Search This Blog

Monday, August 5, 2019

அந்தரங்கத்தின் முகம்

Karunakaran Sivarasa

அந்தரங்கத்தின் முகத்தை இன்று,
இப்பொழுது,
இதோ இந்தக் கணத்தில் காண்கிறேன்
தலையைச் சற்றுக் குனிந்து
புருவத்தை உயர்த்திப் பார்க்கிறது நம்மை
நமுட்டுச் சிரிப்போடு
அந்தப் பார்வையும் அந்தச் சிரிப்பும்
என்னைத் திறக்கிறது பலவாக
என்னை ஊடுருவுகிறது ஆழத்தில்

இதுவரை எடுத்த எல்லா எக்ஸ்ரேக்களையும் விட
எல்லா ஸ்கான்களையும் விட
இந்த அந்தரங்கத்தின் ஊடுருவல் வலியது...

அந்தரங்கம் மெல்ல உடைக்கிறது ஒவ்வொன்றையும்.
அப்போது நாறி மணப்பதென்ன?
மின்னலாகப் பளிச்சிடுவதென்ன?
ஜில்லெனக் குளிர்வதென்ன?
நெருப்பாகச் சுடுவதென்ன?

எல்லாமே நானே சேகரித்ததா?
அவளுடைய நினைவுகளும் சிரிப்பும்
அந்தக் குதூகலங்களும்...
அந்த இரண்டு பேரையும் கொன்று புதைத்ததும்
முதிராப் பெண்ணைக் கையளைந்த போது
அவள் கண்ணீர்த்துளிகளைக் கண்டு அதிர்ந்ததும்
ஏடன் தோட்டத்தில் யாருமறியாது
பழம் பறித்துப் புசித்ததும்
.........
ஓ...
புலன்களை அடைக்க முற்படுகிறேன்
ஏதோ வாடை தலைக்குள் ஏறுகிறது
கண்களைக் கூசச் செய்யும்
அந்தரங்க ஒளியின் முன்னே நிலையிழக்கிறேன்.

No comments:

Post a Comment