Search This Blog

Friday, November 6, 2015

தொங்கும் தூண் கொண்ட கோட்டை :

வரலாற்றுப் பெருமையின் மௌன சாட்சியாக நிற்கிறது தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டை. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த கடையெழு வள்ளல்களுள் ஒருவரான அதியமான்தான் இந்தக் கோட்டையை நிர்மாணித்தவர். வரலாற்றுச் சிறப்பு மிக்க தர்மபுரி மாவட்டம் சங்க காலத்தில் தகடூர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. தகடூரை ஆண்ட அதியமான் மாபெரும் போர்வீரர். அதியமானின் சிறப்பைப் பாடி புலவர்கள் பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். இப்படி வந்த புலவர்களில் ஒருவர்தான் ஔவையார்.
தர்மபுரிதான் அதியமானின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மன்னர் அதியமானின் தலைமையிடமாக அதியமான் கோட்டை செயல்பட்டுள்ளது. தர்மபுரியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனத் தொல்லியலாளர்களும் வரலாற்றறிஞர்களும் தெரிவிக்கிறார்கள். இப்போது சில பகுதிகள் பழுதடைந்த நிலையில் உள்ள இந்தக் கோட்டை நீள்வட்ட வடிவத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது இந்தக் கோட்டையிலிருந்து பழைய நாணயங்கள் முதலானவை வெளியுலகிற்குத் தெரியவருகின்றனவாம். அதியமான் கோட்டைதான் தகடூர் நகரின் நுழைவாயிலாக இருந்திருக்க வேண்டும் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதியமான் கோட்டையின் நுழைவாயில் மிகப் பெரியதாக இருந்துள்ளது. கோட்டை மதிலில் எதிரிகள் ஏற முடியாதபடி மதிலின் வெளிப்புறச் சுவரில் கடுகு எண்ணெய்யைப் பூசியுள்ளார்கள். இந்தக் குறிப்புகள் எல்லாம் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கோட்டைப் பகுதியில் உள்ள முக்கியக் கோவில் சோமேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் வெளிப்புறக் கல்சுவரில் யானை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதுதான் அதியமானின் முத்திரை எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோவில் தவிர, பைரவர், அங்காளம்மன், நரசிம்மர், காளியம்மன் ஆகிய கோவில்களும் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளன. இந்தக் கோட்டையில் படைவீரர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. கோட்டையின் மண்டபங்களில் மேற்புறச் சுவரில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கவனமின்றி சில ஓவியங்கள் மீது சுண்ணாம்பு பூசி அழிக்கப்பட்டுவிட்டன. இந்த ஓவியங்களில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்கள் தாம் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ஓவியங்கள் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்றறிஞர்கள் சொல்கிறார்கள்.
அதியமான் கோட்டையிலுள்ள மகா மண்டபத்தின் தொங்கும் கல்தூண்கள் கட்டடக் கலையின் அதிசயத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் இரண்டு டன்கள் எடை கொண்டவை. இவை தரையைத் தொட்டு நிற்கவில்லை. இந்தக் கோட்டை பழங்காலச் சின்னமாக இருப்பதால் அதியமான் கோட்டம் என்னும் பெயரில் இந்தக் கோட்டையைத் தமிழக அரசு பாதுகாக்கிறது. இந்தக் கோட்டத்தில் அதியமான், ஔவையார் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
-நன்றி தி இந்து

No comments:

Post a Comment