Search This Blog

Saturday, March 21, 2020

'கொரோனா' பற்றி எழுதப்பட்ட, அனைவராலும் அவசியம் வாசிக்கப்படவேண்டிய தகவல்கள் நிறைந்த குறிப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியராகிய கோபிகா நவரட்ன ராஜா அவர்களால் 'கொரோனா' பற்றி எழுதப்பட்ட, அனைவராலும் அவசியம் வாசிக்கப்படவேண்டிய தகவல்கள் நிறைந்த குறிப்பு கீழ்வருவது....
//யூகேயில் கொரோணா அறிகுறிகளுடன் இருந்த 56221 பேரில் வெறும் 2626 பேருக்குத் தான் உண்மையான கொரோணா நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கொரோணா நோய்க்குரிய அறிகுறிகளைக்கொண்ட 100 பேரில் நான்குபேருக்குத்தான் உண்மையிலேயே கொரோணா இருக்கிறது. மிச்சம் 96 பேரும் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களே. நோய் அதிகமாக பரவும் இங்கேயே இவ்வளவுதான் என்றால் நம் நாட்டில் இன்னும் குறைவாகவே இருக்கும்.
ஆகவே காய்ச்சல் வந்தால் பதட்டப்படாதீர்கள்.
உங்களுக்கு காய்ச்சல், தடிமல், இருமல் வந்தால் பதறிப்போய் வைத்தியசாலைக்கு ஓடாதீர்கள்.
வீட்டிலே தனியறையில் கதவை மூடி ஜன்னலைத் திறந்துகொண்டு இருங்கள். அறையை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை தவிருங்கள். வெளியே வரும் சந்தர்ப்பத்தில் நீங்களும் வீட்டிலிருப்பவர்களும் மாஸ்க் போடுங்கள். முடிந்தால் வீட்டிலிருக்கும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், மிகவும் சிறிய குழந்தைகள், நோயாளிகளை வேறு உறவினர் வீட்டில் தங்க வையுங்கள்.
உங்கள் காய்ச்சலுக்கு பரசிட்டமோலும், இருமலுக்கு பார்மசி யில் இருமல் பாணியும் வாங்கிக் குடியுங்கள்.
உங்களுக்குப் பிடித்த உணவுகளை சாப்பிடுங்கள். சாப்பிட விருப்பமில்லாவிட்டாலும் ஏதாவது ஒரு உணவில் விருப்பத்தை உருவாக்கி சாப்பிடுங்கள். கடையில் ஏதும் வாங்கிச் சாப்பிடவிரும்பினால் பரவாயில்லை யாரிடமாவது சொல்லி வாங்கிச் சாப்பிடுங்கள்.
முக்கியமாக பெருங்காயம் நல்லது பூண்டு நல்லது போன்று லூசுத்தனமா பகிரப்படுபவற்றை வாசிப்பதைத் தவிருங்கள்.
போதியளவு நீராகாரம் அருந்துங்கள். தண்ணிதான் குடிக்கவேண்டுமென்றில்லை. சூப், பால், ஜூஸ் என விரும்பிய எதையும் குடியுங்கள்.
உங்கள் உடம்பைக் கவனிக்கும் வைத்தியராக நீங்களே மாறுங்கள்.
முடிந்தால் நீங்கள் போகின்ற யூரினை அளந்து பாருங்கள். ஒரு மணித்தியாலத் துக்கு 25 ml யிற்கு அதிகமாக யூரின் போகவேண்டும். அதாவது ஒருதடவை யூரின் போய் நான்கு மணிநேரத்தின் பின் அடுத்தடவை யூரின் போனால், குறைந்தது 100ml யூரின் போகவேண்டும். அதைவிட குறைவாகப் போனால் உங்களுக்கு நீர்ச்சத்துப் போதவில்லை, நீங்கள் போதியளவு நீராகாரம் அருந்தவில்லை என்று அர்த்தம். அப்படியானவர்கள் நீர் அருந்துவதை அதிகரியுங்கள்.
கொரோணாவைவிட ஆபத்தானது டெங்கு. உங்களுக்கு வந்திருப்பது டெங்காகக்கூட இருக்கலாம். ஆகவே போதியளவு நீர் அருந்துவதை மேலே சொன்ன அளவு யூரின் போவதுமூலம் உறுதிப்படுத்துங்கள்.

நீங்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு தடவை மூச்சு விடுகிறீர்கள் என எண்ணி வைத்துக்கொள்ளுங்கள். உங்களால் எண்ணமுடியாவிட்டால் வேறு ஒருவரை எண்ணிச்சொல்லச்சொல்லுங்கள். மூச்சு விடும்போது உங்கள் வயிறு அசைவதை வைத்து இலகுவாக எவரும் இதை எண்ணலாம். இதுக்கு MBBS தேவையில்லை. சாதாரணமாக வளர்ந்த ஒருவர் நிமிடத்துக்கு 16 -18 வரை மூச்செடுப்பார். இதை நீங்களே கவனித்துக்கொள்ள முடியும். சிலருக்கு இதயத்துடிப்பை பார்க்கும் அளவு அனுபவம் இருக்கலாம். அப்படியானவர்கள் பல்ஸ்சையும் எண்ணலாம். முடியாதவர்கள் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை .
எப்போது வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும்?
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால். மூன்றாவது நாளும் காய்ச்சல் இருந்தாலும் அது ஏற்படுகிற அளவு குறைவதாக இருந்தால் போகவேண்டிய தில்லை.
உங்கள் சுவாச வீதம் 22ஐ விட அதிகரித்தால்.
போதியளவு நீராகாரம் எடுத்தும் யூரின் போவது மணிக்கு 25 ml ஜவிடக் குறைவாக இருந்தால்.
மூச்சு விடக் கஸ்டம், மயக்கம், உங்கள் உணர்வு நிலை பாதிக்கப்படுவது போன்றவை இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுங்கள்.
போகும்போது மாஸ்க் போட்டுக்கொண்டு செல்லுங்கள்.
இவ்வாறான நோய் தீவிரமானவர்கள்கூட பதட்டப்படவேண்டாம். இன்னும் உங்களுக்கு ஏற்பட்டிருப்பது கொரோணவாக இருக்கும் சந்தர்ப்பம் குறைவு. அது கொரோணவாக இருந்தாலும் நீங்கள் இறப்பதற்கான சந்தர்ப்பம் இன்னும் மிகக்குறைவு.
முடிந்தவரை 119 அம்பியூலன்ஸ் அல்லது தனியான வாகனத்தில் செல்லுங்கள். மறக்காமல் வாகனத்தில் வரும் மற்றவர்களும் மாஸ்க்போடுவதை உறுதி செய்யுங்கள். காரிலே செல்பவர்கள் ஏசியை அணைத்துவிட்டு கார்க்கண்ணாடியைத் திறந்து வைத்துச் செல்லுங்கள்.
வீண் பதட்டம் வேண்டாம்.
பார்த்ததலில் பிடித்தது பகிரவும்.

No comments:

Post a Comment