Search This Blog

Showing posts with label Islam. Show all posts
Showing posts with label Islam. Show all posts

Saturday, March 21, 2020

மூஸா நபியும் ஹிள்ர் நபியும் சந்தித்தல்....



இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
(அல்குர்ஆன் : 18:60)
அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.
(அல்குர்ஆன் : 18:61)
அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:62)
அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார்.
(அல்குர்ஆன் : 18:63)
(அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
(அல்குர்ஆன் : 18:64)
(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
(அல்குர்ஆன் : 18:65)
“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
(அல்குர்ஆன் : 18:66)
(அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 18:67)
“(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)
(அல்குர்ஆன் : 18:68)
(அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.
(அல்குர்ஆன் : 18:69)
(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.
(அல்குர்ஆன் : 18:70)
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:71)
(அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.
(அல்குர்ஆன் : 18:72)
“நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:73)
பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:74)
(அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 18:75)
இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 18:76)
பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:77)
“இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் : 18:78)
“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
(அல்குர்ஆன் : 18:79)
“(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
(அல்குர்ஆன் : 18:80)
“இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
(அல்குர்ஆன் : 18:81)
“இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார். 
(அல்குர்ஆன் : 18:82)
(ஹிள்ர்(அலை) அவர்களைச் சந்தித்த) மூஸா அலை அவர்கள், இஸ்ராவேலர்களின் நபியாக அனுப்பப்பட்ட மூஸா அல்லர்; அவர் வேறு மூஸா' என்று நவ்ஃபுல் பக்காலி என்பவர் கருதிக் கொண்டிருக்கிறாரே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'இறைவனின் பகைவராகிய அவர் பொய் கூறுகிறார். எங்களுக்கு உபய்யுபின் கஅபு(ரலி), நபி(ஸல்) கூறினார்கள் என அறிவித்தாவது: (இறைவனின்) தூதராகிய மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது 'மக்களில் பேரறிஞர் யார்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, 'இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்' என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் 'என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?' என்று கேட்டார்கள். 'கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக! அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்' என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒரு மீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா(அலை) தம் பணியாளரிடம், 'இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா?' என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும் வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் 'பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விடடேன்' என்றார். '(அட!) அது தானே நாம் தேடி வந்த இடம்' என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின்தொடர்ந்தவர்களாய் (வந்தவழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது ஹிள்ர் அவர்கள் 'உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது?' என்று கேட்டார்கள். 'நான்தான் மூஸா' என்றார்கள். 'இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா?' என ஹிள்ர் அவர்கள் கேட்டார்கள். அதற்கு 'ஆம்!' என்று கூறினார்கள். 'உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?' என்று கேட்டார்கள். ஹிள்ர் (அலை) அவர்கள், 'நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன்' என்று கூறினார். அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்!' என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள்.
ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், 'மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும்' என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா(அலை) அவர்கள் 'நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?' என்று கேட்டார்கள். 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திரும்) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் 'யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?' என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார்.
மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா(அலை) அவர்கள் 'நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!' என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், 'இதுதான் எனக்கும் உமக்கிடையே பிரிவினையாகும்' என்று கூறிவிட்டார்கள்.'
(இச்சம்பவத்தை) நபி(ஸல்) அவர்கள் (சொல்லிவிட்டு) 'மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!' என்று கூறினார்கள்' என ஸயீது இப்னு ஜுபைர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 122.
இனி அவர் ஹிள்ர் நபியுடன் பயணிக்க முடியாது. அவசரப்பட்டு அவர்கேட்ட மூன்று
சம்பவங்கள் குறித்தும் ஹிள்ர் நபிவிளக்கம் கூற ஆரம்பித்தார்.

“நான் நாம் ஏறிவந்த கப்பலில் துளையிட்டேன். அது அந்தக்கப்பல் காரர்களுக்கு அநியாயம் செய்வதற்காக செய்தது அல்ல. இவர்கள் போகும்வழியில் ஒரு அநியாயக்கார அரசன் இருக்கிறான். எந்தக் குறையும் இல்லாத கப்பலைக் கண்டால் அதை அவன்அபகரித்துக்கொள்வான். நான் கப்பலில் துளையிட்டதால் அவன் அபகரிக்கமாட்டான் . இந்தக்கப்பல் கடல் தொழில்செய்யும் ஏழைக்குரியது. எனவே கப்பல்  அபகரிக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் கப்பலி துளையிட்டேன்” என்று கூறினார்.
ஆம் “கண்ணால்காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதேமெய்” என்பார்கள் அல்லவா? ஹிள்ர் நபியின் செயலைப்பார்த்தால் கப்பல்காரருக்கு அநியாயம் செய்வதுபோல் தான் தெரிந்தது. ஆனால் அவர் செய்ததது கப்பல் சொந்தக்காரருக்கு உதவிதான். இப்படித்தான் உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் உங்களுக்காக நன்மை செய்யும் போது உங்களுக்கு அது கெடுதியாகத் தெரியலாம்.
அடுத்து ஒரு சிறுவனை ஹிள்ர் நபி கொலை செய்தார் அல்லவா? இது ஒரு கொடிய செயலாகத்தான் தெரிந்தது. ஆனால் அதுபற்றி அவர் கூறும்போது “அந்த சிறுவனின் தாய் தந்தையர் இருவரும் நல்லவர்கள். இந்த சிறுவர் பெரியவனானால் அவர்களது பெற்றோருக்கு அநியாயம் செய்வான். அவர்களை இறைநிராகரிப்பில் ஈடுபடுமாறு நிர்பந்திப்பான். எனவே இவனைக் கொன்றுவிட்டு அவர்களுக்கு பெற்றோரை மதிக்கக்கூடியநல்ல குழந்தையை வழங்க அல்லாஹ் நாடினான். எனவேதான் அந்த சிறுவனைக்கொன்றேன்” என்றார். நாம் பெற்றோருடன் நல்ல முறையில் நடக்காவிட்டால் நமக்குப் பாதுகாப்பில்லை பார்த்தீர்களா?
“அடுத்து நான் சரி செய்த வீட்டுச்சுவர் இரண்டு அனாதை பிள்ளைகளுக்குறியது. அந்தப்பிள்ளைகளின் தந்தை ஸாலிஹானவராவார். அந்த சுவற்றில் இந்த அனாதைப்பிள்ளைகளுக்கான ஒரு புதையல் உண்டு. இப்போது இந்த சுவர் இடிந்து விழுந்தால் அந்த புதையலை யாரவது எடுத்துக்கொள்வார்கள். இப்போது அந்த அனாதைப்பிள்ளைகள் சிறுவர்களாக உள்ளனர். அவர்கள் பெரியவர்களாகி இந்தப்புதையலை எடுக்கவேண்டும். அதற்காகத்தான் உடைந்து விழ இருந்த சுவற்றை நான் சரி செய்தேன்” என்று விரிவாக விளக்கினார்கள். அத்துடன் இவற்றை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. அல்லாஹ்வின் அனுமதிப்படி தான் செய்தேன் என்று கூறினார்.
மூஸாநபி, “நான்தான் இப்போது உலகில் உள்ளஅறிவாளி” என்று கூறியதற்காக அல்லாஹ் கற்றுக்கொடுத்த பாடம் இது.
நாமும் ஆணவம் கொள்ளக்கூடாது! பெருமை கொள்ளக்கூடாது! என்னைவிட அறிந்தவர்கள் இருப்பார்கள் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். கல்விக்குக்கட்டுப்பாடு அவசியம். ஹிள்ர் நபி மூஸா நபிக்குக்கட்டுப்பாடு போட்டார்கள் அல்லவா? ஹிள்ர் நபியை விட மூஸா நபி அந்தஸ்த்திலும் பொறுப்பிலும் கூடியவராவார்.
இருப்பினும் அவரிடம் இவர் கற்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். எனவே அறிவுயாரிடம் இருந்தாலும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இது போன்ற நல்ல படிப் பினைகளைத்தரும் இச்சம்பவத்தை திருக்குர்ஆனில்அத்தியாயத்தில் 60-82 வரையுள்ள வசனங்களில் காணலாம்.


Saturday, May 18, 2019

ராபியா அல் அதாவிய்யா(Rabia Al-Adawiyya) பெண் சூஃபி ஞானி

ராபியா அல் அதாவிய்யா(Rabia Al-Adawiyya) எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் சூஃபி ஞானி.பொது ஆண்டு 714-718 இற்கு இடையில் பிறந்து பொது ஆண்டு 801இல் மறைந்தார் என்கிறார்கள்.
ஒருமுறை ராபியா பஸ்ரா(ஈராக்) நகரின் வீதிகளில் ஒரு கையில் தீயெரியும் பானையுடனும் மறுகையில் நீர் நிறைந்த வாளியுடனும் ஓடிக்கொண்டிருந்தாராம்.
என்ன செய்கிறீர்கள் என்று அவரை பஸ்ராவாசிகள் கேட்டபோது,
நான் நரகத்தின் நெருப்பை அணைக்கவும், சொர்க்கத்தின் இன்பங்களை எரிக்கவும் விரும்புகிறேன்.அவை அல்லாஹ்வுக்கான பாதையை தடைசெய்கின்றன.
நான் நரகத்தின் தண்டனை குறித்த அச்சத்தினாலோ, சொர்க்கத்தின் இன்பங்கள் மீதான ஆசையினாலோ இறைவனை வழிபட விரும்பவில்லை.அல்லாஹ்வின் மீதான அன்பின் மிகுதியாலேயே அவனை வழிபட விரும்புகிறேன் என்றாராம்.
அவர் பிரார்த்தனை இப்படி இருந்தது,
"O Lord, if I worship You because of Fear of Hell,
then burn me in Hell;
If I worship You because I desire Paradise,
then exclude me from Paradise;
But if I worship You for Yourself alone,
then deny me not your Eternal Beauty.
இதை நான் இப்படி எழுதிக்கொள்கிறேன்.
'இறைவா,நான் நரகத்திற்கு அஞ்சி உன்னை வழிபட்டால் என்னை நரக நெருப்பில் இடு
சொர்க்கத்திற்கு ஆசைப்பட்டு வழிபட்டால்
என்னை அதிலிருந்து புறத்தாக்கி விடு
உனக்காக மட்டுமே உன்னை வழிபட்டால் உன் திகட்டாத பேரழகை மறைத்துவிடாதே'
இஸ்லாமிய போதகர் முகமது மறைந்து(பொது ஆண்டு 632) நூறு வருடங்களுக்குள் ராபியா பிறந்துவிட்டார்.
அவர் இஸ்லாத்திலிருந்து தனக்குரியதை உருவாக்கிக்கொண்டார்.
ஆனால் 1400 ஆண்டுகளுக்குப் பின்னரும் சிலர் சொர்க்கத்தின் பொருளை உணராமல் 72 நடமாடும் நித்திய பாலியல் பொருள்களுக்காக தாமும் செத்து மற்றவர்களையும் சாகடிக்கிறார்கள்.


Monday, March 25, 2019

ளுஹா தொழுகை... இதன் முக்கியத்துவம்


கண்மணி நாயகம்  அன்னவர்கள் கூறினார்கள்:
"யாரேனும் ஒருவர் பன்னிரண்டு ரக்அத்துகள் ளுஹா தொழுதால் அல்லாஹ் அவருக்காக சுவர்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான்"நூல் - திர்மிதி


கண்மணி நாயகம் அன்னவர்கள் கூறினார்கள்:
"சுவனபதியில் ஒரு நுழைவுவாயிலுக்கு ளுஹா என்று பெயர். ளுஹாத் தொழுகையினைத் தொடர்ந்து தொழுபவர்கள் இவ்வாயிலின் வழியாக நுழைந்து வருமாறு அழைக்கப்படுவார்கள்"
நூல் : தபரானி
கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:
"ளுஹாவின் இரண்டு ரக்அத்துகளை தொடர்ந்து தொழுபவரின் பாவங்கள் கடலின் நுரையளவு (அதிகமாக) இருப்பினும் அவை மன்னிக்கப்படும்.
நூல் : அபூதாவூத்
எப்போது தொழ வேண்டும்?
சூரியன் உதயமாகி ஒரு ஈட்டியின் அளவு உயர்ந்தது முதல் ளுஹர் தொழுகையின் நேரம் வரும் வரை ளுஹா தொழலாம். ஆனால் பகல் பொழுதின் நான்கில் ஒரு பகுதி (மூன்று மணிநேரம்) சென்றபின் தொழுவது சிறப்பானதாகும். சுமாராக காலை 9 மணி முதல் 11 மணிவரை என்று குறிப்பிடலாம்.
ளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்
நபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின் எண்ணிக்கைகள், அதுனுடைய ஆரம்ப நேரம், அதனுடைய முடிவு நேரம் என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம்.
ளுஹா தொழுகையின் ஆரம்ப நேரம்…
சூரியன் உதயமாகி பத்து நிமிடத்திற்கு பிறகிலிருந்து சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் உள்ள நேரம் வரை தொழலாம்.
ளுஹா என்றாலே முற்பகல் என்று பொருளாகும். குர்ஆனில் 93ம் அத்தியாயத்தில் முற்பகல் மீது சத்தியமாக என்று அல்லாஹ் கூறுகிறான். தமிழில் முற்பகல் என்று சொல்லும் போது காலை சூரியன் உதயமாகி நண்பகல் (12மணி வரை) உள்ள நேரத்திற்கு சொல்வதாகும்.

ளுஹா தொழுகையும், நபியவர்களும்…
குறிப்பிட்ட சில நபித் தோழர்கள் நபியவர்கள் ளுஹா தொழவில்லை என்று அறிவித்து இருந்தாலும், நபியவர்கள் ளுஹா தொழுகை தொழுததற்கான பல ஆதாரங்கள் மிகத் தெளிவாக உள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

ளுஹா தொழுகை எட்டு ரக்அத்துகள்…
‘மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு, நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றிருந்தபோது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது, ‘யாரவர்?’ எனக் கேட்டார்கள். ‘நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி’ என்றேன். உடனே, ‘உம்முஹானியே! வருக!’ என்றார்கள். நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும் ‘இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்’ என்று நான் கூறியபோது ‘உம்மு ஹானியே! நீ அடைக்கலம் அளித்திருப்பவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது’ என உம்மு ஹானி(ரலி) அறிவித்தார். (புகாரி 357,- 4292 முஸ்லிம் 562,- 563)

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை எட்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
ளுஹா நான்கு ரக்அத்துகள்…
“ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் நேரத்தில் நான்கு ரக்அத்கள் (ளுஹா) தொழுவார்கள்; அல்லாஹ் நாடிய அளவு கூடுதலாகவும் தொழுவார்கள். இதை முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 1297)

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை நான்கு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்துகள்…
“அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
‘ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு நோற்குமாறும். ‘ளுஹா’ நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும். உறங்குவதற்கு முன் வித்ருத் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் தோழர்(ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்!’ (புகாரி 1981)

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் ளுஹா தொழுகை இரண்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.
எனவே ளுஹா தொழுகையின் எண்ணிக்கை குறைந்தது இரண்டு ரக்அத்துகள், கூடியது எட்டு ரக்அத்துகள் தொழலாம் என்பதை நாம் புரியலாம். ஆகவே சுன்னது தானே என்று இந்த ளுஹா தொழுகை விடயத்தில் அலச்சியமாக இருந்து விடாமல், நாளாந்தம் தொடராக தொழக் கூடிய பழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
சுன்னத்தான, மற்றும் நபிலான வணக்கங்களின் மூலம் அல்லாஹ் நம்மை நெருங்குவதாக நபியவர்கள் உறுதிப் படுத்தியுள்ளார்கள். அல்லாஹ் மிக நன்கு அறிந்தவன்.

Wednesday, February 13, 2019

எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!!


Vijai Bala
வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.
மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில்இதற்கு அனுமதி இல்லை.
எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர்.
உடனே முஆவியா (ரலி) அவர்கள் 'அமருங்கள்' என்றனர். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்
என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552
மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம்.
இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678
தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள்.
நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள்.
உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 701
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்.
யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு.
அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.
ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.வரவேற்பதற்காகவும், அன்பைளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது.
பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். (திர்மிதீ 3807)
நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.
ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள்.
இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.

Saturday, February 2, 2019

இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் சேவை

இலங்கை அரசியலில் ஆரம்ப காலம் தொட்டே முஸ்லிம்களின் தியாகம் போராட்டம் சேவை அளப்பரியதே!
இது தொடர்பான சிறு துளிகள்
இலங்கைத் திரு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை முடுக்கி விடுவதில் முஸ்லிம்களின் பங்களிப்பு தீர்க்கமானது, உறுதியானது , வலுவுள்ள தாக்கத்தை உண்டு பண்ணியது.

எம்.சி.எம்.கலீல்
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தேசேர் மொஹம்மத் மாக்கான்மாக்கார், டாக்டர் டி.பி. ஜாயா,டாக்டர் எம்.சி.எம்.கலீல்,அப்போதைய அப்துல் ராஸீக் ( பின்னால் சேர் ராஸீக் பரீத் )ஆகிய பெருந்தலைவர்கள் தேசத்தை ஒற்றுமைப்படுத்தி உறுதிப்படுத்தி அதை சுதந்திரத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்ற மகத்தான பணியைச் செய்தார்கள்.
முஸ்லிம்கள் நாட்டினுடைய அரசியல்,அபிவிருத்திப் பணிகளுக்கு ஒரு போதும் முட்டுக்கட்டையாக இருந்ததேயில்லை.சித்திலெப்பை, வாப்புச்சி மரைக்கார், ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் போன்ற மேமக்கள் சிங்கள பெருங்குடியினரோடு உறவை நெருக்கமாக ஆக்கிக் கொண்டார்கள்.
சித்திலெப்பை
ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ்
வாப்புச்சி மரைக்கார்
ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா விடுதலைக்கு மேற்கொண்ட அளப்பரிய பெரும் பணிகள் 16 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டன. நாட்டை அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட முனைப்புக்களைப் பற்றி ஸ்ரீலங்கா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கண்ணியத்திற்குரிய டாக்டர் கே.டபிள்யூ. குணவர்தன அவர்களே மிக்க சிறப்பித்துக் குறிப்பிடுகிறார்.
சேர் ராஸீக் பரீத்
வலிமை மிக்க அந்நிய ஏகாதிபத்தியவாதிகளோடு சில கட்டங்களில் இணங்கிப் போவதை ராஜ தந்திர நடவடிக்கையாக சிங்கள ஆட்சியாளர்கள் கருதத் தலைப்பட்ட நேரத்தில் கூட, முஸ்லிம்களும் சிங்கள பெருங்குடி மக்களும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு உறுதியான, பிடிவாதமான எதிர்ப்பைக் காட்டினார்கள்.
மன்னன் மூன்றாம் விஜயபாகு தனது ஆட்சிக்குக்கட்டுப்பட மறுத்த, தனது ராஜாங்க வணிகத்திற்கு குறுக்கீடு செய்த போர்த்துக்கீசர்களை எதிர்த்துப் போர்ப் பிரகடணம் செய்ய முற்பட்ட போது கூட, முஸ்லிம்களின் ஒத்துழைப்பையே அவன் நம்பி நின்றான்.
மன்னன் மாயதுன்னவுக்கு முஸ்லிம்கள் கொடுத்த ஒத்துழைப்பு, இராணுவப் பணிகளில் மட்டுமல்ல ராஜதந்திர தூதுவப் பணிகளிலும் அவர்களுடைய திறமை கொடி கட்டிப் பறந்த காலம் அது.கள்ளிக் கோட்டையிலிருந்து மன்னன் மாயாதுன்ன அடிக்கடி உதவி பெறுவதற்கு பெரிதும் முஸ்லிம்களே காரணமாக இருந்தார்கள். மலபார் இராணுவ வீரர்களும், கடற்படை வீரர்களும் போர்த்துக்கீச ஏகதிபத்தியவாதிகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்த தொல்லைகளின் காரணமாகத் தான் போர்த்துகீசர் கவனம் நம் பக்கம் இருந்து திசை திரும்பி அதன் காரணமாக சிங்களப் படையினர் சற்று நிம்மதி மூச்சு விட முடிந்தது.இந்த சூழ்நிலை உருவாவதற்கு முஸ்லிம்களே காரணமாக இருந்தார்கள்.சிங்களப் போர் இயந்திரம் மிகத் திறமையாக செயற்படுவதற்கு அதன் அதி மகத்தான உறுப்பாக முஸ்லிம் பெருமக்களின் பணி அமைந்தது என்பது வரலாற்றில் மறக்க முடியாத உண்மையாகும்.
சேர் மாக்கான் மாக்கார்
சேர் முஹம்மத் மாக்கான் மார்க்கார், 1939 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் நாள் ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்திலங்கை முஸ்லிம் அரசியல் மாநாட்டில் பேசிய பொழுது, நாட்டின் அனைத்து சமயத்தினரதும் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையுமே மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.


அவர் சொன்னார் : நான் முஸ்லிம்களுக்குத் தக்க அளவிலான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிய போது, நான் வெறும் 50:50 என்ற கணக்கு வழக்கு விகிதாசாரங்களில் மட்டும் நம்பி நின்றுவிடவில்லை. எல்லா விகிதாசார கணக்கு வழக்கு புள்ளி விபரங்களும் ஒரு தலைப்பின் கீழ் அடங்கி விடுகின்றன.அத் தலைப்பு என்னவென்றால்,அது தான் ஒரு நல்லாட்சி அமைவதாகும்.
நல்லாட்சி அல்லது அரசு என்பதென்ன? இதைச் சுருக்கிக் குறுக்கி இரண்டே சொற்களில் அடக்கிவிடலாம். நீதியும் நியாயமும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் நீதியாக நடந்து கொள்வதும் அனைத்து சமுதாயங்களுக்கும் நியாயம் செய்வதுமாகும்.அதே நீதி நியாயத்தின் அடிப்படையில் தான் நான் அப்போதோ அல்லது இனி எப்போதுமோ ஒரு பெரும்பான்மைச் சமுதாயத்தை சிறுபான்மை நிலைக்கு இட்டுச் செல்லவதை விரும்பினேனில்லை. அதனால்தான் என்னுடைய நல்லெண்ணத்துக்குச் சான்றாக,இந்நாட்டை சிங்களவர் ஆள்வதை நான் ஆட்சேபிப்பதாயில்லை என்று சொல்கின்ற அளவிற்கு வந்தேன். இந்த என்னுடைய ஒரு பேச்சே போதும். நான் ஒரு வகுப்பு வெறியனல்லன் என்பதை மெய்ப்பித்திட.


சிறுபான்மையினர் அரசியற் சட்டச் சாசனப் பாதுகாப்பிற்காகச் செய்த முயற்சி, சுதந்திரம் வழங்குவதைக் கிடப்பில் போட்டிட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சாக்காக அமைந்திடக் கூடாதே என்பதற்காக டாக்டர் டி.பி.ஜாயா வெளியிட்ட கருத்துக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சொற்பொழிவாக இன்னும் மிளிர்கின்றன! உள்ளத்தைத் திறந்து கொட்டி,உணர்வுகளை வலுவுள்ள சொற்களாக அவர் வடித்துத் தந்த அந்தப் பேருரை, அதில் அவர் முஸ்லிம்களின் நோக்கு, போக்கு என்ன என்பதை தீர்க்கமாக வரையறுத்துக் காட்டியமை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே அதிர வைத்ததோடு, இனிவரும் வருங் காலமெல்லாம் இந்நாட்டில் பிறக்கக்கூடிய சந்ததியினரையுங் கூட முஸ்லிம்களுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக ஆக்கி விட்டது.
டாக்டர் டி.பி. ஜாயா
தான் சான்று நின்றவர்களாலேயே தான் வருத்தப்படுத்தப்பட்ட நிலையிலுங் கூட டாக்டர் ஜாயா, இந்நாட்டின் அனைத்து சமுதாயங்கள் மத்தியிலும் ஒருமித்த கருத்து உடன்பாடு கண்டிட பேரவாக் கொண்டு செயல்பட்ட அதே நேரத்தில், கிடைக்க வேண்டிய சுதந்திரம் முஸ்லிம்களால் தான் கெட்டது என்ற ஒரு கருத்து எக்காலத்திலும் இந்து முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் மெத்தக் கண்ணுங் கருத்துமாக இருந்தார்.அவருடைய அந்த வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பேச்சு இந்நாட்டு மக்களின் மனதில் பாரியத்தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, மக்களை ஐக்கியப்படுத்தி, சுதந்திரப் போராட்டத்தை ஒரு அர்த்தமுள்ள விவகாரமாகவும் ஆக்கி விட்டது.
சுதந்திரப் பாதையில் ஒரு மைல்கல்லான சட்டசாசன சபையில் சோல்பரித் திட்டத்தின் மீது டாக்டர் ஜாயா பேசிய பேச்சு ஆதிக்க எதிர்ப்பிற்கு இஸ்லாம் காட்டுகின்ற வேகத்தையும், முஸ்லிம்களின் இயல்பான சுதந்திர வேட்கையையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.”முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது அவர்களின் பண்பாட்டின் அடித்தளம். முழுமையான சுதந்திரத்திற்காக மேற்கொள்ளப்படும் எந்தப் போரிலும், போராட்டத்திலும் முன்னணியில் தான் நிற்க வேண்டுமென அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு ஆணையிடுகிறது. முழுமையான சுதந்திரத்திற்கான ஒரு போர் என்றால் அதில் முஸ்லிம் தனது சொந்த நலனையுங் கூட கருதாது களத்தில் குதிப்பான்.சுதந்திரம் முதலில் வரட்டும். தன்னை எதிர்நோக்கும் இதர பிரச்சனைகளை அப்போது சந்தித்துக் கொள்ளலாம் என்பதே அவனது தெளிவான நிலை.”
தன்னுடைய இந்த முத்தாய்ப்புப் பேச்சால், முஸ்லிம், நாட்டை தனது சமுதாயத்திற்கு முன்னால் வைப்பான் என்ற கருத்தையே தியாகி, தீரர் ஜாயா நிலை நாட்டினார். அவருடைய அரசியல் மதி நுட்பமும், ஆழ்ந்த அறிவும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவர் மேற்கொண்ட நிலைப்பாடு ஒன்றும் தவறானதல்ல என்பதையே இத்தனையும் மெய்ப்பிப்பதாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த எந்தவொரு ஆட்சியும், அரசும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக வந்திடத் துணிந்ததில்லை.
முஸ்லிம்கள் தாமாகவே தான் தமது முன்னேற்றப் பாதையில், தமக்கிடையேயுள்ள ஒற்றுமையின்மையின் காரணமாக அடிக்கடி தடைக் கற்களைப் போட்டுக் கொள்கிறார்கள்.
ஒழுங்கான ஒற்றுமை மாத்திரம் நம்மிடையே அமைந்தால் அன்று டி.பி.ஜாயா எடுத்த முடிவு எத்துணை சரியானதென்பதை மெய்ப்பிக்கும். தியாகி டி.பி.ஜாயாவின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதற்கு சான்றாக இன்று அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு உரிய ஆக்கமும் , ஊக்கமும் தருகின்ற ஒரு நியாய சிந்தனையுள்ள ஜனாதிபதியை மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச அவர்களைப் பார்க்கின்றோம்.
அரசியல் சாசன ரீதியாக நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்புக்குள்ளேயே வாழ்க்கையில் சகல வட்டங்களிலும் நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான வழிவகைகளை செம்மையாக அமைத்துக் கொள்ள முடியும்.ஆனால் அதை நாம் ஐக்கியமாகத் தான் சாதிக்க முடியும். இறுதியாக ஒன்றை சொல்லி வைக்க விழைகின்றேன். நாட்டின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக முஸ்லிம் இருந்ததில்லை. அதன் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக அவன் ஒருபோதும் இருந்திட மாட்டான் என்ற விடயம் யாருடைய அவதானத்திலிருந்தும் நழுவி விடக் கூடாது.
சிறப்பு உரையில் பழமையின் தொய்மையும் உண்மையும் இருந்தது அதனால் என்னை வெகுவாக கவர்ந்தது.
நன்றி
Nazeem Mohammed


உம்ரா ''செய்வது'' எப்படி?


கொஞ்சம் நீண்ட பதிவு படித்து பயன் பெறுங்கள்....
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2:196)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.ஷஹீஹ் புகாரி..1773,,,,
 
இப்போது
உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.
1. குளித்தல்.
2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.
4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.
5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.
6. ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்
7. தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.
மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.
உம்ராவில் இடம்பெற்ற இந்த வணக்கங்களில் 1. இஹ்ராம், 2.கஅபாவை தவாஃப் செய்தல், 3.ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் உம்ரா இல்லை என்றாகிவிடும்.....
இஹ்ராம்
"இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும்
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று
கூறுவதே இஹ்ராம் ஆகும்...
இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை 1. தலையை மறைக்கக் கூடாது 2. தையல் ஆடை அணியக் கூடாது.
"இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப் பாகையையோ,தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்'' என்று விடையளித்தார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794)....
பெண்களுக்கு மட்டும் தடையானவை இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1838)
இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.....
இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்...
ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.
மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில்என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம்(இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.
இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம்வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.....
யலம்லம்என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இது மக்காவிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது....
மக்கா நகரின் புனிதம்
மக்கா நகரை இறைவன் புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடாத வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.
அல்லாஹ் மக்கா நகரைப் புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், அங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ,நூல்: புகாரி 104, 1832, 4295)....
இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்
1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது 2. நகங்களை வெட்டக் கூடாது. 3. நறுமணம் பூசக் கூடாது 4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது. 5. உடலுறவு கொள்ளக் கூடாது. 6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது. 7. வேட்டையாடுதல் கூடாது....
தல்பியா கூறுதல்
அதன் பின்னர் மக்காவில் ஹரமை அடைகின்ற வரை தல்பியா சொல்ல வேண்டும்.
لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ
"லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பொருள் : இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1549, 5915
திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவது திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.ஆனாலும், தல்பியாவை மட்டும் உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி) ,நூல்கள்: ஹாகிம், பைஹகீ)
ஹரமை அடைந்த பின் தல்பியாவை நிறுத்தி விட்டு, தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃப் செய்ய வேண்டும்.....
தவாஃபுல் குதூம்
"குதூம்' என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு "தவாஃப் அல்குதூம்' என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் தான் "தவாஃப் அல்குதூம்' செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்....
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
தவாஃபுக்காக ஹரமுக்குள் சென்றதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள அந்த மூலையிலிருந்து தவாஃபைத் துவக்க வேண்டும்.
கஅபாவைச் சுற்றும் போது ஹிஜ்ர் என்ற பகுதியையும் சேர்த்தே சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். முடிந்தால் முத்தமிட வேண்டும்; முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிட வேண்டும்; அதற்கும் இயலாவிட்டால் சைகையால் முத்தமிட வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களின் போது விரைந்து செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1611
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தவாஃப் அல்குதூம்' செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1644, 1617....
ருக்னுல் யமானி
கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப் படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் "யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 166, 1609....
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே "ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப்(ரலி)
நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616....
மகாமு இப்ராஹீமில் தொழுதல்..
இவ்வாறு ஏழு சுற்றுக்கள் முடிந்த பின் மகாமு இப்ராஹீம் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். (முஸ்லிம் 2137)...
ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்தல்
"தவாஃபுல் குதூம்' எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா,மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு "ஸஃபா' "மர்வா'வுக்கு இடையே ஓடினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்''என்ற (2:158) வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'' என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) "பதனுல் வாதீ'என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137....
ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137....
நபி (ஸல்) அவர்கள் மர்வாவில் முடித்ததிலிருந்து "ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும்,மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை'' என்றும் விளங்கலாம்....
முடியைக் கத்தரித்தல்...
"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு''என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்....
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1694...
இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல்,பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது....