Search This Blog

Saturday, March 18, 2017

சில விஷயங்களை முன்கூட்டியே அறிகிற ஒரு பூனை

லியோனிட் எலிச் பிரஷ்னேவ் இவர் ரஷ்ய நாட்டின் பிரதமராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தவர். 1906ல் மிக எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர், அரசியலில் நுழைந்து படிப்படியாக உழைத்து, முன்னேறி ஸ்டாலினை அடுத்து மிக வலிமையான தலைவராகப் போற்றப்பட்டார். மிகுந்த மக்கள் செல்வாக்குடன் விளங்கினார். ரஷ்யாவை ஒரு வலிமையான நாடாக முன்னெடுத்துச் செல்வதில் இவர் மிக முக்கிய பங்கு வகித்தார்.
ஒருமுறை திபெத் மதத் தலைவரான தலாய் லாமாவைச் சந்தித்து உரையாடினார் பிரஷ்னேவ். தனது சந்திப்பின் நினைவாக தலாய் லாமா ஒரு கறுப்புப் பூனை ஒன்றை நினைவுப் பரிசாக ப்ரஷ்னேவிற்கு அளித்தார். அவ்வாறு பூனையைக் கொடுக்கும் போது, அதை மிகவும் கவனமாகப் பாதுகாத்து வரும்படியும், அதற்கு ஏதாவது துன்பம் நேரிட்டால் அது அதை வளர்ப்பவரையும் அவ்வாறே பாதிக்கும் என்றும் கூறி எச்சரித்து அனுப்பினார். பூனைக்கு அதை அளித்த தலாய் லாமாவின் நினைவாக ‘லாமா’ என்றே பெயர் சூட்டிய பிரஷ்னேவ் அதை அன்போடு வளர்த்து வந்தார். அந்தப் பூனை அமானுஷ்ய ஆற்றல் மிக்கதாக இருந்தது. பிரஷ்னேவிற்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே உணர்ந்து அவரை பல சமயங்களில் எச்சரித்து அவர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.

ஒருமுறை பிரஷ்னேவ், விண்வெளிப் பயணம் முடிந்து பூமிக்குத் திரும்பிய வெற்றி வீரர்களை வரவேற்கக் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் எதிர்ப்பட்ட பூனை அவரைத் தடுத்ததுடன், வழியிலேயே படுத்துக் கொண்டும் விட்டது. இதைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட பிரஷ்னேவ், தான் அப்போது பயணப்பட வேண்டியிருந்த காரை அனுப்பி விட்டு, சிறிது நேரம் பூனையைக் கொஞ்சி சமாதானம் செய்து விட்டுப் புறப்பட்டார்.
அவர் உண்மையிலேயே செல்ல வேண்டிய கார் முன்னால் சென்று கொண்டிருந்தது. மற்ற பாதுகாப்பு வீரர்களின் கார்கள் அதனைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தன. பின்னால் வெகு தொலைவில் தனி கார் ஒன்றில் பிரஷ்னேவ் வந்து கொண்டிருந்தார். அவர், முதலில் செல்லும் அவருக்குச் சொந்தமான காரில் தான் வந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்த எதிரிகள் அந்தக் காரைச் சரமாரியாகச் சுட்டனர். அதில் பயணம் செய்து கொண்டிருந்த ஓட்டுநரும், உதவியாளரும் அதே இடத்தில் பலியாகினர்.

பூனை தடுத்ததால் அந்தக் காரில் பயணம் செய்யாமல் தவிர்த்த பிரஷ்னேவ் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அது முதல் பூனை லாமாவின் மீது அவரது அன்பு அதிகமானது.
மற்றொருமுறை முக்கியமான ஒரு சந்திப்புக்காக வேக வேகமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தார் பிரஷ்னேவ். எங்கிருந்தோ வேகமாக வந்த பூனை ’லாமா’ அவரது சட்டையைப் பிடித்து இழுத்தது. வித்தியாசமான குரலில் கத்தியது.
ஏதோ ஒரு ஆபத்தையே ’லாமா’ முன்னறிவிக்கிறது என்று உணர்ந்த பிரஷ்னேவ், தனது உதவியாளரை முன்னால் அதே காரில் அனுப்பி விட்டு, தான் தாமதமாக வேறொரு காரில் சென்றார்.
அவர் சென்று கொண்டிருக்கும் போதுதான் அந்தச் சேதி வந்தது. அவர் முன்பு செல்லவிருந்த கார் ஒரு லாரியில் மோதி, பிரஷ்னேவ் அமர்ந்திருக்கக் கூடிய இருக்கையில் இருந்தவர் மாண்டு விட்டார் என்று.
அதுமுதல் பூனை லாமாவை மிகவும் நேசிக்க ஆரம்பித்தார் பிரஷ்னேவ். தன்னுள் ஒரு பாதியாகவே அதைக் கருத ஆரம்பித்தார்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியில் சுற்றிக் கொண்டிருந்த லாமா 1982ம் ஆண்டில் ஒரு காரில் அடிபட்டு இறந்தது. அதே ஆண்டில் பிரஷ்னேவும் காலமானார்.

No comments:

Post a Comment