Search This Blog

Friday, September 30, 2011

Underwater Hunter Goes Deep Sea Fishing Without Air!

Women jewel thieves jailed for daring raid on Leicester shop

இலங்கை இந்துப் பண்பாட்டு வரலாறு: ஓர் அறிமுகம்



ந்துமதம் மிகப்பழைய காலத்திலேயே இந்தியா,இலங்கை உள்ளிட்ட பரதகண்டப்பகுதி முழுவதிலும் அதற்கப்பால் தென்கிழக்காசியப் பகுதிகளிலும் மேலும் உலகமெங்கிலும் பரவி விரவியிருந்தது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்த வகையில் இலங்கையில் பண்டைக்காலம் தொட்டு எவ்வாறெல்லாம் இந்துமதம் சிறப்புற்றிருந்தது என்று சுருக்கமாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை வரலாறு பற்றிப் பேசும் நூல்களில் மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த நூல் முதன்மையானது. இது பௌத்தத் துறவிகளால் எழுதப்பெற்றது.இந்நூல் மூலமாக இலங்கையில் மிகப்பழைய காலத்திலேயே இந்து மதம்- முக்கியமாக சைவசமயம் இருந்திருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது.
இலங்கையில் பொ.மு 3ம் நூற்றாண்டில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பது. அவனது முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது.
[பொ.மு - பொதுயுகத்துக்கு முன், BCE.  பொ.பி - பொதுயுகத்திற்குப் பின்,  CE (Circa)]
jaffna_old_coinபழங்கால நாணயங்கள் காட்டும் இந்துமதத்தொன்மை
இலங்கையில் கிடைத்த பொ.மு 3ம், 2ம் நூற்றாண்டுகளுக்குரிய நாணயங்கள் பலவற்றில் இடபஇலட்சிணைகள் இருப்பதாக வரலாற்றறிஞர்கள் காட்டுவர். இது குறித்து பேராசிரியர்.ப.புஷ்பரட்ணம் அவர்கள் இவை தமிழகத்து இடப நாணயங்களைக் காட்டிலும் வேறுபாடாக இருப்பதால் அவை இலங்கைக்கே உரியன எனக் கருதுவதாகக் குறிப்பிடுவார்.
வேறு நாணயங்கள் சிலவற்றில் மகாலஷ்மி, சிவலிங்கம், சுவஸ்திகம், பூரணகும்பம், வேல், மயில், சேவல் போன்ற உருவங்கள் செதுக்கப் பட்டிருப்பதாகவும் வரலாற்றாய்வாளர்கள் காட்டுகின்றனர். இவ்வாறான நாணயங்கள் இலங்கையின் கந்தரோடை, மாதோட்டம், நல்லூர், வல்லிபுரம்,அநுராதபுரம், புத்தளம், திசமகராம போன்ற இடங்களில் கிடைத்தன என்பர்.
இலங்கையில் பௌத்த சாசனங்கள் பலவற்றில் குமார, விசாக, மகாசேன போன்ற பெயர்கள் உள்ளன. இவையும் முருகவழிபாட்டின் அடையாளங்களை உணர்த்துவதாகவும் சில அறிஞர்கள் கருதுவர். இவ்வாறாக இலங்கையின் பல பாகங்களிலும் கிடைத்த பழங்கால நாணயங்களினூடாக இந்து மதம் பழைய காலத்திலேயே இங்கு நிலவியிருக்கிறது என அறியலாம்.
அரசரும் சமூகமும்
மகாவம்சத்தில் விஜயனது புரோஹிதனாக உபதிஸ்ஸ என்னும் பிராம்மண மரபினன் விளங்கினான் என்று கூறுகிறது. அது போல பண்டுகாபயன் என்ற இலங்கை வரலாற்றில் பிரபலமான அரசன் பண்டுல என்ற பிராம்மணனிடம் வில் வித்தை கற்றான். பண்டுலவின் மகனான சந்திரன் என்பான் பிற்காலத்தில் அவனது ராஜகுருவானான். சுமார் 22 மிகப்பழைய கால ஈழத்துப் பிராமிச் சாசனங்களில் பிராமணர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை பேராசிரியர் சி.பத்மநாதன் எடுத்துக் காட்டுவார். இச்சாசனங்கள் யாவுமே பௌத்தசமயச் சார்பானது.இவ்வாறு பிராமணர்கள் சிறப்புற்றிருந்தமையானது இலங்கையில் இந்துசமயத்தின் செல்வாக்கைக் காட்டுவதாகக் குறிப்பிடுவர். இங்கே பிராமணர் என்று சாசனங்களால் குறிப்பிடப்படுபவர்கள் வேதம் கற்ற ஒழுக்க சீலர்களாகவே கருத முடியும் (அக்காலத்திலே பிராமணர்கள் ஜாதி மரபில் தான் உருவானார்கள் என்று கருத ஆதாரங்கள் இல்லை).
வாட்டிகதிஸ்ஸ என்ற பௌத்தஅரசன் காலத்தில் மஹாவிகாரை என்ற பௌத்த முக்கிய விகாரையினருக்கும் அபயகிரி விகாரையினருக்கும் ஏற்பட்ட தகராறை நீக்கவும்,அதை விசாரித்து தீர்க்கவும் மன்னனால் திக காரயண என்ற பிராமணன் அரசனால் நியமிக்கப்பெற்றான் என்று குறிப்பிடப்படுவது இக்கருத்திற்கு வலுவூட்டுகிறது.
isurumuniya_siva-parvathiபல்லவரும் சோழரும் இலங்கையும்
மாமல்லன் என்ற பல்லவப் பேரரசனின் சேனைகளின் துணையுடன் மானவர்மன் என்பான் இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. இக்காலத்திலேயே தொண்டை மண்டலத்தில் சமஸ்கிருதத்தை எழுதுவதற்காக கிரந்தலிபி உருவாக்கம் பெற்றது என்பர். இந்தக் கிரந்த லிபி இன்று வரை இலங்கையில் தாராளமான புழக்கத்தில் இருக்கிறது. பல்லவக் காலத்தில் வரையப்பெற்ற சாசனங்கள் பலவற்றில் கூட இந்த லிபி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் சிகிரியா போன்ற இடங்களில் கிரந்த லிபியில் அமைந்த சாசனங்களைக் காணலாம்.இக்காலத்தைய பௌத்த ஆலயங்களான நாலந்தா கெடிகே மற்றும் தேனுவரைக்கோயில் போன்றன பல்லவ காலத்தில் எழுந்த காஞ்சி கைலாசநாதர் கோயில் போன்ற அமைப்பில் உள்ளது. இசுறுமுனிய என்ற இடத்தில் பிரபலமான இரு காதலர்களின் சிலை உள்ளது. இதை சில ஆய்வாளர்கள் உமாமஹேஸ்வரர் என்று கூறுகின்றனர். இவை ஏழாம் எட்டாம் நூற்றாண்டிற்குரியது.
இசுறுமுனியவில் குதிரைத் தலையின் அருகிலிருக்கும் வீரன் ஒருவனின் சிற்பம் ஒன்றும் இருக்கிறது. இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கலாயோகி டாக்டர் ஆனந்த குமாரசுவாமி ‘இராமாயணத்தில் பாலகாண்டத்தில் வர்ணிக்கப்பெறும் கபில முனிவரின் வடிவமாக இதுவுள்ளது’ என்கிறார்.ஆம்ஸ்ரர்டாம் பல்கலைக்கழகப் பேராசிரியரான லொனாஹஸன் டீ லியூ என்ற உலகப்புகழ் ஆய்வாளர் இச்சிற்பத்தை ‘ஐயனார்’ என்று குறிப்பிடுவார். இதற்கு ஆதாரமாக அவர் தமிழகத்திலும் கர்நாடகத்திலுமுள்ள புராதன ஐயனார் சிலைகளுடன் இசுறுமுனிய சிற்பத்தை ஒப்பு நோக்கி ஒரு ஆழமான ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறார்.
isurumuniya_iyanar
இராஜராஜனுக்குப் பின் பொ.பி 1016ல் பட்டம் ஏறியவன் இராஜேந்திர சோழன். அவன் கங்கையும் கடாரமும் தன் கையகப்படுத்தியவன். இவன் இலங்கையையும் தன் ஆட்சிக்குள் உட்படுத்திக் கொண்டு பேரரசனாகத் திகழ்ந்தான். இக்காலத்தில் இலங்கை ‘மும்முடிச் சோழமண்டலம்’ என்று அழைக்கப்பெற்றிருக்கிறது.இக்காலத்தில் மாதோட்டத்தில் சோழர்களால் திருவிராமேஸ்வரம், இராஜராஜேஸ்வரம் என்ற இரு சிவாலயங்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன. இதைவிட உத்தமசோழீச்சரம்,பண்டித சோழீச்சரம் என்ற கோயில்களும் அமைக்கப்பட்டன.அது வரை காலமும் தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தை இவர்கள் பொலநறுவைக்கு மாற்றினர். புலத்திநகரே பொலநறுவையாயிற்று. இதற்கு சோழர்கள் வைத்த பெயர் ஜனநாதமங்கலம். இங்கும் பல சிவாலயங்கள் எழும்பின. இவற்றில் வானவன் மாதேவி ஈஸ்வரம் என்கிற கோயில் இன்று வரை சிறப்பாக உள்ளது. இக்காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் என்ற குடியிருப்புக்களும் அமைக்கப்பெற்றிருக்கின்றன.
ஞானசம்பந்தரும் சுந்தரர் பெருமானும் பாடிய பெருமை
வாயுபுராணத்தில் கோகர்ண என்கிற சிவாலயமஹத் (பெரிய சிவாலயம்) பற்றி பேசப்படுகிறது. இது இலங்கையிலுள்ள திருக்கோணேஸ்வரத்தைக் கருதும் என்பது சிலரது அபிப்ராயம். இது பற்றி தெளிவாகக் குறிப்பிட முடியாவிடிலும் இத்திருத்தலம் ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தப் பெருமானால் ஒரு பதிகம் பாடிப் போற்றப்பெறுவது தெளிவாகக் கிடைக்கிறது. கிழக்கிலங்கையில் கடலோரம் காணப்படுகிறது இக்கோயில்.
தாயினும் நல்ல தலைவர் என்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றகலார் மாண்பினர் காண்பல வேடர்
நோயினும் பிணியும் தொழிலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே
இப்படியாக இந்தப் பதிகம் திருக்கோணேஸ்வரத்திற்காக அமைந்துள்ளது.
koneswaram temple
இத்தலத்தில் மாதுமையம்பாள் உடனாக கோணநாதர் விளங்குகிறார். கோயில் தீர்த்தம் பாவநாசம். சிறிய அழகிய மலை மீது இக்கோயில் இருக்கிறது. தட்சண கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, திரிகோணாசலபுராணம், திருகோணமலை அந்தாதி என்ற பல்வேறு பழந்தமிழ் இலக்கியங்கள் இத்தலம் குறித்து எழுந்துள்ளன. கோகர்ணேஸ்வரம் என்றும் கூறப்பெறும் இக்கோயிலை நேபாளத்தில் உள்ள கோகர்ண, மற்றும் கலிங்கதேசத்தில் இருந்த கோகர்ண, மேலும் மேற்கிந்தியாவில் கர்நாடகாவில் உள்ள கோகர்ண என்கிற சிவாலயங்களுடன் ஒப்பிடுவர்.
ஆக, ஜம்பூத்துவீபத்தின் நாற்றிசையிலும் கோகர்ண என்கிற சிவாலயங்கள் சிறப்புற்றிருந்துள்ளன. அவற்றில் தென்திசையில் இருப்பதே திருகோணமலையாகும். இக்கோயிலில் பல்வேறு புராதன கல்வெட்டுகள்-சிற்பங்களும் கிடைத்துள்ளன.
திருகோணமலையிலுள்ள சிவாலயம் இராவணேஸ்வரனால் வழிபடப்பெற்றதாகவும், அங்குள்ள கன்யா வெந்நீரூற்று அவன் தன் பிதிர்களுக்கு கடனாற்ற உருவாக்கியது என்றும் கூறுவர். திருகோணமலையில் மலையில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருக்கிறது. இதை ‘இராவணன் வெட்டு’ என்கின்றனர்.
ravanan_vettu
இவற்றை விளக்குவதாக புதிதாக- கோயில் முன்றலில் இராவணன் சிவபூஜை செய்கிற பெரிய சிற்பம் ஒன்றும் இம்மாதம் உருவாக்கப்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலைப் போல இலங்கையின் வடமேற்கில் மாதோட்டத்தில் திருக்கேதீஸ்வரம் அமைந்திருக்கிறது. இத்தலம் பேரில் திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஒவ்வொரு தனிப் பதிகங்களால் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.
நத்தார் படைஞானன் பசு வேறுந்தனைக் கவிழ்வாய்
மத்தம் மதயானையுரி போர்த்த மணவாளன்
பத்தாகிய தொண்டர் தொழும் பாலாவியின் கரைமேல்
செத்தார் எலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே
என்று பலவாறாக இத்தலத்தைப் போற்றும் தேவாரப்பாசுரங்களைக் காண்கிறோம்.மாதுவட்டா என்கிற அசுரச்சிற்பி வழிபட்ட இடம் ஆதலில் இவ்விடம் மாதோட்டம் எனப்படுகிறது என்பதும் கேது பூஜித்த தலமாதலில் கேதீஸ்வரம் எனப்படுகிறது என்பதும் புராணச்செய்திகள்.
இத்தலத்து இறைவனை இராவணனும் மண்டோதிரியும் மட்டுமல்லாது பிரம்மஹத்தி தீருவதற்காக ஸ்ரீ ராமரும் பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
Munneswaram
Munneswaram
பாவம் வினையறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்
தேவன் எனையாள்வான் திருக்கேதீச்சரத்தானே
என்பது சுந்தரர் வாக்கு. இவற்றால் இத்தலத்தீர்த்தமான பாலாவி ஆறு சிறப்புற்றிருக்கிறது.
இக்கோயிலில் கௌரியம்பாள் உடனாக கேதிஸ்வரநாதர் விளங்குகிறார். பௌத்த சாசனங்கள் சிலவற்றிலும் கேதீஸ்வரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.சுந்தரரும் ஞானசம்பந்தருமே இத்தலத்தைப் பாடியதாகச் சொல்லப்படுமிடத்தும் திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றிலும் (திருவீழிமிழலைப் பதிகம்) இத்தலம் கூறப்படுவது கண்டின்புறத் தக்கது.இதனோடு இலங்கையில் பழம்பெருமை வாய்ந்ததும் இராமாயண காலத்திற்கு முற்பட்டதுமாக பஞ்சஈச்சரங்கள் என்று ஐந்து சிவாலயங்களை அடையாளப்படுத்துவர்.
இவற்றில் திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் (இத்தலம் பற்றி “ போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்” என்ற தமிழ்ஹிந்து கட்டுரையில் குறிப்புகள் உள்ளன), முன்னேஸ்வரம், திருத்தம்பலேஸ்வரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவர்.
திருத்தம்பலேஸ்வரம் இன்று இல்லை. முன்னேஸ்வரம் இன்றும் உள்ள அற்புத தலம்.இங்கு வடிவாம்பிகை உடனாக முன்னைநாதர் விளங்குகிறார். இங்கு வருடாந்தம் ஆவணிமாதத்தில் 25 நாட்கள் மஹோற்சவம் நடைபெறுகிறது. இதனை விட பல்வேறு சிவாலயங்கள் இலங்கை எங்கணும் விரவிப் பரந்திருக்கின்றன. புதிதாகவும் பல ஆலயங்கள் தோன்றியுள்ளன.
kathirkamamஸ்காந்தம் முதலிய புராணங்களில் ஏமகூடம் என்று போற்றப்பெறுவதான கதிர்காமம் தென்னிலங்கையிலேயே உள்ளது.சூரசம்ஹாரத்திற்காக முருகன் சூரனுடைய இருப்பிடமான மஹேந்திரபுரிக்கு படையெடுத்துச் சென்றபோது ஹேமகூடம் என்கிற பாசறையில் வீற்றிருந்தார். கதிர்காமத்தில் தேவதச்சனைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இப்பாசறையில் நடந்த சம்பவங்களைப் பற்றி தமிழில் எழுந்த கந்தபுராணத்தின் ‘ஏமகூடப்படல’மும் பேசுகிறது. முருகப்பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் செய்த இடமாகவும் இதனைச் சிலர் கருதுவர். அது போலவெ ஸ்கந்தாவதாரம் பூர்த்தியான இடம் இதுவே என்பதும் சில ஞானிகளின் கருத்து. அதாவது அந்த அவதாரத்தை நிறைவு செய்த இடமும் கதிர்காமமே. இலங்கையில் உள்ள கதிர்காம தலத்தை முப்பதிற்கும் மேற்பட்ட திருப்புகழ்களால் அருணகிரிநாதர் போற்றியிருக்கிறார். மிகவும் புனிதமான இத்தலம் உள்ள கிராமமே புனிதநகராக இலங்கையரசால் பிரகடனம் செய்யப்பெற்றுள்ளது. இன்று இக்கோயிலில் சிங்கள மொழி பேசும் கப்புறாளைமார் என்போரே வெண்துணியால் வாய்கட்டிப் பூசிக்கிறார்கள் எனினும், பழைய காலத்தில் சிவாகம முறையிலான வழிபாடு நடந்தமைக்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன.
வட இலங்கையில் அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றான புகழ்மிக்க நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் உள்ள மூலாலய அம்பாளின் திருவடிவம் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கிற அன்னை நாகபூஷணியாள் பேரிலும் பல்வேறு இலக்கியங்கள் மலர்ந்துள்ளன.
அம்பிகைக்கே உரிய பழைமையான ஆலயங்கள் பலவும் இலங்கை முழுவதும் நிறைந்திருக்கின்றன. இதிலும் யாழ்ப்பாணத்தில் அம்பிகை வணக்கம் மிகச்சிறப்பாகப் பரவியிருக்கிறது. இவ்வகையிலேயே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அம்பிகை அடியவரான அன்பர் ஒருவரே மகாகவி பாரதிக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும் வாய்த்திருக்கிறார். இதை பாரதியே கூறுவான் -
‘கோவிந்தசாமி புகழ் சிறிது சொன்னேன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான்
தேவி பதம் மறவாத தீர ஞானி
சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான்
பாவியரைக் கரையேற்றும ;ஞானத்தோணி,
பரமபதவாயிலெனும் பார்வையாளன்
காவிவளர் தடங்களிலே மீன்கள்பாயும்
கழனிகள் சூழ்புதுவையிலே அவனைக் கண்டேன்’
இது போலவே வேறு இடங்களிலும் ‘யாழ்ப்பாணத்தையன்” என்றும் ‘ஜகத்திலொரு உவமையிலா யாழ்ப்பாணத்தான்’ என்றும் பாரதி கூறுவான். இவை மூலம், பாரதி காலத்தில் அம்பிகை மேல் மாறாப் பக்தி கொண்ட யாழ்ப்பாணத்து சைவசமயிகள் புதுச்சேரி போன்ற இடங்களில் பரவியிருந்தமையையே காட்டுவதாகவும் கொள்ளலாம்.
பிற்பட்ட காலத்தில்..
பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிறது. இம்மொழி சமஸ்கிருதம், தமிழ், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகும்.இக்காலத்தையவனான குளக்கோட்டன் என்கிற அரசன் திருக்கோணமலையில் உள்ள சிவாலயத்திற்குப் பெருந்திருப்பணிகள் செய்திருக்கிறான்.குளக்கோட்ட அரசன் காலத்தில் ஒரு ஜோதிடரின் எதிர்காலக் கணிப்பின் படி ஒரு வெண்பா எழுதி கோயிலுள்ள கோட்டைச் சுவரில் பொறிக்கப்பட்டது. அது இன்றும் இருக்கிறது.
முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிரிக்கவே –மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணன் போன பின்
மானே வடுகாய் விடும்
இச்சாசனம் 16ம் நூற்றாண்டிற்குரியது என்று தமிழகச் சாசனவியலாளரான கிருஷ்ணசாஸ்திரிகள் குறிப்பிட்டிருக்கிறார். எனினும் இதன் காலம் இன்று வரை சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.இதே போல கஜபாகு என்கிற சிங்கள மன்னனும் சைவசமயியாகவே வாழ்ந்ததாக மகாவம்சம் கூறும். அவன் பங்குனி உத்தரத்தன்று பெரியளவில் உற்சவங்கள் செய்ததாக குறிப்புகள் உள்ளன.
nallur_skandan_ther
நல்லூர் கந்தசுவாமி கோவில் தேரோட்டம்
திருகோணமலையில் பல கிரந்த லிபியில் எழுதப்பெற்ற சாசனங்கள் கிடைத்ததாகக் கூறுகின்றனர். பேராசிரியர் சேனரத் பரணவிதான அவர்களால் ஆராயப்பெற்ற ஒரு சாசனம் இப்படிக் கூறும்.
ஸ்வஸ்தி ஸ்ரீ தேவ ஸ்ரீ சோடகங்க, ஷதிதல தில, காம்ப்ராய்ய லங்காம் அஜ,
ய்யாம் சாகேப்(த) (ச)ம்பு புஷ்பே க்ரிய பவ(ன) ரவெள ஹஸ்தவேமே, ஷ லக்நே
கோகர்ணே..
இதன் பொருளாக அவர் மொழிபெயர்த்தது-
மங்கலம் பொலிக! சுகாப்தம் சம்புபுஷ்ப வருஷத்திலே இரவி மேடத்தில் நிற்க,அத்த நட்சத்திரம் (சந்திரனோடு) மேட இலக்கினத்திற் கூடிய வேளையில் மேன்மை பொருந்திய சோடங்க (தேவ(ன்) பூலோகத் திலகமானதும் வெல்லுவதற்கு அரியதுமான இலங்கையில் வந்து கோகர்ணத்திலே..’
இது சுட்டும் காலம் கி.பி 1223 சித்திரை 14ம் திகதி காலை என்பது அவரது கருத்து.
இது போல இந்துசமயச் சார்பான பல சிலாசனங்கள் கிடைக்கப் பெற்றதாக வரலாற்றாய்வாளர் பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகிறார்.
இதே போல பல்வேறு புராதன கால சிற்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் உமாமஹேஸ்வரர், சந்திரசேகரர், நடராஜர், வீரபத்திரர், நாகராஜர், அம்பாள்,மஹாவிஷ்ணு, விநாயகர், நந்தி, சப்தமாதர், சிவலிங்கம், சோமாஸ்கந்தர்,ரிஷபவாஹனர், சூரியன், சைவநாற்குரவர் (நாயன்மார்கள்), சண்டிகேஸ்வரர், மஹாலஷ்மி, நர்த்தனகிருஷ்ணர், முருகன் போன்ற பலவும் அடங்கும்.
Jaffna Kingdom Emblem
Jaffna Kingdom Emblem
இலங்கையின் வடபால் இரு பெரும் விஷ்ணுவாலயங்கள் உள்ளன. அவையும் மிகப்பழைய காலம் தொட்டு உள்ளவை. பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோயில், வல்லிபுரம் பெருமாள் கோயில் என்கிற அவை இரண்டும் நிச்சயமாக 10ம் நூற்றாண்டுக்கு முந்தைய புராதனமானவை.
இவற்றில் பொன்னாலைக் கோயில் போர்த்துக்கேயரின் வருகைக்கு முன் ஸ்ரீரங்கம் போல ஏழு திருவீதிகளுடன் காணப்பட்டது என்பதற்கு அங்கே கோயில் சூழமையில் உள்ள சில சிதைவுகள் சான்றாகின்றன. இதே போல அநுராதபுரம் தென்னிலங்கையில் தேவேந்திரமுனை மற்றும் கிழக்கிலங்கையிலும் பழைமையான விஷ்ணுவாலயங்கள் இருந்துள்ளன. ஆனால் வைஷ்ணவர்கள் இருந்துள்ளனரா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. சைவ ஆகம அர்ச்சகர்களே இக்கோயில்களும் பூசை செய்திருந்திருக்கக் கூடும்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோயில், கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் கோயில், மாமாங்கம் சிவன் கோயில், திருத்தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரர் கோயில், நீர்வேலி அரசகேசரிப்பெருங்கோயில், போன்ற இன்னும் பிற பல ஏராளமான சோழர்கால, நாயக்கர் கால வரலாறு கோண்ட கோயில்களையும் இன்றும் இலங்கையில் அவதானிக்கலாம்.
Maviddapuram Kandaswamy temple
Maviddapuram Kandaswamy temple
16ம் நூற்றாண்டில் போர்த்துக்கெயர் இலங்கைக்கு வந்து இந்துக் கோயில்கள் பலவற்றையும் தரைமட்டமாக்கி அதிபாதகம் செய்ததால் இன்றைக்கு புராதன கோயில்களை புராதன அமைப்புடன் காண இயலவில்லை. இவர்களும் இவர்களுக்கு அடுத்து வந்த ஒல்லாந்தர்களும் மிகவும் மதக்காழ்ப்புணர்வுடன் செயற்பட்டமை வரலாற்றில் பதிவாகிறது.
இவர்களின் குறிப்புகளில் தாம் இந்துசமயிகளுக்குச் செய்த துன்பங்களை எல்லாம் பெருமை பொங்க எழுதி வைத்திருப்பதாகவும் அறியமுடிகிறது. இவற்றில் உள்ளபடி, நல்லூரியில் பல வீதிகளுடன் விளங்கிய நல்லைக் கந்தன் பேராலயத்தை தாம் துடைத்தழித்தமை பற்றி பெருமையாகக் கூறியிருக்கிறார்கள்.
திருகோணமாமலையில் ஆயிரங்கால் மண்டபம் பொன்றவற்றுடன் அமைந்திருந்த மாபெருங்கோயிலையும் திருக்கேதீஸ்வரத்திலிருந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய கோயில்களினையும் நொருக்கியிருக்கிறார்கள் இவர்கள். மிகவும் நெருக்கி மக்களை கிறிஸ்தவத்திற்கு (கத்தோலிக்கம், புரொட்டஸ்தாந்தியம் இரண்டு பிரிவுகளும்) வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்திருக்கிறார்கள்.
இவர்களின் மதமாற்ற அட்டூழியங்கள் குறித்து பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன. இது குறித்து முனைவர். கோ.ந.முத்துக்குமாரசாமி அவர்களின் ’ஈழத்துச் சிதம்பரம்’ கட்டுரையிலும் சிறிது விடயங்களைக் காணலாம்.
போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு வீட்டார் போர்த்துக்கேயரின் உணவுக்காக பசு ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்ததாம். இந்நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள திருநெல்வேலி (யாழ்ப்பாணத்திலும் திருநெல்வேலி என்று ஒரு ஊர் இருக்கிறது) என்ற ஊரிலிருந்த ஞானப்பிரகாசர் என்பவரது முறை நாள் வந்ததாம். அவர் அதற்கு உடன்படமுடியாமல், அதே வேளை ஆட்சியாளர்களுடன் பகைக்க இயலாமல், முதல் நாள் இரவோடு இரவாக ஊரை விட்டு களவாக ஒரு படகில் ஏறி வேதாரண்யம் வந்து துறவு பூண்டார். ஞானப்பிரகாச முனிவர் பின்னர் சிதம்பரத்திற்குச் சென்றுதங்கியிருந்து பல பணிகள் செய்தார். சைவசித்தாந்த நூல்களுக்கு விளக்கவுரை எழுதினார். கோயிலிற்கு அருகில் மாலைகட்டித் தெரு என்று சொல்லப்பெறும் இடத்தில் இன்றைக்கு உள்ள சேக்கிழார் கோயிலுக்கு முன் குளம் ஒன்று அமைத்தார். அது ஞானப்பிரகாசர் குளம் என்றழைக்கப்பெற்று சில காலத்திற்கு முன் வரை நடராஜரின் தெப்போத்ஸவம் நடைபெற்று வந்ததாம்.
இவை எல்லாம் போர்த்துக்கேய- ஒல்லாந்த மத வெறியர்களின் செயற்பாடுகளுக்கு ஆதாரங்களாக இருக்கின்றன. இத்தகு சிக்கல்களுக்கு அப்பால் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் போன்ற பெரியவர்களின் பணிகளால் மீளவும் இந்து எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
ஆக, இக்கட்டுரை இலங்கையில் எக்காலம் தொட்டு இந்துக்கள் இருந்தார்கள்? என்று கேட்பவர்களுக்கான ஒரு சுருக்க விளக்கக் கட்டுரையேயாகும். இது தொடர்பான விரிவான ஆய்வுகள் பல்வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப்பெற்று வருகின்றன. இன்னும் இன்னும் அது விரிவு பெற வேண்டும். இலங்கையில் இந்து மதம் வந்த காலம் என்ன? என்று கேட்கப்படுமாகில் இதுவே இலங்கையின் ஆதிசமயம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. வரலாற்றால் நிர்ணயிக்கமுடியாத காலத்திலிருந்தே இலங்கையில் இந்து தர்மம் செழிப்புற்றுத் திகழ்ந்திருக்கிறது.

பாவ மன்னிப்பும் பாப விமோசனமும்



கேள்வி: கிறிஸ்துவர்கள் தாங்கள் செய்த பாவங்களைப் பாதிரியாரிடம் சொல்லிவிட்டால் பாவம் நீங்கி விடுமாம். இது உண்மையா?
சுவாமி சித்பவானந்தர் பதில்:
பாவ மன்னிப்பு என்பது கிறிஸ்தவ மதத்திலுள்ள முக்கியமான சம்பிரதாயங்களில் ஒன்று. மனிதர் செய்கின்ற பாபத்தைக் கடவுள் மன்னிக்கிறார் என்றும், கடவுளினுடைய பிரதிநிதியாக இருக்கின்ற குருமார்கள் அதை மன்னிக்கிறார்கள் என்றும் கிறிஸ்தவர்கள் நம்பி வருகிறார்கள். குருமார்கள் பாப மன்னிப்புக் கொடுத்து விட்டால் கடவுளே மன்னிப்புக் கொடுத்ததற்குச் சமானம் என்றும் அவர்கள் நம்பி வருகிறார்கள்.
அவர்களுடைய நம்பிக்கையை நாம் முழுவதும் ஏற்றுக் கொள்வதில்லை. அதில் ஏகதேசம் உண்மையிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். பாப மன்னிப்பு என்னும் கொள்கைக்குப் பதிலாக பாப விமோசனம் என்பது நமது கோட்பாடு.
பாவச் செயல்கள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அறியாமை அல்லது அக்ஞானம். நல்லறிவு பெற்றுவிட்ட மனிதன் திரும்பவும் பாபம் செய்யமாட்டான்.சாம்பல் குவியலில் தீ இருப்பது ஒருவனுக்குத் தெரியவில்லை. அதனுள் நடந்தான்; அது காலைச் சுட்டுவிட்டது. அந்த வலியை அவன் அனுபவித்தே ஆகவேண்டும். அந்த வலியை மன்னித்து விடுகிறேன் என்று யாரும் சொல்லமுடியாது. அந்த வலியின் வேகத்தை மருந்து முதலியன இட்டுத் தணிக்கலாம். ஏற்கனவே செய்த பாவச் செயலின் விளைவை விவேகம், திதிக்ஷை முதலிய சீரிய மனப்பான்மைகளைக் கொண்டு தணித்து விடலாம்.
பாப மன்னிப்பு என்பதற்குப் பதிலாக ஹிந்து மதத்தில் பிராயச் சித்தம் என்னும் கோட்பாடு இருக்கிறது. தாற்காலிகமாக மறைந்து போன நல்லறிவைத் திரும்பவும் பெற்றுவிடுவது என்பது அதன் கோட்பாடு. அக்ஞான நிலையில் இருக்கும் ஒருவன் உடலைத் தன்னுடைய யதார்த்த சொரூபம் என்று நினைக்கின்றான். அப்படி நினைத்துக் கொண்டிருப்பவன் தன் வினைப்பயனை அனுபவித்தே ஆகவேண்டும்.
பிராரப்த கர்மத்தைக் கடவுளும் மாற்ற முடியாது என்பது ஹிந்துமதக் கோட்பாடு.பின்பு குருமார்கள் அதை மன்னித்து விடுகிறார்கள் என்பது பொருளற்ற நம்பிக்கை. குருடன் குருடனுக்கு வழிகாட்டுதற்கு அது ஒப்பாகும். ஆனால் கடவுள் கிருபையால் அல்லது ஒரு நிறைஞானியின் அனுக்கிரகத்தால் மனிதன் ஒருவன் ஞானத்தைப் பெறமுடியும். ஞானம் வருகிற பொழுது உடல் உணர்வு போய்விடுகிறது. அப்பொழுது உடலை வாட்டும் துன்பம் ஆத்மாவை வந்து தொடுவதில்லை.
குளோரஃபார்ம் முதலிய மருந்து வகைகள் உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பை தற்காலிகமாகப் பிரித்து வைத்து விடுகின்றன. மேலும் அம்மருந்து வகைகள் மனதுக்கு ஒருவித மயக்க நிலையை உண்டுபண்ணுகின்றன. ஆனால் நிறைஞானமோ தெளிந்த நிலை; தன்னையும் தன் தலைவனையும் முற்றிலும் உணர்ந்த நிலை. உடலுக்குத் தான் அன்னியமாக இருந்து உடலிலிருந்து வரும் உபாதிகளையெல்லாம் சாக்ஷியாகப் பார்த்திருக்கும் பெருநிலை ஞானிக்கு வருகிறது. இதுவே வேதாந்தத்தின் கோட்பாடு.
வெறுமனே பாவ மன்னிப்பு என்னும் சடங்கு மனிதனை மேலோனாக மாற்றுவதில்லை. குருட்டு நம்பிக்கையோடு இதைச் சேர்த்துவிடுவது மிகையாகாது. உண்மையான மத அனுஷ்டானத்தில் இதற்கு இடமில்லை. Confession அல்லது பாபத்தைப் பெரியோரிடம் மனம் நொந்து சொல்லிவிட்டுத் திரும்பவும் அச்செயலில் ஈடுபடுவதில்லை என்னும் தீவிரமான உணர்வு ஒருவனுக்கு உண்டாகுமானால் அதில் பயன் உண்டு. உண்மையாகவே அவனுடைய வாழ்வு பிறகு நல்வாழ்வாக மாறி விடும். ஆதலால், பாப மன்னிப்புச் சடங்குக்குப் பிறகு அம்மனிதன் எத்தகைய வாழ்க்கை வாழ்ந்து வருகிறான் என்பதைப் பார்த்துத் தான் அச்சடங்கின் சிறப்பை நாம் உறுதி கட்ட முடியும்.
இன்றைக்கு நாம் உலகில் பார்த்து வரும் (கிறிஸ்தவ) பாப மன்னிப்பு சடங்கு பெரிதும் பொருளற்றது. தகுந்த சான்றோர்களிடத்தில் தன் குற்றத்தை எடுத்துச் சொல்லி மேலும் அத்தகைய செயலில் இறங்குவதில்லை என்று தீர்மானிப்பது ஒரு நல்ல முறையாகும். நேரே கடவுளிடத்துப் பிரார்த்தனை பண்ணித் தனது குறைபாடுகளையெல்லாம் நீக்கிவிட வேண்டுமென்று மனதார அவரை வேண்டிக் கொள்ளுதல் அதை விடச் சிறந்த முறையாகும். எப்படியும் மனிதன் நல்லவனாக வேண்டும்.
*******
கேள்வி: கடவுள் ஒருவரே அனைத்துச் செயல்களுக்கும் காரணம். அவர் கையிலிருக்கும் கருவி நாம். அவர் ஆட்டுவித்த விதம் நாம் ஆடுகிறோம் என்று இருக்க, சிலர் கொலை, களவு, துரோகம் முதலிய பாப கர்மங்களைச் செய்கிறார்கள். அந்தப் பாப கர்மங்களுக்குக் காரண கர்த்தா யார்?
சுவாமி சித்பவானந்தர் பதில்:
டவுள் ஒருவரே அனைத்திற்கும் காரண கர்த்தா என்னும் கோட்பாட்டை நாம் புத்தகத்தில் படிக்கிறோம். பிறர் சொல்லக் கேட்கிறோம். நம்முடைய அனுபவத்தில் நாம் காணும் காட்சி இதுவன்று. முதலில் கடவுளை நாம் கண்டாகவேண்டும். கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பை அனுபூதி வாயிலாகத் தெரிந்தாக வேண்டும். அதன் பிறகு இக்கேள்வியை விமர்சனம் செய்கிறவிடத்துக் கடவுளின் ஆணையின்றி இப்பிரபஞ்சத்தில் எதுவும் நிகழ்வதில்லை என்பது நமக்குக் கண்கூடாக விளங்கும்.
இப்பொழுது நாம் உள்ள நிலையில் நம் செயலுக்கு நாமே கர்த்தா. அவரவருடைய மனப்பான்மைக்கு ஏற்ப நாம் கர்மம் புரிந்து வருகின்றோம்.ஆற்றங்கரையில் சாது ஒருவர் உட்கார்ந்திருந்தார். பிரவாகத்தில் தேள் ஒன்று மிதந்து கொண்டு வந்தது. ஐயோ பாவம் என்று அதைக் காப்பற்றக் கையில் அள்ளி எடுத்தார். நீர் கீழே போன பிறகு கையிலிருந்த தேள் அவர் கையைக் கொட்டியது. உடனே கையை உதறினார். பழையபடி தேள் நீரில் விழுந்தது. திரும்பவும் அதன் மீது இரக்கம் கொண்டு நீரோடு அள்ளி அதை வெளியில் எடுத்தார். இரண்டாம் தடவை அது கொட்டியது. கையை உதறினார். தேள் தரையில் விழுந்து நகர்ந்து போய் விட்டது.
கஷ்டத்திலும் சாது தன் இயல்பைக் காட்டினார். காப்பாற்றப் பட்ட நிலையிலும் தேள் தன் இயல்பைக் காட்டியது. இங்கு அவரவர் செயலுக்கு அவரவர் கர்த்தா. தன் இயல்புக்கேற்பத் திருடன் களவாடுகிறான். கொலைபாதகன் மற்றவர்களைக் கொல்கிறான். நம் காட்சியில் வைத்துப் பார்க்குமிடத்து அவரவர் இயல்புக்கும் பரிபாகத்துக்கும் ஏற்ப உயிர்கள் நலன்களையும் கேடுகளையும் செய்து வருகின்றன.
பிரபஞ்சத்தின் நடைமுறை முழுவதையும் நாம் அறிந்திருந்தாலும் அறியாதிருந்தாலும் எல்லாம் கடவுளின் திட்டமே, கடவுளின் விளையாட்டே. நல்ல நாடகம் ஒன்றில் விதவிதமான பாத்திரங்கள் இருக்க வேண்டும். நடிப்பவர்கள் எல்லாரும் நல்லவர்களாக இருந்து விட்டால் நாடகத்தில் சுவை இராது. பிரபஞ்சம் என்கின்ற நாடகத்தில் எண்ணிறந்த இயல்புடைய உயிர்வகைகள் இருக்கின்றன. இந்தப் பெரிய திட்டத்தில் களவுக்கும், கொலைக்கும், வஞ்சகத்துக்கும், நோய்க்கும், பஞ்சத்துக்கும், போராட்டத்துக்கும் இடமுண்டு. சாந்தத்துக்கும், அன்புக்கும், ஜீவகாருண்யத்துக்கும் இங்கு இடமுண்டு. நலம், கேடுகள் ஆகிய எல்லாச் செயல்களுக்கும் ஈசுவர சிருஷ்டியில் இடமுண்டு; ரோஜாச் செடியில் அழகிய பூ இருப்பது போன்று கொடிய முள்ளும் இருக்கிறது.
பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மை இதுவே. கொடிய செயல்களும் பிரபஞ்சத்தின் பெரிய திட்டத்தில் தகுந்த இடம் பெற்றிருக்கின்றன. பிரபஞ்ச நடைமுறைக்கு அவைகள் முற்றிலும் அவசியமானவைகள். பசுவின் மடியில் பால் இருப்பதும் பிரபஞ்ச நடைமுறைக்குத் தேவை. பாம்பின் பல்லில் விஷம் இருப்பதும் பிரபஞ்சத்தின் நடைமுறைக்குத் தேவை. நமது முன்னேற்றத்துக்குத் தீமைகளும் மறைமுகமாகத் துணைபுரிகின்றன என்பதை நாம் அறிந்து கொண்டால், கொலைபாதகர்களைக் குறித்தோ, திருடர்களைக் குறித்தோ, வஞ்சகர்களைக் குறித்தோ நாம் மதிமயக்கம் கொள்ள மாட்டோம். அவர்களைக் கையாள்வது எப்படி என்பதிலும் தெளிவாக இருப்போம்.
சந்தேகம் தெளிதல் (பாகம் 2) என்ற நூலிலிருந்து.
வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை.

ஓங்காரத்து உட்பொருள்



சுவாமிநாதன்
கும்பகோணத்துக்கு அருகில் சுவாமிமலை என ஒரு தலம் இருப்பதை அனைவரும் அறிவர். இந்தத் தலத்து இறைவன் சுவாமிநாதன் சில குடும்பத்தினருக்குக் குலதெய்வமும் ஆவன். முருகன் சுவாமிநாதனான புராணக்கதையைப் பெரும்பாலான இந்துக்கள் அறிவர். இந்தக் கதையைச் சில வேறுபாடுகளுடன் கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருத்தணிகைப் புராணம், முதலிய தலபுராணங்களும், பாம்பன் சுவாமிகளின் குமாரசுவாமியம், குமரகுருபரரின் திருச்செந்தூர் கலிவெண்பா முதலிய தோத்திர நூல்களும் கூறுகின்றன.
தந்தையாகிய சிவனின் சிஷ்யபாவத்தையும் தனயனான முருகனின் குருபாவத்தையும் உள் அடக்கி, அருணகிரிநாதர், கந்தரநுபூதியில்,
“நாதா குமர நமஎன்று அரனார்
ஓதாய் எனஓதியது எப்பொருள்தான்”
என வினவி, முருகன் ஓதிய அந்தப்பொருள் இன்னதென நம்மை உய்த்து உணர விட்டுவிட்டார்.
இந்த நிகழ்ச்சியினால் முருகனுக்கு உபதேசமூர்த்தி, சுவாமிநாதன், பரமகுரு, குமரகுரு, குருபரன் எனக் காரணப் பெயர்கள் எழுந்தன.

ஓம் – பொதுமந்திரம்
‘ஓம்’ எனப்படும் பிரணவ மந்திரத்தை இந்துக்களில் அனைத்துப்  பிரிவினரும் பயன்படுத்துகின்றனர். இறைவனின் பெயர்களாகிய மந்திரங்களுக்கு முன் ‘ஓம்’ என்னும் ஓரெழுத்து மந்திரத்தையும் இறுதியில் போற்றி எனப்பொருள்படும் நம: என்ற சொல்லையும் இணைத்து, மந்திரத்தை உச்சரிப்பர். ஓம் ஸ்ரீ மாத்ரே நம:, ஓம் நாராயணாய நம: என்பன போல
சிவநெறியில் தோத்திரம் சாத்திரம் ஆகியவற்றில் “ஓம்’ எனும் பிரணவம் ஆளப் பெற்றிருக்கும் முறைமையையும் அவற்றில் கூறப்படும் பொருளைச் சுட்டுவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.
ஓங்காரத்தின் பலபெயர்கள்
பிரணவம், குடிலை, குண்டலி, பிரமம், பரம், சிவம், மாமாயை, சுத்தமாயை, நாதம், விந்து, வைந்தவம் எனப் பலபெயர்கள் ஓங்காரத்துக்கு உண்டு.
பிரணவத்திற்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தத்தால் அவ்விரண்டும் பிரணவமென்றோ சிவசத்தி என்றோ ஒருபெயரால் வழங்கப்படும். பிரணவம் சத்தியின் பெயராலும் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் பெயர்களாவன: பரை(பரன்), வாகீசுவரி(வாகீசுவரன்), வித்தை, மாயை, பரவிந்து(பரநாதம்), பராசத்தி(பரசிவன்), மாமாயை, குண்டலி என்பன.
பிரணவம் – பிரபஞ்ச வித்து
ஒருபொருள் தோன்ற மூன்று காரணங்கள் வேண்டும். அவை 1.முதற்காரணம்,(material cause) 2.நிமித்தகாரணம் அல்லது கருத்தா,. 3.துணைக்காரணம் அல்லது கருவி காரணம்.(instrumental cause) என்பன.
குடத்திற்கு மண் முதற்காரணம்;. குயவன் நிமித்த காரணம்;. தண்டசக்கரம் துணைக்காரணம்.
அதுபோல, பிரபஞ்சத் தோற்றத்துக்கு மாயை முதற்காரணம்;. சிவம் நிமித்தகாரணம்;. சிவசத்தி துணைக் காரணம்.
சிவம் முழுவதும் ஞானமே வடிவானது. சிவத்துடன் பிரிப்பின்றி இருப்பது சித்சத்தி. அது ஆற்றல் வடிவமானது. சிவத்துக்கும் சிவசத்திக்கும் உள்ள சம்பந்தம் சூரியனுக்கும் சூரிய ஒளிக்கதிருக்கும் உள்ள சம்பந்தத்தைப் போன்றது. உலகுக்குச் சூரியனால் பயன் சூரியக்கதிர்களால் வருவதுபோல, உயிர்களுக்குச் சிவத்தால் வரும் நன்மை சிவசத்தியால் கிடைக்கிறது. சூரியன் ஒளியால் அறியப்படுதல்போல் சிவத்தைச் சிவசத்தியால் அறியப்படும்.
சிவத்துக்குச் சிவசத்தி போல இன்னொரு சத்தியும் உண்டு. அதற்குப் பரிக்கிரக சத்தி அல்லது வேண்டும்போது பயன்படுத்திக் கொள்ளும் சக்தி என்று பெயர். இந்தப் பரிக்கிரகசத்தி ஜடசத்தி. ஜடம் என்றால் அறிவற்றது என்று பொருள். சித்சக்தி X ஜடசத்தி.
மாயை என்னும் பிரபஞ்ச முதற்காரணமாகிய ஜடசத்தி, சித்சத்தியைத் தாரகமாகக் கொண்டிருக்கும். சித்சத்தி சிவத்துடன், சூரியன் சூரியஒளி போலக் குணி குணசம்பந்தத்துடன் இருக்கும்.
இந்த மாயையே பிரணவம். இது சித்சத்தியுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் இப்பிரணவம் சித்சத்தியின் வடிவம் என்றும் கூறப்படும்.
மாயையும் சத்தியும் சம்பந்தப்பட்டு இருப்பதைக் காட்டும் ஒரு பெயர் மாயாசத்தி.
சித்சத்தியை குணமாகவும் சிவத்தைக் குணியாகவும் கொள்ளும் ஒருவடிவத்தில் சித்சத்தியாகிய பிரணவம் சிவவடிவம் என்றும் கொள்ளப்படும்.
சிறுமீன் கண்ணைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் அதன்  விதையில் நால்வகைபடையுடன் அரசர் தங்குவதற்கேற்ற நிழலை அளிக்கத் தக்க பெரிய விருட்சம் தோன்றும் ஆற்றல் அடங்கி இருப்பதுபோல , இந்த மாயையில் மகத்தான பிரபஞ்சம் தோன்றுவதற்கான மூலம் அடங்கியிருக்கும்.
பிரணவமே உலகத்துக்கு முதற்காரணம்.
இதனைத் திருமந்திரம்,
“ஓங்காரத்தின் உள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த சராசரம்
ஓங்காரம் அதீதத்து உயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவன் பரசிவ ரூபமே” (தந்திரம்9)
எனக் கூறியது.
மாயை சடப்பொருளாயினும் சிவசத்திசம்பந்தத்தால் அறிவுடைப்பொருள் (சேதனம்) ஆகவே கொள்ளப்படும்.
ஓங்காரம் சிவசொரூபம்
“கைலாஸ சிகராவாஸம் ஓங்கார ஸ்வரூபிணம்
மஹாதேவம் உமாஅர்த்த க்ருதசேகரம்”
என அதர்வண வேத மாண்டூக்யோபநிஷதமும்,
“துறந்தோர் குடிலை சிவனுருவம் என்றே உணர்ந்து சொல்லுவார்”
என வாயு சங்கிதையும் கூறுவதால்,
குணம் குறி கடந்த சிவபரம்பொருள், உயிர்களை உய்விக்க எடுத்துக் கொள்ளும் திருமேனிகளில் ஒன்று, ஓங்காரம் என்னும் பிரணவத் திருமேனி.
“உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா” (திருவாசகம், சிவபுராணம்,33)
‘நான் உய்யும் பொருட்டு என் உள்ளத்துள் பிரண வடிவமாக நிலைபெற்றுள்ள உண்மைப்பொருளே’ என்பது இதன் பொருள்.
ஓம் என்பதன் பொருள் சிவமே
உயிரில் சிவம் ஓங்காரமாய் நிற்கும் உபகாரம்
உயிர்கள் வினைகளைச் செய்து அவற்றின் பயன்களை நுகருதல் வேண்டும். அதனால் அனுபவம் ஏற்பட்டு ஆணவமலம் அல்லது அறியாமை என்னும் மறைப்பு சிறிது சிறிதாக நீங்கும்; அறிவு வளரும். வினைகள் உடலாலும் வாக்காலும் மனத்தாலும் செய்யப்படுவன. உடலாலும் வாக்காலும் வினைசெய்வதற்கு முன் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களில் செயல் பற்றிய சிந்தனை முகிழ்க்கின்றது.
அந்தக்கரணங்கள் அறிவற்ற சடம் ஆகையால் அவற்றோடு அறிவுடைய சித்துப் பொருளாகிய உயிர் கூடினால்தான் அவற்றின் இயக்கம் உண்டாகும். செம்பில் களிம்பு போலவும் நெல்லுக்கு உமிதவிடு போலவும் உயிர் அறியாமையாகிய ஆணவத்தால் அநாதியாகவே கட்டுண்டது. உயிர் தானாக இயங்கும் சுதந்திரம் இல்லாதிருக்கின்றது. ஆகவே இறைவன் உயிர்களின் உள்ளத்தில் பிரணவ வடிவமாக நின்று இயக்குகின்றான்.( விரிவினைச் சிவஞானமாபாடியம் சூத்திரம் 4, அதிகரணம் 1 காண்க)
சிவமே இவ்வாறு ஓங்காரத்தின் உட்பொருளாக இருந்து இருந்து உயிரையும் அந்தக் கரணங்களையும் இயக்கி மனவாக்கு காயங்களால் வினை செய்ய ஊக்குகின்றது என்பதனைத் தமக்கு இறைவன் அறிவுறுத்தியதாக மாணிக்க வாசகர், “”பாசமெனும் தாழுருவி, உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத் துட்பொருளை, ஐயனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” (திருவாசகம், அச்சோப்பதிகம்,7) எனக் கூறுகின்றார்.
இது, சைவசித்தாந்தத்தில், சிவம் உயிருக்குள் உயிராக நின்று உயிரின் உணர்வினை நிகழச் செய்கின்ற முறையைக் கூறுவதாகும்.
ஓங்காரத்தின் வழி சிவம் ஆன்மாவின் இச்சை கிரியை ஞானங்களை எழுப்பிச் வினையை அனுபவிக்கச் செய்து மலபரிபாகம் வருவித்து முத்தியை அளிக்கும் நெறியைச் சைவசித்தாந்த சாத்திரங்கள் கூறுகின்றன.
சிவமே ஓங்காரத்தின் உட்பொருள் எனத் திருமுறைகள் கூறுகின்றன.
* ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவனாகும்
* ஓங்காரன்காண்
* ஓங்காரத் துட்பொருளாய் நின்றான்காண்
* ஓங்காரத் தொருவனை
இவை போன்ற  சொற்றொடர்கள்  திருமுறைகளில் உள்ளன.
ஓங்காரம் –ஓரெழுத்து மந்திரம்
சிவம் கருணையால் கொள்ளுகின்ற வடிவங்களில் மந்திர வடிவமும் ஒன்று. சிவபரம்பொருளை வழிபடுபவர்கள் மந்திர எழுத்துக்களில் வைத்து வழிபடுவது வழக்கம். அம்முறையில் ஓங்காரம் சிவனது திருமேனி.
ஓங்காரம் சப்தவடிவினது. அது சுத்தமாயை என்னும் அறிவற்ற சடப்பொருளின் விருத்தி. சிவசத்தி சுத்தமாயையில் கலந்து இயக்கிக் கொண்டிருப்பதால்,அது சிவனின் திருமேனியாக உபசாரமாகச் சொல்லப்படும்.
முருகனே ஓங்கரத்துட்பொருள்:
“ஓங்காரத்து உள்ளொளிக்கு உள்ளே முருகன் உருவம்கண்டு
தூங்கார் … … என்செவார் யமதூதருக்கே”
என்ற கந்தர் அலங்காரப் பாடலுள் முருகனே ஓங்காரத்துட்பொருள் என அருணகிரிநாதர் பாடுகின்றர்.
திருப்புகழ் ஒன்றில், “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” என்ற அடியில், ‘ஓம்” என்ற ஓரெழுத்து மந்திரமே, தன்னுள் அடங்கியிருந்த திருவைந்தெழுத்து மந்திரங்களையும் விரியச் செய்து ஆறெழுத்து மந்திரமாயிற்று என உணர்த்தினார்.
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர சுவாமிகள், முருகன் ஓங்காரத்து உட்பொருளாக இருப்பதை,
” ஓதிய ஐந்து,
ஓங்காரத் துள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே!”
என்று பாடினார்.
ஐந்து முகங்களைக் கொண்ட சிவமாகிய ஒரு பரம்பொருளே “குருசிஷ்ய பாவ”த்தின் மேன்மையை உலகு அறிந்து உய்யும் பொருட்டு , இரண்டு பொருளாகி, அரன் சீடனாகவும் குமரன் குருவாகவும் திருவிளையாடல் புரிந்தது என அறிதல் வேண்டும்.
விநாயகனே ஓங்காரத்துட் பொருள்
கச்சியப்ப முனிவர் தம்முடைய விநாயகபுராணத்தில் பிரணவம் என்பது ஏகாட்சரம் என்னும் பெயருடைய மந்திரம் என்றும் அது விநாயகப் பெருமானுக்கு உரிய மந்திரம் என்றும் கூறியுள்ளார். யானைமுகப் பெருமானின் முகத் தோற்றமே ஓம் எனும் ஓரெழுத்துமந்திரம் போலக் காட்சி அளிக்கும்.
ஓங்காரத்துள் பிரபஞ்சம் எல்லாம் அடங்கும் என்பதைக் காட்டவது விநாயகப் பெருமானின் பேழை வயிறு.
விநாயகன், கணபதி எனும் பெயர்கள் சிவனுக்கும் உண்டு. விநாயகனே சிவன். சிவனே விநாயகன்
விநாயகனும் முருகனும் சிவனின் தடத்த வடிவங்களே. எனவே, இவ்விருவரை வழிபடுவது சிவ வழிபாடே.
பிரமன் செய்த குற்றம்
சைவசித்தாந்தம் சத்காரிய வாதம் பேசும். அதாவது’ உள்ளதுதான் தோன்றும்; இல்லது தோன்றாது’. உள்ளது போகாது; இல்லது வாராது’ என்பது சத்காரிய வாதம். சத்காரியவாதத்தில் உள்ளபொருள் முற்றாக அழிந்து விடுவதில்லை. காரியமான பொருள் அழியும்போது அதன் முதற்காரணத்தில் அடங்கும். மண்குடம் அழியும்போது அதன் முதற்காரணமான மண்ணாகும். பொன்னால் ஆன நகை அழியும்போது அதன் முதற்காரணமான பொன்னாகும்.
மாயா காரியமான பிரபஞ்சம் அதன் முதற்காரணமான(material cause) மாயையில் ஒடுங்கும். மீளத் தோன்றும்போது எதில் ஒடுங்கியதோ அதிலிருந்துதான் தோன்றும். பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவன்தான் அதனை ஒடுங்கியதிலிருந்து அதனை மீளத்தோற்றுவிப்பான்.  எனவே சங்கார காரணன் அதாவது பிரபஞ்சத்தை ஒடுக்கியவன் யாரோ அவனே மீளத் தோற்றுவிக்கும் கருத்தாவுமாவன்.
எனவே, படைத்தல் தொழிலைப் புரியும் பிரமன், அழித்தல் தொழிலின் பின் நிகழும் உண்மைகளை உணரான்.  முத்தொழிலுக்கும் கருத்தாவாகிய முதல்வன் சங்கார கருத்தா ஆகிய சிவனே ஆவன். அவனே பிரபஞ்சத்தைப் பிரணவமாகிய முதற்காரணத்தில் ஒடுக்குபவன். ஒடுங்கிய அந்தக் காரணத்திலிருந்து சங்கார கருத்தாவாகிய அவனே மீளத் தோற்றுவிப்பவன். அதனால் பிரணவத்தின் உண்மைப் பொருள் பிரமப் பெரும்பொருளாகிய சிவமே என்று அறியாமல், படைத்தல் தொழிலைச் செய்கின்ற தானே பிரணவப் பொருள் என்று அகந்தையில் கூறினான். அதனால் முருகனால் தண்டிக்கப்பட்டான் என்பது புராணக் கதை.  புராணக் கதையைச் சாத்திரப் பின்னணியில் உணரவேண்டும்.
முடிவுரை:
ஓங்காரத்தின் தோற்றமும் பொருளும் மேலோட்டமாக ஒருவாறு விளக்கப்பட்டது. இங்குக் கூறப்பட்டவை மிகக் குறைவே. ஞானசாத்திரங்களைக் கொண்டு விரிவாக விளக்கம் பெறல் வேண்டும்.

பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை



வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழ
பான்மை தரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
யானைமுகனைப் பரவி அஞ்சலி செய்விப்பாம்
பிள்ளையார் சுழி
நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம்மவர்களின் உயிரோடு கலந்த உறவாடும் தெய்வம் பிள்ளையார்.
‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ என்பதும் ‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே’ என்பதும் நமது ஊர்களில் சாதராணமாக பழகி வரும் மொழிகள்..
பிள்ளையார்
எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று நமது காரியங்கள் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. இப்படியெல்லாம் இருக்கிற பிள்ளையார் பற்றிய தவறான கருத்துக்களும் கூட நம்மவர்களிடத்தில் பரவியிருக்கிறதை வேதனையோட பார்க்க வெண்டியிருக்கிறது. முக்கியமாக, மதமாற்றிகளின் கேலிக்கு உள்ளாகும் கடவுள்களில் பிள்ளையாரும் முக்கியமானவர். இப்படித் தான் அண்மையில் நண்பர் ஒருவர் கிறிஸ்துவர் ஒருவர் சொன்னார் என்று பிள்ளையார் பற்றிய சில கருத்துக்களைச் சொன்னார்.
அதுவே இக்கட்டுரை எழுதுவதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
பிள்ளையாரின் பிறப்பு
ஆதியும் அந்தமுமில்லாத பெருமானுக்கு பிறப்பேது? ஆனாலும் இறைவன் உயிர்கள் மேற் கொண்ட பெருங்கருணையால் அவதாரம் செய்கிறான். எனினும் விநாயகரை ஒரு அவதாரமாகக் கொள்ளலாமா? என்பது ஒரு கேள்வியே.. இவர் ஸ்ரீராமர் போல.. கிருஷ்ணர் போல மண்ணில் அவதரித்தவர் அன்று. எனினும், புராணங்களில் விநாயக உற்பத்தி பற்றி பல செய்திகள் கிடைக்கிறது. மத்ஸ்யபுராணத்தில் உமாதேவி தான் நீராடிய போது தன் உடல் அழுக்குகளைத் திரட்டி வைக்க அப்போது பிள்ளையார் பிறந்தார் என்கிறது. இதனைக் கூறுவது போல விநாயக சஹஸ்ரநாமத்திலும் ஒரு நாமம் உண்டு. ஆனால் இதனை இப்படியே பொருள் கொள்ளலாமா? அல்லது வேறு தத்துவ செய்தி உண்டா? அல்லது இக்கதையை விலக்க வேண்டுமா? ஆராயப்பட வேண்டியது.
விநாயகபுராணம்
மிகப்பெரிய சிக்கல் என்ன எனில் கந்தப்பெருமானுக்கு கந்தபுராணம் போல, விநாயகருக்கு விநாயக புராணம் என்று சொல்லுவார்கள். ஆனால் விநாயக புராணம் பதிணெண் புராணங்களுள் அடங்காதது. பிற்காலத்தது என்று கருதப்படுவது. அத்துடன் பல முரணான செய்திகள் இங்கு ஒருங்கே இருந்து பெரும் சிக்கலைத் தருகின்றன. இவற்றால் இப்புராணம் அறிஞர்களின் பார்வையிலிருந்து விலகியே இருக்கிறது.
விநாயக அவதாரம் பற்றி விநாயகபுராணத்தில் ‘மூவர் உபாசித்த படலத்தில்’ ஒருவாறாயும், சிந்தாமணி விநாயகர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், விக்னராசர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், மயூரேசர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், பலப்பல வகையே சொல்லப்படுகின்றன.
ஆனால் இவைகளை எல்லாம் நம்மவர்கள் ஏற்றுப் போற்றினாரில்லை. முக்கியமானதான, பிரணவத்தின் வடிவமாக பிள்ளையார் தோன்றினார் என்பதையே ஏற்றுக் கொண்டனர். உமாதேவியும் சிவபெருமானும் சித்திரமாக வரையப்பட்டிருந்த சமஷ்டிப் பிரணவத்தைப் பார்த்தபோது அதில் அகரம் களிறாக, உகரம் பிடியானதாம். அவை கூடிய போது விநாயகர் தோன்றினார்.
இதைத் திருஞானசம்பந்தர்
பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே
என்று பாடுகிறார். இக்கதையே காஞ்சிப்புராணம் கந்தபுராணம் ஆகியவற்றிலும் காணலாம். இச்செய்தி அற்புதமான தத்துவச் செறிவுடையதாக விளங்குகிறது. விநாயகரின் உருவமே ஓங்காரவடிவம். எனது சிறுவயதில் ஓ என்ற எழுத்தை எழுதி அதனை பின் பிள்ளையாராக வரைந்து பார்க்கிற வழக்கம் இருந்தது ஞாபகம் வருகிறது.
220 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்தவரான கச்சியப்ப முனிவரர் என்கிற பெரியவர் விநாயகபுராணத்தைத் தமிழில் பாடியிருக்கிறார். ஏறத்தாழ ஆறாயிரம் பாடல்கள் கொண்ட இப்புராணம் லீலா காண்டம், உபாசனா காண்டம் என்ற இருபிரிவுகள் கொண்டதாயிருக்கிறது. இப்புராணத்தில் இருந்து தான் காரியசித்தி மாலை என்ற எட்டுப்பாடல்கள் தொகுக்கப்பட்டு பலராலும் ஓதப்பட்டு வருகின்றன.
அகரம் என அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்தக உகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறுமாகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கனையும் இடர்தீர்த்தெய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்
என்பது முதலாயிருக்கிய கச்சியப்ப முனிவரரரின் பாடல்கள் நனிச்சுவை நிறைந்தவையாயுள்ளன. எனினும் இப்புராணமும் மக்கள் மத்தியில் பெருவழக்கு உடையதாயில்லை என்பதும் குறிப்பிட வேண்டியுள்ளது.
இலங்கையில் இன்றும் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், ஏகாதசிப்புராணம், திருவாதவூரடிகள் புராணம், சிவராத்திரிப்புராணம், திருச்செந்தூர்ப்புராணம், மயூரகிரிப்புராணம், திருத்தணிகைப்புராணம் என்று பல்வேறு புராணங்களும் ஆலயங்களில் முறைப்படி புராண படனம் செய்யப்படுகிறது. எனினும் விநாயகபுராணத்தைப் படனம் செய்வதாக அறியமுடியவில்லை. எனினும் கச்சியப்ப முனிவராரின் தனிச்செய்யுட்கள் தனிச்சிறப்புடன் ஓதப்பட்டு வருவதைக் காணக்கிடைக்கிறது.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்து சுன்னாகத்தில் வாழ்ந்த வரதராஜபண்டிதர் என்னும் வரதபண்டிதர் அவர்கள் பிள்ளையார் கதை என்று ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்கள். இது பிள்ளையார் வைபவத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆக்கப்பட்ட இப் பிள்ளையார் கதை செய்யுள் நடையில் உள்ளது. கவித்துவம் நிறைந்தது. இது இலங்கையில் மிகப்பிரபலமாயுள்ளது.
‘மந்தரகிரியில் வடபால் ஆங்கோர் இந்துதவழ் சோலை இராசமாநகரில் அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியும் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டி..’ இப்படி இக்கதை நீண்டு செல்கிறது. ஆனால் இக்கதையூடே விநாயகர் வரலாற்று முறைமை முழுமை பெற்றதாகச் சொல்ல இயலாதிருக்கிறது.
lords-vinayaka-shankara-parvati
எழிலார் விநாயகர் வடிவம்
சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர். அவரது திருமுகம் யானை வடிவம். அவரது திருக்கரங்கள் தேவவடிவம். ஆவரின் மேனி மனித வடிவம். அவரது திருவடிகள் பூதவடிவம் என்பர். அவர் மயூரேசராக மயிலேறி வலம் வரும் போது பறவையினத்தையும் அவர் இணைத்துக் கொள்கிறார். ஆக, சகல உயிர்களின் இணைப்பை சித்தரிப்பது போல பிள்ளையாரின் வடிவம் அமைகிறது.
பிள்ளையார் நிறைய உணவு உண்ணும் சாமி என்பது பலரின் தவறான எண்ணம். ஆதனால் தான் அவர் பெரிய வயிறோடு இருக்கிறாராம்.  உண்மை என்ன எனில், இதுவும் பிற்காலத்தைய தவறான அபிப்ராயங்களின் விளைவே என நம்பலாம். அண்டப்பிரம்மாண்டமே தன் வயிற்றில் கொண்டதால் தான் பிள்ளையாருக்கு பருத்த வயிறு அமைந்தது என்பதும் சில தத்துவ அறிஞர்களின் கூற்று. இதுவும் சிந்தனைக்குரியதே.
பிள்ளையார் குழந்தை உருவினராகவே பழைய இலக்கியங்களில்.. மந்திரங்களில், தோத்திரங்களில் சித்தரிக்கப்படுகிறார்.
ஆதிசங்கரர் சுப்பிரம்மண்யபுஜங்கத்தில் ஸதாபாலரூபர் என்று விநாயகரைப் போற்றுவார். விநாயகர் குழந்தை உருவினர் என்பதாலேயே நம் தமிழர்கள் பிள்ளை-யார் என்றே அழைக்கிறார்கள். குழந்தைப் பிள்ளை மெல்லிதாக இருப்பதைக் காட்டிலும் சிறிது பருமனாக.. இருப்பதையே விரும்புவர். குழந்தைக் கடவுளான பிள்ளையாரும் அந்தளவில் தான் பருத்த வயிற்றராயிருக்கிறார். ஆனாலும் அவர் என்றும் சுறுசுறுப்பானவர். எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு..
விநாயகர் கஜமுகன், உதத்தன், துந்தரன், நக்கிரன், கிருத்திராசூரன், சேமன், குசேலன், குரூராசூரன், பாலாசூரன், வியோமாசூரன், துந்துபி, தர்பாசூரன், சிந்தூரன் இப்படி எராளமான அசுரர்களை அழித்ததாக விநாயக புராணமே சொல்கிறது. இவ்வாறாகில் எவ்வளவு வீரதீரக்கடவுளாக விநாயகர் அமைதல் வேண்டும். இதை விட கணேசக்கடவுள் தன் கரங்களில் அங்குசம், பாசம் முதலிய ஆயுதங்களை வைத்திருப்பதால் அவரது எழுச்சியம்.. அவர் எப்போதும் தன்னடியார்களைக் காத்தருளும் திறனும் வெளிப்படுகிறது.
விநாயகரின் கையில் பூரணத்தின் வடிவமான மோதகத்தைக் காணலாம். அவர் கையிலிருக்கும் மோதக இனிப்பின் ஊடாக பிள்ளையார் தன் அடியவர்களிற்கு இனியன தருவார் என நம்புகிறார். குணநிதியான கணபதியின் வலது திருக்கரத்தில் தந்தம் இருக்கிறது. தனது தனித்துவமான உறுப்பாகிய தந்தத்தை பிள்ளையாரே ஒடித்து தனது கரத்தில் வைத்திருக்கிறார். அது எப்படி?
ganapati_2
வியாசர் மகாபாரதம் எழுத முற்படுகையில் அதனை எழுதி அருள வேண்டும் என்று விநாயகரைப் பிரார்த்தித்தார். பெருமானும் தனது தந்தத்தையே முறித்து அதனை எழுத்தாணியாகக் கொண்டு மாபாரதம் வரைந்தார். முறித்த தந்தம் பசு ஞானத்தையும் முறிக்கப்படாத பூரணத்துவம் கொண்ட தந்தது பதிஞானத்தையும் காட்டும் என்பது சைவசித்தாந்தக் கருத்து. அந்தத் தந்தம் அவரது கரங்களில் காட்சி தருகிறது. எழுத்தின் பொருட்டு முறிக்கப்பட்ட கொம்பும்.. அக்கொம்பு
கையில் இருக்கும் காட்சியும் காண்பவர்களுக்கு கல்வி தானே வளரும் என்பது திண்ணம். இதனையை
நற்குஞ்சரக் கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்
என்கிறது திருவருட்பயன்.
‘ஐந்து கரத்தன்’ என்று பிள்ளையாரைப் போற்றுவார்கள். அதில் ஒரு கரம் பாசம் ஏந்துகிறது. பாசக் கயிறு பிணைப்பதற்கு உதவும். அந்தப் பிணிப்பு பிறப்பை உண்டாக்கும். ஆக, அதன் ஊடாக படைத்தல் தொழில் காண்பிக்கப்படுகிறது. இன்னொரு கரம் அங்குசம் ஏந்துகிறது. அது தீமைகளை அழிக்கும். எனவே அது அழித்தல் தொழிலின் அடையாளம். மோதகம் ஏந்திய கரம் அருளலைக் குறிக்கும். அபயகரம் மறைத்தலையும் துதிக்கை காத்தலையும் குறிக்கும் என்றும் விளக்குவர்.
பிள்ளையாரை பல வடிவங்களில் உருவாக்கி வழிபடுவர். பாரம்பரியமாக 32 கணபதி உருவங்கள் சொல்லவார்கள். அவை; பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி ,ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ரணமோசனகணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி,த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பன.
ஆனால், தற்போது விநாயக சதுர்த்தி நாட்களில் விதம் விதமாக எல்லாம் பிள்ளையாரைப் பார்க்கிறோம். ஆனால், அவ்வாறெல்லாம் வளைந்து கொடுத்து காட்சி தரவல்ல கடவுள் விநாயகர் தானே? ஆனாலும் அதற்காக கடவுளுக்கே உரிய அழகை அழியாத நிலையில் வடிவங்களை உருவாக்குவது மிகத் தவறானது. அவை கண்டிக்கப்படவேண்டியனவுமாகும். பஞ்சரத்னங்கள் பல உண்டு. அவற்றில் ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய கணேச பஞ்சரத்னம் என்கிற ‘முதாகரார்த்த மோதகம் ஸதா விமுக்தி சாதகம்’ என்கிற ஐந்தும் இசை கூடுகிற போது அமைகிற அழகிருக்கிறதே.. இது பஞ்சரத்ன நாயகம் என்கிற பெருமை பெற்று விடுகிறது.
வேதத்தை ஏற்றுக் கொண்டவர்களான வைதீக இந்துக்கள் மட்டுமன்றி ஜைனர்களும் பௌத்தர்களும் கூட விநாயகரை வணங்கி வருகிறார்கள். விநாயகரும் எந்தப் பேதமுமில்லாமல் எல்லொருக்கும் அருள் செய்கிறார். இவர் விண்வெளிப்பயணம் செய்தவரல்லவா?
தன்னை நினையத் தருகின்றான்
சைவத்திருமுறைகள் கண்டெடுக்கப்படுவதற்கு விநாயகப்பெருமான் காரணராக விளங்கினார் என்பது ஐதீகம். திருநாரையூரில் பொல்லாப்பிள்ளையாருக்கு பூஜை செய்து அதன் மூலமே கல்வி, கலை யாவும் அப்பிள்ளையாரிடமே கற்றவர் நம்பியாண்டார் நம்பிகள்.
அந்த நம்பியடிகளும் இராஜராஜனும் இணைந்து செய்த ஒப்புயர்வற்ற திருப்பணி தான் திருமுறைகள் கண்டெடுத்தமையும் அவற்றை முறைப்படுத்தியமையுமாகும். இதற்கெல்லாம் நம்பிகளின் உள் நின்று வழிகாட்டியவர் மூத்த பிள்ளையாகிய விநாயகர். இவ்வாறெல்லாம் தனக்கு அளப்பெருங்கருணை புரிந்த விநாயகர் மீது நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை பாடியிருக்கிறார்.
என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் -புன்னை
விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி முகத்தான்
என்பது முதலாயுள்ள இப்பாடல்கள் தமிழ்ச்சுவை மிக்கன. இங்கே இப்பாடலில் ‘தன்னை நினையத் தருகின்றான்’ என்ற வரிகள் இன்பம் பயக்க வல்லன. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற மாணிக்கவாசகரின் வாக்கு இத்துடன் இணைத்துச் சிந்திக்கத்தக்கது.
திருஞானசம்பந்தர் தேரழுந்தூர் வந்த போது சிவன் கோயிலைக் காட்டியவர் பிள்ளையார் தானாம். அது போல, திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருக்கும் திருஞானசம்பந்தருக்கும் சிவபெருமான் படிக்காசு அளித்த போது அதனை ஒழுங்காக வழங்கியவர் பிள்ளையார் தானாம். திருமுருகன் பூண்டியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளை கூப்பிட்ட கூப்பிட்ட பிள்ளையாரையும், திருவாரூரில் அவருக்காக மாற்றுரைத்த கணபதியையும் பார்க்கலாம்.
பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான்
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நிள்முடிக்
கடக்களிற்றினைக் கருத்துள் இருத்துவாம்
என்று விநாயகர் வணக்கம் செய்கிறார். அருணகிரியாரின் திருப்புகழில் ஐந்து பாடல்கள் பிள்ளையாருக்குரியன.
muruga-valli-pillaiyarதமிழ்க்கடவுளான முருகனின் அண்ணனாகிய பிள்ளையாரும் தமிழ்க்கடவுள் தான். ஆனால் சில மேற்றிசை அறிஞர்கள்(?) சில போலித்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இதற்கு நம் நாட்டு அறிஞர்(?) சிலரும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள். பிள்ளையார் மராட்டியக்கடவுள் என்கிற வாதமும் இருக்கிறது. ஆனால் அவர் தமிழருக்குத் தான் அதிகம் சொந்தக்காரர். விநாயகர் ஓங்கார வடிவம் என்று சொல்கிறோம். ஓ என்ற தமிழ் எழுத்தின் வடிவமாகவே அவர் முகம் அமையக் காணலாம். இது வேற்று மொழிகளில் காண்பதரிது.
பிள்ளையாருக்குரிய  பிடித்த நெய்வேதனம் மோதகம். புழந்தமிழ் இலக்கியங்கள் இதனைக் ‘கவவு’ என்கின்றன. இம்மோதகம் செய்  முறை தமிழ்நாட்டின் சிறந்த சமையற் கலையின் வடிவமாகவே இன்று வரை துலங்குகிறது. இலங்கையில் மோதகம் இல்லாத விசேஷங்களை காண இயலாது. மோதகம் செய் முறைமையை நோக்கின் இது ஒரு சமையற் கலையின் உன்னதப்படைப்பு என்பதும் புலப்படும்.
யானையும் தமிழ்நாட்டின் சேரதேசத்தின் முதன்மை விலங்கு.. ஆக, பழந்தமிழரின் பெரும் செல்வம். நால் வகைப்படையில் கஜ,ரத,துரக,பதாதி என்கிற போது முன் நிற்பது கஜமே. ‘மலைநாடு வேழமுடைத்து’ என்பதும் தமிழ்நாட்டுச் சிறப்பல்லவா? ஆக, வேழமுகனுக்கும் தமிழ்நாடே உரித்து. வாதாபி காலத்தில் திருச்செங்கோட்டுப் பிள்ளையாரை வாதாபி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்கலாம்.
அனாலும் அதற்கு முன்னரே நிறைவான விநாயகர் வணக்கம் இருந்திருக்க வேண்டும். இது இப்படியிருக்க, சங்ககாலத்தில் பெருஞ்சதுக்கத்தான் பூதம் என்று ஒரு வழிபாடு நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலும் சேரநாட்டின் தலைநகர் வஞ்சியில் பெருஞ்சதுக்கத்தான் பூதம் இருந்ததாகவும் அது கையிற் பாசத்துடன் இருப்பதாயும், அதர்மத்தை அழித்து நன்மையை அது நிலைநாட்டுவதாயும் குறிப்புக்கள் உள. இவை விநாயகர் வழிபாட்டின் அடித்தளமாக இருக்கலாம். பிள்ளையாரையும் பூதநாதன், கணநாதன் என்று சுட்டுவது ஈண்டு சிந்திப்பதற்குரியது.
இலங்கையின் அனுராதபுரத்தில் கிறிஸ்து பிறக்க முன் 2ம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படும் இருகரங்களும் யானை முகமும் கொண்ட உருவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை எல்லாவல என்கிற ஆய்வாளர் ஆய்வு செய்து கணநாதன் வடிவம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
எளிமையின் தெய்வம்
vinayaka-t
அறுகும் எருக்கும் பிள்ளையாருக்குரியன. வயல் வெளிகளில் தேடுவாரற்று கிடக்கிற மருத்துவப் பொருளான அறுகை பிள்ளையார் தன் தலையில் சாற்றிக் கொள்வதை விரும்புகிறார். அது போல, எருக்கமிலையை எவருமே நாடுவதே இல்லை.. வெள்ளெருக்கம் வேரில் கூட பிள்ளையார் உறைகிறார் என்று வழிபடுவர். எவரும் விரும்பாத அதனை தன் மிக உவப்பான வில்வமாகக் கொண்டு பிள்ளையார் மட்டும் கருணை செய்கிறார்.
தோர்பி கர்ணம் தான் வேழமுகப்பெருமானுக்கு மிக உயர்ந்த வழிபாடு. தோர்பி என்றால் கைகளினால் என்றும் கர்ணம் என்றால் காது என்றும் பொருள் கொண்டு கைகளால் காதைப்பிடித்துக் கொள்வதை இது குறிக்கும் என்பர். இப்படியே மும்முறை முழந்தாளழவு இருந்து எழுந்து இவ்வழிபாடடைச் செய்வர். இலவச உடற்பயிற்சியாக அமையும் இப்பயிற்சியால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். இதன் மூலம் குண்டலினி சக்தியிலும் எழுச்சி உண்டாகும் என்றும் கூறுகிறார்கள்.
ஆற்றங்கரைகளில், அரசமரத்தடிகளில் பிள்ளையாரை வைத்து வழிபாடாற்றுவது தமிழர் மரபு. சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரை மகிழ்வித்து வழிபடுவதும் இங்கு முக்கியமானது. வயலில் உழுதுண்டு வாழும் விவசாயப் பெருங்குடியினர் தமது பயிர்களுக்குப் பாதுகாப்பாக நம்பிக்கைப் பிள்ளையாரை வேண்டிக் கொள்வர். பின் அறுவடை நிறைவு பெற்றதும் பிள்ளையாருக்குப் பூஜை செய்வர்.
ஏற்றப்பாடல் ஒன்று
பிள்ளையாரே வாரும் பிழை வராமல் காரும்
மழை வரக்கண் பாரும் மாதேவனே எமைப் பாரும்
இப்படிச் செல்கிறது. இவை எவ்வளவு தூரம் நம் சமூகத்தில் பிள்ளையார் வணக்கம் பரவியிருக்கிறது என்பதற்கு ஆதாரங்களாயுள்ளன. அவர் கரத்தில் நெற்கதிர்களைக் கொடத்து வழிபடும் வழக்கமும் உண்டு. எனவே, அவர் காக்கும் தெய்வமாயும் விவசாயிகளின் தெய்வமாகவும் இருக்கிறார். எனவே, அப்பெருமானை பெருவயிறராகக் காண்பது இவ்விடத்தும் சரியாகத் தெரியவில்லை.
பிள்ளையாரும் நகைச்சுவையும்
விநாயகர் தன் ஆடலைக் கண்டு நகைத்த சந்திரனைக் கோபித்து சாபம் கொடுத்து பின் அதே சந்திரனைத் தன் முடியில் சூடிக் கொண்டு பெருமை தந்தவர் என்பது புராணச் செய்தி. ஆக, நகைச் சுவையை என்றைக்கும் பிள்ளையார் விரும்பினார்.
இன்றைக்கு விநாயக சதுர்த்தி நாட்களில் சந்திரனுக்கும் பூஜை செய்கிற வழக்கம் உண்டு. இது விநாயகரின் அதிசய கருணையைக் காட்டும். சங்கடஹர சதுர்த்தி (தேய்பிறைச் சதுர்த்தி) களில் சந்திர தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
காஞ்சியில் விகடசக்கர கணபதியாகப் பிள்ளையார் இருக்கிறார். இக்கடவுளைப் போற்றியே கந்தபுராணக் காப்புச் செய்யுள் அமைந்திருக்கிறது. இவை காரணமாக பிள்ளையாருக்கு விகடராஜர் என்றும் பெயர் உள்ளது.
பிள்ளையார் மூஷிக வானராக விளங்குவதும் அவரது எளிமையை, எல்லாருக்கும் இரங்கும் பேருண்மையைக் காட்டுகிறது. இதை காளமேகப் புலர் காஞ்சியில் கண்டார். அவர் கடவுளர்களை நிந்தாஸ்துதி பாடுவதில் வல்லவர். அதாவது மேலோட்டமாகப் பார்க்கும் போது நிந்தனை போல இருக்கும் அக்கவிகளில் உள்ளார்த்தம் போற்றுதலாயமையும். அவர் பாடுகிறார்.
மூப்பான் மழுவும் முராரி திருச்சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறி போச்சோ –மாப்பார்
வலி மிகுத்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலி இழுத்துப் போகிறதே பார்
இவ்வாறான சம்பவங்களுக்கும் இடங்கொடுத்துக் காக்கிற கணபதி நம் பிள்ளையார் தானே? திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் விநாயகர் வாழ்த்தாக அமைத்திருக்கிற பாடல் அழகானது.
உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி உறுதியாகத்
தள்ளரிய அன்பெனும் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வல்வினைகள் தீர்ப்பாம்
நாமும் அந்தக் கணநாதன்.. விக்னேஸ்வரனைப் போற்றினால் விநாயகனின் பேரருள் கிடைக்கும் என்பது பேருண்மையாகும்.