Search This Blog

Showing posts with label World Literature. Show all posts
Showing posts with label World Literature. Show all posts

Tuesday, February 4, 2020

தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்”(அகதிகளின் அடையாளம், உரிமைகளைக் குறித்துக் கேள்வி எழுப்பும்)

அகதிகளின் அடையாளம், உரிமைகளைக் குறித்துக் கேள்வி எழுப்பும் தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்”
---------------------------------------------------------------------------------
தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்” (நாவல்) நூலினை தமிழகத்திலுள்ள சிந்தன் புக்ஸ் இரண்டாவது பதிப்பாகப் பதித்து வெளியிட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் சிராஜ். மாதவ் வெளியிட்டிருக்கிறார்.
சென்னை புத்தகக் காட்சியின்போது இந்த நாவலின் அறிமுக நிகழ்வு எழுத்தாளர் முற்றத்தில் நடந்தது. நிகழ்வுக்கு திரைப்படம் மற்றும் ஆவணப்படம் சார்ந்து இயங்கும் நெறியாளர் சோமிதரன் தலைமை ஏற்றார். தாமரைச்செல்வியை எழுத்துகளின் வழியாகவும் வாழ்க்கையின் வழியாகவும் அறிந்திருந்த சோமிதரன், விரிவானதொரு அறிமுகத்தைச் செய்தார். தாமரைச்செல்வியின் வாழ்க்கைச் சூழல், போர் நிகழ்ந்த காலத்தில் அவர் சந்தித்த அனுபவங்களை வரலாற்றுப் பதிவு போன்றதொரு தொனியில் இலக்கியமாக்கிய அவருடைய எழுத்துகள், அந்த எழுத்துகள் மகேந்திரன் போன்ற இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தமை, அவற்றில் சில குறும்படங்களாக உருவாக்கப்பட்டமை என சோமிதரனின் அறிமுகம் இருந்தது. தமிழகச் சூழலுக்கு இந்த விசயங்கள் முக்கியமானவை. பலருக்கும் இது ஒரு வாசலைத் திறக்கக் கூடியது.
இதைத் தொடர்ந்து கருணாகரன் தாமரைச்செல்வியின் புனைவுலகம் பற்றிச் சிறியதொரு உரையை நிகழ்த்தினார். சாமானிய மக்களின் வாழ்க்கையும் அவர்கள் கொள்ள விரும்பும் எதிர்காலமுமே தாமரைச்செல்வியின் முதற்கரிசனை. இதனால்தான் அவர் எப்போதும் சனங்களின் கதைசொல்லியாக இருக்கிறார். மிக எளிய மனிதர்களின் வாழ்க்கையை அதே எளிய முறையிலான கதைசொல்லலின் மூலமாக வரலாற்றில் பதிய வைக்கிறார். காலத்தையும் சூழலையும் உருவழியாமல் கட்டமைப்பது தாமரைச்செல்வியின் புனைவு. புனைவின் வழியாக தன்னுலகை அழியாமல் நிர்மாணித்து விடுகிறார். அவருடைய தன்னுலகென்பது எளிய சனங்களின் வாழ்க்கையின் நிழற்படமே. ஆனால், இந்த நிகழ்படம் உயிரோடிப்பது என்று குறிப்பிட்டார் கருணாகரன்.
நிகழ்வின் முக்கியமான அம்சம் கவின்மலர், எழுத்தாளர் விஜிதரன் ஆகியோரின் உரைகள். உயிர்வாசம் நாவல் அகதிகளைக் குறித்த மிக முக்கியமான ஆவணமாகவும் இலக்கியப்பிரதியாகவும் உள்ளது என்றார் விஜிதரன். இந்தியாவில் ஒரு அகதியாக இருக்கும் தன்னுடைய அனுபவங்களை வைத்து, உலகளாவிய ரீதியில் அகதிகள், அகதிகள் மீதான அரசுகளின் நடத்தைகள், அகதிகளுக்கான ஐ.நாவின் வரையறைகள் போன்றவற்றைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசினார் விஜிதரன். (இந்த உரையை மையமாக வைத்து விரிவானதொரு விமர்சனத்தை விஜிதரன் எழுதியுள்ளார்). முக்கியமாக இந்திய அரசும் தமிழகச் சூழலும் இந்த நாவலைப் படித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அகதிகள் விடயத்தில் சர்வதேச நியமங்களை விட்டு எந்தளவுக்கு தாம் தாழ்ந்து போயிருப்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த நாவல் தமிழகச் சூழலில் பரவலாக வாசிக்கப்படுமாக இருந்தால் அது ஈழ அகதிகளைப்பற்றிய வேறு விதமான – உண்மைகளை பலருக்கும் உண்டாக்கும். அந்த வகையில் இந்த நாவலுக்குப் பெரியதொரு முக்கியத்துவம் உண்டென்றார். கூடவே நாவலில் கவனித்திருக்க வேண்டிய சில பகுதிகளைப்பற்றியும் குறிப்பிட்டார் விஜிதரன்.
கவின்மலருடைய உரை இன்னொரு கோணத்திலிருந்தது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக அவலங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. போர் முடிந்தாலும் அவர்களுடைய அவலக்கதைகளும் துயரமும் எளிதில் முடிந்து விடுவதில்லை. அவற்றிலிருந்து அவர்கள் நீங்க முயன்றாலும் அது தொடரும் துயரக் கதைகளாக வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது என்பதைச் சாரமாகக் கொண்டு கவின்மலர் தன்னுடைய உரையை நிகழ்த்தினார். இரண்டு உரைகளும் மிகுந்த கவனத்திற்குரியவை. உயிர்வாசம் நாவலைக் குறித்த, அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்த உரைகளாக இருந்தன.
ஈழத்தமிழர்களை வெளிச்சூழலில் பிற சமூகத்தினர் – குறிப்பாக மத்தியகிழக்கு மற்றும் அரபுச் சூழலில் உள்ளோர் கூட இரண்டாம் தரப்பிரசைகளாகக் கணிப்பதற்கான காரணங்கள், அவர்கள் இந்த நாடுகளில் கொண்டிருந்த தொழில் மற்றும் வாழ்க்கைத் தன்மையாகும் என்ற வாதத்தை முன்வைத்து கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் விஜிதரனின் கூற்றுக்குப் பதிலளித்தார்.
பிரதியை திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி வழங்கி வைத்தார். கவின்மலர், பெற்றுக் கொண்டார். ஈழ எழுத்தாளர்கள் தமிழ்நதி, அகரமுதல்வன், ப.தெய்வீகன், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், வாசு முருகவேல், செல்வம் அருளானந்தம் (காலம்) நாட்டியக் கலைஞர் அபிராமி, ஊடகத்துறையைச் சேர்ந்த ரேணுகா துரைசிங்கம், கமலாகரன், திரைப்பட நடிகர் வின்சன்ட் உள்ளிட்ட பலரோடு தமிழகத்தின் எழுத்தாளர்கள், வாசகர்கள், திரைத்துறையைச் சேர்ந்தோரும் எனப் பலர் கலந்து கொண்டனர்.
உயிர்வாசம்
(நாவல்) சிந்தன் புக்ஸ் - இந்திய விலை 400/=

இலங்கையில்
சுப்ரம் பதிப்பகம் - இலங்கை விலை 900/=
Karunakaran Sivarasa
6 mins 
 

Monday, February 3, 2020

கோணங்கி தமிழ் எழுத்தாளர்.

கோணங்கி ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் இளங்கோ.
1958-ஆம் ஆண்டில் நென்மேனி மேட்டுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான மதுரகவி பாஸ்கர தாஸ் பேரன் இவர். அப்பா சண்முகம், அண்ணன் ச. தமிழ்ச்செல்வன் ஆகியோர் எழுத்தாளர்கள். தம்பி முருகபூபதி தமிழின் முக்கியமான நாடகக் கலைஞர். கோவில்பட்டியில் வாழ்ந்து வரும் இவர் கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணி செய்தவர்.
1980-களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருபவர். கவிஞர் பிரம்மராஜன் நடத்திய மீட்சி இதழில் புதிதாக எழுதத் தொடங்கியவர். புதுமைப்பித்தன், மௌனி, நகுலன், ந. முத்துச்சாமி, கி. ராஜநாராயணன், எஸ். சம்பத், ஜி. நாகராஜன் போன்ற தமிழ் எழுத்தாளர்களை வாசிப்பவர். தமக்கென்று தனித்த நடையை உருவாக்கியிருப்பவர். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர் இவர். தமிழ் எழுத்தாளர் நகுலன், ருஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்து ஸ்பானிஷ் மொழியில் எழுதும் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் ஆகியோருக்கு கல்குதிரை சிறப்பிதழ் கொணர்ந்தவர். பெரும்பத்திரிகைகள் மற்றும், வணிக இதழ்களில் இவர் எழுதுவதில்லை. ஓரிடத்தில் நில்லாது நிலையற்ற நிலையில் வாழ்பவர்; இலக்கியவாதிகளின் நண்பர். பாழிபிதிரா, என்ற இவருடைய மூன்று நாவல்களும் புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு கவனம் பெற்றவை. இவரைப் பற்றி விமர்சகர்கள் நாகார்ஜுனன், எஸ். சண்முகம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இவருடைய முதல் ஐந்து சிறுகதை நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டுள்ளன.
நிறைய அலையும் மனப்பாங்கு கொண்டவர். தமிழின் நவீன ஃபாஹியான். ஓரிடத்தில் நில்லாது நிலையற்ற நிலையில் வாழ்பவர். இலக்கியவாதிகளின் நண்பர். இவருடைய மூத்த சகோதரர், சிறுகதை ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வன். இளைய சகோதரர், நாடக ஆசிரியர், ச. முருகபூபதி.

 பாழி, பிதிரா என்ற இவருடைய இரண்டு நாவல்களும் தமிழ்-நாவலுக்கென்ற மரபான தளங்களைத் தவிர்த்து, புதிய கதைசொல்லும் முறையில் எழுதப்பட்டு மிகுந்த கவனம் பெற்றவை. இவர் பற்றி விமர்சகர்கள் நாகார்ஜுனன், எஸ். சண்முகம் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.  இவருடைய முதல் ஐந்து சிறுகதை நூல்கள் யாவும் தொகுக்கப்பெற்று ஒன்றாக வெளியாகியுள்ளன.

நூல்கள்

  • மதினிமார்கள் கதை (சிறுகதைத்தொகுப்பு, 1986)
  • கொல்லனின் ஆறு பெண் மக்கள் (சிறுகதைத்தொகுப்பு, 1989)
  • பொம்மைகள் உடைபடும் நகரம் (சிறுகதைத்தொகுப்பு, 1992)
  • பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் (சிறுகதைத்தொகுப்பு, 1994)
  • உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை (சிறுகதைத்தொகுப்பு, 1997)
  • பாழி (நாவல், 2000)
  • பிதிரா (நாவல், 2004)
  • இருள்வ மௌத்திகம் (கதைத்தொகுப்பு, 2007)
  • சலூன் நாற்காலியின் சுழன்றபடி (சிறுகதைத் தொகுப்பு, 2008) - மேற்கண்ட முதல் ஐந்து நூல்களில் உள்ள சிறுகதைகள் யாவும் அடங்கியது.
  •  (நாவல், 2014)

Thursday, January 30, 2020

''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்'' பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.

*''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும் ''எனும் தலைப்பில் ''சைவ சித்தாந்தம் '' இணையபக்கத்தில் அன்பர் பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம் அவர்கள் எழுதிய கட்டுரையினை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.*
''அறியப்படாத தமிழ்த்தாய் வாழ்த்து – மெய்யுணர்வும் தமிழுணர்வும்''
பேராசிரியர்.முனைவர்.கிருஷ்ணன் நல்லபெருமாள், ம.சு.பல்கலைக்கழகம்.
நாற்பத்து இரண்டே ஆண்டுகள் வாழ்ந்தாலும் தமிழுக்கும், தமிழ் நாடகவியலுக்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அளித்த கொடை அளப்பரியது. அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியரல்லர். தத்துவத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மலையாள மண்ணின் மைந்தனாகப் பிறந்திருந்தாலும், அவரின் தமிழ்ப் பற்றுக்கு நிகர் அவரே.
மனோன்மணியம் நூலுக்கு அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே தமிழ்த்தாய் வாழ்த்தாகத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டது. ஆனால், அன்றைய தமிழக அரசின் சார்பாக தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கியவர்கள், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் இரண்டாம் பத்தியின் அனைத்து வரிகளையும் மிகக் கவனமாக நீக்கிவிட்டு கடைசி வரியை மட்டும் வெட்டியெடுத்து, முதல் பத்தியோடு ஒட்ட வைத்துப் புதிய தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்கினர். இப்போது அந்த இரு பத்திகளையும் காண்போம்:
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே.

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடுனும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.

தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்ட அவ்வரிகள் சுந்தரம் பிள்ளையவர்களின் தமிழுணர்வையும், மெய்யுணர்வையும் பறைசாற்றுபவை.
“பல்லுயிரும் பலவுலகும் படைத்து அளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்”

என்ற இரண்டு வரிகள் தரும் பொருள்: அனைத்து உயிர்களையும், அனைத்து உலகங்களையும் படைத்து, காத்து, முடிவில் அவைகளைத் தன்னுள் ஒடுக்கும் ஓர் எல்லையற்ற பரம்பொருளாம் இறைவன் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் எப்போதும் இருந்தபடி நிலைப்பேறாக இருப்பதைப் போல, என் தமிழ்த்தாய் என்றும் மாறாத சீரிய இளைமையோடு நிலைத்திருப்பாள் என்பதாகும்.
இந்த இரண்டு வரிகள் சொல்லும் செய்திகள் மிகமுக்கியமானவைகள்; ஒன்று, சுந்தரம்பிள்ளையவர்கள் இறைக்கொள்கை உடையவர் என்பது; இரண்டு, தமிழ்மொழியும் இறைவனைப் போல் என்றும் மாறாத இளமையுடன் இருக்கின்றது என்பது.
தமிழன்னையின் பெருமை சாற்றும் இந்த இரண்டு வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
இந்த வரிகளில் ‘உயர்வு நவிற்சி’யாக தமிழன்னை என்றுமுள்ள பரம்பொருளுக்கு இணையாக உயர்த்திப் புகழப்பட்டாள்; இவை பெருமைக்குரியவை அல்லவா? எந்தமதத்தையும் குறிக்காமல் பொதுவாகப் ‘பரம்பொருள்” என்று குறித்திருப்பது ‘மதச்சார்பின்மைக்கும்’(secular) ஒத்துவருகிறதே! பின் ஏன் நீக்கினார்கள்?
உங்களுக்குக் குழப்பமாக இருக்கிறதா? குழம்பத் தேவையில்லை! நீக்காவிட்டால், கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழக அரசு, பரம்பொருளாம் ‘இறைவனின்’ இருப்பை ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ? தமிழக சூழலில் secular என்றால் ‘இறைமறுப்பு’ என்பதாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
கவியுள்ளத்தைப் புறம்தள்ளி வசதிக்காக வரிகளை நீக்கியது அறமற்ற செயல்.
தமிழ்த்தாய் வாழ்த்து நாம் அரசு விழாக்களில் பாடுவோம் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடவில்லை. அவரின் ஒப்பற்ற காவியத்தில் தமிழைப் போற்றித் தொடங்கவே பாடினார். அவரின் பாடலின் கருத்துப் பிடிக்கவில்லையா? விட்டுவிட வேண்டியதுதானே!
அதை விடுத்துக் கவியுள்ளத்துக்குப் புறம்பாக வெட்டி-ஒட்டுவது அறச்செயலுக்கு மாறானது.
அக்காலச் சொல் வழக்குகள், நம்பிக்கைகள், வரலாறு போன்ற உணர்வுகளை உள்ளடக்கிப் பாடியுள்ள கவிஞரின் கருத்துக்கு மாறாக, போற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பிக் கவிதையைச் சிதைப்பது எவ்விதத்தில் அறமாகும்?
திராவிடக் கொள்கைகளுக்கு வலுவூட்டும் பின்னுள்ள மூன்று வரிகளை ஏன் நீக்கவேண்டும்?
திராவிடம் திராவிடம் என்று ஒட்டுமொத்த தமிழர்களுமே திராவிடக் கருத்தியலை தங்கள் பண்பாடு என்று ஏற்கும்படிக்கு மூளைச்சலவை செய்தவர்களுக்கு, “தமிழ்த் தாயே, நீ நான்கு திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய நான்கு குழந்தைகளை உன் வயிற்றிலே சுமந்து பெற்ற பின்பும் என்றும் நீங்காத இளமையுடன் திகழ்கின்றாயே! உன்னை எங்ஙனம் வாழ்த்துவேன்?” என்னும் பொருள்படும்
“கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும், துளுவும்
உன் உதரத்து உதித்து எழுந்தே ஒன்று பல ஆயிடுனும்”
என்ற வரிகள் தேனினைப் போல அல்லவா இனித்திருக்க வேண்டும்? பின் என் நீக்கினார்கள்?

தமிழின் பெயராலும், அடுக்கு மொழிச் சொற்களாலும் ஆட்சிக்கட்டிலைப் பிடித்தோர்களில் பெரும்பான்மையினர் தமிழரல்லர் என்பதால் அவர்களுக்கு இவ்வரிகளால் தமிழுக்குப் பெருமை சேர்வதை ஏற்றுக் கொள்ள இயலவில்லையோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
“ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து”
தமிழன்னையே! பேச்சு வழக்கு ஒழிந்தமையால் உலக வழக்கு அழிந்து ஒழிந்த வடமொழியான ஆரியம் போல் அல்லாது நீ சீரிய இளமையோடு விளங்குகின்றாயே! என்ற வரி தமிழுக்குப் பெரும் பெருமை சேர்க்கும் விடயமல்லவா? பின் ஏன் நீக்கினார்கள்? தமிழரல்லாத அவர்களின் உள்ளீடான ஆரியப்பற்று இவ்வரி சொல்லும் செய்தியின் உண்மையைப் பொறுத்துக் கொள்ள விடவில்லையோ என்ற ஐயம் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை..

பேசாப் பொருளைப் பேச . . .
முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்ற அணி அமைப்புகள், உட்பொருள்கள், நயங்கள், செம்மைகள் அனைவரையும் வியப்படையச் செய்பவை. இதுவரை முழுவதுமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை உள்வாங்கிச் சுவைக்க வாய்ப்புக் கிட்டாத தமிழன்பர்களுக்காகவும், தமிழ்த்தாய் வாழ்த்தின் ‘கண்’ பற்றியும் ‘காது’ பற்றியும் மட்டும் சிந்தித்துவிட்டு, சுந்தரனார் ‘உணர்த்த விழைந்த’ செய்தியைப் பேசாமல் போவது முழுமையான பார்வையாகாது என்பதாலும், தமிழன்னையை வணங்கி இதுவரை யாரும் பேசாப் பொருளைப் பேசத் துணிகின்றேன்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், இவ்விரண்டு பத்திகளுக்குப் பின்வருபவை எல்லாம், தமிழ்த்தாயின் பெருமையை, இரண்டு அடிகளில் ஒருபொருள் குறித்து பாடப்பட்ட பன்னிரண்டு பாடல்களாகப் பாடப்பட்டுள்ளன.
கடலும் தமிழ்த்தாய்க்கு ஒப்பாகாது--
கடல் குடித்த குடமுனி உன் கரை காணக் குருநாடில்
தொடுகடலை உனக்கு உவமை சொல்லுவதும் புகழாமே!
“முன்னர் ஒரு காலம் பெருங்கடலையே குடித்துத் தன் வயிற்றில் அடக்கிய குறுமுனி அகத்தியர் தமிழ்மொழியின் கரை காண்பதற்காக இறைவனையே குருவாக நாடினார் என்பதால், என் தாயே! தமிழே!! தொடுகடலை உவமையாகச் சொல்லுவதுவும் உனக்குப் புகழ் ஆகாது!!!” என்று பாடிப் பரவசமடைகின்றார் கவிஞர். என்னே சுந்தரனாரின் தமிழ்ப் பெருமை! வியந்தல்லாவா போகிறோம் நாம்?

தமிழ் இலக்கணம் எம் இறைவனுக்கே எட்டாதது!--
ஒரு பிழைக்கா அரனார் முன் உரையிழந்து விழிப்பாரேல்
அரியது உனது இலக்கணம் என்று அறைவதும் அற்புதமாமே.

பாண்டிய மன்னனின் ஐயத்தைத் தீர்க்குமாறும், வறுமையில் வாடும் தருமிக்குப் பொற்கிழி பெற்றுத் தருவதற்காகவும் இறையனாரே பாடல் இயற்றிக் கொடுக்க, அப்பாடலில் ஒரு பொருட்பிழை நேர்ந்தது. அப்பிழையை தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவன் நக்கீரன் சுட்டிக்காட்ட இறைவன் பேச்சற்றுத் விழித்தார் (சிலேடையாக-தன் நெற்றிக்கண்ணை விழித்து நின்றதாக) என்று கூறப்படும் புராணக் கதையை உயர்வு நவிற்சிகொண்டு உவமித்து, தமிழின் இலக்கணத்தின் அருமை பெருமையைப் பறைசாற்றுகின்றார் சுந்தரனார்.
தமிழ்மொழி உலகின்மொழி! தோற்ற–நாசம் அற்ற முதுமொழி!!
சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே.

நம் இந்தியத் துணைக் கண்டத்துள் ஆரிய நான்மறை சாற்றும் வடமொழி ஆரியம் நுழைவதற்கு முன்பு வரை தமிழே பேச்சு மொழியாக எங்கும் இருந்தமையால், தொன்மொழியாகிய தமிழைத் ‘தோற்ற-நாசம்’ அற்றது என்று சொல்வது ஒன்றும் வியப்புக்குரியதல்ல என்கின்றார் சுந்தரனார். வடமொழியாம் ஆரியம் இங்கு வந்தேறிய மொழி என்ற கருத்தும் இப்பாடலில் உள்ளுறையாக உள்ளது.
காலத்தை வென்றவள் எம்தமிழன்னை!
வைகைநதி வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கடந்த தமிழேடு சொல்லும் செய்தி காலநதியால் தமிழுக்கு ஒரு அழிவும் நேராது என்பதே!!
வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றேடு
காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே.

தமிழ்ஞானசம்பந்தப் பெருமானைப் ‘புனல்வாதம்’ என்னும் போருக்கு அழைத்த ‘வடமொழி விற்பன்னர்’களாம் சமணர்களின் “अश्थि नाश्थि – அஸ்தி நாஸ்தி” என்று எழுதப்பட்ட வடமொழி ஓலைச்சுவடி வைகைநதி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது;
அஸ்தி என்றால் உண்டு என்று பொருள். கடவுள் உண்டு என்று சொல்பவர்களை ஆஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது. நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள். கடவுள் இல்லை என்று சொல்பவர்களை நாஸ்திகர் என்று சொல்லும் வழக்கம் இங்கிருந்தே வந்தது.

இந்த அத்தி நாத்தி எழுதிய ஏட்டைத்தான் சமணர்கள் மதுரையில் சம்பந்தருடன் செய்த புனல் வாதத்தில் வைகை ஆற்றில் விட்டார்கள். சமணர்களின் ‘அத்தி நாத்தி’ ஏடு வைகை ஆற்றின் போக்குடன் அடித்துச் செல்லப்பட்டது.
சம்பந்தர் ” வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்டார். சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றில் எதிரேறி கரையையும் அடைந்தது. இவ்வாறு ஏடு எதிரேறிக் கரையை அடைந்த தலமே சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் ஆகும்.
சம்பந்தப் பெருமானால் எழுதப்பட்ட இறைவனைப்புகழும் ஏடு – திருஏடு வைகையாற்று வெள்ளத்தை எதிர்த்து நீந்திக்கரையேறி அடைந்த அகம் என்ற காரணப்பெயரால் திருவேடகம் எனப்பட்டது. இது மதுரையில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த ” வாழ்க அந்தணர்” என்ற திருப்பாசுரத்துக்கு பல தனிச்சிறப்புகள் உள்ளன.
இது ஒன்றே பன்னிரண்டு பாடல்களை உடையது. மற்றைய பதிகங்கள் எல்லாம் பதினொரு பாடல்கள் கொண்டவை.

இந்தப் பாசுரத்தை சம்பந்தர் தன் கையாலேயே எழுதினார். சம்பந்தரின் மற்றைய பாடல்களை ஏட்டில் எழுதி வந்தவர் அவருடைய தாய்மாமன் சம்பந்த சரணாலயர்.
சைவத்தின் கொள்கை விளக்கம் செய்த பாடலும், சைவ சமயத்தை மெய்ச்சமயம் என்று நிறுவிய பதிகமும் இதுவே.
இவ்வொரு பதிகத்துக்கு மட்டுமே சேக்கிழார் 22 பாடல்களில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
முதல் ஒன்பது பாடல்களின் யாப்பு வேறு; கடைசி மூன்று பாடல்களின் யாப்பு வேறு.

அஸ்தி நாஸ்தி அல்லது அத்தி நாத்தி என்பது சமண மதக்கொள்கை. அருகனை முதல்வனாக ஏற்ற சமணரின் ஆருகத மத மந்திரம் ” அத்தி நாத்தி”. ஒரே முடிவு என்றில்லாது பல முடிவாகக் கூறுதல். உண்டாம்-இல்லையாம், உண்டு-இல்லையாம், உண்டாம்-ஆயின் சொல்ல இயலாதாம், இல்லை-ஆயின் சொல்ல இயலாதாம், உண்டும்-இல்லையுமாம் ஆயின் சொல்ல இயலாதாம் என்பது போன்ற ஏழு பகுதிகள் உள்ளன. அதனால் இதை ஸப்த பங்கி வாதம் என்பர். ஸப்த என்றால் ஏழு. இது சமற்கிருதமொழி அல்ல; அர்த்த மகத மொழி என்னும் வடமொழி. மகதம் என்பது இன்றைய இந்தியாவின் பீகார் மாநிலம். சமணமும் வடமொழியும் இங்கிருந்துதான் வந்தது. பல திராவிடவாதிகள் சமணம் திராவிட மதம் என்றும், திருவள்ளுவர் சமணர் என்றும், சமணம்தான் தமிழை வளர்த்தது என்று எண்ணியும், எழுதியும், பேசியும் வருவது வேறு கதை.
மெய்யுணர்வினும் ஓங்கிநிற்கும் தமிழுணர்வு!
ஆனால், தமிழ்ஞானசம்பந்தப் பெருமானால் தமிழில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி வைகை நதியின் வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரை சேர்ந்தது என்பது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தில் வரும் தொன்மம். அத் தொன்மத்தையே சான்று காட்டி, காலமாகிய நதியின் ஓட்டம் தமிழுக்கு ஒருக்காலும் ஊறு விளைவிக்க இயலாது என்பதற்கான அறிகுறியே அந்நிகழ்வு என்கின்றார் சுந்தரனார். இதுவல்லவா மனோன்மணியம் சுந்தரனாரின் மெய்யுணர்வினும் ஓங்கி நிற்கும் தமிழுணர்வு! வார்த்தை வணிகர்களுக்குப் புரியாத நுண்நுண்ணுணர்வு!
இறைவனே தன் கைப்படத் தமிழன்னையின் திருவாசகத்தின் படி எடுத்து எழுதிவாங்கிக்கொண்டது இறைவனின் கடையூழிக் காலத் தனிமையைக் கழிப்பதற்கே! எம் மொழிக்கும் கிட்டாத மேன்மை! ஆயின், தமிழன்றோ இறைமொழி?
கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே.
‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது தமிழ்ப் பழமொழி. நம்மை யெல்லாம் உருக்கும் திருவாசகம், அன்புருவாம் இறைவனை உருக்காதிருக்குமா? திருவாசகத்தில் உருகிய இறைவன் அவ் வாசகத்தைத் தன் திருக்கரங்களால் படி-எடுக்க விரும்பினான்; ஒரு வயோதிக அடியவரின் உருவில் தோன்றி, மணிவாசகரிடம் திருவாசகத்தை மீண்டும் சொல்லுமாறு வேண்டித் தன் கைப்படவே படியெடுத்துக் கொண்டான் சிற்றம்பலமுடையான்.

‘மாணிக்கவாசகன் சொல்ல, அழகிய சிற்றம்பலம் உடையான் கைப்பட எழுதியது’ என்ற அழகிய சிற்றம்பலம் உடையானின் திருவாசகப் பிரதியைச் சிற்றம்பலப் படியில் கண்ட தில்லைவாழ் அந்தணர்கள், மாணிக்கவாசகரிடம் சென்று, திருவாசகத்தின் பொருள் கூறுமாறு விண்ணப்பித்தனர்; ‘திருவாசகத்தின் பொருள் அம்பலக்கூத்தனே’ என்று கூறிவிட்டு, மணிவாசகர் இறைவனுடன் கலந்தார் என்பது தொன்மம்.
இங்கும் மெய்யுணர்வினும் ஓங்கியது தமிழுணர்வல்லவா?
இத்தொன்மத்தின் அடியாகப் பிறந்தது இவ்விரண்டு வாழ்த்து வரிகள்; என்ன அற்புதமான உயர்வு நவிற்சி!
கடையூழிக் காலத்தில் அனைத்தும் ஒடுங்க, இறைவன் மட்டுமே தனித்திருப்பான்; அவன் மீளவும் இப் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்பு, ஒரு சிறிய இடைவேளை, ‘Small Break” வருமல்லவா? அப்போது, எம் தமிழன்னையின் திருவாசகத்தின் துணைகொண்டே அத் தனிமையை இறைவன் போக்கிக் கொள்வான்; அத்துணை பெருமை கொண்டது எம்தமிழ் என்று இறுமாக்கின்றார் சுந்தரனார்; இவ் வுணர்வெல்லாம் மெய்யுணர்வினும் ஓங்கிய தமிழுணர்வல்லவா?
சங்கப் பலகை – தமிழின் உண்மை வரலாற்றுக்குச் சான்று .
தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை
மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே.

தகுதியுடைய நூலுக்கே மதுரைச் தமிழ்ச்சங்கப் பலகை விரிந்து இடம் கொடுக்கும் என்பது மிகுந்த பெருமை கொண்ட உன் உண்மை வரலாற்றிற்கு ஒரு அடையாளம் என்று தமிழ் மொழியின் மெய்ச் சரிதத்தை வியந்து போற்றுகின்றார் கவிஞர். இங்கு “வியஞ்சனம்” என்ற சொல் “குறிப்பால் உணர்த்தி நிற்கும் அடையாளம்” என்ற பொருளாகும்.
வடமொழி உயர்வென்றும் தமிழ் மொழி அன்றென்றும் கூறுவோர் மதியிலாரே.
வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள்
கொடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே.
வீறுடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால்
கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார்.
கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள் விழியுள்
வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார்.
பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.

ஆரியமொழியே உயர்வென்ற, மனோன்மணியம் சுந்தரனாரின் காலத்திலிருந்த மக்களின் மனநிலையை மேற்கண்ட பாடல்கள் பதிவிட்டிருக்கின்றது. தமிழ்மொழியின் மேன்மை அறியாதவரே நிறைந்திருந்த காலம் என்பதை உணர்த்தும் பாடல்கள் இவை. சுந்தரம் பிள்ளையவர்களின் பின் கா.சு.பிள்ளை, மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் போன்றோரின் அரும்பணிகளால் தமிழன்னையின் பெருமை மீட்டெடுக்கப் பட்டது எனினும், இன்னும் அச்சப்பாடுகள் முற்றிலும் நீங்கிவிடவில்லை.
பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் – ஒருகுலத்துக்கு ஒரு நீதி : குறள் நீதியும் மநுநீதியும்
வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநுவாதி யொருகுலத்துக் கொருநீதி
அனைத்து உயிர்களும் பிறப்பினால் ஒருவரே!

அவரவர் செய்யும் தொழில் காரணமாகவே சிறப்புகள் வேறு வேராகக் காணப்படுகின்றன என்னும் குறள் கூறும் அறநெறியையும், நீதியையும் உணர்ந்தோர்கள் குலப் பிறப்பின் காரணமாகவே அந்தணர், அரசர், வணிகர், சூத்திரர் என்று மனிதகுலத்திற்குள் வேற்றுமை பாராட்டும் மநுநீதியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்நீதியாம் குறள்நீதியின் மேன்மையையும், வடமொழி நீதிநூலாம் மநுநீதியின் மானுடத்திற்குப் புறம்பான தீமையையும் தமிழர்களுக்கு இனம் காட்டுகின்றார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள்.
திருவாசகத்தில் கரைந்தோர்கள் பிறவொன்றையும் கருதார்
மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ.

‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று பழமொழி கண்டவர் தமிழர். மனித மனங்களைக் கரைத்து, மனமாசுகளை நீக்கும் திருவாசகத்தில் கரைந்துபோனவர்கள் வேறு எந்த மந்திர உருவேற்றும் கண்மூடிக் கதறும் வழிபாடுகளை இயற்றமாட்டார்கள் என்று உறுதிபடக் கூறுகின்றார். திருவாசகத்தில் கரைந்துபோன அனுபவத்தையல்லவோ மேலை ஆரியரும் உணரும் வண்ணம் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு உணர்த்துகின்றது. தமிழ்த் திருவாசகம் போலன்றி, ஆரியமொழி ஆரவார மந்திரங்கள் சடங்குகளே அன்றி உள்ளம் ஒன்றி வழிபாடியற்ற துணைபுரியா என்பது இங்கு தமிழின் மேன்மை குறித்து வலியுறுத்தப் பெறுகின்றது.
இறுதியாக,
மலையாள மண்ணில் ஆலப்புழை என்ற ஊரில் பிறந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்கள் தமிழ் மொழியையே தாயாகப் பாவித்து வந்தவர்; அவரல்லவோ உண்மையான தமிழர்?

இச்செய்தியைப் பறைசாற்றும் அவர்தம் தமிழ்த்தாய் வாழ்த்தின் நிறைவுப் பகுதி இதோ:
நிற்புகழ்ந்து ஏத்துநின் நெடுந்தகை மைந்தர்
பற்பலர் நின் பெரும் பழம்பணி புதுக்கியும்
பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்
நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில்
அடியேன் கடையேன் அறியாச் சிறியேன்
கொடுமலையாளக் குடியிருப்பு உடையேன்
ஆயினும் நீயே தாய் எனும் தன்மையின்
மேய பேராசை என் மீக்கொள ஓர்வழி
உழைத்தலே தகுதி என்று இழைத்த இந் நாடகம்
வெள்ளியது எனினும் விளங்கு நின் கணைக்காற்கு
ஒள்ளிய சிறு விரல் அணியாக்
கொள் மதியன்பே குறியெனக் குறித்தே.
-மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை

நிறைவாக,
யாம் பெற்ற இன்பமாம் இவ்வுணர்வரிய தமிழ்த்தாய் வாழ்த்தின்பத்தை தமிழர் அனைவரும் பெற்று, எம் ஊன் பற்றி நின்ற தமிழ் உணர்வது ஓங்கி, அன்பால் அனைவரும் இன்புறப் பணிசெய்து, நிலமிசை தமிழால் இசைபட வாழ்ந்து, மறைத்தமிழ் கொண்டு வான் பற்றி நின்ற மறைப்பொருளோடு இரண்டறக் கலந்து இன்புற்று வாழ்க. (இந்நிறைவுரை, திருமூலதேவ நாயனாரின் திருமந்திரத்தில் உள்ள
‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே.’ என்ற ஊன் கலந்த பாடலால் நிறைந்தவை)

பெறர்க்கரிய இத் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழராம் யாம் அனைவரும் பெற்றின்பமுறத் தந்த மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு நன்றி கூற இவ்வொரு பிறவி போதுமா? நும் தமிழ் நுகர, நும் தமிழ் வாழ்த்த, யாம் பல்லாயிரம் மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே! தமிழ்த்தாய்க்கும், நுமக்கும் யாம் கூறுதும் பல்லாண்டு!!
தமிழால் இணைவோம்! தமிழாய் வாழ்வோம்!!
நன்றி ~ சிவம்

Sunday, January 5, 2020

மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகள் 11 புத்தகங்கள்

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு:மார்ச் 151968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், தமிழின் மிக முக்கிய கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.




“மனுஷ்யபுத்திரன் கவிதைகள் இயல்பாக அமைவதற்குக் காரணம் அவரது உரையாடல் தன்மைதான் என்று எனக்குப் படுகிறது. அந்த முன்னிலை அவருக்கு தன்னைத் தொகுத்துக் கொள்ளவும் தெளிவாக அடுக்கி முன்வைக்கவும் உதவும் மையமாக உள்ளது. அவர் கவிதைகளின் தனித்தன்மையும் சிறப்பும் இதுவாகும்.”


 ஜெயமோகன்
அளித்தலும் ஏற்றலும்
.......
'இந்த நேரத்தில் உங்களுக்கு
ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்' என்றான் தயங்கித் தயங்கி
நான் இருமலைக் கட்டுப்படுத்திக்கொண்டு

மெல்ல எழுந்து உட்கார்ந்தேன்

அவனது கண்கள் அன்பினால்

தளும்பிக்கொண்டிருந்தன.

இனம் புரியாத குற்ற உணர்வினால்

தவித்துக்கொண்டிருந்தான்



எனக்கு மிகப்பெரிய உதவிகள்

தேவையாக இருந்தன

எனக்கு எதுவுமே

தேவையில்லாமலும் இருந்தன

அவனோ மிக எளிய மனிதன்

அவனுக்கே உதவிகள் தேவைப்படலாம்

ஆனால் அவன் பிடிவாதமாக கேட்டுக்கொண்டே இருந்தான்
" சொல்லுங்கள் உங்களுக்கு ஏதாவது செய்ய
என்னை அனுமதியுங்கள்" என்றான்

மறுக்க விரும்பினேன்
ஏதோ ஒன்றை செய்வதைக் காட்டிலும்
உடனிருப்பதற்கு சிறந்த வழிகள் இருக்கின்றன
என்பதைச் சொல்ல விரும்பினேன்
என் மறுப்பின் வழியே
அவனது இயலாமை எதையும் காயப்படுத்திவிடலாகாது என அஞ்சினேன்
நான் அந்தியின் மஞ்சள் ஒளியையையே
மெளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்

நீண்ட யோசனைக்குப் பிறகு
இந்த உலகிலேயே மிகச்சிறிய ஒன்றை
அவனிடம் கேட்டேன்
அது எனக்கு தேவையாக இருந்த ஒன்றுகூட அல்ல
ஆனால் அது அவனை நம்பவைக்க போதுமானதாக இருந்தது
அது ஒரு பறவையிடம்
ஒரு சிறிய இலையைக் கொண்டுவரும்படி
கேட்பதுபோன்றது

அவன் என்னைப் பார்த்துக்கொண்டதற்கான
நிம்மதியை அடைந்தான்
எப்போது வேண்டுமானாலும்
எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்றான்
பரவசத்துடன்

அளித்தலுக்கும்
ஏற்றலுக்கும் நடுவே
நடுங்குகின்றன
அன்பின் ஆயிரம் சுடர்கள்

காலை 6.05
5.1.2020
மனுஷ்ய புத்திரன்
நம் காலத்தைப் பிளந்து அதனுடைய குருதியைப் பருகத்தந்து கொண்டேயிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

நம்முடைய இந்தக் காலம் சாதாரணமானதல்ல. மிகக் கொடூரமானது. வலி நிரம்பியது. தந்திரங்களாலும் கீழ்மைகளாலும் உருக்குலைக்கப்பட்டது. கண்ணியமற்றது. பொய்மைகளில் திளைத்தது. இப்படியே இந்தக் காலத்தைச் சிதைத்து வைத்திருக்கின்றன நம்மைச்சுற்றியும் நம்முள் ஊடுருவியுமுள்ள ஒவ்வொரு தரப்பும். ஆனாலும் இதை ஒப்புக்கொள்ள மறுத்து மினுக்கம் காட்டுவதற்கே அவை தொடர்ந்தும் முயற்கின்றன. இதற்காகவே நீதி பற்றிய போதனைகளிலும் நியாயங்களைப் பற்றிய கற்பிதங்களிலும் தொடர்ந்தும் இவை ஈடுபடுகின்றன.

இந்தக் காலத்தின் மேன்மையான தருணங்கள் என்பது கணப்பொழுது மின்னலைப்போன்றவை. அல்லது வானவில்லைப்போல சில மணித்துளிகளோடு கரைந்து போகின்றவையாகி விட்டன. இது அறிவின் யுகம், நீதியின் காலம், உரிமைகள் பகிரப்படும் உலகம் என்றெல்லாம் நம்ப வைக்கப்படுகிறோம். ஆனால், இவற்றுக்கு நேர் கீழாகவே நடைமுறைகள் உள்ளன. இதைப் புரிந்து கொண்டாலும் எளிதில் இவற்றை நம்மால் முறியடித்து விட முடிவதில்லை. ஆனாலும் எதிர்ப்புக்குரல்கள் அங்கங்கே எழுந்து கொண்டேயிருக்கின்றன. இது ஒன்றே நமக்கான ஆறுதலும் திருப்தியும்.

எனினும் இதையும் கடந்து அதிகாரத்தின் குரூரம் மிக நுண்ணிய முறையில் பிரயோகிக்கப்படுகிறது. அந்தளவுக்கு நமது சூழலிலுள்ள இன்னொரு தரப்பின் அறிவு அதிகாரத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. நாம் நம்பிக் கொண்டிருக்கும் அறமும் பண்பாடும் சட்டங்களும் ஆட்சியும் மரபும் சமூகமும் எப்படிச் செயற்படுகின்றன? என்ற எண்ணற்ற புதிர் மூட்டங்களில் இதையெல்லாம் ஒரு கலைமனம் எப்படி அணுகுகிறது? இதில் ஒரு கவிமனதின் கொந்தளிப்பு எப்படியானது? என்பதை மிகச் சிறப்பாகக் காட்டுகின்றன மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். அவரளவுக்கு நம் காலத்தைக் கவிதைகளில் திறந்து காட்டியவர் வேறு யாருமில்லை. இந்தப் பத்தாண்டுகளில் மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றும் இதற்கு நல்ல சாட்சி.

தத்தளிப்பாக, எதிர்ப்புக்குரலாக, காலச்சாட்சியமாக, விமர்சனமாக, வரலாற்றுப் பதிவாக எனப் பல நிலைகளில் இந்தக் கவிதைகளைத் தந்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன். ஆனால் எந்தக் கவிதையிலும் இயலாமையின் நிழலை அவர் படியவிட்டதில்லை. கழிவிரக்கத்தின் சாயல் தென்பட்டதில்லை. இது அவருடைய இயக்கத்தின் இயல்பென்றே தோன்றுகிறது. அந்த வகையில் மனுஷ்ய புத்திரன் இந்தக் காலமுகத்தையுடையராகி இருக்கிறார்.

இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சிறிய நிகழ்வும் கூட மனுஷ்ய புத்திரனைத் தீண்டுகின்றன. அதை அவர் உணரும் விதம் மிக ஆச்சரியமூட்டுவது. இதனால்தான் அவரால் எதையும் கவிதையாக எழுதி விட முடிகிறது. இந்தக் காலத்தில் நிகழ்த்தப்படும் அபத்த நாடகங்கள் தருகின்ற அதிர்ச்சியை விடப் பயங்கரமானது அவற்றின் திரைகளை விலக்கும் மனுஷ்ய புத்திரனின் கவிதைச் செயல். இவ்வளவு அநீதிகளின் மத்தியில், இவ்வளவு அபாயங்களின் நடுவில்தான் நாம் உள்ளோம் என்ற உண்மையை உணர்த்துவதன் மூலம் இந்த அதிர்ச்சியை உருவாக்குகிறார் மனுஷ்ய புத்தரன். உறைந்து போயிருக்கும் நம் அசண்டையீனத்தின் மீதும் இயலாமை உருவாக்கியிருக்கும் மௌனத்தின் மீதும் இந்த அதிர்ச்சி சலனங்களை உருவாக்க முனைகிறது. தினமும் பொதுவெளியில் சக மனிதர்களுக்காகவும் பாதுகாப்பானதொரு எதிர்காலத்துக்காகவும் எழுத்தாளனாகத் தொடுக்கின்ற அறத்துக்கான வழக்குகளாக இந்தக் கவிதைகளைக் கொள்ள முடியும்.

சமானியர்கள் தொடக்கம் சமூகத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கத்தினருக்கும் மனுஷ்ய புத்திரன் ஊட்டுகின்ற ஒளி பெரியது. விழிப்புணர்ச்சியும் அகத்தூண்டலும் மிக வலியன. குறிப்பாகப் பெண்களின் பிரச்சினைகளை உணர்ந்து பேசிக் கௌரப்படுத்தியவை மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். நகரத்துக்கு வரும் பெண்கள் சிறுநீர் கழிப்பதற்கான இடங்களில் அவஸ்தைப்படுவதிலிருந்து... நம் சமூகச் சூழலில் பெண்கள் படுகின்ற சிரமங்கள், அசௌகரியங்கள், சங்கடங்கள், அவர்களின் மீது நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள், கொடுமைகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் நுணுக்கமான முறையில் கவிதைகளில் அவதானிப்புச் செய்திருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.
அவர்களுடைய ஒவ்வொரு உத்தரிப்புகளையும் மன அவசங்களையும் பற்றிச் சிந்தித்திருக்கிறார். அந்தளவுக்கு பெண்களை, அவர்களின் வாழ்நிலையைப்பற்றி விதவிதமாக பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கிறார். இந்த வகையில் நவீன தமிழ்க்கவிஞரில் முக்கியமானவராகவும் உள்ளார் மனுஷ்ய புத்திரன். .

இவ்வாறு 1000 கவிதைகளோடு 11 புத்தகங்கள் வருவதென்பது பெரிய விசயமே. வாழ்த்துகள். 
Karunakaran Sivarasa






எனக்கு நானே அளித்துகொண்ட மலர்
.............................
நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன். இன்று ஏனோ மனம் சற்றே உணர்ச்சிவசப்படுகிறது. ஒரு வேளை நான் இல்லாமலேயே கூட இந்தக் கூட்டம் நடந்திருக்கலாம். வாழ்வின் பெரும் கருணை இன்னும் எங்கோ மிஞ்சியிருக்கிறது. வாழ்வதற்காக எப்போதும் போராடி வந்திருப்பவர்கள் களத்தைவிட்டு அவ்வளவு எளிதில் அகன்றுவிடமாட்டார்கள். எந்த சரிவிலும் பற்றிக்கொள்ள ஒரு பிடி மண் கிடைக்கும்.

இந்த நாட்களில் எவ்வளவு அன்பு கிடைத்ததோ அதை சற்றே சமன் செய்ய வெறுப்பும் வன்மங்களும் கிடைத்தன. அந்த வெறுப்பிற்குப் பின்னே எந்த இலக்கிய சமூக மதிப்பீடுகளும் இல்லை. பொறாமையிலிருந்தும் ஆற்றாமையிலிருந்தும் பெருகும் கசப்பு அது. நான் செய்யும் வேலைகளும், எனக்குக் கிடைத்த சிறிய அடையாளங்களும் என்னை நானே அழித்துக்கொண்டு எனக்கென்று எந்த தனிப்பட்ட வாழ்க்கையும் இல்லாமல் உருவாக்கிகொண்டவை..



கடந்த ஓராண்டில் 1150 கவிதைகளை 1700 பக்கங்களில் எழுதிய பிறகும் இதோ இன்று அதிகாலைநான்கு மணியிலிருந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். இந்தப் பைத்திய நிலைக்காக கொடுத்தவிலைகள் கொஞ்சமல்ல. சொந்த வாழ்க்கையிலும் சமூக இலக்கிய வாழ்க்கையிலும் எவ்வளவு அவமானங்கள், இழப்புகள். ஆனால் நான் சாகும்வரை இதைத்தான் செய்வேன். இன்னும் கொஞ்சம் இதற்காக் என்னை எரித்துக்கொள்வேன். ஒவ்வொரு கவிதையையும் யாரோ ஒரு வாசகனோ வாசகியோ ’இது என் இதயத்தின் ரகசியம்’ என கண்ணீர் மல்க சொல்லும்போது நான் செய்யும் வேலைக்கான அர்த்தம் கிடைக்கிறது.

பொதுவாக என் புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. அன்றைக்கு என ஏதாவது ஒரு துயரம் என்னைத் துரத்தும். மனம் வாடிப்போவேன். ஆனால் இன்று நான் பிடிவாதமாக உற்சாகமாக் இருக்க விரும்புகிறேன். நான் ஒரு பெரிய வேலை செய்தேன் என்ற நிறைவின் நிமித்தமாக. எனக்கு நானே ஒரு சிறிய மலரை அளித்துக்கொள்கிறேன்.
என்மீது யாருகேனும் ஏதேனும் வருத்தங்கள் இருக்கலாம். சொற்களின் பைத்திய நிலையில் வாழ்பவன் என்பதால் மன்னிக்கலாம்தானே . எழுதுகிறவனுக்கு கிடைப்பது ஒன்றுமில்லை. இந்தப் பெருந்தனிமை உணர்ச்சியைத் தவிர
என் நேசத்திற்குரியவர்கள் இந்த நாளில் என்னோடு இருப்பது நான் இன்னும் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை எனக்குத் தருகிறது

மனுஷ்ய புத்திரன்
5.1.2020

Thursday, July 25, 2019

'தில்லானா மோகனாம்பாள்'. குறித்து வெளிவந்த சுவாரசியமான செய்தி

Chandran Veerasamy
ஆனந்தவிகடனில் ஜெமினி கதை இலாகாவில் பணியாற்றிய கொத்தமங்கலம் சுப்பு கலைமணி என்ற பெயரில் எழுதி வெளியான தொடர்கதைதான் 'தில்லானா மோகனாம்பாள்'. அது திரைப்படமாகவும் வந்து மிகவும் பெரும் வெற்றி பெற்றது. இது குறித்து வெளிவந்த செய்தியொன்று சுவாரசியமானது.

'தில்லானா மோகனாம்பாளை' திரைப்படமாக எடுக்க விரும்பி பிரபல டைரக்டர் ஏ.பி.நாகராஜன் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் சென்று அனுமதி கேட்டார். அதற்கு வாசன் அவர்கள் தானே அதை எடுக்க விரும்பியதாகவும், பின்னர் சில காரணங்களால் எடுக்க முடியவில்லை என்றும், அதை ஏ.பி.நாகராஜன் எடுப்பதற்கு தனக்கு முழுச் சம்மதம் என்றும் தெரிவித்தார். உடனே ஏ.பி.நாகராஜன் ஒரு தொகையை வாசன் அவர்களிடம் கொடுத்தார். அவரும் அதை வாங்கிக் கொண்டு போய் உள்ளே வைத்தார்.
மறுநாள் ஏ.பி.நாகராஜன், வாசன் அவர்களிடம் அனுமதி வாங்கிவிட்டோம், அப்போது ஜெமினி கதை இலாகா எல்லாம் மூடப்பட்டுவிட்டது. கலைமணி என்கிற கொத்தமங்கலம் சுப்பு வீட்டில்தான் இருப்பார். அவரிடமும் ஒரு வார்த்தை மரியாதைக்காகச் சொல்லி அனுமதி வாங்க வேண்டுமென்று அவர் வீட்டுக்குச் சென்றார். அவரும் மகிழ்ச்சியோடு அனுமதி வழங்கி ஆசியும் வழங்கினார். அப்போது அவரிடமும் ஒரு தொகையைக் கொடுக்க ஏ.பி.நாகராஜன் முயன்றார். உடனே சுப்பு அவர்கள் அவர்களைச் சற்று இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு உறையைக் கொண்டு வந்தார். அது என்ன என்று நாகராஜன் கேட்க, நீங்கள் இங்கு வருவதற்கு முன்னமேயே முதலாளி வாசன் அவர்கள் இந்தத் தொகையை நீங்கள் கொடுத்ததாக என்னிடம் கொடுத்தனுப்பி விட்டார் என்றார். ஏ.பி.நாகராஜனுக்கு வாசனைப் போற்றுவதா, கொத்தமங்கலம் சுப்புவைப் பாராட்டுவதா என்றே தெரியவில்லை.
- நன்றி : பாரதி பயிலகம் வலைப்பூ

Wednesday, October 17, 2018

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை


-சுந்தர ராமசாமி
இந்த உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, எவ்வளவுதான் கூர்மையான பொறிகளை நாம் பெற்றிரு ந்தாலும் கூட, நம்முடைய கவன வட்டங்கள், நம்முடைய அறிவு வட்டங்கள், நம்முடைய அனுபவ வட்டங்கள் மிகக் குறுகிய எல்லைகளிலேயே இயங்குகின்றன. தொலைதூரம் என்னால் பார்க்க முடியாது. தொலை தூரத்தில் இருக்கக்கூடிய வாசனையை என்னால் நுகர முடியாது. என்னுடைய அனுப வங்கள் எனக்கு எந்த அளவுக்குத் தெரியுமோ அந்த அளவு அவை என்னிடம் மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்குக் கூட எனக்குப் பிறருடைய அனுபவங்கள் தெரியாது. ஆகவே இந்த வாழ்க்கையின் அகண்ட காரமான தன்மையையும், இந்த வாழ்க்கையில் பூமிப் பந்தில் ஒரு எறும்பு ஒட்டிக் கொண்டு இருப்பது போல் இருக்கக்கூடிய என்னுடைய நிலையையும் நினைத்துப் பார்க்கும்பொழுது பிறருடைய வாழ்க்கை சார்ந்த உண்மைகளையும் பிறருடைய வாழ்க்கை சார்ந்த சாராம்சங்களையும் சத்தான பகுதிகளையும் தெரிந்துகொண்டு அதன் மூலம் இந்த முழு வாழ்க்கையைப் பற்றி , இந்த வாழ்க்கையின் பல்வேறுபட்ட பரிமாணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். இதுதான் வாசிப்பின் தேவையை வற்புறுத்தக் கூடிய காரணமாக அமைகிறது.
பொதுவாகத் தமிழ் மக்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பது என் எண்ணம். நான் அவர்களுடைய புத்தகங்களைப் படித்ததன் மூலம் அறிந்து கொண்ட சில விஷய ங்கள், சமூக வாழ்க்கையில் நான் அவர்களுடன் பழகும் போது எனக்குக் கிடைக்கக்கூடிய செய்திகள் ஆகியன பெரும் பாலும் தமிழ் மக்கள் தாழ்வு மனப்பான்மைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. இது மிகக் கொடு மையான விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் பல சந்தர்ப்பங்களில் நான் இதை எடுத்துக் கூறும்போது தங்க ளுக்குத் தாழ்வு மனப்பான்மை எதுவும் இல்லை என்ற தோர ணையில் அவர்கள் பல வாதங்களை முன் வைப்பதை நான் கண்டிருக்கிறேன். அந்த வாதங்களின் சாராசம்களை நான் ஆராய்ந்து பார்த்த போது அவர்கள் தாழ்வு மனப்பான்மை நோய் கொண்டவர்கள் மட்டுமல்ல, தாழ்வுமனப்பான்மையை மறுக்கக்கூடிய நோயும் கொண்டவர்கள்; ஆக இரண்டு நோய்கள் கொண்டவர்கள் என்ற முடிவுக்கு நான் வர முடிந்தது.
ஒரு இனம் ஏதோ ஒரு காலகட்டத்தில் தாழ்வு மனப்பான்மை க்கு ஆட்படுகிறது என்பது மிக மோசமான, அருவருக்கத் தகுந்த, அல்லது வெட்கப்பட தகுந்த ஒரு விஷயமல்ல. ஆனால் ஸ்தி யைப் பற்றி - நாம் இருக்கும் நிலையைப்பற்றி - உணராமல் இருப்பது, தன்போதம் இல்லாமல் இருப்பது, சுயபோதம், சுய அறிவு இல்லாமல் இருப்பது, சுய கணிப்பு இல்லாமல் இருப்பது என்பது மிக மோசமான விஷயம். இதற்கான காரணங்கள் இந்த இனத்திற்கு - மிக செழுமையான பாரம்பரியம் கொண்ட இந்த இனத்திற்கு, தொல்காப்பியத்தைத் தோற்றுவித்த இந்த இனத்திற்கு அல்லது வள்ளுவர், கம்பன், பாரதி போன்ற மிகப் பெரிய கவிஞர்கள் வாழ்ந்த இந்த இனத்திற்கு, சிற்பக் கலையில் மிகுந்த வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு, கட்டிடக் கலையில் மிக வல்லமை கொண்ட இந்த இனத்திற்கு ஒரு காலத்தில் கடல்மீது மிகுந்த ஆட்சி கொண்ட இந்த இனத்திற்கு - ஒரு மொழியை இரண்டாயிரம் வருடங்களாக செம்மையாகத் தக்க வைத்துக் கொண்டு, இன்று தோன்றும் கருத்துக்களைக்கூடத் தெளிளத் தெளிவாக சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு மொழியைக் காப்பாற்றி வரும் ஒரு இனத்திற்கு - ஏன் இந்தத் தாழ்வு மனப்பான்மை ஏன் 200 வருடங்களாக ஏற்பட்டது என்பதை எனக்குச் சொல்ல தெரியவில்லை. அதைப்பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
கேள்வி :மு.வ. ஒரு படைப்பாளி இல்லை என்றீர்கள் ? அதற்குக் காரணம் கூற முடியுமா ? அப்படியென்றால் ஒரு படைப் பாளிக்கு இருக்க வேண்டிய தகுதிகளை மதிப்பீடு செய்யுங்களேன் . . . ?
பதில் :இதற்கு முன்னால் இல்லாமல் இருக்கக்கூடிய ஒன்றைச் செய்து காட்டக் கூடியது தான் படைப்பு. அது தான் அதன் அடிப்படையான பொருள். இவர் ஒரு நாவல் எழுதி இருக்கிறார். நாவல் என்றால் அது முற்றிலும் புதுமையானதாக இருக்க வேண்டும். நம் மொழியில் இருக்கக்கூடிய ஒன்றையோ பிற மொழிகளில் இருக்கக்கூடிய ஒன்றையோ நகல் செய்ததாக இருக்கக்கூடாது. இந்த படைப்பு ஒருவன் வாழ்க்கையை சுயமாக எதிர் கொள்ளுவதன் மூலம் - அந்த எதிர்கொள்ளு தலிருந்து பெறக்கூடிய அனுபவங்களைச் சார்ந்து - அந்த அனுப வங்களின் சாராம்சம் என்ன என்ற agonyியிலிருந்து, வேதனையிலிருந்து - படைப்பு தோன்றுகிறது.
மு.வ. அவருடைய நாவல்களில் தமிழ்ச் சமுதாயம் அவருக்கு முன் அறிந்திராத எந்த அனுபவத்தையோ அல்லது கருத்து க்களையோ முன் வைக்கவில்லை என்று கருதுகிறேன். அவர் கூறிய கருத்துக்கள் காலம் காலமாக தமிழ் சமுதாயத்தைச் சேர்ந்த அறிஞர்கள் கூறிய - அதிகமும் வள்ளுவர் கூறிய - கருத்துக்களே ஆகும். இந்தக் கருத்துக்களின் கூட்டுத் தொகுப்பு ஒரு படைப்பாகாது. படைப்பும் சமூக இயல் சார்ந்த நூல்களும் அடிப்படையில் வேறானவை. திருக்குறள் ஒரு நாவல் அல்ல. காரணம் அது வாழ்க்கையைப் பற்றி ஒரு கவிஞர் கண்டடைந்த முடிவான கருத்துக்களைக் கூறுகிறது. வாழ்க்கையின் அனுபவ ங்களைப் பற்றியோ அந்த அனுபவங்களி லிருந்து இந்தக் கருத்து நிலைக்கு வந்து சேர்ந்த பயணங்களைப் பற்றியோ அந்த நூலில் எந்தத் தடயமும் இல்லை.
ஆக, இரண்டு விதமான நூல்கள் இருக்கின்றன. ஒன்று படைப்பு சார்ந்த நூல்கள். மற்றொன்று ஒரு துறை சார்ந்த - விஞ்ஞானம் அல்லது சட்டம் அல்லது மதம் அல்லது அறவியல் போன்ற துறை சார்ந்த - நூல்கள். இவற்றிற்கு அடிப்படையான வேற்றுமை: ஒன்று அனுபவம் சார்ந்து இயங்குகிறது. அதில் முற்றான முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படவில்லை. வாழ்க்கையைப் பற்றிய கவனங்கள் கொண்டு வரப்படுகின்றன. வாழ்க்கை சார்ந்த மிக மேலான அனுபவங்கள் தேக்கப்படுகின்றன. மற்றொன்றில் முடிவான கருத்துக்கள் வற்புறுத்தப்படுகின்றன. இந்த முடிவான கருத்துக்களை வற்புறுத்திய ஆசிரியராகத்தான் மு.வ.வை எடுத்துக் கொள்கிறேன். மாறாக வாழ்க்கையைச் சார்ந்த அனுபவங்களை அவர் முன் வைத்தார் என்று என்னால் கூறமுடியவில்லை. அதனால் ஒரு படைப்பாளியாக அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கேள்வி :இன்றைய கலாச்சார வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக எதைச் சொல்ல முடியும் ?
பதில் :முக்கியமான காரணம் தமிழ் நாட்டில் போலிகளுக்குக் கிடைக்கக் கூடிய அங்கீகாரம் என்று சொல்லலாம். ஒரு சமுதாயத்தில் எல்லா தரத்தைச் சார்ந்த மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மிக உயர்ந்த தரத்தைச் சார்ந்த மக்கள் மட்டும் வாழக்கூடிய சமுதாயம் என்று எதுவுமே இல்லை. செயல்பாடுகள் என்று எடுத்துக் கொண்டால் பல்வேறு தரத்தைச் சார்ந்த செயல்பாடுகள் ஒவ்வொரு சமூகத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கும். மிக உயர்வானதும் இருக்கும்; நடுத்தரமானதும் இருக்கும். மிகக் கீழானதும் இருக்கும். ஆனால் ஒரு விவேகமான சமூகம் உயர்வான செயல்பாடுகளை ஏற்றுக் கொள்கிறது. அதைப் போற்றுகிறது. பாராட்டுகிறது. இரண்டாம் பட்சமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மூன்றாம் பட்சமான அல்லது முப்பதாம் பட்சமான செயல்பாடுகளைக் கண்டிக்கிறது. இதன் மூலம் மதிப்பீடுகளை ஒரு விவேகமான சமூகம் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. எனவே இந்தச் செயல்பாடுகள் இருப்பது வீழ்ச்சிக்கு காரணம் அல்ல. தரக்குறைவான செயல்பாடுகள் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. தரக்குறைவான காரியத்துக்கு நாம் கொடுக்கக் கூடிய சமூக அங்கீகாரம் சமூக மதிப்பு வீழ்ச்சியினுடைய அறிகுறி என்று நான் கருதுகிறேன்.
மூன்றாம்தர எழுத்தாளரை முதல் தரமான எழுத்தாளராக ஒரு சமூகம் கருதுமென்றால், பல்கலைக்கழகம் கருதுமென்றால், அறிவாளி வர்க்கங்கள் கருதுமென்றால், அரசாங்கம் கருதுமென்றால், அரசியல்வாதிகள் கருதுவார்கள் என்றால் அந்த சமூகம் விவேகமான மதிப்பீடுகளை, அளவுகோல்களை இழந்து விட்டது என்றுதான் அர்த்தம். மிகச் சிறந்த நடிகர்கள் இருக்கக்கூடிய ஒரு சமூகத்தில் மிக மோசமான நடிகர்களை மிகச் சிறந்த நடிகர்களாக ஒரு சமூகம் ஏற்றுக் கொள்ளும் என்றால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த அறிவாளிகளும் ஏற்றுக் கொள்வார்கள் என்றால், நடிப்பைச் சார்ந்த அளவுகோல் முறிந்து போகிறது என்று அர்த்தம். இதுபோன்ற ஒரு வீழ்ச்சி தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் சார்ந்தும் இலக்கியம் சார்ந்தும் பிற துறைகள் சார்ந்தும் மூன்றாம் தரமானவற்றை முதல் பட்சமாக முன் வைக்கும் காரியம், முதல் பட்சமானவற்றை முற்றாக நிராகரித்து விடும். இந்த இரண்டு காரியத்தையும் இந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருகிறது. ஆகவே இது ஒரு பெரிய வீழ்ச்சி என்று நம்புகிறேன்.
கேள்வி :இந்த நூற்றாண்டில் தமிழில் மிகச்சிறந்த கலைஞர்கள் யாவர் ?
பதில் :இந்த நூற்றாண்டில் மிகச் சிறந்த கலைஞர்களாக நான் இருவரை மதிக்கிறேன். ஒருவர் பாரதி. மற்றொருவர் புதுமைப்பித்தன். இவர்களின் புத்தகங்களையேனும் மாணவர்கள் முழுமையாகப் படிக்க வேண்டும். இந்த அனுபவங்களுக்கு அவர்கள் ஆளானால் அதுவே பெரிய விஷயம். ஒரு முக்கியமான விஷயம். இதை ஆரம்பமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்டுள்ள முக்கியமான மற்ற புத்தகங்களைப் படிக்கலாம். சிறந்த புத்தகங்கள் ஏராளமாகத் தமிழில் இருக்கின்றன. அவற்றை நீங்கள் படித்துப் பார்ப்பது அவசியமென்று நம்புகிறேன். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நூறு புத்தகங்களையேனும் குறைந்தபட்சம் படிக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு மாணவனுக்கும் ஒவ்வொரு மாணவிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகங்களை நீங்கள் சுலபமாகப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பான்மையான புத்தகங்கள் உங்கள் நூல் நிலையங்களில் இருக்கக் கூடியவைதான். எந்தவிதமான கஷ்டத்துக்கும் நம்மை ஆட்படுத்தாமல் மிகப் பெரிய செல்வங்கள் நம்மை வந்தடையக்கூடிய ஒரு வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். அந்த வாய்ப்பை நாம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி :படைப்பாளிகளில் இரண்டாந்தர படைப்பாளியை எந்த அளவுகோலை வைத்து மதிப்பிடுகிறீர்கள் ?
பதில் : இப்போது பல்வேறு வகைப்பட்ட அளவுகோல்கள் இருக்கின்றன. முக்கியமாக ஒரு அளவுகோல் ஒரு படைப்புக்கும் காலத்துக்குமான உறவு. ஒரு எழுத்தாளன் அவனுடைய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளன் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நவீன மனிதனாக இருக்க வேண்டும். அவனது உடல் இன்று வாழ்கிறது என்ற காரணத்திற்காக அவனை இந்த நூற்றாண்டு மனிதனாகக் கருதி, கருத்துலகம் சார்ந்து, அனுபவ உலகம் சார்ந்து கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
இன்று வந்து கொண்டிருக்கிற பெரும்பான்மையான புத்தகங்களும் படைப்புக்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருக்க வேண்டியவை. ஆக ஒரு படைப்பாளிக்கும் இந்த காலத்திற்கும் இருக்கக்கூடிய உறவு நிலை காலத்தால் அவன் பெற்ற பாதிப்புகள், அந்தப் பாதிப்புகள் மூலம் தன்னை நவீன மனிதனாக அவன் உருவாக்கி வைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிறைவு, இவைதான் படைப்புக்கு அடிப்படையான கூறுகள் என்று நினைக்கிறேன். இதைச் சார்ந்து பல்வேறுபட்ட கூறுகள் இருக்கின்றன. மொழியை அவன் எப்படிப் பயன்படுத்துகிறான் ? சிக்கனமாகப் பயன்படுத்துகிறானா ? மொழியை விரயம் செய்கிறானா ? மிகப்பெரிய அனுபவங்களை அவனால் அறிய முடிகிறதா ? பல்வேறுபட்ட அர்த்தப் பரிமாணங்களை அந்த படைப்புக்களால் தர முடிகிறதா ? உண்மையென்று முற்றாக நம்பக்கூடிய, நம்பச் செய்துவிடக்கூடிய ஒரு கற்பனை வளத்தை அவன் கொண்டிருக்கிறானா ? மீண்டும் மீண்டும் அந்தப் படைப்பை அணுக வேண்டும் என்ற வற்புறுத்தல் அந்த படைப்பு நமக்குத் தருகிறதா ? நம்முடைய கவனத்தை முழுமையாக அந்தப் படைப்புக் கேட்டு நிற்கிறதா ? அல்லது அரைத் தூக்கத்திலேயே அந்தப் படைப்பைப் படிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறதா ? என்பது போன்ற பல்வேறுபட்ட அளவுகளை வைத்து உயர்ந்த படைப்புக்கும் இரண்டாம் பட்சப் படைப்புக்குமான வேற்றுமைகளைக் கண்டு கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
[நாகர்கோவில் தெ. தி. இந்துக் கல்லூரி முதுகலை வணிக இயல் துறை பேரவைத் தொடக்க விழாவில் பேசியது - 28.10.1988]
(இவை என் உரைகள் நூலிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்)
நன்றி : இவை என் உரைகள்-சுந்தர ராமசாமி-காலச்சுவடு பதிப்பகம்

Monday, October 8, 2018

கவிதையியல் அல்லது அழகியல் செயல்பாடு

ஒரு மொழிதலில் இருக்கும் ஆறு அம்சங்களில் மேலாதிக்கம் செலுத்தும் ஒன்று வேறுபட்ட மொழியியல் செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக யாக்கப்சனின் மொழியியல் தகவல்தொடர்பு மாதிரியில் விளக்கப்படுகிறது. மொழிதல்களில் கவிதையியல் செயல்பாடு மேலாதிக்கம் செலுத்தினால்(உதாரணமாக இலக்கியப் பிரதிகள்), மொழி அதிகம் ‘இருண்மை’ மிக்கதாகவும் குறிப்பான் மற்றும் ஊடகத்தை(மற்றும் அதன் பொருளாம்சாம் உட்பட) அல்லது வடிவம், பாணி அல்லது சங்கேதம் போன்றவற்றில் குறைந்தபட்சம் குறிப்பீடு, உள்ளடக்கம், ‘தகவல்’ அல்லது குறிப்பால் உணர்த்தும் பொருள் போன்றவற்றை வலியறுத்துவதாகவும் மரபுரீதியான உரையாக இல்லாமலும் இருக்கும்.
அது போன்ற பிரதிகள் வெளிப்பாட்டின் வடிவம் மற்றும் வினையை முன்வைப்பதாகவும் ‘இயற்கையான’ அல்லது ‘ஊடுருவத்தக்க’ உறவாக குறிப்பான் மற்றும் அதன் குறிப்புப் பொருளைக் குறைத்துக் காட்டுவதாகவும் இருக்கும். இந்தப் பொருளில், கவிதையியல் செயல்பாடு மேலாதிக்கம் செலுத்தும் பிரதி சுய-குறிப்புப் பொருளாக உள்ளது: வடிவமே உள்ளடக்கம் மற்றும் ‘ஊடகமே(அல்லது மொழியே) அதன் தகவல்’.
யாக்கப்சனின் மாதிரியை முன் வைத்து பின்னர் வளர்க்கப்பட்ட மாதிரிகளில் கவிதையியல் செயல்பாடு முறையான செயல்பாடாகக் கொள்ளப்பட்டது. கவிதையியல் செயல்பாடு ஆகுபெயராக அல்லாமல் அதிமான உருவகமாகவும் புறப்பொருளைச் சுட்டாமல் அதிகமான அகப்பொருளைக் கொண்டும் இருக்கும்.
பல்பொருள்:பிரதியியல் நியமனவாதத்தை(உதாரணமாக பின்அமைப்பியல்வாதிகள்) மறுப்பவர்கள், பிரதிகளின் ‘பல்பொருள்’ இயல்பை வலியுறுத்துகிறார்கள்-பன்மை பொருள்களைக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.
பல்குரல்கள்:ஒற்றைக் குரலுக்கு மாற்றாக ஒரு பிரதியின் கதையாடலில் இருக்கும் பல்குரல்கள் ஒரு விருப்பப்பட்ட வாசிப்பு அல்லாமல் பல்வேறு வகைப்பட்ட வாசிப்புகளை ஊக்குவிக்கின்றன.
பின்நவீனத்துவம்:இந்த வழுக்கும் சொல், நவீன காலத்திற்குப் பிந்தையதாகவும் பின்அமைப்பியலுடன் இயைந்து வந்த தத்துவமாகவும், கட்டுடைப்பு, முற்போக்கு ஐயமுறு வாதம், உறவுவாதம் போன்றவற்றுடன் முரண் அடிப்படை நிலைப்பாட்டைப் பகிர்வதுமான ஒன்றாகவே கொள்ளப்படுகிறது. விளக்கத்தை எதிர்க்கும் விளக்கமாகவே பின்நவீனத்துவம் இருப்பது அவலம்.
ஓர் ஒற்றை ‘கோட்பாட்டை’க் கொண்டதாக பின்நவீனத்துவத்தைக் கூறமுடியாது(குறித்தலுக்கு வெளியே எந்த ஓர் உண்மையும் இருப்பதாக எந்த ஒரு பின்நவீனத்துவக் கோட்பாட்டாளரும் கூறவில்லை). ‘பின்நவீனத்துவ’ அழகியல் ‘இயக்கம்’ எதுவும் இல்லை. பின்நவீனத்துவம் அதிகமான முறிவுகளைக் கொண்டதாகவும் பன்முகம் கொண்டதாகவும் உள்ளதாகும். இருந்தாலும், பின்நவீனத்துவ பிரதிகள் மற்றும் நடைமுறைகளின் பண்பில் உள்ள அம்சங்கள் அவலம் மற்றும் அதிகப்படியான உட்பிரதியியலைப் பிரதிபலிப்பவையாக இருப்பதாகும்-பிரதிகளுக்கு, வகைமைகளுக்கு, ஊடகங்களுக்கு இடையே உள்ள எல்லைகள் மங்கி பிரதியின் கட்டமைப்பு மற்றும் கட்டமைக்கப்பட்டச் செயல்பாடு மீது மட்டும் கவனத்தைக் குவிப்பவையாக உள்ளன.
வெகுஜன கலாச்சாரத்தையும் ‘தீய ரசனையை’ உள்ளிழுப்பதாகவும் இருப்பதால் நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவம் வேறுபடுகிறது. லியோடார்ட் 1979ல் எழுதிய ‘பின்நவீனத்துவ நிலை’ என்ற நூலிலிருந்து அதன் காலம் கணக்கிடப்படுவதாகவும் சில சமயங்களில் தோன்றுகிறது. அதிலிருந்து ‘மீமெய் கதையாடல்களின் மீதான அவநம்பிக்கையை’க் காட்டுவதாக பின்நவீனத்துவ கோட்பாடு கொள்ளப்படுகிறது.

Mubeen Sadhika