Search This Blog

Saturday, April 11, 2020

சங்கடஹர சதுர்த்தி.


விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். வருடம் முழுவதும் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட, மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது.
விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியது மஹா சங்கடஹர சதுர்த்தி. இந்த விரதம் இருந்தால் ஆனந்தத்தை அடைவதோடு சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

விரதம் இருக்கும் முறை

மஹா சங்கடஹர சதுர்த்தியன்று நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சந்திரனை தரிசித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். பிறகு இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். விநாயகர் துதி பாடல்கள், விநாயகர் அகவலை சொல்லி வழிபடலாம். 

விரதத்தின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் துன்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலையை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் சனியின் தாக்கம் குறையும். நினைத்ததை நிறைவேற்றும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட்டு கணபதியின் அருளைப் பெற்றிடுங்கள்.

No comments:

Post a Comment