Search This Blog

Thursday, July 28, 2016

தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார்

தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரில் பிறந்தவர் ஞானக்கூத்தன். அரங்கநாதன் என்ற இயற்பெயரை, திருமந்திரம் நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் ஞானக்கூத்தன் என்று பெயர் மாற்றிக் கொண்டார்.
இராமகிருஷ்ணன், சா.கந்தசாமி, ந.கிருக்ஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ’கசடதபற’ இதழைத் துவக்கினார். ’ழ’, ’கவனம்’ ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார்.
'அன்று வேறு கிழமை', 'சூரியனுக்குப் பின் பக்கம்', 'கடற்கரையில் ஒரு ஆலமரம்' போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்புகளில் குறிப்பிடத் தகுந்தவை.
-----------------------------------------------------------
 

தமிழ் கவிதையில் ஞானக்கூத்தனின் இடம் என்ன என்று கேட்டால் அவர்தான் முதன் முதலில் தனி மனிதப் பிரக்ஞையோடு கவிதைகள் எழுதினார் எனலாம்.  தமிழ் சமூகம் நவீனம் அடைந்ததன் அடையாளம் ஞானக்கூத்தன் கவிதைகளிலேயே ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஒருவகையில் அவரை தனியர்களின் கவிஞன் என்று சொல்லலாம்.  ஞானக்கூத்தனின் வருகைக்கு முன் கவிதை என்பது ஆன்மீக விடுதலையை, சமூக விடுதலையை, கடவுளின் மீதான பக்தியை, இயற்கையைப் பற்றிப் பேசும் அவற்றின் இருப்பை, அதன் மீதான தத்துவவிசாரத்தை, அழகியலைப் பேசும் கவிதைகளாக இருந்தன. மற்றமையைப் பற்றிப் பேசும், விசாரப்படும் கவிதைகளாக இருந்தன. ஞானக்கூத்தன் மற்றமையின் இருப்பில் இருந்து சுயத்தின் இருப்பைப் பேசும் கவிதைகளை எழுதிக்காட்டினார்.  மனித சுயத்தின் இருப்பும், தவிப்புமே அவரது கவிதைகளின் பிரதான உள்ளடக்கமாய் இருந்தன.
1970 களில் இந்திய சூழலில் ஒரு ஆழமான கசப்பும், தனிமையும், நம்பிக்கையின்மையும் உருவாகத் துவங்கியது. நேரு யுகத்தின் மகத்தான கனவுகள், விடுதலை பற்றிய கொண்டாட்ட மனோபாவங்கள் மாறி எதார்த்தம் அப்பட்டமாக முகத்தில் அடித்தபோது ஒவ்வொரு மனிதனும் தனியனாக, உதிரியாக, விடுபட்டவனாக சமூகத்தால் கைவிடப்பட்டவனாக மாறிப்போனான். மார்க்ஸிய உரையாடலில் சொன்னால் மனிதன் சமூகத்திடம் இருந்து அந்நியப்பட்டு போனான்.

இந்த அந்நியமாதல் இந்தியா முழுதுமே இலக்கியத்தில், குறிப்பாக கவிதையில் ஒரு பண்பு மாற்றத்தை உருவாக்கியது. தனியர்களின் கசப்பு, விரக்தி, நம்பிக்கையின்மை, எரிச்சல் போன்றவை கவிதைகளாகின. இந்த காலகட்டத்தில் தொழிற்பட்ட ஞானக்கூத்தன் கவிதைகளிலும் இந்த பண்புகள் இருந்தன. ஆனால், ஞானக்கூத்தன் விரக்தியையும் எரிச்சலையும் பகடியாக வெளிப்படுத்தினார் என்பதுதான் அவரை மற்ற இந்தியக் கவிஞர்களிடம் இருந்து தனித்துக் காட்டுவதாக இருக்கிறது.  கவிதையில் ஒரு மனிதன் சிரிக்க முடியும் என்பதையும் நகைச்சுவைக்கு கவிதையில் இடம் உண்டு என்பதையும் ஞானக்கூத்தன்தான் எழுதிக்காட்டினார்.  இந்த பகடியான கவிதைகளின் பின்புறம் பூடகமான தத்துவவிசாரங்கள், இருத்தலியல் சிக்கல்கள் போன்ற தீவிரமான விசயங்கள் இருந்தன என்பதால்தான் ஞானக்கூத்தன் இன்றும் பொருட்படுத்தப்பட வேண்டிய கவிஞராக இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை.
 அவர் தீவிரமாக இயங்கத் துவங்கிய காலகட்டம் என்பது திராவிட இயக்கம் அதிகாரத்துக்கு வந்திருந்த காலகட்டம். திராவிட இயக்கத்தின் தனித் தமிழ்நாடு கொள்கைகளாலும் கடவுள் மறுப்பு உள்ளிட்ட பண்பாட்டு வெறுப்புக் கோட்பாடுகளாலும் அதிருப்தி அடைந்த ஞானக்கூத்தன் அதில் இருந்து விலகி, தனக்கென ஒரு அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கொண்டார். ம.பொ.சி யின் தமிழரசுக் கழகத்துடன் இணைந்து தமிழையும், இந்திய தேசியத்தையும் கொண்டாடும் கவிஞராக தன்னை முன்வைத்தார்.

ஞானக்கூத்தன் தமிழ் மரபு இலக்கியங்களில் சமஸ்கிருத இலக்கியக்கியங்களிலும் ஆர்வம் வாசிப்பும் உடையவர். இந்த இரண்டு பெரு மரபுகளில் அவருக்கு இருந்த வாசிப்பு அவர் கவிதைகளின் வடிவத்தைத் தீர்மானித்தன என்றால் தமிழ் வாழ்வின் நவீன மனநிலை அவரது கவிதைதைகளின் அக உலகைத் தீர்மானித்தன.  மரபான பாவகைகளில் சிக்கலான நவீன வாழ்வின் அவலங்களை பகடியும் எள்ளலும் தொனிக்கும் தொனியில் எழுதினார்.
ஞானக்கூத்தனின் படைப்பு உலகம் ஒரு எளிய மனிதனின் பிரச்னைகளால் ஆனது.  ஆனால், அது எளிய விஷயங்களை மட்டுமே பேசி விடுவதில்லை என்பதில்தான் ஞானக்கூத்தனின் மேதமை உள்ளது.

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகமால் இருக்க
கை அருகே வை

இந்தக் கவிதையில், பொது இடத்தில் பொருட்கள் களவு போதல் எனும் லெளகீகம் வெறும் லெளகீகமாக இல்லாமல் ஒருவகை தத்துவவிசாரமாக மாறியிருப்பதைக் கவனியுங்கள்.
கவிதை என்பது தீவிரமான குரல்வளையை நெரிக்கும் பிரச்னைகளையும் அடர்த்தியான விஷயங்களையும் மட்டுமே பேச வேண்டும் என்ற எல்லைகளை உடைத்து மிக எளிமையான விஷயங்களைக்கூட கவிதையில் பேச முடியும் என்று நிறுவிக்காட்டியவர் ஞானக்கூத்தன். இயல்பான ஒரு பேச்சை, ஒரு பகடியை, ஒரு ஹாஸ்யத்தை, அதற்கான எளிய மொழியில் கவிதையில் எழுதிக்காட்டியவர்களில் ஞானக்கூத்தனே முன்னோடி.

தோழர் மோசிகீரனார்

மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும்  நீ
சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக் கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்!
ஆனால், உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு
அரசாங்கத்துக் கட்டடத்தில்
தூக்கம் போட்ட முதல் மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்.

இப்படியான எளிய கவிதைகளை ஞானக்கூத்தன் எழுதி இருக்கிறார். இது போன்ற எளிமைதான் ஞானக்கூத்தனின் தனித்துவம். பெரிய விஷங்களை சிக்கலான விஷயங்களை மட்டுமே பாடாமல் எளிய விஷயங்களை பாடும் கலைஞனாகவே அவர் இருந்தார் என்பதுதான் அவரது தனித்துவத்துக்கு காரணம். தமிழ் கவிதை வரலாற்றில் காலத்துக்கும் ஞானக்கூத்தன் பெயர் நினைவுகூறப்படுமானால் அது அவர் முன்வைத்த பாசாங்கற்ற கவிதை மொழிக்காக, இவ்வளவு எளிய விஷயங்களை துணிந்து கவிதைகள் ஆக்கியமைக்காக  இருக்கும். அவரே ஒரு கவிதையில் எழுதியது போல கும்பலாய் கொட்டி வைக்கப்பட்ட செங்கல் குவியலில் தனித்துச் சரியும் தனிக்கல் அவர்... கும்பலோடு, பொது புத்திக்குள் சேராத தனியர்... தனித்துவமானவர்.

    - இளங்கோ கிருஷ்ணன்
கவிதை போன்றதொரு வாழ்க்கையை கடந்து சென்றுவிட்ட ஞானக்கூத்தன்
தமிழ் நவீனக் கவிதையின் மிக முக்கியமான கவிஞரான ஞானக்கூத்தன் மறைந்துவிட்டார். அவரது கவிதைப் பயணம் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கடந்த 50 வருடங்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாறிவரும் சமூக மாற்றங்களின் போக்குகளை எவருக்கும் வளையாமல் எதற்கும் இசைந்து கொடுக்காமல் மிக நாசுக்காக நகைச்சுவையாக எள்ளலோடு கவிதைகளைப் படைத்தவர் அவர். நவீன கவிதைக்கு வேராகத் திகழ்ந்த ஞானரதம், ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் தனது தீவிர பங்களிப்பை செலுத்தியவர்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரதியைத் தொடர்ந்து தமிழ்க் கவிதை மரபை பெரும்வீச்சோடு முன்னெடுத்தவர் பாரதிதாசன் என்றாலும் தமிழ் கவிதைக்கு சமகால நவீன மொழியை வழங்கியவர் ந.பிச்சமூர்த்தி.
மாறிவரும் உலக இலக்கியப் போக்கின் கண்ணியை அதன் வேகத்தோடு தமிழ் தன்னை இணைந்துகொண்டதற்கு தமிழிடமுள்ள வரலாறு ஒரு காரணம் என்றால் தக்க நேரத்தில் அதை முன்னெடுத்த அற்புதமான தமிழ் கவிஞர்களும் ஒரு காரணம் என்றுதான் சொல்லவேண்டும்.
ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா, சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன், விக்கிரமாதித்யன், ந.ஜெயபாஸ்கரன், ழ.ராஜகோபால், கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன் என்று செல்லும் இந்த வரிசை மொழியை வளம் சேர்ப்பதோடு சிந்தனையை செதுக்கவும் துணைநின்றது.
இவர்களில் பலரும் தத்துவம், தனிமை, ஆற்றாமை, காலம், இடம் என தேடலின் தீவிரத்தில் இயங்கியவர்கள்... இவர்களிலிருந்து நிறைய வேறுபட்டு நிற்கிறார் ஞானக்கூத்தன். எங்கள் தெரு கமலம் சைக்கிள் விட்டாள்... என்று தொடங்கும் அவரது கவிதை ஒன்று என்மேல் ஒருமுறை விட்டாள்.. மற்றபடிக்கு எங்கள் தெரு கமலம் சைக்கிள் விட்டாள் என்று முடியும் போது வாய்விட்டு சிரிக்கவைக்கக்கூடியது.
''மோசீகீரா உன்னைப் பெரிதும் மதிக்கிறேன். அரசுக் கட்டிலில் முதல்முதல் தூக்கம் போட்டவன் நீ யென்பதால்'' என்ற கவிதையில் நீண்டதூரம் நடந்துவந்த களைப்பினால் முரசு கட்டிலில் மீதேறி துயில் கொண்டுவிட்ட புலவர் மோசிகீரனார். இவர் புலவராயிற்றே அடடா என அவருக்கு அருகே நின்று தூக்கம் கலைந்துவிடாமல் கவரி வீசிய மன்னரின் பெருந்தன்மையைப் பற்றி ஏதாவது சொல்லப்போகிறாரோ என்று தேடினால் அதற்கு மேல் அவர் எழுதவில்லை. ஞானக்கூத்தன் பாடவந்தது, மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியோ, புலவர் மோசிகீரனாரைப் பற்றியோ அல்ல என்பது நம் அரசு அலுவலக லட்சணங்களை நன்கு உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.
70களின் அரசியல் மேடைகளை கிண்டலடித்து இவர் எழுதிய பல கவிதைகள் பிரசித்தம். அவை பலமான எதிர்ப்புகளை இவருக்குப் பெற்றுத் தந்தன. அதேநேரத்தில் எதையும் எவருக்காகவும் தனது விமர்சனப் போக்கை மாற்றிக்கொள்ளாதவர் என்ற தெளிவையும் உலகுக்கு உணர்த்தின. கல்லூரி தமிழ் இலக்கிய வகுப்புகளில் பேராசிரியர்களின் கோபத்திற்கு அதிகம் ஆளானவர்களில் இக்கவிஞருக்கு முக்கிய பங்குண்டு.
அதற்கு காரணம் அவரது இந்தக் கவிதை. ''எனக்கும் தமிழ்தான் மூச்சு... ஆனால் அதை நான் பிறர்மேல் விடமாட்டேன்'' என்ற இக்கவிதை வரிகள் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்! வரிப்புலியே, இளந்தமிழா எழுந்திருநீ, என்றெல்லாம் கேட்டுப் பழகிய தமிழ் வாசகனுக்கு ஞானக்கூத்தனின் கவிதைகள் அதிர்ச்சியைத் தந்திருப்பதில் வியப்பில்லை. ஆனால் எழுபதுகளில் களைகட்டிய அரசியல் இயக்கங்களின் வெற்றுக்கோஷங்களையும் அதைவைத்துமட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருப்பதையுமே அவரது ''எனக்கும் தமிழ்தான் மூச்சு'' கவிதை பகடி செய்தது என்பதை புரிந்துகொண்டால் குழப்பம் தெளியும்...
மேலோட்டமான உணர்ச்சிப்பெருக்கில் தன்னை கவிஞர்களாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள் மத்தியில் ஆழ்ந்த சங்க இலக்கியப் பயிற்சியோடு தனது படைப்புகளை வடிவரீதியாகவும் முன்னிறுத்தியவர். தமிழ்தமிழ் என்று சொல்லிவந்த அரசியல்வாதிகளின் போக்குகளை கடுமையாக விமர்சனம் செய்பவர் என்றாலும் இடஒதுக்கீடு, ஈழத்தமிழர் ஆதரவு போன்றவற்றில் முக்கிய பற்று கொண்டவர் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. இவரது முக்கியமான கவிதைத் தொகுப்புகள் அன்று வேறு கிழமை, கடற்கரையில் ஒரு ஆலமரம், பென்சில் படங்கள் போன்றவை.
இளங்கவிஞர்களை வாஞ்சையோடு அழைத்துப் பேசி அவர்களைப் பாராட்டி வழிநடத்தத் தவறியதில்லை. விமர்சனம் என்று வரும்போது எவ்வகை அதிகார பீடத்தையும் துணிச்சலாக எதிர்க்கவும் தயங்கிதில்லை. அதிகார மட்டத்திலிருந்து கிடைக்கும் விருதுகளுக்கு எதிரான இலக்கிய வாழ்க்கைப் பயணம் என்ற அவரது குணம் அனைத்தும் அவரது கவிதையைப் போன்றதே.
- பால்நிலவன் (தமிழ் இந்து, 28/07/2016)

1970 களின் நடுப்பகுதியளவில் இலக்கியப் பத்திரிகை ஆரம்பித்தால் என்ன என்ற யோசனைகளோடு நானும் சில நண்பர்களும் இருந்தோம். அப்போதுதான் ஞானக்கூத்தன் எங்களுடன் வந்து இணைந்தார். அவர் நல்ல படிப்பாளியாகவிருந்தார். பழைய இலக்கியங்களில் அவருக்கு ஆழ்ந்த அறிவும் விருப்பமும் இருந்தது. செவ்விலக்கியங்களை விபரமாக ரசிக்கும்படியாக அவர் கூறுவதுண்டு. கம்பராமாயணம்பற்றி அவர் சொல்வது அவ்வளவு இனிமையாகவிருக்கும். ஞானக்கூத்தன் பேசுவதைக் கேட்டே எனக்கும் அவர் மேல் மதிப்பேற்பட்டது.
தமிழ் கலை இலக்கியப் பத்திரிகையான “நடை“ காலாண்டிதழாக வந்துகொண்டிருந்தது. முக்கியமான சில மாற்றங்களை கொண்டுவந்த இதழ்கள் நடையாகும். நடைதான் ஞானக்கூத்தனை பெருமளவில் அறிமுகப்படுத்தியது. 60களின் பிற்பகுதியிலும் 70களின் ஆரம்பத்திலும் ஞானக்கூத்தனின் கவிதைகளில் தமிழ் கவிதை உணர்வுகள் புதிய உணர்ச்சியை துலங்கச் செய்தன. தெளிவாகவும் பட்டவர்த்தனமாகவும் உணர்ச்சியை வெளிப்படுத்தியவர். 1973ஆம் ஆண்டு ஞானக்கூத்தனின் திருமணம் நடந்தது. அவரது திருமணப் பரிசாக அவருடைய கவிதைகளைத் தொகுத்து வழங்க நினைத்தேன். முதல் தொகுப்பான “அன்று வேறு கிழமை“ கவிதைத் தொகுப்பை பிற நண்பர்களின் உதவியோடு வெளியிட்டோம். அத்தொகுப்பில் முக்கியமான ஓவியர்கள் ஆதிமூலம், பாஸ்கரன், வரதராஜன், த்ட்சணாமூர்த்தி போன்றவர்களது ஓவியங்களும் இணைந்து அழகான பதிப்பாக வெளிவந்தது. மிக காத்திரமான கவிதைத் தொகுப்பாகவும் அமைந்தது.
அடுத்து நாங்கள் வெளியிட்ட முக்கியமான இலக்கிய இதழான “கசடதபற“ ஞானக்கூத்தன் வைத்த பெயர்தான். “கசடதபற ஒரு வல்லின மாத இதழ்“ இந்தப்பெயரை ஞானக்கூத்தன் அவர்கள்தான் வைத்தார். தொடர்ந்து கசடதபறவிலும் எழுதிக் கொண்டிருந்தார்.
அன்று திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தனுக்கு நல்ல அறை ஒன்று இருந்தது. கசடதபற ஆரம்பித்தபோது நாங்கள் எல்லோரும் 365 நாட்களில் 300 நாட்கள் அந்த அறையில்தான் இருப்போம். கிழக்குப்பார்த்த அறை ஜன்னலால் கடல்காற்று வீசும். நாங்கள் உரையாடிக் கொண்டிருப்போம்.
 க்ரியா ராம்சேர்

No comments:

Post a Comment