Search This Blog

Wednesday, April 6, 2016

நான் - மகாகவி பாரதியார்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், 
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; 
கானில் வளரும் மரமெலாம் நான், 
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், 
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; 
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான், 
வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான், 
காருகர் தீட்டும் உரவெலாம் நான்; 
இம்பர் வியக்கின்ற மாட கூடம் 
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
இன்னிசை மாதரிசையுளேன் நான், 
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்; 
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான், 
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங்கோடி இயக்குவோன் நான், 
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்; 
தந்திரங் கோடி சமைத்துளோன் நான். 
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான், 
அவை பிழையாமே சுழற்றுவோன் நான், 
கண்டல் சக்திக் கணமெலாம் நான் 
காரணமாகிக் கதித்துளோன் நான்.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான், 
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்; 
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் 
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

No comments:

Post a Comment