Search This Blog

Wednesday, December 31, 2014

மாயன் இனம்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றி மறைந்த ஒரு சமூகத்தின் வாழ்க்கைத்தடங்கள் காட்டுக்கொடிகளோடு கதை பேசியவாறே காலத்தின் சரித்திரப் பதிவுகளில் இருந்து காணாமல்போய்விட்டன. அந்த இனம் ஒன்றும் சமான்யப்பட்டதல்ல என்று தொடர்ந்த அகழ்வாராய்வுகள் கட்டியம் கூறின. பல நூற்றாண்டுகளுக்கு முன் அறிவியலிலும் கட்டுமானத்திலும் உச்சத்தில் இருந்த ஒரு சமுகம் உலகிலிருந்து அடியோடு மறைந்து விட்டது. அவர்கள் நிர்மாணித்துக்கொண்டிருந்த சில கட்டுமானங்கள் பாதியிலேயே பாழடைந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் எங்கே போனார்கள் என்ற காரணம் யாருக்கும் தெரியவில்லை.
அந்த இனம்தான் மாயன் இனம். மனித வரலாற்றில் நாகரிகம் தோன்றிவளர்ந்து விண்ணை முட்டிய வரலாற்றுக்காவியம் அவர்களது வாழ்க்கை முறை. ஆனால் அந்த வரலாற்றை காலத்தின் வேகம் காற்றில் கரைத்து விட்டது.

மாயன் இனத்தவர்கள், அவர்களின் பொற்காலத்தின் போது பல துறைகளின் நுணுக்கங்களை ஆராய்ந்திருக்கிறார்கள், கலைத்திறனும் புத்திக் கூர்மையும் பெற்று விளங்கினார்கள். 16-ம் நூற்றாண்டின் போது தென் அமேரிக்கப் பகுதியை ஆட்சி செய்த ஸ்பெயின் நாட்டினரின் கடுமையான தாக்குதலால் இப்பகுதி அடியோடு அழிந்து போனது. அவர்களின் கண்டுபிடிப்பும் எழுதிய நூல்களும் அச்சமயம் அக்னிபகவானுக்கு இரையாக்கப்பட்டன.
மாயன்
இன்று எத்தனையோ அறிவியல் வளர்ச்சியை கண்டுவிட்டதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் எங்களது கட்டுமானங்களை விட அவர்களது கட்டுமானங்கள் காலத்தைவென்று கம்பீரமாக இன்றும் உள்ளன. பெரிய அளவிலான நகர வடிவமைப்பு, எழுத்துக்கள், மற்றும் அறிவு நுணுக்கங்கள் மாயா இனத்தவரின் போற்றத்தக்க கலைத்திறன்களாகும்.
தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. மற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன் படுத்தாமலயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர்.

எகிப்தியப் பிரமிடுகளை அடுத்து இந்நகரில் காணப்படும் பிரமிடுகளே பிரசித்தி பெற்று விளங்குகிறன. இப்பிரமிடுகளை சுற்றிலும் 4 பெரிய படிகட்டுகளும் அவற்றுள் அடங்கிய 365 படிக்கட்டுகளும் காணபடுகிறது. இவையாவும் ஒரு ஆண்டிற்கான 4 காலங்களையும் 365 நாட்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கீட்டுத் தீர்மனிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியோட்டியே சடங்குகளை நடத்தினர்.ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளன.
மாயன்
மாயன் நகர பகுதியில் காணப்படும் Stelae எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் Heiroglyphik எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயன்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மை.
Bonamak என்ற இடத்தில் அமைந்த மாயன்களின் சிற்ப கலைகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி கிடைக்கப் பெற்றதால் ஆராய்ச்சியாளர்கள் இவற்றை முறையாகத் தங்களது ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. இச்சிற்பங்கள் மாயன்களின் நாகரிக வளர்ச்சியைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன.
மாயாக்கள் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைத்துள்ளார்கள். பிரமிடுகள் உயரமான மலை பாங்கான இடத்தில் அமைந்திருக்கும் பிரமிடுகளின் மேல் கோவிலை அமைப்பதால் இறைவன் இருக்கும் சொர்க வாசலை அவர்கள் சுலபமாக நெருங்க முடிவதாக நம்பிக்கை கொண்டுள்ளனர் .

மாயன்கள் இவ்வுலக ஆரம்பத்தில் Itzam Na எனப்பட்ட கடவுளும் கடலும் ஆகாயமும் மட்டுமே இருந்ததாக நம்பினார்கள். Itzam Na மனிதர்களை களிமண்ணிலிருந்து தயாரிக்க முயன்றார் ஆனால் அது கைகூடாததால் மரத்திலிருந்து மனித படைத்தார்.ஆனால் மரத்திலிருந்து தயாரிக்கப்பட்டதால் மனிதனுக்கு சிந்திக்கவோ கதைக்கவோ முடியாதிருந்தது. நீண்ட முயற்சியின் பின் Itzam Na நீரையும் சோளத்தையும் பயன்படுத்தி இன்றைய மனிதர்களை படைத்தார் என நம்பினார்கள். மாயர்கள் உலகை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என பிரித்திருந்தனர். மாயர்களின் வானியல் ஒரு மரமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. மரத்தின் மேற்பகுதி சொர்க்கமாகும். அது இறைவனின் வசிப்பிடமாகும். மரத்தின் வேர்ப்பகுதி பாதாள உலகமாகும். சூரியன் இரவில் பாதாள உலகிற்கு சென்று ஓய்வெடுக்கிறான். (மாயர்களின் மொழியில் Xibalba -பாதாள உலகம் , Cab -சொர்க்கம் , Caan - புவி, Yakche – அண்டத்தை குறிக்கும் மரம்.)
ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்தினார்கள். அவர்களது ஆலயங்களுள் சுவரில் தேவதைகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.. Guatemala பகுதியில் சூரிய சந்திர்யளுக்கான கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Chichen Itza, Tikal கோயில் , Inscription கோயில் என்பனவும் பிரசித்தமானவை.


மாயன்களின் எழுத்து வகைகள் நீண்ட நாட்கள் ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் இருந்தவையாகும். 19-ஆம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது.
1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இதன் வழி ‘ஸ்பெயின்’ நாட்டினரின் படையெடுப்பும், பல்லாயிர காணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டதும் வருத்தத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் 4 புனித நூல்களில் மூன்றும் நான்காம் நூலின் சில பக்கங்களும் மட்டுமே கிடைத்துள்ளது.

மாயர்கள் 20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர். மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு "_" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.
மாயன்
ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு. 2000-ஆம் ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சிக் காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயன்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயன்களின் உச்சகட்டப் பொற்காலம் எனவும் கூறுகிறார்கள்.

900-ஆம் ஆண்டில், நாகரிக உச்சத்தை அடைந்த பின் மாயாக்களின் ஆதிக்கம் மர்மமாய் மறைந்ததாய் கூறுகிறார்கள். அனாலும் இது முற்றிலும் உண்மையாகாது. ஆரம்ப காலத்தில் மாயன்கள் மறைந்து போன மர்மத்தை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்குக் காரணம் மாயன் நகரப் பகுதி குடிகள் இல்லாமல் நாதியற்றுக் கிடந்தது தான்.
இதன் பின் ஆராய்ச்சியாளர்கள், மாயன்களின் வம்சாவழியினர் மெக்ஸிகோ, குவதிமாலா பகுதிகளில் இன்றளவும் வாழ்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் மாயன்களில் பல பிரிவினர் இருந்ததாகவும் அவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே இவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

மாயன்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கியக் காரணம் என கூறுகிறார்கள். ஆனால் ஸ்பானியர்களின் படையெடுப்பும் மாயர்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மண்ணோடு மறைந்த மாயன்களின் வாழ்க்கைமுறை இன்றும் புதிராகவே உள்ளது. அந்த புதிரின் விடை இன்னமும் ஆராய்ச்சியாளர்களால் தேடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment