Search This Blog

Thursday, October 13, 2016

கடலின் இரகசியத்தை உடலில் அறிந்துகொண்டாள்

தன்னுடல்
கடலின் நீலம் பொலிந்திருப்பதாக
அவனிடமிருந்து அறிந்துகொண்டாள்

நிலத்தின் நதியெல்லாம்
நிலைபெறுகிற கடல்
ஒரு ரகசியம்

கடலின் இரகசியத்தை
உடலில் கண்டறிவதும்
உடலின் இரகசியத்தை
கடலெனத் திறப்பதும்
அவர்களிடத்தில் நிகழ்கிறது

திறக்கத் திறக்க
திறந்துகொண்டே இருக்கிற
கடல்தான் உடலென்பதை
அவளறிந்த பொழுது
உணர்ந்தாள்
மூடவே மூடாத கடலின் திறப்புக்குள்
எத்தனை மூடிய இரகசியங்கள்
இன்னும் இன்னும் அவளறிய.



அதற்கு முன்பு
அவள் மிகச்சுதந்திரமானவளாக இருந்தாள்

தன்னைப் பறவை எனவும்
கூண்டினை விரும்புவதேயில்லை
பறவைகள்
எனச் சொல்லித் திரிபவள்தான் அவள்

அவன்
அவளை நேசிக்கத் தொடங்கினான்
அவளும் சம்மதித்தாள்

அவன்
அவளை கொண்டாடத் தொடங்கினான்
அவளும் சம்மதித்தாள்

அவன்
அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கினான்
அவள் அதை விரும்பினாள்

அவன்
இப்போது அச்சமடைகிறான்
அவள் அதனை அறியவில்லை

அவன் இப்போது
மேலும் அச்சமடைகிறான்
அவள் உணரவேயில்லை

அவன் இப்போது மேலும் மேலும்
அச்சமடைகிறான்
அவள் அதற்கு முன்பு
அவள் மிகச்சுதந்திரமானவளாக இருந்தாள்

பறவையின் இயல்பினை
என்றேனும் அவள் கைகொள்ளகூடுமென
கலங்கி கூண்டு ஒன்றினை
செய்யத் தொடங்கினான்.


Sakthi Jothi

No comments:

Post a Comment