஸை எடுத்தாள். அவள் கோட் அணிந்துகொள்ள அவன் உதவினான்.
"நான் ரொம்பநேரம் தங்கியிருக்கமாட்டேன்." என்றாள்.
"வீட்டுக்குப் போனதும் வெறுமனே உட்கார்ந்து கொஞ்சநேரம் ஓய்வெடு. ஏதாவது சாப்பிடு, குளி. குளித்துவிட்டு வந்ததும் கொஞ்சநேரம் உட்கார்ந்து ஓய்வெடு. அது உன்னை இலகுவாக்கும், நீயே பார். அப்புறம் கிளம்பி வா," என்றான். "கவலைப்படாமல் இருக்க முயல்வோம். டாக்டர் பிரான்ஸிஸ் சொன்னதைக் கேட்டாய்தானே?"
கோட்டை அணிந்தபடி ஒரு நிமிடம் அவள் நின்று டாக்டரின் வார்த்தைகளை, அதில் ஒளிந்திருக்கும் வாய்ப்புள்ள நுட்பங்களை, அவர் உண்மையில் சொன்ன வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்திருக்கக்கூடிய வேறு அறிகுறிகளை ஞாபகப்படுத்திப் பார்த்தாள். மகன்மீது குனிந்து சோதிக்கும்போது அவரது முகபாவத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா என்று நினைவுகூர்ந்து பார்த்தாள். குழந்தையின் கண் இரப்பைகளைப் பிரித்து அவர் பார்த்தபோதும், அவனது சுவாசத்தைக் கேட்டபோதும் அவரது அங்கங்கள் ஒருங்கிசைவாக இயங்கியதை நினைவுபடுத்திப் பார்த்தாள்.
கதவருகே சென்று திரும்பிப் பார்த்தாள். மகனைப் பார்த்தாள், பின் அவன் தந்தையைப் பார்த்தாள். ஹோவர்ட் தலையசைத்தான். அறையிலிருந்து வெளியேறிக் கதவைத் தனக்குப் பின்னால் மூடிக்கொண்டு சென்றாள்.
அவள் செவிலியர் அறையைத் தாண்டி லிஃப்ட் இருக்குமிடத்தைத் தேடித் தாழ்வாரத்தின் கடைசி வரை சென்றாள். தாழ்வாரத்தின் முடிவில் வலப்பக்கம் திரும்பி ஒரு நீக்ரோ குடும்பம் பிரம்பு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த ஒரு சிறிய வெயிட்டிங் ரூமிற்குள் நுழைந்தாள். காக்கிச் சட்டையும் பேன்ட்டும் தலையில் திருப்பிப் போட்டிருந்த பேஸ் பால் தொப்பியுமாக ஒரு நடுத்தர வயதினன் இருந்தான். இரவு உடையும் ஸ்லிப்பர்களும் அணிந்திருந்த ஒரு பருமனான பெண் ஒரு நாற்காலியில் சோர்ந்து அமர்ந்திருந்தாள். ஜீன்ஸ் அணிந்து, தலைமுடியை டஜன்கணக்கான பின்னல்களாகப் பின்னிவிட்டிருந்த ஒரு பதின்வயதுப் பெண் சிகரெட் பிடித்தபடி கால் மேல் கால்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆன் உள்ளே நுழைந்ததும் அந்தக் குடும்பத்தினர் அனைவரும் அவளை நோக்கிப் பார்வையைத் திருப்பினர். அங்கிருந்த சிறிய மேஜையின் மேல் ஹாம்பர்கர் அட்டைகளும் ஸ்டைரோபோம் கப்புகளும் இறைந்திருந்தன.
"பிராங்க்ளின்?" என்றபடி அந்தப் பருத்த பெண்மணி நிமிர்ந்தாள். "பிராங்க்ளினைப் பற்றியா?" அவள் கண்கள் விரிந்தன. "பெண்ணே, சொல் பிராங்க்ளினைப் பற்றியா?" நாற்காலியிலிருந்து அவள் எழுந்திருக்க முயல, அந்த ஆள் அவள்மீது கைவைத்து அமர்த்தினான்.
"ஈவ்லின், பொறுமை, பொறுமை," என்றான்.
"ஜ'ம் ஸாரி," என்றாள் ஆன். "நான் லிஃப்டைத் தேடிக்கொண்டிருக்கிறேன். என் மகன் மருத்துவமனையில் இருக்கிறான், இப்போது எனக்கு லிப்ட் இருக்குமிடம் தெரியவில்லை."
அவன் விரலை நீட்டிக்காட்டி, "அந்தப் பக்கம் போனால் லிஃப்ட் இருக்கும், இடது பக்கம் திரும்புங்கள்," என்றான்.
அந்த இளம்பெண் சிகரெட்டை இழுத்துக் கொண்டு ஆனை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் பிளவுகளாகச் சுருங்கின. புகையை வெளியேற்றுவதற்கு அவளது அகன்ற உதடுகள் மெதுவாகப் பிரிந்தன. நீக்ரோ பெண்மணி தலையைத் தோள்புறமாகச் சரித்து, ஆன்மீது ஆர்வம் குறைந்து பார்வையைத் திருப்பினாள்.
"என் மகன் மீது ஒரு கார் மோதிவிட்டது," ஆன் அம்மனிதனிடம் கூறினாள். அவளே அதை விளக்க வேண்டும்போலக் காணப்பட்டாள். "அவனுக்கு கன்கஷன் இருக்கிறது, மண்டையோட்டில் ஒரு சின்ன விரிசலும்கூட. ஆனால் அவன் நன்றாகிவிடுவான். அவன் 'ஷாக்'கில் இருக்கிறான். அது ஒருவிதமான கோமாவாகக்கூட இருக்கலாம். அதுதான் கோமா என்கிற அந்த விஷயம்தான் எங்களுக்குக் கவலையாக இருக்கிறது. இப்போது கொஞ்சம் வெளியில் போய் வரப்போகிறேன், என் கணவர் அவனோடு இருக்கிறார். ஒருவேளை நான் போனதிற்குப் பிறகு அவன் விழித்துக்கொள்ளலாம்."
"அடப்பாவமே" அம்மனிதன் நாற்காலியில் அசைந்தான். தலையை ஆட்டினான். மேஜையின் மேல் பார்வையைச் செலுத்தினான், பின் ஆனைப் பார்த்தான். அவள் இன்னமும் அங்கேயே நின்றிருந்தாள். அவன் சொன்னான்: "எங்கள் பிராங்க்ளின் ஆப்பரேஷன் டேபிளில் இருக்கிறான். யாரோ அவனை வெட்டிவிட்டார்கள். அவனைக் கொல்ல முயன்றிருக்கின்றார்கள். அவன் இருந்த இடத்தில் சண்டை நடந்திருக்கிறது. அந்த பார்ட்டியில் யார் வம்புக்கும் போகாமல், இவன் வெறுமனே நின்று பார்த்துக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை இப்போது. இப்போது ஆப்பரேஷன் டேபிளில் கிடக்கிறான். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். அதுதான் இப்போது எங்களால் முடிந்தது." அவன் அவளை அசையாமல் வெறித்தான்.
ஆன் அந்த இளம்பெண்ணைத் திரும்பிப் பார்த்தாள். அவள் இன்னமும் இவளைக் கவனித்துக்கொண்டிருந் தாள். வயதான பெண்மணி தலையைக் குனிந்து கண்களை மூடியிருந்தாள். அவள் உதடுகள் மௌனமாக அசைந்துகொண்டு ஓசையற்ற வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தாள். அந்த வார்த்தைகள் என்னவென்று கேட்க அவளுக்கு உத்வேகம் ஏற்பட்டது. இவள் இருக்கும் அதே நிலைமையில் இருக்கின்ற இம்மனிதர்களோடு மேலும் பேசிக்கொண்டிருக்க விரும்பினாள். இவளும் பயந்திருந்தாள். அவர்களும் பயந்திருந்தனர். அதுதான் அவர்களுக்கிடையே பொது. அந்த விபத்தைப் பற்றி ஏதாவது அவர்களிடம் அவள் சொல்லலாம், ஸ்கூட்டியைப் பற்றி, இது அவன் பிறந்த நாளென்று, திங்கட்கிழமை, நடந்திருப்பதைப் பற்றி, இன்னமும் அவன் மயக்கத்தில் இருப்பதைப் பற்றி. இருந்தாலும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. எதுவும் பேசாமல் அவர்களைப் பார்த்தபடி நின்றாள்.
அம்மனிதன் அடையாளம் சொன்ன வழியில் தாழ்வாரத்தில் சென்று லிஃப்ட்டைக் கண்டடைந்தாள். தான் செய்வது சரிதானா என்று வியந்தபடி மூடிய கதவுகளுக்கெதிரே ஒருநிமிடம் காத்திருந்தாள். பின் பட்டனை விரலால் அழுத்தினாள்.
நடைவழியில் கொண்டுவந்து என்ஜினை அணைத்தாள். கண்களை மூடி ஸ்டீயரிங்மீது தலையைச் சாய்த்துக்கொண்டாள். என்ஜின் குளிர்ச்சியடையத் தொடங்கும் டிக்டிக் சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். காரிலிருந்து வெளியே வந்தாள். வீட்டிற்குள்ளே நாய் குரைப்பது கேட்டது. முன்கதவு பூட்டாமல் இருந்தது. உள்ளே நுழைந்து விளக்குகளைப் போட்டுவிட்டுத் தேநீருக்காகக் கொதிகெண்டியில் தண்ணீர் ஊற்றிவைத்தாள். உணவுப் பொட்டலத்தைத் திறந்து பின் கட்டிலிருந்த ஸ்லக்கிற்கு எடுத்துவைத்தாள். நாய் பசியோடு சத்தமெழச் சாப்பிட்டது. அவள் தங்கப் போகிறாளா என்பதைப் பார்க்க சமையலறைக்கு ஓடிவந்தது. தேநீரை எடுத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்ததும் தொலைபேசி அடித்தது.
போனை எடுத்து, "எஸ்!" என்றாள். "ஹலோ?"
"திருமதி வைஸ்?" என்றது ஒரு ஆண் குரல். அப்போது காலை ஐந்து மணி. பின்னணியில் ஏதோ ஒருவித இயந்திர அல்லது கருவிகள் ஒலி கேட்பதாகத் தோன்றியது.
"ஆமாம், ஆமாம்! என்ன விஷயம்?" என்றாள். "திருமதி வைஸ்தான். நான்தான். என்ன விஷயம் ப்ளீஸ்?" பின்னணிச் சத்தங்களை உற்றுக்கேட்டாள். "ஸ்கூட்டியைப் பற்றியா, கடவுளே?"
"ஸ்கூட்டி? ஆம், ஸ்கூட்டியைப் பற்றித்தான். பிரச்சினை ஸ்கூட்டியைப் பற்றியதுதான். ஸ்கூட்டியை மறந்துவிட்டீர்களா?" அவன் போனை வைத்துவிட்டான்.
அவள் மருத்துவமனையின் எண்ணை டயல் செய்து மூன்றாவது தளத்திற்குத் தொடர்பு கேட்டாள். போனை எடுத்த நர்ஸிடம் தன் மகனைப் பற்றிய தகவலைக் கேட்டாள். பின் கணவனிடம் பேச வேண்டுமென்றாள். இது அவசரம், என்றாள்.
டெலிபோன் ஒயரை விரலில் திருகியபடி அவள் காத்திருந்தாள். கண்களை மூடிக்கொண்டாள். வயிற்றில் பதற்றமாக உணர்ந்தாள். அவள் சாப்பிட்டே ஆக வேண்டும். பின் கட்டிலிருந்து ஸ்லக் வந்து அவள் காலடியில் படுத்துக்கொண்டது. வாலை ஆட்டியது. அதன் காதைப் பிடித்து அவள் இழுக்க, அது அவள் விரல்களை நக்கியது, ஹோவர்ட் லைனில் வந்தான்.
"இப்போது எவனோ ஒருவன் இங்கே போன் செய்தான்," என்றாள். டெலிபோன் ஒயரை முறுக்கினாள். "ஸ்கூட்டியைப் பற்றி என்றான்" அவள் அழுதாள்.
"ஸ்கூட்டி நன்றாக இருக்கிறான்" ஹோவர்ட் அவளிடம் கூறினான். "ஐ மீன், அவன் இன்னமும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறான். எந்த மாற்றமும் இல்லை. நீ போனதற்குப் பிறகு இரண்டுமுறை நர்ஸ் வந்துவிட்டுச் சென்றாள். நர்சும் டாக்டரும் என்று நினைக்கிறேன். அவன் நன்றாக இருக்கிறான்."
"அந்த ஆள் கூப்பிட்டான். ஸ்கூட்டியைப் பற்றி என்றான்."
"ஆன், கொஞ்சநேரம் ஓய்வெடு. உனக்கு ஓய்வு தேவை. என்னிடம் பேசியவனாகத்தான் இருக்க வேண்டும். அதை மறந்துவிடு. ஓய்வெடுத்துவிட்டு இங்கே வா. பின்பு நாம் காலை உணவாக ஏதாவது சாப்பிடலாம்."
"காலை உணவு! எனக்கு எந்தக் காலை உணவும் வேண்டாம்."
"நான் சொல்வதைக் கேள். பழச்சாறு.... அல்லது வேறு ஏதாவது. எனக்குத் தெரியவில்லை, எனக்கும் எதுவும் தெரியவில்லை, ஆன். ஜீஸஸ், எனக்குக்கூடப் பசியேயில்லை. ஆன், இப்போது பேசுவதற்குக் கஷ்டமாக இருக்கிறது. நான் இப்போது வெளியே மேஜைக்கருகே நின்றுகொண்டிருக்கிறேன். டாக்டர் பிரான்ஸிஸ் இன்று காலை எட்டு மணிக்கு மறுபடியும் வருகிறாராம். அப்போது ஏதோ சொல்லப்போகிறாராம், தெளிவாக எதையோ சொல்லப்போகிறார். அப்படித்தான் நர்ஸ்களில் ஒருத்தி சொன்னாள். அவளுக்கு அதற்குமேல் எதுவும் தெரியவில்லை. ஆன்? ஒருவேளை அப்போது நமக்கு ஏதாவது தெளிவாகலாம். எட்டுமணிக்கு, எட்டுமணிக்கு முன்னதாக இங்கே வந்துவிடு. நான் இங்கேயேதான் இருப்பேன் ஸ்கூட்டி நன்றாகத்தான் இருக்கிறான். அப்படியேதான் இருக்கிறான்" அவன் சேர்த்துக்கொண்டான்.
"அந்த போன் வந்தபோது நான் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஸ்கூட்டியைப் பற்றி என்றான். பின்னணியில் ஏதோ சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. உங்களுக்கு வந்த அழைப்பில்கூடப் பின்னணியில் சத்தம் இருந்ததா ஹோவர்ட்?"
"எனக்கு ஞாபகம் இல்லை" என்றான். "ஒருவேளை அந்தக் கார் டிரைவராக இருக்கலாம், ஒருவேளை அவன் ஒரு சைக்கோபத்தாக இருக்கலாம், ஸ்கூட்டியைப் பற்றி எப்படியோ தெரிந்துவைத்திருக்கலாம். ஆனால் நான் அவனுடன்தான் இருக்கிறேன். உன் வழக்கப்படி ஓய்வெடு. குளி, அப்புறம் ஏழு மணிக்குள் இங்கே வந்துவிடு. டாக்டர் வந்ததும் நாம் ஒன்றாக அவரிடம் பேசுவோம். எல்லாம் சரியாகிவிடும், ஆன், நான் இங்கே இருக்கிறேன். டாக்டர்களும் நர்ஸ்களும் இருக்கிறார்கள். அவன் உடல்நிலை சீராக இருப்பதாகச் சொல்கிறார்கள்."
"பயத்தில் செத்துவிடுவேன் போலிருக்கிறது," என்றாள்.
அவள் தண்ணீரைத் திருப்பிவிட்டு, உடைகளைக் களைந்து, குளியல் தொட்டிக்குள் இறங்கினாள். கேசத்தை அலசுவதில் நேரத்தை எடுக்காமல் வேகமாகக் குளித்து, துடைத்துக்கொண்டாள். சுத்தமான உள்ளாடைகளும் உல்லன் சட்டையும் ஸ்வெட்டரும் அணிந்துகொண்டாள். அவள் வசிப்பறைக்குச் சென்றதும் நாயும் உடன் வந்து தரையில் வாலை அடித்தது. வெளியே வெளிச்சம் பரவத்தொடங்க, வந்து காரை எடுத்தாள்.
மருத்துவமனையின் வாகன நிறுத்தத்திற்குள் ஓட்டிவந்து நுழைவாசலுக்கருகில் இருந்த ஒரு காலியிடத்தைக் கண்டுபிடித்தாள். அவளுடைய குழந்தைக்கு நடந்திருக்கும் விஷயங்களுக்கு அவளேதான் காரணமென்று ஒரு குருட்டு யோசனை தோன்றியது. அவள் நினைவுகள் அந்த நீக்ரோ குடும்பத்தின்பால் சென்றது. பிராங்க்ளின் என்ற அந்தப் பெயரும் ஹாம்பர்கர் பேப்பர்கள் இறைந் திருந்த மேஜையும் சிகரெட் பிடித்துக்கொண்டே தன்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த பதின்வயதுப் பெண்ணும் அவள் ஞாபகத்துக்கு வந்தனர். மருத்துவமனையின் வாசலைக் கடக்கும்போது அப்பெண்ணின் ஞாபக பிம்பத்திடம், 'குழந்தை பெற்றுக்கொள்ளாதே' என்றாள். 'கடவுள் பொருட்டு வேண்டவே வேண்டாம்.'
மூன்றாவது மாடிக்கு லிஃப்ட்டில் ஏறினாள். கூடவே பணியில் இருந்த இரண்டு நர்ஸ்கள் இருந்தனர். அது புதன் காலை, ஏழுமணிக்குச் சில நிமிடங்கள் இருந்தன. டாக்டர் மாடிஸன் என்பவருக்காகக் குறிப்பு ஒன்று இருந்தது. மூன்றாவது மாடியில் நின்று கதவுகள் வழுக்கித் திறந்தன. நர்ஸ்களுக்குப் பின்னால் அவள் வெளிவந்தாள். அவர்கள் எதிர்ப்புறம் திரும்பி, அவள் லிஃப்டிற்குள் நுழைந்தபோது, தடைபட்ட உரையாடலைத் தொடர்ந்தனர். தாழ்வாரத்தின் முடிவில் அந்த நீக்ரோக் குடும்பம் காத்திருந்த அச்சிறிய ஒதுக்குப்புறம்வரை சென்றாள். அவர்கள் இப்போது சென்றுவிட்டிருந்தார்கள். ஆனால் போன நிமிடம்தான் அவற்றைத் தள்ளிவிட்டு எழுந்து சென்றதுபோல நாற்காலிகள் குழம்பிக்கிடந்தன. மேஜையின் மேல் அதே கப்புகளும் பேப்பர்களும் குவிந்திருந்தன. சாம்பல் குடுவை சிகரெட் துண்டுகளால் நிரம்பியிருந்தது.
நர்ஸ்களின் அறைக்கு முன் நின்றாள். கவுன்ட்டருக்குப் பின்னால் ஒரு நர்ஸ் தலையை பிரஷ் செய்தபடி கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தாள்.
"நேற்றிரவு ஒரு நீக்ரோ பையனுக்கு ஆப்பரேஷன் நடந்தது," என்றாள் ஆன். "அவன் பெயர் பிராங்க்ளின். அவனுடைய குடும்பம் வெயிட்டிங் ரூமில் இருந்தது. அவன் இப்போது எப்படியிருக்கிறான் என்று தெரிய வேண்டும்."
கவுன்ட்டரின் பின்னால் ஒரு டெஸ்க்கில் அமர்ந்திருந்த நர்ஸ் அவளுக்கு முன்னாலிருந்த சார்ட்டிலிருந்து நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். தொலைபேசி ரீங்கரித்தது. ரிஸீவரை எடுத்தாள், ஆனால் ஆன்மேல் வைத்த கண்களை எடுக்கவில்லை.
"அவன் இறந்துவிட்டான்" கவுன்ட்டரில் இருந்த நர்ஸ் சொன்னாள். ஹேர் பிரஷ்ஷைப் பிடித்துக்கொண்டு அவளைத் தொடர்ந்து பார்த்தாள். "நீங்கள் அவர்கள் குடும்ப நண்பரா?"
"நேற்றிரவு அந்தக் குடும்பத்தைச் சந்தித்தேன்," என்றாள் ஆன். "என் மகனே மருத்துவமனையில் தான் இருக்கிறான். அவன் 'ஷாக்'கில் இருக்கிறான் என்று சொல்கிறார்கள். என்ன பிரச்சினையென்று உறுதியாக எங்களுக்குத் தெரியவில்லை. பிராங்க்ளினுக்கு என்னாகியிருக்குமென்று யோசனை. அவ்வளவுதான். நன்றி." அவள் திரும்பித் தாழ்வாரத்தில் நடந்தாள். சுவரின் நிறத்திலேயேயிருந்த லிஃப்ட் கதவுகள் வழுக்கித் திறந்து, வெள்ளைப் பேன்ட்டும் வெள்ளை கான்வாஸ் ஷ¨க்களும் அணிந்த ஒடிசலான வழுக்கை ஆள் கனமான வண்டியை அந்த சர்வீஸ் லிஃப்ட்டிலிருந்து வெளியே இழுத்துக்கொண்டு வந்தான். இந்தக் கதவுகளை நேற்றிரவு அவள் கவனித்திருக்கவில்லை. அந்த ஆள் வண்டியைத் தாழ்வாரத்திற்குக் கொண்டுவந்து லிஃப்டிற்கு அடுத்த அறையின் முன் நிறுத்திக் குறிப்பு அட்டை ஒன்றை எடுத்துச் சோதித்தான். பின் குனிந்து வண்டியின் கீழ் அறையிலிருந்து ஒரு ட்ரேவை எடுத்தான். கதவை லேசாகத் தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தான். சூடான உணவின் இனிமையற்ற நெடி அந்த வண்டியைக் கடக்கும்போது அடித்தது. வேறு எந்த நர்ஸ்களையும் பார்க்காமல் வேகமாக நடந்து மகன் அறையை அடைந்து கதவைத் தள்ளித் திறந்தாள்.
ஹோவர்ட் சன்னலருகே கையைப் பின்னால் கட்டியபடி நின்றிருந்தான். அவள் உள்ளே நுழைய, திரும்பிப் பார்த்தான்.
"எப்படி இருக்கிறான்?" என்றாள். படுக்கையருகே சென்றாள். பர்ஸை நைட் ஸ்டேண்டுக்குப் பக்கத்தில் தரையில் போட்டாள். அவள் அங்கிருந்து சென்று வெகுநேரமாகியிருந்ததைப் போலத் தோன்றியது. மகனின் முகத்தைத் தொட்டாள். "ஹோவர்ட்?"
"கொஞ்சநேரத்திற்கு முன்பாக டாக்டர் பிரான்ஸிஸ் இங்கே வந்தார்" என்றான் ஹோவர்ட். அவனைக் கூர்மையாகப் பார்த்தாள். அவன் தோள் சிறிது சரிந்திருப்பதாக நினைத்தாள்.
"காலை எட்டுமணிக்கு முன்பாக அவர் வரமாட்டார் என்றல்லவா நினைத்தேன்?"
"அவரோடு இன்னொரு டாக்டரும் இருந்தார். ஒரு நரம்பியல் டாக்டர்."
"நரம்பியல் டாக்டர்?"
ஹோவர்ட் தலையசைத்தான். அவன் தோள் சரிவது, அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. "அவர்கள் என்ன சொன்னார்கள் ஹோவர்ட்? ஏசுவே, என்ன சொன்னார்கள் என்று சொல்லுங்கள்."
"இவனைக் கீழே கொண்டுபோய் மேலும் சில டெஸ்ட்டுகள் செய்ய வேண்டும் என்றனர். ஆன், அவர்கள் ஆப்பரேஷன் செய்யலாமென்று நினைக்கிறார்களாம், அவர்கள் ஆப்பரேஷன் செய்யப்போகிறார்கள். இவனுக்கு ஏன் இன்னும் மயக்கம் தெளியவில்லையென்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையாம். இது வெறும் ஷாக்கோ கன்கஷனோ அல்ல. அதற்கு மேலே ஏதோ போலிருக்கிறது. இந்தளவுக்குத்தான் இப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவனுடைய மண்டையோட்டில். . . அந்த விரிசலில். . . அதில்தான் ஏதோ இருக்கிறது போலிருக்கிறது. அதுதான் காரணமென்று நினைக்கின்றனர். அதனால் ஆப்பரேஷன் செய்யப் போகிறார்கள். நான் உன்னைக் கூப்பிட முயன்றேன். நீ ஏற்கனவே வீட்டிலிருந்து கிளம்பி விட்டிருந்தாய்,"
"ஓ, தெய்வமே!" என்றாள். "ஓ, ப்ளீஸ், ஹோவர்ட், ப்ளீஸ்," அவள் அவன் கைகளுக்குள் சாய்ந்தாள்.
"ஹேய் இங்கே பார்!" என்று திடீரெனப் பதறினான் ஹோவர்ட். "ஸ்கூட்டி! ஆன், இங்கே பார்" அவன் அவளை படுக்கையின் பக்கம் திருப்பினான்.
சிறுவன் கண்களைத் திறந்தான், பின் மூடிக்கொண்டான். இப்போது மீண்டும் திறந்தான். கண்கள் ஒரு நிமிடம் நேராக நிலைத்தன, பின் மெதுவாகத் திரும்பி ஹோவர்ட், ஆன்மீது பதிந்தது. பின் மீண்டும் நகர்ந்தது.
"ஸ்கூட்டி" அவன் அம்மா படுக்கையை நோக்கிப் பாய்ந்தாள்.
"ஏய், ஸ்காட்?" அவன் அப்பா கூப்பிட்டான், "ஏய், மகனே?"
அவர்கள் படுக்கையின் மேல் குனிந்தனர். ஹோவர்ட் மகனின் கையைத் தன் கைகளில் ஏந்தித் தட்டிக்கொடுத்து அழுத்தத் தொடங்கினான். ஆன் குனிந்து மகன் நெற்றியில் மாறிமாறி முத்தமிட்டாள். அவன் கன்னங்களை ஏந்தி, "ஸ்கூட்டி, கண்ணே, இது அம்மா, அப்பா" என்றாள். "ஸ்கூட்டி?"
சிறுவன் அவர்களை அடையாளம் கண்டுகொண்டதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாமல் பார்த்தான். அவன் வாய் திறந்தது. கண்கள் இறுக மூடிக்கொண்டன. அவனிடமிருந்து ஓர் ஓலம் கிளம்பி நுரையீரலில் காற்று மிச்சமிருந்தவரைக்கும் செலவிட்டு வெளியேறி அடங்கியது. அவன் முகம் தளர்வடைந்து மிருதுவானதைப் போலிருந்தது. அவனது உதடுகள் பிரிந்து அவன் கடைசி மூச்சு தொண்டை வழியாகக் கிட்டித்த பற்கள் வழியாக மெதுவாக வெளியேறியது.
டாக்டர்கள் அதனை மறைந்திருந்த 'அக்ளூஷன்' என்றனர். பத்து லட்சத்தில் ஒருமுறை நிகழக்கூடிய சந்தர்ப்பம் என்றனர். ஒருவேளை அதனை எந்தவிதத்திலாவது கண்டுபிடித்திருந்தால் உடனடியாக சர்ஜரி செய்திருக்கலாம், அவனைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பே ஏற்படவில்லை. எப்படியிருந்தாலும் அவர்களது சோதனைகளில் எதைத்தான் பார்க்க முடிந்தது? டெஸ்ட்டுகளிலோ எக்ஸ்ரேக்களிலோ எதுவுமே தென்படவில்லையே?
டாக்டர் பிரான்ஸிஸ் நிலைகுலைந்திருந்தார். அவர்களை டாக்டர்களின் தனியறைக்கு அழைத்துச் சென்றபடி, "நான் எவ்வளவு மோசமாக உணர்கிறேன் என்பதை உங்களுக்குச் சொல்ல முடியவில்லை. ஐ'ம் ஸோ ஸாரி, என்னால் பேச முடியவில்லை" என்றார். அங்கே மற்றொரு டாக்டர் எதிரேயிருந்த நாற்காலியில் காலைப் பின்னியபடி அதிகாலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பச்சை நிறத்தில் தளர்த்தியான 'டெலிவரி-ரூம்' மேற்சட்டையும் பச்சை பேன்ட்டும் தலை முடியை மறைக்கும்படியாகப் பச்சைத் தொப்பியும் அணிந்திருந்தார். ஹோவர்டையும் ஆனையும் டாக்டர் பிரான்ஸிஸையும் ஒருமுறை பார்த்தார். எழுந்து, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அறையைவிட்டு வெளிச்சென்றார். டாக்டர் பிரான்ஸிஸ் ஆனை சோபாவிற்குக் கூட்டிச் சென்று அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து, மெதுவான ஆறுதலளிக்கும் குரலில் பேசத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவளை நெருங்கி அணைத்துக்கொண்டார். அவள் தோளில் அவரது நெஞ்சு உயர்ந்து தாழ்வதை அவளால் உணர முடிந்தது. கண்களைத் திறந்தபடி அவரது அவரணைப்பில் அசைவற்றிருந்தாள். ஹோவர்ட் பாத்ரூமிற்குக் கதவைச் சாத்தாமல் சென்றான். பீறிட்டு ஆக்ரோஷித்த அழுகைக்குப்பின் குழாயைத் திறந்து முகத்தைக் கழுவினான். தொலைபேசி வைக்கப் பட்டிருந்த ஒரு சிறிய மேஜையின்முன் வந்தமர்ந்தான். முதலில் செய்ய வேண்டியது என்னவென்று தீர்மானிப்பதைப் போல் தொலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தான். சிலரை அழைத்துப் பேசினான். கொஞ்சநேரம் கழித்து டாக்டர் பிரான்ஸிஸ் தொலைபேசியை உபயோகித்தார்.
"இப்போதைக்கு வேறு ஏதாகிலும் நான் செய்ய வேண்டுமா?" அவர் அவர்களிடம் வினவினார்.
டாக்டர் அவர்களை மருத்துவமனையின் முன்வாயில் கதவுவரை அழைத்துவந்தார். மருத்துவமனைக்கு ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அப்போது காலை பதினோரு மணி. எவ்வளவு மெதுவாகவும் ஏறக்குறைய இஷ்டமேயின்றியும் தான் நடந்து வருவதாக ஆன் உணர்ந்தாள். டாக்டர் பிரான்ஸிஸ் அவர்களை வெளியேற்றுவதாக அவளுக்குத் தோன்றியது. அவர்கள் அங்கேயே இருக்க வேண்டும், அங்கேயே தங்கியிருப்பதுதான் சரியானதாக இருக்குமென்று நினைத்தாள். வாகன நிறுத்தத்தை இலக்கின்றி வெறித்திருந்தவள், திரும்பி மருத்துவமனையின் முகப்பை நிமிர்ந்து பார்த்தாள். தலையை ஆட்டத் தொடங்கினாள். "நோ, நோ," என்றாள். "அவனை இங்கேயே விட்டுவிட்டு வர என்னால் முடியாது, நோ." அவளிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தொலைக்காட்சித் தொடர்களில் வன்முறையில் அல்லது திடீரென நிகழ்ந்த மரணங்களின்போது அதிர்ச்சியுற்ற பாத்திரங்கள் பேசும் வசனத்தைப் போலவே இருப்பது எந்தளவுக்கு அநியாயமென்று அவளுக்குப்பட்டது. அவளது வார்த்தைகள் அவளுடையதாகவே இருக்க வேண்டுமென விரும்பினாள். "நோ," என்றாள். ஏதோ காரணத்திற்காக நீக்ரோ பெண்மணியின் தோளில் துவண்டு சரியும் முகம் அவள் ஞாபகத்தில் வந்தது. "நோ" என்றாள் மீண்டும்.
"இன்று மாலை உங்களிடம் பேசுகிறேன்," ஹோவர்டிடம் டாக்டர் சொல்லிக்கொண்டிருந்தார். "இன்னமும் சில விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கின்றன. எங்களது திருப்திக்காகச் சில விஷயங்களைத் தெளிவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. விளங்க வேண்டிய சில விஷயங்கள்."
"பிரேதப் பரிசோதனை?" ஹோவர்ட் கேட்டான்.
டாக்டர் பிரான்ஸிஸ் தலையசைத்தார்.
"புரிகிறது" என்றான் ஹோவர்ட். பின், "ஓ, ஜீஸஸ்! நோ, டாக்டர் எனக்குப் புரியவில்லை. என்னால் முடியாது, என்னால் முடியாது, என்னால் முடியவே முடியாது" என்றான்.
டாக்டர் பிரான்ஸிஸ் ஹோவர்டைத் தோளோடு அணைத்தார். "ஐ'ம் ஸாரி. கடவுளே, நான் எந்தளவுக்கு வருந்துகிறேன் தெரியுமா, ப்ளீஸ்?" ஹோவர்டின் தோளை விட்டுவிட்டுக் கையை நீட்டினார். ஹோவர்ட் அந்தக் கரத்தையே வெற்றாகப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுப், பிறகு பற்றினான். டாக்டர் பிரான்ஸிஸ் ஆனை மீண்டும் ஒரு கையால் அணைத்துக்கொண்டார். வளால் புரிந்துகொள்ள முடியாத ஏதோ நல்லியல்பால் நிறைந்திருப்பதாக அவர் தெரிந்தார். அவர் தோளின் மீது தலையைச் சாய்த்தாள், ஆனால் கண்கள் திறந்திருந்தன. அவள் மருத்துவமனையையே பார்த்தபடியிருந்தாள். பார்க்கிங்கை விட்டு அவர்கள் வண்டி வெளிவரும்போது தலையைத் திருப்பி மருத்துவமனையைப் பார்த்தாள்.
=
வீட்டிற்கு வந்ததும் அவள் கோட்டின் பாக்கெட்டுக்குள் கைகளைச் செருகிக்கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள். ஹோவர்ட் மகனின் அறைக் கதவைச் சாத்தினான். காபி மேக்கரை இயங்கச் செய்துவிட்டு ஒரு காலிப் பெட்டியை எடுத்தான். வசிப்பறையில் இறைந்திருந்த மகனின் பொருட்களை எடுத்து அதற்குள் போடலாம் என்று நினைத்திருந்தான். ஆனால் அவளுக்குப் பக்கத்தில் சோபாவில் உட்கார்ந்து பெட்டியை ஒருபுறமாகத் தள்ளிவிட்டான். முழங்கால்களுக்கிடையில் கைகளைச் செருகிக்கொண்டு முன்னால் சாய்ந்தான். அழத் தொடங்கினான். அவன் தலையை இழுத்து அவள் மடிமீது வைத்துக்கொண்டு அவன் தோளைத் தட்டிக்கொடுத்தாள். "அவன் போய்விட்டான்" என்றாள். அவன் தோளில் தொடர்ந்து தட்டியபடியிருந்தாள். அவன் அழுகையை மீறிச் சமையலறையில் காபி மேக்கரின் 'உஸ்'ஸென்ற சத்தம் கேட்டது. மென்மையாக, "இதோ, இதோ பாருங்கள் ஹோவர்ட், அவன் போய்விட்டான். அவன் போய்விட்டான், அதற்கு நாம் இப்போது பழகிக்கொள்ள வேண்டும். தனியாக இருப்பதற்கு."
சிறிது நேரம் கழித்து ஹோவர்ட் எழுந்து அந்தப் பெட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு, எதனையும் அதற்குள் போடாமல் அறைக்குள் இலக்கின்றி அங்குமிங்கும் அலைந்தான். தரையில் கிடந்தவற்றில் சிலவற்றை எடுத்து சோபாவின் ஒரு மூலையில் வைத்தான். அவள் இன்னமும் கோட் பாக்கெட்டிலிருந்து கையை எடுக்காமல் சோபாவில் உட்கார்ந்திருந்தாள். ஹோவர்ட் பெட்டியை வைத்துவிட்டு வசிப்பறைக்கு காபியை எடுத்துவந்தான். பிறகு ஆன் உறவினர்களுக்கு போன் செய்யத் தொடங்கினாள். ஒவ்வொரு அழைப்பிற்கும் தொடர்பு கிடைத்ததும் சில வார்த்தைகள் வெடித்துவிட்டு ஒரு நிமிடம் அழுவாள். பின் நிதானமுற்று அளவான குரலில் என்ன நடந்ததென்று விவரித்துவிட்டு ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னாள். ஹோவர்ட் பெட்டியை வெளியே கராஜூக்குக் கொண்டு சென்றான். அங்கே இருந்த மகனின் சைக்கிள் கண்ணில் பட்டது. பெட்டியைக் கீழே போட்டுவிட்டு சைக்கிளுக்குப் பக்கத்திலிருந்த மேடையில் உட்கார்ந்தான். சைக்கிளை கவனமற்றுத் தூக்கி மார்போடு சாய்த்துக்கொண்டான். ரப்பர் பெடல் அவன் மார்பைக் குத்தியது. சக்கரத்தை ஒருமுறை சுழற்றிவிட்டான்.
ஆன் அவளுடைய சகோதரியிடம் பேசிவிட்டு போனை வைத்தாள். வேறொரு எண்ணை அவள் தேடிக்கொண்டிருந்தபோது தொலைபேசி அடித்தது. முதல் ரிங்கிலேயே அதை எடுத்தாள்.
"ஹலோ" என்றாள். பின்னணியில் ஏதோவொரு ஹம்மிங் சத்தம் கேட்டது. "ஹலோ!" அவள் மீண்டும் கூப்பிட்டாள். "கடவுளே, யார் அது? உனக்கு என்ன வேண்டும்?"
"உங்கள் ஸ்கூட்டி, உங்களுக்காகத் தயாராக வைத்திருக்கிறேன்" என்றது அந்த ஆளின் குரல். "நீங்கள் அவனை மறந்துவிட்டீர்களா?"
"யூ . . . ஈவில் பாஸ்டர்ட்!" ரிஸீவரில் அவள் வீறிட்டாள். "இதைப்போல எப்படி உன்னால் செய்ய முடிகிறது, நாய்க்குப் பிறந்த பிசாசே?"
"ஸ்கூட்டி" என்றான் அவன். "ஸ்கூட்டியைப் பற்றி மறந்துவிட்டீர்களா?" அவன் போனை வைத்து விட்டான்.
அவள் கத்தலைக் கேட்டு ஹோவர்ட் வந்து பார்த்த போது மேஜையின் மீது கைகளுக்கடியில் தலையைப் புதைத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்துக்கேட்டபோது டயல்டோன் தான் கேட்டது.
றீ
அதன் பின் வெகுநேரம் கழித்து, பல விஷயங்களை அவர்கள் முடிவெடுத்த பின், நள்ளிரவுக்குச் சற்றுநேரம் முன்னதாக மறுபடியும் தொலைபேசி அடித்தது.
"நீங்களே பேசுங்கள்" என்றாள். "ஹோவர்ட், இது அவனேதான், எனக்குத் தெரியும்." அவர்கள் சமையலறை மேஜையில் காபிக்கு முன்பாக அமர்ந்திருந்தனர். அவள் கப்புக்குப் பக்கத்தில் ஹோவர்ட் ஒரு சிறிய கிளாஸில் விஸ்கி வைத்திருந்தான். மூன்றாவது ரிங்கில் அவன் எடுத்தான்.
"ஹலோ" என்றான். "யாரது? ஹலோ! ஹலோ!" தொடர்பு துண்டிக்கப்பட்டது. "வைத்துவிட்டான். யாரோ தெரியவில்லை."
"அது அவனேதான்! அந்த பாஸ்டர்ட்! அவனை நான் கொல்ல வேண்டும்" என்றாள். "அவனை நான் சுட வேண்டும். அவன் துடிப்பதைப் பார்க்க வேண்டும்."
"ஆன், மை காட்."
"உங்களுக்கு ஏதாவது கேட்டதா? பின்னணியில்? ஏதோ ஒரு சத்தம், மெஷின்போல, ஏதோ ரீங்கரிப்பதைப் போல்?"
"எதுவும் இல்லை. அந்த மாதிரி எதுவும் இல்லை" என்றான். "உடனே வைத்துவிட்டான். ஏதோ ரேடியோ சங்கீதம்போல இருந்ததாக நினைக்கிறேன். ஆமாம், ஏதோ ரேடியோ. அவ்வளவுதான் சொல்ல முடிகிறது. கடவுளே, என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரியவில்லையே."
அவள் தலையை ஆட்டினாள். "என்னால் முடிந்தால், அவனை என்னால் பிடிக்க முடிந்தால் . . ." அவளுக்குச் சட்டென்று அப்போது புலப்பட்டது. அது யாரென்று அவளுக்குத் தெரிந்துவிட்டது. ஸ்கூட்டி, கேக், தொலைபேசி எண். மேஜையிலிருந்து நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்து நின்றாள். "ஹோவர்ட், என்னை அந்த ஷாப்பிங் சென்டருக்குக் கூட்டிப்போ."
"என்ன சொல்கிறாய்?"
"ஷாப்பிங் சென்டர். கூப்பிடுவது யாரென்று எனக்குத் தெரியும். அவன் யாரென்று எனக்குத் தெரியும். அது அந்த ரொட்டிக்கடைக்காரன், நாய்க்குப் பிறந்த அந்த பேக்கர், ஹோவர்ட். ஸ்கூட்டியின் பிறந்த நாளுக்காக அவனை ஒரு கேக் செய்யச் சொல்லியிருந்தேன். அவன்தான் கூப்பிடுவது. அவனிடம்தான் நமது எண் இருக்கிறது, அவன் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அந்தக் கேக்கைச் சொல்லி நம்மைச் சித்திரவதை செய்துகொண்டிருக்கிறான். ரொட்டிக் கடைக்காரன், அந்த பாஸ்டர்ட்."
=
அவர்கள் ஷாப்பிங் சென்டருக்குச் சென்றார்கள். தெளிவான வானம். நட்சத்திரங்கள் நிரம்பியிருந்தன. குளிராக இருந்தது. காரில் ஹீட்டரைப் போட்டிருந்தார்கள். பேக்கரிக்கு முன்னால் காரை நிறுத்தினார்கள். எல்லாக் கடைகளும் மூடியிருந்தன. ஆனால் தெருவின் கடைசியில் சினிமா தியேட்டரின்முன் கார்கள் நிறையவே இருந்தன. பேக்கரி சன்னல்கள் இருட்டாக இருந்தன. ஆனால் கண்ணாடியின் வழியாக அவர்கள் பார்த்தபோது பின்னறையில் வெளிச்சமும் ஏப்ரன் அணிந்த ஒரு தடிமனான ஆள் அவ்வப்போது அந்தச் சீரான வெண்ணிற வெளிச்சத்தினூடாக வந்துபோய்க்கொண்டிருந்ததும் தெரிந்தது. கண்ணாடியின் வழியாக கேக்குகள் அடுக்கிவைக்கப்பட்டிருப்பதும் சின்னச் சின்ன மேஜை, நாற்காலிகளும் தெரிந்தன. அவள் கதவைத் திறக்க முயன்றாள். கண்ணாடியில் தட்டினாள். அந்த ரொட்டிக்கடைக்காரனுக்குக் கேட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் அவனிடம் இல்லை. அவர்கள் இருக்கும் திசையையே அவன் பார்க்கவில்லை.
பேக்கரியின் பின்னால் சுற்றிக்கொண்டுவந்து காரை நிறுத்தினார்கள். காரிலிருந்து வெளியேவந்தார்கள். வெளிச்சமிருந்த சன்னல் அவர்கள் எட்டிப் பார்க்க முடியாதபடி உயரத்தில் இருந்தது. பின்கதவுக்குப் பக்கத்திலிருந்த போர்டு 'பான்ட்ரி பேக்கரி, ஸ்பெஷல் ஆர்டர்ஸ்' என்றது. உள்ளேயிருந்த ரேடியோவின் சத்தம் அவளுக்கு லேசாகக் கேட்டது. ஏதோ 'கிறீக்' ஒலி-அந்த பேக்கரிக் கதவு திறக்கப்படுவதா? கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தாள். பின் மீண்டும் தட்டினாள், பலமாக. ரேடியோ நிறுத்தப்பட்டது. இப்போது ஏதோ சுரண்டும் சத்தம். மேஜை டிராயரையோ அல்லது எதையோ திறந்து மூடும் சத்தம்.
யாரோ தாழ்ப்பாளை நீக்கினார்கள். கதவு திறந்தது. அந்த ரொட்டிக் கடைக்காரன் வெளிச்சத்தில் நின்றுகொண்டு அவர்களைக் கூர்ந்து பார்த்தான். "கடையை மூடிவிட்டேன்" என்றான். "இந்த நேரத்தில் என்ன வேண்டும் உங்களுக்கு? இப்போது நடுராத்திரி. குடித்திருக்கிறீர்களா என்ன?"
திறந்திருந்த கதவு வழியாக விழுந்த வெளிச்சத்திற்குள் அவள் ஒரு அடி முன்வைத்தாள். தன் கனத்த இமைகளைக் கொட்டியபடி அவளை அடையாளம் கண்டுவிட்டான். "நீங்களா?" என்றான்.
"நான்தான்," என்றாள் "ஸ்கூட்டியின் அம்மா. இது ஸ்கூட்டியின் அப்பா. நாங்கள் உள்ளே வர வேண்டும்."
"இப்போது நான் பிஸியாக இருக்கிறேன். செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது."
ஆனாலும் அவள் வாசலைத் தாண்டி உள்ளே சென்றாள். ஹோவர்ட் அவளுக்குப் பின்னால் வந்தான். அந்த பேக்கர் பின்னுக்கு நகர்ந்தான். "இங்கே பேக்கரியைப் போலத்தான் வாசனையடிக்கிறது. ஒரு பேக்கரி மாதிரி இங்கே வாசனையடிக்கவில்லையா ஹோவர்ட்?"
"உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றான் பேக்கர். "உங்களுடைய கேக் வேண்டுமா? அப்படியா, உங்கள் கேக்கை வாங்கிச்செல்வதென்று முடிவெடுத்து விட்டீர்களா? கேக் ஒன்று நீங்கள் ஆர்டர் செய்திருந்தீர்கள், இல்லையா?"
"நீ ரொம்ப கெட்டிக்கார பேக்கர்தான்" என்றாள். "ஹோவர்ட், இவன்தான் நமக்கு போன்செய்து கொண்டிருந்தது." அவள் முஷ்டியை இறுக்கினாள். அவனைச் சீற்றத்துடன் முறைத்தாள். அவளுக்குள் கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த கோபம் அவளைத் தன்னைவிடப் பிரம்மாண்டமாக, இந்த இரண்டு ஆண்களைவிடப் பலமுள்ளவளாக உணர வைத்தது.
"ஒரு நிமிடம் இருங்கள்" என்றான் அந்த பேக்கர். "உங்களுடைய மூன்றுநாள் பழசான கேக்கை எடுத்துக்கொள்ள வேண்டும், அதுதானே? உங்களோடு விவாதிக்க விரும்பவில்லை அம்மணி. அதோ அது அங்குதான் இருக்கிறது. மட்கிக்கொண்டு. உங்களுக்குச் சொன்னதில் பாதிவிலைக்குத் தருகிறேன். இல்லை, உங்களுக்கு வேண்டுமா? எடுத்துக் கொள்ளலாம். எனக்கு அது உபயோகப்படாது, இப்போது யாருக்குமே உபயோகப்படாது. அந்தக் கேக்கைச் செய்வதற்கு எனக்குப் பிடித்த நேரம், செலவு... உங்களுக்கு வேண்டுமென்றாலும் சரி, வேண்டாமென்றாலும் சரி. நான் வேலைக்குத் திரும்ப வேண்டும்" அவன் அவர்களைப் பார்த்து, அவன் நாக்கைப் பற்களுக்குப் பின்னால் மீட்டிக் கொண்டான்.
"இன்னமும் கேக்குகளா" என்றாள். அவளுக்குள் அதிகரித்துக்கொண்டு வந்த விஷயம் தன் கட்டுப் பாட்டுக்குள் இருப்பதை அறிந்திருந்தாள். அவள் நிதானமாக இருந்தாள்.
"அம்மணி, இந்த இடத்தில் நான் ஒரு நாளைக்குப் பதினாறு மணிநேரம் வேலைசெய்கிறேன், பிழைப்பிற்காக," பேக்கர் சொன்னான். அவன் கைகளைத் தனது ஏப்ரனில் துடைத்தான். "வயிற்றைக் கழுவுவதற்காக ராத்திரியும் பகலும் இங்கே வேலைசெய்கிறேன்." ஆனின் முகத்தைக் கடந்து சென்ற ஒரு பார்வை அந்த பேக்கரைப் பின்னுக்கு நகர்த்தியது. "எந்தப் பிரச்சினையும் இப்போது வேண்டாம்" என்றான். அலமாரிக்குச் சென்று மாவுக் கட்டை ஒன்றை எடுத்து, அதனை இடது உள்ளங்கையில் தட்டியபடி, "உங்களுக்கு அந்த கேக் வேண்டுமா, வேண்டாமா? நான் வேலைக்குத் திரும்ப வேண்டும். ரொட்டிக் கடைக்காரர்களுக்கு ராத்திரியில்தான் வேலை இருக்கும்" என்றான். அவன் கண்கள் சிறியனவாக, இரக்கமற்று, கன்னக்கதுப்பின் உப்பலில் இடுங்கிப்போயிருந்ததைக் கவனித்தாள். அவன் கழுத்து கொழுப்பில் தடித்து உருண்டிருந்தது.
"பேக்கர்கள் ராத்திரியில்தான் வேலைசெய்வார் களென்று எனக்குத் தெரியும்" என்றாள் ஆன். "அவர்கள் ராத்திரியில் போன்கால்கள்கூடச் செய்வார்கள். யூ பாஸ்டர்ட்."
மாவுக் கட்டையை உள்ளங்கையில் தொடர்ந்து தட்டியபடி இருந்தான். ஹோவர்டை ஓரக்கண்ணால் பார்த்தான். "ஜாக்கிரதை, ஜாக்கிரதை" என்றான் ஹோவர்டிடம்.
"என் மகன் இறந்துவிட்டான்" உணர்ச்சியற்ற முடிவுத்தன்மையுடன் அவள் கத்தினாள். "திங்கட் கிழமை காலை அவன்மீது ஒரு கார் மோதிவிட்டது. நாங்கள் அவன் எழுந்திருப்பானென்று காத்துக் கொண்டேயிருந்தோம். அவன் செத்துப்போகும் வரை காத்துக்கொண்டேயிருந்தோம். ஆனால் அதெல்லாம் உனக்குத் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது, இல்லையா? பேக்கர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்க முடியாது, இல்லையா மிஸ்டர் பேக்கர்? ஆனால் அவன் செத்துப் போய்விட்டான். அவன் செத்துப்போய்விட்டான், யூ பாஸ்டர்ட்!" எந்தளவுக்குக் கோபம் அவளுக்குள் திடீரென்று நிரம்பியதோ அந்தளவுக்கு அது வடிந்து, சுருங்கி, வேறோர் உணர்விற்கு இட்டுச் சென்றது. தலைசுற்றிக் கண் இருண்டது. மாவு பரப்பி வைத்திருந்த மரமேஜையில் சாய்ந்து, முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, தோள் முன்னும் பின்னுமாகக் குலுங்க அழத் தொடங்கினாள், "இது நியாமே இல்லை," என்றாள். "இது நியாயமே இல்லை, இல்லை."
ஹோவர்ட் அவள் முதுகில் கைவைத்து அமர்த்தி, அந்த பேக்கரை நோக்கித் திரும்பினான். "ஷேம் ஆன்யு" என்றான். "ஷேம்."
பேக்கர் மாவுக் கட்டையை அலமாரியில் திரும்ப வைத்தான். ஏப்ரனைக் கழற்றி அலமாரியின் மீது வீசினான். அவர்கள் பக்கம் திரும்பினான். தலையை மெதுவாகக் குலுக்கிக்கொண்டான். காகிதங்களும் ரசீதுகளும் ஒரு கூட்டல் இயந்திரமும் ஒரு டெலிபோன் டைரக்டரியும் இருந்த கார்டு டேபிளுக்கடியிலிருந்து ஒரு நாற்காலியை வெளியே இழுத்தான். "தயவுசெய்து உட்காருங்கள்" என்றான். "உங்களுக்கு ஒரு நாற்காலி கொண்டுவருகிறேன்." என்றான் ஹோவர்டிடம். "உட்காருங்கள், ப்ளீஸ்" பேக்கர் உள்ளே கடையின் முன்புறத்திற்குச் சென்று இரண்டு சிறிய தேனிரும்பு நாற்காலிகளோடு வந்தான். "நீங்கள் இருவரும் தயவு செய்து உட்காருங்கள்."
ஆன் கண்களைத் துடைத்துக்கொண்டு பேக்கரை நோக்கினாள். "உன்னைக் கொல்ல வேண்டுமென்று விரும்பினேன்" என்றாள். "நீ சாக வேண்டுமென்று விரும்பினேன்."
அவர்களுக்கு மேஜையில் இருந்தவற்றை ஒதுக்கி இடம் தந்தான். கூட்டல் இயந்திரத்தை நோட்டுப் புத்தகங்கள், ரசீதுகளோடு சேர்த்து ஒரு பக்கமாகத் தள்ளினான். டெலிபோன் டைரக்டரியை ஓரமாக நகர்த்தும்போது அது தரையில் தொப்பென்று விழுந்தது. ஹோவர்டும் ஆனும் நாற்காலிகளில் அமர்ந்து மேஜைவரைக்கும் இழுத்துக்கொண்டார்கள். பேக்கரும் உட்கார்ந்தான்.
முழங்கையை மேஜையில் ஊன்றியபடி, "நான் எந்தளவுக்கு வருத்தப்படுகிறேன் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்" என்றான். "கடவுளுக்குத்தான் தெரியும் நான் எந்தளவுக்கு வருத்தப்படுகிறேன் என்பது. நான் சொல்வதைக் கேளுங்கள். நான் வெறும் ரொட்டிசுடுபவன். வேறு எப்படியும் என்னை நான் கருதிக்கொள்வதில்லை. ஒருவேளை முன்பொரு காலத்தில், பல வருடங்களுக்கு முன்பு, நான் வேறொரு விதமான மனிதனாக இருந்திருக்கலாம். இருந்திருக்கிறேன். எனக்கு ஞாபகமில்லை, நிச்சயமாகச் சொல்லும்படி தெரியவில்லை. அப்போது இருந்தாற்போல இப்போது நிச்சயம் இல்லை. இப்போது நான் வெறும் ரொட்டி சுடுபவன். அதற்காக, நான் செய்தது மன்னிக்கக்கூடியதல்ல, எனக்குத் தெரியும். ஆனால் நான் மனமார வருந்துகிறேன். உங்கள் மகனுக்காக வருந்துகிறேன். இதில் என் பங்கிற்காக வருந்துகிறேன்" என்றான். மேஜை மீது உள்ளங்கைகள் தெரியக் கைகளை விரித்து, "எனக்குக் குழந்தைகள் கிடையாது. எனவே நீங்கள் எப்படி உணருவீர்களென்று என்னால் கற்பனைதான் செய்துகொள்ள முடியும். என்னால் உங்களுக்குச் சொல்ல முடிந்ததெல்லாம் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். உங்களால் இயலுமானால் என்னை மன்னியுங்கள்" என்றான். "நான் மோசமானவன் அல்ல, நான் அப்படிக் கருதவில்லை. நீங்கள் போனில் சொன்னதைப் போல நான் தீயவன் அல்ல. நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டியதெல்லாம், கடைசியில் பார்க்கும்போது என்னால் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று இனியும் தெரியப் போவதில்லை என்றுதான் தோன்றும். ப்ளீஸ்," என்றான். "உங்கள் இதயங்களில் என்னை மன்னிக்க முடியுமா என்று நான் கேட்கலாமா?"
பேக்கரிக்குள்ளே கதகதப்பாக இருந்தது. ஹோவர்ட் மேஜையிலிருந்து எழுந்து அவன் கோட்டைக் கழற்றினான். ஆனின் கோட்டைக் கழற்ற உதவினான். பேக்கர் அவர்களை ஒரு நிமிடம் பார்த்துவிட்டுத் தலையை அசைத்துக்கொண்டே மேஜையிலிருந்து எழுந்தான். அடுப்பிற்குச் சென்று சில ஸ்விட்ச்சுகளை அணைத்தான். கோப்பைகளைத் தேடியெடுத்து எலெக்ட்ரிக் காபி மேக்கரிலிருந்து காபியை ஊற்றினான். ஒரு அட்டைப் பெட்டியில் க்ரீமும் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையும் எடுத்து மேஜை மேல் வைத்தான்.
"நீங்கள் ஏதாவது சாப்பிடலாம்" என்றான். "எனது ஹாட்ரோல்களில் கொஞ்சம் சாப்பிடுவீர்களென்று நம்புகிறேன். நீங்கள் சாப்பிட வேண்டும். இனி ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும். சாப்பிடுவது என்பது இதைப் போன்ற சமயங்களில் ஒரு சின்ன, நல்ல விஷயம்."
அடுப்பிலிருந்து சூடான லவங்க ரோல்களை எடுத்துவந்து அவர்களுக்குப் பரிமாறினான். ஐஸிங்குகள் இன்னமும் திரவமாக வழிந்துகொண்டிருந்தன. மேஜை மேல் வெண்ணெயையும் அதைப் பரப்பக் கத்திகளையும் எடுத்துவைத்தான். அவர்களோடு சேர்ந்து அவனும் மேஜைக்கு முன்னால் அமர்ந்தான். காத்திருந்தான். அவர்களிருவரும் ஆளுக்கொரு ரோலைத் தட்டிலிருந்து எடுத்துச் சாப்பிடத் தொடங்கும்வரை காத்திருந்தான். "எதையாவது சாப்பிடுவது நல்லது" அவர்களைக் கவனித்தபடியே பேசினான். "இன்னமும் எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிடுங்கள். எவ்வளவு பிடிக்குமோ சாப்பிடுங்கள். உலகத்தின் எல்லா ரோல்களும் இங்கே இருக்கின்றன."
அவர்கள் ரோல்களைச் சாப்பிட்டுக் காபி அருந்தினார்கள். ஆனுக்குத் திடீரென்று பசியாக இருந்தது. ரோல்கள் சூடாகவும் சுவையாகவும் இருந்தன. அவளே மூன்று ரோல்கள் சாப்பிட்டாள். அது அந்த பேக்கரை சந்தோஷப்படுத்தியது. பின்பு அவன் பேசத் தொடங்கினான். அவர்கள் கவனமாகக் கேட்டார்கள். அவர்கள் களைப்பிலும் துயரத்திலும் இருந்தாலும் அந்த பேக்கர் என்ன சொல்கிறான் என்பதைக் கேட்டார்கள். தனிமையைப் பற்றியும் அவனது நடுத்தர வருடங்களில் அவனிடம் வந்து சேர்ந்து விட்ட சந்தேக உணர்ச்சிகளையும் வரம்பு வரையறைகளைப் பற்றியும் அவன் பேசத் தொடங்கியபோது அவர்கள் தலையசைத்துக் கேட்டுக்கொண்டார்கள். இத்தனை வருடங்களாகக் குழந்தையற்றிருப்பது எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று அவர்களிடம் சொன்னான். அடுப்புகளுடன் நாட்களை முடிவின்றி நிறைந்தும் முடிவின்றி வெறுமையாகவும் திரும்பத் திரும்ப வாழ்ந்துவருவது. அவன் உழைத்துத் தயாரித்தவிருந்து உணவுகள், கொண்டாட்டங்கள். விரல் புதையுமளவிற்கு ஐஸிங் அலங்காரங்கள். கேக்குகளில் புதைத்து வைத்த குட்டியான திருமண ஜோடிகள். நூற்றுக்கணக்கில் - அல்ல - இதுவரை ஆயிரக்கணக்கில். பிறந்த நாட்கள். அந்த மெழுகுவர்த்திகள் எல்லாம் எரிந்துகொண்டிருப்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். அத்தியாவசியமான ஒரு தொழில் அவனுடையது. அவன் ஒரு ரொட்டி சுடுபவன். அவன் ஒரு மலர்ப் பண்ணையாளனாக இல்லாமலிருந்தது அவனுக்குச் சந்தோஷம். மனிதருக்கு உணவிடுவது அதைவிடச் சிறப்பானது. இதன் வாசனை மலர்களின் வாசனையைவிட எப்போதுமே மேலானது.
"இதை முகர்ந்து பாருங்கள்" ஒரு கருப்பு ரொட்டியைப் பிரித்துக் காட்டினான். "இது ஒரு கனமான ரொட்டி. ஆனால் சத்து மிகுந்தது." அவர்கள் அதை முகர்ந்து பார்த்தர்கள். பின் அதை அவர்களுக்குச் சுவைத்துப் பார்க்கக் கொடுத்தான். வெல்லப்பாகும் முழுப் பருப்புகளும் சேர்ந்த சுவையைக் கொண்டது அது. அவர்கள் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்களால் முடியும்வரை சாப்பிட்டார்கள். அந்தக் கருப்பு ரொட்டியை மென்று விழுங்கினார்கள். விளக்கின் மிளிர்வில் பகல் வெளிச்சம் போலிருந்தது. சன்னல்களில் வெளிறிய வெளிச்சம் படர, காலை விடியும் வரை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிளம்புவதைப் பற்றி அவர்களுக்குத் தோன்றவேயில்லை.
****
நன்றி: காலச்சுவடு - இதழ் 106, அக்டோபர் 2008

மொஸாட் (Mossad).

உலக வரலாறை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இவர்களை போண்டவர்களை நிச்சையம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .கட்டுரை கொஞ்சம் நீளமாக இருக்கிறது என்று அரைகுறையாக படிக்காமல் விட்டு விடாதிர்கள் படித்து உலக அறிவை வளர்த்து கொள்ளுங்கள் . இல்லை இந்த தகவலை உங்களுடைய பகுதிக்கு ஷேர் செய்து உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது கட்டாயம் படியுகள்

பங்குகொண்ட அத்தனை யுத்தங்களிலும் வெற்றி பெறுவதென்பது எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை. உலகம் முழுவதும் எதிர்த்தபோதும் தனது கொள்கையில் விடாப்பிடியாக இருந்து, தான் நினைத்ததை மட்டுமே சாதிப்பதென்பதும் எந்த தேசத்துக்கும் சாத்தியமில்லை.
அமெரிக்கா போன்றதொரு வல்லரசு என்றாலும் பரவாயில்லை. இஸ்ரேல் ஒரு கொசு. ஊதினாலே உதிர்ந்துவிடக் கூடிய மிகச்சிறிய தேசம்.
சற்று யோசித்துப் பாருங்கள். கிழக்கே குவைத் தொடங்கி, மேற்கே எகிப்து வரை எத்தனை அரபு தேசங்கள் இருக்கின்றன?
அத்தனை பேரும் இணைந்து ஒரு யுத்தம் மேற்கொண்டால் இஸ்ரேலை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட முடியாதா?
பாலஸ்தீன் விஷயத்தில் இஸ்ரேல் நடந்துகொள்வது முழுக்க முழுக்க அயோக்கியத்தனம் என்பது உலகுக்கே தெரியும்.
அத்தனை தேசங்களும் தத்தம் கண்டனத்தை எப்போதும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் எந்த தைரியத்தில் இஸ்ரேல் தன் முடிவில் விடாப்பிடியாக இருக்கிறது?
ஏன் யாராலும் அவர்களை எதுவும் செய்ய முடியவில்லை?
எகிப்து, சிரியா, ஜோர்டன் என்று மூன்று தேசங்கள் இணைந்துதான் 1967 யுத்தத்தில் இஸ்ரேலை எதிர்த்தன. இத்தனைக்கும் அவர்களுக்கு சோவியத் யூனியனின் மறைமுக ஆதரவு வேறு இருந்தது.
ஆனாலும் யுத்தத்தில் இஸ்ரேல்தான் வெற்றி பெற்றது; தான் நினைத்ததைச் சாதித்தது. அதற்கு முன்னால் நடைபெற்ற சூயஸ் யுத்தத்தின் போதும் போர்
நிறுத்தத்துக்கு முன்னதாகத் தனக்கு என்ன வேண்டுமோ அதை இஸ்ரேலால் அடைந்துவிட முடிந்தது. அதற்கும் முன்னால் நடைபெற்ற 1948 யுத்தத்திலும் இஸ்ரேலுக்குத்தான் வெற்றி.
எப்படி இது சாத்தியம்? அரேபியர்களின் வீரம் இஸ்ரேலிடம் எடுபடக்கூடிய தரத்தில் இல்லையா?
அது இருக்கட்டும். ஆயிரம் எதிர்ப்புகள் வருகின்றன; ஐ.நா. சபையில்
அடிக்கொருதரம் தீர்மானம் போடுகிறார்கள்; இஸ்ரேலுக்கு எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. ஆனபோதும் எல்லாம் அந்த நேரத்துப் பரபரப்பாக மட்டுமே இருந்து மறைந்துவிடுவது ஏன்?
இவை எல்லாவற்றுக்கும் காரணம், இஸ்ரேலின் தனிப்பெரும் அடையாளமும் மிகப்பெரிய பலமுமான அதன் உளவு அமைப்பு. அதன் பெயர் HaMossad leModiin uleTafkidim Meyuhadim. சுருக்கமாக மொஸாட் (Mossad).
உலகின் மூன்றாவது பெரிய உளவு அமைப்பு என்று சொல்லப்பட்டாலும் தரத்தில் மொஸாட், சி.ஐ.ஏ., எம் 16 ஆகிய அமைப்புகளைக் காட்டிலும் சிறந்தது.
பொதுவாக உளவு அமைப்புகளுக்குரிய அதிகார வரம்புகளைக் காட்டிலும் சற்றே கூடுதல் அதிகாரங்கள் பெற்ற அமைப்பு இது. ஆனால் மொஸாடில் வெளிப்படையான ராணுவப் பிரிவு கிடையாது.
சி.ஐ.ஏ.வில் அது உண்டு. எம்.16_ல் உண்டு. ரஷ்யாவின் கே.ஜி.பி.யில் கூட ஒரு துணை ராணுவப்பிரிவு உண்டு என்று சொல்லுவார்கள்.
ளின்டின் பணிகள் மிகவும் எளிமையானவை.
1. ஆட்சிக்கு இடையூறு தரக்கூடியவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல்.
2. தேவைப்பட்டால் சத்தமில்லாமல் அரசியல் கொலைகளைச் செய்தல்,
3. யுத்தங்களுக்கான திட்டம் தீட்டி, வழி நடத்திக் கொடுத்தல்
4. அரபு தேசங்கள், உலகெங்கும் பரவியிருக்கும் அரபு அமைப்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல்.
இவற்றுள் முதலாவது மற்றும் மூன்றாவது, நான்காவது பணிகளை உலகின் அனைத்து தேசங்களின் உளவு அமைப்புகளும் மேற்கொள்வது வழக்கம்தான். ஆனால்அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு அனுமதி பெற்ற ஒரே உளவு அமைப்பு மொஸாட் மட்டுமே.
இஸ்ரேலில் மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொஸாட் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இது உலகின் வேறெந்த நாட்டு உளவு அமைப்புக்கும் இல்லாத அதிகாரம். சி.ஐ.ஏ.வுக்குக் கூடக் கிடையாது.
ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் மொஸாட் உளவாளிகள், எக்காரணம்
கொண்டும் யூதர்களைக் கொல்லக்கூடாது! அவ்வளவுதான்.
இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியான டேவிட் பென் குரியன், 1951-ம் ஆண்டு மொஸாட்டைத் தோற்றுவித்தார். ஆரம்பத்தில் பாலஸ்தீன் போராளிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக மட்டும் என்று தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, தனது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக விரைவில் மிகப் பெரிய அளவில் விஸ்தரிக்கப்பட்டுவிட்டது.
இன்றைய தேதியில் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு மாதச்
சம்பளம் வாங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 2000.
ஆனால் கண்ணுக்குப் புலப்படாத மொஸாட் ஏஜெண்டுகள் பல்லாயிரக் கணக்கில் உலகெங்கிலும் உண்டு.
மொஸாட்டின் இணையத்தளத்துக்கு முடிந்தால் போய்ப் பாருங்கள். அழகாக, சுத்தமாக, மிகவும் வெளிப்படையாக அப்ளிகேஷன் பாரம் கொடுத்திருப்பார்கள். யார் வேண்டுமானாலும் மொஸாட்டின் ஏஜெண்டாக விண்ணப்பிக்கலாம்.
உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டபிறகு, வேறு சில வினாக்களும் அங்கே கேட்கப்படும்.
உதாரணமாக நீங்கள் ஒரு யூதர் அல்லாதவர் என்றால் எதற்காக மொஸாட்டுக்காகப் பணியாற்ற விரும்புகிறீர்கள்? என்று கேட்பார்கள்.
இது தவிரவும் ஏராளமான கேள்விகள் உண்டு. அத்தனை கேள்விகளுக்கும் விடை எழுதி அனுப்பினால், அந்த விடைகள் அவர்களுக்குத் திருப்தி தரக்கூடுமென்றால் ஒரு வேளை உங்களை யாராவது ஒரு மொஸாட் ஏஜெண்ட் கண்காணிக்க ஆரம்பிக்கலாம். ஒரு வருடமோ, இரண்டு வருடமோ, இன்னும் அதிகமோ, குறைவோ. நீங்கள் சரியான நபர்தான், தேவையான நபர்தான் என்று அவர்கள் தீர்மானித்தால் அடுத்தகட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகும்.
எத்தனை கட்டங்களாகப் பரிசோதிப்பார்கள், என்னென்ன பயிற்சிகள்
அளிப்பார்கள் என்பதெல்லாம் யாருக்குமே தெரியாத ரகசியங்கள். மொஸாட்டின் விண்ணப்பப் படிவம் மட்டும்தான் வெளிப்படை.
மற்றபடி அவர்களின் நடவடிக்கைகள் காற்றுக்கும் கடவுளுக்கும் கூடத் தெரியாது!மொஸாட்டின் தலைமை அலுவலகத்தில் மொத்தம் ஆறு துறைகள் இயங்குகின்றன. (ஆரம்ப காலத்தில் எட்டு துறைகளாக இருந்திருக்கிறது. பின்னால் அதனை ஆறாகச் சுருக்கி இருக்கிறார்கள்.)
1. தகவல் சேகரிப்புப் பிரிவு (Collections Department). இதுதான் அளவில் மிகப் பெரியது. உலகெங்கும் மொஸாட் உளவாளிகள் அரசியல் மற்றும் ராணுவ ரீதியில் இஸ்ரேல் அரசுக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகச் சேகரித்துத் தொகுத்து வைப்பார்கள். அரசுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை தருவது, ஆயத்தங்களுக்கு அறிவுறுத்துவது போன்றவை இந்தப் பிரிவின் தலையாய பணி.
2. அரசியல் மற்றும் நல்லுறவுப் பிரிவு (Political Action and Liaison Department). இது கிட்டத்தட்ட ஒரு வெளிவிவகாரத் துறை அமைச்சகம் போன்றது. இஸ்ரேலின் நட்பு நாடுகளின் உளவு அமைப்புகளுடன் நல்லுறவு ஏற்படுத்திக்கொண்டு, தகவல் பரிமாற்றத்துக்கு வழி செய்து தமக்குத் தேவையான தகவல்களை ரகசியமாகப் பெற்றுத் தரவேண்டியது இந்தப் பிரிவின் பணி. எதிரி தேசங்கள் என்றால் அங்குள்ள அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத இயக்கங்களை வளைக்க முடியுமா என்று பார்ப்பதும் இவர்களின் பணியே.
3. Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவு. இவர்கள்தான் அரசியல் கொலைகளைச் செய்பவர்கள். ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடுவது, வழிகாட்டுவது, தேவைப்பட்டால் தாங்களே களத்தில் இறங்குவது ஆகியவை இப்பிரிவின் பணிகள்.
4. Lohamah Psichlogit என்கிற மனோதத்துவப் பிரிவு. விசாரணைகள், ரகசிய ஆராய்ச்சிகள் செய்வது, தேவையான தகவல்களை மக்களிடையே பரப்புவது, மீடியாவைக் கண்காணிப்பது, இஸ்ரேல் குறித்து மீடியா வெளியிடும் தகவல்களைச் சரிபார்ப்பது, தேவைப்பட்டால் சர்வதேச மீடியாவுக்குள் ஊடுருவி, தமக்குச் சாதகமான செய்திகளை வரவைப்பது போன்றவை இப்பிரிவின் பணிகள்.
5. Research Department என்கிற ஆராய்ச்சிப் பிரிவு. மேற்சொன்ன அத்தனை பிரிவினரும் கொண்டுவந்து சேர்க்கும் தகவல்களை வைத்துக்கொண்டு ஆய்வு செய்து வேண்டிய விவரங்களைத் தேடித்தொகுப்பது இவர்கள் பணி.
6. இறுதியாகத் தொழில்நுட்பப் பிரிவு (Technology Department). மொஸாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான அதிநவீன தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்து அல்லது கடன் வாங்கி, துறையை எப்போதும் நவீனமயமாக வைத்திருப்பது இவர்கள் வேலை.
இந்த ஆறு பிரிவினருள் உலகுக்கு நன்கு பரிச்சயமானவர்கள், மொஸாட்டின் Metsada என்கிற சிறப்பு நடவடிக்கைப் பிரிவுதான்.
முன்னாள் சோவியத் யூனியனின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் குறித்து குருஅக்ஷவ் பேசிய ஒரு சர்ச்சைக்கிடமான பேச்சைக் கண்டறிந்து வெளி உலகுக்குக் கொண்டுவந்தவர்கள் இவர்கள்தான்.
பாலஸ்தீன் பிரச்னை குறித்து உலக நாடுகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக Black September என்கிற ஒரு தீவிரவாத அமைப்பு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற ம்யூனிச் ஒலிம்பிக்ஸில் ஒரு மாபெரும் படுகொலைத் திட்டத்தைத் தீர்மானித்து நடத்தி, உலகையே உலுக்கிப் பார்த்தது. இந்தச் சம்பவத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளான இஸ்ரேல் அரசு,
படுகொலைக்குக் காரணமானவர்களைக் கொல்லும்படி மொஸாட்டுக்குக் கட்டளையிட்டது.கறுப்பு செப்டம்பர் அமைப்பைச் சேர்ந்த அலி ஹாஸன் ஸல்மே (Ali Hassan Salameh) என்கிற தீவிரவாதிதான் அந்தக் கொலைக்குப் பொறுப்பாளி.
ஆனால் மொஸாட்டின் மெட்ஸடா பிரிவு உளவாளிகள், சம்பந்தமே இல்லாமல் நார்வே நாட்டில் இருந்த அஹமத் பவுச்சிகி (Ahmed Bouchiki) என்கிற ஒரு வெயிட்டரைக் கொலை செய்துவிட்டார்கள்.
அதுவும் எப்படி? மொஸாட்டின் உளவாளிகள், போலியான கனடா தேசத்து பாஸ்போர்ட்களை உருவாக்கி, அதை வைத்துக்கொண்டு நார்வேக்குச் சென்று இந்தக் கொலையைச் செய்தார்கள்!
கனடா மட்டுமல்ல; சர்வதேச அளவில் மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டாக்கிய இந்தச் சம்பவத்தால் மொஸாட்டுக்கு மட்டும் எந்தப் பாதிப்பும் இல்லை! இஸ்ரேல் அரசு கண்டுகொள்ளவே இல்லை. ‘சரியான நபரை மீண்டும் தேடிக் கொலை செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டுச் சும்மா இருந்துவிட்டார்கள்!
இச்சம்பவம் மட்டுமல்ல; பல்வேறு பாலஸ்தீன் போராளிகளைக் கொலை செய்வதற்காக பிரிட்டன், சைனா, ஜோர்டன் தேசத்து பாஸ்போர்ட்களைப் போலியாக உருவாக்கிப் ‘புகழ்’ பெற்றவர்கள் இவர்கள்.
மொஸாட்டின் மிகப்பெரிய பலம், அதன் உள்ளே என்ன நடக்கிறது என்பது டெல் அவிவ் நகரில் இருக்கும் அதன் தலைமையக காம்பவுண்ட் சுவரைத் தாண்டி ஒருபோதும் வெளியே வராது என்பதுதான்.
அத்தனை விசுவாசமான ஊழியர்களைக் கொண்ட அமைப்பு அது. யுத்தங்களின்போது இஸ்ரேலிய ராணுவம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை போதிப்பதற்காக, மொஸாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவு இருபத்து நான்கு மணி நேரமும் உலகெங்கும் நடக்கும் யுத்தங்களைக் கூர்மையாக கவனித்து, குறிப்புகள் எடுத்துக்கொண்டே இருக்கும்.
எதிரிப் படைகளின் இருப்பையும் நகர்வையும் கண்காணிப்பதற்குச் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர்கள் அவர்கள். 1967 யுத்த சமயத்தில் ஒரு மொஸாட் உளவாளி யுத்தம் நடந்த ஆறு தினங்களும் கோலன் குன்றுப் பகுதிகளில் சிரியாவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு மரத்தடியில் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறந்தவன் போலக் கிடந்திருக்கிறான். சோறு தண்ணீர் கிடையாது! சுவாசிக்கக்கூட முடியாது! அசையாமல் அப்படியே இருந்து ரகசியமாகத் தகவல்களைக் கடத்தியிருக்கிறான்.
இஸ்ரேல் அரசு இன்றைக்கும் தனது ஆண்டு பட்ஜெட்டில் நான்கில் ஒரு பங்கை மொஸாட்டுக்காக ஒதுக்குகிறது. இது வெளியே சொல்லப் படுவதில்லை. ஆனால் ஆயிரம் சிக்கல்கள் வந்தாலும் இஸ்ரேல் சமாளிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்த மொஸாட்தான்.
மொஸாட் உருவானதிலிருந்து இன்றுவரை மொத்தம் பதினொரு பேர் அதன் இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் பலபேர் ராணுவ அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றபோதும் மொஸாட்டில் ராணுவப் பதவிகள் ஏதும் கிடையாது. ஒரு சிவிலியன் அமைப்பாகத்தான்
மொஸாட் செயல்படுகிறது.
இந்த உளவு பலத்தைக் கொண்டுதான் இஸ்ரேல் தொட்டதிலெல்லாம் வெற்றிவாகை சூடுகிறது என்பது பாலஸ்தீனப் போராளிகளுக்குப் புரிவதற்கு வெகுகாலம் ஆனது.
பி.எல்.ஓ.விலும் ஒரு சரியான உளவுப்பிரிவை ஏற்படுத்தவேண்டும் என்று ஆறு நாள் யுத்தத்துக்குப் பிறகு முடிவு செய்தார்கள். அதற்கு முன் தலைவரை மாற்றினால் இன்னும் உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்துதான் யாசர் அராஃபத்தைப் பிடித்தார்கள்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 4 ஆகஸ்ட், 2005
72] அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்
நிலமெல்லாம் ரத்தம் – பா. ராகவன் 72
1967 – இஸ்ரேலிய அரேபிய யுத்தத்தின் விளைவுகளுள் மிக மிக முக்கியமானது, பாலஸ்தீனிய அரேபியர்களின் மனமாற்றம்.
ஒரு வரியில் சொல்லுவதென்றால், அரபு அரசாங்கங்கள் எதையுமே இனி நம்பக்கூடாது என்று பாலஸ்தீன் மக்கள் தீர்மானமே செய்தார்கள்.
அத்தனைபேருமே கையாலாகாதவர்கள் என்று பகிரங்கமாகவே அவர்கள்
குற்றம் சாட்டினார்கள்.
நேற்று முளைத்த தேசம் இஸ்ரேல். மூன்று அரபு தேசங்கள் இணைந்து போர் புரிந்தும் வெல்லமுடியவில்லை என்றால், அப்புறம் இந்த அரசாங்கங்களை நம்பி என்ன புண்ணியம்?
ஆகவே, ஏதாவது ஒரு மாற்று வழி யோசித்தே தீரவேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.மக்களுடைய இந்தச் சிந்தனைப் போக்கின் விளைவுதான், பாலஸ்தீனில் ஏராளமான விடுதலை இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாயின. அத்தனை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, சரியான திட்டம் வகுத்து, கவனம் குவித்து, இஸ்ரேலுக்கெதிரான முழுநீள யுத்தத்தை வழி நடத்தும் பொறுப்பு, பி.எல்.ஓ.வின் தலையில் விழுவதற்குக்
காரணமானது.
அப்படியொரு மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பில் இருப்பவர், மிகப்பெரிய ராஜதந்திரியாகவும் மாவீரராகவும் மனிதாபிமானியாகவும்
இருக்கவேண்டுமென்றுதான் யாசர் அராஃபத்தை அந்தப் பொறுப்புக்குக் கொண்டுவந்தார்கள்.
அதுவரை குவைத்தில் இருந்தபடி அல் ஃபத்தாவை வழிநடத்திக்கொண்டிருந்த அராஃபத். அரபு தேசங்களில் இருந்த எந்த ஒரு போராளி இயக்கத்துக்கும் அதுவரை பரிச்சயமில்லாமல் இருந்த ‘கெரில்லா’ தாக்குதல் முறையில் தன்னிகரற்ற திறமை கொண்டிருந்த அராஃபத்.1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கெய்ரோவில் கூடிய பாலஸ்தீன் தேசிய காங்கிரஸின் சிறப்புக் கூட்டத்தில், யாசர் அராஃபாத் முறைப்படி பி.எல்.ஓ.வின் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் அந்தப் பொறுப்புக்கு வந்தபோது பி.எல்.ஓ.வில் உறுப்பினராக இருந்த விடுதலை இயக்கங்கள் இவை:
1. Fatah, 2. western Sector, 3. Force 17, 4. Popular Front for the Liberation of Palestine PFLP, 5. Democratic Front for the Liberation of Palestine DFLP), 6. Hawatmah Faction; 7.
Abd Rabbu Faction; 8. Popular Front for Liberation of Palestine (General Command), 9. Palestine Liberation Front, (PLF) 10. Abu Abbas Faction, 11. Tal’at Yaqub Faction, 12.
AlSaiqa Organization, 13. Arab Liberation Front (ALF), 14. Palestinian Arab Liberation Front , 15. Palestinian Democratic Union (Fida), 16. Palestine Islamic Jihad Movement, 17.
Palestinian People’s Party [Hizb Al Sha'ab], 18. Palestinian Popular Struggle Front.
இவற்றுள் ஃபத்தா மட்டும் அராஃபத்தின் சொந்த இயக்கம்.
மற்ற அனைத்தும் தோழமை இயக்கங்கள். இத்தனை இயக்கங்களையும் கட்டிக்காப்பதுடன் மட்டுமல்லாமல் சரியான, முறைப்படுத்தப்பட்ட போர்ப்பயிற்சி அளிப்பது, இஸ்ரேலை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் கவனம் கவர வழி செய்வது என்று அராஃபத்துக்கு இருந்த பொறுப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.
வெற்றிகரமாக அவரால் அதனைச் செய்ய முடிந்ததற்கு மிகப்பெரிய காரணம், முன்பே பார்த்ததுபோல, அரசுகள் மீது மக்கள் இழந்துவிட்டிருந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கை அப்படியே அப்போது விடுதலை இயக்கங்களின்பக்கம் சாயத் தொடங்கியது.
இன்னும் புரியும்படி சொல்லுவதென்றால், பாலஸ்தீன் மக்கள், ஆளும் வர்க்கத்துக்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நினைத்தார்கள். அதே சமயம், இந்தப் போராளி இயக்கங்கள்தான் தமக்கு விடுதலை பெற்றுத் தரப்போகிறவர்கள் என்றும் கருதினார்கள்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும்.
போராளி இயக்கங்கள் பொதுவாக, தீவிரவாத, பயங்கரவாத இயக்கங்களாகச் சித்திரிக்கப்படுவது சர்வதேச மரபு.
இதை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா. அமெரிக்க அரசுக்குத் தலைவலி தரக்கூடிய எந்த ஓர் அமைப்பையும், பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதுதான் அத்தேசத்தின் வழக்கம்.
அமெரிக்கா தொடங்கி வைத்த இந்த வழக்கத்தை முதலில் இங்கிலாந்தும் பிறகு ஐரோப்பிய யூனியனில் உள்ள அத்தனை தேசங்களும் அப்படியே எவ்வித மாறுதலும் செய்யாமல் ஏற்றுக்கொண்டுவிட்டன.
சர்வதேச அளவில் எந்த ஒரு தேசத்தில் விடுதலைக் குரல் கேட்கிறதோ, அந்தக் குரலுக்கு உரியவர்களைத் தீவிரவாதிகள் என்று உடனே சொல்லிவிடும் வழக்கம், அப்போது ஆரம்பித்ததுதான்.
உண்மையில் விடுதலை இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உண்டு. அரசாங்கங்கள் கைவிட்டு, அரபு லீக்கும் கைவிட்டு, ஐ.நா.சபையும் கைவிட்டபிறகு, இழந்த தங்கள் நிலத்தைத் திரும்பப்பெற பாலஸ்தீன் மக்களுக்கு ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்றானது வரலாறு.
அவர்களைப் போராளிகள் என்று சொல்லாமல் தீவிரவாதிகள் என்று வருணிப்பது எப்படிச் சரியாகும்?
ஆனால் இந்தப் போராளி இயக்கங்கள் சமயத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதுண்டு என்பதும், மறுக்கமுடியாத உண்மையே ஆகும். உதாரணமாக, யாசர் அராஃபத் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஐந்தாம் ஆண்டு, அதாவது 1974-ம் வருடம் பி.எல்.ஓ.வின் ஒரு குழுவினர் இஸ்ரேலில் உள்ள மா’லாட் என்கிற இடத்தில் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் புகுந்து, கையெறி குண்டுகளை வீசி 21 குழந்தைகளை ஈவிரக்கமில்லாமல் கொன்று வீசினார்கள். இது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தீவிரவாதம்.
இன்னும் சொல்லப்போனால் கொலைவெறியாட்டம். இஸ்ரேலிய அரசுக்கு எதிரான யுத்தத்துக்கும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்கும் என்ன சம்பந்தம்? யூதர்களில் சிறுவர், பெரியவர் என்று பாராமல் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவிட்ட ஆரியக் கிறிஸ்துவரான ஹிட்லருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டது இஸ்ரேல்.
நியாயப்படுத்தவே முடியாத இத்தகைய செயல்களால்தான் போராளி இயக்கங்களுக்கு சர்வதேச ஆதரவோ, அனுதாபமோ பெரும்பாலும் கிடைக்காமல் போகிறது.
போராளி இயக்கங்களின் நோக்கத்தில், செயல்பாடுகளில் ஏற்படும் இத்தகைய சறுக்கல்களால்தான் அவர்கள்மீது விழவேண்டிய நியாயமான கவனம், விழாமல் போகிறது.
அராஃபத் பொறுப்புக்கு வந்த ஆரம்ப வருடங்களில் மிகக் கவனமாக இஸ்ரேலிய ராணுவம், காவல்துறை போன்ற இலக்குகளின் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. இது,
இஸ்ரேலுக்குள்ளாக. இஸ்ரேலுக்கு வெளியிலும் பல்வேறு தேசங்களில் பி.எல்.ஓ.வின் போராளிகள் கவன ஈர்ப்புக்காக ஏராளமான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள்.
ஆனால் மிகக் கவனமாக அத்தனை தாக்குதல்களுமே, யூத இலக்குகளின் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள்.
உலகம் முழுக்க பி.எல்.ஓ., பி.எல்.ஓ., என்று பேசிக்கொண்டிருந்த காலம் அது. யார், என்ன என்கிற விவரம் கூடத் தெரியாமல், அராஃபத்தைப் பற்றிப் பேசினார்கள்.
அணுகுண்டுகள் வைத்திருக்கும் இயக்கம் என்றெல்லாம் கதை பரப்பினார்கள். உண்மையில், நாட்டுவெடி குண்டுகளுக்கு அப்பால் பி.எல்.ஓ.வினரிடம் அப்போது வேறெந்த ஆயுதமும் கிடையாது.
வாங்குவதற்குப் பணம் கிடையாது முதலில். பி.எல்.ஓ.வின் பிரசாரப் பிரிவினர் அரபு தேசங்களெங்கும் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு துண்டேந்தி வசூல் செய்தே இயக்கத்தை வழி நடத்திக்கொண்டிருந்தனர்.
சவுதி அரேபியா போன்ற மிகச் சில தேசங்களின் அரசுகள் மட்டும் மறைமுகமாக பி.எல்.ஓ.வுக்கு நிதியுதவி செய்திருப்பதாகத் தெரிகிறது.
1973-ம் ஆண்டுவரை பி.எல்.ஓ.வுக்கு மிகப்பெரிய அளவில் நிதிப்பிரச்னை இருந்திருக்கிறது. இது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை.
ஒரு பக்கம் பி.எல்.ஓ.வில் இருந்த இயக்கங்கள், மிகத் தீவிரமாக இஸ்ரேலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதே காலகட்டத்தில், பாலஸ்தீனில் வேறு சில புதிய இயக்கங்களும் தோன்றத் தொடங்கின.
‘இஸ்ரேல் என்கிற திடீர் தேசத்தை வேரோடு ஒழித்துவிட்டு, அகண்ட பாலஸ்தீனை மறுபடியும் ஸ்தாபிப்பதற்காக நாங்கள் திட்டம் தீட்டுகிறோம். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
ஆயுதங்கள் மூலம் அச்சமூட்டுவோம். இன விருத்திமூலம்கலவரமூட்டுவோம். யூதர்களைத் தூங்கவிடமாட்டோம். ஜெருசலேம் உள்பட, இஸ்ரேல் எங்களிடமிருந்து அபகரித்த அத்தனையையும் திரும்பப் பெறாமல் ஓயமாட்டோம்’ என்கிற யாசர் அராஃபத்தின் அன்றைய பிரகடனம் ஒரு வேத மந்திரம் போல, அத்தனைபேரின் செவிகளிலும் விழுந்து சிந்தனையைக் கிளறிவிட்டதன் விளைவே இது.
இப்படித் தோன்றிய இயக்கங்களில் சில திசைமாறிப் போயின என்றாலும், பெரும்பாலான இயக்கங்கள் பி.எல்.ஓ.வில் சேராவிட்டாலும் பாலஸ்தீன் விடுதலை இயக்கங்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யத் தயங்கவில்லை.
குறிப்பாக, ஆயுதங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது அன்றைக்கு பி.எல்.ஓ.வினரின் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது.
குறிப்பாக அரபு தேசங்களுக்கு வெளியே அவர்கள் திட்டமிட்ட ஒவ்வொரு கவன ஈர்ப்புச் செயலுக்கும் தேவையான ஆயுதங்களைக் கடத்தியோ, உருவாக்கியோ, வாங்கியோ தரும் பணியைச் செய்ய இத்தகைய இயக்கங்கள் மிகவும் உதவி செய்தன.
அப்படி 1967 யுத்தத்துக்குப் பிறகு உதித்த பாலஸ்தீன் இயக்கங்களுள் ஒன்றுதான் ஹமாஸ்.
‘இஸ்ரேல் அரபுப் பிரச்னை என்பது அரசியல் சார்ந்ததல்ல. அது இஸ்லாத்துக்கும் யூதமதத்துக்குமான பல நூற்றாண்டு காலப் பிரச்னையின் நீட்சி. நடப்பது அரசியல் யுத்தமல்ல. அது இரு மதங்களின் மோதல் மட்டுமே’ என்கிற பிரகடனத்துடன் உருவான இயக்கம் இது.
பிரச்னையை முற்றிலும் அரசியல் சார்ந்து மட்டுமே பார்க்கக்கூடியவராக அராஃபத் இருந்த நிலையில், ஹமாஸின் இந்த திடீர் பிரவேசம் உரிய கவன ஈர்ப்பைப் பெற்றதே தவிர, ஹமாஸால் இதன் காரணம் பற்றியே பி.எல்.ஓ.வில் இணைய முடியாமலும் போனது.
அது அவர்களுக்கு ஒரு பிரச்னையாகவே இல்லை என்பதையும் சொல்ல வேண்டும். ஏனெனில் என்னென்ன பிரகடனங்கள் செய்துகொண்டாலும், எல்லோருக்கும் நோக்கம் ஒன்றுதான். குறிக்கோள் ஒன்றுதான். கனவும் நினைவும் ஒன்றுதான்.
அது இஸ்ரேலை ஒழிப்பது. யூதர்களைப் பூண்டோடு அடித்துத் துரத்துவது.இழந்த தங்கள் நிலங்களை மீண்டும் அடைந்து, பாலஸ்தீனுக்குப் புத்துயிர் அளிப்பது.
ஆகவே, பி.எல்.ஓ.வுக்குள் இல்லாமலேயே ஹமாஸ் பாலஸ்தீன் விடுதலைக்காகத் தன்னாலான பணிகளைச் செய்ய ஆரம்பித்தது.
தொடர்ந்தும் தீவிரமாகவும் இஸ்ரேலிய ராணுவத்தை, காவல்துறையை, அரசு இயந்திரத்தை ஆயுதப் போராட்டம் மூலம் அச்சுறுத்தி வருவதுதான், சரியான ஆரம்பமாக இருக்கும் என்பதில் இவர்கள் யாருக்குமே கருத்து வேறுபாடு இல்லை. தேவைப்பட்டால் ஆயுதப் போராட்டத்துக்காக அவர்கள் வகுத்து வைத்திருந்த வழிமுறைகளில் சில மாறுதல்கள், கூடுதல், குறைவுகள் செய்துகொள்ளலாமே தவிர, போராட்டத்தை வேறு எந்த விதமாகவும் தொடருவதற்கான வாய்ப்பில்லை என்றுதான் அத்தனை பேருமே கருதினார்கள்.
பி.எல்.ஓ.வின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த யாசர் அராஃபத்துக்கு அந்தத் தொடக்க காலத்திலேயே வெஸ்ட் பேங்க் பகுதியில் மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது.
அறிவிக்கப்படாததொரு மகாராஜாவாகத்தான், அவரை மக்கள் அங்கே கருதினார்கள்.
அதே போல, காஸா பகுதியில் தோன்றி, வேர்விட்டு, வளர்ந்து, நிலைபெற்ற ஹமாஸுக்கு அங்கே பி.எல்.ஓ.வைக்காட்டிலும் செல்வாக்கு அதிகம். இந்த வெஸ்ட் பேங்க் என்று சொல்லப்படும் ஜோர்டன் நதியின் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளை இணைத்துத்தான், சுதந்திர பாலஸ்தீனை உருவாக்க வேண்டும் என்று இன்றுவரை பேசிவருகிறார்கள்.
நமக்குப் புரியும் விதத்தில் சொல்லுவதென்றால், இந்தியா – பாகிஸ்தான் சுதந்திரத்தின் போது எப்படி மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று இரு வேறு துண்டுகளை இணைத்து ஒரே தேசத்தை உருவாக்கினார்களோ, அதுபோல
.
மொஸாட்டின் முதல் தலைவராக இருந்தவர் ரூவென் ஷிலோக் {Reuven Shiloah }. இவர் அரசின் பாதுகாப்புத்துறைத் தலைவர் பதவியையும் வகித்தார். ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்காவின் C.I.A ; மொஸாட் உளவாளிகளுக்குப் பயிற்சியளித்தது. விரைவிலேயே உலகத்தரம் வாய்ந்த உளவு நிறுவனமாக மொஸாட் வளர்ந்தது. அது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவு அமைப்புகளின் செயற்பாடுகளைப் பின்பற்றியது. அதன் உளவாளிகள் தற்கால நவீன உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கரைத்துக்(?) குடித்தவர்கள். வதந்திகளை உலக நாடுகளிடையே பரப்புவதிலும் வல்லவர்கள்.

       ஜெர்மனியின் மியூனிக் நகரில் 1972 இல் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொலை செய்தார்கள் பலஸ்தீனப் போராளிகள். {பலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலிய சிறையிலிருக்கும் தமது சகாக்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தார்கள். இஸ்ரேல் அதை நிராகரித்துவிட்டது} இது மொஸாட்டின் தோல்வியாகவே கருதப்பட்டது. வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மொஸாட்டின் மீது காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதிலிருந்து பாடம் படித்த மொஸாட்; 1987 இல் இஸ்ரேல் டென்னிஸ் வீரர்கள் 'டேவிஸ் கப்' போட்டியில் விளையாட இந்தியா வந்தபோது கூடவே தனது உளவாளிகளையும் கலந்து அனுப்பியிருந்தது.
இவர்கள் தான் 1972 ஒலிம்பிக்கில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் 

         உலக மக்களை வியக்க வைத்த பல வீர தீரச் சாகசச் செயல்களைக் கனகச்சிதமாக முடித்துக் காட்டுவதிலும் இவர்கள் வல்லவர்கள். உதாரணமாக 1973 இல் 'பெய்ரூட்' நகரில் தலைவர்களை அழித்தது, மற்றும் 1976 இல் உகண்டா நாட்டில் "என்டெப்" விமான நிலையத்தில் கடத்தப்பட்ட  விமானத்தையும், அதில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பல இஸ்ரேலியர்களையும் இரவோடிரவாகப் பத்திரமாக மீட்டு இஸ்ரேலுக்குக் கொண்டுவந்தமை போன்றவை ஹாலிவுட் படங்களையே மிஞ்சிய சாகசங்கள்.
இது தான் கடத்தப்பட்ட விமானம்
அர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்து வந்த நாஜி வெறியனான அடால்ப் ஜக்மான் என்பவனை இஸ்ரேலுக்கு வெற்றிகரமாகக் கடத்திவந்து அவன் மீது விசாரணை நடத்தி மரண தண்டனையும் வழங்கியமை 1969 இல் எகிப்தில் பணியாற்றி வந்த 5 நாஜி ஆதரவாளர்களான விஞ்ஞானிகளைக் கண்டுபிடித்துக் கொன்றமை என்று உலகம் முழுக்கவும் மொஸாட்டின் அதிரடிகள் அரங்கேறியுள்ளது.
     ஒரு சில தோல்விகளையும் மொஸாட் தாங்கிக் கொள்ள நேர்ந்தது. 1967 இல் கெய்ரோவிலும், அலெக்ஸான்டிரியாவிலும் இருந்த இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு அதிகாரிகளின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்தப் பழியை எகிப்தியர்கள் மீது போடுவதற்குத் திட்டமிட்டது மொஸாட். இதன் மூலம் எகிப்து அதிபர் நாசர் மீது மேற்குலக நாடுகள் வெறுப்புக் கொள்ளும் என இஸ்ரேல் எதிர்பார்த்தது. ஆனால் திட்டம் தோல்வியடைந்து உளவாளிகள் மாட்டிக்கொண்டனர். இருவருக்குத் தூக்குத் தண்டனையும், 6 பேருக்கு நீண்ட கால சிறைத் தண்டனையும் வழங்கியது, எகிப்திய அரசு. பின்னாளில் எகிப்துக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் நடந்த ஆறு நாள் யுத்தத்துக்குப் பின், அந்த ஆறு உளவாளிகளையும் எகிப்தியப் போர்க் கைதிகளுக்குப் பதிலாக மாற்றிக் கொண்டது இஸ்ரேல்.
     மொஸாட்டின் மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுவது, 1975 இல் எகிப்தும் சிரியாவும் கூட்டாக இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தியது தான் !! 'ஜாம் கிப்பர் யுத்தம்' என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதலை மொஸாட் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.ஆனாலும் கூட இந்த யுத்தத்தையும் வெற்றி கொள்வதற்கு மொஸாட் பெரும் பங்காற்றியிருந்தது. இந்த எதிர் பாராத தாக்குதலால் மொஸாட்டின் செல்வாக்கு பெருமளவில் மங்கினாலும் பின்னர், 1976 உகண்டா விமான நிலையச் சாதனைக்குப் பிறகு,அதன் செல்வாக்கு மீண்டும் அதிகரித்தது.
ஆக மொத்தத்தில், இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரை மொஸாட் காவல் தெய்வம். மற்றவர்களைப் பொறுத்தவரை அழிக்கும் தெய்வம்.
- See more at: http://thilakci.blogspot.com/
THANKS http://indru.todayindia.info/

விநாயக சதுர்த்தி

விநாயக சதுர்த்தி வழிபாட்டினால் 1. தர்மம், 2. பொருள், 3. இன்பம், 4. சௌபாக்கியம், 5. கல்வி, 6. பெருந்தன்மை, 7. நல்வாழ்வுடன் கூடிய மோட்சம்,8. முக லக்ஷணம், 9. வீரம், 10. வெற்றி, 11. .எல்லோரிடமும் அன்பு பெறுதல், 12. நல்ல சந்ததி, 13. நல்ல குடும்பம், 14. நுண்ணறிவு, 15. நற்புகழ், 16. சோகம் இல்லாமை, 17. அசுபங்கள் அகலும், 18. வாக்கு சித்தி, 19. சாந்தம், 20. பில்லி சூனியம் நீங்குதல், 21. அடக்கம் ஆகிய 21 விதமான பேறுகள் கிடைக்கும். விநாயகப்பெருமானையே தங்கள் வழிபடு கடவுளாகக் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுகியவர்களின் வாழ்க்கையில் அவர் நடத்திக் காட்டிய அற்புதங்கள் எண்ணிலடங்காது.

க. நா. சு. வின் ஓர் உரை

மா. அரங்கநாதனின் ‘வீடு பேறு’ சிறுகதை தொகுப்பு பற்றிய கருத்தரங்கத்தின் போது ஆற்றிய உரை.
() () ()
இருபது இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது புத்தக விமர்சன கூட்டங்களுக்குப் போனால் விமர்சனங்களில் ஒரு மாறுதல் இருப்பதையும் ஓரளவிற்கு புத்தகங்களைப் பற்றி பொதுவாகப் பேசுவதற்கு பலபேர் தயாராக இருக்கிறார்கள் என்பதும் நன்றாகவே தெரிகிறது. புத்தகத்தைப் பாராட்டி பேசிவிடுவதோடு நிறுத்திவிடாமல், காசு கொடுத்து வாங்கி இது நன்றாக இருக்கிறது என்று பத்துப்பேரிடம் சொல்லி அவர்கள் சந்திக்கிற ஆட்களும் மற்றவர்களிடம் சொன்னால், அந்தப் பத்துப்பேரும் வாங்காவிட்டாலும் ஓரிருவர் வாங்குவார்கள்  என்ற ஒரு நம்பிக்கையில் புத்தக விற்பனை ஓரளவு ka-naa-su-1நன்றாக ஆகுமென்று தோன்றுகிறது. இது ரொம்ப அவசியமான ஒரு விஷயம் என்று எண்ணுகிறேன். புத்தக விமர்சனக் கூட்டங்கள் மிகவும் சிறப்பாக நடக்கின்றன. இரண்டு மூன்று கூட்டங்களுக்கு நான் தலைமை வகித்தும், பேசப்போயும், வேடிக்கைப்பார்க்கப் போயும் அறிந்துக் கொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு மிகவும் திருப்தியாக இருக்கிறது என்று நான் சொல்லலாம். நல்லவேளையாக இதைச் சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன்.
இரண்டாவதாக சிறுகதைகள் என்பதைப் பற்றி பேசுவதற்கு நிறையவே இருக்கிறது. ஒரு எழுபத்தைந்து வருட சரித்திரம் இருக்கிறது. இந்த எழுபத்தைந்து வருட சரித்திரத்தில், சிறுகதைகளில் மிகவும் சிறப்பாக செயலாற்றி இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டுமானால், ஒரு பத்து / இருபது பேரை பெயர் சொல்லி குறிப்பிட்டுச் சொல்ல்லாம் என்று நான் சொல்வேன். கொஞ்சம் தாராளமாகச் சொல்பவர்கள் நாற்பது ஐம்பது பேரைச் சொல்ல்லாம் என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் கிட்டத்தட்ட முப்பது நாற்பது பேர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் ஒரு நான்கைந்து பேர்களைத்தான் சொல்ல முடிகிறது. அல்லது ஏழெட்டு பேரை சொல்ல முடிகிறது என்று வைத்துக் கொண்டாலுங்கூட அந்த ஏழெட்டுப் பேரை மட்டும் ஏன் சொல்லுகிறோம் என்று யோசித்துப் பார்க்கையில், அவர்கள் எல்லாருமே மற்றவர்கள் எழுதியதிலிருந்து மாறுபட்ட எழுத்துக்களைக் கொடுக்க வேண்டுமென்று முயற்சி செய்தார்கள் என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அந்த மாதிரிப் பார்க்கும்போது இன்று எழுதப்படுகிற எழுத்துகளிலிருந்து மிகவும் பெரிய அளவில் மாறுபட்ட எழுத்தை மா. அரங்கநாதன் தன்னுடைய ‘வீடு பேறு’ என்ற நூலில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். ஒன்று இரண்டல்ல-இருபது கதைகள் இருக்கின்றன. இந்த கதைகள், இந்த மாறுபட்ட விதத்தில் பொது மக்களுக்கு இதுதான் பிடிக்குமென்று எல்லாரும் தெரிந்து எழுதுகிற சிலர் பழக்கமாக கையாளுகிற – புள்ளிவைத்த இடத்தில் கையெழுத்து போடுகிறமாதிரி வார்த்தைகள் போட்டு நிறுத்திவிடுகிற கதைகள் எழுதுகிற ஒரு தமிழ் உலகத்தில் – தனிப்பட்ட ஒரு குரலாக ஒலிக்கிறது. சிறு கதைகள் எழுதுவதற்கு என்றும் தைரியம் வேண்டியதாக விருக்கிறது. இதில் ஒரு விசேடம் என்னவென்றால், அந்த தைரியம் அரங்கநாதனுக்கு இருந்ததுமட்டுமல்ல-இந்தக் கதைகளில் சிலவற்றை பத்திரிகைகளிலும் பிரசுரித்துப் பார்த்திருக்கிறார். அதாவது ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு சிறுகதைகள் என்று தெரிந்து படிக்க்க்கூடிய வாசகர்கள் படிக்கும் சில பத்திகைகளில் பிரசுரித்துப் பார்த்திருக்கிறார். இதில் எனக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது. அதை – பெயரைச் சொல்லாமல் – சொல்கிறேன். இவருடைய கதையை, ‘மைலாப்பூர்’ என்ற கதையை; ஞனரதத்தில் வெளியிட்டபோது, வெளியிட்டப்பிறகு, நான் ஒரு நண்பரை சந்திக்க நேர்ந்தது சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது ‘‘எனக்கு அந்தக் கதையில் என்ன எழுதியிருக்கிறார் என்று புரியவில்லை’’ என்று சொன்னார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் நான் பேசிக்கொண்டிருந்த அந்த நண்பர் கொஞ்சம் அறிவாளி. விமர்சனங்கள்-கதை என்று அவரும் எழுதுகிறவர்தான். எழுதுவதில் கொஞ்சம் திறமையுள்ளவர், படிப்பதிலும் திறமையுள்ளவர் என்று நான் நம்பிக்கொண்டிருந்தவர்தான். சொன்னவுடன் எனக்கு கொஞ்சம் வியப்பாகவும் இருந்த்து. என்ன புரியவில்லை என்று கேட்டேன். எதற்காக இதை எழுதியிருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை என்று சொன்னார். நான் அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து விட்டு நீங்கள் இன்னொரு முறை படித்துப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு, விட்டுவிட்டேன். ஆனால் அன்றிரவு தூங்கப் போகும்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உங்களை உங்களுக்கே காட்டிக் கொடுப்பதற்காகத் தான் அந்தக்கதையை எழுதி இருக்கிறார் அரங்கநாதன் என்று சொல்லலாமா என்று தோன்றியது. இது எந்த சிறுகதை ஆசிரியரைப் பற்றியும் – தரமாக எழுதுகிற எந்தச் சிறுகதை ஆசிரியரைப் பற்றியும் – சொல்லக்கூடிய ஒரு விஷயம். ஆசிரியன் தன்னைப்பற்றி மட்டும் காட்டிக் கொள்வது இல்லை. வாசகனுடைய அறிவு தளத்திலிருந்து, அவனுடைய மனதிற்குள் அலைகளை எழுப்புகிற வேகத்தையும் அவனைச்சுற்றி சித்தரிக்கிறான். அவனுக்கே புரியாத சில விஷயங்களை புரியும்படியாக செய்வதற்கு புரியாத சில விஷயங்களை புரியும்படியாக செய்வதற்கு இந்தச் சிறுகதைகள் பிரயோஜனப்படுகின்றன. நல்ல சிறுகதைகள் என்று சொல்லக்கூடியவை பிரயோனப்படுகின்றன என்று சொல்ல வேண்டும். அந்த மாதிரி இந்தக்கதைகள் வேண்டியிருக்கிறது என்று அவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டோமே என எண்ணிக்கொண்டேன். அதற்குப் பிறகு அதைப்பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை – அதனால் சொல்லவில்லை. இந்த மாதிரி கதைகள் எழுதுகிறபோது, ஒரு கனமாக கதைகள் எழுதுகிறவர்களை, அதிகமாக பாராட்டுவது என்பது நம்மூரில் பழக்கமில்லை என்று இக்கட்டத்தில் இரண்டுபேர் பாராட்டிவிட்டார்கள்.
தன்னுடைய பர்சனாலிட்டியை பாதித்துக் கொள்வதற்காகவோ, தனக்குள்ளேயே ஒரு முக்கியம் ஏற்படுத்திக் கொள்வதற்காகவோ சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று பொதுவாகச் சொல்ல்லாம். ஆனால் வாசகன் எதிர்கொண்டு, இந்த கதையைப் படிக்கிற வாசகன் மனதில் தன்னைப் பற்றி, அதாவது அந்த வாசகனைப் பற்றி ஓர் உருவத்தை ஏற்படுத்துவதற்காகவும் இந்த சிறுகதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என்று சொல்லவேண்டும். இதை மிகவும் சிறப்பாக சமீப காலத்தில் செய்திருப்பவர் என்று லத்தின் அமெரிக்காவில் உள்ள ‘ஜார்ஜ் லூயி போர்ஹே’ என்ற ஓர் ஆசிரியரைப் பற்றி, அவர் ஓர் அறிவுதளத்தில் நின்று எழுதுகிறார் என்கிற அளவில் சொல்லுகிறார்கள். அவருக்கு உலகம் பூராவும் புகழ் பரவியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் தமிழில் இருக்கிற ரசனை என்னவென்றால் ஓரளவிற்கு தமிழரிடையே கூட தரமான சிறுகதைகள் என்றால் பாராட்டப்படுவதில்லை என்ற ஒரு வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அரங்கநாதன் எழுதியிருக்கிற கதைகள் போர்ஹே எழுதிய கதைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து மோனாலிசா, நசிகேதனும் யமனும் – அப்புறக் இன்னொரு தலைப்பு – இந்த மாதிரி எல்லாம் பார்க்கும் போது ஒரு பரந்த அறிவு தளத்திலிருந்து, நமது பண்பாட்டின் பல அம்சங்களை நாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு இவர் எழுதியிருக்கிறார் என்று மிகவும் நன்றாகத் தெரிகிறது. ஒரு Intellectual அறிவு தளத்தில் – போலி அல்லாத அறிவுத்தளத்தில் – உள்ளது. இதில் இரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டும். அறிவுதளம் என்று சொல்லுகிற போது போலியாக ஓர் அறிவு தளம் அதாவது நமக்கு நம்முடைய படிப்பில் இருந்து வராத, நம்முடைய மண்ணில் வேர்விடாத அறிவு இயக்கங்கள் பல பரவி இருக்கின்றது. உலகில் அவைகளுக்கெல்லாம் நாம் வாரிசாக எண்ணிக்கொண்டு, அந்த அறிவு தளத்திலிருந்து செய்யப்படுகிற சில விஷயங்களை நம்மிடையே பார்க்க முடிகிறது. இந்த மாதிரி பார்க்கிற விஷயங்கள் மனோ தத்துவ காரியங்கள், மனோதத்துவ அலசல்கள் என்கிற அளவில் சைக்யாட்ரிக் என்கிற மாதிரி – சைக்கோபாத் என்று சொல்கிற அளவில் எல்லாம் படுகிறபோது, ஓரளவு போலியாகப் போய்விடுகிறது. இந்தப் போலித்தனம் சில சமயம் அரசியலிலும் காணப்படுகிறது. அரசியலில் நாம் யோசித்துப் பார்த்தோமானால், அரசியல் சிந்தனைகளில் ஒரு சிந்தனை கூட நம்முடைய சிந்தனை நம்முடைய மண்ணில் இருந்து கிளம்பியது என்று சொல்லும்படியாக இந்தியாவில் இன்னும் ஏற்படவில்லை என்பது உண்மை. அதனாலேயே இந்த அறிவு தளத்தில் ஒரு போலி அம்சம் எப்போதும் இருக்கிறது. இந்தப் போலி அம்சத்தை மீறி அறிவு தளத்தில் நம்மைச் சுற்றியிருக்கிற மக்களிடமிருந்து, நாம் நிற்கிற மண்ணிலிருந்து கிளம்புகிற வேர்கள், கிழங்குகளிலிருந்து வருகிற ஓர் அறிவு தளத்தை வளர்த்துக் கொள்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. அதை சிலபேர் செய்திருக்கிறார்கள் என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
அந்த மாதிரி போலி அல்லாத ஓர் அறிவு தளத்தில் இந்தக் கதைகள் – அரங்கநாதனின் கதைகள் – செயல்படுவதை நான் பாராட்டுகிறேன். பார்க்கும் போது மிகவும் சிறப்பாகப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது.
நான் போலி அறிவு தளத்தில் வந்த கதைகள் என்று சொல்வதற்கு ஓர் உதாரணம் சொல்ல்லாமென்று தோன்றுகிறது. ‘பள்ளம்’ என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு வந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தை எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. அதில் ஒரு கதை. குரங்குகள் வந்து உபத்திரவப்படுத்தும், ஒரு சமதாயத்தில், அந்தக் குரங்குகளை ஒழிப்பதற்கு அதன் கைகளில் தண்ணீர் பாம்புகளைச் சுற்றி ஓர் ஓலைச்சுருள் மாதிரிக் கொடுத்துவிட்டால் அந்தப் பாம்புகள் அவைகளைக் கவ்விக் கொள்ளும் – அவைகளும் விடாது, குரங்குகளும் பயந்து ஓடிவிடும் என்று ஒரு கதை வந்திருக்கிறது. அதைப் பார்க்கும்போது இது எந்த ஊரில் நடக்கிற விஷயம் – நம்மூரில் யாருக்குமே வந்திராது என்று சொல்லக்கூடும். இந்தக் கதையை எழுதியவர் மிகவும் நல்ல சிறுகதைகள் பல எழுதியிருக்கிறவர்தாம். ஆனால் இந்த அறிவு போலித்தனத்தினால் ஏற்பட்ட ஒரு விளைவாக இந்த மாதிரி கதைகள் சிலவும் நம்மூரில் வரத்தொடங்கி இருக்கின்றன, அந்த மாதிரி போலியான அறிவு தளத்தில் நிற்காது – நல்ல அறிவு தளத்தில் – நமக்குரிய அறிவு தளத்தில் நின்று கதை எழுதுவது என்பது சிலபேருக்கு கைவந்திருக்கிறது. இப்படி கைவந்தவர்களில் சில பேரை குறிப்பாகச் சொல்லலாம். புதுமைப்பித்தனைச் சொல்ல வேண்டும். புதுமைப்பித்தனால் அரங்கநாதன் பாதிக்கப்படுகிறார் என்று நண்பர் சொன்னார். அது எனக்கு அவ்வளவு சரியாகத் தோன்றவில்லை ஏனென்றால் புதுமைப்பித்தன் கால சிந்தனையில் பலவிதமான கலப்படங்கள் வந்திருக்கின்றன. ஓரளவு தெளிவின்மை கூட இருந்த்து என்று சொல்லக்கூடும். அரங்கநாதன் சிந்தனையில் – அவர் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எழுதுகிறார் என்பதாலேயே ஓரளவிற்கு சிந்தனைத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லக்கூடும், சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. இதேமாதிரி பூரணத்துவம் தெரிகிறது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். இந்த மாதிரி பலபேர் எழுதியிருக்கிறார்கள். சுந்தர்ராமசாமியில் பிரசாதம் என்றி சிறுகதைத் தொகுப்பில் பல கதைகள் அந்த மாதிரியாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். தி. ஜானகிராமன் ஆரம்பகாலத்தில் எழுதிய கதைகள் கொட்டுமேளம் முதலிய தொகுப்புக்களில் வந்த கதைகள் – அந்த மாதிரி பல.
இப்படி சொல்லக்கூடியவர்களில் இருபது முப்பது பேர்கள் நம்மிடையே தேறுவார்கள். அந்தமாதிரியாக ஒரு கனமாக தளத்தில் போலியல்லாத அறிவு தளத்தில் நின்று கதைகள் எழுதுகிற கலை அரங்கநாதனுக்கு நன்றாக்க் கைவந்திருக்கிறது என்பது இந்தக் கதைகளைப் படிக்கும் போது தெரியும். நாம் ஒவ்வொரு கதையாக படித்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் ஒவ்வொரு கதையிலுமே முத்துக்கறுப்பன் என்கிற பெயரை அறிமுகம் செய்து வைக்கிற போதே ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுக்கிறமாதிரி ஓர் உலுக்கலை ஏற்படுத்தி விடுகிறார் என்பது அவருக்கு ஒரு சிறப்பான அம்சமாக இதில் காண முடிகிறது.
இதில் இன்னொரு விஷயம், இந்தமாதிரி பாராட்டுக் கூட்டங்கள் போட்டு ஒரு ஆசிரியரை பாராட்டுகிறபோது, ஓஹோ நாம் ஏதோ பிரமாதமாக செய்து விட்டோம் என்று அந்த ஆசிரியர் திருப்திபட்டுக் கொண்டே அதோடு நிறுத்திவிடவோ கூடும். அந்த மாதிரி அரங்கநாதன் செய்யமாட்டார் என்று நம்புகிறேன். அவருக்கு ஒரு மெச்சூரிட்டி இருக்கிறது. இந்தக் கதைகளிலேயே அது தெரிகிறது. இவருடைய முதல் புத்தகத்தை - ‘பொருளின் பொருள் கவிதை’ என்றப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னார்கள். அதுவும் விளக்கமுடியாத கவிதையைப் பற்றி, சொல்ல இயலாத சில விஷயங்களை, தமிழ் வார்த்தைகளில் சொல்வதற்கு அவர் முயன்றுபார்த்திருக்கிறார். அதுமிகவும் நல்ல முயற்சி. அந்த மாதிரியான ஒரு முயற்சி தமிழுக்கு மிகவும் புதிது. மிகவும் அவசியமானது. பல பேர் செய்து பார்த்திருக்க வேண்டியது. அவரவர்கள் நோக்கிலிருந்து செய்து பார்க்க வேண்டியதென்று எனக்கு தோன்றுகிறது. அந்தமாதிரி இந்தக்கதைகளைத் தொடர்ந்து அவர் நாவல்கள் எழுதலாம், கவிதைகள் எழுதலாம். எது எழுதினாலும் இந்தச் சிறுகதைகளுக்கு அப்பால் போவதாக அமையவேண்டும் என்பது எனது வேண்டுகோள். அது மிகவும் அசவியம். ஏனென்றால் இலக்கியத்தில் சாதனை என்பது ஏதோ ஓரிடத்தில் நின்று விடுவதல்ல. அது மேலே மேலே என்று போய்க் கொண்டிருப்பதால் தான் இன்னும் பலர் எழுத வேண்டியதாய் இருக்கிறது. எழுதியவரே தான் செய்த்து போதாது என்று ஒரு நிலையில்தான் அடுத்த புத்தகத்தையும் எழுத வேண்டியிருக்கிறது. அதற்கு ஓர் அளவிற்கு ஒரு மெச்சூரிட்டி வேண்டும். இதோடு அவர் திருப்தி அடைந்துவிடக் கூடாது என்கிற நினைப்பு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு இதைச் சொல்கிறேன். அது அவருக்கு இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.
நன்றாக எழுதுகிறவர்கள் மிகவும் அருகிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக இலக்கியம் என்று கேட்பவர்கள் மேலைநாடுகளில் இப்போது இருக்கிறார்கள். சினிமா போதாதா டீ.வி. போதாதா மற்றும் வேறு பல விஷயங்கள் இருக்கின்றனவே - உலகில் அதெல்லாம் போதும் – இலக்கியம் என்ற ஒன்று ஏதோ பத்துபேர் கூடிக்கொண்டு ஏதோ ஒன்றை எதற்காக செய்கிறார்கள் என்று கேட்கிற ஒரு நிலைமை வந்திருக்கிறது என்பது பேராசிரியர்கள் வாயிலாக தெரிகிறது. ஆங்கிலப் பேராசிரியர்கள் கேட்கிறார்கள். நாம் இதுவரையில் முன்னூறு நானூறு வருடங்களாக இலக்கியம் இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு வந்ததெல்லாம் இனிமேல் எடுபடாது – செல்லாது. ஏனெனில் டி.வி.யும் காமிக்ஸ் புத்தகங்களும் சினிமாவும் தான் பிரயோஜனப்படும் என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால் இலக்கியத்திற்கு என்றைக்குமே ஒரு தேவை இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. கனமான விஷயங்களுக்கு எப்போதுமே ஒரு வால்யூ, தேவை இருக்கத்தான் செய்கிறது. இந்த சினிமா, டி.வி. என்று சொன்னாலும் கூட அவைகளெல்லாம் வார்த்தை என்கிற – மொழி என்கிற – ஒரு சரடோடு இணைக்கப்பட்டதாகத் தான் இருக்கிறது. இந்த மொழி என்பதை சரியாகத் தெரிந்து கொள்ள, சரியாகச் செயல்படும்படியாக செய்வதற்கு கனமான இலக்கிய ஆசிரியர்கள் எந்தக் காலத்திற்கும் தேவைப்படுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. சற்றேறக்குறைய ஒரு மூவாயிரம் வருடங்களாக இலக்கியம் என்கிற சரடை – கனமாக சரடை – புரிந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு பாராட்டுகள் ஓரளவு ஆர்வமுள்ளவர்கள் அதிகமாக ஈடுபடுவதில்லை என்றாலுங்கூட இலக்கியம் என்பது இருந்துகொண்டுதான் இருக்கும்.
இந்த இலக்கியம் என்பது இருந்து கொண்டிருக்கிற வரையில் அரங்கநாதன் போன்றவர்கள் நிறைய செய்ய வேண்டிய காரியங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து வெயல்படவேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இந்த மாதிரிப் புத்தகங்களை ஆயிரம்பேர் கூட படிப்பதில்லையே என்ற ஒரு கேள்வி தமிழ்நாட்டில் பிரத்யேகமாக தமிழ் நாட்டிற்கு மட்டும் உரியதாக – இருந்துக் கொண்டிருக்கிறது. இதை எப்படித் தீர்த்து வைப்பதென்றுதான் தெரியவில்லை. நல்ல கதைகளாக எழுதியிருக்கிறார். நல்லப் புத்தகமாக நல்ல அச்சாக ப்ரூப் மிஸ்டேக்ஸ் இல்லாமல் வருகிற புத்தகங்கள் மிகவும் குறைவு என்பது புத்தகங்கள் படிக்கிற எல்லாருக்கும் தெரியும். இப்போது ஆங்கிலத்தில் வருகிற தினசரி பத்திரிகைகளில் கூட ஒரு பக்கத்திற்கு மூன்று ப்ரூப் மிஸ்டேக்ஸ் வந்துவிடுகிறது. இந்த மாதிரி புத்தகங்கள் – அமைப்பு எல்லாமே நேர்த்தியாக வந்திருக்கின்ற புத்தகத்தை வாங்கவேண்டியவர்கள் மிகவும் அதிகமாக இருக்கவேண்டும். அதிகமாக என்றால் பத்தாயிரக் கணக்கில் வேண்டாம், ஆயிரம் இரண்டாயிரம் என்கிற அளவிலாவது இருக்க வேண்டும் என்கிற நினைப்பு நம் எல்லாருக்கும் இருக்கிறது. அந்த மாதிரி வாசகர்களை – காசு கொடுத்து புத்தகம் வாங்கி படிக்கிற வாசகர்களை – கண்டு பிடிப்பது மிகவும் சிரம்மாக இருக்கிறது. இதை எப்படித் தீர்த்துவைப்பது என்பது என் காலத்தில் நடக்கப் போகிற காரியமல்ல. நமது சந்த்தியர் காலத்தில் – உங்கள் காலத்தில் – நடப்பதற்கு ஏதாவது வழி ஏற்படவேண்டும்.
நல்ல புத்தகங்களைப் படிப்பவர்கள் பத்துப் பேரிடமாவது ஒரு மாதத்தில் இந்தப் புத்தகம் படித்தேன் நன்றாக இருந்த்து என்று திருப்பித் திருப்பி அவர்கள் நம்மிடம் என்ன சொன்னாலும் கூட பொறுத்துக் கொண்டு சொல்ல வேண்டும் என்று நண்பர் சொன்னார். அதையே வேண்டுகோளாக நானும் விடுக்கிறேன். யாரிடமும் புத்தகம் படிக்காதவர் என்று தெரிந்தாலுங் கூட சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த விளம்பரத்திற்கு ஓர் உபயோகம் இருக்கும். இதை நான் முப்பது வருடங்களாக சில பேர்களை திருப்பித் திருப்பிச் சொல்லியே ஓரளவிற்கு அவர்கள் புத்தகங்களுக்கு ஒரு டிமாண்ட் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அது எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கிற ஒரு விஷயம். இந்த மாதிரி விளம்பரப்படுத்த வேண்டியது நல்ல புத்தகங்களை – விளம்பரப்படுத்த வேண்டியது – மிகவும் அவசியம். சிறுகதைகள் மிகவும் குறைவாகவே – நல்ல கதைகள் என்று சொல்லக்கூடியவை – இந்தக் காலத்தில் வருகின்றன என்று சொல்ல வேண்டும், இந்தச் சிறுகதைகளில் – மிகவும் குறைவாக வருகிறவைகளில் – மிகவும் சிறந்த ஒரு கதைத் தொகுப்பாக இந்த ‘வீடு பேறு’ என்னும் கதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு கதையும் ஒரு அனுபவமாக அமைகிறது என்று சொல்வது மட்டும் போதாது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு கதையைப் படிக்கிற போதும் மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூணடுகிற ஒரு அம்சம் இதில் இருக்கிறது. அந்த கனம் அரங்கநாதனின் ஒரு ஸ்பெஷாலிட்டி என்றும் சொல்லலாம். திருப்பித் திருப்பி படிப்பதற்கு இதில் விஷயமிருக்கிறது. இதை வெறும் கதையாகச் சொல்லியிருந்தால் – சம்பவமாகச் சொல்லியிருந்தால், சம்பவம் முடிந்துவிட்டது – கதையை முடித்த பிறகு அந்த சம்பவம் ஞாபகம் இருக்கும். அந்த சம்பவத்திற்கு முந்தைய சம்பவமும் ஞாபகமிருக்கும். திருப்பி எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அந்த சம்பவங்களைச் சொல்வதில் இவர் ஓர் உத்தியைக் கையாளுகிறார். இதை எவ்வளவு பேர் நீங்கள் படித்திருக்கிறீர்கள் என்று தெரியாது. ‘எர்னஸ்ட் ஹெமிங்க்வே’ என்பவர் ஒரு சிறப்பான இலக்கிய ஆசிரியர் என்று பெயர் வாங்கிய முதல் புத்தகம் Farewell to Arms என்ற ஒரு புத்தகம். 1924-25ல் வெளிவந்த்து. அந்த புத்தகத்தைப் பற்றி விமர்சகர்கள் பாராட்டிய ஓர் அம்சம் என்னவென்றால், இந்த நாவலில் சொல்லிய விஷயங்கள் மிகவும் சிறப்பானவை என்று சொல்லி ஹெமிங்க்வே என்பவருக்கு ஒரு முதல்தரமான இலக்கிய அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
அந்த மாதிரி அரங்கநாதனின் சிறுகதைகளில் சொல்லாத விஷயங்கள் – அரணையைப் பற்றி – அரணை என்கிற பெயரே சொல்லாமல் வந்திருக்கிறது என்று நண்பர் வாசித்துக் காண்பித்தார். அந்தமாதிரி சொல்லாமல் விட்ட விஷயங்கள் எழுப்புகிற தொனி நம்மை மீண்டும் மீண்டும் இந்தக் கதைகளை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டிவிடக் கூடியவை. இந்த சொல்லாமல் விட்ட விஷயங்களை எப்படி நாம் கிரகித்துக்கொள்கிறோம் என்பது ஒவ்வொரு தடவை படிக்கிற போதும் இதை முதல் தடவை நாம் கவனிக்க முடியவில்லையே இரண்டாவது தடவை தானே கவனிக்க முடிந்தது – இன்னும் என்ன இருக்கிறது இதில் கவனிப்பதற்கு என்று யோசித்துப் பார்த்துப் படிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதே மாதிரி படிக்க வேண்டிய இலக்கிய ஆசிரியர்கள் தமிழில் இதற்கு முன் இரண்டு மூன்று பேர் இருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் சில கதைகள் எல்லாம் திரும்பத் திரும்ப படித்து அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டிய கதைகள்.
அதற்கு மாறாக படித்த உடனேயே புரிந்து விடுகிற கதைகளை சிலபேர்கள் மிகவும் விறுவிறுப்பாக எழுதியிருந்தாலும்கூட அவர்களை இலக்கிய ஆசிரியர்களாக ஏற்றுக் கொள்வது மிகவும் சிரம்மாக இருக்கிறது. இதை இலக்கியத்திற்கே ஒரு தொனி என்கிற அடிப்படையைத்தான் அதாவது உடனே விளங்காத ஆனால் பின்னால் நிச்சய விளக்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிற விஷயங்கள் சிறுகதையில் ஏற்படுகிறபோது – கவிதைகளில் ஏற்படுகிற மாதிரி – நாவல்களில் கூட இதுமாதிரி உண்டு – இலக்கியத் தரமாக இருக்கிற நாடகங்களிலும் உண்டு – இந்த தொனி என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அது அரங்கநாதனில் மிகவும் பூரணமாக தொனிக்கிறது என்கிற விதத்தில் இந்தச் சிறுகதைகள் உள்ளன. இது 1987ல் வெளிவந்துள்ளது. இந்த இரண்டு மூன்று வருடங்களில் என் கண்களில் கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து சிறுகதை தொகுப்புகள் பட்டிருக்கும். அதில் மிகச்சிறந்த ஒன்றாக இதை நான் கருதுகிறேன் என்று சொல்லி அரங்கநாதனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை கூறுகிறேன்.
ஒரு இரண்டாயிரம் பேராவது வாங்கிப்படிப்பதற்கு ஏதாவது வசதி செய்வதற்கு விளம்பரப் படுத்துவதற்கு யாராவது உதவினால் நல்லது என்று நினைக்கிறேன். நல்லப் புத்தகங்கள் என்று சொல்லி – எடுத்துச் சொல்லி நூறுபேருக்கு அல்லது ஆயிரம் பேருக்கு இந்தப் புத்தகம் நல்ல புத்தகம் என்று சொல்லி, எழுதி, தெரியப்படுத்துவதற்காக ஒரு ஸ்தாபனம் மிகவும் அவசியமென்று கருதுகிறேன். நல்ல சிறுகதைகள் வெளியிடுவதற்கு இப்போது தமிழில் ஸ்தாபனங்கள் எதுவும் இல்லை. எல்லாரும் மணிக்கொடி மணிக்கொடி என்று அந்தக் காலத்தில் இருந்து ஒரு பத்திரிகையைப் பற்றி பேசுகிறார்கள். அது இருந்தது-போனது. ஆனால் இப்போது என்ன பண்ண வேண்டும். நல்ல கதைகள் எழுதுகிறவர்கள் எங்கே எழுதுவது என்று கேட்டால் ஏதோ ஒரு கணையாழி இருக்கிற மாதிரிச் சொல்லலாம் – சில சமயம் அது நல்ல கதைகள் போடுகிறது. ஏதோ தீபத்தில் சில சமயம் நல்ல கதைகள் வருகின்றன. இந்த மாதிரி ஒன்றிரண்டு பத்திரிகைகள். இப்படியிருக்கிற ஒரு நிலையில் இம்மாதிரி கதைகள் எல்லாம் வெளிவருவதற்குக்கூட ஏதாவது ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செய்யவேண்டும். இது எப்படி நடக்குமென்று எனக்கு தெரியாது. நான் இதையெல்லாம் பல தடவை சொல்லிச் சொல்லி தோற்றுப் போனவன் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம். இதை எப்படிச் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இது இப்படியே தொடர்ந்து ஆனந்த விகடனில் வருகிற கதைகள் போதும் – குமுதம் கதைகள் போதும் என்று தமிழர்கள் காலத்தள்ளுவது சரியல்ல என்று தோன்றுகிறது. இந்தக் கதைகளுக்கு அப்பால் சிறுகதை என்ற ஓர் இலக்கியம் உண்டு. அந்த சிறுகதைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதைப் படிக்க வேண்டியவர்கள் ஆயிரம் இரண்டாயிரம் பேராவது தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்கிற ஒரு நினைப்பு ஏற்படவேண்டும். அது எப்படி ஏற்படும் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தான் பலருக்கும் சொல்லி இந்த மாதிரி நல்ல புத்தகங்களைப் படிப்பதற்கு வாசகர்களைத் தூண்ட வேண்டும் என்று எண்ணுகிறேன் இலக்கியத்திற்கு ஒரு இயக்கமாக இயங்க வேண்டியவர்கள் இலக்கிய ஆசிரியர்கள் அல்ல. இலக்கிய ஆசிரியர்கள் வாசகர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக எழுதுவதே நின்றுவிடும். வாசகர்கள் தாம் தங்களது ரசனையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களது ரசனையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களது அறிவை விருத்தி செய்து கொள்வதற்கு, தங்களது தமிழ் வளத்தை விருத்தி செய்து கொள்வதற்கு நல்ல புத்தகங்களை தேடிக் கொண்டுபோய்படித்தாக வேண்டும். அப்படி தேடிக் கொண்டுபோய் படிப்பதுடன் மற்றவர்களையும் வாசிக்கச் செய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும்.
நன்றி: மா. அரங்கநாதன் தளம்

மது குடித்தவுடன்

மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது.

இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும் வாந்தி ஏற்படும்.

மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக்கிறது. இதனால் உடலின் நீர் சமநிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படும். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்கும்.ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும். இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்பநிலையும் குறையும்.

குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, சுவாசக்கோளாறு, காது கேளாமை, முடிவெடுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை ஏற்படும். மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ்டோக், இருதய கோளாறு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்முறை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்படும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமானது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.