Search This Blog

Monday, June 6, 2016

உதடுகள் நனைக்கும் பொழுதுகள்

நீ பிரிந்து சென்றபோது முத்தங்களை
வழங்கத் தவறவிட்டது குறித்து ஆழ்ந்த வருத்தங்களை
உன் கோபச்சொற்களில் நிரப்பிவிட்டுப் போனாய்
கொடுக்கத் தவறியதால் உன் சிவந்த முகத்தின் அழகை
ரசித்ததை அறிந்திருக்கமாட்டாய்
என் மீதான ஆழ்ந்த காதலை
கொடுக்காத முத்தங்களின் வழியேதான் அனுபவிக்கிறேன்
இந்நேரம் உதடுகளால் உன் உதடுகளை நனைக்கும் பொழுதுகளை
கற்பனை செய்துகொண்டிருப்பாய்
அவ்வேளை உன் சொர்க்கத்திலிருக்கும்
இளம்கொடிகளால் ஆன ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்திருப்பாய்
என் ஆடைகளின் பொத்தான்களை மெள்ள அவிழ்த்து
என் மீது உன் உடலால் நீந்தி என் சிப்பிகளைத் திறந்து
ஒளிரும் முத்துக்களை சுகித்துக்கொண்டிருப்பாய்
தனித்திருக்கும் உன்னிடம் இல்லாத நான் இருந்துகொண்டிருப்பேன்
யாவும் கொடுத்தனுப்பாத முத்தங்களால்
நிகழ்த்துகொண்டிருப்பவை என்பதை அறிகிறாயா
எப்படியாவது தேற்ற முனைகிறபோது
உன் ரெளத்திரம் கடலைக் கவிழ்த்தாலும்
அணையாத நெருப்பாய் இருப்பதை அறிவேன்
பிரிவின் வலியில் நீ கரைந்து சொட்டுவதுபோல
கோடை வெயிலில் தகிக்கும் என்னுடலாய்
உருகிக் கரைந்து சொட்டுகிறேன்
நீயும் நானும் பார்த்தும் பேசாத இந்த நாட்களைச்
சபித்துக்கொண்டிருக்கிறேன்
உன் பார்வையில் உன் ஒரு சொல்லில்தான்
என் ஆயுட்காலம் நீள்கிறது…
IYYAPPA MADHAVAN

No comments:

Post a Comment