Search This Blog

Wednesday, March 20, 2019

யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் செய்முறை (கூழ் - kool - seafood soup





கூழ் செய்யத் தேவையான பொருட்கள்:

பயிற்றம்காய், பூசணிக்காய், பலாக் கொட்டை

நண்டு, இறால், கணவாய், இரு சிறிய துண்டுகள் பருத்தித்துறைக் கருவாடு
சிறிது அரிசி
பழப் புளி
உப்பு
சிறிது பச்சை ஒடியல் மா ( தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற வைத்து மா கீழே அடைந்தவுடன் தெளிந்த நீரை வடித்து விடவும்).
காய்ந்த செத்தல் மிளகாய், உள்ளி, மிளகு ( மிளகாயை சிறிது நேரம் ஊறவிடவும், முதலில் மிளகை அரைக்கும் இயந்திரத்தில் இட்டு தூளாக்கி பின்பு அதனுள் ஊறிய செத்தல் மிளகாயைப் போட்டு அரைத்து பின்பு அதனுள் உள்ளித் துண்டுகளைப் போட்டு அரைத்து பின்பு சிறிது நீர்விட்டு நன்றாக பசையாக அரைத்து எடுக்கவும்).

செய்முறை:

முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.
இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.)
தண்ணீரில் கழுவிய அரிசி, பயிற்றங்காய்த் துண்டுகளை தேவையான அளவு நீர் சேர்த்து அவியவிடவம். அவை சிறிது அவிந்த பின்பு மரவள்ளி, பலாக் கொட்டை சேர்த்து சிறிது அவிய விட்டு பின்பு பூசணி, கடல் உணவுகள் அரைத்த மிளகாய், உள்ளிப் பசையைப் போட்டு நன்கு அவியவிடவும். பின்பு பழப்புளிக்கரைசல் தேவையான அளவு உப்பு இட்டு நன்றாக கொதித்து எல்லாப் பொருட்களும் அவிந்த பின்பு ஒடியல்மாக் கலவையை இட்டு ஒரு தரம் கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். ஒடியல் மா சேர்த்த பின்பு அதிக நேரம் கொதிக்க விட்டால் கூழ் இறுகி தடித்துவிடும் சுவை குறைந்து விடும். 
சிலர் கடல் உணவுகளில் பெரிய மீன் துண்டுகளும் சேர்ப்பார்கள். ஆனால் நான் இடுவதில்லை. 
மீன் சேர்த்தால் அதன் வாடை கூழிலும், வீட்டிலும் அதிகமாக இருக்கும்.

உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும். கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேசக் கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்கக் கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம், கூழின் காரத் தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment