Search This Blog

Sunday, November 19, 2017

ஜமீலின் நதியில் ஒரு மீன் குஞ்சாக நீந்திப் பாரத்தல்


வடிந்து கொண்டிருக்கும் பெருமழையைப் பையிலிட்டு அடைத்தபின் அதற்கான பலவர்ணங்களைத் தீட்டி மகிழ்கிறான் ஒருவன். அவன் அணிவித்த நிறங்களத்தனையும் ஒவ்வொரு சாயலாக இடம்பெயர்ந்து செல்கின்றன.
முதலில் ஒரு குழந்தையின் மனதாக...
அதன்பின்னர் முதிர்ந்த காலத்தைக் கூறும் பாத்திரமாக அடுத்து கனவுகளுக்குள் வாழும் உணர்வாக,
இப்படியாக மாறும் உணர்வுகளை மழையின் நிறங்களாகக் காட்டியிருக்கிறார் கவிஞர் ஜமீல்.
ஈழத்தின் கவிதைப்பரப்பில் பின்நவீனச் சாயலானது இவரது படைப்புக்கள்.
ஒரு குழந்தையின் மனமாகவே இவர் பேசுகிறார்.குழத்தையின் உள்மனதிலிருந்து பட்டாம்பூச்சியாகிப்பறக்கும் அவர்களது கனவுகள் வரைக்கும் இவரது தொகுதியில் சிறகடித்துப்பறக்கின்றன.
குழந்தை மனதிற்கு அப்பாலும் இவரது கவிதை வெளி பரத்திருக்கின்றது. அது காதலாகவோ நிலையில்லா அரசியலாகவோ சமூகத்தின் உடைந்த குரல்களாகவோ அது இருக்கின்றது.
பின்நவீனத்தின் ஒப்புவித்தல்களை எளிய வடிவில் இலாவகமாக ரசணைக்குறிப்புகளோடு விளங்கிக் கொள்ள முடிவது இவரது எழுத்துக்களின் வெற்றியே.
'அவன் பையில் ஒழுகும் நதி' பல இன்சுவைகளோடும் குழத்தைகளின் நிறக்கனவுகளோடும் மகிழ்விக்கின்றன.
இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள பல கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் நிலையினை எம்முள் கொணர்ந்து விடுகின்றன.
அட்டைப்படத்தின் நிறங்களோடு மகிழ்விக்கும் இந்நிலை கடைசிப்பக்கம் வரை நீண்டு கொண்டே செல்கின்றதெனலாம்.
இடைவிடாது சிறகடித்துக்கொண்டிருக்கும் கடலின் உட்புறத்தை இவர் அறிகிறார். இக்கடலை பறக்கச் செய்தல் எவ்வாறு என தனது எழுத்துக்களில் வர்ணிக்கிறார்.
மீண்டும் 'பனியில் உறையும் ஒளி'யில் அவதியுறும் நிலவொளிக்கு ஆடைபோர்த்தித் தவழ விடுவது கூடுதல் அழகு சேர்க்கிறது.
கனவுகளால் பாரிக்கும் சிறுவனின் புத்தகப்பை அவனது கனவுகளுக்கே ஆபத்தாகி விடுவதை கவிஞர் சமூகத்திற்கே ஓர் அறிவுரையாகச் சொல்கிறார்.
இரவு விடிவதற்குள் உடைமாற்றித்தயாராகும் குழந்தையின் உள்ளத்தில் விடியலென்றாலே சிறைக்கூண்டு தானே என்ற எண்ணங்களை உருவாக்கும் இச்சமூகம் பொல்லாத பாவியெனச் சொல்லத்தோன்றுகின்றது.
பட்டாப்பூச்சியை இரசிக்கும் மனங்களை அதன் மெலிந்த சிறகாகவே நினைத்து விடுகின்றனர். அது காற்றில் தூக்கி வீசப்பட்டு அங்குமிங்கும் அலைந்தலைந்து கடைசியில் மண்ணாகவே உக்கிவிடுகிறது.
இதிலிருந்து விடுவிக்கப்படுதல் தான் சுதந்திரம். இக்கவிதைகள் பலவற்றின் கருத்துக்கள் இவ்வாறே காணப்படுகின்றன.
அலைதலுக்காகவே வாழ்தல் என்பது போலாகிவிட்ட நம் வாழ்க்கை இரசிப்பதற்காக உருவாக்கப்படவேண்டும்.
அவை எமக்காகப் பங்கிடப்படவேண்டுமெனச் சொல்லும் சில கவிதைகளை இங்கு காணலாம்.
தனிமையில் பெருகும் எண்ணவோட்டங்கள் பெரும் சொற்குவியல்களாகி நீத்திக்கொண்டிருக்கின்றன. அவைகள் நாம் உறங்கும் அறையெங்கும் முத்தங்களைப் பொழித்து ஒரு துணையாக இருந்துவிடுகின்றது.
பின்பொரு நாளில் எம்மைப் பிரமிக்கவும் வைக்கிறது.
இது தான் கவிஞர் ஜமீலின் இத்தொகுப்பு.
மனங்களையும் மனது செல்லும் இடங்களையும் அவர் நன்கறிகிறார்.
நடுநிசி வீதியும் அங்கு உலாவுகின்ற முலையூட்டிகளும் அவர் எழுத்துக்களுக்கு நண்பர்களாகி விடுகின்றன. அவர்வாழும் நெய்தல்,மருதம் அவருக்குள் எண்ணங்களை உசுப்பிவிட்டு தானும் எழுந்து கொள்கின்றன.
வாழ்வியலையும் குழந்தைமனதையும்
சமூகத்தின் இரசணைகளோடு ஒப்புவிக்கும் இத்தொகுப்பு அவரது ஏனைய தொகுப்புக்களைப் போன்று சிறப்பாகவே இருக்கிறது.
*****
றஹ்மதுல்லாஹ்.

No comments:

Post a Comment