Search This Blog

Saturday, November 7, 2015

ஏங்குகிற மனதுக்குத் தெரியும்

இதைவிடக் கூடுதலாய்
ஒரு சொல்
இதைவிடக் கூடுதலாய்
கொஞ்சம் கவனம்
இதைவிடவும் கூடுதலாய் 
அணைப்பு என
ஏங்குகிற மனதுக்குத் தெரியும்
இதுவே போதும் எனவும்.
Courtesy : Painting -anup giri

முன்பெல்லாம் 
பலமுறை அவன்பெயரை 
எதிரொலித்த மலை 
இன்று மௌனமாக இருக்கிறது 

காற்றில் அசைகிற
இலைகளில் அறிகிறாள்
யாரோ பின்தொடர்வதை

திரும்பிப்பார்க்க எண்ணம்
வருவது அவனாக இருக்கலாம்
ஒருவேளை
அவனாக இல்லாவிட்டால்
தவித்துப் போகும் தன்னை
எப்படிச் சமன்செய்வது

முன் நகரவும் விரும்பாமல்
திரும்பவும் இயலாத
நிலையிலிருக்கும் அவளை
அவன் நினைவினால்
தொடர்வதை உணர்கிறாள்
உடலெங்கும்
தளிரிலை துளிர்த்து.



மழைக்காலத்தைப் போலவே
ஒவ்வொரு பருவமும்
அவளுக்குள்
இளம் இறகுகளை துளிர்த்து
அவளது முதிர் இறகுகளை 
உதிர்க்கவும் செய்கிறது

இம்முறை
காற்று உணர்த்திய ஈரத்தில்
நிலைகொள்ளா அந்தரங்கத்துடன்
பன்னீர் பூக்களின் வாசத்தை
அவளிடம் பூக்கச்செய்திருந்த
அவனுக்குப்
பறத்தலின் வெளியைப் பரிசளித்தாள்

மழை தொடங்கிவிட்டது.
Sakthi Jothi

No comments:

Post a Comment