Search This Blog

Friday, January 15, 2016

பாலாவின் ? தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்

ராஜாவின் ஆயிரமாவது படம் - இசை - இளையராஜா என்று போடும்போது விசில் மற்றும் கைத்தட்டல் காதை கிழிக்கிறது !

நாம் பார்க்க முக்கிய காரணம் பாலா !



கதை 

தஞ்சை அருகே வாழும் தாரை தப்பட்டை கலைஞர்கள் - வறுமையில் வாடுகிறார்கள். அந்த ட்ரூப் நடத்தும் சசிகுமார் மேல் - டான்சர் வரலட்சுமிக்கு அதீத காதல்.. சசிகுமாரும் காதலித்தாலும் வெளியே சொல்லாமல் இருக்கிறார்.

அந்த ஊருக்கு புதிதாய் வரும் இளைஞன் ஒருவன் - வரலட்சுமி மீது ஆசைப்பட்டு வந்து பெண் கேட்க- அவர் அம்மா - " அவளாவது நம் மாதிரி கஷ்டப்படாமல் நல்லாய் வாழட்டும்" என சசிகுமாரை கன்வின்ஸ் செய்து - வரலட்சுமி - இளைஞனை மணக்கிறார்.

 வரலட்சுமி கணவனின் கொடூர முகம் தெரியும் இரண்டாம் பாகம்... கற்பனைக்கும் எட்டாத சம்பவங்களை கொண்டது !

பிளஸ்

பல்வேறு பாத்திரங்களின் இயல்பான நடிப்பு.. குறிப்பாக முதல் பாதியில் வரலட்சுமி பிய்த்து உதறுகிறார்.. ஆண்களையே தூக்கி போட்டு அடிக்கும் இந்த பாத்திரம் நிச்சயம் புதிது. கிராமத்து பெண் டான்சர்கள் - இப்படி சற்று பருமனாக தான் இருப்பார்கள்; இது வரை இருந்த இமேஜ்ஜில் இருந்து முழு மாறுதல்.

சசிகுமார் தந்தையாக வரும் GM குமார்.. இன்னொரு அட்டகாச நடிப்பு; துவக்க காட்சியில் வாசிக்கும் விதம் தத்ரூபம் - இவருக்கும் - சசிகுமாருக்கும் இருக்கும் சண்டையுடன் கூடிய அன்பு.. அழகு..



சசிகுமார். அநேகமாய் அடக்கி வாசிக்கிறார்; கிளை மாக்ஸ் மட்டும் ஆக்ரோஷம்..

இன்னொரு பெரிய ஆச்சரியம்.. வில்லன்; பாலா படங்களில் வில்லன் பாத்திரம் மிக கொடூரமாக இருக்கும். சிறிதும் இரக்கமோ, மனித தன்மையோ இல்லாதோர் வில்லனாக இருப்பர். பெரும்பாலும் புது முகங்களை வில்லனாக அறிமுகம் செய்வார். இங்கு இரண்டாம் பகுதி முழுதும் சுரேஷ் ராஜ்ஜியம் தான்.. அனைவரின் வெறுப்பையும் சேர்த்து பெற்று கொள்கிறார்..

ராஜாவின் பாடல்கள் .. பலவும் மிக அற்புதம். நீதானே என் பொன் வசந்தத்திற்கு பிறகு அற்புத பாடல்களுடன் ராஜா இசை. .. பின்னணி இசையில் ராஜாவை யாராலும் விஞ்ச முடியாது !

படத்தின் இருட்டு பக்கம் 

பாலா படம் என்றாலே வன்முறை அதிகம்; இங்கு மிக சரியாக "A" சான்றிதழ் தந்துள்ளனர்.



இருந்தும் கூட இப்படத்தில் ஹீரோயின் -  மீது நடத்தும் வன்முறை மிக அதிகம்.. குறிப்பாக ஒன்பதரை மாத கர்ப்பிணி பெண்ணை மார்ச்சுவரி அட்டெண்டர் - உயிரோடு கொன்று குழந்தையை வெளியே எடுப்பதெல்லாம் .. ரொம்ப ரொம்ப ஓவர்.. நிச்சயம் இத்தகைய காட்சிகள் பெண்கள் -  படத்தை பார்க்க வைக்காது.

பாலாவின் படங்களின் இறுதி பகுதி அநேகமாய் ஒரே டெம்ப்ளேட்- டில் இருப்பது சலிப்பூட்டுகிறது

ஹீரோயினை  - வில்லன் கொடுரமாக கொல்ல (அரிதாக இன்னொரு ஹீரோ) , நம்ம ஹீரோ வில்லனது  - குரல்வளையை சர்வ நிச்சயமாக கடித்தோ - குத்தியோ கொல்வார்.

உலகமே வெறுத்து - தனியாக - ஒரு மரத்தின் அருகே ஹீரோ நடந்து போகும் ஸ்டில்லுடன் A film By Bala என்று  போட - நாமும்  - சோக மூடுடன் - தியேட்டர் விட்டு வெளியேறுவோம் ..

ஹீரோ அல்லது ஹீரோயின் - இருவரில் ஒருவர் சாகாத பாலா படமே கண்டுபிடிக்க முடியாது ! அப்படி அதிசயமாய் சாகாத - பரதேசியில் - " இதுக்கு ஹீரோ இறந்திருக்கலாம் !!" என்று எண்ணியபடி வெளியே வருமளவு சோகம் !

பைனல் வெர்டிக்ட்: 

தாரை தப்பட்டை - பாலா டைப் படங்களை தீவிரமாய் காதலிப்போருக்கு மட்டும் ! பெண்கள் - 
குழந்தைகள் தவிர்க்கவும் !
பாலாவின் ?தாரை தப்பட்டை "
ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு அதை தடை செய்யக் கூடாது என்று ஊரெங்கும் கொ டி பிடிக்கும் தமிழர்களைப் பார்த்து மவுனமாக , ஆனால் அழுத்தமாக , " ஏண்டா வெண்ணைகளா சப்தமில்லாது ஒரு பாரம்பரியக் கலை அழிந்து கொண்டு இருக்கிறதே அதை காக்க என்ன செய்தீர்கள் ? என்று கேட்கிறார் இயக்குனர் பாலா தன் தாரை தப்பட்டை வாயிலாக .. கரகாட்டக் காரர்களின் வாழ்க்கையை , அவர்களின் வேதனையை , அவர்களின் கொண்டாட்டத்தை இதை விட அழகாக சொல்ல முடியாது . இதை சொல்ல முன் வந்ததற்காக பாலாவுக்கு ஒரு ஓஹோ .!
ஒரு பொண்ணு உங்களையே சுத்தி சுத்தி வந்து தன் காதலை , காமத்தை வெளிப்படையாக சொன்னால் அவளை அசிங்கப் படுத்தாமல் , அவளை ஒதுக்கி தள்ளாமல் , உங்கள் உள் மனசில் ஆசைகளை ஊருக்காக புதைத்து வைத்து விட்டு நீங்கள் தியாகி ஆகி விட்டு பின் ஓரமாக உட்கார்ந்து ஒப்பாரி வைக்காதீர்கள் என்பதை மண்டையில் அடித்து மயங்கும்போது தண்ணீர் அடித்து தெளிய வைத்து ... தெளிய வைத்து சொல்கிறார் இயக்குனர் பாலா . " என் மாமன் பசிக்கு சோறு வேணும்னா .. நான் அம்மணமா கூட ஆடுவேன் " என்று சொல்லி மயங்கும் வரலட்சுமி மனதை அள்ளுகிறார். இந்த சூறாவளி கேரக்டர் வரலட்சுமி தவிர வேறு எந்தப் பெண்ணும் செய்ய இயலாது . . மாமன் சன்னாசி பசிக்குதுண்ணே என்றவுடன் , தன கால்வலி யை மறந்து வேகமாக எழுந்து கிளம்பி ஆடத் துவங்கும் வரலட்சுமி .....பார்க்கும்போது இயக்குனர் விளக்க வரும் காதலின் ஆழம் நம் கண்களின் நீராகப் பனிக்கிறது . பெண்புலியாக சீறும் சூறாவளி வரலட்சுமியிடம் சாமிக்கு முன் சத்தியம் கேட்கும் இடத்தில் , என் சாமியே நீதானய்யா உனக்கு என்ன வேணும் சொல்லு நம் இருவருக்கும் இடையில அந்த கல்லு எதுக்கு ? வசனத்தில் ஆங்காங்கே பின்னுகிறார் இயக்குனர் . உன் மாமனுக்கு ஊத்தி கொடு மனசுல இருக்கிறத உளறிடுவான் ... என்று சொல்லும்போது சீறும் சூறாவளி , குடித்து விட்டு மாமன் நீ ஊர் பார்க்க அவுத்து போட்டு ஆடுணவ தானடி எனும்போது மாமனின் வார்த்தைகளில் கொஞ்சம் கொஞ்சமாக மரத்து போவதை காணும்போது ஆஹா வரலட்சுமியா இது என்று அதிசயம் பிறக்கிறது . ஒரு பெண்புலி , தன சுபாவத்தை காதலை இழக்கும்போது .. இழந்து விடுகிறாள் என்று அழகாக புரியவைத்து காய் நகர்த்துகிறார் இயக்குனர் .
மனதில் உள்ள காதலை மறைத்து கொண்டு , திரியும் போதும் , காதலியின் வேதனையை தான சுமக்கும் காட்சிகளிலும் , கண்களிலேயே தன காதலையும் , வேதனையையும் , அடக்கி , அடக்கி வைத்து குமுறும் சசிகுமார் வெல்டன் . சசிகுமார் படத்தில் தெரியவில்லை சன்னாசி மட்டுமே தென்படுகிறார் . அறிமுக வில்லன் சுரேஷ் அப்பாவியாக அடிவாங்கும் போதும் , வில்லனாகி மூர்க்கத்துடன் அடிக்கும்போதும் இது முதல்படம் என்பதே தெரியாத அளவில் அவரிடம் நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர் . சுரேஷ் ஒரு வான்டட் வில்லனாகி விடுவார் நிச்சயம் . வித்யா கர்வத் திமிருடன் ஜி எம் குமார் தன் பங்கை செவ்வனே செய்து இருக்கிறார் . அதிலும் ஆஸ்திரேலியா கவர்னருக்கு மாலையை திருப்பி அணிவிக்கும் இடத்தில் ,இசைஞானி இளையராஜா வை நிற்க வைத்து காலில் விழுந்து வணங்க ஆசைப் படுகிறது மனது .. படம் ஆரம்பிக்கும்போது கம்பீரமாக தஞ்சை பெரியகோவிலை காட்சி படுத்தும் இடத்தில் ஆரம்பித்து , கிளைமாக்ஸ் சண்டை வரை செழியனின் கேமரா தனி ஆவர்த்தனம் செய்கிறது . பின்னணிப் பாடகி ரம்யா டிஸ்கவரி சேனலுக்காக இந்த கலைஞர்களை பேட்டியெடுக்க வரும் இடத்தில் இசைஞானி எழுந்து நின்று வாசிக்க , தியேட்டரே எழுந்து நின்று ஆடுகிறது படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் , இளையராஜாவும் , பாலாவும் போட்டி போட்டுக் கொண்டு நம்மை ஆளுகிறார்கள் .
படத்தில் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது . ஆனால் பாலா சார் எனக்கு மிகவும் பிடித்தது . அருமையான காதலை மனதில் வைத்து வாழும் ஆணின் வாயில் செய்வதறியாது கலங்கி நிற்கும் இடத்தில் எப்படி கேவலமான பேச்சு தான் காதலிக்கும் பெண்ணின் மேல் அடியாக விழும் என்பதை அழகாக கையாண்டு இருக்கிறீர்கள் . அங்கு நீங்கள் ஆணாக நிற்கிறீர்கள் . தான் விரும்பும் ஆண் தவிர வேறு எவனையும் அனுமதிக்க மாட்டேன் என்று திமிருடன் நிற்கும் ஆண்மைத் தனமான அன்பான பெண் , காதலனே இன்னொருவனுக்கு தன்னை கொடுக்க தயாராகி விட்டான் என்றவுடன் தன உடம்புக்கு என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று இறுகிப் போய்விடுவாள் என்பதை காட்சிப் படுத்தும் இடத்தில் நீங்கள் பெண்களின் மனோ நிலை புரிந்த தாயுமான்வராகி விடுகிறீர்கள் . ஆட்டக்காரி எல்லாம் அவுசாரிகளா என்று கேட்கும் இடத்திலும் , தங்கச்சிய நல்ல இடத்துல கட்டிக் கொடுக்கணும்கிற ஆசையில்தான் தங்கச்சிகூடவே இரட்டை அர்த்தம் பேசி ஆடறேன் .. வாய்லேர்ந்து வர்ற வார்த்தை தானே அண்ணே ... ஏன்னாஇப்போ .... வாயப் பிளந்து கிட்டு காசக் கொடுக்கிறாங்க இல்லே... அதுதானே வேணும் எனும் இடத்திலும் ... பல வசன வரிகளிலும் உங்கள் வசனங்கள் நம் நாட்டில் தெரிந்த கலையை விட இயலாமல் , வேறு என்ன செய்து வாழ என்று வகை தெரியாமல் திகைத்து தங்கள் வாழ்வை தாங்களே விழுங்கி கொண்டு இருக்கும் கூத்து , கரகாட்டக் கார , தப்பு கலைஞர்களின் ஜீவனாக ஒலிக்கிறது .படத்தில் ஆங் காங்கே நம் கண்கள் குளமாவதை தடுக்க இயலவில்லை , வீட்டுக்கு வந்தவுடன் இந்தக் கலைஞர்களின் அவல வாழ்வை நினைத்து ஓவென்று கட்டுப்பாடு இல்லாமல் நான் அழுதது தான் இயக்குனர் பாலாவின் வெற்றி. இந்தப் படத்தில் குறை சொல்ல தோண்டி துருவிப் பார்க்கலாம் ... ஆனால் நம் சமூகத்தின் முகமுடிகளுக்குள் மூச்சு முட்டி செத்துக் கொண்டிருக்கும் கலையை நினைத்தால் ...நாம் செய்வதறியாது திகைத்து நின்று படம் முடிந்ததும் எழுந்து நின்று இயக்குனர் பாலாவிற்கும் , இப்படத்தை தயாரித்த கம்பெனி நிறுவனத்தினருக்கும் ஐந்து நிமிடம் கை தட்டுவது மட்டுமே முடிந்தது . தரை தப்பட்டை ... சும்மா அதிருதுல்ல ..!

கதை: கிராமத்துல ஒரு கரக கோஷ்டி இருக்குது. அந்த கோஷ்டியில அம்சமா, அழகா இருக்கிற ஒரு பொண்ணு அதே கோஷ்டியை நடத்துறவர் மேல கொள்ள லவ்வா திரியுது… ஆனா அந்த புள்ளய நல்லவன் மாதிரி நடிச்ச ஒருத்தன் கல்யாணம் பண்ணி கிட்டு  போறான். அவன் தொழிலே பொம்பள பிஸ்னஸ். கட்டிகிட்டு வந்தவளையும் பிசிஸ்னஸ்ல இறக்கி விட்டுடுறான். ஒரு கட்டத்துல வாடகை தாயா மாத்தி அடுத்தவன் புள்ளய சுமக்க வைக்கிறான். அவ அங்கயிருந்து தப்பிச்சாளா… கரக கோஷ்டி இன்னா ஆச்சி… இதாம்பா ‘தாரை தப்பட்டை’ கதை லைனு…சமூகத்துக்கு சொல்ற வர்றது: ஆபாச கலையாக மாறிப்போச்சாம் கிராமிய கலைகள். விபச்சார விடுதிகளில் தப்பிச்சி போற பெண் களை புடிச்சி வந்தா மொட்டை அடிச்சி, பெல்டால விளாசுவாங்களாம். பணம் வைச்சிருக்கிறவன் அதை குடுத்து ஏழைகளை வாடகை தாயா மாத்தி குழந்தை பெத்துக் கிறானாம். காசு குடுத்தா அரசு ஆஸ்பத்திரியில பிணவறையில கூட பிரசவம் பாக்கலாமாம்.
ஹீரோ சசிக்குமார்: இவருதாங்க படத்துல கரக கோஷ்டியை நடத்துற சன்னாசி. ஏம்பா சசிக்குமாரு சுப்ரமணியபுரம் தொடங்கி சுந்தரபாண்டியன் வரைக்கும் நல்லதான கதை கேட்டு நடிச்ச… படம் தயாரிச்ச… காசு சம்பாரிச்ச… பாலா உன்னோட குருவா இருக்கலாம் அதுக்காக கதை கேக்காம 2 வருசம் மீசையும், தாடியையும், குடுமியையும் வளத்துகிட்டு திரிஞ்சியே படத்தை முழுசா உனக்கு திருப்தியா இருக்குதா… குடும்பத்தோட சசிக்குமார் படம்னு நம்பி இந்த படத்துக்கு ஜனங்க வருவாங்களா…
இயக்குனர் சசிக்குமார்: நல்ல கதையோட இருக்குற படத்தை இயக்குவார்… நடிகர் சசிக்குமார்: நல்ல கதையோட இருக்குற கேரக்டரா மாறி நடிப்பார். ஈகோ இல்லாம கூட நடிக்கிறவங்களுக்கும் ஸ்கோப் இருக்குற மாதிரி கதைய தேர்ந்தெடுப்பார். சின்ன குழந் தைங்க தொடங்கி வயசு பொண்ணுங்க, வயசு பசங்க, பல்லுபோன பாட்டிவரைக்கும் சுந்தரபாண்டியனாதான உன்னை கொண்டாடுது…. தயாரிப்பாளர் சசிக்குமார்: தரமான படததை தயாரிக்கிறதோட எடுக்குற படத்தை வாங்கி வினியோகம் பண்ற வினியோ கஸ்தர் தொடங்கி தியேட்டர்காரங்க, தியேட்டர்ல படம் பாக்க வர்ற ஆடியன்ஸ் வரைக் கும் போட்ட காசுக்கு பழுதில்லாம படம் எடுப்பார்னுதான இதுவரைக்கும் சசிக் குமாரை அப்படிதான நெனச்சிகிட்டிருந்தாங்க. இந்த தாரை தப்பட்டை படம் ரிலீஸ் ஆகிற வரைக்கும். இனிமே கஷ்டதாண்டி…
ஹீரோயின் வரலட்சுமி: சூறாவளி இதுதாங்க வரலட்சுமியோட பேரு. அதுக்கேத்த மாதிரி குரலும், கரகாட்டமும், கூத்தும் பிரமாதம். ‘மாமனுக்கு பசி வந்துட்டா அம்மணமா கூட ஆட்டம்போடுவேன்னு’ டைரக்டர் டயலாக் குடுத்தாலும் ஜர்க்கே இல்லாம அதை பேசி அசத்துற அசட்டு தைரியம் வரலட்சுமிக்கு ரொம்பவே அதிகம்… என்ன ஒண்ணு மத்த படங்கள் மாதிரி ஹீரோயினுக்கு ஆகிற காஸ்டியூம் செலவு எதுவும் வரலட்சுமிக்கு இல்ல. கரகாட்டம் ஆடும்போது ஜட்டியவிட பெருசா ஒரு டவுசரு, அத மூட பேருக்கு ஒரு மினி ஸ்கர்ட்டு, டைட்டா ஒரு ஜாக்கெட்டு, வீட்டுல தூங்கும்போது ஒரு நைட்டி, போனா போகுதுன்னு அந்தமானுக்கு கப்பல்ல போகும்போதும், கிளைமாக்சுலயும் மட்டும் புடவையை குடுத்திருக்காரு இயக்குனரு. சொந்தக்குரல்ல பேசியிருக்கிறதால வர லட்சுமிக்கு விருதுங்க வர்றதுக்கும் வாய்ப்பு இருக்குதுங்க. வரலட்சுமியும் வாங்கின சம்பளத்துக்கு வஞ்சனை வைக்காம நல்லாவே குத்து குத்துன்னு குத்தி அடிச்சி ஆடி யிருக்குது. ஹீரோக்கு வைச்ச சண்டை காட்சியை மிஞ்சுற அளவுக்கு வரலட்சுமி ஆக்ஷன்லயும் அசத்தியிருக்குது. துணிக்கடையில வாங்குவதற்கு எவ்ளோ டிரஸ் இருந்தாலும் ‘மாமா என் சைஸ் இன்னா’ன்னு சசிக்குமாரிடம் முன்னாடி வந்து நின்று சைஸ் கேட்க வரலட்சுமிக்கு டயலாக் குடுத்த தேசிய விருது இயக்குனரின் ‘காம’ நெடி தியேட்டரில் அள்ளும் பாருங்க…
ஹீரோவின் அப்பா ஜி.எம்.குமார்: நாட்டுப்புற கலைகள் மீது மரியாதை வைத்திருக்கிற பாரம்பரிய பழைய கலைஞன். காசுக்காக கலையை விற்காத சாமிபுலவர் இவர்தான். இவர் பெருமையை தெரிந்து கொண்ட டிஸ்கவரி தமிழ் சேனல் இவரை பேட்டி எடுக்க வருதுங்க. அந்த சீனோட அந்த கம்பெனிய காணோம். அதென்னவோ இயக்குனர் பாலா படத்துல இவர் நடிக்கும்போதெல்லாம் ரொம்ப நல்ல கேரக்டர் குடுத்துட்டு படம் தொடங்கி கொஞ்ச நேரத்துலயே கொடூரமா செத்துபோயிடுவாரு. இதுலயும் செத்து போறாரு. வழக்கமான நடிப்புதான். பெருசா சொல்ற அளவுக்கு ஜி.எம்.குமார் கேரக்டரான சாமிபுலவருக்கு கதையில வெயிட் இல்ல…
வில்லன் ஆர்.கே.சுரேஷ்: விபச்சார புரோக்கர் கருப்பையா இவருதாங்க. குடுத்த வேஷத்தை கச்சிதமா செய்திருக்காரு. வில்லன் வேஷத்த மெருகேத்திக்கிங்க சுரேஷ்.
கரகாட்டக்காரன் அமுதவாணன்: டிவியில டான்ஸ் ஷோ பாத்த மாதிரியே இருந்துச்சி இவரு ஆட்டம். சிம்பு ஒரு ‘பீப்’ பாட்டு போட்டதுக்கே கொந்தளிச்சி கோஷம்போட்டுகிட்டு திரிஞ்சவங்க அமுதவாணன் ஆடி பாடின ‘செரச்சி வைச்சிருக்கேன்… செரச்சி வைச்சி ருக்கேன்… 2 ரூபா பிளேடு வாங்கி செரச்சி வைச்சிருக்கேன்னு’ பாட்டுக்கு என்ன கொந் தளிக்க போறாங்களோ… பாட்டு மட்டுமா இவுரு ஆட கூடவே தங்கச்சியும் ஆட வைச்சி கிட்டு இரண்டு பேரும் காது கூசுற ‘பீப்ப்ப்ப்ப்ப்’ டயலாக்கெல்லாம் பேசிகிட்டு இருக்கறத படமா பாத்து கேக்கும்போது… சென்சாரு கத்திரி சாண புடிக்க போயிருச்சோன்னு லேசா ஒரு டவுட்டு…
ஆட்டக்காரி காயத்திரி ரகுராம்: அழகான பொண்ணு. நல்ல டான்சர். ஹீரோயினா நடிச்சிகிட்டிருந்த புள்ள. இந்த புள்ளைக்கும் ஜட்டியை விட கொஞ்சம் பெருசா ஒரு டவுசரு. அத மறைக்க மினி ஸ்கர்ட்டு, டைட்டா ஒரு ஜாக்கெட்டு இதாங்க காஸ்டியூம். பொணத்துக்கு முன்னாடி குத்து குத்துன்னு ஆட்டம்…
ஒளிப்பதிவு செழியன்: படம் ஆபாசமாக காம நெடியாக சைக்கோதனமாக இருந்தாலும் ஒளிப்பதிவில் அதை உருப்படியாக காட்டியிருக்கிறார் செழியன். ஒரு படத்துக்கு இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் இரு கண்கள் போல என்று சொல்வார்கள். இதில் இயக்குனர் என்ற கண் ‘காம’மாலை… காமாலை யாகிப் போனதால் ஒளிப்பதிவு என்ற ஒரே கண் மட்டுமே சரியாக வேலை செய்திருக்கிறது. கதை உருப்படியாக இல்லை. ஆனால் காட்சிகளில் தெளிவு இப்படித்தான்… விளம்பரம் செய்ய வேண்டும்.
இசை: இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படம். ராஜா கதைகேட்டு ஒப்புக் கொண்டாரா இல்லை தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் என்பதற்காக ஒப்புக் கொண்டாரா என்பது தெரிய வில்லை. ராஜாவின் இசைப்பயணத்தில் அவரது ஆயிரமாவது படம் அவருக்கு பெரும் கரும்புள்ளி… என்பது மட்டும் நிச்சயம். இப்படிபட்ட ‘காம’நெடி வீசும் ஆட்டங்களுக்கும், வஞ்ச மில்லாத வன்முறைக்கும் எப்படி ராஜா இசையமைத்தார் என ரசிகர்கள் கொஞ்சம் யோசித்தால் உங்கள் மீதுள்ள மரியாதையே குறைந்துவிடும் அளவுக்கு தேசிய விருது பெற்ற இயக்குனரின் தரம் உங்களை தாழ்த்தியிருக்கிறது. ஆயிரமாவது படம் என்று போற்றி கொண்டாடும் அளவுக்கு பாடல்களில் பெருசாக தாக்கமும் இல்லை. தரம்கெட்ட இயக்குனரின் காட்சிகளை பார்க்கிறவர்களுக்கு பின்னணி இசையின் வீரியம் தெரிய நியாயமே இல்லை. இசைஞானிக்கு ஒரே ஒரு வேண்டுகோள்… இனி இதுபோன்ற பிரபல இயக்குனர், தேசிய விருது பெற்ற இயக்குனர் என யாராவது படத்துக்கு இசை கேட்டு வந்தால் வாசலோடு பத்தி விடுங்கள்… இதுவரை நீங்கள் காப்பாற்றி வைத்திருக்கிற பேராவது மிஞ்சும்…
இயக்குனர் : பாலாவுக்கு பெண்கள் மீது அப்படி என்ன கோபம் என்பதை தயவு செய்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்களை ஆபாசமா காட்டுறதும், மொட்டை அடிச்சி விடுறதும், பெல்டால விளாசுறதும், விபச்சார விடுதியில சீரழிக்கப்படுறமாதிரி காட்டுறதும், பிச்சை எடுக்கவிடுறதும், அரைகுறையான காஸ்டியூம்ஸ் குடுத்து அழகு பாக்குறது அதிலும் அழகான பெண்கள் என்றால் அவர்களை அவலட்சமாக்குவதில் அவருக்கு நிகர் அவரே. பாலாவோட பி ஸ்டுடியோ கம்பெனி லோகோவ நல்லா பாருங்க அதுலயும் வில் வைச்சிருக்கிறவன் கோவணம் மட்டும்தான் கட்டியிருப்பான் அதுவும் கிராபிக்ஸ்ல நல்லா பறக்கும்…
வரலட்சுமி வெளிநாட்டில் படித்து வளர்ந்தவர். பாலே நடனம் எல்லாம் கற்றவர். முதல் படத்திலேயே அழகான ஹீரோயினாக அறிமுகம் ஆன வரலட்சுமிக்கு குரல் மட்டும் கொஞ்சம் கட்டை. அதற்காக இத்தனை ஆபாசமாக, அவலட்சணமாகவாக காட்சிப் படுத்துவது.
கிராமிய கலைகள் மீது அப்படி என்ன கோபம் பாலாவுக்கு என்று தெரியவில்லை. கிராமங்களில் நடக்கும் திருவிழாவில் ஆடும் கிராமிய கலைஞர்களை இதைவிட கேவலப்படுத்த முடியாது. சுடுகாட்டையும், வெட்டியான் வேலையையும், பிணவறை யையும் காட்டுவதுதான் உங்களின் யதார்த்த சினிமாவா பாலா?
தேசிய விருது தவறுதலாக ஒரு மனநோயாளிக்கு வழங்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் இதுபோன்ற உங்கள் படங்களை தொடர்ந்து பார்க்கிறதன் மூலம் ஏற்படுகிறது.
சிம்புவாவது போட்ட பாட்டுல ஒரு வார்த்தை தப்பா இருக்குன்னு அதுல ஒரு ‘பீப்’ போட்டதுக்கே கொந்தளிச்ச சமூகம் ‘தாரை தப்பட்டை’ மூலம் ‘பீப்ப்ப்ப்ப்ப்ப்’னு படம் தொடங்கி முடியிற வரைக்கும் ஏகப்பட்ட இடங்கள்ள ‘பீப்’பே போடாம ஆபாச வசனம்… அருவருப்பான நடனம்… சகிக்க முடியாத காட்சின்னு படம் முழுக்க எடுத்திருக்காரே இந்த தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா. இதுக்கு இந்த சமூகம் என்ன பதில் சொல்லும்…
‘ஏ’ சான்றிதழ் வாங்க கூட தகுதி இல்லாத இந்த படத்தை இயக்குறதுக்கு 2 வருஷம் ஆகியிருக்கு. ஒவ்வொரு படத்துலயும் தம் அடிக்கிறவனையும், கஞ்சா அடிக்கிற வனையும் வித்தியாச வித்தியாசமாக காட்டி அதுல இன்பம் அடையிறீங்க போல. தன்னோட உதவியாளராக இருந்த சசிக்குமார் இயக்குனரா, தயாரிப்பாளரா குறிப்பா நடிகராகவும் வெற்றி பெற்று விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை கூப்பிட்டு படம் தயாரிக்கச் சொல்லி நடிக்கவும் வைச்சி சசிக்குமார் தயாரிப்பாளரா சம்பாதிச்ச பணமும், நடிகராக சம்பாதிச்ச மக்கள் மனசையும் ஒரே நேரத்துல தாரை தப்பட்டையில அடிச்சி கிழிச்சி தொங்க விட்டுட்டீங்க…டிஸ்கவரி சேனல் உங்களுக்கு எதுவும் பண்ண மாதிரியே தெரியலியே… பின்ன அவங்கள ஏன் இந்த கேவலமான படத்துல கோத்து விட்டுட்டு அவங்க பேரையும் காலி பண்ணியிருக்கீங்க…
தயவு செய்து இயக்குனர் பாலா கதை இல்லனா படம் எடுக்காதீங்க… நல்ல தயாரிப் பாளரா இருங்க… உங்க உதவியாளர்கள் கதை வைச்சிருந்தா அவங்களை இயக்குனராக வளர்த்து விடுங்க… இல்ல நல்ல கதை வைச்சிருக்கவங்க பி ஸ்டுடியோ பக்கம் வாங்கன்னு ஒரு லைன் மட்டும் பேஸ்புக்லயும், டிவிட்டர்லயும் போட்டுப் பாருங்க அப்ப தெரியும்… உலகம் முழுவதும் தமிழ் சினிமாவுக்கும், தமிழ் கிராமிய கலைகளுக்கும் நல்ல இமேஜ் இருக்கு… தயவு செய்து அதை இந்த மாதிரி கேவலமான படங்களை எடுத்து தமிழ் கிராமிய கலைகள் என்றாலே இப்படித்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வரலாற்றில் தவறாக இடம்பிடித்து விடவேண்டாம்.
பின்குறிப்புஇதுவரைக்கும் நீங்க படிச்சதை ‘தாரை தப்பட்டை’ படத்தோட விமர்சனம்னு எடுத்துக்கலாம்… இல்ல இயக்குனர் பாலாவுக்கு சொல்ற கடுதாசியாகவும் எடுத்துக்கலாம்… இந்த தமிழ் சமூகத்துக்கு இயக்குனர் பாலா எதாவது நல்லது செய்யனும்னு நினைச்சார்னா தயவு செய்து இனிமே படம் இயக்க வராதீங்க
கோடங்கி

No comments:

Post a Comment