Search This Blog

Tuesday, May 31, 2016

'நந்தன்' ஆசிரியர் அய்யா ஆனாரூனா காலமானார்

நந்தன் வழி இதழின் ஆசிரியரும், தமிழ்ச்சான்றோர் பேரவையின் நிறுவனருமான நா.அருணாச்சலம் அவர்கள் நேற்று மாலை காலமானார். தமிழகத்தில் ராஜீவ் கொலைக்குப்பிறகு பொதுவாகவே இயக்கமாக அணி திரள ஒரு அச்சம் நிலவியது. அந்த சமயத்தில் ராஜிவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு என, தடா கோர்ட் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தூக்கு தண்டனை ஒழிப்பு எதிர்ப்பு இயக்கம் பழ.நெடுமாறன் தலைமையில் உருவானது. அதற்கு முற்றுமுழுதாக பின்னணியில் இருந்தது அய்யா அருணாச்சலம்தான். மேலும், இந்த வழக்கின் மேல்முறையீடு டெல்லியில் செய்யப்பட்டபோது வழக்குச் செலவு முழுவதையும் ஏற்றுச்செய்தார்.

ஆனாரூனா என அழைக்கப்பட்ட அய்யா நா.அருணாச்சலம் வருவாய்த் துறையில் அதிகாரியாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். கடைசியாக, செங்கல்பட்டில் தாசில்தாராக பணியாற்றி விருப்பஓய்வு பெற்றவர். 'அடையாறு மாணவர் நகலகம்' என்ற வணிக நிறுவனத்தை இன்றுவரை வெற்றிகரமாக நடத்திவந்தவர். கலைஞரின் 96 -01 ஆட்சிக்காலத்தில் 100 தமிழறிஞர்களுடன் தமிழ்வழிக் கல்விவேண்டி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். அன்றைய தமிழ்த்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் அளித்த வாக்குறுதியின்பேரில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. நந்தன் இதழில் இவர் 'நெஞ்சின் அலைகள்' என்றபெயரில் எழுதிவந்த தொடர் அழுத்தமான அரசியல் கருத்துகளை முன்வைத்தது. "தமிழால் ஒன்றிணைவோம்' என்ற முழுக்கத்தை முன்வைத்து, தமிழமைப்புகளையும் திராவிட இயக்கங்களையும் இணைத்து தமிழ் மக்களின் கலாச்சார,பண்பாட்டு நெருக்குதலுக்கு எதிரான அமைப்பாக 'தமிழ்ச்சான்றோர் பேரவை' என்ற அமைப்பை நிறுவி நடத்திவந்தார்.
தமிழிசைக்கென்றே 'தந்தை பெரியார் தமிழிசை மன்றம்' என்றபெயரில் மன்றம் ஒன்றை நிறுவி தமிழிசை கலைஞர்களை ஊக்குவித்தார். கடந்த சில நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்த இவரது இறுதி நிகழ்வு, நாகை மாவட்டத்திலுள்ள திருக்கண்ணபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

வேண்டாம் வீண் பெருமை

ஆனாரூனா

விசித்திரமும் வேடிக்கையும் விபரீதமும் நிறைந்த வரலாறு, இந்திய வரலாறு. புன்னகையும், கண்ணீரும், விழுமியங்களும், அவலங்களும், தியாகங்களும், துரோகங்களும் நிறைந்த காட்சிகள் இந்திய வரலாற்றில் ஏராளம். ஆனால், இந்தியா என்பது ஒரு திட்டவட்டமான, ஒரு தேசியப் பின்னணி கொண்ட நாடுதானா?

தொன்மை ஏடுகளும், இதிகாச புராணங்களும், இலக்கியச் சான்றுகளும் இந்தியா என்கிற ஒரு நாடு பற்றிப் பேசவே இல்லை. சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும், நிலப்பிரபுக்களும், பொதுவில் குல-கணத் தலைவர்களின் ஆளுமையின் கீழேதான் வெகு காலம் கடந்திருக்கிறது. அப்போதெல்லாம் இந்தியா என்று எந்த ஒரு பகுதியும் அறியப்படவில்லை.

பல குழுக்கள் ஆற்றோரங்களில் நிலைபெற்றும், பல குழுக்கள் புலம்பெயர்ந்தும், வேறு சில குழுக்கள் தொலைதூரங்களிலிருந்து நாடோடிகளாகவும் வந்து, கலக்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல், பொங்கிப் புழுங்கி சகித்துச் சமாளித்து எப்படியோ வாழ்ந்து தீர்த்திருக்கிறார்கள். ஆனால், பல குழுக்களைச் சேர்ந்த மக்கள் இங்கே நிலைத்தும், அலைந்தும், வாழ்வாதாரங்களுக்காகப் போராடி வந்தாலும், இந்தக் குழுக்களால் வந்தேறிகளான ஒரு கூட்டத்தை மட்டும் எப்போதும், நிரந்தரப் பகை இனமாகவே கருதி வந்திருக்கிறது. அந்த கலக்க முடியாத கலக்க நிலை இன்றுவரை தொடரவே செய்கிறது.

இந்தப் போக்கினைத் தான் வரலாற்றறிஞர்களும், சமூகவியலாளர்களும் “ஏடறிந்த இந்திய வரலாறு” (?) அனைத்தும் திராவிட - ஆரியப் போராட்டங்களின் வரலாறே.’’ என்று குறிப்பிடுகிறார்கள். ‘இப்போது’ எழுதப்படும் இந்திய வரலாற்றுப் புனைவுகளில் மௌரிய அல்லது அசோக சாம்ராஜ்யம் மாத்திரமே வடக்கில் பேரரசாகவும், ராஜராஜசோழனின் சோழ சாம்ராஜ்யம் மாத்திரமே தெற்கில் பேரரசாகவும் விளங்கியதாக விளக்கப்படுகின்றன. (இந்தப் பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின்னணியிலும், திராவிட - ஆரியப் பிரச்னை பெரும்பங்கு வகிக்கிறது. அதிகார மையங்களில் சாதுரியமாக நுழைந்து, ‘வரம் கொடுத்தவன் தலையிலேயே கால் வைக்கும் காரியங்களைத் திறம்பட நடத்தினார்கள் ஆரியர்கள்.)

அசோக சாம்ராஜ்யமோ, சோழப் பேரரசோ இந்திய உணர்வை ஏற்படுத்தவில்லை. அசோகன் காலத்திலும், அவனது பாட்டன் சந்திரகுப்தன் காலத்திலும் படையெடுத்து வந்த அலெக்சாண்டரும், அவனைத் தொடர்ந்து வந்த தளபதிகளும், மெகஸ்தனிசின் குறிப்புகளும் வடக்குப் பகுதியை சிந்து நதிப் பிரதேசம் என்று குறிப்பிடுவதற்காக - சிந்தஸ் அல்லது இந்தஸ் என்று வழங்கினார். இந்த ‘இந்தஸ்’ என்பதன் திரிபே இந்தியா என்று விரிந்தது. பின்னர் வந்த பிரிட்டிஷ்காரர்கள்தான் பல்வேறு குறுநில மன்னர்களின் ஆட்சியில் கிடந்த பகுதிகளையெல்லாம் வென்று, இந்தியா என்கிற பெயரைச் சூட்டினார்கள்.

பெயர் ஒன்று சூட்டப்படுவதாலேயே ஒரு பூ அல்லது ஒரு பொருள், அல்லது ஒரு நாடு - எதுவும் அதன் இயல்பான தன்மையிலிருந்து மாறி புதிய பெயருக்குத் தகுந்த தன்மையைப் பெற்று விடுவதில்லை. ‘ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், ரோஜா ரோஜாதான்.’ பெயர் மாற்றப்படுவதால் புலி புழு வாகிவிடாது; புழு புலியாகி விடாது.

பிரிட்டிஷ்காரர்களால் பிடிக்கப்பட்ட நாடுகளின் மொத்தப் பகுதிக்கும் இந்தியா என்று பெயர் சூட்டிவிட்டாலும், இந்தப் பகுதிகள் எப்போதும் இந்தியத் தன்மை பெற்று விடவில்லை. பெயராவது நிலைத்ததா என்றால் அதுவும் இல்லை. பிரிட்டிஷ் இந்தியாவின் நீள அகலம் வேறு, ‘சுதந்திர’ இந்தியாவின் நீள அகலம் வேறு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியா என்று அழைக்கப்பட்ட ஒரு பகுதி ‘இல்லை; நாங்கள் இந்தியர்கள் இல்லை’ என்று பகிரங்கமாக அறிவித்து, வெளியேறிவிட்டது. பாகிஸ்தான் என்றொரு புதிய நாடு உருவாகிற்று.

பாகிஸ்தானைத் தொடர்ந்து பலபகுதிகளும் பிரிந்துவிடக் கூடாதே என்கிற பயத்தில் தான் ‘சுதந்திர இந்தியா’வில் அதிகாரம் பெற்றவர்கள், பிரிவினைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். பிரிவினைத் தடைச் சட்டம் என்றொன்று இருப்பது, பிரிவினைக்கான வாய்ப்புகளும் காரணங்களும் இருக்கின்றன என்பதைப் பகிரங்கமாக ஒத்துக் கொள்வதையே வெளிப்படுத்துகிறது.

இந்திய அரசியல் சாசனமும் ‘இந்திய யூனியன்’ என்றே நாட்டைக் குறிப்பிடுகிறது. ஆம், இந்தியா என்பது பல தேசங்களின் தேசிய இனங்களின், குலங்களின், கோத்திரங்களின் கூட்டமைப்புதான். இங்கே சட்டபூர்வமான தேசியம் என்பது சரித்திரப்பூர்வமான குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஒரிசா, வங்கம் என்பது வரலாற்றுப் பூர்வமாக ‘தேசியத் தன்மை’ கொண்ட பகுதிகளைக் குறிக்கும். இந்தியா என்பது பல தேசங்களைக் கொண்ட பெரும் பரப்பு - அல்லது ‘மாநிலம்’ என்பதைக் குறிக்கும்.

ஆனால் இங்கே உலகில் எங்கும் இல்லாத அதிசயமாய், தேசம் மாநிலமாகவும், மாநிலம் தேசமாகவும் குழப்பத்தில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் வழங்கப்படும் விண்ணப்ப படிவங்களில் ‘நேஷனாலிட்டி’ என்று குறிப்பிடப்படும் இடத்தில் தமிழியன், அல்லது, கேரளியன், அல்லது வங்காளி என்றே குறிப்பிடப்படவேண்டும். இது தான் அறிவுப்பூர்வமானது; சரித்திரப்பூர்வமானது. ஆனால் ‘நேஷனாலிட்டி’ என்றால் ‘இந்தியன்’ என்றே குறிப்பிடும்படி நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது. அதே போல், தமிழ்நாடு, அல்லது கேரளம் போன்ற நாடுகளை ‘மாநிலம்’ என்று குறிப்பிட்டு மயக்கத்தில் ஆழ்த்துகிறார்கள். மாநிலம் என்றால், பெருநிலப்பகுதி. பெருநிலப் பகுதி என்பது ‘இந்தியா’வைக் குறிக்குமே தவிர, தமிழ்நாடு, கேரளம், வங்கம் போன்ற ‘மாநிலத்துக்குள்’ அடங்கிய பகுதிகளைக் குறிப்பிடாது.

எப்படியோ, ‘நேஷனாலிட்டி’ - தேசிய இனம் - என்பதில் காணப்படும் குழப்பம், ஆதிக்க சக்திகளின் ‘நடுக்கத்தை’யே காட்டுகிறது. விடுதலைப் போருக்கு முன்னால் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள், வெள்ளையரை வெளியேற்றும் வரை பிரிட்டிஷ் இந்தியாவிலுள்ள பல தேசிய இன மக்களும் ஒன்று சேர்ந்து விடுதலை என்கிற ஒரே நோக்கில் போராடுவோம். அதன் பிறகு விருப்பத்தின் அடிப்படையில் இந்தியக் கட்டமைப்பில் இருக்கலாம். விரும்பாத பட்சத்தில் பிரிந்து போகலாம் என்று பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். ‘சுதந்திர இந்தியாவில்’ அதிகாரம் கிடைத்த பிறகு நேருவே தமது கருத்தை மாற்றிக் கொண்டார்.

நேரு ஓர் ஃபேபியன் சோஷலிஸ்ட் ஃபேபியின் சோஷலிஸ்ட்டுகள் உட்டோப்பியர்களே. மன வெளி மனிதர்களே. அவர்கள் மனம் விசாலமானது தான். இந்தியா மாத்திரமல்ல உலகமே ஒன்றாக சமாதானமாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் ஆசைப்படுகிறவர்கள். ஆனால் அவர்களுடைய எண்ணத்துக்கும் எதார்த்தத்துக்கும் நெருங்கவே முடியாத இடைவெளி உண்டு என்பதைத் தங்கள் கற்பனை சுகத்தில் மறந்துவிடுகிறார்கள்.

இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அதிகாரத்துக்கும் ஆசைப்படுகிறவர்களுக்கும் ‘ஏக இந்தியா’ - ஒரே இந்தியா - என்பது உற்சாகமாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குள் பதுங்கி இருக்கும் பயங்கரமான மிருகம் பல சமயங்களில் அவர்களையும் மீறி வெளிப்பட்டு விடுகிறது. பிரிவினைத் தடைச் சட்டத்தை ஆதரிக்கிற பலரும் இங்கே பிரிவினைத் தடைச் சட்டத்தை உடைக்கிறவர்களாகவே இருக்கிறார்கள்.

‘பொடா’ போன்ற கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று பேசுகிறவர்கள் உண்மையில் ‘பொடா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டிய காரியங்களையே செய்து கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் அதிக பட்ச அளவுகோல் சட்டத்தின் ஆட்சிதான் என்பார்கள். சட்டத்தை உருவாக்கும் பணி நாடாளுமன்றத்துக்கும், அதைப் பராமரிக்கும் பொறுப்பு நீதி மன்றங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. (என்று நம்புவோம்).

நீதிக்குத் தலை வணங்க வேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று உபதேசிக்காத தலைவர் யார்? ஆனால் இங்கே நாடாளுமன்றமும் உச்ச நீதிமன்றமும்கூட மயக்கத்திலேயே கிடக்கின்றன. நதி நீர் பிரச்னை ஒன்றே இவர்களை அடையாளம் காட்டிவிடுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரள முதல்வர் அச்சுதானந்தன் ஏற்க மறுக்கிறார். தமிழ்நாடு மறுத்தாலும் சரி, உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் எதிர்த்தாலும் சரி பேரியாற்றின் குறுக்கே புதிய அணைகட்டியே தீருவோம் என்கிறார் அச்சுதானந்தன். அதே பாணியில்தான் ஆந்திர முதல்வரும் பேசுகிறார்.

உச்ச நீதிமன்றம், மத்திய அரசு எதுவும் எங்களைக் கட்டுப்படுத்தாது. கட்டுப்பட முடியாது என்று எப்போதோ காட்டிவிட்டது கர்னாடகம். ஆனால் இவர்கள் எல்லோருமே ‘இந்தியர்கள்’ தான். இந்திய ஒருமைப்பாட்டின் கண்டிப்பான போர்வீரர்கள்தான். உண்மையில், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று குற்றம் சாற்றப்பட வேண்டியவர்கள் இவர்களே!

அதிகார பீடங்களில் அமர்ந்து கொண்டு சதி ஆலோசனையில் ஈடுபடும் இவர்களை என்ன செய்யலாம்? ஆனால், இவர்களின் போக்கிலிருந்து ஒன்று தெரிகிறது; என்னதான் முயன்றாலும் இவர்களாலும், யாராலும் இந்தியர்களாக இருக்க முடியாது என்பதுதான் அது. இந்தியர்களாக இருப்பதில் இவர்களுக்கெல்லாம் இல்லாத அக்கறை தமிழர்களுக்கு மாத்திரம் ஏன்?
பண்பாடு கெட்டது யாரால்?
ஆனாரூனா

Women agitating against Kushboo
இங்கிலாந்தின் சார்ட்டிஸ்ட் மூவ்மென்ட்டுக்கும் (சாசன இயக்கம்), பிரான்சின் இலக்கியப் புரட்சிக்கும், சீனத்தின் அபினி யுத்தத்துக்கும் வரலாற்றில் அழியாத இடம் உண்டு.

மத நம்பிக்கைகளாலும், பிரபுத்துவப் பழமைவாதத்தாலும், சீரழிந்து கொண்டிருந்த சமூக அமைப்பை மாற்றிக் காட்டுவதில் கண்டிப்பும் கருணையும் மிகுந்த ஒரு பேராசிரியரைப் போல் இவை செயல்பட்டன. ஆசாரக் கள்ளர்களின் பொய் முகங்களைக் கிழித்தெறிந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் நியாயங்களையும் பகிரங்கமாகப் பிரகடனம் செய்தன.

கூடுதலாக - சார்ட்டிஸ்ட்டுகள்தான் ஆங்கில என்சைக்ளேபீடியா - கலைக் களஞ்சியம் - என்னும் தொகுப்பை வழங்கினார்கள். பிரான்சின் இலக்கியப் படைப்புகள்தான் பல நாடுகளின் புரட்சிக்கு வித்திட்டன. சீனத்தின் அபினி யுத்தம் தான் போதையிலும் அடிமைத்தனத்திலும் வீழ்ந்து கிடந்த மக்களுக்கு விடுதலையின் அவசியத்தைப் புரிய வைத்தது.
Kushbooதமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்கிற அமைப்பின் தோற்றம் சாசன இயக்கத்தைப் போல், பிரெஞ்சு இலக்கியப் புரட்சியைப் போல், அபினி யுத்தத்தைப் போல், தமிழகத்தில் சிந்தனை மாற்றத்துக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், புதிய சமூகக் கட்டமைப்புக்கும் வித்திடக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் ‘கலாச்சாரப் புரட்சி’ தங்கர்பச்சான் என்கிற திரைப்பட இயக்குநரை மன்னிப்புக் கேட்க வைத்ததற்குப் பழி தீர்க்கும் நோக்கில் நடிகை குஷ்புவுக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது ஆரோக்கியமான நடவடிக்கையாகத் தெரியவில்லை.

‘பண்பாட்டு எழுச்சி’ யைப் பாமரத்தனமான சினிமா ரசிகர்களின் தரத்துக்குச் சிறுமைப்படுத்தி விடக்கூடாது. பண்பாடு என்பதைத் தங்கர்பச்சானுக்கும் குஷ்புவுக்குமான தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரு சமூகப் பிரச்சினை என்கிற முறையில் பண்பாடு என்பது குறித்துத் தீவிரமாகச் சிந்திப்போமே!

தங்கர் பச்சான் இயக்கித் தயாரித்த முதல் திரைப் படம், அழகி.

பள்ளிப் பருவம் முதலே தன்னுடன் பயிலும் மாணவி ஒருத்திமீது கதாநாயகனுக்கு ஒருவித மயக்கம். நகரத்துக்குச் சென்று படித்து விட்டு ஊர் திரும்பியவனுக்கு ஏமாற்றம். தனது பிரியத்துக்குரிய அழகியின் குடும்பம் எங்கோ போய் விட்டதால், அவளைச் சந்திக்க முடியவில்லை. வெகு இயல்பாய் அவளை மறந்துவிடுகிறான். பிறகு வசதியான வாழ்க்கை, அழகிய மனைவி என்று புதிய வாழ்க்கையில் மூழ்கி விடுகிறான். ஒருநாள்...

தனது பழைய அழகி கல்யாணமாகி, கணவனை இழந்து, ஒரு சிறுவனுடன் ‘சித்தாள்’ வேலை செய்து வறுமையில் வாடுவதை அறிந்து அவளுக்கு உதவுகிறான். பிறகு வீட்டுக்கே அழைத்து வருகிறான். புதிய அழகி வெளியே சென்றிருந்த நேரம் பார்த்துப் பழைய அழகியைப் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்கிறான். படுக்கையறைக் காட்சியைப் பார்த்துவிட்ட புதிய அழகி அதிர்ச்சியடைகிறாள். பழைய அழகி விலகிச் சென்று விடுகிறாள்.

இந்த நாயகன் ஒரு நல்ல காதலனும் அல்ல; நல்ல கணவனும் அல்ல. அழகி என்றால் சுகிப்பதற்குரியவள். இதற்குமேல் அவன் சிந்திப்பதில்லை. ஆனால், அவன் சந்திக்கும் அந்த இரு அழகிகளுமே அவனை வெறுப்பதில்லை. ஆண் அப்படித்தான் இருப்பான். பெண்கள்தான் இம்மாதிரியானவர்களிடம் அன்பு கொண்டு, பக்தி செலுத்தி, தனது பூசனைகளால் அவர்களைத் தெய்வங்களாய் உயர்த்த வேண்டும் என்பதுதான் தங்கரின் ‘அழகி’ தரும் பொழிப்புரை. ஒரே வரியில் சொல்வதானால் அழகி என்றால் அடிமை.

தனது படங்களில் அவர் வலியுறுத்தும் பாடம், படிப்பினை குறித்துத் தங்கரின் சுயவிமர்சனமும் இதையே வரைகிறது. ஒரு படைப்பாளி என்கிற முறையிலும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் என்கிற முறையிலும் ‘பண்பாடு’ குறித்து இயக்குநர் தங்கர் என்ன சொல்கிறார்?

“ஓர் ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழ முடியும். ஆனால், ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை என் திரைப்படங்கள் மூலம் பதிவு செய்து காட்டியிருக்கிறேன். குறிப்பாக எனது ‘தென்றல்’ படத்தில் தாலி இல்லாமல்கூட - இந்தச் சமூகம் புரிந்து கொள்ளாத சூழ்நிலையிலும், தன் மனதைப் பறிகொடுத்தவன் நினைவிலேயே வாழ்ந்த பெண்ணைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

இப்போது வெளியாகியிருக்கும் ‘சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி’ படத்தின் ஹீரோயின் கூடப் பல சூழல்களிலும் தடம்புரளாமல் கற்பு நெறியோடு வாழ்வதைத்தான் எடுத்துக் காட்டியிருக்கிறேன். இவைகளை நான் ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், நம் தமிழர்களின் கலாசாரத்தை - தமிழ்ப் பெண்களின் ஒழுக்க நெறியை மட்டுமே நான் பதிவு செய்து வந்திருக்கிறேன்’’ என்கிறார் தங்கர். (ஜூனியர் விகடன் - 2.10.2005)

ஆண், சுதந்திரனாகப் படைக்கப்பட்டவன். பெண் அவனுடைய சுகத்துக்காகப் படைக்கப்பட்டவள். கற்பு என்பதும் ஒழுக்க நெறி என்பதும் பெண்ணுக்கே உரியது - என்று தங்கர் வந்துதான் போதிக்கிறார்; பதிவு செய்கிறார் என்று போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் வெகு காலத்துக்கு முன்பே இங்கே பேசியும் பேணியும் வருகிற சாத்திர - தருமமும் இதுதான்.

ஆண்கள் எப்படியும் வாழலாம் என்று போக்கிரித்தனத்துக்குப் பூரண சுதந்திரம் வழங்கி, அது இயற்கை அல்லது ஆண்டவன் விதித்த நியதி. அது ஆண்களின் கேள்வி கேட்கப்பட முடியாத - உரிமை என்று தடித்த குரலில் போதிக்கும் ஒரு சமூக அமைப்பை நியாயப்படுத்துகிறார் தங்கர்.

தங்கரின் தென்றல் கற்பு நெறியை மாத்திரமல்லாது ‘தமிழ் உணர்வின்’ தரம் குறித்தும் விரிவுரை செய்கிறது. கதாநாயகன் ஒரு தமிழ்ப் பாதுகாப்பாளன். தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திச் சிறைக்குச் செல்கிற ஓர் ‘இலட்சிய’ எழுத்தாளன். அவனால்தான் கதாநாயகி சீரழிக்கப்படுகிறாள். பெண் என்பவள் ஆசைக்கு அணைத்துக் கொள்ளவும், மோகத்தைத் தீர்த்துக் கொள்ளவும் வசதிக்கேற்ற விலைக்கு விற்கப்படும் ஒரு கவர்ச்சிப் பொருள் என்பது அந்தத் தமிழ் உணர்வில் மூழ்கிய இலட்சியவாதியின் கருத்து. தேவைப்படும் போதெல்லாம் இருக்கிற பணத்துக்கு ஏற்ப கிடைக்கிற பெண்ணுடன் படுத்துப் புரண்டு மறந்து விடுவது அவனுடைய சுபாவம்.
Thangarbachanதமிழ் உணர்வாளனை இவ்வளவு தரங்கெட்ட முறையில் யாரும் சித்திரித்ததில்லை. ஆனால், இது குறித்து யாரும் பொங்கி எழவும் இல்லை.

தங்கரின் ‘தென்றல்’ தமிழ் உணர்வையும் தமிழியக்கத்தையும் இழிவு செய்தபோதிலும், ஆண்களுக்குள்ள ‘தனி உரிமை’யை எந்தப் பெண்ணையும், எத்தனை பெண்களையும் அனுபவிக்கலாம் என்கிற சுதந்திரத்தை - மறுக்கவில்லை என்பதால் பண்பாட்டுப் பூசாரிகள் யாரும் பதறிவிடவில்லை.

திருமணத்துக்கு முன்பும் திருமணத்துக்குப் பின்பும் ஆண்கள் எப்படியும் தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்ளலாம்; அது தப்பில்லை என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சமூக அமைப்பில் பெண்களின் ‘கற்புக்கு’ என்ன உத்தரவாதம்?

ஊர்ப் பெண்களையெல்லாம் நான் அனுபவிப்பேன். ஆனால், எனக்கு மனைவியாக வருகிறவள் மாத்திரம் ‘உத்தம பத்தினி’யாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவெல்லை கடந்த - ஆணவம் நிறைந்த ஆசையல்லவா?

ஆண்கள் யோக்கியர்களாக இல்லாத ஒரு சமூகத்தில் பெண்கள் ‘கறை’படாதவர்களாக இருக்க முடியாது என்கிற எதார்த்தம் எதிர்கொள்ளும்போது, அந்தோ, தனக்குள்ள ‘சுதந்திரமே’ அச்சுறுத்தலாகவும் மாறிக் கலங்கித் தவித்து ஒவ்வொரு நிமிடமும் தனது மனைவியைக் கண்காணித்து, இத்தனை கட்டுப்பாட்டுக்குள்ளும் எப்படி இவளால் சிரித்து சிங்காரித்து வாழ முடிகிறது என்று சந்தேகித்து, அவள் அழகாய் இருப்பது வேறொருத்தனுக்காகத் தானோ என்று குமுறிக் குமைந்து நிம்மதியற்று நித்தம் நித்தம் வெந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?

இம்மாதிரியான கலக்கத்திலும் குழப்பத்திலும் தவிப்பிலும் தகிப்பிலும் ஆண்கள் நிம்மதியற்றுப் போனதால்தான் கற்பு ஒழுக்கம், பண்பாடு என்கிற கூப்பாடு வெகுகாலமாய்க் காதைக் கிழிக்கிறது. தன்னைப் பற்றிய குற்ற உணர்வும் பெண்ணைப் பற்றிய சந்தேக உணர்வும் ஒன்று திரண்டு ஒவ்வொரு ஆணையும் மிரட்டுகிறது. இந்த அச்சத்திலிருந்து தப்பும் மார்க்கமாக அவன் பத்தினித் தெய்வங்களையும் கற்புக்கரசிகளையும் தேடித் திரிந்து புனைந்துருவாக்கி ஆறுதலடைகிறான்.

தன்னைப் போன்ற ‘சாத்தான்கள்’ உருவாக்கிய ‘தெய்வம்’தான் கற்புக்கரசி என்கிற நினைப்பு வருகிறபோது, தன் மனைவி தன் மரணத்துக்குப் பிறகும் கற்பு நெறியில் இருப்பாளா? என்கிற சந்தேகம் அவனைக் குத்திக் கிழிக்கிறது. சஞ்சலப்படும் அவன் குரூரமான முடிவுக்கு வருகிறான். “கணவன் இறந்ததால் அவனுடைய மனைவியும் அவனுடன் எரிந்துச் சாம்பலாக வேண்டும். ‘உடன்கட்டை’ ஏறுதலே பெண்மைக்குப் பெருமை.’’ கற்பின் கனலி சீதையின் வழிவந்தவளே நீ தெய்வப் பிறவி. வா, இந்த நெருப்பில் இறங்கு, போ அந்தச் சொர்க்கத்தில் சுகமாக உறங்கு’’ என்று சதி தருமம் பேசும் கொலைகாரனாகவும் மாறுகிறான். இந்தக் கொலைவெறியை ஒரு சமூக நீதியாகவும் பாரதப் பண்பாடாகவும் இன்றும் போற்றுகிறவர்கள் இல்லையா? கணவன் இறந்த பிறகும் வாழும் ‘விதவைக்கு’ மனித அந்தஸ்து மறுக்கப்படுவதுடன் ஒரு பிடி சோற்றுக்குக்கூட இரக்கமுள்ளவர்களின் கருணைக்குக் காத்திருக்கும் நிலை.
Jeyandrarஆணாதிக்க சமூக அமைப்பு பெண்ணைச் சாகும்வரை துரத்துகிறது. இந்த ஆணாதிக்க அக்கிரமத்துக்கு அடிப்படைக் காரணம் பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லாதது தான். தனிச் சொத்துரிமையின் முதல் தாக்குதல் பெண்மீதே தொடங்கியது என்று கல்வியும் பெரியார்களும் பெண்ணுக்குப் புரிய வைத்தபோது, பிடி சோற்றுக்காக அடிமையாக வாழ்வதைவிட தனது உழைப்பின் மூலம் சுதந்திரமாக வாழ முடியும் என்று தன்னம்பிக்கையோடு மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் வெளியே வந்தால் காஞ்சி சங்கராச்சாரி போன்ற மதகுருக்கள் ‘நெற்றிக்கண்’ திறக்கிறார்கள்.

“வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாரும் ஒழுக்கக் கேடானவர்கள்’’ என்று சங்கராச்சாரி உழைக்கும் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் சூட்டியபோது, பெண்கள் மீதான தங்கள் ஆதிபத்திய உரிமையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் இழந்துவிடுவோமோ என்று கலக்கமுற்றிருந்த ஆண்களுக்கு அது வீசுதென்றலாய் வருடியது. பெண் சமூகமும் சங்கராச்சாரியின் அவதூறு குறித்து ஆத்திரம் கொண்டு துடைப்பக்கட்டை தூக்கவில்லை.

“பணத்துக்காக நடிக்கும் நடிகைகளும் விபச்சாரிகளே’’ என்று தங்கர்பச்சான் எப்படிக் கூறலாம் என்று கொதித்தெழுந்த நடிகைகள் சங்கராச்சாரி உழைக்கும் பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்று வசை பாடியபோது, செவிடராய், ஊமையராய்ச் சலனமற்றுக் கிடந்தது ஏன்?

இன்று நடிகை குஷ்பு கூறிய கருத்துக்களால் தமிழ்ப் பெண்களின் மானமே தாக்கப்பட்டு விட்டதாகப் ‘புண்பட்ட நெஞ்சோடும்’ போராடும் துணிவோடும் புறப்பட்டிருக்கும் மகளிர் அணிகூட சங்கராச்சாரிக்கு எதிராகக் கிளர்ந்தெழாதது ஏன்?

படுக்கையறை அந்தரங்கங்களைப் பகிரங்கமாகப் பாடித் திரிந்த ஆண்டாளையும், அவள் பாசுரங்களைப் பஜனை பாடிக் களிக்கும் அடியார் கூட்டத்தையும் போற்றித் துதிப்பது எப்படி? பெண்களை இழிவு செய்வதிலும் அடிமைப்படுத்துவதிலும், மத - குருமார்களின் பங்கை நேர்மை உணர்ச்சியுள்ள யாராலும் மன்னித்து விட முடியாது.

இந்து (ஆரிய) மதத்தில் கடவுள்கள் கூடக் குடிகாரனாகவும், காமுகனாகவும், ஒழுக்கக் கேடானவனாகவும், ஓரினச் சேர்க்கையிலும், மிருகங்களைப் புணர்வதிலும் வெறிகொண்ட வெட்கமற்ற கழிசடையாகவுமே இருக்கிறார்கள். பண்பாட்டுப் போராளிகள் யாரும் இந்த ஆபாசங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. இந்து மதம் பெண்களை மாத்திரமல்ல, ஆரியரல்லாத அனைத்து மக்களையுமே இழிவு செய்கிறது. ஆரியரல்லாத மக்களை அரக்கர்களாகவும், அழிக்கப்பட வேண்டியவர்களாகவுமே சித்திரிக்கிறது.

ஆனாலும், மதமில்லாத, இறையச்சம் இல்லாத உலகத்தை நினைக்கவே நமது சமூகம் அஞ்சுகிறது. ‘தேசியப் பெருமிதங்கள்(!)’ - ‘தமிழ் முழக்கங்கள்’ எல்லாம், வீர சைவமாய், விஷ்ணு பக்தியாய் வீழ்ந்து பணிவதிலிருந்து விடுபட முடியவில்லை.

பிரதமர் குடியரசுத் தலைவர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களும் விஞ்ஞானிகள் என்று பசப்புகிறவர்களும்கூட மத பீடங்களுக்கு முன் மண்டியிடும்போது, யாருக்குத்தான் மத நம்பிக்கைகளிலிருந்து விடுபடவும், மதகுருமார்களை எதிர்க்கவும் துணிச்சல் வரும்?

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள், மக்களுக்கு உண்மையாயிருப்போம் என்று மக்கள் சக்திக்குத் தலை வணங்காமல் கடவுள் பெயரால் பதவி ஏற்கும்போது, கடவுளே அனைவர்க்கும், அனைத்துக்கும் மேலான அதிபதி என்று முட்டாள் தனத்தை வளர்க்கும்போது, பெண்ணுரிமை, மண்ணுரிமை, மொழியுரிமை, மனித உரிமை எல்லாமே மலிவான வெற்று முழக்கங்களாக மாறிவிடுகின்றன.

பக்திப் பரவசம், பரத்தையர் சேரி, பத்தினிக் கதைகள், பால்வினை நோய்கள், மாயாவாதம், மரணபயம், அகிம்சாவாதம், ஆயுதப் படைகள், சக்தி வழிபாடு, உடன்கட்டை ஏற்பாடு... இந்த இரட்டை நிலைதான், பொய்முகத்துடன் திரியும் ஆசாரக் கள்ளர்கள் போற்றிப் புகழும் ‘தமிழ்ப் பண்பாடு’, பாரதப் பண்பாடு, வாழ்ந்து தீர்ந்துபோன உலகளாவிய நிலப்பிரபுத்துவப் பண்பாடு.

பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய தொழில் புரட்சி, நிலப் பிரபுத்துவத்தை உலுக்கியது. புதிதாய் எழுந்த ஆலைச் சங்கொலிகள் பழைய சமூகக் கட்டமைப்பின் இறுதியை முன்னறிவித்தன. எங்கெல்லாம் முதலாளித்துவ ஆதிக்கம் நிலை பெற்றதோ அங்கெல்லாம் அது எல்லா விதமான பிரபுத்துவ உறவுகளுக்கும் தந்தை வழிச் சமுதாய உறவுகளுக்கும் கிராமியப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது.

‘தெய்வீக உரிமை பெற்ற மேலோர்’க்குத் தாள்பணியுமாறு கட்டிப்போட்ட பல்வேறு விதமான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது. மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான தன்னலத்தைத் தவிர பரிவுணர்ச்சியில்லாப் ‘பணப் பட்டுவாடா’வைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கியது.

சமயத்துறைப் பக்திப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், உளநெகிழ்ச்சிப் பசப்பு ஆகிய புனிதப் பேரானந்தங்களையெல்லாம் சுயநலவேட்கையெனும் உறைபனிக் குளிர்நீரில் மூழ்கடித்துவிட்டது. மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாக வெட்கங் கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்க்கிறது. சுருங்கச் சொல்வதெனில் மதப் பிரமைகளாலும், அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாக முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலை நாட்டியிருக்கிறது.

ஆதிக்க சக்தியாக மாறிவிட்ட முதலாளித்துவத்தின் வசீக முழக்கங்களும் சுதந்திரப் பிரகடனங்களும், வெகுகாலமாய் ஆணாதிக்கக் கொடுமையின் கீழ் அழுந்தி வதைபட்ட பெண்ணின் மனத்தில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது. பின் நவீனத்துவம், கட்டுடைத்தல் என்கிற கருத்தியல், புதிய சமுதாயத்திற்கும் பெண் விடுதலைக்குமான போராயுதமாக மின்னிச் சுடர்கிறது.

பிரபுத்துவக் கட்டமைப்பில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ‘அடிமைப் பெண்களை’ முதலாளித்துவம் சுதந்திரமான அழகிகளாய் உலகுக்குக் காட்டுகிறது. கணவன் விருப்பப்படியான உடலுறவுக்குப் பதில் கட்டுத்தளையற்ற காமத்துக்கு வரவேற்பளிக்கிறது.

மறைவில் நடந்த கள்ள உறவுகளை அலங்கார மேடைகளில் வெளிப்படையாய் அரங்கேற்றுகிறது. ‘சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட’ திருமணங்களை ரொக்கத்துக்கு முன் விசாரணை செய்கிறது. சந்தைப் பொருளாதாரத்தை விரிவு செய்கிறது. ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையடிக்க எல்லா நாடுகளுக்கும் வாய்ப்பளிப்பதாக ஒப்பந்தம் செய்கிறது. உலகைக் கொள்ளையடிக்க விரும்பும் ஒரு சமூகம் பழைய பண்பாடுகளையும் ‘பாரம்பரியப் பெருமை(!)’களையும் காதல், கற்பு, திருமணம் என்னும் ‘புனித(!)’ உறவுகளையும் கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது.

தாகத்துக்காகக் ‘கிணறு’ தோண்டிக் கொண்டிராதே; கிணற்றை வழிபடாதே; எதையுமே பயன்படுத்தித் தூக்கியெறி என்னும் நுகர்வுக் கலாச்சாரம் ஒன்று உருவாகிறது. இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் பெண் ஒரு கவர்ச்சியான விற்பனைச் சரக்காகிறாள். கலை, இலக்கியம், பத்திரிகை, இணைய தளம் எங்கும் எதிலும் வெறியூட்டும் கவர்ச்சி, வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கிறது.

‘உலகமயமாக்கலின்’ தவிர்க்க முடியாத தேவையாக மக்களைப் போதையிலாழ்த்தும் விபரீதங்கள் புதிது புதிதாய் மலர்கின்றன. முன்பு சபிக்கப்பட்ட அபலையாய் அழுது கொண்டிருந்த பெண், இப்போது ‘சுதந்திர’ப் பிறவியாய் எல்லா விளம்பரங்களிலும் சிரித்துக் கொண்டிருக்கிறாள். முன்பு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த பெண் இப்போது புன்னகையோடு புதைந்து கொண்டிருக்கிறாள். முன்பு ஆணின் தனிச் சொத்தாக இருந்த பெண் இப்போது உலகமயமாக்கப்பட்டு விட்டாள்.

பிரபுத்துவ சமூக அமைப்போ தனது அழிவின் விளிம்பில் நின்று கடைசி முயற்சியாகப் ‘பண்பாட்டுப் பதாகை’யை உயர்த்திப் பிடித்து இன்னும் தன்னிடமிருந்து வெளியேறாத பெண்களின் காலடியில் விழுந்து மன்றாடுகிறது. ஒருபுறம் நிலப்பிரபுத்துவப் பழமைவாதம்; மறுபுறம் முதலாளித்துவ - ஏகாதிபத்தியப் புதுமை மோகம்! இருபுறத்திலும் இரு தத்துவங்களும் பெண்ணையே முன்னிறுத்துகின்றன. இந்த இருபுறத்திலும் பெண்ணுக்குச் சுதந்திரமில்லை என்பதை இரு தரப்பிலும் பெண்கள் உணர வில்லை.

அங்கே தனது விலங்கை மெச்சிக் கொள்கிறாள் பெண்.
Tirumavalavanஇங்கே தனது விலையை மெச்சிக் கொள்கிறாள் பெண்.

“ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழலாம். ஆனால் ஒரு பெண் இப்படித்தான் வாழவேண்டும்’’ என்றொரு ‘பண்பாடு’ வலியுறுத்தப்படும்போது, ஆண்கள் எப்படியும் வாழ உரிமை பெற்ற ஒரு சமுதாயத்தில், ‘அதுதான் பண்பாடு’ என்று போதிக்கும் ஒரு சமூக அமைப்பில், ‘எப்படியும்’ வாழும் உரிமை பெற்ற ஆண்களால் ‘இப்படித்தான்’ வாழ வேண்டும் என்று விரும்பும் பெண்கூட ஆணின் மோக வெறிக்கு இரையாக மாட்டாளா? இங்கே பெண்ணின் ‘கன்னித்தன்மைக்கு’ என்ன உத்தரவாதம்?

இந்தப் பின்னணியில் தான் - “பெண்கள் திருமணமாகும் போது கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமுதாயம் விடுதலை பெறவேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன்பு ‘செக்ஸ்’ வைத்துக் கொள்ளும்போது, கர்ப்பம், பால்வினை நோய் முதலியவற்றைத் தவிர்க்க பெண்கள் பாதுகாப்போடு செயல்பட வேண்டும்.’’ என்று குஷ்பு கூறுகிறார்.

“ ‘தென்றல்’ கதாநாயகியின் நிலை எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாது’’ என்பதுதான் குஷ்புவின் கருத்து. ஆனால், “பாதுகாப்பான செக்ஸ் என்பது ஆணுறை விளம்பரத்துக்கே உதவும் ஆணாதிக்கத்தை ஒழிக்காது’’ என்கிறார் தொல்.திருமாவளவன். அவருடைய வாதம் நியாயமானதுதான். ஆனால், தீர்வு?

“ஆண்களின் நலனுக்காக ஆண்களால் கற்பிக்கப்பட்டு, பெண்களின்மீது திணிக்கப்பட்ட வன்முறை தான் கற்பு.ஊரறியத் திருமணம் செய்து கொண்டாலும் பிறக்கிற குழந்தை தனக்குப் பிறந்ததே என்று உறுதி செய்து கொள்வதற்காகப் பெண்களின்மீது திணிக்கப்பட்டதுதான் கற்பு.

ஆண்களின் சொத்தாசை தான் கற்பு என்கிற கற்பிதத்தை உருவாக்கியுள்ளது’’ என்று சரியாகவே கூறிய திருமாவளவன் (இந்தியா டுடே - ஜனவரி 16, 2005) குஷ்புவால் தமிழ்ப் பண்பாடு கெட்டுவிட்டதாக இப்போது சொல்வது, முரண்பாட்டின் முட்டுச் சந்தில் அவர் சிக்கிக் கொண்டதையே காட்டுகிறது. திருமாவளவனின் முற்போக்குச் சிந்தனை, அவரை உயரமான இடத்துக்குக் கொண்டு வருகிறது. தனிப்பட்ட கோபதாபமோ அவரைப் பள்ளத்தாக்கில் இழுத்துத் தள்ளிவிடுகிறது.

முற்போக்குச் சிந்தனையாளர்கள், பெண், தலித், கறுப்பின மக்கள் - இவர்களின் குரலை அக்கறையுடன் பரிசீலிக்க வேண்டும். ‘நாடு கடத்துவோம்; தூக்கிலிடுவோம்’ என்று உணர்ச்சிமீதுறப் பேசுவது பாசிசப் போக்கே ஆகும்.

நிலப்பிரபுத்துவமோ, முதலாளித்துவமோ, ஏகாதிபத்தியமோ பெண் விடுதலையை அனுமதிக்காது. பெரியாரியமும் மார்க்சியமுமே உண்மையான பெண் விடுதலையை உறுதி செய்யும். சோஷலிசமே சமூகக் கொடுமைகள் அனைத்துக்கும் முடிவு கட்டும் என்கிற புரிதலுடன் இயக்கம் நடத்தும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள். இவர்கள் சங்கராச்சாரிகளையும் எதிர்ப்பார்கள் சங்க இலக்கியமே ஆனாலும் தவறென்றால் எதிர்ப்பார்கள். தனிச் சொத்துரிமையின் அழிவிலேதான், வர்க்கப் பகைமையின் இரத்தக் கறைகள் துடைக்கப்பட்ட புதிய சமூகத்திலேதான் பெண் பெண்ணாக இருக்க முடியும். அங்கே அவள் அடிமை அல்ல; விளம்பர ‘அழகி’ அல்ல; சுதந்திரச் சிந்தனைகள் மலர்ந்த அன்பு மயமான தோழி!’

No comments:

Post a Comment