Search This Blog

Saturday, June 16, 2018

சொல் உலகம் (ஸப்த பிரபஞ்சம்),பொருள் உலகம் (அர்த்தப் பிரபஞ்சம்)

உலகமானது சொல்வடிவம், பொருள் வடிவம் என்று இரண்டு வகையாக உள்ளது.
சொல் உலகம் //ஸப்த பிரபஞ்சம்// என்றும்,
பொருள் உலகம் //அர்த்தப் பிரபஞ்சம் // என்றும் அழைக்கப்படும்.
சொல்உலகம் எழுத்துக்களை உறுப்புகளாகக் கொண்ட சொற்களாகும்.எழுத்துக்கள்,
வர்ணம்,
பதம்,
மந்திரம்,
என்று மூன்று வகைப்படும் என்று ஆகமாந்தம் கூறுகின்றது.
இங்கு கூறப்பட்ட எழுத்து, சொல் என்பது எல்லா மொழிகளிலும் உள்ள எழுத்துக்களையும், சொற்க்களையும் குறிக்கும் என்பது சிவாகமங்களின் கொள்கை.
சொல் உலகம் என்ற ஸப்த பிரபஞ்சம் அறிவுக்கு காரணமாய் உள்ளதால் அது சுத்தமாயையின் காரணமாகும் என்பது சித்தாந்த முடிபாகும்.
இந்த சொற் பிரபஞ்சமே, நாம் பேசும்
*//வாக்கு *//எனப்படும்.
இந்த வாக்கு நான்கு வகைப்படும்.
1) சூக்குமை
2) பைசந்தி
3)மத்திமை
4) வைகரி
என்பனவாகும்.
நமது மூலாதாரத்தில் இருந்தும், நாபிக்கமலத்தில் இருந்தும் ஓசை ஒன்று எழும்.அந்த ஓசையை எழுப்பும் காற்றுக்கு
*//உதானன் *// என்று பெயர்.
இவ்வாறு தோன்றும் உதானன் என்ற ஓசையானது, மூலாதாரத்தில் இருந்து எழும்பி,
பரை, பைசந்தி, மத்திமை, வைகரி, என்ற நான்கு நிலைகளில் சென்று நாம் பேசும் வாக்காக உருவெடுக்கின்றது.
இதில் முதலில் வரும்,
சூக்குமை என்பது பரை என்றும், நாதம் என்றும் அழைக்கப்படும்.இவ்வாக்கு காரணநிலையிலேயே அழிவின்றி நிற்பதாகும்.அதாவது, இந்த ஓசை(சப்தம்) தான் உற்பத்தியான மூலாதாரத்திலேய அசைவற்று நிற்க்கும். இதையே சூக்குமை அல்லது பரா வாக்கு என்பர்.
பின் இந்த சப்தமானது உதானன் என்ற வாயுவினால் மேலே எழும்பி வரும்பொழுது நாபீக்கு அருகில் வந்தவுடன், எழுத்துக்களின் வடிவில் நன்கு விளங்கித் தோன்றாது, பொதுப்படையாக தோன்றும்.இதனை பைசந்தி வாக்கு என்பார்கள்.
இதற்க்கு உதாரணம், மயில் முட்டையில் உள்ள நீரின் உவமையை கூறுவார்கள்.அதாவது, மயிலிடம் காணும் நிறங்கள் பலவும், மயில் முட்டையில் தெரிந்தும், தெரியாது இருத்தல் போல என்பர்.
மூன்றாவது வாக்கு மத்திமை.நாபியில் இருந்து எழுந்த வாயுவானது, இருதயம் பக்கம் வந்தவுடன், எழுத்து வடிவில் நன்கு விளங்கத் தோன்றி, இருதயத்தில் இருந்து உதானன் என்ற வாயுவால் உந்தப்பட்டு மிடறு அதாவது கண்டத்தில் நின்று மெல்ல ஒலிக்கும் வாக்காகும்.இது மத்யமா என்று பெயர் பெரும்.
இந்த வாக்கைதான் நாம் உலகவாழ்வில், தொண்டைக்குழி வரை வந்துவிட்டது, வாயில் வரவில்லை என்கிறோம்.இவ்வாக்கு பைசந்திக்கும், வைகரிக்கும் இடையில் நிற்ப்பதால், மத்திமை என்றப் பெயர் பெற்றது.
நான்காவதாக மிடற்றில் நின்ற உதானன் என்ற வாயு, அதாவது எழுத்துவடிவ சொற்க்கள், வாயின் வழியாக "பிராணன் "" என்ற காற்றின் மூலமாக வாய் வழியாக வெளியேறுகிறது.இது வைகரி வாக்கு எனப்படும்.
இந்த வைகரீ வாக்கே நாம் பேசும் சொல்லாகும்.எனவே நாம் பேசும் ஒரு சொல் கடந்து வரூம் நிலை இதுவேயாகும்.இந்த வைகரீ வாக்கே சொல்பவர் செவிக்கும், கேட்போர் செவிக்கும் புலனாவது.
இதில் சொல்பவர் காதில் மட்டும் கேட்பது
"சூக்ஷும வைகரி " என்று கூறுவர்.இது உலகவழக்கில் முனு முனுத்தல் என்பதாகும்.
கேட்போர் செவிக்கும் சொல்பவர் வாக்கு கேட்குமாயின் அது "ஸ்தூல வைகரி "என்று கூறுவர்.இது உலகவழக்கில் சொல்லாடல் என்பதாகும்.
மூலாதரத்தில் இருந்து ஓசையானது வாக்காக மாறும் இப்படிநிலை பற்றிய விபரங்கள் //அந்தணர்கள் ஓதும் வேதங்களில் விரிவாக உள்ளன என்று,
தமிழின் முதல் நூலாகிய தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.அப்பகுதி,
//எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில்தப நாடி
அளபிற் கோடல் "அந்தணர் மறைத்தே "
அஃது, இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுவின்றிசினே //
என்று பாடுகின்றார்.
மூலாதாரத்தில் உள்ள காற்றில் இருந்து தோன்றும் எழுத்துகளும் சொற்களும் படிநிலை கடந்து வாய்வழியாக வாக்குகளாக வெளிப்படும்.இவ்வாறு வெளியாகும் வாக்குகளின் தன்மை, வேதங்களில் ஓதும் முறையாக உள்ள உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம் என்னும் நிலைகளில் அமையும் என்றும் இதன் விவரங்கள் அந்தணர்களின் வேதங்களில் விரிவாக உள்ளன என்பதை "அந்தணர் மறைத்தே " என்று தொல்காப்பியர் சிறப்பித்து கூறுகின்றார்.
தொல்காப்பியம் போற்றும் அந்தணர் வேதம்.
தொல்காப்பியர் காலம் முதலே வேதங்களை போற்றுவது தமிழகத்தில் இருந்துவந்துள்ளது.எனவேதான் பாரதி வேதம் நிறைந்த தமிழ் நாடு என்றார்.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேய சிவம்.

No comments:

Post a Comment