Search This Blog

Thursday, May 21, 2015

டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்?


ஒவ்வொரு சராசரி மனிதனுக்கும் இன்று பிரச்னைகள் இல்லாமல் இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதேனும் ஒரு விதத்தில் டென்ஷனோடு அலைகின்றனர். வசதி படைத்தவர், ஏழை என்ற வித்தியாசமின்றி டென்ஷன் ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கிறது. மனதுக்குள் ஏற்படுகின்ற அழுத்தம், மனரீதியான தாக்குதல்கள் டென்ஷன் என்கின்றனர். ஏதேனும் ஒரு பிரச்னையை பற்றி மனது தொடர்ச்சியாக அழுத்தப்பட்டுக் கொண்டிருந்தால், அது நாளாக நாளாக மனதையும் கடுமையாக பாதித்து அவர் டென்ஷன் ஆக வழிவகுக்கும். வாழ்க்கை சக்கரம் வேகமாக சுழன்று வரும் நிலையில் எதற்கெடுத்தாலும் போட்டி என்றாகிவிட்ட சூழலில் மனிதன் டென்ஷனுக்கு அடிமையாகி விட்டான் என்கின்றனர் நிபுணர்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வாழ்க்கையை கவனிக்க தொடங்கும்போது எங்கே நாம் மற்றவர்களை காட்டிலும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற பயம் பெரும்பாலானவர்களுக்கு வர தொடங்கியுள்ளது. மற்றவர்களுடன் தம்மை ஒப்பிட்டு நம்மால் அவ்வாறு செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் ஒருவித டென்ஷன் உருவாக காரணமாக அமைந்து விடுகிறது.
தனது நிலையை விட கூடுதலாக செயல்பட வேண்டிய கட்டாயம் எழும்போது, தனக்கு கிடைப்பதைவிட கூடுதலாக கிடைக்க வேண்டும் என்ற ஆசை எழத்தொடங்கும்போது கூடவே டென்ஷன் அவரை வழிநடத்தி செல்ல தொடங்கும். எத்தனை வறுமையில் இருந்தாலும் ஒருவருக்கு பாதுகாப்பு கிடைப்பது, உறவினர்கள் அல்லது சமூகம் அவருக்கு ஓடோடிச்சென்று உதவுவது அந்தகாலம் என்ற நிலை ஆகிவிட்டது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மற்றவர்களின் பிரச்னைகளுக்கு பரிகாரம் செய்ய கூடிய நிலையில் இல்லாமல் ஒவ்வொருவரும் தனக்குதானே சொந்த பிரச்னைகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.
குடும்பத்திலும், வேலை பார்க்கும் இடங்களிலும், பொது இடங்களிலும் பிரச்னைகள் வளர்ந்து வருகின்றன. ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதும், உதவி செய்வதும் என்ற நிலைமாறி மற்றவர்களை குற்றப்படுத்தி வருவது அதிகரித்துள்ளது. மிகப்பெரிய அளவில் பலரின் தாம்பத்ய வாழ்க்கையும் பிரச்னைகளிலேயே மூழ்கியுள்ளது. எனவேதான் மனதில் எழுகின்ற முழுமையான அழுத்தங்களில் இருந்தும் விலகுவது என்பது இன்றைய சூழலில் இயலாத ஒன்றாகி போகிறது.
தினம் தினம் பிரச்னைகளை எதிர்கொள்ளவும், அதனையும் தாண்டி வாழ்க்கையை பிரகாசமாக்கிக் கொள்ளவும் ஒவ்வொருவரும் தயாராகிக் கொள்ள வேண்டும். டென்ஷனை எதிர்கொள்வதற்கான சிறந்த வழி அதற்கான காரணத்தை கண்டறிவதுதான். காரணத்தை கண்டறிவதிலேயே அதன் பரிகார வழிகளும் கூடவே இருக்கும். இது டென்ஷன் குறைய காரணமாகவும் அமையும். ஏதேனும் ஒரு வழியில் அந்த பிரச்னைக்கு தீர்வு காண முயன்றால் டென்ஷன் அதோடு முடிவுக்கு வரும்.
தீர்க்க முடியாத பிரச்னைகளை நெருங்கிய நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ பகிர்ந்து கொள்வதும் டென்ஷனை குறைக்கும். வாழ்க்கையில் நாம் தனிமைப்படுத்தப்பட வில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் போது நம்பிக்கை பிறக்கும். மனதின் அழுத்தத்தை குறைக்க எளிய வழி பக்தி மார்க்கம். தன்னுடைய பிரச்னைகளை கடவுளிடம் கொண்டு சென்று முறையிடுவது மன அழுத்தத்தை குறைக்கும், மன நிம்மதியும் பிறக்கும்.
மனது டென்ஷனில் உழன்று கொண்டிருக்கும்போது சந்தோஷமான பழைய நாட்களை எண்ணிக்கொள்ளலாம். வாழ்க்கையில் அடைந்த லட்சியங்களையும், வெற்றிகளையும் எண்ணிப்பார்ப்பது டென்ஷனை குறைக்கும் வழிகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
விரும்பிய இசையை கேட்பதும், நண்பர்களுடன் சுற்றுலா செல்வதும் டென்ஷனில் இருந்து விடுபட வழியை தரும். யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவையும் டென்ஷனை விடுவிக்கும் வழியாகும்.
வீட்டு தோட்டம் அமைத்தல், விரும்பிய வளர்ப்பு பிராணிகளுடன் பொழுதை கழித்தல் உள்ளிட்ட அவரவர் விரும்பிய செயல்களில் கூடுதல் நேரம் செலவிடுவது மனதிற்கு இதமானதாக அமையும்.
வாழ்க்கையில் நேர்மையையும், நியாயத்தையும் கடைபிடிப்பவர்கள், ரகசியங்களை மனதுக்குள் அடக்கி வைத்திருக்காதவர்கள் டென்ஷனை கண்டு பயப்படுவது இல்லை.
அதிகமாகவும், தொடர்ச்சியாகவும் வருகின்ற டென்ஷன் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் நல்ல மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

No comments:

Post a Comment