Search This Blog

Showing posts with label Tamil Bakthi Songs. Show all posts
Showing posts with label Tamil Bakthi Songs. Show all posts

Sunday, October 2, 2016

நவராத்திரி சகலகலாவல்லி மாலை


1)வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

2)நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.


3)அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.


4)தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.


5)பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே.


6)பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!


7)பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!


8)சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
!

9)சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாளே! சகலகலா வல்லியே!


10)மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலா வல்லியே!



மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்...



நவராத்திரியின் 9 நாட்களிலும் அம்பிகையின் சக்தி பிரவாகமாய் பரவி இருக்க அதனை நம்முள் பெற்றுக் கொள்ளும் பூஜையாகக் கொண்டாடப்படுகின்றது.
நவராத்திரிக்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
நவராத்திரி சரிதத்தினை முனிவர் நாரதர் சொல்லி ஸ்ரீ ராமபிரான் கடை பிடித்து சண்டிஹோமம் செய்து அம்பிகையின் அருளை பெற்று ராவணனை யுத்தத்தில் வென்றதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
துர்க்காதேவி மகிஷாசுரனுடன் (அரக்கன்) 9 நாட்கள் போரிட்டு வென்று மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரினை பெற்றதாக வரலாற்று கூற்றும் வழிபாடும் உள்ளது.
நவராத்திரியின் 9 நாட்களிலும் அம்பிகையின் சக்தி பிரவாகமாய் பரவி இருக்க அதனை நம்முள் பெற்றுக் கொள்ளும் பூஜையாகக் கொண்டாடப்படுகின்றது. மாயையின் பிடியில் சிக்கும் நாம் அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும் விரத பூஜையாக நவராத்திரி அமைந்துள்ளது.

9 நாளும் ஏதோ ஒரு முறைப்படி விரதம் இருப்பவர்களும் உண்டு. பூஜைகளுக்கு விதிமுறைகளும் உண்டு
பூஜை செய்பவர் சந்தனம், குங்குமத்தினை வலது கை மோதிர விரலால் மட்டுமே இட்டுக் கொள்ள வேண்டும்.
வாசனை மிகுந்த மலர்களால் பூஜிக்க வேண்டும். பூக்களை நாம் முகர்ந்து பார்க்கக் கூடாது.
மல்லிகை, ஜாதி மல்லி, செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை, வெள்ளை மற்றும் சிகப்பு அரளி, பவழ மல்லி, ரோஜா, மரிக்கொழுந்து, கதிர் பச்சை போன்ற மலர்களை மிக சுத்தமானதாக பயன்படுத்த வேண்டும்.
பூக்களின் தண்டு பகுதி அம்பாள் பக்கம் இருக்க வேண்டும்.
படம், விக்ரகங்களில் அணிவிக்கப்படும் பூ மாலைகள் கண், காது போன்ற பகுதிகளை மறைக்காது இருக்க வேண்டும். உறுத்தாமலும் இருக்க வேண்டும்.
தாழம் பூவினை முட்கள் இல்லாது வெட்டி உபயோகிக்க வேண்டும். தாமரை போன்ற பெரிய பூக்களை 1, 9 அதன் விரிவாக்கம் என்ற முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
பூக்களை அர்ச்சனையின்போது அம்பிகை இருப்பதனை மனதால் உணர்ந்து பய பக்தியுடன் நிதானமாய் பாதத்தில் சேர்க்க வேண்டும். குச்சி, காம்பு, காய்ந்த பூ, மண் இவை தவறி கூட இருந்து விடாமல் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
நறுமணமான ஊதுவத்தி, தூப சாம்பிராணிகளை பயன் படுத்துங்கள். வசதிக்கேற்ப செய்தாலும் போதும். ஆனால் தரமானதாக இருக்கட்டும்.
ஊதுவத்தியினை ஆள்காட்டி, கட்டை விரல் நடுவே பிடித்து இடமிருந்து வலமாக மூன்று முறை முழு வட்டமாக சுற்றி பூஜிக்க வேண்டும்.
ஆரத்தி காண்பிப்பது நெய் தீபத்திலும், ஏகமுகமாகவும் பஞ்சமுகமாகவும் காண்பிப்பது சிறப்பு. ஆரத்தியின்போது இரண்டு வரிகளாவது அம்பிகையைப் பற்றி பாட வேண்டும். அம்பிகை காணப்பிரியை.
வீணை போன்ற அனைத்து இசை வாத்தியங்களுமே அம்பிகைக்கு பிரியமானவைதான். அதனால்தான் நவராத்திரி காலங்களில் பாட்டு, நடனம், வாத்திய கச்சேரிகள் நடைபெறுகின்றன.
அம்பாளுக்கு புடவை, சட்டை துணி, வளையல், குங்குமம், வெற்றிலை, பாக்கு என பல சீர் வரிசைகள் வைத்து பல வகை உபசாரங்களை செய்து வழிபடுவது மிக விசேஷம்.
வீட்டில் பூஜை செய்யும்போது 10 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை அழைத்து அவர்களை கோலமிட்ட மனை மீது உட்கார வைக்க வேண்டும். காலில் நலங்கிட்டு, சந்தன, குங்குமம் கொடுத்து, தலைக்கு பூ வைத்து அக்குழந்தைக்கு பிடித்த சாப்பாட்டினை இனிப்புகளோடு கொடுக்க வேண்டும். பின் தாம்பூலம் கொடுத்து சக்திக்கு ஏற்ப பாவாடை, சட்டை என்று கொடுப்பது அம்பிகையின் ‘பாலா’ எனும் சக்திமிகுந்த ரூபத்தினை வழிபடுவதாகும்.
நவராத்திரி நாட்களில் எவ்வாறெல்லாம் எளிதாகவும், சக்தியாகவும் அம்பிகையை வழிபடலாம் என்று பார்க்கலாம்.

நாள் – 1, திதி – பிரதமை :
அம்பிகை: மகேஸ்வரி
பூ: மல்லிகை
நைவேத்தியம் : வெண் பொங்கல்
கோலம்: அரிசி மாவில் புள்ளி வைத்த கோலம்
ராகம்: தோடி
ஸ்லோகம்: ஓம் ஸ்வேத வர்ணாயவித்மஹே
சூல ஹஸதாய தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
நாள் – 2, திதி – துவதியை :
தேவி: கவுமாரி
பூ: செவ்வரளி
நைவேத்தியம் : புளியோதரை
கோலம்: ஊற வைத்த பச்சரிசியினை நைய அரைத்து இழை கோலம்
ராகம்: கல்யாணி
ஸ்லோகம்: ஓம் சிகி வாஹனாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோத யாத்
நாள் – 3, திதி – திரிதியை :
தேவி: வாராஹி
பூ: சம்பங்கி
நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்
கோலம்: மலர் கோலம்
ராகம்: காம்போதி
ஸ்லோகம்: ஓம் மஹிஷத்வஜாய தீமஹி
தண்ட ஹஸ்தாய வித்மஹே
தன்னோ வாராஹி பரசோதயாத்
நாள் – 4, திரி – சதுர்த்தி :
தேவி: லட்சுமி
பூ: ஜாதி மல்லி
நைவேத்தியம் : கதம்பசாதம்
கோலம்: மஞ்சள் கலந்த அரிசி கொண்டு படிகட்டு கோலம்
ராகம்: பைரவி
ஸ்லோகம்: பத்ம வாசின்யைச் வித்மஹே
பதமலோசனி ஸ தீமஹி
தன்னோ லட்சுமி ப்ரசோதயாத்.
நாள் – 5, திதி – பஞ்சமி :
தேவி: வைஷ்ணவி
பூ: பாரிஜாதம், முல்லை.
நைவேத்தியம் : தயிர் சாதம்
கோலம்: கடலை மாவில் பறவை கோலம்
ராகம்: புன் வைராளி, பஞ்சமவர்ண கீர்த்தனை
ஸ்லோகம்: ஓம் ஸ்யாமவர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ் தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி பிரசோதயாத்
நாள் – 6, திதி – சஷ்டி :
தேவி: இந்திராணி
பூ: செம்பருத்தி
நைவேத்தியம் : தேங்காய் சாதம்
கோலம்: அம்பிகையின் பெயரினை கடலை மாவில் எழுதுங்கள்.
ராகம்: நீலாம்பரி
ஸ்லோகம்: ஓம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ் தாய தீமஹி
தந்நோ இந்த்ரி ப்ரசோதயாத்.
நாள் – 7, திதி – சப்தமி :
தேவி: சரஸ்வதி
பூ: மல்லிகை, முல்லை
நைவேத்தியம் : எலுமிச்சை சாதம்
கோலம்: வாசனைப் பூக்களால் கோலமிடுங்கள்
ராகம்: பைரவி
ஸ்லோகம்: ஓம் வாக் தேவ்யை வித்மஹே
விரிஞ்சி பத்நைச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்
நாள் – 8, திதி – அஷ்டமி :
தேவி: துர்கா
பூ: ரோஜா
நைவேத்தியம் : பாயசம்
கோலம்: தாமரைப் பூ கோலம்
ராகம்: புன்னாகவராளி
ஸ்லோகம்: ஓம் மஹிஷ மர்தின்யை வித்மஹே
துர்கா தேவ்யை தீமஹி
தன்னோ தேவி பிரசோதயாத்
நாள் – 9, திதி – நவமி :
தேவி: சாமுண்டி
பூ: தாமரை
நைவேத்தியம் : அக்காரவடிசல்
கோலம்: வாசனை பொடிகளால் ஆயுதம் போல் (சூலம்)
ராகம்: வசந்த ராகம்
ஸ்லோகம்: ஓம் கிருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்
விஜயதசமி – திதி – தசமி :
தேவி: வித்யா
பூ: மல்லிகை, ரோஜா
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், இனிப்புகள்.
ஸ்லோகம்: ஓம் விஜய தேவ்யை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
பிரபஞ்ச சக்தி, பிரபஞ்சத்தினை தாண்டிய, கண்ணுக்குத் தெரியாத மகா ஆதி சக்தியினை எப்படி வழிபட்டாலும் உயர்வு தேடி வரும்.

Tuesday, September 20, 2016

~தமிழில் பாடுகிறார்கள்ஜேர்மன் பிரஜைகள்~ "நீயே நிரந்தரம்..."

~தமிழில் பாடுகிறார்கள்ஜேர்மன் பிரஜைகள்~
சொர்ணலதா அவர்கள் பாடிய இனிய பாடலான
"நீயே நிரந்தரம்..." என்ற பாடலை ஜேர்மனைச் சேர்ந்தவர்களான Gunda Menrad & Annabelle Lindner ஆகியோர் பாடுகின்றனர்.

Wednesday, August 24, 2016