Search This Blog

Wednesday, November 11, 2015

காசி அன்னபூரணி எப்படி உருவானாள் தெரியுமா?


காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன்; தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்னதோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான். அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, ‘‘தனஞ்செயா, முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜகுமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்தனர். அப்போது அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார்.


முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை அவமானப்படுத்தியதாலேயே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்ன தோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம்!’’ என்றார்.
அதன் பின் தனஞ்செயன் அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர் அவர்கள். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து அன்னபூரணியின் அருள் பெற்றான்.
‘‘இந்த விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன்!’’ என்றாள்.
அதனால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.
நித்ய ஆனந்தகரீ வர அபயகரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ|
நிர்தூதாகில கோர பாபநிகரீ ப்ரத்யக்ஷ மாஹேஸ்வரீ|
ப்ராலேய அசல வம்ச பாவனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (1)

அனுதினமும் ஆனந்தம் அளிப்பவளே! அபய வரத கரங்கள் உடையவளே! அழகின் ரத்தினக் கடலே!
எம் பாவத் தொகுப்பை நாசம் செய்பவளே! காட்சிதந்து அருளும் மாஹேஸ்வரியே!
மலையரசன் ஹிமவானின் வம்சத்தைத் தூய்மையாக்குபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

நானா ரத்ன விசித்ர பூஷணகரீ ஹேம அம்பர ஆடம்பரீ|
முக்தா ஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ கும்பாந்தரீ|
காச்மீரா கருவாஸிதா ருசிகரீ காசீ புராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (2)

நாலாவித விசித்திர ரத்ன ஆபரணங்கள் அணிந்தவளே! தங்கப் பட்டாடை அணிந்தவளே!
முத்துமாலை மார்பின் நடுவே ஆடும்படி அலங்கரிக்கப் பட்டவளே!
காஷ்மீர அகில் தூபம் சூழ, நறுமணம் நிரம்பப் பெற்றவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

யோக ஆனந்தகரீ ரிபு க்ஷயகரீ தர்மைக நிஷ்டாகரீ|
சந்த்ர அர்க அனலபா ஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ|
ஸர்வ ஐச்வர்யகரீ தப: பலகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (3)

யோகானந்தத்தை அருள்பவளே! தர்மத்தின் மீதிலேயே சிந்தையைச் செலுத்த வைப்பவளே!
சந்திரன் சூரியன் அக்னிக்கு ஈடான ஒளியோடு திகழ்பவளே! மூவுலகையும் காப்பவளே!
அனைத்து விதமான செல்வங்களையும் தருபவளே! தவப் பலனைத் தரும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

கைலாச அசல கந்தராலயகரீ கௌரீ ஹ்யுமாசங்கரீ|
கௌமாரீ நிகமார்த்த கோசரகரீ ஹ்யோங்கார பீஜ அக்ஷரீ|
மோக்ஷ த்வார கவாடபாட நகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (4)

கயிலாச மலைக் குகையை வீடாகக் கொண்டவளே! பொன்னிறத்தில் ஒளிரும் உமாதேவியே! சங்கரன் துணைவியே!
இளமை பொருந்தியவளே! வேதப் பொருளை அறியச் செய்பவளே! ஓங்காரத்தை பீஜாட்சரமாகக் கொண்டவளே!
மோட்ச வாசலைத் திறந்தருளும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

த்ருச்யா த்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரம்மாண்ட பாண்டோதரீ|
லீலா நாடக ஸூத்ர கேலனகரீ விக்ஞான தீபாங்குரீ|
ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (5)

இக-பர சுகம் பெறக் காரணமாக இருப்பவளே! பிரமாண்டத்தை வயிற்றில் தாங்கியவளே!
உலகியல் நாடகத்தை நடத்தும் நாயகியே! அனுபவ ஞான விளக்கின் சுடராய் ஒளிர்பவளே!
மகேச்வரனின் மனத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரி பாவாகரீ|
காச்மீரா த்ரிபுரேச்வரீ த்ரிநயனீ விச்வேச்வரீ சர்வரீ|
ஸ்வர்க த்வார கவாட பாடனகரீ காசீ புராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (6)

எல்லா எழுத்துகளுக்கும் காரணமாய் இருப்பவளே! முத்தொழில்களின் தோற்றத்துக்கும் மூலகாரணப் பொருளே!
மங்கலக் குங்குமம் தரித்தவளே! முப்புரம் எரித்த முக்கண் முதல்வனின் பத்தினியே! உலக நாயகியே! எங்கும் இருப்பவளே!
சுவர்க்க உலகத்தின் வாசல் கதவைத் திறந்து அருளும் தாயே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

உர்வீ ஸர்வ ஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ|
வேணி நீல ஸமான குந்தலதரீ நித்ய அன்னதானேச்வரீ|
ஸாக்ஷான் மோக்ஷகரீ ஸதா சுபகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (7)

பூமி உருவாக இருப்பவளே! அனைத்து மக்களுக்கும் ஈச்வரியே! வெற்றியைத் தரும் வித்தகியே! கருணைக் கடலே!
அழகுப் பின்னலுடன் கருங்குழல் கொண்டவளே! தினம்தினமும் அன்னதானம் அளிக்கும் அன்னையே!
மோட்சம் அருள்பவளே! மங்கலம் தருபவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதா தாக்ஷாயணி ஸுந்தரீ|
வாமா ஸ்வாது பயோதரா ப்ரியகரீ ஸௌபாக்ய மாஹேச்வரீ|
பக்தாபீஷ்டகரீ ஸதா ஸுபகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (8)

அனைத்து அபூர்வ ரத்தினங்களாலும் ஒளிர்பவளே! தாட்சாயணி தாயே! அழகு மிகுந்த அன்னையே!
ஈசனில் பாதியாய் இடப்புறம் கொண்டு ஈசன் விரும்பும் இனியதைச் செய்பவளே! சௌபாக்கியம் கொண்ட மகேசன் மனைவியே!
பக்தரின் விருப்பத்தை நிறைவேற்றித் தருபவளே! என்றும் சுபமானதைச் செய்பவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

சந்த்ர அர்க அனல கோடி கோடி ஸத்ருசீ சந்த்ராம்சு பிம்பாதரீ|
சந்த்ர அர்க அக்னி சமான குண்டலதரீ சந்த்ர அர்க வர்ணேச்வரீ|
மாலா புஸ்தக பாச அங்குசதரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (9)

கோடிக்கணக்கான சந்திர சூரிய அக்னியருக்கு ஒப்பானவளே! பிறைச் சந்திரன் போல் கோவைப்பழ வதனம் கொண்டவளே!
சந்திர சூரிய அக்னியர்போல் ஒளிவீசும் குண்டலங்கள் அணிந்தவளே! சந்திர அக்னியின் ஒளி நிறத்தவளே!
மாலை புத்தகம் பாசம் அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

க்ஷத்ர த்ராணகரீ மஹாபயகரீ மாதா க்ருபா ஸாகரீ|
ஸர்வ ஆனந்தகரீ ஸதாசிவகரீ விச்வேச்வரீ ஸ்ரீதரீ|
தக்ஷா க்ரந்தகரீ நிராமயகரீ காசீபுராதீச்வரீ|
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பநகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ|| (10)

சத்திரியரைப் போல் சாமானியரைக் காப்பவளே! பயத்தைப் போக்கி அருள்பவளே! கருணைக் கடலான தாயே!
அனைவருக்கும் ஆனந்தத்தையே அருள்பவளே! சதாசிவன் துணை லோகநாயகியே! முப்போதும் மங்கலமே தருபவளே!
வாட்டும் பிணியை ஓட்டுபவளே! நோயற்ற வாழ்வு அளிப்பவளே! காசிபுரத்து நாயகியே!
பக்தர் பால் கருணை காட்டுபவளே! அன்னபூரணி அன்னையே! எமக்கு பிட்சை இட்டு அருள்வாய்!

அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே|
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ||

அன்னம் நிறைந்தவளே! என்றும் பூரணமாக இருப்பவளே! சங்கரனின் பிராண நாயகியே!
மாதா பார்வதியே! எமக்கு ஞான வைராக்கியம் ஏற்பட பிட்சை இட்டு அருள்வாய்!

மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்வர:|
பாந்தவா: சிவபக்தாச் ச ஸ்வ தேசோ புவன த்ரயம்||

எனக்குத் தாய் - பார்வதீ தேவீ! தந்தை - மகேஸ்வரன்!
சொந்தங்கள் - சிவபக்தர்கள்! என் தேசம் - மூவுலகமுமே!
தமிழாக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்

No comments:

Post a Comment