Search This Blog

Sunday, November 3, 2019

இந்துமதத்திறக்கும் சாதிக்குமான தொடர்பு

இந்து சமய வரலாற்றின் மிக ஆரம்ப காலத்தில் இந்து சமூகமானது பல நிலைகளாகப் பகுக்கப்பட்டு அமைந்திருந்ததையே விளக்கும் வகையில், சாதி முறையானது அமைந்திருந்தது.
மிகப் பெரிதோர் அமைப்பினுடைய பல்வேறு அம்சங்களாகச்சமூகத்தினுடைய பல்வேறு பகுதிகளும் கருதப்பட்டது பற்றி, முதல் முதலா ‘புருஷசூக்தம்’ எனும் நூலில் ஜாதிமுறை அமைப்புப் பற்றிக் குறிப்பிடப்பட்டுக் காணப்படுகிறது.
முதலில் இந்துமதத்திறக்கும் சாதிக்குமான தொடர்பை எடுத்துக்கொள்வோம். தமிழ் சூழலில் இத்தொடர்பை பற்றி பலர் பேசக் கேட்டிருப்பீர்கள். முற்காலத்தில் சாதிகள் படிநிலைகள் இன்றி இருந்தன. பிற்பாடு, படிநிலைகளின் உருவாக்கத்திற்கும், இந்து மதத்தின் மூலம் இப்படிநிலைகளை முறைமை உடையதாக மாற்றுவதற்கும் பிராமணர்கள் வழிவகுத்தார்கள் என பல்வேறு அறிஞர்கள் முன்வைத்திருக்கின்றார்கள். அம்பேத்கர் பொதுவாக இந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருந்தாலும், ‘Castes in India: Their Mechanism, Genesis and Development’ இல் அவர் சொல்வது இதுதான். மனு எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்திருந்தாலும், பிராமணர்கள் எவ்வளவு தந்திரசாலிகளாக இருந்திருந்தாலும், ஒரு பெரும் சமூகத்தை படிநிலைகளுடைய சாதி சமூகமாக மாற்றியமைக்கும் சக்தி/அதிகாரம் அவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ‘Dalits: Past, present and future’ என்ற நூலில், ஆனந்த் டெல்டும்டே சாதிகளின் தோற்றத்தைப் பற்றிய பல்வேறு கோட்பாடுகளை சுட்டி எழுதியிருக்கிறார். அம்பேத்கர் மற்றும் ஆனந்த் டெல்டும்டேவின் புரிதல் என்னவென்றால், ஒரு காலம்வரை இந்தியாவில் பல்வேறு சமூக குழுமங்கள் படிநிலைகளின்றி இருந்தன. ஒரு கட்டத்தில் பிராமணர்கள் ‘அகமணமுறையை’ தழுவி முதல் ‘படிநிலை சாதியை’ உருவாக்கினார்கள். அகமணமுறையின் மூலம் தங்களுடன் பிற சாதி மக்கள் சேராதவாறு பார்ப்பனர்கள் “கதவை மூடினார்கள்”. பிற்பாடு, இதை ‘போலச்செய்து’ பிற சாதிகளும் தத்தம் கதவுகளையும் மூடினார்கள். இதை மீற முயன்ற சாதிகளுக்கும் கதவுகள் முகத்தில் அறைந்து சாத்தப்பட்டன.
டெல்டும்டே ஒரு இடதுசாரியாக இன்னொரு மிக முக்கியமான கருத்தை முன்வைக்கின்றார்; இவ்வாறு சாதிகள் உருவாவதற்கு /பிராமணர்கள் தங்கள் கதவுகளை சாத்திக்கொள்ள முடிவு செய்வதற்கு அக்காலத்தில் நிலவிய பொருளாதார சூழல் மிகமுக்கியமான காரணமாக இருந்திருக்கலாம் என்பது. யோசித்துப் பார்த்தால் இது மிகச் சரியான அவதானிப்பு என்று தோன்றும். பிராமணர்கள் ஓரளவாவது நல்ல நிலைமையில்/அதிகாரத்தில் இல்லாவிட்டால் அவர்கள் எதைத் தக்கவைத்துக்கொள்ள கதவுகளை சாத்தியிருக்கக்கூடும்? அப்படி அதிகாரத்திலோ நல்ல நிலைமையிலோ இருந்திருந்தார்கள் என்றால் அது படிநிலை சாதிகள் இல்லாத அக்காலத்தில் பொருளாதார அடிப்படையில் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் தானே அதிகம்? தனக்கு சாதகமான அச்சூழலை நிரந்தரமாக தக்கவைத்துக்கொள்ள அவர்கள் முடிவு செய்திருக்கலாம். இப்படி நிலவிய சமத்துவமற்ற படிநிலைகளை முறைமை படுத்துவதற்காக எழுதப்பட்ட ஒன்று, மனுஸ்ம்ரிதி. பிராமணர்கள் தங்களுக்கு சாதகமான சூழலைத் தந்திரமாக தன்னாலான வழியில் நிரந்தரப்படுத்த எடுத்த முயற்சி, இந்து மதத்தை அதற்கான ஆயுதமாக பயன்படுத்தியது. மனுஸ்ம்ரிதிக்கு முன்னாலும் பின்னாலும் எல்லா சாதிகளும் தங்களுக்கே உரித்தான வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும் பின்பற்றி வந்திருக்கக்கூடும்; தமிழ்நாட்டில் நமது வழிபாட்டு முறைகளை கூர்ந்து கவனித்தால் இது புலப்படும். பொதுவாக பிராமணியத்தின் ஊடுருவல்/திணிப்பு இல்லாமலில்லை, ஆனால் நாமனைவரும் பிராமணிய ‘இந்து மதத்தை’ பின்பற்றவில்லை என்பது திண்ணம். மனுஸ்ம்ரிதியால் படிநிலைச்சாதிகள் உருவாகவில்லை, சாதிகள் உருவான பின்னே/உருவாக்கத்தின்போது அதைத் தக்கவைத்துக்கொள்ள/முறைமைப்படுத்த எழுதப்பட்டதுதான் மனுஸ்ம்ரிதி.
இப்பொழுது முக்கியமான விஷயத்திற்கு வருவோம், அதாவது தற்காலத்திற்கு, தற்காலத்தின் பிரச்சனைகளுக்கு. மேற்சொன்னது எவற்றிலும் நம்பிக்கையோ உடன்பாடோ உங்களுக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உண்மையை சொன்னால் இவை எல்லாமே முழுமையாக இல்லாத தரவுகளை வைத்து பல்வேறு அறிஞர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளே. நமது தமிழ் சமூகத்தில் பெரியாரால் ஏற்பட்ட சமூக மாற்றம் மிக முக்கியமானது; இச்சமூக இயக்கம் பிராமணர்களின் ஆதிக்கத்தை கேள்விக்குட்படுத்தியது, ஓரளவு மட்டுப்படுத்தியது. இந்த இயக்கமும் திராவிட அரசியலும் ‘பிராமணியத்தின்’ ஆதிக்கத்தை முறியடிப்பதற்கும், சாதிசமூகத்தை களைவதற்கும் முதற்படியாக இல்லாமல் போனதுதான் காலத்தின் கொடுமை.
இடைநிலை சாதிகள் ஆகட்டும், ஒடுக்கப்பட்ட சாதிகள் ஆகட்டும் இவர்கள் வழிபடும் ‘இந்து மதத்திற்கும்’ பிராமணிய, மனுஸ்ம்ரிதி ‘இந்து மதத்திற்கும்’ என்ன சம்பந்தம்? மூட நம்பிக்கைகளையும், கோவிலில் இருக்கும் அய்யர்களையும் உதாரணமாக எடுத்து வராதீர்கள். கேள்வி இங்கு பொதுவாக கோவிலுக்கு சென்று வழிபடும் எத்தனை மக்களுக்கு மனுஸ்ம்ரிதியையும், மனுஸ்ம்ரிதி இந்து மதம் கற்பிக்கும் சாதியப்படிநிலைகளைப் பற்றியும் தெரியும் என்பது. தெரியாத பட்சத்தில் எதற்கு இந்து மதத்தையே அழிக்க வேண்டும் என்று இந்து மதத்தை ஒழித்தால் சாதீய படிநிலைகள் ஒழிந்துவிடும் என்றும் கோஷம் எழுப்பப்படுகிறது? அம்பேத்கரும் பெரியாரும் சொன்னார்கள் என்பதாலா? இருவரும் யோசிக்கவும் எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்தவும் சொல்லியிருக்கிறார்களே? மனுஸ்ம்ரிதி தெரியத் தேவையில்லை, தான் வழிபடும் இந்து மதத்திற்கும் சாதிக்கும் இருக்கும் சம்பந்தமும் தெரிய தேவையில்லை, அதுதான் காலம்காலமாக எல்லாம் புகட்டப்பட்டுவிட்டதே என்று சொல்வீர்களேயானால், அப்படிப் புகட்டப்பட்ட ஒன்றை எதிர்த்து ஓர் பேரியக்கம் இங்கு உருவானதெப்படி? பெரியார் பல முற்போக்கான கருத்துக்களை சொன்னார், ஏன் எல்லா கருத்துகளும் பெரிய இயக்கமாக உருவெடுக்கவில்லை? ஏன் பிராமண எதிர்ப்பு மட்டும் (இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பும்) புரட்சியாக மாறியது?
பொதுவாக சொல்வார்கள் ஒரு புரட்சி/இயக்கம் வெற்றி பெறுவதற்கு ‘நாம்’ மற்றும் ‘மற்றவர்கள்’ என்ற இருமையை உருவாக்க வேண்டும் என்று. யோசித்துப்பார்த்தால் இந்த இருமை வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. இடதுசாரி வெளியிலும் இதுபோன்ற இருமைகளை காணலாம். இவ்வாறான இருமைகளால் கட்டமைக்கப்பட்ட இயக்கங்கள்/போராட்டங்கள் வெற்றிபெற்றாலும் நிரந்தர தீர்வையோ, ஒரு பிரச்சனையின் மையத்தையோ தொடுவதில்லை. உதாரணத்திற்கு பெரியார் எவ்வளவோ நல்ல கொள்கைகளைக் கொண்டிருந்தார், ஆனால் திரண்ட கூட்டம் பிராமணர்களுக்கு எதிரானது, பிராமண ஆதிக்கத்துக்கு எதிரானது. சாதியத்திற்கு எதிரானதல்ல, இரண்டிற்கும் பெரும் வேறுபாடு உண்டு. பிராமணர்கள் பொது எதிரி, இந்தி பொது எதிரி அதனாலேயே இப்போராட்டங்கள் வெற்றி பெற்றன. பெரியாரின் பெண்ணியத்தை சீண்ட ஏன் ஆளில்லை என்று கேட்டால் புரிந்து விடும், ஏனெனில் இங்கு ‘மற்றவர்கள்’ உலகின் மிகப்பெரிய ஆதிக்க சமூகம் ‘ஆண்’, இங்கு ‘மற்றவர்கள்’ கட்டமைப்பு சாத்தியமில்லாமல் போய்விடுகிறது, ‘ஆணாதிக்கத்தை’ எதிர்ப்பது மட்டுமே ஒரே வழியென்று ஆகிறது. ஏன் இந்து மதத்திற்கு எதிரான பெரியாரது கருத்துக்கள் மக்களிடத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் இதிலிருந்து புலப்படும்.
பிராமணர்களின் மீதான வெறுப்பு எதனால்? இன்றளவும் தொடரும் சாதி ஆதிக்கம் தானே காரணமாக இருக்க முடியும்? இப்படி ஒரு குறிப்பிட்ட சாதீய ஒடுக்குமுறைக்கு எதிராக இருந்துகொண்டு, தன் சாதிப்பெருமையை/சாதியத்தை பறைசாற்ற சாதியக்கொடுமைகளை/அடக்குமுறைகளை செய்ய எப்படி முடியும்? டெல்டடும்டே தரும் விடை: படிநிலைகள் என்னும் கட்டமைப்பு சாதியத்திற்கு எதிராக மக்களைத் திரள விடுவதில்லை; இங்கு அடித்துக் கொள்வதெல்லாம் எந்த சாதி பெரியது என்பதற்கும், படிநிலைகளில் மேலே போவதற்கும் தான், படிநிலைகளையே உடைத்தெறிவதற்கு, இல்லாமலாக்குவதற்கு இல்லை. நிதர்சனம் இப்படியிருக்க, சாதி மறுப்பாளர்கள் இப்போது எத்தகைய அரசியலை முன்னெடுக்க வேண்டும்? பிராமணர்களையும் மனுஸ்ம்ரிதியையும் திட்டினால் போதுமா? இந்து மதத்தை இல்லாமல் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டில் கூச்சலிடுவது ஏன்? முதலில் இது சாத்தியமான ஒன்றா? இன்றளவிலும் மத நம்பிக்கைகள் பெரிதாகிக்கொண்டு தான் வருகின்றது.
இருமைகளை யார் உருவாக்கினாலும் கவனத்தைப் பெரும், சமீபத்தில் தலித்துகள் அல்லாதவர்களை இணைக்கும் ராமதாஸின் முயற்சி ஓர் உதாரணம். இது போல் பல இருமைகள் ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக உருவாகிக்கொண்டிருக்கின்றது. இப்பொழுதாவது மேம்போக்கான அரசியலையும், வார்த்தைஜாலங்களையும் விட்டு ‘சாதியத்திற்கு’ எதிரான உண்மையான அரசியலை கையிலெடுப்பதே சாதி மறுப்பாளர்களின் கடமை. சாதி எதிர்ப்பு என்பது எல்லாவிதமான சாதியத்திற்கும் எதிரான தீவிரமான எதிர்ப்பாக இருக்கவேண்டும் என்பதிலும் அது வெறும் இந்து மதத்தை (மனுஸ்ம்ரிதியையும், இந்துத்துவதையும் குறிப்பிடவில்லை இங்கே) எதிர்ப்பதில் இல்லை என்பதிலும் உடன்பட்டால் மேலே வாசிக்கலாம். இல்லையெனில் உங்களின் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
அடுத்து, இந்து மதத்தை மூடநம்பிக்கைகளுக்காக, பார்ப்பனிய ஊடுருவலுக்காக, இந்துத்துவதோடு உள்ள சம்பந்தத்துக்காக எதிர்ப்பதை எடுத்துக்கொள்வோம். இவைகள் எல்லாம் எதிர்க்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் இதற்கு மதநம்பிக்கையை ஏன் டார்கெட் செய்ய வேண்டும்? ஏன் மதத்தின் பிற்போக்குத்தனத்தையும், மூடநம்பிக்கைகளையும், பார்ப்பனிய ஆதிக்கத்தையும் அழிக்க எண்ணாமல் மதத்தையே அழிக்க கூச்சலிட வேண்டும்?. இதுவும் தற்போதைய அடையாள அரசியல் கூச்சல் போல்தான், ‘தன் வாய்க்கு ருசியான வார்த்தைகளை பேசவும், தன் தார்மீக பிம்பத்தை கட்டமைக்கவும் அதை எண்ணி புளங்காகிதம் அடையவுமே‘ உதவும். இவ்வாறு சாத்தியமற்றதை கோருவது இப்பொழுது நிலவும் ஒடுக்குமுறைகளை இம்மியளவும் மாற்றாது. எந்த மதத்தையும் அழிப்பதை இலக்காகக் கொள்ளாமல், மதங்களை பற்றி விவாதிக்க முதலில் ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும். இங்கு மனுஸ்ம்ரிதி இந்துத்துவத்துக்கும், பெரும்பாலான மக்கள் பின்பற்றும் இந்து மதத்துக்கும் இருக்கும் வேறுபாடை அழுத்தம் திருத்தமாக மீண்டும் முன்வைப்பதும், பிந்தைய மதத்தில் உள்ள பிரச்சனைகளை விவாதிப்பதும்தான் சரியான செயல்பாடாக இருக்கமுடியும். இது மற்ற மதங்களுக்கும் பொருந்தும்.
நுட்பமான விவாதங்களுக்கு, புரிதல்களுக்கு இங்கு இடமில்லை, ஏனெனில் அதுதான் நிரந்தர தீர்வை தரவல்லது, இங்கு யாருக்கும் அது வேண்டாம். எந்த ஒரு கோட்பாடும் இப்படி விவாதத்திற்கான, பகுத்தறிவதற்கான சூழல் இல்லாமல் திணிக்கப்படும்போது பிற்போக்குத்தனமாகிறது. ஒரு இ.பி.டபுள்யூ கட்டுரை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை பற்றி ஆராய்ச்சி செய்து அவர்கள் ஆர்.எஸ்.எஸ். இல் இருப்பதற்கான காரணிகளை பொருளாதார பார்வையில் அற்புதமாக வைத்திருக்கும். நாம் இந்த மக்களின் விழிப்புணர்விற்கு என்ன செய்திருக்கின்றோம் என்பதுதான் கேள்வி. எந்த மதத்தை எடுத்தாலும் அதன் மையத்தில் பிரச்சனைகளை காணலாம், அதன்பெயரால் நிகழ்ந்த கொடுமைகளையும் வரலாற்றில் காணலாம். மதம் போல் பின்பற்றப்படும் கோட்பாடுகளுக்கும் அரசியலுக்கும் கூட இது பொருந்தும் அது திராவிட அரசியலாக இருந்தாலும் சரி நாத்திகமாக இருந்தாலும் சரி. அம்பேத்கரியமும் கூட சாத்தியம் இருந்தால் தற்போதைய வழிபாட்டுமுறை தொடர்ந்தால் ஒரு அடக்குமுறை கருத்தியல் ஆவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். இப்போதைய தேவை நெகிழ்ச்சியுடன் கூடிய உரையாடலும், எல்லாவற்றையும் விவாதத்துக்கு உட்படுத்துவதும், மனிதத்தையும் சமத்துவத்தையும் அன்பையும் முன்னிறுத்தும் அரசியலை முன்னெடுப்பதும்தான்.
மதமாற்றம் சாதியை ஒழிப்பதற்கு உதவப்போவதில்லை என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மதம் மாறுவது ஒருவரின் தனிமனித உரிமை என்பதையும் மறந்துவிட கூடாது. ஆனால் முக்கியமான கேள்வி ஒரு மதத்தை பற்றி தெரிந்து, புரிந்து ஈர்க்கப்பட்டு மதம் மாறுகிறார்களா அல்லது மூளைச்சலவையிலும், குருட்டு ஆட்டுமந்தை தனத்தினாலும் மாறுகிறார்களா என்பதே. அம்பேத்கர் சொல்லிவிட்டார் என்பதினாலேயே புத்த மதத்திற்கு மாறுவீர்களேயானால் நீங்கள் அம்பேத்கரியவாதிகள் இல்லை, அவர் கேள்வி கேட்பதையும் தீர ஆராய்வதையுமே அரசியலாக முன்வைத்தார். இப்படி ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பேத்கரிய கருத்துகளை பின்பற்றும் உங்களுக்கு ஒரு கேள்வி: அம்பேத்கர் இடதுசாரி அரசியலை முன்னெடுத்தார், நீங்கள் ஏன் அதைப்பற்றி மறந்தும் கூட பேசுவதில்லை? அம்பேத்கர் சொன்னதாலேயே எல்லாம் சரியாகவும் இருக்காது என்பதை புரிந்துகொள்ள வேண்டும், அவரும் கேள்விக்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மனிதனால் உருவாக்கப்பட்டதுதான் மதமும் கடவுளும். அதில் நம்பிக்கை வைப்பது அவரவர் உரிமை, விருப்பம். ஆனால் ஒரு மதம் இன்னொரு மதத்தை விட சிறந்தது என்பது போன்ற முட்டாள்தனமான கருத்துக்களை சாதாரணமாக முன்வைக்காதீர்கள், கிறிஸ்துவத்தின் பெயராலும் பவுத்தத்தின் பெயராலும் இழைக்கப்பட்ட கொடூரங்கள் எல்லாமே (குஜராத் 2002ஐ போலவே) வரலாற்றின் பதிவுகள். இது மதத்தின் பிரச்சனையல்ல அதை பின்பற்றுவோரின் பிரச்சனை என்பீர்களானால் இதையே எல்லா மதத்தவரும் சொல்லலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எல்லா தவறுகளையும் பிற்போக்குத்தனத்தையும் நீ பெரிதா நான் பெரிதா என்ற ரீதியில் இல்லாமல் விவாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
மேற்சொன்ன எல்லாமே கருத்தியல் ரீதியான சுட்டிக்காட்டுதல் மட்டுமே. இதைவிட மிக முக்கியமானது அரசியல் ரீதியாக சட்ட ரீதியாக முதலாளித்துவத்துக்கு, ஆணாதிக்க சாதீய சமூகத்திற்கு எதிரான சமத்துவத்தை நோக்கிய மாற்றங்களை கொண்டுவருவதென்பது. ஆனால் மேற்சொன்ன பல பிற்போக்குத்தனமும், அடையாள அரசியலும், மேம்போக்கு அரசியலும் இதற்கெல்லாம் தடையாக இருப்பதால் இதையும் பேசவேண்டிய தேவை இருக்கின்றது. யாராவது படித்தால் தொடர்ந்து எழுதலாம். நன்றி.
https://medium.com

No comments:

Post a Comment