Search This Blog

Saturday, April 4, 2020

ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus complex) நவீன தீர்வு ?

காமத்தின் மூலம் உளவியல் என்ற கொள்கையை முன்வைத்தவர் உளவியலின் தந்தை என்று கருதப்படும் சிக்மண்ட் ஃபிராய்ட் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர்களில் ஒருவர். கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஐன்ஸ்டீன் போன்றோருக்கு இணையாக வைத்துப் போற்றப்படுபவர். குழந்தைமை, ஆளுமை, நினைவாற்றல், பாலியல், சிகிச்சை முறை போன்ற சொற்களுக்குப் புதிய அர்த்தங்களை உருவாக்கிக் காட்டியவர்.’காமத்தின் மூலம் கடவுள்’ என்ற கோட்பாட்டை ஓஷோ முன் வைப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னமே ‘காமத்தின் மூலம் உளவியல்’ என்ற கோட்பாட்டை முன் வைத்தவர். 

ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினை களே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.
ஒரு பிறந்த குழந்தைக்கும் இந்த உலகத்துக்கும் இடையே இருக்கும் முதல் தொடர்பு தாயின் மார்பகம் மட்டுமே. குழந்தையின் தாய் என்பது தாயின் மாபகம்தான். பின்னர்தான் அது தனது தாயின் முகம், உடல், தாயின் வாசனை போன்ற இதர அம்சங்களை உணர்ந்து கொள்கிறது. தாயின் மேல் காதல் கொள்கிறது. இந்தக் காதலை ஃபிராய்ட் ‘ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’ (Oedipus complex) என்று அழைக்கிறார்.
ஒரு குழந்தையின் மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான காலத்தை இந்த ஈடிபஸ் சிக்கலுக்கான காலக்கட்டமாக சிக்மண்ட் ஃபிராய்ட் வரையறுக்கிறார். ஓர் ஆண்குழந்தை தனது பால்ய பருவத்தை வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டுமானால் அது ஈடிபஸ் சிக்கல் பருவத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்பது ஃபிராய்டியக் கோட்பாடு.
ஃபிராய்டுக்குப் பின் வந்த இன்னொரு முக்கியமான உளவியலாளரான லக்கான் ஃபிராய்டின் கோட்பாட்டை அனுமானமாக்கிக் காட்டினார். ஆனாலும், ஃபிராய்டின் ஈடிபஸ் சிக்கல் என்ற கோட்பாட்டை அவர் மறுக்கவில்லை.
ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்பது மனநோய். கிரேக்க வீரன் ஈடிபஸ். பிறக்கும் போதே தந்தையைக் கொன்று தாயை மணப்பான் என்னும் சாபத்துடன் பிறக்கிறான். பயத்தில் அவனை மலையிலிருந்து தள்ளிவிடுகின்றனர். பழங்குடியின மக்களிடம் வளரும் அவன் இந்த ரகசியத்தை அறிந்து நாடு நோக்கி செல்கிறான். வழியில் வழிப்போக்கனிடம் யார் வழிவிடுவது என்று சண்டை மூள்கிறது. சண்டை பெரிதாக வழிப்போக்கனை கொன்றுவிடுகிறான். வழிப்போக்கனாக வந்தவன் நாயகன் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் அரசன். அரசனற்ற நாட்டிற்கு பதவியேற்க சில மாயப்புதிர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அதை விடுவித்து விதவையான ராணியை மணக்கிறான். அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கின்றன. இறந்த அரசன் யாரென அறிய முற்படும் போது வெகு நாட்களுக்கு முன் தான் கொன்ற வழிப்போக்கனே அரசன் என்றறிகிறான். இதை ராணியும் அறியும் போது தான் ஈடிபஸிற்கு தான் தந்தையை கொன்று தாயை மணந்து கொண்டதையும் அறிந்து கொள்கிறான். அவள் சாபம் பலித்ததையறிந்து தற்கொலை செய்து கொள்கிறாள். ஈடிபஸ் தன் கண்களை குருடாக்கிக் கொள்கிறான். இதைத் தான் சிக்மண்ட் ஃப்ராய்டு காம்ப்ளக்ஸாக மாற்றுகிறார். தாயின் மீது மகனுக்கும் தந்தையின் மீது மகளுக்கும் காமம் சார்ந்த ஈர்ப்பு இருந்தே வருகிறது. இது தவறில்லையா என்னும் குற்றவுணர்ச்சி எங்கு தோன்றுகிறதோ அங்கு தான் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் ஆரம்பத்தினை கொள்கிறது. இதற்கு முடிவு இல்லையா எனும் போது கல்வியாலும் பிரக்ஞையை மேம்படுத்தி சமூகக் கட்டுபாடுகளுடன் தனிமனிதனை மாற்றும்போதும் அவனுடைய சுயமும் இச்சைகளும் கலாச்சார மீறல்களை மீறாமல் இருக்கும் என்கிறார்.
இதை டி.எச்.லாரன்ஸ் தன்னுடைய "SONS AND LOVERS" நாவலில் ஊடுபாவலாக சென்று தர்க்கங்களையும் தீர்வுகளையும் கொடுக்கிறார்

சுரங்கத்தில் வேலைப்பார்க்கும் குடும்பம் வால்டர் மோரலுடையது. அவருடைய மனைவி கெர்ட்ரூட் கப்பார்ட். அவர்களுடைய குழந்தைகள் வில்லியம், ஆன்னி, பால். கணவர் சுரங்கத் தொழிலுக்கு செல்வதால் அங்கிருந்த களைப்பினை போக்க நிச்சயம் மதுவினை உட்கொண்டாக வேண்டும். ஆனால் அது அதிகமாகும் தருணங்களில் அதுவே மனைவின் வதைபடுதலுக்கு காரணமாகிவிடுகிறது. இதனால் முழுதும் நொந்த மனைவியிடம் கணவன்பால் இருந்த காதல் காணாமலாகிறது. இதை அவளே உணரும் போது என்னிடம் இருக்கும் காதலை யாருக்கேனும் நான் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமே என ஏங்குகிறாள். மூத்த மகன் வில்லியமிடம் பாசத்தை பொழிகிறாள். வில்லியம் வேலை கிடைத்து நாட்டிங்காம்ஷைரிலிருந்து லண்டன் சென்றுவிடுகிறான். அங்கு அவன் காதல் வயப்பட்டு ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறான். பின் நிமோனியா காய்ச்சலில் இறந்தும்விடுகிறான். இதற்கு பின் தான் நாவல் தன்னுடைய தீவிரத் தன்மையை எய்துகிறது.
காதலை வெளிக்காட்ட இருந்த வடிகாலான வில்லியம் இறந்தவுடன் அவளுடைய கவனம் முழுக்க பாலிடம் செல்கிறது. இது பாலினை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது என்பதே நாவலின் மீதக்கதையாகிறது. கப்பார்ட்டின் குணமும் எண்ணமும் அவளை வசீகரம் மிக்கவளாக அதே நேரம் சமூகத்தின் பார்வையில் வன்மம் நிறைந்தவளாக மாற்றிவிடுகிறது. சிறந்த உதாரணம் எனில் வில்லியம் தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை அனுப்புகிறான். அவள் எல்லாவற்றிலிருந்தும் குறைகளை தேடியெடுத்து குமுறிக் கொண்டே இருக்கிறாள். இது பின்னர் பாலிடமும் நீள்கிறது. தன்னுடைய அன்பை பங்கெடுக்க யாரேனும் வந்துவிடுவார்களோ என்னும் எண்ணமே நாவல் முழுக்க அவளை உருவாக்கிக் கொண்டு வருகிறது.

அதே நேரம் பாலின் வாழ்க்கை காதலுக்கான இடமே இல்லாமல் வறண்டு இருக்கிறது. அங்கு இருக்கும் ஒரே சோலையாக அவனுடைய அம்மா இருக்கிறாள். மிரியம் மற்றும் க்ளாரா என இரண்டு பேர் அவனுடைய வாழ்க்கையில் வருகிறார்கள். இதில் க்ளாரா ஏற்கனவே மணமாகி விவாகரத்து இல்லாமல் பிரிந்து இருப்பவள். இருவருக்கும் அவன் மீது காதல் இருக்கிறது. ஆனால் பாலிடம் இருக்கும் நிலையற்ற தன்மை அவன் மீதான வெறுப்பை அவர்களுக்குள் கொடுக்கிறது.

பாலிற்கு ஒருக்கணம் தேவையெனவும் மறுக்கணம் இவ்வுலகம் தாயால் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமே எனவும் இரு எல்லைக்கு இடையில் ஊசலாட வைக்கிறது. மிரியமிடம் நேரடியாகவே சொல்கிறான் நான் மணமே செய்து கொள்ள போவதில்லை. அம்மாவுடன் இருந்தால் அதுவே போதும் என. அவனுடைய முட்டுக்கட்டையாக தாயின் அன்பே நாவல் முழுக்க இருக்கிறது.

ஈடிபஸின் பிரச்சினையில் தாய் யார் என்பது மகனுக்கு தெரியாமல் மாயத்தன்மையில் இருக்கிறது. இங்கோ என்ன பிரச்சினை ஏன் நிகழ்கிறது என எல்லாமே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அப்படியிருக்கையில் ஏதேனும் ஒரு இருத்தல் காணாமல் போனால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியுமல்லவா ? இது நாவலில் நிகழும் தர்க்கமாக மாறுகிறது. சிறைப்பட்ட வாழ்க்கை தான் காதலுடன் இருப்பதா என்னும் கேள்வியையும் சுமந்துகொண்டு செல்கிறான். என்ன ஆகிறது என்பதை மனதிலிருந்து சிறிதும் நீங்காத வண்ணம் சொல்லி நாவலினை முடிக்கிறார்.

நவீனம் செய்ய வேண்டிய எல்லா விஷயங்களையும் இந்நாவல் செய்கிறது. ஈடிபஸின் பிரச்சினையை வெளிப்படையாக்கி தாயின் பார்வையில் அதை நியாயமாக்க முற்பட்டால் அதுவே லாரன்சின் நாவலாக மாறுகிறது. முடிக்கும் போது எல்லாவித கலாச்சாரத்திற்குள்ளிருந்தும் வெளியே நிற்கும் ஒரு கருவையே இந்நாவல் பேசுகிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ளலாம். அவர் நியாயப்படுத்துவதை நம்மால் எதிர்க்கவும் முடிவதில்லை என்பதில் தான் நாவல் தன் வெற்றியை கொள்கிறது.
Thanks www.kimupakkangal.com/,siruva.blogspot.com,www.aanthaireporter.com

No comments:

Post a Comment